Sunday, January 15, 2012

தைமகளே வருக....

        
   எத்தனையோ பண்டிகைகள் ஆண்டு முழுவதும் கொண்டாடிக்கிட்டுதான் இருக்கோம்.  இருந்தாலும் பொங்கல் பண்டிகைன்னாலே மனசுக்கு உற்சாகம் தரும் பண்டிகைப் போல ஏதுமிருக்கான்னு எனக்கு தெரியலை.

      மார்கழி மாசம் பொறந்த உடனே கூட படிக்கும்  பிள்ளைங்கலாம் ஸ்கூல்ல உக்காந்து கோலம் போட்டு பார்ப்போம். அதுக்கு கலர்லாம் செலக்ட் பண்ணிக்குவோம். போகி அன்னிக்கு வீட்டையெல்லாம் சுத்தம் பண்ணி வச்சிடுவோம். நைட் 8 மணிக்கு தெரு வாசல் கழுவி செம்மண் இட்டு கோலம் போட ஆரம்பிப்பேன். நான் ரொம்ப அழகா இருக்குறதால (ஹலோ அழகா? அப்பிடின்னா) ஓக்கே ஓக்கே. நைட் டைம் என்பதால் அப்பா, எதிர்வீட்டு ஐயர் மாமா, கோடிவீட்டு செட்டியார் சித்தப்பா, மாடிவீட்டு கோணார் அண்ணன்லாம் வாசல்ல சேர் போட்டுக்கிட்டு உக்காந்து கதை பேசிக்கிட்டு இருப்பாங்க. நான் கோலம் போடுவேன். 

    அம்மா, எதிர்வீட்டு சித்தி, கோடி வீட்டு மாமி, மாடி வீட்டு அண்ணிலாம் கோலத்துக்கு கலர் கொடுப்பங்க. அக்கம் பக்கம் வீட்டில் பெண்குழந்தைகளே கிடையாது. எல்லார் வீட்டுலயும் ஆண் பிள்ளைகளே. அவங்க வீட்டுலலாம் நாந்தான் செல்ல பொண்ணு. அவங்க வீட்டுலயும் நாந்தான் கோலம் போடுவேன். ஆக மொத்தம் 6 வீட்டில் கோலம் போட்டு முடிக்க நைட் 12 மணிக்கு மேல ஆகிடும். நான் கோலம் போடும்போது, நான் தூங்கி வழிய கூடாதுன்னு  காஃபி, பிஸ்கட்டு, ன்னு வாங்கி தந்து பார்த்துப்பாங்க.
          
              
                    (இது போன வருஷம் போட்ட கோலம்)
              
                        (இதுவும் நான் கிறுக்கியது...)
       
                 
     (இதுவும் நான் போட்ட கோலம்தான்.  கலர்லாம் என் பொண்ணுங்க தூயா, இனியா, பையன் அப்பு கொடுத்தாங்க) 

     அம்மா அரைச்சு வச்ச மருதாணியை வச்சுக்கிட்டு, தெருவை ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வருவேன். யார் வீட்டுல நம்மளைவிட அழகா போட்டிருக்காங்கன்னு பார்த்துட்டு வருவேன். என்னைவிட யாராவது அழகா கோலம்  போட்டிருந்தாலும் எதாவது குறையை கண்டுபிடிச்சு நான் போட்ட கோலம்தான் பெஸ்ட்ன்னு என்னை நானே தேத்திக்கிட்டு வந்து படுப்பேன்.

 

        முதல் நாளே ஆற்றங்கரை இல்லைன்னா குளத்தங்கரையில் இருந்து களிமண் கொண்டாந்து, வீட்டு வாசல்ல சாமிக்கு ”பா”ஷேப்புல வீடு கட்டி பிள்ளையார் பிடிச்சு வச்சுட்டு படுப்பார். விடிகாலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து மஞ்சள் குங்குமம் வைத்து, கரும்பு, அவரைக்காய், கத்திரிக்காய், பூசணி, உருளை, கருணைக்கிழங்கு, முள்ளங்கி, மொச்சைன்னு கிடைக்கும் காய்கறிலாம் வச்சு படைப்பாங்க. பானையோட கழுத்துல ”பச்சை மஞ்சளை” (மஞ்சள் எப்படி பச்சையான்னு கேட்கப்படாது. உலராத மஞ்சள் தான் ”பச்சை மஞ்சள்”)


