Wednesday, April 06, 2016

ஃ பிரான்சுவா மார்டின் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி - மௌன சாட்சிகள்

பாண்டிச்சேரி  புரோமெனேட் பீச் பத்திய  பதிவுக்காக தகவல்களை திரட்டும்போதுதான் பாண்டிச்சேரி உருவான வரலாற்றை படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். அதை உங்கக்கிட்ட பகிரவே இன்றைய பதிவு...,  பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி பற்றி சில வரலாற்று தகவல்களையும், அது கடந்து வந்த பாதைகளையும், பாண்டிச்சேரியை உருவாக்கிய ருஃ பிரான்சுவா மார்டின் பற்றியும் இன்றைய மௌன சாட்சிகளில்பார்க்கலாம்.
பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி  (French: Compagnie française pour le commerce des Indes orientales). பிரிட்டிஷ் மற்றும் டச்சு கிழக்கு இந்திய நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்காக 1664 ஆம் ஆண்டு வாணிப நோக்கோடு பாரிஸ் நகரை தலைமை இடமாக கொண்டு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது Jean-Baptiste Colbert என்பவரின் ஆலோசனைப்படி பதினான்காம் லூயி மன்னரால் பூமியின் கிழக்கு பகுதியில்  Compagnie de Chine,the Compagnie d'Orient and Compagnie de Madagascar  என்ற மூன்று கம்பனிகளை ஒருங்கிணைத்து நடத்த 1660 ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
இங்கே பதினான்காம் லூயி மன்னரை பற்றி சொல்லவேண்டும் என்றால் இவர் கடவுளால் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டவர் என்று சொல்லபடுவதுண்டு.  இவர் தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு சிலமாதங்களுக்கு முன்னேதான் பிரான்ஸ் மன்னராக பதவி ஏற்று கொண்டார். ஆனால் அவர் ஆட்சிப்பொறுப்பு எதிலும் தலையிடவில்லை அரசு நிர்வாகத்தை அவரது விசுவாசமான இத்தாலிய பிரதம மந்திரி ஜூல்ஸ் கார்டினல் மசரின் என்பவர் 1661ல் அவர் இறக்கும் வரை அவரே ஆட்சிபொறுப்பை கவனித்து கொண்டார். அதன்பிறகு தான் லூயிஸ் மன்னர் 1715 ல்   தன்னுடைய 77 ம் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு சில நாட்களுக்கு முன் மரணமடைந்தார். இவரது ஆட்சிகாலம் எழுபத்தி இரண்டு ஆண்டுகள், மூன்று மாதங்கள் மற்றும் பதினெட்டு நாட்கள். இதுவரை எந்த ஐரோப்பிய மன்னர்களும் பதினான்காம் லூயிஸ் மன்னரைபோல் நீண்டநாள் ஆட்சி செய்ததில்லை. பதிவு பாண்டிச்சேரியிலிருந்து, பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி போய் அப்படியே பிரெஞ்ச் அரசாட்சிக்கு போனால் அந்த வரலாறு மிகவும் நீண்டதாக இருக்கும். ஆகையால், அதை இத்தோடு நிறுத்திவிட்டு நாம் பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் பக்கம் வருவோம். 
அந்த சமயத்தில் நடந்த சமகால நிகழ்வுகளும், யுத்தங்களும் வரலாற்றில் மிகமுக்கியமான பங்கு வகித்தன. கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் சிறப்பாக வணிகம் செய்துவந்த போர்த்துகீசியர், டச்சுக்காரர், டேனியர் ஆகியோர் ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் வருகையால் வாணிப போட்டியில் வலுவிழந்து இந்தியாவில் இருந்து சிறிது சிறிதாக வெளியேறிவிட்டனர். கி.பி.1664-இல் தோற்றுவிக்கப்பட்ட பிரெஞ்சுக் கிழக்கிந்திய வணிகக்குழு கி.பி.1668-இல் சூரத்திலும், 1669-இல் மசூலிப்பட்டணத்திலும் பண்டகசாலைகளை  நிறுவியது. அக்காலகட்டத்தில் பீஜப்பூர் சுல்தானின் கீழ், சிற்றரசனாக இருந்த செர்க்கான்லோடி திருச்சிக்கு அருகிலுள்ள வாலிகண்டபுரத்தை  தலைமையிடமாகக்  கொண்டு ஆட்சி புரிந்தார். அந்த காலக்கட்டத்தில்தான் ஃபிரான்சுவா மார்டின் பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியின் பாண்டிச்சேரி பண்டக சாலையின்  இயக்குனராக பதவியேற்றார்.
பல்வேறு வரலாற்று போராட்டங்களுடன் ஆட்சிமாற்றம் மற்றும் நிர்வாக மாற்றம் போன்றவைகளால் அலைகழிக்கப்பட்ட  பாண்டிச்சேரி இறுதியில் ஒரு நகரமாக,] ருஃ பிரான்சுவா மார்டினால்  உருவாக்கப்பட்டது. அந்த காலத்தில் டச்சுகாரர்கள் வடிமைத்த பாண்டிச்சேரியில் தெருக்கள் நேராகவும், நேர்த்தியாகவும், ஒரு ஒழுங்கான அமைப்பில் வடிவமைத்திருந்தனர். சுதந்திர காலத்துக்கு முன்புவரை தெருக்கள் எல்லாம் நேராக இருந்ததாகவும் சொல்லபடுகிறது. பண்டையகாலங்களில் பாண்டிச்சேரியை பற்றி குறிப்பிடும்போது வீதி அழகு உண்டு, நீதி அழகு உண்டு என்று பழமொழியாகவே குறிப்பிடுவார்கள். இந்த வரைபடம் செப்டம்பர் 1893 முதல் 1693 முதல் மார்ச் 1699 வரை பாண்டிச்சேரியை  நிர்வகித்து வந்த டச்சுகாரர்களின் நகர வரைப்படம்.
ஆனால்,  சில இந்திய  வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது இந்த நகரம் பிரெஞ்ச் கட்டிடக்கலையின் அடிப்படையில் கட்டபட்டுள்ளது. இருந்தாலும், சில அறிஞர்கள் டச்சுகாரர்களால் உருவாக்கப்பட்ட இந்த முறையானது  பிரான்சுவா மார்டின் காலத்திற்கு பிறகு மாறி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.       .

