Monday, September 30, 2013

பயனில்லாத ஏழு!! - ஐஞ்சுவை அவியல்



என்ன புள்ள! சோகமா உக்காந்திருக்கே!?

மாமா, நம்ம ஊருக்கு பக்கத்து புலவன்பாடி கிராமத்துல ஒரு அசம்பாவிதம் நடந்து போச்சு, டிவி பொட்டிலலாம் காட்டினாங்க. பார்த்தீங்களா!?

ம்ம்ம்ம்ம்ம். அங்கதான் போய் வரேன் புள்ள, குஜராத், ஒரிசான்னு எங்கெங்கோ தோண்டி வச்ச போர்வெல்ல குழந்தை விழுந்து மீட்கப்பட்டபோது ஒரு செய்தியாகவே இது வரை பார்த்திருக்கிறேன். ஆனா, இங்கயே நம்ம பக்கத்துல இதுப்போல ஒரு நிகழ்ச்சி நடந்ததா கேள்விப்பட்டப்போ நம்ம வீட்டு புள்ளைக்கு இதுப்போல நடந்த மாதிரி மனசுக்குள் ஒரு சோகம்.

ஏனுங்க மாமா! காப்பாத்த யாருமே வரலியா?!

8 மணிக்கு பாப்பா குழாய்க்குள்ள விழுந்துட்டுது. 8.30மணிக்கு தீயணைப்பு வண்டி ஆரணில இருந்து வந்துட்டுது. 9  மணிக்குலாம் போலீஸ், ஆம்புலன்ஸ் வந்துட்டுது. மதுரைல இருந்து கூட மீட்பு குழு ஹெலிகாப்டர் மூலம் வந்துட்டுது. சுமார் பத்து மணி நேரம் போராடி ராத்திரி 8 மணிக்கு புள்ளையை மீட்டிருக்காங்க. உடனே, ரெடியா இருந்த ஆம்புலன்ஸ்ல போட்டு முதலுதவி செஞ்சுக்கிட்டே ஆரணி கவர்ன்மெண்ட் ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போய்ட்டாங்க. அங்க கொஞ்சம் முதலுதவி செஞ்சுட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு போனாங்க. அங்க கொஞ்ச நேரம் போராடி பார்த்தும் டாக்டர்களால பாப்பாவை காப்பாத்த முடியலை.

ஏன்? என்னாச்சு!? ஒரு நாள் ஃபுல்லா குழாய்ல இருந்த குழந்தைகள் கூட உயிரோட மீட்டிருக்காங்க. இந்த பாப்பா ஏன் இப்படி ஆச்சு!?

அதிக்கப்படியான பயம், அதுமில்லாம பாப்பாவோட உடம்பு சூடு ரொம்ப குறைவா போய் இதயத்தை செயலிழக்க வச்சிருக்கு. பாப்பாவுக்கு பொறப்புலயே மூச்சு பிரச்சனை இருந்திருக்கு. அதும் முக்கிய காரணம்ன்னு குழந்தையோட மாமா சொன்னார்.

போர்வெல்லுக்கு சொந்தக்காரரான அந்த ஆளை பிடிச்சுட்டாங்களா?!

ம்ம் அவரே பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேஷன்ல போய் சரண்டர் ஆகிட்டார். இதுக்குலாம் அதிகப்படியான தண்டனை கிடைக்கது புள்ள. மிஞ்சி போனா 3 மாசம், இல்ல எதாவது அபராதம் இதுப்போலதான் தண்டனை கிடைக்கும். நம்ம மக்கள் தங்களோட பொறுப்பை உணர்ந்து நடந்துக்கிட்டா இதுப்போன்ற மரணங்களை தவிர்க்கலாம். ரெண்டு நாளுக்கு உச்ச் கொட்டிட்டு நம்ம வீட்டுல போர் போதும்போது ஒரு கோணிப்பை மட்டும் போட்டு மூடி வச்சுடுவோம். அந்த பை நாள்ப்பட நாள்பட இத்து போய் இதுப்போன்ற அசம்பாவிதம் நடக்க காரணமாகுது!!


நீங்க சொல்றது யோசிக்க வேண்டிய நிஜம்தான் மாமா!! மனுசனுக்கு பயன்படாத ஏழு விசயங்கள் சொல்ல்ட்டா!?

ம்ம் சொல்லு, கேட்டுக்குறேன்...,

ஆபத்து காலங்களில் உதவாத ”பிள்ளை”. ஒருவன் பசித்த்திருக்கும்போது பசி ஆற்ற உதவாத ”உணவு, அடுத்தவன் தாகத்தை தணிக்க உதவாத ”தண்ணீர், வீட்டு கஷ்டத்தை உணராமல் தாந்தோன்றித்தனமா செலவு செய்யும் ”பெண்கள், தனக்குள் ஏற்படும் கோவத்தை மறைத்து அரசாள தெரியாத ”அரசன்”, குரு சொல் பேச்சு கேளாத ”மாணவன்”, தன் தவறை உணர்ந்து பாவம் போக்கி கொள்ள வருபவனின் பாவத்தை தீர்க்காத ”புண்ணியநதி”

நிஜமாவே பயனில்லாத ஏழுதான். ஆனா, இதுப்போல பயனில்லதவை நிறைய இருக்கு. போன வாரம் ராஜி வீட்டுக்கு போய் இருந்த போது தன் புருசனை லெஃப்ட், ரைட் வாங்கிட்டு இருந்தா. உன் ஃப்ரெண்ட் ராஜி உன்கிட்ட சொன்னாளா!? 

இல்லியே! என்னவாம்?

அவ வீட்டுக்காரரும், அவர் கூட வேலை பார்க்குறவங்களும் போன வாரம் சென்னைக்கு ஆஃபீஸ் ஜீப்புல போய் இருக்காங்க. பெங்களூர் டூ சென்னை ரோட்டுல காஞ்சிபுரம் தாண்டி காலை எட்டு மணிக்கு ஒருத்தன் அடிப்பட்டு கொட்டும் மழையில வெறும் உள்ளாடையோடு கைல ரத்தம் சொட்ட, சொட்ட விழுந்து கெடந்திருக்கான், ஜீப்பை விட்டு இறங்கி பார்த்தும் எந்த ஹெல்பும் செய்யாம வந்திட்டு இருக்காங்க.

