Wednesday, June 13, 2018

ஒரே நேரத்தில் 12 சிவ தம்பதிகளை தரிசிக்கனுமா?! - திருநாங்கூர் ரிஷப சேவை


சிவனையும், சக்தியையும் தனித்தனியாய் தரிசிப்பது சுலபம். அம்மையப்பனை அதுவும் நந்திதேவர்மேல் வலம் வருவதை தரிசிப்பது அபூர்வம். அப்படி ரிஷப வாகனத்தில் வரும் அம்மையப்பனை தரிசித்தால் ஈரேழு ஜென்மத்து பாவம் நீங்கும். ஒரு ரிஷப வாகன சேவையை தரிசித்தாலே இத்தனை பலனென்றால், ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பனிரெண்டு  சிவ தம்பதியரின் ரிஷப சேவையினை கண்டு களித்தால்?! மறுபிறப்பில்லா முக்தி கிடைக்கும். சரி, ஒரே நேரத்தில் 12 ரிஷப வாகனத்தில் அம்மையப்பன் எழுந்தருளும் இடம் எதுன்னு தெரிஞ்சுக்க பதிவுக்குள் போகலாம். வாங்க! 


முன்னொரு  பிரளய காலத்தில் பிரம்மதேவர், சிவபெருமானை நோக்கி மதங்கம் எனும் யானை வடிவில் இருந்து தியானித்தார். அப்போது பிரம்மனின் மனதில் இருந்து அவரது புத்திரனாய் மதங்க முனிவர் தோன்றினார். மதங்க முனிவர் தவம் செய்ய வேண்டி தகுந்த இடம் தேடினார். அது பிரளய காலமென்பதால் பாரெங்கும் வெள்ளக்காடு. தவமியற்ற இடம் கிடைக்கவில்லை. அப்போது நாரத முனிவர், மதங்க முனிவரின் முன்தோன்றி, ‘மதங்கா! பூவுலகில் அனைத்து உயிர்களும் ஒடுக்கம் அடையும் திருவெண்காடு, பிரளயத்திலும் அழியாமல் இருக்கு. அங்கு சென்று தவமியற்று' எனக்கூறி மறைந்தார். 
ஊழிக்காலத்திலும் அழியாத அத்தலத்தைக் கண்ட மதங்க முனிவர் அங்கேயே தவமியற்றினார். அப்போது மகாவிஷ்ணு மோகினி வடிவில் தோன்றி, மதங்க முனிவருக்கு ஆசி வழங்க, விநாயகப்பெருமான் மதங்க முனிவருக்கு அஷ்டமா சித்திகளையும் அருளினார். இந்த மோகினி வடிவ பெருமாள் ‘நாராயணி’ எனும் திருநாமத்திலும், விநாயகர் ‘மதங்க விநாயகர்’ எனும் பெயரிலும் திருநாங்கூர் மதங்கீஸ்வரர் திருத்தலத்தில் எழுந்தருளி அருள்கின்றனர். உடனே பார்வதி தேவி ‘மதங்க முனிவரே! எம் வடிவம் கொண்ட மந்திரிணியான சியாமளா தேவி உமக்கு மகளாக வந்து பிறப்பாள்' என அருளி மறைந்தாள். அதன்படி, ஆடிமாதம் வெள்ளிக்கிழமை அதிகாலை மதங்க தீர்த்தம் எனும் பொய்கையில் நீலோத்பல மலர் மேல் சியாமளாதேவி குழந்தையாக வந்துதித்தாள். அப்போது பொய்கைக்கு நீராடவந்த மதங்கர் - சித்திமதி தம்பதியினர், அக்குழந்தையை எடுத்து தங்கள் மகளாக வளர்த்து வந்தனர்.  பின்னாளில் சிவபெருமானுக்கு மணம் முடித்து வைத்தனர். 
 மண்களிக்கும் பச்சைவண்ணமும் ஆகி, மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே... என அபிராமி பட்டரால் பாடப்பட்ட மாதங்கிதேவி சித்திமதி- மதங்க முனிவரின் கோடிக்கணக்கான மகள்களில் மூத்தவளும் பேரழகியுமானவள்.   இந்த மாதங்கிதேவியே சியாமளை, மந்திரிணி, ராஜசியாமளா, ராஜமாதங்கி எனவும் அழைக்கப்படுகிறாள். லலிதை ஆதிபராசக்தியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றி, தம் அடியவர்களுக்கு கல்வி, நுண்ணறிவு, சொல்லாற்றல், இசையறிவு, வசீகரிக்கும் சக்தி, திரண்ட செல்வம் என அள்ளித்தருபவள் இந்த ராஜமாதங்கி. இந்த ராஜமாதங்கி அருளும் இடம் சீர்காழி மற்றும் திருவெண்காடு அருகிலுள்ள திருநாங்கூர் திருத்தலம் ஆகும்.