தெருக்கள்.எல்லாம் நேராக இருப்பதற்கு டச்சுசுகாரர்கள் வடிவமைத்த நகர "ப்ளு பிரிண்ட்" வரைப்படமே சாட்சி  என ஜேன் டிலோச்சி என்ற வரலாற்று ஆசிரியர் Ecole Francaise d”Extreme Orient at Pondicherry.  என்ற குறிப்புகளில் கூறியுள்ளார் .
கி பி 16 ம் நூற்றாண்டுகளில் பாண்டிச்சேரி நெசவு தொழிலில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது. அதேச்சமயம் துறைமுகமும் கூட அவர்களது வாணிபத்திற்கும்,  அந்நிய தேசத்து ஏற்றுமதி, இறக்குமதி முகாந்திரமாகவும் இருந்தது.
வாணிபம் சிறந்து விளங்கியதால், பல்வேறு கொள்ளைகூட்டங்களும் அவ்வப்போது மக்களை துன்புறுத்தி வந்துள்ளனர். அந்த காலகட்டத்தில் உள்ள ஆங்கிலேயர்களின் ஆவணங்களில்,1648 ல் பிண்டரியர் என்ற கொள்ளை கூட்டத்தினர், செஞ்சிகோட்டையிலும், பாண்டிச்சேரி துறைமுகத்திலும் கொள்ளையாடிததாக குறிப்பிட்டுள்ளனர். இதெல்லாம் ரூஃ பிரான்சுவா மார்டின் இந்தியாவிற்கு வருகை புரிவதற்கு முன்னமே நடந்து முடிந்திருந்தது. இதிலிருந்து நமக்கு பாண்டிச்சேரி பிரெஞ்சுகாரர்களால்தான் சிறப்பு பெற்றது என்றில்லாமல் அதற்கு முன்னமே செல்வசெழிப்பும், வரலாற்று நிகழ்வுகளிலும்  தொன்மையான நகரம் என தெரியவருகிறது.
அப்படிப்பட்ட பெருமைவாய்ந்த பாண்டிச்சேரி உருவாக காரணமாக இருந்தவர் தான்  ரூஃ பிரான்சுவா மார்டின். இவர்  ஜைல்ஸ் மார்டின்னுக்கும் பெரோன் கொசலின் என்பருக்கும் மகனாக 1634 ம் ஆண்டு பிரான்சில்  பிறந்தார். அந்த சமயத்தில் ஜைல்ஸ் மார்டின் பாரிஸில் வியாபாரம் செய்துவந்தார். 1660 ஆண்டு  அவர் இறந்ததும், ரூஃ பிரான்சுவா மார்டின், வேறு ஒரு வணிகரிடம் வேலைக்கு சேர்ந்து அங்கு ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு, பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியில், துணை வணிக அலுவலராக பதவியேற்று கொண்டார். பிறகு பிரான்ஸின் வடமேற்கு பக்கத்தில் பிரஸ்ட் என்ற இடத்தில இருந்து மடகாஸ்கர் தீவு.  இது, ஆப்ரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் இருக்கிறது. அப்பொழுது அது பிரான்ஸ்  ஆதிக்கத்தில்  இருந்தது. அங்கே வணிப அதிகாரியாக 1665 ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பதவியேற்று கொண்டார் .
மடகாஸ்கரில் மூன்று ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த ரூஃ பிரான்சுவா மார்டின் அங்கே பதவி  உயர்வு பெற்று 1669 ம் ஆண்டு இந்தியாவின் மேற்கு கரையோரம்  உள்ள சூரத் நகருக்கு பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியின் வாணிபத்தை  பெறுக்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டார்.  சூரத்தில் சிறப்பாக பணிபுரிந்த ரூஃ பிரான்சுவா மார்டின் பின்னர் மசூலிப்பட்டிணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிறப்பாக பணியாற்றிய ரூஃ பிரான்சுவா மார்டின் பிரெஞ்ச் கிழக்கிந்திய பண்டகசாலையின் இயக்குனராகக்கபட்டார்.