ஐயையோ! அப்புறம் அந்தாளுக்கு என்னாச்சு மாமா!?  

அது ஆக்சிடெண்டா?! இல்ல அடிச்சு போட்டதான்னு தெரியலயாம். பக்கத்துல அவன் வந்த வண்டியோ இல்ல அவன் ட்ரெஸ்சோ எதுமில்லியாம். அதனால பயந்து ராஜி வீட்டுக்காரர் கிட்ட கூட போகாம இருந்திருக்கார், அவர் மட்டுமில்லாம ஹைவேஸ்ல போற எந்த வண்டியும், நிக்காம போய்க்கிட்டே இருந்துச்சாம். 

ஐயையோ! அட்லீஸ்ட் 108க்காவது போன் பண்ணி சொல்லி இருக்கலாமே மாமா!? 

அதான் ராஜி கூட கேட்டா. அதுக்கு, அவர் வீட்டுக்காரர் சொல்றார், நாங்க 108க்கு ஃபோன் போட்டோம் அது திருச்சிக்கு போச்சு, எங்களுக்கு மீட்டிங்க்கு டைம் ஆகிட்டதால அடிப்பட்டவனை அப்படியே விட்டுட்டு வந்துட்டோம்ன்னு சொல்றார். திருச்சிக்கு போனா என்ன!? அவங்ககிட்டயாவது இதுப்போல இந்த இடத்துல ஒருத்தர் அடிப்பட்டிருக்கார்ன்னு சொல்லி இருக்க வேணாமா?! படிச்சு கவர்ன்மெண்ட் வேலையில் இருக்கும் நீங்களே இப்படி பயந்து வந்தா எப்படி?!ன்னு வீட்டுக்காரரை டோஸ் விட்டா.

நல்லாதான் கேட்டிருக்கா, அவ சண்டை போட்டதுல தப்பே இல்ல மாமா. படிச்சவங்களே,  போலீஸ் விசாரணை, வேலைன்னு சுயநலமா சிந்திச்சா எப்படி?!

ம்ம் படிச்சவங்கலாம் இப்படிதான் சிந்திப்பாங்க. இதுவே அந்த இடத்துல படிக்க்காதவன் இருந்திருந்தா எதை பத்தியும் கவலைப்படாம தூக்கி தோள்மேல போட்டு ஹாஸ்பிட்டல் போய் இருப்பான். ரொம்ப சீரியசான விசயமாவே பேசிட்டோம். ஒரு ஜோக் சொல்லவா?! என் செல்போனுக்கு வந்தது.

ம்ம்ம் என்ன பொண்டாட்டியை மட்டம் தட்டி மெசேஜ் வந்திருக்கும் உங்களுக்கு. அதைத்தானே சொல்ல் வர்றீங்க. 

அட, கரெக்டா கண்டுப்பிடிச்சுட்டியே!! ஒரு விடுகதை கேக்குறேன் பதில் சொல்லு புள்ள!!

கணவன்: உன் மாமனாருக்கு அனுமார் மேல ரொம்ப பக்தியாமே?அனுமாருக்கு தன் சொத்தை எல்லாம் எழுதி வச்சுட்டாராமே?"

மனைவி:"இது என்ன பெரிய விஷயம்? உன் மாமனார் கூடத்தான் அனுமாருக்கு தன் பொண்ணையே கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கார்,அவர்தான் பெரிய பக்திமான்"

நான் சொன்னது கரெக்டா போச்சு பார்த்தீங்களா மாமா?! பொண்டாட்டிங்களை மட்டம் தட்டி வர்ற ஜோக்குங்களைதான் நீங்க சொல்லுவீங்கன்னு நினைச்சேன் கரெக்டா போச்சு.

ம்ம்ம்ம் இப்படியாவது சந்தோசப்பட்டுக்குறோமே!! நேர்ல சொன்னா அடி வாங்க தெம்பு ஏதும்மா! ஜோக் சரியா சொன்ன மாதிரி இந்த விடுகதைக்கு விடை கரெக்டா சொல்லு பார்க்கலாம்!?

கடலைக் கலக்குது ஒரு குருவி..,
கடலோரம் போகுது ஒரு குருவி..,
செடியைத் தின்பது ஒரு குருவி..,
செடி ஓரம் போகுது அடுத்த குருவி..,

குருவிகளின் பேர் சொல்லு புள்ள பார்க்கலாம்!!

இருங்க கொஞ்சம் யோசிச்சு சொல்றேன். 

ம்ம்ம் எம்புட்டு நேரம் யோசிப்பே!! நீ யோசிச்சு வை. நான் அதுக்குள்ள நான் வயக்காட்டுக்கு போய் வரேன்.

Saturday, September 28, 2013

சினிமாவை பிடிக்காம போக காரணங்கள்

1.புருஷனுக்கே இன்னிக்கு மரியாதை கொடுக்காத இந்த காலத்து படத்துலயும், ஒரு பொண்ணுக்கு தாலிதாம்மா முக்கியம்ன்னு, ஒரு அம்மா  அட்வைஸ் பண்ணும்.

2. கருப்பா, அசிங்கமா இருக்கும் பொண்ணுங்களுக்கு ”அருக்காணி”ன்னு பேரு வைக்குறது.

3. ராத்திரி 12 மணிக்கு பப்பரப்பான்னு போய் வரும் மாடர்ன் பொண்ணு கரப்பான் பூச்சியை பார்த்து பயந்து போய் ஹீரோவை மட்டுமே கட்டிப்பிடிக்கும்.

4. யூரின் டெஸ்ட், ஸ்கேன்ன்னு ஆயிரமாயிரமா கொட்டி பார்த்தாலும் ரிசல்ட் தப்பா சொல்லும்போது கையை பிடிச்சு பார்த்தே கர்ப்பமா இருக்கும்ன்னு சொல்லுற வைத்தியர்.

