Monday, July 31, 2017

லஞ்சம் கேக்குறவங்களுக்கு நல்ல செருப்படி - ஐஞ்சுவை அவியல்

இந்தா புள்ள! ஆப்பிள் கேட்டியே வாங்கி வந்திருக்கேன்.. எடுத்துக்கிட்டு போய் உள்ள வை. பசங்க வந்தபின் கட் பண்ணி கொடு..

மாமா! இந்த பழத்து மேல ஏதோ ஸ்டிக்கர் ஒட்டி இருக்கே! பார்க்க என்ன விலை மாதிரியும் தெரில! என்னது மாமா!? 



அதுவா?! மரபணு மாற்றம் செய்யப்பட்ட, பூச்சிக்கொல்லினால தயாரிக்கப்பட்டதுன்னும்,  நாட்டு விதை,  இயற்கை உரம் கொண்டு தயாரிக்கப்பட்டதுன்னும் நாம தெரிஞ்சுக்கனும்ன்னுதான்  பி.எல்.யுன்ற குறியீடு போட்ட ஸ்டிக்கர் ஒட்டப்படுது.  பி.எல்.யு(PLU) ஸ்டிக்கர் என்பது Price Look Up நம்பர் ஒட்டப்படுது.  காய்கறி, பழங்கள்ல 1441 மாதிரியான நான்கு நம்பர் இருந்தா வழக்கமா பயன்படுத்துற பூச்சிக்கொல்லியை தெளிச்சு விளைஞ்சது. 81442 ன்னு 8 ல ஆரம்பிக்குற நம்பர் இருந்தா மரபணு மாற்றம் செஞ்சு விளைஞ்சது.  94532 ன்னு 9 ல ஆரம்பிக்குற நம்பரா இருந்தா அது நாட்டு விதை மற்றும் இயற்கை உரத்தால விளைஞ்சதுன்னும் அர்த்தம். 

ஓ அப்படியா?! ஆப்பிள் மேல மெழுகு பூசுறதா சொல்லுறாங்களே! உண்மையா?!

ஆமா, ஆப்பிள் சீக்கிரம் கெட்டுப்போகாம இருக்க ஒருவிதமான மெழுகு பூசுறாங்க. அதனால, ஆறு மாசம் வரைக்கூட கெடாம வச்சுக்கலாம்..

ஐயோ! அந்த மெழுகை சாப்பிட்டா நம்ம உடம்பு என்னத்துக்கு ஆகும்?!

அதனாலதான் ஆப்பிளை நல்லா கழுவி, தோலை சீவிட்டு சாப்பிடனும்.. கண்ணுக்கு தெரியாம எங்கயோ விளைஞ்சு வரும் ஆப்பிள்லதான் சத்து இருக்குன்னு இல்ல... நம்மை சுத்தி விளையுற கொய்யா, நெல்லிக்காயில் இதைவிட நிறைய சத்து இருக்கு. அதனால அதைலாம் சாப்பிடலாம்.

அப்பயும் பூச்சிக்கொல்லிலாம் தெளிச்சிருப்பாங்களே!



ம்ம்ம்ம் புளி தண்ணில ஒரு கால் மணிக்கூர் ஊற வெச்சு அப்புறம் நல்லத்தண்ணில கழுவி அப்புறம் கட் பண்ணனும்.  கீரை, கேரட், வெங்காயம், தக்காளி உருளைக்கிழங்குன்னு அத்தனையையும் மண் போக கழுவி அப்புறம் கட் பண்ணிக்கனும். கட் பண்ணிட்டு கழுவக்கூடாது. கத்திரிக்காய், வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு மாதிரியான கட் பண்ணா கருத்திடும் காய்களை வேணும்ன்னா கட் பண்ணிட்டு அப்புறமா தன்ணில போடலாம். அப்பயும் புளித்தண்ணில கழுவிட்டுதான் ஊறவெச்சுதான் கட் பண்ணனும். இதுப்போல திராட்சை, கொய்யா, மாதிரியான பழங்களையும் கழுவி சாப்பிடலாம். புளித்தண்ணில ஊற வைக்கும்போது பூச்சிக்கொல்லி தன்னோட வீரியத்தை இழக்குது. முட்டைக்கோசை கட் பண்ணும்போது இலை இலையா எடுத்துதான் கட் பண்ணனும். அப்படியே கட் பண்ணா இலைகளுக்கிடையே இருக்கும் பூச்சி, புழுவை நாம பார்க்க முடியாது.  வெங்காயம் கட் பண்ணும்போது கண் எரியாம இருக்க வெங்காயத்தை கொஞ்ச நேரம் ஃப்ரிட்ஜில் வச்சு எடுத்திட்டு அப்புறமா கட் பண்ணா கண்ணு எரியாது. வெண்டைக்காயை கட் பண்ண பொறவு லேசா எலுமிச்சை பழச்சாறு தெளிச்சு பொரியல் செஞ்சா ஒன்னோட ஒன்னு ஒட்டாது.கேரட்டை கட் பண்ணி ரொம்ப நேரம் வச்சா அதிலிருக்கும் சத்துலாம் போய்டும். வெங்காயத்தை கட் பண்ணி ரொம்ப நேரம் வச்சிருந்தா சுத்தி இருக்குற பாக்டீரியாவைலாம் வெங்காயம் இழுத்துக்கும். 

காய்கறி நறுக்க இத்தனை விசயமிருக்கா?!   ஃபேஸ்புக்ல இந்த படம் வந்துச்சு. காத்து வர என்னலாம் யோசிக்குறாங்கண்னு பாரு மாமா..

தான் ஆசை ஆசையாய் வாங்கிய வண்டிக்கு லைசென்ஸ் வாங்க போனதுக்கு லஞ்சம் கேட்டிருக்காங்க. அதுக்கு ஒருத்தர் கொடுத்த செருப்படியை பாருங்க மாமா. ட்விட்டர்ல பார்த்தேன். ஆனா எந்த ஊருன்னுதான் தெரில. இந்த மாதிரி எல்லோரும் லஞ்சம் கொடுக்க மாட்டேன்னு எல்லாரும் கிளம்புனா நாடு உருப்பட்டுடும். 

ம்ம்ம் லஞ்சம் கேக்குறவங்களைவிட லஞ்சம் கொடுக்குற நம்மேலதான் தப்பு அதிகம். அதுசரி, நாமதான் கடவுளுக்கே லஞ்சம் கொடுக்குற ஆளாச்சே!

ம்ம்ம் அப்படியே இந்த விடுகதைக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்....
காய்க்கும்...
 பூக்கும்....
 சலசலக்கும்...
ஆனா, காக்காய் உட்காரக்கூட இடமிருக்காது..
 அது என்ன? 


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1467861

நன்றியுடன்,
ராஜி.