Compare "The City of Masulipatam," from Philip Baldaeus, 'A true and exact description of the most celebrated East-India Coasts of Malabar and Coromandel," 1672

பழைய ஆவணங்களில்  இருந்து எடுக்கப்பட்ட  படத்தின் தெளிவான வடிவம்
1672 ம் ஆண்டு மசூலிபட்டிணத்தில் இந்த நாகரீக உலகில் கிரேன்களை கொண்டு சரக்குகளை கப்பலில் ஏற்றுவதை போல யானைகள் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளன .
பின்னர் ரூஃ பிரான்சுவா மார்டின் மசூலிப்பட்டிணத்திலிருந்து 1674 ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி 60 பிரெஞ்சுக்காரர்களுடன் பாண்டிச்சேரிக்கு வந்தார். அப்பொழுது   பேரன் என்பவர் பாண்டிச்சேரி பகுதியின் பொறுப்பு அதிகாரியாக இருந்தார். பின்னர், அவர் அங்கிருந்து சூரத்திற்கு தலைமை இயக்குனராக பொறுப்பேற்றதனால், ரூஃ பிரான்சுவா மார்டின் 1675 மே 5 ம் தேதி பாண்டிச்சேரி பண்டகசாலைக்கு இயக்குனராக பொறுபேற்றார்.
அதன்பிறகுதான் வரலாற்றில் சில முக்கியமான திருப்பங்கள் ஏற்பட்டன. இந்த காலகட்டத்தில்தான் செஞ்சி பகுதியில். மராட்டியருக்கும், மொஹலாயருக்கும் கடுமையான யுத்தங்கள் நடந்து கொண்டு இருந்தன. (அதைபற்றி நம்முடைய செஞ்சி கோட்டை பதிவுகளில் தெளிவாக குறிபிட்டுள்ளேன்). அதில்    எந்த பிரிவினருக்கும் ஆதரவு       கொடுக்காமல்
ரூஃ பிரான்சுவா மார்டின் நடுநிலைமையாகவே இருந்தார். அந்த சமயத்தில் கடுமையான போர்களின் காரணமாக மராட்டிய மன்னர் வீர சிவாஜியின் இளைய மைந்தர் இராஜாராம் கடும் நிதி பற்றாக்குறையில் இருந்தார் ஆகையால்  மராட்டியரின் கட்டுபாட்டில் இருந்த பாண்டிச்சேரியை பிரெஞ்சுகாரர்களிடம்  விற்பதற்கு முயன்றார். ஆனால், அவர் கேட்ட தொகையினை பிரஞ்சுகாரர்களால் கொடுக்க  முடியாததால் இந்த பேரம் தோல்வியில் முடிந்தது.
இதில் டச்சுக்காரர்களின் சூழ்ச்சியும் அடங்கும். அவர்கள் பாண்டிச்சேரி பிரெஞ்சுகாரர்களின் கைக்கு போகாமல் பார்த்துகொண்டனர். இதனால்தான் மன்னர் இராஜாராம் இரண்டாவது முறையும் பண்டிச்சேரியை விற்க வந்தபோது கூட ரூஃ பிரான்சுவா மார்டினால் அதைவாங்க முடியவில்லை. இறுதியாக  டச்சுக்காரர்கள் செஞ்சியில் சூழ்ச்சி செய்து மன்னர் இராஜாராமிடம் இருந்து பாண்டிச்சேரியை விலைக்கு வாங்கிவிட்டனர். ஆகையால் பிரெஞ்சுக்காரர்களை காலி செய்வதற்கு மராட்டிய நிலைகளுடன் சேர்ந்து டச்சுக்கார்கள் தாக்க தயாராகினர் .