5. பாப் கட்டிங்க் வெட்டி, டைட் ஜீன்ஸ் மிடி போட்டு சுத்துற ஹீரோயின், லவ் வந்ததும்,  அல்ட்ரா மாடர்ன் பொண்ணா ரூமுக்குள்ள போய் அடக்கம் ஒடுக்கமா புடவை கட்டி வெளி வருவாங்க. மேட்சிங் ப்ளவுசாவது ரெடிமேட்ல வாங்கிக்கலாம்.  ஐந்தடி கூந்தல்?!

6.தறிக்கெட்டு ஓடுற குதிரை, மாடு, ஜீப், காரையெல்லாம் ஒரு கயிறுல கட்டி, ஒத்த கையால இல்லன்னா ஒத்த காலால நிறுத்துற ஹீரோவின் வலிமை!!

7.சூப்பர் ஃபிகரோட கல்யாணம் நின்னுட்டா மட்டும்,  உடனே தியாகியா மாறி தாலி கட்ட ஒத்துக்கும் ஹீரோ, அட்டு ஃபிகர் கல்யாணம் நின்னுட்டா 16 பக்கம் வசனம் பேசி மாப்பிள்ளையை ஒத்துக்க வைக்குற சாமர்த்தியம்.

8. குக்கிராமத்துல கூட பார்மசி வந்துட்ட இந்த காலத்துல கூட, வில்லேஜ் சப்ஜெக்ட் படத்துல அம்மாக்களோ இல்ல அக்காக்களோ இல்ல ஹீரோயின்களோ தற்கொலைக்கு அரளி விதை அரைக்குறது.

9. வயசுக்கு மீறின முதிர்ச்சியோடு இருக்கும் குழந்தை நட்சத்திரத்தை பார்க்கும்போது.

10. கிராமத்து ஹீரோயின், டூயட் பாட லண்டன், ஆஸ்திரேலியா, சுவிஸ்ன்னு ஃபோட்டோவுல கூட பார்த்தே இராத இடங்களுக்கு கனவுல போறது...,


11. காலண்டர், செல்போன், டயரின்னு ஆயிரத்தெட்டு ரிமைண்ட் பண்ணும் விசயங்கள் இருந்தாலும் வாந்தி எடுக்கும்போதுதான் நாள் தள்ளி போனதை உணரும் அப்பாவி பெண்கள்.

12. அண்ணன்,தங்கச்சி கதைன்னா சொத்து,பத்து,ஆசை, மானம், உயிர்லாம் விட்டுக்கொடுக்கும் பாசக்கார அண்ணன்கள். 

13. அண்ணி, நாத்தனார் கதைன்னா கருவை கலைக்குறது, பில்லி சூனியம் வைக்குறதுன்னு இருக்கும் கொடுமைக்காரியா காட்டுறது.

14. மரு, தாடி, தலைப்பாக்கட்டு இந்த மூனையும் வச்சே மாறுவேசத்துல அலையும் ஹீரோ.

15. பொறுப்பான மருமகள்ன்னா, புகுந்த வீட்டில் கஷ்டமான நேரத்துல, சிரிச்ச முகத்தோட தன் நகைகள் கழட்டி மாமனார் இல்ல புருசன் கிட்ட கொடுக்கனும்.


(தொடரும்...,)

Friday, September 27, 2013

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

இன்னிக்கு “உலக சுற்றுலா தினமாம்”.  தினமும் ஆஃபீஸ், மீட்டிங், மேலதிகாரிக்கு பதில் சொல்லின்னு இம்சை படும் ஆண்கள் ரிலாக்ஸ் பண்ணிக்கவும், ஸ்கூல், ஹோம் வொர்க், டியூஷன்னு வதைப்படும் குழந்தைகள் என்ஜாய் பண்ணவும், சமையல், பாத்திரம் கழுவுறது, துணி துவைக்குறது, மாமியார், மாமனாருக்கு பதில் சொல்லி, சீரியல் பார்த்து அழுகைன்னு இருக்கும் பெண்களுக்கு விடுதலையும் கொடுக்கனும்ன்னா வருசத்துக்கு ஒரு ரெண்டு நாளாவது குடும்பத்தோட எங்காவது போய் வரலாம். இதனால, மனசும்,  உடம்பும் புத்துணர்ச்சி ஆகுது.  

டூர் போகும்போது அரண்மனை, ஜூ, டேம், கோவில்ன்னு எல்லா இடமும் கலந்து கட்டி இருக்கனும்.. அப்பதான் எல்லோரையும் திருப்தி படுத்த முடியும்.  அப்பா, அம்மாக்குலாம் பிடிச்ச கோவில்கள், நமக்கு பிடிச்ச மாதிரி டேம், அர்ண்மனை, பசங்களுக்கு பிடிச்ச மாதிரி ஜூ, பார்க்ன்னு போகனும். நாங்க அடிக்கடி இப்படி டூர் போவோம்அப்படி போகும் போது போன ஒரு கோவில் பத்திதான் இன்னிக்கு பார்க்க போறோம்.

புண்ணியம் தேடி போற பயண”த்துல இன்னிக்கு நாம பார்க்க போற கோவில்.., கன்னியாகுமரியில இருக்குற, பெண்களின் சபரி மலைன்னு சொல்ற ”மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில்”.கடற்கரை ஓரமா இருக்கிற, கேரள கட்டிட கலை பாணில கட்டப்பட்ட கோவில் இது.


நாகர்கோயில்ல இருந்து நேரடியாவும், தமிழகம், கேரளாவில இருந்தும் பல்வேறு இடங்களிருந்தும் பேருந்து வசதி இருக்கு. இந்த கோவிலில் தமிழ் நாட்டிலிருந்து தரிசனம் பண்ண வந்தவங்களை விட, கேரளா செட் புடவையும்,  நெத்தில சந்தன பொட்டோட,  கேரள சேச்சிகள்தான் அதிகமா இருந்தாங்க.   மேற்கூரை கேரளா பாணியில் சிவப்பு ஓடுகளால் ஆனது. மேற்கூரையை தாங்கும் பெரிய தூண்களுடன் அழகாக காட்சியளிக்குது இக்கோவில். பிரமாண்டமா இல்லாம எளிமையா அதே நேரத்துல அழகாவும் இருக்கு கோவில்.