Saturday, July 29, 2017

விஷ்ணுவிடம் போரிட்ட கருட பகவான். - கருட பஞ்சமி

எல்லா கடவுளும் பல்வேறு அவதாரங்களை எடுத்தன. அவ்வாறு எடுக்கும்போது தனக்கென அடையாளமா இருக்கும் பொருட்களையோ அல்லது தனது வாகனத்தையோ கொண்டிருக்க மாட்டாங்க. ஆனா, விஷ்ணுவின் எல்லா அவதாரத்திலும் கருடன் இருப்பார்ன்னு சொல்லுது கருட புராணம்.  சதா சர்வக்காலமும் இறைவனுடனே இருக்குற கருடனை வணங்கினால் அவரின் அருளாசி கிட்டும். முக்கியமா பார்வைக்குறைபாடு, கண் கோளாறுகள் கருடனை வேண்டிகொண்டால் குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.   கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், கும்பாபிஷேகம் போன்ற கால நேரங்களில் வானில் கருடன் தெரிவதும், வட்டமடிப்பதும் மங்களகரமானதுன்னு நம்ம எல்லோருக்கும் தெரியும். மேலே பறக்கும் கருடனின் நிழல் பயிர் பச்சைகளின் மேல் படுவது நல்லது என்று விவசாயிகள் நம்புகிறார்கள். கருட மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. எதிரிகளை வெல்வதற்கும், விஷங்களை முறிக்கவும், மந்திர, தந்திரங்களுக்கும், தீய சக்திகளை ஒடுக்கவும் கருட மந்திரம் நல்ல பலன் தரும். கார்க்கோடகன் என்னும் நாகத்தை அடக்கி பிடித்து, நாகங்களை ஆபரணமாக தரித்துள்ளதால் ராகு-கேது தோஷமுள்ளவர்கள் கருட தரிசனம் செய்வது நலம் தரும். கருடனின் குரு குருபகவான்.. அதனால் குருபகவானை வணங்க அறிவு கூடும். 



ஆடி மாதம் முழுக்க நிறைய பண்டிகை இருக்கு. அதுல முக்கியமானது கருட பஞ்சமி. பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் கருடன் பகவான்தான் இருக்கார். ஆடிமாதம் வளர்பிறையில் வரும் பஞ்சமி திதியில் இப்பண்டிகை அனுஷ்டிக்கப்படுது.  இவரைப்போல பலசாலியாகவும் புத்திமானாகவும், வீரனாகவும், விவேகியாகவும் குழந்தைகள் உருவாக  கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். பெருமாள் வீதியுலா வர எத்தனையோ வாகனமிருக்க கருடன்மீது வரும் உலாவை கருட சேவைன்னு சொல்லி ஆர்ப்பரிக்கும்போதே கருடனின் மகிமையை உணர்ந்து கொள்ளலாம். கருடனுக்கு விஹாகேஸ்வரன், வைநதேயின், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடின்னு பல பேர் இருக்கு. 
பிரம்மனின் மகனான காஷ்யப்பருக்கு நாலு மனைவி.  அவர்களில் கத்ரு என்பவளின் பிள்ளைகள்தான் நாகர்கள்.  தாயின் சொல்லை கேட்காமல் சாபத்துக்குள்ளாகி  ஜனமேஜயன் என்பவனின் யாகத்தீயில் விழுந்து மாண்டன. அஸ்தீகர் ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தி கத்ரு பிள்ளைகளின் சாபத்தை நீக்கிய நாளே நாக சதுர்த்தி.  நாக சதுர்த்தியன்று விரதமிருந்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.
Garuda, South India
வினதைக்கு அருணனும் கருடனும், கத்ருவுக்கு நாகர்களும் வாரிசு. ஒருமுறை வினதையும், கத்ருவும் தோட்டத்தில் உலா வந்துக்கொண்டிருந்தபோது இந்திரனின் வாகனமான உச்சைச்சிரவ் அந்தப்பக்கம் சென்றது. வினதையிடம் அந்தக்குதிரை வாலின் நிறம் என்னன்னு கத்ரு கேட்டாள். வாலின் நிறம் வெண்மைன்னு வினதை சொன்னாள். இல்லை, அதன் நிறம் கருப்பு என கத்ரு வாதிட்டாள். வாதம் சூடுப்பிடித்து வாக்குவாதமானது. போட்டியில் தோற்பவர் வெற்றி பெற்றவருக்கு அடிமை எனவும், அவர்களுக்கு ஊழியம் செய்ய வேண்டுமென முடிவானது.  கத்ரு தன் பிள்ளைகளிடம் சென்று கருமை நிறம் கொண்டவர்களில் உச்சைச்சிரவ் வாலில் சுற்றிக்கொண்டு வாலை கறுப்பாக்குங்கள் என  உத்தரவிட, அவளின் பிள்ளைகளும் அப்படியே அவ்வாறு செய்ய குதிரையின் வால் கருப்பானது. பின்பு, ஏதுமறியாதவள் போல வினதையை அழைத்துக்கொண்டு கத்ரு குதிரையை காண சென்றாள்.  அங்கு குதிரையின் வால் கருமையா இருப்பதை காட்டி நீ எனக்கு அடிமை என சொன்னாள். வினதையும் ஒத்துக்கொண்டு கத்ருவின் அடிமையானாள். எங்கு சென்றாலும் கத்ருவை சுமந்து செல்வது அவளின் வேலையானது.   இதுமட்டுமின்றி அருணன் மற்றும் கருடனும் அவளின் தாயாரோடு சேர்த்து கத்ருவுக்கும், அவளின் பிள்ளைக்கு அடிமையாயினர். 