அவர்களுக்கு உதவியாக படேவியம் என்று அப்பொழுது அழைக்கப்பட்ட இந்தோனேஷியாவிலிருந்தும், இலங்கைலிருந்தும், நாற்பது டச்சுகப்பல்கள் கொண்ட ஒரு படைப்பிரிவு 1693 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாண்டிச்சேரிக்கு வந்தது. அதிலிருந்து சுமார் 20,000 படைகள் கரையிறங்கி வந்து கடுமையாக போரிட்டனர். பிரெஞ்சுப்படையும் அவர்களுக்கு எதிராக ஆறு நாட்கள் போரிட்டது. இறுதியில் டச்சு கூட்டுப்படைகளின் முன்னர் தாக்கு பிடிக்க முடியாமல் சரணடைந்தது. இதுப்பற்றி ஒரு பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் தன்னுடைய குறிப்புகளில் இருபது ஆண்டுகள் பிரெஞ்சுக்காரர்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய பாண்டிச்சேரி நகரம் 1693 ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 வரை ஒன்றுமில்லாமல்  தரைமட்டம் ஆக்கப்பட்டது என குறிபிட்டுள்ளார் .
ரூஃ பிரான்சுவா மார்டின்  மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சிறை பிடிக்கப்பட்டனர்.பின்னர அவரும் அவரது குடும்பத்தினரும் படேவியத்திற்கு (இந்தோனேஷியா) நாடு கடத்தப்பட்டனர். பின்னர் அவரை படேவியதிலிருந்து வங்கம் செல்ல அனுமதித்தனர். அதனால் அவர் 1694 ம் ஆண்டு பிப்ரவரி 15 ம் தேதி சந்திரநகருக்கு குடும்பத்துடன் வந்துசேர்ந்தார். அங்கிருந்து பாண்டிச்சேரியை அடைவதற்கு முயற்சி செய்தார். அதன்படி 1697ம் ஆண்டு செய்துக்கொண்ட ரைஸ்விக் ஒப்பந்தத்தின்படி பாண்டிச்சேரியை பிரெஞ்சுகாரர்களுக்கு திருப்பித்தர வழி வகை செய்யப்பட்டது. ஆனால்           டச்சுக்காரர்கள்  1699 ல் தான் பாண்டிச்சேரியை பிரெஞ்சுகாரர்களுக்கு விட்டுக்கொடுத்தனர் .   
இந்தியாவில் பல்வேறு ஐரோப்பிய அரசாட்சிகளின் ஆதிக்கம் இருந்ததால் 17ம் நூறாண்டு 18ம் நூறாண்டுகளில் ஐரோப்பிய வல்லரசுகளுக்குள் ஏற்பட்ட போர்கள் புரட்சிகளினால் அங்கே அரசுமாற்றங்கள் உருவானதுபோல் பாண்டிச்சேரியும், பல்வேறு மாற்றங்களை சந்தித்து வந்தது. 1761 ல் பிரிட்டிஷ்காரர்களின் வசம் வந்த பாண்டிச்சேரி சுமார் 23 வருடம் அவர்களின் கட்டுபாட்டில் இருந்தது. டச்சுக்கார்களும், பிரிட்டிஷ்காரர்களும், மாற்றி மாற்றி பாண்டிச்சேரியை கைப்பற்றினாலும் பிரெஞ்சுக்காரர்களால் நடைமுறைபடுத்தப்பட்ட சட்டங்களை அவர்கள் மாற்றவில்லை என்பது ஒரு சிறப்பு என்று சொல்லலாம். அதன்பிறகு 1816ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையின்படி, பிரஞ்சுகாரர்களிடமே திருப்பி கொடுக்கப்பட்டது. அப்பொழுது அவர்களின் ஒப்பந்தப்படி பாண்டிச்சேரி 293.7 சதுர கிலோமீட்டர். ஆனால், இப்பொழுது பரப்பளவு 492 கிமீ2 (190 சதுர மைல்) இந்த வரலாற்று சம்பவங்களிடையே பயணம் செய்தால் நாம் பிரெஞ்சு கதாநாயகன் ரூஃ பிரான்சுவா மார்டின் வரலாற்றில் இருந்து விலகி சென்றுவிடுவோம் .