கோவில் நுழைவாயிலினுள் மேடை போன்ற ஒரு அமைப்பு இருக்கு. அதில் பக்தர்கள் அமர்ந்து அம்மனை தரிசிக்கவும், பாடல்களை பாடுவதுமா இருந்தாங்க.  நாங்களும் கொஞ்ச நேரம் அங்க உட்கார்ந்து அம்மனை தரிசித்தோம்.  அழகா அலங்கரிக்கப்பட்டு இருந்த அம்மனை பார்க்கும்போதே பரவச நிலையை தந்தது. சிலர் அங்கே இருந்த கடைகளில் சின்ன, சின்னதான தலை, கால், மண்டை போன்ற உருவங்கள் செஞ்ச தகட்டை வாங்கி காணிக்கையா செலுத்தினாங்க. அதனால உடல் நோய்கள் குறையும் ன்னு ஒரு ஐதீகம் . மேலும் தீராத தலைவலி தீர்வதற்கு பச்சரிசி மாவு வெல்லம் சேர்த்து ”மண்டையப்பம்” என்னும் வகையான உணவு செய்து அம்மனுக்கு நைவேத்தியம் பண்ணினால் தீராத தலைவலி குணமாகும் என்பதும் ஐதீகம்.

கோவிலின் இடப்பாகத்திலும், வலப்பாகத்திலையும் அம்மன் கோவில்கள் காணபடுது. அந்த வளாகத்தினுள் நிறைய நேர்த்திகடன் பொருட்கள் விற்பனை செய்யபடுது. கோவிலிலுக்கு வெளியிலேயும், உள்ளேயும் அம்மனுக்கு பூக்கடைகள் விற்கிறாங்க.  நாங்களும் பூக்களை வாங்கி கொண்டு அம்மனை தரிசிக்க போனோம்.

 பூஜைகள் எல்லாம் 4 கால பூஜைகளாக   கேரளா பாணியில் இருக்கு. நாங்க போன நாள் வெள்ளிகிழமை. அதனால ”புட்டமுது”ன்னு ஒரு பிரஸாதம் கொடுத்தாங்க.  ரொம்ப சுவையா இருந்துச்சு. அதெல்லாம் சாப்பிட்டு கொண்டு அங்க இருந்தப்ப ஒரு வயதான அம்மா இருந்தாங்க. அவங்க அடிக்கடி,  ”அம்மே பகவதி அனுகிறகிகனே”ன்னு சொல்லி கிட்டு இருந்தாங்க. அவங்க கிட்ட அம்மா இந்த கோவில் பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமான்னு கொறைச்சு கொறைச்சு மலையாளத்துல விளிச்சதை கேட்டு நொந்து போய் நீங்க தமிழா!?ன்னு கேட்டு அசடு வழிய வச்சு கோவிலின் ஸ்தல வரலாற்றை சொன்னாங்க.

400 வருஷத்துக்கு முன்பு இருந்த சங்கராச்சார்யர்ல ஒருத்தர், தன்னுடைய கேரள சீடர்களோட தங்கி இருந்த குடில்ல, ஒரு ஸ்ரீ சக்ரம் வச்சு வழிபட்டு வந்தாராம்.  ஒருநாள் ஸ்ரீசக்ரம் திரும்ப வரவே இல்லையாம்.  எடுத்து பார்த்தும் வரவே இல்லையாம். அதனால, அங்கயே அவர் தங்கியிருந்து பல சித்துக்கள் செய்து சமாதியாகிட்டாராம்.  அந்த ஸ்ரீ சக்ரம் இருந்த இடத்தில புற்று வளர ஆரம்பிச்சுச்சாம்.

 அப்ப அங்க விளையாடிகிட்டு இருந்த சிறுவர்கள் அதன்மேல் தடுக்கி விழ அதிலிருந்து இரத்தம் வந்துச்சாம்.  உடனே ஊர் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மாவிடம் சொன்னாங்களாம் . மன்னரும்,  நம்பூதிரிகளை வர வச்சு தேவ பிரசன்னம் பார்த்ததில் அங்க தேவி குடியிருப்பது தெரிஞ்சதாம்.

 உடனே மன்னர் அதை சுற்றி சிறிய கோவில் கட்டினாராம். காலபோக்கில் அம்மன் சக்தி அறிந்து பெரிய கோவிலாக கட்டினார்களாம். ஆரம்பத்தில மந்தைகாடுன்னு ஆடு மாடு மேய்க்கும் இடமா இருந்துச்சாம்.அதுதான் காலப்போக்கில் மருவி ”மண்டைக்காடு” ன்னு பெயர் வந்துச்சாம்.  இங்க இருக்கும் புற்று வளர்ந்து கிட்டே இருக்கிறதாம். இப்ப 15 அடிக்கு மேல அந்த புற்று வளர்ந்திருக்குதாம். 
 காலைல மட்டும் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுமாம். பங்குனி சித்திரை மாதங்கள்ல பத்து நாள் விரதம் இருந்து கருப்பு உடை தரித்து இருமுடியில் பூஜைக்கு வேண்டிய பொருட்களை கட்டிக்கொண்டு இங்க கடலில் கால் நனைத்து கொண்டு வழிபடுவார்களாம். இங்க சிறப்பு என்னன்னா, இங்க இருக்கிற கிறிஸ்துவ மத பெண்களும் அம்மனை வழி பட்டு வந்தார்களாம் .

”மண்டைக்காடு” இந்த பகுதிகள்ல வந்த ஒரு மத கலவரம்,  மத நல்லிணக்கதோடு வாழ்ந்த மக்களை பிரிவினையாக்கிவிட்டதாம். அம்மன் அருளால, இப்ப எந்த பிரச்சனையும் இல்லாம அமைதியா காணப்படுது. 