அடிமைத்தனம் பிடிக்காத கருடன் தன் மாற்றாந்தாயான கத்ருவிடம் சென்று தங்களை விடுவிக்குமாறு வேண்டி நின்றார். அதற்கு கத்ரு, தேவ லோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வந்து தரவேண்டும் என நிபந்தனையிட்டாள் தேவலோகம் சென்றான் கருடன். இந்திரனைச் சந்தித்து தன் விருப்பத்தைக் கூறி, தேவலோக அமிர்தத்தைத் தருமாறு கேட்டான். நாகங்கள் மரணமில்லா வாழ்வு பெற்றால் உலகம் என்னாவது என்று யோசித்த இந்திரன். அமிர்தத்தைத் தர மறுத்தான். தன் பலத்தில் நம்பிக்கை கொண்டிருந்த கருடன், இந்திரனுடன் யுத்தம் செய்து, அவனை வென்று அமிர்த கலசத்தை அடைய விரும்பினான். அதையடுத்து, இருவரும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். கருடனுக்கும் இந்திரனுக்கும் நடந்த யுத்தத்தில் கருடனே வென்றான். தேவலோகத்தில் இருந்து அமிர்த கலசத்தை எடுத்துக்கொண்டு நாகங்களுக்குக் கொடுக்கப் புறப்பட்டான்.
இத்தனை சம்பவங்களையும் பார்த்துக்கொண்டிருந்த மகாவிஷ்ணு, அதன்பின்னரும் சும்மா இருக்க விரும்பவில்லை. அமிர்த கலசத்துடன் விண்வெளியில் பறந்து கொண்டிருந்த கருடனை வழிமறித்தார். விஷ நாகங்களுக்கு அமிர்தம் தந்தால், அவை மரணமில்லாமல் வாழ்ந்து, மனித இனத்தையும் தேவர்களையும் அழித்துவிடும். இது வேண்டாம் என அறிவுரை கூறினார். ஆனால், கருடனோ எதற்கும் செவி சாய்க்கவில்லை. அடிமைத் தளையிலிருந்து விடுபடவேண்டும் என்ற வெறியில் அவன் விஷ்ணுவையே துச்சமாகக் கருதினான். இந்திரனை வென்ற ஆணவத்தில், துணிவிருந்தால் என்னோடு போர் புரிந்து ஜெயித்து, அதன்பின்பு அமிர்த கலசத்தை நீங்களே தேவலோகத்தில் கொடுத்துவிடுங்கள் என்று விஷ்ணுவுக்கே சவால் விட்டான்.
சற்று நேரம் விஷ்ணு யோசித்தார். தன் தாயின்மீது கொண்ட பக்தியால் தேவேந்திரனையே எதிர்க்கத் துணிந்த கருடனின் வீரத்தை எண்ணி வியந்தார். அதோடு, அமிர்த கலசம் கையில் இருந்தும், அந்த அமிர்தத்தை தான் அருந்தி அழியாநிலை பெற விரும்பாமல் சென்றுகொண்டிருக்கும் அவனின் தன்னலமற்ற தன்மையை மனத்தால் பாராட்டினார். கருடனுக்குள் ஆணவமும் அகங்காரமும் இருந்தாலும் அவனுக்குள் இருந்த உயர்ந்த பண்புகளையும், அவனது விடுதலை வேட்கையையும் கண்டு வியந்த விஷ்ணு அவனோடு போரிடுவதைப் பெருமையாகக் கருதினார்.
India Antique Ravi Varma Lithograph / Lord Vishnu on Garuda #569
விஷ்ணுவுக்கும் கருடனுக்கும் யுத்தம் ஆரம்பமானது.  முனிவரிடம் தான் கற்ற வித்தைகளையும் மாயா ஜாலங்களையும் காட்டிக் கடும் போர் புரிந்தான் கருடன். ஒரு தாய் தன் குழந்தையோடு விளையாடும்போது, தான் தோற்றுப்போவதுபோல நடிப்பாள். இது குழந்தையைச் சந்தோஷப்படுத்துவதற்காக! அது போல விஷ்ணுவும் கருடனை ஜெயிக்க வைப்பதுபோல நடித்துக்கொண்டு, அவனுடன் போர் செய்துகொண்டிருந்தார். வெற்றி தோல்வி நிர்ணயமாகாமல் 21 நாட்கள் போர் தொடர்ந்தது. அப்போது பகவான் விஷ்ணு கருடனுக்கு நல்வழிகாட்ட மீண்டும் முயற்சி செய்தார். கருடா! உன் தாய்க்குக் கொடுத்த வாக்கைக் காபாற்ற நீ எடுத்துக்கொண்ட இந்த விடாமுயற்சியைப் பாராட்டுகிறேன். இருந்தாலும், எல்லா சாஸ்திரங்களும் கற்ற உனக்கு, தேவலோக அமிர்தத்தை எடுத்து நாகங்களுக்குக் கொடுப்பது தர்மமாகாது என்பது மட்டும் ஏன் தெரியவில்லை? நாம் வீணாகப் போர் புரிவதில் இருவருக்கும் லாபமில்லை. நீ வேண்டும் வரங்களைக் கேள். தருகிறேன்! என்றார்.
Kāliya took advantage of this situation. He was unnecessarily puffed up by the volume of his accumulated poison, as well as by his material power, and he thought, "Why should Garuḍa be offered this sacrifice?" He then ceased offering any sacrifice; instead, he himself ate the offering intended for Garuḍa. When Garuḍa, the great devotee-carrier of Viṣṇu, understood that Kāliya was eating the offered sacrifices, he became very angry and quickly rushed to the island to kill the offensive serpent.
இப்போது என் கையில் உள்ள அமிர்த கலசத்தைத் திருப்பித் தரவேண்டும் என்றால், என் தாயும், சகோதரனும், நானும் அடிமையில் இருந்து விடுபட வழிசெய்யுங்கள் என்று வரம் கேட்டிருக்கலாம் கருடன். ஆனால் கர்வம் தலைக்கேறியிருந்த கருடனுக்கு அப்படிக் கேட்கத் தோன்றவில்லை. நீ யார் எனக்கு வரம் தர? வேண்டுமானால் நீ ஏதாவது வரம் கேள். நான் தருகிறேன் அதன்பிறகாவது நான் சொல்ல வழிவிடு! என்றான் கருடன், அகம்பாவமாக. மகாவிஷ்ணு அப்போதும் விட்டுப் பிடித்தார். என்ன வரம் கேட்டாலும் தருவாயா? அப்புறம் வாக்குத் தவறமாட்டாயே? என்று கேட்டார்.  நான் வாக்குத் தவறமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும். தாய்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றத்தான் உங்களையே எதிர்த்து நிற்கிறேன். என்ன வரமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்றான் கருடன். அப்படியானால், நீயே எனக்கு வாகனமாகிப் பணிபுரியும் பாக்கியத்தை வரத்தைத் தா! என்றார் விஷ்ணு. மகாவிஷ்ணுவின் இந்தப் பதிலால் கருடனின் கர்வம் வேரோடு அழிந்தது. அவனின் அகக் கண்கள் திறந்தன. அவன் விஷ்ணுவின் திருப்பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்தான். அவரை எதிர்த்துப் போரிட்டதற்காக மன்னிப்புக் கோரினான். தொடர்ந்து அமிர்த கலசத்தை விஷ்ணுவின் பாதத்தில் வைத்து நமஸ்கரித்தான். அமிர்தம் அருந்தாமலேயே, நீ மரணமில்லாமல் சிரஞ்சீவியாக என்னுடன் இருப்பாய் என்று விஷ்ணு ஆசி கூறினார்.
Garuḍa was asked by the Lord to leave that place because the snake Vāsuki, who was to be used as the rope for churning, could not go there in the presence of Garuḍa. Garuḍa, the carrier of Lord Viṣṇu, is not a vegetarian. He eats big snakes.
தொடர்ந்து, தான் கொண்டு சென்ற அமிர்த கலசத்தை தர்ப்பைகள் பரப்பி அதன்மீது வைத்தான் கருடன்.    வினதையோடு கருடன் மற்றும் அருணனுக்கு நாகர்களின் தாய் கத்ருவிடமிருந்து விடுதலை கிடைத்தது. நாகர்கள் கடலில் குளித்துவிட்டுக் கலசத்திலிருந்த அமிர்தத்தை உண்ண வருகையில், இந்திரன் அமிர்த கலசத்தைத் தூக்கிக் கொண்டுச் சென்று விட்டார். ஏமாந்த நாகர்கள் அமிர்த கலசம் வைத்திருந்த தர்ப்பைப்புல்லைத் தங்கள் நாக்கினால் நக்கியதால், பாம்பினங்களுக்கு நாக்குகள் பிளவுண்டன. ஸ்ரீமகாவிஷ்ணு கருணைகூர்ந்து விஷமில்லா நாகங்கள் பல காலம் வாழும். விஷமுள்ள நாகங்கள் சில காலம் வாழும். நல்ல நாங்களை மனிதர்கள் பூஜித்து வழிபடுவார்கள் என்று அருளினார். தொடர்ந்து.... வினதையும் கருடனும், அவனது சகோதரனும் கத்ரு மற்றும் நாகங்களின் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டனர். கருடன் தன் தாய் வினதை மற்றும் கத்ரு ஆகியோரை வணங்கி ஆசிபெற்று விஷ்ணு சேவையில் தொடர்ந்து ஈடுபட்டான். 
எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் சந்நிதியை நோக்கி வணங்கியபடி நிற்கும் கருடனை நாம் கருடாழ்வார் என்றே அழைத்து பூஜிக்கிறோம். நாகங்களுக்கும் கருடனுக்கும் பகை என்றாலும், விஷ்ணுவின் சந்நிதியில் ஆதிசேஷன் எனும் நாகமும், கருடாழ்வாரும் நட்பு கொண்டே விஷ்ணு சேவை செய்கின்றனர்.        கருடனின் திருஉருவம் காணப்படும். ஒருவர் உடலில் ஏறிய பாம்பின் விஷத்தை கருட வித்தியா மந்திரங்கள் செபிப்பதன் மூலம் நீக்கப்படுகிறது. கருடன் பெயரில் கருட புராணம் உள்ளது. அமிர்தத்தை, தேவ லோகத்திலிருந்து பூமிக்கு எடுத்து வந்தவர். விஷ்ணுவின் வாகனமாக கருடன் இருப்பதால், வைணவர்கள் இவரைப் பெரிய திருவடி என்பர். திருமாலையே கருடன் எதிர்த்திருந்தாலும், திருமாலுக்கே வரம் தந்த பெருமை, திருமாலுக்கே வாகனமான பெருமை என இரு பெரும் பேறுகள், பெற்ற தாயைப் போற்றி வணங்கியதன் காரணமாக கருடனுக்குக் கிடைத்தன.
Garuda, Carrier of Lord Vishnu.- https://ramanan50.wordpress.com/2014/08/05/serious-illness-ward-off-black-magic-ashu-garuda-dandakam/
வாலகில்யை முனிவர்கள்..
கட்டை விரலைவிட சிறிய உருவம் கொண்ட முனிவர்கள் 60.000 பேர் இருந்தனர். வானுலகில் சுற்றித்திரியும் ஆற்றல் கொண்ட இவர்கள் சூரிய பகவானின் நண்பர்கள். காசிபர் முனிவர் வேள்வி செய்யும்போது இந்திரன், வேள்விக்குண்டான மரக்கட்டைகளுக்காக , மலைக்காட்டையே பெயர்த்தெடுத்து வந்து தந்தார். ஆனால், வாலகில்யை முனிவர்கள் அத்தனை பேரும் சேர்ந்தும்  சிறு மரக்கட்டையை தூக்க சிரமப்பட்டு கொண்டு வந்ததை கண்டு இந்திரன் கேலி செய்து சிரித்தான். தேவாதிதேவனான உன்னை வெல்லும் ஆற்றலோடு காசிபருக்கு மகனாய் பிறப்பான் என சாபமிட்டனர். இந்திரன் தான் செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான். பிரம்மன் தலையிட்டு சமரசம் செய்யப்போக  ஆரம்பத்தில் இந்திரனுக்கு எதிரியாகவும், பின் நண்பனாகவும் விளங்குவான் என அருளினர்.
Image from http://www.buddhamuseum.com/bronze-buddha_2/hoysala-garuda-ad49.jpg.
ஒருமுறை வாலகில்யை முனிவர்கள்  தலைக்கீழாய் தொங்கியபடி தவமிருந்தபோது கருடன் தன் சிறுவயதில் காப்பாற்றினார். அதனால் அவருக்கு எளிதில் எதையும் சுமக்கும் தன்மை உண்டானது.  தெய்வங்கள் அனைத்துக்கும் அநேகமாக வாகனங்கள் உள்ளன. ஆனால் வாகனங்களுக்கு வாகனம் எதுவும் கிடையாது. ஆனால் கருடன் அதிலும் சிறப்பு மிக்கவராக உள்ளார். ஏனெனில் கருடனுக்கு வாகனம் உண்டு. அதாவது வாயுதான் கருடனின் வாகனமாக உள்ளதாக இதிகாச புராணங்கள் தெரிவிக்கிறது. 
முதலையின் வாயில் அகப்பட்டுக்கொண்ட யானையை காப்பாற்ற வாய்வுவேகம், மனோவேகமாய் பெருமானை சுமந்து வந்த கருடன் நம் துயரினை போக்கவும் விஷ்ணுவை அழைத்துவருவார். பலசாலியும் புத்திக்கூர்மையுடனும் பிள்ளைவரம் வேண்டியும், சகோதரர்களுக்குள் ஒற்றுமை உண்டாகவும், கண் குறைபாடுகள் நீங்கவும், உத்தியோகத்தில் சிறக்க கருட வழிபாடு சிறந்தது.
Garuda, Laxmi, Vishnu
பிறக்கும் குழந்தை துறுதுறுப்பா இருக்க இந்த விரதம் உதவும். ஆனா, பாருங்க இந்த விரதத்தை என் அம்மா கடைப்பிடிக்கலைப்போல!!!!! நான் சோம்பேறியா பொறந்துட்டேன். அதனாலதான் நேத்தைய கருட பஞ்சமி விழாவுக்கு இன்னிக்கு பதிவு போட்டிருக்கேன். டைப்ப லேட்டாகிட்டுது.... :-(