1699ம் ஆண்டுக்கு பிறகு ரூஃ பிரான்சுவா மார்டின் பாண்டிச்சேரியில், வாணிபம் பாதுகாப்பு எல்லாம் வலுப்படுத்தினார். அவருடைய காலத்தில் பாண்டிச்சேரி மிக மிக்கியமான நகரங்களில் ஒன்றாக விளங்கியது. அதன் பிறகு 1700ம் ஆண்டுவாக்கில் வெள்ளியிலான அரைப்பணம், முழுப்பணம் இரட்டை பணம் போன்ற நாணயங்களை வெளியிட்டார். 1706ம் ஆண்டில் மட்டும் பாண்டிச்சேரியில் 10,000 பொன் வராகன்கள் அச்சிடப்பட்டதாக தகவல்கள் சொல்லுகின்றன.  ரூஃ பிரான்சுவா மார்டினின்  சேவையை பாராட்டி பிரெஞ்சு அரசு பல  விருதுகளை அவருக்கு வழங்கியது.
சூரத்தில் பிரெஞ்சுக்காரர்களுக்கு வாணிபத்தில் போட்டி அதிகமானதாலும் லாபம் அதிகமில்லதாததுனாலும், அவர்கள் தங்கள் ஒட்டுமொத்த வாணிப ஸ்தலமாக  பாண்டிச்சேரியை தேர்ந்தெடுத்தனர். அதற்கு முன்னரே பிரெஞ்சு கிழக்கிந்திய  கம்பனி மேல்மட்ட அதிகாரிகளின் குழு சூரத்தை ஒட்டுமொத்தமாக காலி செய்துவிட்டு பாண்டிச்சேரியை தலைமை இடமாக கொண்டு இயங்க தீர்மானித்திருந்தது. அந்த கமிட்டியில் ஃரூ பிரான்சுவா மார்டின் புது தலமையாளராகவும், இந்தோ -பிரஞ்ச் கமிட்டியின் தலைமை இயக்குனாரகவும்  பிரஞ்சு அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்டார். 
1701 ம் ஆண்டுகளில் பாண்டிச்சேரி ரூஃ பிரான்சுவா மார்டின் காலத்தில் மிகசிறப்பாக விளங்கியது. அந்த சமயத்தில்தான் அவர் கோழிக்கோட்டில் (அப்பொழுது கள்ளிக்கோட்டை என அது அழைக்கப்பட்டது ). ஒரு பண்டகசாலையை நிறுவினார். 1706ம் ஆண்டு ஆற்காடு நவாப்பாக இருந்த தாவுதுகானிடம் இருந்து, ஒழுகரை, மருகாப்பாக்கம் (இதில் பாக்கம் என்றால் வியாபார ஸ்தலம் என்றும் சொல்லப்படுவதுண்டு). ஒலந்தை, மாக்கமுடையான் பேட்டை, கருவடிக்குப்பம் போன்ற இடங்களை  வாங்கி பாண்டிச்சேரியோடு இணைத்தார். அதேப்போல ஐரோப்பியாவின் பிரசித்தி பெற்ற  வாபன் துனாய் கோட்டையின் மாதிரி வடிவத்தை அடிப்படையாக கொண்டு ரூஃ பிரான்சுவா மார்டின் பாண்டிச்சேரியில் புனித லூயி கோட்டையை கட்டினார். அதன் திறப்புவிழா 1706 ஆகஸ்ட் 25 ம் தேதி நடந்தது. ரூஃ பிரான்சுவா மார்டின் கலந்துக்கொண்ட கடைசி பொதுவிழா இதுவே ஆகும். அதன்பிறகு       பாண்டிச்சேரியின்      முதல்      பிரெஞ்சு ஆளுனரான
 ரூஃ பிரான்சுவா மார்டின்  1706 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி  தனது 72 ம் வயதில் அவர் உருவாக்கிய பாண்டிச்சேரியில் வைத்து மரணமடைந்தார் .
File:Magasins de la Compagnie des Indes à Pondichéry,பாண்டிச்சேரியில் கிழக்கிந்திய கம்பெனியின் கடைகள்.