மாதங்கிதேவி வளர்ந்து தக்க பருவம் வந்ததும் சிவப்பெருமானுக்கு மணமுடித்து வைத்தார் மதங்க முனிவர். பின்னர் ரிஷபத்தில் சக்தி மாதங்கியுடன் சிவபெருமான் எழுந்தருளி, திருக்கல்யாண சேவை நல்கி அருளினார். அந்த ரிஷப சேவை திருக்காட்சியின் தொடர்ச்சியாய் இன்றுவரை திருநாங்கூர் ராஜமாதங்கி சமேத மதங்கீஸ்வரர் திருக்கோவிலில் ‘ரிஷப சேவை திருக்காட்சி' நடைபெற்று வருகிறது.

மதங்க முனிவர்  அம்பிகை ராஜசியாமளாவை வளர்த்து வந்ததால், அம்பிகை ‘ராஜமாதங்கி’ என்றும், மாதங்கியை சிவபெருமான் மணந்ததால், இறைவன் ‘மதங்கீஸ்வரர்’ என்றும், ஆட்கொண்ட மதங்கரின் ஆசிரமம் அமைந்திருந்த இடம் ‘மதங்காஸ்ரமம்’ என்று அழைக்கப்பட்டது.  மதங்காஸ்ரமம்  அமைந்த இடமே திருநாங்கூர் ராஜமாதங்கி சமேத மதங்கீஸ்வரர் திருக்கோவில் என்றும் வழங்கப்பட்டு வருகிறது. இத்தல மாதங்கியை தேன் நைவேத்தியம் செய்து வழிபட்டு வந்தால், படிப்பில் குழந்தைகளின் மந்தநிலை நீங்கும். மேலும் கல்வி, ஞானம், இசையறிவு கூடிவர இத்தல ராஜமாதங்கி வழிபாடு பெரிதும் துணை செய்யும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல சிவபெருமான் பதினோரு திருஅவதாரங்களுடனும், மகாவிஷ்ணு பதினோரு திருஅவதாரங்களுடனும் ஒரே திருத்தலத்தில் தோன்றி அருளும் திருத்தலம் திருநாங்கூர்.
தமது சொல்லையும் மீறி  தட்சனின் யாகத்திற்குச் சென்றுவந்த தாட்சாயணியின் மீது கொண்ட சினத்தினால், சிவபெருமான் இங்கு உள்ள உபய காவிரி என்னும் இடத்தில் ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது அவரது விரிந்த சடாமுடி பதினொரு இடங்களில் பூமியில் உதிர்ந்தது. அந்தப் பதினொரு இடங்களிலும் இன்னொரு சிவபெருமான் உருவம் தோன்றி ருத்திரதாண்டவம் நிகழ்த்தத் தொடங்கியது. இதனால் இவ்வுலகிற்குப் பேரழிவு ஏற்படும் என்று அஞ்சிய தேவர்கள், மகா விஷ்ணுவிடம் அடைக்கலம் புகுந்தனர். அவர் ருத்திரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த 11 சிவபெருமான்களையும், 11 மகாவிஷ்ணுவாய் தோன்றி கட்டித் தழுவினார். இதனால் சினம் தணிந்து சாந்தநிலைக்குத் திரும்பிய சிவபெருமான், தமது சடாமுடி உதிர்ந்த பதினொரு இடங்களிலும் கோவில் கொண்டருளினார். அதுபோலவே மகாவிஷ்ணுவும் பதினொரு இடங்களிலும் கோவில் கொண்டார்.
காவிஷ்ணுவின் பதினொரு திருக்கோலங்கள் கோவில் கொண்ட பதினொரு திருத்தலங்கள் திருநாங்கூரில் திவ்யதேசங்களாக அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் இரவில் திருநாங்கூரில் திருமணிமாடக் கோவில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சன்னிதியில் ‘11கருடசேவை' திருவிழா சிறப்பாக நடக்கும். அதுப்போல இந்த சிவாலயங்களின் சார்பாக ‘பன்னிரு ரிஷபாரூட சேவை' திருவிழா சித்ரா பவுர்ணமி நாளில் அக்காலத்தில் இங்கு நடந்தது.
அந்த காலத்தில்  சித்ரா பவுர்ணமியில் நடைபெற்றுவந்த ரிஷபாரூட சேவை  தவிர்க்க முடியாத காரணத்தால் தடைபட்டு போனது. பல வருட தடைகளுக்குப்பின், தற்போது வைகாசி மாதத்தில் ரோகிணி நட்சத்திர நாளில் இந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஈசனின் ஒரு ரிஷபாரூட திருக்காட்சி கண்டாலே பெரும் பாக்கியம். ஆனால் இங்கு ஒரே தலத்தில் பன்னிரு திருக்கோவில்களில் உள்ள ஈசன்களும் அம்மை உமையவளுடன் பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி அருள்கிறார். இதனைக் காண்பது வெகு புண்ணியம். ஈரேழு ஜென்மத்து பாவங்கள் விலகுமென்பது ஐதீகம்.
இந்த பனிரெண்டு ரிஷபாரூட சேவை  திருநாஞ்கூர் ராஜமாதங்கி சமேத மதங்கீஸ்வரர் ஆலயத்தில் இன்று (13/6/2018) நடைபெற உள்ளது. இன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள் பன்னிரு திருக்கோவில் சிவபெருமானின் உற்சவ திருமேனிகளுக்கும், ஒரேநேரத்தில் திருக்கல்யாணம் செய்யப்படும். பின்னர் சிவசக்தி தம்பதிகள் ரிஷபாரூடத்தில்  மக்களுக்கு திருக்காட்சி தரும் வைபவம் நடைபெறும். பின்பு அன்று இரவு 9.30 மணிக்கு மேல் பன்னிரு ரிஷபாரூட மூர்த்திகளும், திருமுறை பாராயணங்கள் ஒலிக்க, மங்கல வாத்தியங்கள் முழங்க, திருவீதியுலா வருவார்கள். இந்த பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி காண்பதன் மூலம் நம் பாவ வினைகள் அகன்று ஒளிமயமான நல் வாழ்க்கை அமையும். இந்த திருநாங்கூர் ஆலயம் சீர்காழியிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