தமிழ்மணம் ஓட்டுப்பட்ட.....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1467710
Etruscan God Typhon, the titan monster painting looks similar to hindu god and mighty eagle bird Garuda, who carried Lord Vishnu & Lord Hanuman in Ramayana
நன்றியுடன்,
ராஜி.

Friday, July 28, 2017

சிவரூபத்தையே எரித்த அங்காளபரமேஸ்வரி - ஆடி இரண்டாவது வெள்ளி


அம்மன் மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆடி மாதத்தின் அத்தனை செவ்வாய், வெள்ளிக்கிழமை மிகச்சிறப்பு வாய்ந்தது. ஆடி செவ்வாய் கிழமைகளில் அவ்வை நோன்பு இருப்பாங்க. ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சொர்ணாம்பிகையை வணங்கனும். அதனால, போனவாரம் வீட்டில் தங்க மழையை பொழிய வைக்கும் சக்திக்கொண்ட சொர்ணாம்பிகை வழிப்பாட்டை பத்தி பார்த்தோம். பார்க்காதவங்க பார்த்துட்டு  வந்துடுங்க. ஆடி மாசத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை அங்காளப்பரமேஸ்வரியை வழிப்படனும். இவளுக்கு அங்காளம்மன்னு இன்னொரு பேரும் இருக்கு. 