அதன் பிறகு துலிவியர் தலைமை ஆளுனர் மார்டினுக்கு பிறகு 1706  முதல் 1720 வரையிலும் ஐந்து ஆளுநர்கள் பொறுபேற்று கொண்டனர். 


Pierre Dulivier, January 1707 – July 1708

Guillaume André d'Hébert, 1708–12

Pierre Dulivier, 1712–17

Guillaume André d'Hébert, 1717–18

Pierre André Prévost de La Prévostière, August 1718 – 11 October 1721


அவர்களில் எவரும் ரூஃ பிரான்சுவா மார்டினை போல் திறமையாக செயல்படவில்லை அதன் பிறகு, 


Pierre Christoph Le Noir (Acting), 1721–23

Joseph Beauvollier de Courchant, 1723–26

Pierre Christoph Le Noir, 1726–34

Pierre Benoît Dumas, 1734–41

Joseph François Dupleix, January 14, 1742 – October 15, 1754

Charles Godeheu, Le commissaire (Acting), October 15, 1754–54

Georges Duval de Leyrit, 1754–58


Thomas Arthur, comte de Lally, 1758 – January 16, 1761 இவரது காலம் தான் பிரெஞ்சு கடைசி ஆளுநர் அதன் பிறகு பாண்டிச்சேரி பிரிட்டிஷ்காரர்கள் வசம் சென்றுவிட்டது. அதன்பிறகு,  வரலாற்று பக்கங்கள் நிறைய திருத்தி அமைக்கப்பட்டன. அதையெல்லாம் எழுதுவது என்றால் நம்முடைய பக்கங்கள் போறாது. அதனால ரூஃ பிரான்சுவா மார்டினின் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி பயணத்தோடு இதை நிறைவு செய்கிறேன் .

நன்றி வணக்கம்!

Friday, April 01, 2016

எங்க ஊரு கோவில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

ஒரு தேசத்தை ஆள்கிற மன்னன் தன் மக்களின் தேவைகள், தன் படைபலம், வருமானம், செலவை தெரிந்து வைத்திருப்பதுப் போலவே அடுத்த தேசத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அடுத்த நாட்டு அரசன் தன் மீது படை எடுத்து பொருளையும், பெண்களையும் அபகரித்துப் போனால் என்ன செய்வது என முன்யோசனையோடு ஏற்பாடு செய்து எச்சரிக்கையுடன் இருப்பவனே உண்மையான அரசன்.  அடுத்த நாட்டில் இருக்கும் சிறப்புகளெல்லாம் தங்கள் நாட்டுக்கும் கொண்டு வரவேண்டும் என துடிப்புடனும் இருக்க வேண்டும். 

அதனாலதான் ஒருத்தரை ஒருத்தர் போட்டிப் போட்டிக்கொண்டு அரண்மனை, கோவில், சத்திரங்கள், குளம், ஏரின்னு மக்களுக்கு நல்லது செய்தார்கள். நெல்லோடு சேர்ந்து புல்லும் வளர்வதை போல ஆன்மீகம், கலைகளை வளர்த்தலோடு பொறாமையும் சேர்ந்து வளர்ந்ததால் சண்டையிட்டு தாங்கள் விருப்பப்பட்டு கட்டிய கோவில், அரண்மனை, ஏரிகள் பாழாவதற்கு அவர்களே காரணமாயினர்.


புண்ணியம் தேடிப் போற பயணத்துல இன்னிக்கு நாம பார்க்கப் போறது எங்க ஊரு கோவிலான அருள்மிகு சிவவிஷ்ணு ஆலயத்தை.  எல்லா ஊருலயும் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் ஆலயங்கள் இருந்தாலும், அவை தனித்தனியாதான் இருக்கும். ஆனா, ஒரு சில ஊர்களில்தான் ஒரே கோவிலில் ரெண்டு கடவுளுக்கும் தனித்தனி கருவறை, கொடிமரத்தோடு   சந்நிதி இருக்கும். அப்படிப்பட்ட சில ஊர்களில் எங்க ஊரும் ஒண்ணு!!