நன்றியுடன்,
ராஜி

11 comments:

  1. புதிய தகவல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  2. அருமையான பதிவு.....கோவில்...ஈசன்...அருட்கடாட்சம் கண்டோம்........ஒவ்வொரு திருக்கோவில்களுக்கும் நீண்ட வரலாறுகள் உண்டு.பதிவின் மூலம் எம் இஷ்ட தெய்வங்களின் அருள் மற்றும் வரலாறு குறித்து இளையோரும் அறிந்து கொள்ல நல்ல வாய்ப்பளிக்கும் உங்களுக்கு நன்றி......

    ReplyDelete
    Replies
    1. இனியும் இதுப்போன்ற பதிவுகள் தொடரும்ண்ணே. உங்க ஊக்கமும், கருத்தும் எனக்கு நல்ல வழிக்காட்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  3. //சித்திமதி- மதங்க முனிவரின் கோடிக்கணக்கான மகள்களில் //

    ஐயோ....!!!

    சீர்காழிக்கு அருகில் இருக்கிறதா? ஒரு வைகாசிக்குச் சென்று பார்க்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. படிக்கும்போது போகனும்ன்னு ஆசைப்படுவோம். ஆனா, அப்புறம் மறந்திடுவோம்.

      Delete
  4. திருநாங்கூரில் ‘11கருடசேவை' தெரியும் ...

    மற்றவை எல்லாம் புதிய செய்திகள்....மிக நன்று..ராஜி க்கா..

    ReplyDelete
    Replies
    1. நாம் அறியாதன பல இருக்குங்க அனு. அதில் இதுவும் ஒன்று

      Delete
  5. திருநாங்கூர் கருட சேவை கேள்விப்பட்டுள்ளேன். இப்போதுதான் ரிஷபசேவை கேள்விப்படுகிறேன். அறியாதன அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  6. நல்ல தகவல்கள் சகோதரி...

    கீதா : /சித்திமதி- மதங்க முனிவரின் கோடிக்கணக்கான மகள்களில் //

    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...பல கதைகள் புரிவதில்லை. இதுவும் ஏதேனும் குறியீடா...மறைமுகமாக...இருந்தாலும் புது தகவல் அறிந்தோம்

    ReplyDelete