 இந்த கதை எல்லாம் கேட்டுட்டு , கோவிலுக்கு வெளிய வரும்போது  அங்க “வெடி வழிப்பாடு”ன்னு தனியே பட்டாசு வெடித்து ஒரு வழிப்பாடு கோவிலுக்கு வெளியே இருக்கும் மண்டபத்தில் நடத்துறாங்க.  அதையெல்லாம் பார்த்துட்டு கோவிலின் இடபக்க வழியாக கடற்கரை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

போற வழியில ஒரு மீனவ கிராமமும், ஒரு சர்ச்சும் இருக்கு.  அங்க மணற்பரப்பில் நிறைய ஆண்களும், பெண்களும் மீன் வலைகளை சரி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதெல்லாம் தாண்டி கடற்கறை வந்து சேர்ந்தோம்.  நீல வானை தொட்டு அழகா காட்சியளித்தது கடற்கரை  அதை ஒட்டி கரையில் வீடுகள் இருக்கு. ஓயாத கடல் இரைச்சல், உப்பு தண்ணி காற்றில் கலந்து ஈரமா இருக்கும் காற்று இவைகளையெல்லாம் பார்த்துக்கிட்டே கடற்கரையை அடைந்தோம்.

இங்க தெரியுற சாய்வான பகுதி வரை சிலசமயம் கடல் தண்ணி வருமாம் . சிலசமயம் பல அடி நீளத்திற்கு கடல் உள்வாங்குமாம்.  அப்படி நிறைய தண்ணீர் வந்தால் கடற்கரையை ஒட்டி இருக்கிற வீடுகள் நிலைமை என்னவாகும்!?ன்னு யோசனை வரும்போதே வேதனை மனசை வாட்டுது.


சரி நம்மளால சுற்றி வந்து இறங்கி கால் நனைக்க முடியாததுனால பக்கத்துல கீழே இறங்கி நின்ன ஒரு பெண் என் நிலைமையை புரிந்து கொண்டு அகத்திய முனிவர் தீர்த்தம் கொடுத்தமாதிரி கொஞ்சம் தண்ணி எடுத்து கொடுத்தார். நாங்களும் தலையில தெளிச்சுக்கிட்டு, மேற்கு வானில் மறைந்து கொண்டிருந்த சூரியனை பார்த்துக்கிடே பக்கத்தில் இருந்த ஒரு மீனவ பெரியவர்கிட்ட பேச்சு கொடுத்தோம்.

இங்கே அம்புக்குறி இட்டு காட்டி இருக்கிற இடத்தை ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜூம் பண்ணி பார்த்தீங்கன்னா சின்ன, சின்னதா 2 பாறைகள் இருக்குறது தெரியும்.  இருங்க சிரமப்படாதீங்க. உங்களுக்காக நானே ஜ்ஜ்ஜ்ஜ்ஜூம் பண்ணி காண்பிக்கிறேன்!!

அந்த பாறைக்கு பேரு ”ஆடு மேச்சான் பாறை”யாம் 200 வருஷத்துக்கு முன்னாடி அங்க இருக்கிற பாறையில நின்னு ஆடு மேய்ச்சாங்களாம் . நிலப்பரப்பு அங்க வர இருந்துச்சாம். கடல் மெல்ல மெல்ல நிலபரப்பை ஆக்கிரமிச்சு.., இப்ப, இங்க வரை வந்திருக்குன்னு அந்த பெரியாவர் சொன்னார்  கடைசியா வந்த சுனாமில கூட கொஞ்ச நிலபரப்பு கடலுக்குள்ளே போய்டுச்சுன்னு சொன்னார். எல்லாத்தையும் பதிவு தேத்த குறிச்சுக்கிட்டு அங்கே இருந்து கிளம்பினோம்.

இன்னிக்கு பகவதி அம்மன் அருள் பெற்று புண்ணியம் தேடிக்கிட்டோம்! அடுத்த வாரம் வேறொரு கோவிலுக்கு போய் புண்ணியம் சேர்த்துகலாம்!!


Thursday, September 26, 2013

நீ எங்கே?!


புலர்ந்தும், புலராத காலை பொழுதில் 
உன்னை காண ஓடிவந்த காலங்கள் 

யாவும், மறக்க முடியாமல் கனவுகளில் ...,
விழிகள் மட்டும்  ஓர்மையில்....,

இருள் சூழ்ந்த இரயில் வண்டி கூட 
உன்பகை கொண்டதால், புகை சூழ்ந்து
சிவப்பு விளக்கை எனக்காய் இட்டு 
பச்சை விளக்கோடு பாசமில்லாது போனதே!!

இடைவெளி இல்லாது ஒலித்த 
அலைபேசி கூட, 
அன்பே உன்அழைப்பு இல்லாமல்    
அலங்கோலமாகி போனதே!!


உணர்வில்லா உறிஞ்சல்களுடன் 
சுவையான காபி கூட..., 
உன் அருகாமை இல்லாது 
சுவை இல்லாது போனதே !!

நிறைவான வாதங்களுடன் 
அறை முழுவதும் நின்ற விவாதங்கள், யாவும் 
சிறையாகி போனதே!! இனி அது 
பிறையாகி வளர்வது என்னாளோ!?

கடந்த கால நினைவுகள் எல்லாம் 
கல்லறையினுள் தூங்கினாலும் 
கலங்காது வந்து செல்வேன்!!
உன் காதல் என்னுள் இருக்கும் வரை...,

Wednesday, September 25, 2013

டி லனாய் கோட்டை, உதயகிரி - மௌனசாட்சிகள்

மௌனசாட்சிகளா நின்னு பல கதைகளை சொன்ன பத்மனாபபுரம் அரண்மனை பத்தி போன வாரம் பார்த்தோம். பார்க்காதவங்க இங்க போய் பார்த்த்ட்டு சட்டு புட்டுன்னு சீக்கிரம் வாங்க. இன்னிக்கு வேற ஒரு இடத்துக்கு போலாம். 