 

முன்னலாம் ஆரணி நகரம் அடர்ந்தக் காடாக இருந்துச்சு. இப்பகுதியில் உத்தராதி மடத்தின் குருவான ஸ்ரீசத்திய விஜய சுவாமிகள் ஜீவ பிருந்தாவனத்தை எதிர்பார்த்தபடி தனது யாத்திரையைத் தொடங்கினார். அவர் சென்ற வழியில், கமண்டலநாக நதிக்கரையில் ஐந்து தலை நாகமானது அவர் எதிரே தோன்றி அடையாளம் காட்டியது. அங்கே ஸ்ரீசத்திய விஜய சுவாமிகளின் சிஷ்யர்களால் பிருந்தாவனமும், மிகப்பெரிய அரண்மனையும் கட்டப்பட்டு "சத்திய விஜய நகரம்' என்ற ஊர் நிர்மாணிக்கப்பட்டது.

சில நூற்றாண்டுகளுக்கு முன் சத்திய விஜய நகரத்தை ஜாகீதார் என்ற மன்னன் ஆண்டு வந்தார். புரட்டாசி மாதத்தில் திருமலை திருவேங்கமுடையானை தரிசிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். ஒருமுறை கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஜாகீர்தார் திருமலையப்பனை சேவிக்க முடியாமல் போனதால் மிகுந்த மனக்கவலை அடைந்தார். அன்று இரவு அவருடைய கனவில் தோன்றிய திருவேங்கடமுடையான் ""நானே உம்மைக் காண வருகிறேன்'' என்று கூறி மறைந்தார்.


மறுநாள் காலையில் நேபாளத்திலிருந்து, வேறொரு ஊரில் பிரதிஷ்டை செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்ட சாளக்கிராம திருமேனிகொண்ட சிலா ரூபமான ஸ்ரீநிவாஸ மூர்த்தியும், பச்சைக் கல் சிலா ரூபமான பத்மாவதி தாயார் விக்ரகமும் சத்திய விஜய நகரத்தைக் கடந்து எடுத்துச் செல்லும்போது.. வண்டியோட்டி சிரமப் பரிகாரம் செய்துக் கொண்டு வண்டியை கிளப்ப முற்படும்போது வண்டி ஓரடி கூட நகராமல் நின்றது.


பலவாறு முயற்சி செய்தும் பயனில்லை. இங்கிருந்த சிலைகளை வேறு வண்டிக்கு மாற்ற முயற்சி செய்தபோது சிலைகளைத் தூக்க முடியாததைக் கண்டு திகைத்து நின்றனர். இதனைக் கேள்வியுற்ற மன்னர் ஜாகீர்தாருக்கு கனவில் எம்பெருமான் கூறியது நினைவில் வந்தது. எனவே அங்கு மிகப்பெரிய ஆலயம் எழுப்பி பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாஸ மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்.

இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பவித்ர உற்ஸவம், ஸ்ரீஸுக்த  ஹோமம், திருப்பாவாடை உற்ஸவம், சொர்க்க வாசல் திறப்பு ஆகியவை நடைபெறுகின்றது. ஒவ்வொரு புரட்டாசி 4 வது வாரம் இங்கு எல்லா வித பழங்கள், காய்கறிகள், சாத வகைகள் கொண்டு அன்னாபிஷேகம் செய்து, அவை பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுது.
சீனிவாசப் பெருமாள் கோவில் பக்கத்துலயே, அவரின் தீவிர பக்தனான அஞ்சனை மைந்தன் ஆஞ்சிநேயர் சுவாமிகளுக்கு தனி சன்னிதி இருக்கு.


ஹரிக்கும், சிவனுக்கும் பிறந்தப் பிள்ளையான ஐயப்பனுக்கும் தனிச் சன்னிதி. கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்களால் இங்கு வெகு விமர்சையாகப் படிப் பூஜை நடத்தி அன்னதானமும் நடக்குது.


நாகக் கன்னிக்கும் கூட சிறு சன்னிதி.

கிராம தெய்வங்களுக்கும் இங்கு இடமுண்டு...,


ஆரண்யம் என்றால் காடுன்னு பொருள். அடர்ந்த காடுகளும், அழகிய சோலைகளும் நிறைந்த இடம்ன்றதாலதான் இந்த ஊருக்கு ஆரணின்னு பேர் வந்தது. அந்த இயற்கை வளம் பொங்கிய காட்டைத்தேடி முனிவர்களும், தவசிகளும் இங்கு வந்தனர்.
சோழ தேசத்தை ஆட்சி செய்த மன்னன், நடுநாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தான். ஆரணி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியைக் கண்டு, அங்கே சூழ்ந்திருந்த அமைதியை உள்வாங்கி மகிழ்ந்தான்.. ‘இந்த இடம் மிகவும் சாந்நித்தியமான இடம். இங்கே முனிவர்கள் பலர், கடும் தவம் செய்திருக்கிறார்கள். சிவகணங்கள் அரண் போல் இந்த இடத்தைக் காத்து, சிவனருளை நாம் பெறுவதற்கு பேருதவி செய்து வருகின்றன’ என்று அமைச்சர் பெருமக்களும் அந்தணர்களும் சொல்ல… மகிழ்ந்து போனான் மன்னன்.