அங்காளம் என்ற சொல்லுக்கு இணைதல்ன்னு அர்த்தம். இணைதலை ரெண்டு வகையாய் எடுத்துக்கலாம். வல்லாள கண்டன் என்னும் அரக்கன் சிவபெருமானை நோக்கி கடுந்தவமிருந்து  ஏழு பிறவி எடுத்த பெண்ணொருத்தியால், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரக்கூடாதெனவும், நினைத்த உருக்கொள்ளவேண்டுமெனவும்  2 வரம் வாங்கினான். வரம் வாங்கிய மமதையில் சகல லோகத்தையும் துன்புறுத்த ஆரம்பித்தான். கர்வத்தால்  வரம் கொடுத்த சிவனையும் மறந்தான். பூவுலகில் உள்ள கோவில்களில் உள்ள இறை சொரூபங்களை எடுத்துவிட்டு தன்னுடையை சொரூபத்தை வைத்து வழிப்பட வேண்டுமென கட்டளையிட்டான். யாகத்தின் அத்தனை அவிர்பாகத்தையும் அவனே எடுத்துக்கொண்டான். சகல லோகங்களும் அவனை கண்டுஅஞ்சின.  எல்லா வரங்களும் கைவரப்பட்டாலும் குழந்தை வரம் மட்டும் அவனுக்கு கிட்டவே இல்லை. அதனால் 108 மனைவிகளை மணந்தான். ஆனாலும், குழந்தை பிறந்தபாடில்லை...
குழந்தை இல்லாத துக்கத்தில் பார்க்கும் பெண்களை எல்லாம் பெண்டாள ஆரம்பித்தான்.  இவனின் ஆட்டத்துக்கு முடிவு கட்ட நினைத்த சிவப்பெருமான் பார்வதிதேவியை நோக்கி முதல் பிறவியில் மீனாட்சி, ரெண்டாவது காமாட்சி, மூன்றாவது விசாலாட்சி, நான்காவது காந்திமதி, ஐந்தாவது மாரியப்பன், ஆறாவதாக காளியாக அவதரித்துப் வா. ஏழாவது பிறவி பற்றி பிறகு சொல்கிறேன் என ஆணையிட்டார். பார்வதி தேவியும் அவ்வாறே ஐந்து பிறவிகளையும்  அவதரித்து முடித்து ஆறாவது பிறவியான காளிதேவியாய் அவதரித்தார்.  வல்லாள கண்டனின் அழிவுக்காலம் நெருங்கியது. 

சிவனைபோன்றே தனக்கும் ஐந்து தலை உள்ளதால் சிவனுக்கு ஈடானவன் என பிரம்மன் கர்வம் கொண்டான். அவனின் கர்வம் போக்க சிவபெருமான் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளினார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. கைகளை உதற உதற மீண்டும் மீண்டும் சிவன் கையிலேயே வந்து ஒட்டிக்கொண்டது அத்தலை. இதுப்போல 99 முறை நடந்தது. சிறிது நேரம் அப்படியே வைத்திருங்கள் என்று பார்வதி சொன்னாள். சிவன் அவ்வாறே செய்ய அத்தலை கபாலமாக மாறியது. ஏற்கனவே கணவனின் தலை கொய்யப்பட்ட கோவத்திலிருந்த சரஸ்வதி, பிரம்மனின் தலை கபாலமாக மாற யோசனை சொன்ன பார்வதிமீது கோபம் கொண்டு   பூலோகத்தில் பிறந்து அலைந்து திரிவாயாக!என சாபமிட்டாள்.  சிவனின் உணவை அக்கபாலமே உண்டதால் சிவன் பிட்சை எடுக்கும் நிலைக்கு ஆளானார். அக்கபாலத்தையே திருவோடாக்கி பிட்சாடனர் கோலம் கொண்டு பிட்சை எடுத்து உலகை வலம் வந்தார். கொடிய உருவத்துடன் பார்வதிதேவியும், பிட்சாடணர் வேடம் கொண்ட சிவனும் எங்கெங்கோ சுற்றி இருவரும் தனித்தனியாக மேல்மலையனூர் வந்து சேர்ந்தனர்.
பார்வதிதேவியிடம் பிட்சை கேட்டார் சிவன். சுவைமிகுந்த உணவை தயார் செய்து சிவனுக்கு பிட்சையிட்டாள் தேவி. ஓரிரு முறை அன்னை இட்ட உணவை கபாலம் ருசித்தது. மூன்றாவது முறை வேண்டுமென்றே உணவை தவறவிட்டாள் தேவி. உணவின் ருசியால் கவரப்பட்ட கபாலம் உணவை உண்ணும் ஆவலில் சிவனின் கையை விட்டு அகன்றது. கையிலிருந்த உணவை வான் நோக்கி வீசிவிட்டு தேவி விஸ்வரூபமெடுத்து கபாலத்தை மீண்டும் வராதவாறு பூமியிலேயே போட்டு அழுத்திவிட்டாள். அத்தோடு இருவரின் சாபமும் அகன்றது. இதைத்தான் மயானக்கொள்ளை விழாவாக மாசிமாதத்தில் கொண்டாடுகின்றனர்.
இதற்கிடையில் வல்லாளகண்டனின் துன்பம் தாளாமல் விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். சிவனின் பிரம்மஹத்தி தோஷம் நீக்க தேவி அங்காளபரமேஸ்வரியாய் அவதரிக்கும் நேரம் வந்துள்ளது. அவளால் உங்கள் துன்பம் தீருமென அருளினார்.  சிவனின் தோஷத்தை போக்கிய தேவிமீது கோபம் அதிகரித்த சரஸ்வதி தேவி.. சிவனின் சாபத்தை போக்கியவளே! மயானபூமிதான் உன் இருப்பிடம். , மயானக்கரிதான் உன் அலங்காரம், மயானத்தில் எரியும் பிணங்களே உனது உணவென சாபமிட்டாள். சாபம் பெற்ற தேவி மூன்று கண்களும், எடுப்பான பல்லும், இருண்ட மேனியோடு சுற்றியளைந்தாள்.
வல்லாள கண்டன் முன்னொரு முறை கைலாயத்தில் பார்வதிதேவியை கண்டு மோகமுற்றிருந்தான். பார்வதிதேவி சிவனை பிரிந்து மேல்மலையனூரில் காளியாய் பிறந்திருப்பதை அறிந்து சிவன் ரூபங்கொண்டு அன்னையை நெருங்கினான். அன்னை கோபங்கொண்டு விஸ்வரூபமெடுத்து சங்கு, வாள்,அம்பு, வில்,  வீச்சறிவாள், சூலம், கேடயம், கத்தி, பிரம்பு, கபாலம் ஆகியவற்றை கைக்கொன்றாய் ஏந்தி வல்லாள கண்டனோடு போரிட்டாள்.  ஒருக்கட்டத்தில் அத்தனை ஆயுதத்தை வீசியெறிந்து தன் கூரிய நகத்தால் அவன் குடலை கிழித்து மாலையாய் அணிந்து கொண்டு அவன் ரத்தத்தை உறிஞ்சி குடித்து அவனை சம்ஹாரம் செய்தாள். தங்கள் துன்பத்தை போக்கிய அன்னையினை பூமாரி பொழிந்து சாந்தப்படுத்தினர்.