இன்னிக்கு, உங்களைலாம் ”திருவிதாங்கூர்”  மன்னர் ”மார்தாண்டவர்மாவி”ற்கு 37 ஆண்டுகள் விசுவாசமாகவும்,  நம்பிக்கை நண்பராகவும் இருந்த ”டி லனாய்”ன்ற டச்சு தளபதி இருந்த ஒரு கோட்டைக்குகூட்டி போகப்போறேன். எல்லாரும் ரெடியா?! போலாமா!? நாம இப்ப  சரித்திர காலத்திற்கு  போக  போறோம்.

ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஸ்டாப்! ஸ்டாப்! நம்ம இடம் வந்தாச்சு!! ”நாகர்கோவில்”ல இருந்து ”திருவனந்தபுரம்” செல்லும் வழியில இருக்கிற ”புலியூர்குறிச்சி” ன்ற இடம்தான் இன்னிக்கு நம்மோட டூரிஸ்ட் பாய்ண்ட்.
    

இதுதான் உதயகிரி கோட்டை.  நாம,  இப்ப கருங்கல் சுவர்களை கொண்ட பிரம்மாண்டம்மான கோட்டையோட வெளிப்பக்கம் நின்னுட்டிருக்கோம். இது கோட்டைக்கு செல்லும் வழி.  சீக்கிரம் வாங்க. பிரபல பதிவர்கள்லாம் வர்றாங்களேன்னு நம்மை வரவேற்க மழை ரெடியா இருக்கு. அதோட அன்பு மழையில நனைஞ்சு திக்கு முக்காடி போறதுக்குள்ள கோட்டைக்குள்ள போய்டலாம்!!

ஸ்ஸ் அப்பாடா! ஒரு வழியா மழையோட அன்புல முழுசா நனையாம கோட்டைக்குள்ள வந்துட்டோம். இங்க செண்பகவள்ளி,  சுடலைமாட சுவாமி , குலசேகர தம்புரான் கோவில்கள் இருக்கு.  எல்லோரும் நல்லா இருக்கனும்ன்னு சாமியை கும்பிட்டுக்கோங்க.

நம்மோட இந்த பயணம் நல்ல படியா அமைய, தொல்பொருள் இலாகாவும் , வனத்துறையும் சேர்ந்தே இந்த கோட்டையை பராமரிக்கிறாங்க.  இங்க ஒரு மூலிகை பண்ணையும், ஒரு அக்வாரியமும் இருக்கு.  இந்த கோட்டை வேணாடு அரசரான வீரரவிவர்மா (கி பி 1595 கி பி 1607)காலத்தில் மண் கோட்டையாக கட்டப்பட்டட்டு, ”மார்த்தாண்டவர்மா”(கி பி 1729 கி பி 1758) காலத்தில கற்கோட்டையாக மாற்றியதாகவும் சொல்றாங்க. 

பத்பநாபபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த திருவிதாங்கூர் மன்னர்களின் முக்கியமான படைதளங்களில் இதுவும் ஒன்று.  இந்த கோட்டை16 அடி உயர கருங்கல் சுவர் கொண்டது. கோட்டை 90 ஏக்கர் பரபளவில் 200 அடி உயரம் உள்ள ஒரு குன்றைசுற்றி கட்டப்பட்டுடிருக்கு. 

இனி, இந்த கோட்டைக்கு ஏன் டி லனாய் கோட்டைன்னு அழைக்கபடுதுன்னு தெரிஞ்சுக்கலாம். வாங்க...
     
மன்னர் முன்பு டச்சு தளபதி சரணடைவது குறித்த ஓவியம்  

1741 ம் வருஷம் குமரி மாவட்டம்.  அப்போது இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் மார்த்தாண்டவர்மா ஆட்சி செய்து கொண்டு இருந்த காலத்தில டச்சு கிழக்கிந்திய கம்பெனி "குளச்சல் கோட்டையை" அவர்கள் வசம் வைத்து அங்க ஏராளமான வீரர்களுடன் வைத்து ஆட்சி செஞ்சிருக்காங்க.  

அப்ப மன்னருக்கும், டச்சு காரர்களுக்கும் பகை இருந்த சமயம். சில தளபதிகளின் மூலம் டச்சு படையை தோற்கடித்து, டச்சு வீரர்களை சிறை பிடித்து,  நாம நிற்கிற இந்த உதயகிரி கோட்டையில் காவலில் வெசிருக்காங்க.  அவங்கள்ல முக்கியமானவர்தான் டச்சு தளபதி யுஸ்டேஷியஸ் -டி- லனாய் அவரது மனைவி மர்கெரெட்டா மகன் ஜான் டி லனாய் அவரது இராணுவத்தளபதி பீட்டர் ப்ளோரிக்.

இவர்களை மார்த்தாண்டவர்மாவின் தளபதி வேலுத்தம்பி கைது செய்திருக்கிறார்.  அப்ப நடந்த பேச்சு வார்த்தையில் ஐந்து வருஷம் கழித்து  டச்சு வீரர்களை விடுதலை செய்ய மார்த்தாண்டவர்மா ஒப்புகொண்டாராம் . அப்ப டி லனாய்மார்த்தாண்டவர்மாவின் படையில் சேர விருப்பம் தெரிவித்திருக்கிறார்.  அந்த நேரத்துல அவருக்கு வயது 26 தான் ஆச்சு.

 போர் தளவாடங்கள் செய்வதிலும், பீரங்கி குண்டுகள் செய்வதிலும், போர் பயிற்சி அளிபதிலும் சிறந்து விளயங்கியதுனால மன்னர் மார்த்தாண்டவர்மா அவரை படைத்தளபதியாக நியமிச்சிருக்கிறார்.  அதன் பிறகு தளபதி டி லனாய் மன்னர் மார்த்தாண்டவர்மாவிற்கு நம்பிக்கையான படைதளபதிய்யகவும், நண்பராகவும் 37 ஆண்டு காலம் இருந்து தன்னுடைய 62 வயதில் மரணமடைந்திருக்கிறார்.