சேர தேசம், சோழ நாடு, பாண்டிய தேசம் என்று சொல்வதுபோல, விழுப்புரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் முதலான பகுதிகளை நடுநாடு என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில், அந்தப் பக்கம் ஆரணியையும், வேலூரையும் பார்த்து வியந்த மன்னர்கள் உண்டு. 

இவ்வூரின் அழகையும், இவ்வூர் மக்களின் சாத்வீகக் குணத்தையும் கண்டு அகமகிழ்ந்த மன்னன் இங்கு சிவப்பெருமானுக்கு ஒரு சன்னிதி எழுப்பி வணங்கினான். 
அறுபத்தி மூன்று நாயன்மார்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க எழுப்பப் பட்ட சன்னிதி. சிவராத்திரி, கார்த்திக தீபம், பிரதோசம் போன்றவை இக்கோவிலில் சிறப்பாக் கொண்டாடப் படுது. ஒவ்வொரு பிரதோசத்துக்கும் இங்கு வரும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாதது. 


ஆரணி சுற்றுவட்டாரத்தில் கமண்டல நாக நதி ஓடுது. முன்னலாம் இருகரையும் தொட்டு தண்ணி ஓடும். இப்ப மழையில்லாததால ஆற்றில் தண்ணி இல்ல. தண்ணியே இல்ல, அப்புறம் எதுக்கு ஆறுன்னு நம்மாளுங்க யோசிச்சு!! குப்பையைக் கொண்டுப் போய் கொட்டுறதும், ஆத்துல மணலெடுப்பதும் நடக்கும். அப்படி குப்பைகளை அகற்றவும், மணல் தோண்டும்போதும் சிலைகள் கிடைப்பது அடிக்கடி நடக்கும். அப்படி கிடைக்கும் கற்சிலைகளை இக்கோவிலில் வச்சிடுவாங்க. ஐம்பொன் சிலைகளை வேலூர் அரசு அருங்காட்சியகத்துக்குக் கொண்டுப் போய்டுவாங்க.




நவக்கிரக நாயகர்களுக்கு தனிச் சன்னிதி. இச்சன்னிதிக்கும், எனக்கும் ஒரு தொடர்புண்டு. 

நான் அப்புவை வயத்துல சும்க்கும்போது இந்த சிவ - விஷ்ணு ஆலயத்துல இருந்து 1 கிமீ தூரத்துலதான் வாடகை வீட்டில் தங்கி இருந்தோம். மூத்தது ரெண்டும் பொண்ணாய் பொறந்துடுச்சு. அடுத்தது பையனாய் பிறக்கட்டும்ன்னு வேண்டிக்கிட்டு, நவக்கிரகத்துக்கு விளக்கேத்தி வான்னு அப்பா சொன்னார். தினமும் சாயந்தரம் கோவிலுக்குப் போய் வருவேன். அதாவது புண்ணியத்துக்கு புண்ணியம். நடந்த மாதிரியுமாச்சு.

அப்பு எதாவதுக் கிறுக்குத்தனம் பண்ணால், உடனே, “உன்னை கோவில்லப் போய் நவக்கிரகத்தைச் சுத்தச் சொன்னால் நீ ஆஞ்சினேயரை சுத்தி வந்திருக்கே. அதான், உன்புள்ளை இப்படிப் பொறந்திருக்குன்னு” அப்பா, அம்மா, பசங்க கிண்டல் செய்வாங்க.



எங்க ஊரு கோவிலை நல்லா சுத்திப் பார்த்து புண்ணியம் தேடிக்கிட்டீங்களா!?

அடுத்த வாரம்  திருவண்ணாமலை மாவட்டத்தில் கடல் மட்டத்துல இருந்து சுமார் 4500 கிமீ உயரத்தில் இருக்கும் பர்வத மலையை  தரிசிக்கலாம்.

நன்றி வணக்கம்! 

இது ஒரு மீள் பதிவு...,