சிவபெருமான், தேவி! எனது பிரம்மஹத்தி தோஷம் போக்க முயன்று சாபம் பெற்று கொடூர உருவமாய் மாறிய உன் உடலெங்கும் நான் லிங்க ரூபமாய் வீற்றிருப்பேன். எங்கள் துயர் தீர்த்த நீ இங்கேயே அங்காள பரமேஸ்வரி எனப்பெயர்கொண்டு உன்னை நாடி வரும் பக்தர்களை வாட்டும் தீயசக்திகளை விரட்டி அவர்களை நலமோடு வாழவைக்க வேண்டுமென அருளினார். அவ்வாறே, அம்பாள் அங்கிருக்கும் ஏரிக்கரையின்மீது கோவில் கொண்டு பக்தர்களின் துயரினை போக்கி வந்தாள்.
ஒருசமயம் கடும் மழைக்காலத்தில் அந்த ஏரி நிரம்பி உடைப்பெடுத்து ஊரே அடித்து செல்லும் சூழல் ஏற்பட்டது. ஏரிக்கரையில் வசிக்கும் செம்பட இனத்தவர் அம்மனை வேண்ட, அன்னை விஸ்வரூபமெடுத்து ஏரிக்கரையில் படுத்து ஏரி தண்ணீர் ஊருக்குள் வராமல் தடுத்து காத்தாள். பெரிய+ஆயி=பெரியாயியாய் திறந்தவெளியில் கோவிலுக்கு வெளியில் படுத்து அருள்புரியும் அன்னைக்கு சேலை சாற்றுவது நல்ல பலனை தரும். தோல் நீக்கிய வாழைப்பழம் ஒரு பங்கு, அதைவிட இரண்டு மடங்கு தேன், வாழைப்பழத்தைவிட மூன்று மடங்கு பசும்பால் கொண்டு தயாரிக்கப்படும் திரிகடுகம்தான் இங்கு நைவேத்தியம்.  இளநீர், மாவிலக்கு, பொங்கல், பானகமும் இங்கு படைக்கப்படுது. உயிர்பலி இங்கு அனுமதிக்கப்பட்ட ஒன்று.
அமாவாச, பௌர்ணமி தினங்களில் இங்கு தங்கினால் பேய், காத்து, கருப்பினால் பாதிக்கப்பட்டோரும், மனநிலை பாதிக்கப்பட்டோரும் குணமடைவர். கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இங்கு கருவறையில் இருக்கும் புற்றுக்கு ஒரு மண்டலம் பால் ஊத்தி வந்தால் திருமணம் கைக்கூடும். கருவறைக்கு அருகில் சிறு குன்றளவு புத்து உள்ளது. நாகர்கோவில் நாகராஜன் கோவில் போல இங்கும் இந்த புற்று மண்தான் பிரசாதம்.  அமாவாசை அன்று இக்கோவிலில் அம்மன் ஊஞ்சலாட்டு நடக்கும். எல்லா அம்மன் கோவில்களிலும் ஓம் சக்தி பராசக்தின்னுதான் கோஷமிடுவாங்க.இந்த கோவிலில் மட்டும் கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தாவென கோஷமிடுவர். 

அங்காளபரமேஸ்வரிதான் எங்க குலதெய்வம்.. இங்குதான் எனக்கு முதல் மொட்டை எடுத்ததா அம்மா சொல்வாங்க. இந்த கோவிலில் பூசாரிக்கிடையாது. செம்படவ இனத்தவர்தான் இங்கு பூசாரிகள், குறி சொல்வர், பேயோட்டுபவர்ன்னு இருக்காங்க. சைவ பக்தர்கள் இந்த கோவிலுக்கு போக கொஞ்சம் மனதைரியமும் , சகிப்புத்தன்மையும் வேணும்.  ஏன்னா எங்க பார்த்தாலும் உயிர்பலியும், அசைவம் சமைத்தல், அதுக்கான கடைகள்ன்னு இருக்கும்.
அங்காளப்பரமேஸ்வரியின் மூல மந்திரம்.....

ஓங்கார உருவினளே ஓம்சக்தி ஆனவளே 
ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே 
பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே 
அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே!

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை,
நன்றியுடன்,
ராஜி..

Thursday, July 27, 2017

வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது... - கைவண்ணம்

எனக்கு புடவை, நகைகள் மீது ஆர்வமில்லை. ஆனா, வளையல்மீது கொள்ளை ஆசை, புடவைக்கு மேட்சிங்கா வளையல் வேணும் எனக்கு. முன்னலாம் நிறைய கடையில் வாங்குவேன்.  கொஞ்ச நாள்ல வளையல் நிறம் மாறிடும். தூக்கி போட மனசு வராம மூட்டையா கட்டி கப்போர்ட்ல வச்சிருக்கேன். இப்ப கிராஃப்ட்ல ஆர்வம் வந்தப்பின், பழைய வளையல்ல நானே விதம் விதமா வளையல் செஞ்சு போட்டுக்கிறேன். 

இன்னிக்கும் அப்படி நான் செஞ்ச ஒரு பிரேஸ்லேட்தான் கைவண்ணத்துல வரப்போகுது...
பழைய வளையல் நாலு எடுத்து சில்க் நூல் சுத்திக்கனும்...
 நாலு வளையலையும் ஓரிடத்துல க்ளூ போட்டு ஒட்டிக்கனும்.

க்ளூ போட்டு ஒட்டி காய்ஞ்ச இடத்துல நூலை சுத்திக்கனும்...
 கருப்பு கலர் சேலைல ஆரஞ்ச் பூ போட்டது என் சேலை. அதனால இந்த காம்பினேஷன்ல எடுத்துக்கிட்டேன். 
கல்லை சுத்தி  கோல்ட் முத்து.....
அதுக்கடுத்து ரன்னிங்க் ஸ்டோன் ஒட்டிக்கனும்..
மீண்டும் கோல்ட் செயினை சுத்திக்கிட்டா பதக்கம் ரெடி....
பதக்கத்துக்கு நேரெதிர் ஒவ்வொரு வளையலுக்கிடையேயும்  கண்ணாடி வளையலின் உடைஞ்ச துண்டில் தங்க நிற நூலை சுத்தி ஒட்டிக்கிட்டேன். பேபி ட்யூப் இருந்தாலும் ஒட்டிக்கலாம். 
கடைசி வளையலில் ரன்னிங்க் ஸ்டோன் ஒட்டிக்கிட்டேன். அப்புறம் அங்கங்க திலக வடிவ முத்தை ஒட்டிக்கிட்டேன். 