 திருவிதாங்கூர் அரச வீரர்களுக்கு தற்கால போர் தந்திரங்களை, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கையாளுவதற்கும் இவர்தான் பயிற்சி அளித்திருக்கிறார். அவருடைய கல்லறையில் தமிழிலும், இலத்தீன் மொழியிலும் இதெல்லாம் குறிக்கப்பட்டிருக்கு.  தன்னுடைய வாழ்நாளின் பெரும் பகுதியை இந்த கோட்டையை சீரமைப்பதிலும், கட்டுவதிலும் செலவிட்டிருக்கிறார்.  
   
இப்ப கோட்டையை சுற்றி பார்க்கலாம் வாங்க.  இங்க தெரிகிற இந்த நீர் நிறைஞ்ச குளத்தை சுத்த படுத்தும் போது நிறைய பீரங்கி குண்டுகள் கிடைச்சிருக்கு.  ஏன்னா இந்த கோட்டை பீரங்கி துப்பாக்கி போன்ற போர் ஆயுதங்கள் செய்யும் தொழில் கூடமாகவும், ஆயுத சேமிப்பு கிடங்காகவும் இருந்திருக்கு.




நாம போறவழியெல்லாம் மூங்கில் காடுகளும், இயற்கை சூழ்நிலையும் மனசை கொள்ளை கொள்ளுது.  நடைபாதைகள் எல்லாம் அழகாக கட்டப்பட்டு இருக்கு.  காட்டு பகுதியையும், மான்களையும் பார்க்கும் போது பிரமாண்டமான அரண்மனைகள் இல்லாமலும், கோட்டை எளிமையாக வும் அதே நேரத்துல அழகாவும் காணபடுது .


மான்களை எல்லாம் பார்த்துக்கிட்டே தொல்பொருள் துறையினரால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பத்பநாபபுரம் கோட்டைக்கு செல்லும் சுரங்க பாதையையும்,  இங்கே அமைக்க பட்ட குகை மூலம் ஆரல்வாய்மொழி என்னும் இடத்தில உள்ள காற்றாடி மலையடிவாரத்திற்கும்,     அங்க இருந்து களக்காடு மலைக்கு சென்று டி லனாய் மூலமா போர் பயிற்சி கொடுக்கபாட்டதா சொல்லப்படும்  அந்த சுரங்க பாதையையும் பத்தின குறிப்புகளை காண மலையடிவாரத்திற்கு வந்துவிட்டோம்.  

புதுசா வர்றவங்க தயவு செய்து யாரும் இந்த மலையில் ஏறி செல்லவேண்டாம் சுரங்க வாயில்கள் எல்லாம் புதர்மண்டி மண்மூடி இருக்கு. தவறி விழ வாய்ப்பு அதிகம்ன்னு சொல்றாங்க. 



போகிற வழியெல்லாம் காடு. வழியெல்லாம் புதர்மண்டி காணபடுது. அதைவிட அங்க இருக்கிற மலை உச்சிக்கு செல்லும் பாதை மிகவும் ஆபத்தானது.



செங்குத்தா செல்லும் பாறையின் மேல் சிறிய தடத்துடன் கம்பி பிடியுடன் அமைக்கப்பட்டிருக்கு.  எந்த பிடிமானமும் இல்லாம ரொம்ப சாய்வா இருக்கு ’ . மேலே செல்ல , செல்ல அந்த கம்பி பிடிகளும் கூட இல்லை. உச்சியில் ஒரு சாஸ்தா கோவில் இருந்தாக சொல்றாங்க.
சிதிலமடைந்த ஒரு செங்கல் கட்டிடம் மட்டும் இடிபாடுகளுடன் அங்க இருக்கு. மேலும், நாங்க போன போது மழை மேகம் திரண்டு இப்ப கொட்ட போறேன்னு பயமுறுத்துன நேரம். மேகப்பொதிகள் நம் தலையில் மோதி செல்வதை போல் போனது அற்புதமான காட்சி.
இந்த மாதிரி சூழ்நிலைகள்ல மின்னல் தாக்கும் அபாயம் அதிகம்ங்குறதால சீக்கிரம் கீழ போய்டலாம் வாங்க. கீழே இறங்கும் போது பார்த்து கவனமா இறங்குங்க. கொஞ்சம் கால் ஸ்லிப் ஆனாலும் அவ்வளவுதான். பிடித்து இறங்கும் கம்பிகளும் அவ்வளவா பாதுக்காப்பு இல்லை. மேலும் அவ்வளவு உயரத்திலிருந்து ஒரு சிறிய கம்பியினை மட்டும் பிடித்து இறங்கும் போது உடம்பில் ஒரு பதட்டம் ஏற்படும். அதனால, ஒருத்தர் கை ஒருத்தர் பிடிச்சுக்கிடு கீழ இறங்கலாம். இந்த பாறை மேல எதும் இல்ல, அதனால, இங்க இம்புட்டு கச்டப்பட்டு ஏறி வர்றது வேஸ்ட். என்ன சுத்திலும் இருக்குற ஊர்லாம் சின்னதா தெரியும் அழகையும், மேகக்கூட்டம் மூஞ்சில மோதும் அனுபவத்துக்காக போகலாம்.
நாம இந்த அடர்ந்த காடுகளுக்கிடையில போலாம் வாங்க, சுத்திலும் மரம், செடி, கொடிலாம் புதர் எல்லாம் மண்டி கிடக்கு. பார்த்து வாங்க. எதாவது பாம்பு கீம்பு வரப்போகுது. இப்படியே போனா, நாம பார்க்கவேண்டிய முக்கியமான இடத்துக்கு போய்டலாம்.
இந்த வழி ரொம்ப தொலைவு மாதிரி இருக்கும். நடக்க முடயாதவங்க இங்க வாடகைக்கு வைத்திருக்கும் சைக்கிளை எடுத்து சுற்றலாம். 1 மணிநேரத்துக்கு மணிகூர் 20 ரூபாய். எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதேன்னு சொல்றவங்க சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கிட்டு தள்ளிக்கிட்டே வாங்க. சீக்கிரம் போய்டலாம்.
இதுதான் தளபதி டி லனாய்கல்லறை. சர்ச் வடிவில் இருக்கும் தோற்றத்தில் வெளியே தமிழ் மற்றும் இலத்தீன் வாசகங்களுடன் கல்வெட்டு குறிப்புக்கள் காணப்படுது
அந்த குறிப்பு என்னன்னா வேணாட்டுஅரசர் மார்த்தாண்ட வர்மா காலத்திலும், அவருக்கு பின் வந்தகார்த்திகை திருநாள் ராமவர்மா காலத்திலும், முன்னர் டச்சு படை தளபதியாயிருந்த டி லனாய்என்பவர் காயங்குளம் முதல் கொச்சி வரையுள்ள நமது எதிரிகளை கீழ்படுத்தி நம்முடைய வலிய தம்புரானுக்கு விசுவாசமாயிருந்து 62 வயசும் 5 மாசமும் 1777 ஜூன் மாசம் 1 நாள் மரணத்தை அடைந்து இந்த இடத்தில அடக்கம் செய்ய பட்டு இருக்கிறார். அவருடைய மகன் ஜான் டி லனாய் களக்காடு சண்டையில் காயம் பட்டு இறந்து போனதாகவும் கல்வெட்டில் குறிக்க பட்டுள்ளது. அவரது மனைவி மர்கெரெட்டா அவரது அடுத்தநிலை இராணுவத்தளபதி பீட்டர் ப்ளோரிக் ஆகியோரது கல்லறைகளும் காணபடுது. இந்த இடத்தை சுத்தி கல்லறைகளுக்கே உண்டான ஒரு விதமான ஒரு அமைதி காணபடுது.

இந்த கோட்டை உருவான பின்னரே சுற்றியுள்ள ஊர்களில் அமைதி திரும்பியதாகவும், மன்னர் மார்த்தாண்டவர்மாவும் தளபதி டி லனாய் நிறைய பணிகள் இங்கே இருக்கிற மக்களுக்கு செய்ததாகவும், பொன்மனை என்னும் இடத்தில அணைக்கட்டு ,கால்வாய் கட்டியதாகவும் அதனால் விளை நிலங்கள் செழித்து விவசாயம் நல்ல படியாக இவரது காலத்தில் இருந்ததாகவும் கல்வெட்டு குறிப்புகள் சொல்லுது.


நாம பார்க்கிற இந்த பகுதி ராஜா மார்த்தாண்ட வர்மா (1729-1758) காலத்தில் பீரங்கி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் செய்யும் உலைகளத்தின் சிதைந்த பகுதிகள். சமீபததில் தொல்பொருள் ஆய்வுத் து‌றையினர் கோட்டையின் அருகே ஒரு சுரங்கப்பாதையினை கண்டுபிடிச்சிருக்காங்க. அந்தப் பாதை கோட்டையிலிருந்து‌ பத்மநாபபுரம் அரண்மனைக்கு ஆபத்து காலங்களில் ரகசியமா போய் வர கட்டியிருக்கலாம்.
18 ம் நூறாண்டின் இறுதி பகுதியில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரா போரிட்ட திப்புசுல்தானின் வீரர்கள் இந்த கோட்டையில் கைதிகளா காவலில் வைக்கப்பட்டதாக சொல்லபடுது. 19 ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இந்தக்கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனியின் ராணு‌வபடைகள் நிறு‌த்திவைக்கப்பட்டதாகவும் கூறப்படுது‌.
தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் உதயகிரி கோட்டையில் பல்லுயிர்மம் பூங்கா ஒன்று பராமரிக்கபடுகிறது. அட ஏன் இப்படி முழிக்குறீங்க!, ”ஜூன்னு தமிழ்ல சொன்னாதான் உங்களுக்குலாம் புரியுமோ!! சில மான்கள், வெள்ளை எலிகள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருக்கு. லவ் பேர்ட்ஸ் மற்றும் மயில்களும், மீன் காட்சியகமும் இருக்கு.
மரக்குடிலில் ஏறுதல், பர்மாபாலம் வலையில் ஏறுதல் போன்ற வீர விளையாட்டுகள் இங்க இருக்கு. இதுக்கு தனி கட்டணம் உண்டு. இதெல்லாம் முடித்து விட்டு வெளியே வரும் போது ஒரு குதிரை நம்மளையே பார்க்குதே!! அது ஏன்னுதான் தெரியலை!!

கோட்டையின் நல்லா சுத்தி பார்த்தாச்சா!? இங்க தெரியுறது தான் நாகராஜா கோவில். இது கோட்டையின் நுழைவு வாயில் பகுதியிலேயே அமைந்து இருக்கு



ஒருவழியா வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையை சுற்றி பார்த்தாச்சு இப்ப அதன் வரலாறும், அதுகண்ட போராட்டங்களும் உங்களுக்கு தெரிந்திருக்கும். இதுல கவனிக்க பட வேண்டிய முக்கியமான் விஷயங்கள் என்னனா...,.

நுழைவு கட்டணம் 10 ரூபாயும், ஸ்டில் கேமராவிற்கு 30 ரூபாயும், வீடியோ கேமராவிற்கு 50 ரூபாயும் வசூலிக்கபடுது .சில முறை கேடுகள் நடந்தாலும் , இங்க பெரும்பான்மையான இடம் வனபகுதிகளா இருக்குறதால காதலர்களாய் இல்லை நண்பர்களாய் வரும் ஆண் -பெண்களுக்கு அனுமதியில்லை. குடும்பத்துடன் வருபவர்களுக்கும் தனியாய் வரும் ஆண்கள் தனியாய் வரும் பெண்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுது (அப்ப தனித்தனியா போய் ஜாய்ன் பண்ணிக்கலாமான்னு குதர்க்கமா யாரும் கேள்வி கேக்காதீங்கப்பா! ஏன்னா, பதில் சொல்ல அக்காவுக்கு தெரியாது.
அடுத்த வாரம், மௌனசாட்சியாய் நிக்கும் வேற ஒரு இடத்துக்கு போகலாம்..,