அழகிய பிரேஸ்லெட் ரெடி. 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி.

Wednesday, July 26, 2017

நெல்லை காந்திமதி அம்மன் ஏக்கம் தீர்ந்த நாள் - ஆடிப்பூரம்

ஒரு பொண்ணு பொறந்து, வளர்ந்து, பூத்து, காதலாகி கசிந்துருகி, கல்யாணம் கட்டி, தாயாகின்னு அத்தனை நிகழ்வும் விசேசமானது. கொண்டாடத்தக்கதும்கூட. சாதாரண மானுட பொண்ணுக்கே இப்படின்னா அகில உலகையும் உருவாக்கி, காக்க துணையாக நிற்கும் இறைவியின் அவதார நிகழ்வுகள் எத்தனை சிறப்பு வாய்ந்ததாய் இருக்கும்?! அத்தகைய சிறப்பு வாய்ந்த நாள்தான் இன்றைய ஆடிப்பூரம். 
நள வருடம்... ஆடி மாதம்... சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும்...., சந்திரன், சூரியனின் ராசியான சிம்மத்திலும் இடம் பெயர்ந்த  சுக்ல பட்சம், சதுர்த்தசி திதி, பூரம் நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையன்று அவதரித்து துளசி மாடத்தின்கீழ் பொறுமைக்கு பேர்போன பூமாதேவி ஆண்டாளாய் அவதரித்தாள். பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டு சீரும் சிறப்புமாய் வளர்க்கப்பாட்டாள். ஆண்டாளின் ஆதிப்பெயர் கோதை. வடமாநிலங்களில் இவள் பெயர் கோதாதேவி.  விஷ்ணு கையிலிருக்கும்   சங்கும், சக்கரமும், அரங்கனின் படுக்கையான ஆதிஷேசன்கூட ஆழ்வர்களாக அவதாரமெடுத்து அரங்கனை அடைந்ததைக்கண்டு பூமாதேவிக்கு மனக்கலக்கம் உண்டாயிற்று. அவள் கலக்கம் போக்க ஆண்டாளாய் அவதரிக்க அருள்புரிந்தார் எம்பெருமான். அவ்வாறே எழுந்தருளி அரங்கனை சேர்ந்தாள். ஆண்டாள் கதையை விரிவா வேற ஒரு பதிவில் பார்ப்போம்.. 
இந்த ஆடிப்பூர நாளில்  திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் தேரோட்டம் நடைப்பெறும். மங்கலமான இந்நாளில் திருமணமாகாத பெண்கள் ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. மேலும் சகல அம்மன் ஆலயங்களுக்கு சென்று மனதார வணங்கினால், மனம் போல் மாங்கல்யம், புத்திர பாக்கியம் கிடைக்கும். அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய மலர் மாலையை தானே சூடிக் கொண்டு அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் ஆண்டாள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம். 
.பெண் பூப்பெய்தினால் மட்டுமே தாய்மை அடைய முடியும்.. பெண் தாய்மை அடைந்தல்தான் புது உயிர் படைக்கப்படும்.  இதுக்கு அம்பாளும் விதிவிலக்கல்ல. எத்தனை எத்தனையோ உயிர்களை படைக்க வேண்டிய அம்பாள் ருதுவானது இந்த ஆடிப்பூரத்தில்தான். ஆடி மாதத்தில்தான் பூரம் நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும். இந்நன்னாளில்தான் அன்னை பூப்பெய்தியாக புராணங்கள் கூறுகின்றது.  ருது சாந்தி செய்தாலும் அம்பாள் இன்று மட்டும் அழிக்கும் சக்தியாய் அவதாரமெடுக்கிறாள். அதனால், அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று வந்தால் நலம் பயக்கும். அவ்வாறு கோவிலுக்கு செல்ல முடியாதவங்க  வேப்பிலையையே அம்மனாக பாவித்து, செம்பாலான குடத்தில் நீர் நிரப்பி வேப்பிலையை கொத்தாக சொருகி, குடத்தை சுற்றி மஞ்சள் துணியை சுற்றி, வாழை இலை விரித்து, அதில் பச்சரிசி பரப்பி, அதன் மேல் இக்குடத்தை வைத்து, பூமாலைகள் சூட்டி, வண்ண வளையல்கள்  கோர்த்து மாலையாக சூடலாம்...அம்மன் படம் வைத்து, நெய் தீபம் அருகில் இருபக்கமும் ஏற்றவும்..108 அம்மன் போற்றிகளை படித்து, நைவேத்தியம் படைத்து தேங்காய்,பழம் வைத்து கற்பூர தீபம் காட்டி 12 வயதுகுட்பட்ட குழந்தைகள், பெண்களை வைத்து வழிபட்டு பால் பாயசம் போன்ற நிவேதனத்தை வந்தவர்களுக்கு கொடுக்கலாம். பூஜித்த வளையல்கள் இரண்டை எடுத்து அணிந்துகொண்டால் கஷ்டங்கள் தீர்ந்து மங்களம் பெருகும்..
தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளைகாப்பு நடத்துவது வழக்கம்.  மறிகடல்கள் ஏழையும், திகிரி இரு நான்கையும், மாதிரக்கரி எட்டையும், மாநாகமானதையும், மாகூர்மமானதையும, மாமேரு என்பதையும், ஓர் பொறியரவு தாங்கி வரும் புவனமேழையும், புத்தேளிர் கூட்டத்தையும், பூமகளையும், திகிரி மாயவானையும், புலியாடை உடையானையும், படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு விநாயகன் மற்றும் முருகனை ஈன்றும் தனக்கு வளைகாப்பு நடக்கவில்லையே என கவலை உண்டாயிற்று. 
ஈரேழு லோகமும்,  மூவுலகையும் காக்கும் அம்பிகைக்கு இப்படி உண்டான கவலையை கண்ட தேவாதி தேவர்கள், ரிஷிகள், ரிஷிபத்தினிகள், முனிவர்கள், மும்மூர்த்திகள், லட்சுமி, சரஸ்வதி அனைவரும் சேர்ந்து வளைகாப்புக்கு ஏற்பாடு செய்தனர். வளைக்காப்பு செய்ய கரு  உருவாக வேண்டுமே என்ன செய்ய?! தட்டைப் பயிறு, சிறுபயிறு, பாசிப்பயறு, மொச்சைப்பயிறு, சோளம், கம்பு, பருத்தி விதைகளை முளைப்பாறியாக்கி, அம்பிகையின் வயிற்றில் வைத்து கட்டி கருக்கோலம் கொண்டிருப்பதாக எண்ணி வளைகாப்பு நடத்தினர்.  விதை முளைத்து வரும் வேளையில் பார்த்தால் ஆண் உயிரணு போல தோணும். அந்த விதையை, பெண் அம்சமான பூமியில் விதைத்தால் ஒரு உயிர் வளரும்.  ஆண், பெண் சேர்க்கையால் வரும் உயிரைப்போலவே பயிரும் கொண்டாடப்படனும்ன்னுதான் இந்த ஒரு ஏற்பாடோ?!
சரி சரி விசயத்தை விட்டு எங்கயோ போய்ட்டோம்...  அம்மனுக்கு வளைகாப்பு செய்து வாய்க்கு ருசியாய் சமைத்து உணவு கொடுத்து அவளை சமாதானப்படுத்தினர்.  அந்நாளை நினைவுக்கூறும் விதமாய் இன்றும் பல அனேக அம்மன் கோவில்களில் அம்மனுக்க்கு வளைகாப்பு நடத்தப்படும். இதற்காகவே அவரவர் இல்லங்களை சுத்தப்படுத்தி நவதானியங்களை பதப்படுத்தப்பட்ட மண்ணில் விதைத்து  கோமியம், சாணம், பால், தயிர், நெய் கலந்து உருவாக்கப்பட்ட பஞ்சக்கவ்வியம் தெளித்து பாதுகாத்து வளர்த்து வருவர். அந்த ‘மூணு’ நாட்களில் உள்ள பெண்கள் இந்த வேலையிலிருந்து ஒதுங்கியிருந்து முளைப்பாரி தயார் செய்து ஆடிப்பூரத்தன்று அம்மன் சன்னிதியில் சேர்ப்பர். முளைப்பாரியின் வளர்ச்சியினை கண்டு வீடும் நாடும் எந்தளவுக்கு செழிப்பா இருக்கும்ன்னு கணிப்பர். 
அன்னை, அழகு ரூபம் கொண்டு பல்லாயிரக்கணக்கான கண்கள் கொண்டவளாகத் தோன்றியதால், சதாக்ஷீ (சத + அக்ஷம் – கண்) ஆனாள். ஆயிரமாயிரம் கண்களால் அருள்பார்வை நோக்கிய அம்பிகையின் திருவடிவில்,  அற்புதம் – தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், கனிகள், கீரைகள், மூலிகைகள் என்று பற்பல உணவுகளை, தமது திருமேனியெங்கும் நிறைத்தும் தாங்கியும் அன்னை காட்சி தந்தாள்.
சாகம்பரி (சாக – காய்கனி தொடர்பாக; அம்பரம் – ஆடை; காய் கனிகளையே ஆடையாகத் தரித்தவள்) ஆனாள். உலகின் தவிப்பைத் தீர்த்து உணவிடுவதற்காக, தாமே உணவுக் களஞ்சியமாக அன்னை அருள்பாலித்த வடிவமே, சாகம்பரி தேவி! பரதேவதை, சாகம்பரியாக ஆவிர்பவித்து,கோடி சூரியப் பிரகாசம் தன்னுள் ஐக்கியப்பட்ட அம்பிகை தன் கரத்தில் தாமரை ஏந்தியிருக்க அந்தத் தாமரையை வண்டுகள் சுற்றிச் சூழ்ந்திருப்பது போல் காய்கள், கனிகள், வேர்கள், கிழங்குகள் போன்றவற்றை அவளுடைய பற்பல கரங்களில் வைத்துக் கொண்டிருக்கும்அன்னை சாகம்பரி தேவி
திருநெல்வேலி காந்திமதியம்மனுக்கு, ஆடிப்பூர விழாவின் நான்காம் நாளன்று, ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெறும். இந்த வளைகாப்பு விழாவில் பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாகத் தரப்படும். இந்த வளையலை வாங்கி அணிந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் வளைகாப்பு வைபவம் நடப்பது உறுதி என்பது நம்பிக்கை. 
கல்மாஷபாதன்ன்ற சோழ மன்னனுக்கு கல்யாணமாகி ரொம்ப நாளாகியும் குழந்தை பாக்கியம் இல்லை.  இவன் சிறந்த சிவபக்தன். தனக்கு வாரிசு வேண்டுமென அகத்திய முனிவரிடம் யோசனை கேட்டான். மன்னனின் குறை தீர திருவரங்குளத்தில் மறைந்திருக்கும் சிவலிங்கத்தை த்தேடி  வணங்க சொன்னார். மன்னனும் அத்தலம் சென்று தேடி சிவலிங்கத்தை கண்டுப்பிடித்து  கோவில் கட்ட சென்று இறைவனை தேடினான். 

இடையர்கள் கொண்டுச்செல்லும் பூஜைப்பொருட்கள் குறிப்பிட்ட இடத்தில் இடறி விழுவதை கண்ட மன்னன் அந்த இடத்தில் தன் வாளால் கீறிப்பார்த்தான். அப்போது பூமியிலிருந்த சிவலிங்கத்தின் தலைமீது வாள்பட்டு ரத்தம் பீய்ச்சி அடித்தது. இதைக்கண்டு பயந்த மன்னன்... மாபெரும் தவறு செய்துவிட்டேனென உயிரை மாய்த்துக்கொள்ள சென்றான். மன்னனை தடுத்தாட்கொண்டு பார்வதிதேவியுடன் திருமணக்கோலத்தில் காட்சிதந்ததோடு பிள்ளைச்செல்வமும் அருளினார். இந்த நிகழ்வு ஆடிப்பூரத்தன்று நிகழ்ந்தது. இறைவன் அருளால் மன்னன் குலம் விளங்க ஆண்குழந்தை பிறந்தது. 
இதுமட்டுமில்லாம பெரும்பாலும் எல்லா அம்மன் கோவில்களிலும் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. இந்த மாதிரி பத்துநாள் பிரம்மோற்சவம்  திருவாரூரில் கமலாம்பாளுக்கு, திருநாகையில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு, திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு. திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம், இரவு விரைமலர் குழல்வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பகவல்லிக்கு வளை காப்பு உற்சவம். மேல் மருவத்தூரில் ஆதிபராசக்திக்கு ஆடிப்பூரம் மிகப்பெரிய பண்டிகையாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை எனுமளவுக்கு அத்தனை கோலாகலம். 
எல்லா கோவில்களிலும் அம்மன் வளைக்காப்புக்கென பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றிவிட்டு, அதையே பிரசாதமாக பக்தர்களுக்கு தருவர். இதை வாங்கி அணிந்துக்கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அப்பாக்கியம் கிட்டுமென்பது நம்பிக்கை...  இன்னாளில் ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பது நல்லது. இன்று மஞ்சள் தாலி கட்டிக்கொள்ள தீர்க்க சுமங்கலியாய் இருப்பர். ஆடிப்பூரம் அன்று சக்தி ஸ்தலங்களில் அம்மன் ஆலயங்களில் வழிபட கேட்கும் வரம் கிடைக்கும். ஆரோக்யம், செல்வ செழிப்பு உண்டாகும். இந்நாளில் சகல நலங்களையும், வளங்களையும், நீங்காத செல்வத்தையும் பெற அவள் பாதம் பணிவோமாக.
ஆடிப்பூர தேரோட்டம்....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1467411

தமிழ்மணம் ஓட்டு பட்டை...
Godess Durgaநன்றியுடன்,
ராஜி.