        நல்ல நேரம் பார்த்து வாசல்ல களிமண்ணால அடுப்பை உருவாக்கி, அதுல வரிசையா மூணு பானையை  வச்சு,   துவரை மிளாறை விறகா பயன் படுத்துவாங்க. முதல்ல, பானை காய்ந்ததும் நெல் போடுவாங்க அது பொறிந்ததும் பால் ஊத்துவாங்க, பால்பொங்கி வரும் சமயம் தண்ணி ஊத்தி மடக்கு என்னும் மண்ணால் ஆன தட்டை பானை மேல மூடுவாங்க.  வீட்டுல இருக்கும் நண்டு சிண்டுலாம் ஆளாஆளாக்கு பானைகளை பிரிச்சுக்கிட்டு யார் பானை முதல்ல பொங்குதுன்னு பந்தயம் கட்டிக்கிட்டு வேகவேகமா தீ வைப்பாங்க.
                                      
    பொங்கல் எந்த பக்கம் பொங்கி வருதுன்றதை வச்சு அந்த வருசம் வீட்டுல நல்லது நடக்குமா? கெட்டது நடக்குமான்னு பெருசுங்க ஜோஷியம் சொல்வாங்க. அதுக்காகவே அம்மா, சித்தி, அத்தைலாம் எந்த பக்கம் பொங்கி வந்தால் நல்லது நடக்கும்ன்னு பாட்டி சொல்லுவாங்களோ அந்த பக்கம் லேசா பானையை சாய்ச்சு வைக்கும் கூத்துலாம் நடக்கும். பொங்கல் பொங்கி வரும்போது போங்கலோ பொங்கல் ந்னு சத்தமா போட்டி போட்டுக்கிட்டு கூவுவோம்.                                 


      கொதிக்குற தண்ணியில பச்சரிசி, உப்பு போட்டு  பொங்கல் வச்சு இறக்குவாங்க. பொங்கல் பானை ஃபுல்லா வந்திருந்தா அந்த வருசம் ஃபுல்லா நல்ல விளைச்சல்ன்னும், கொஞ்சம் குறைச்சலா வந்தால் விளைச்சல் கம்மின்னு எங்க பாட்டி சொல்லும். 

   அதே அடுப்புல, வெறொரு பானையை ஏத்தி  நவதான்யங்களை வறுத்து, வேக வைத்து கத்திரிக்காய், முள்ளங்கி, அவரைக்காய், பூசணி, வெள்ளரிக்கிழங்கு, உருளை கிழங்கு, பிடி கருணை, கருணைக்கிழங்கு, வாழைக்காய்லாம் போட்டு மிளகாய்த்தூள், உப்பு போட்டு கொதிக்கவைத்து மிளகாய்தூள் வாசனை போனப்பின் புளிக்கரைசலை ஊத்தி, கடுகு, காய்ந்த மிளகாய், பூண்டுலாம் போட்டு தாளித்து பொங்கல் குழம்பு செய்வாங்க. பொங்கலுக்கு இதுதான் எங்க வீட்டுல ஹைலைட்டே. கூடவே வெந்தய்க்கீரை கடைன்சும், பிடிக்கரணை காரக்குழம்பும் வைப்பாங்க. இந்த மூணும்தான் பொங்கலுக்கு எங்க வீட்டுல பெஸ்ட் காம்பினேஷன்.

காலையில பிள்ளையார் வைத்த இடத்துலயும் அடுப்பாண்டையும் சுத்தம் பண்ணி, தண்ணி தெளிச்சு, செங்கல் பொடியால கோலம் போடுவோம். அப்புறம் பூசணி  இலையை கொண்டுவந்து அதுலதான் பொங்கல் வைச்சு படைப்போம். சூரியனுக்கு காட்டி சாமி கும்பிட்டு சாப்பிடுவோம். அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மான்னு எல்லரும் உக்காந்து கதை பேசிக்கிட்டு இருப்பாங்க. நண்டு சிண்டு நட்டுவாக்களிலாம் நாங்க கரும்பு தின்னுக்கிட்டு, விளயாடிக்கிட்டு இருப்போம்.

இப்படித்தான் நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ பொங்கல் கொண்டாடினேன். இன்னிக்கும் என் பிள்ளைகளும் இந்த மகிழ்ச்சியை அனுபவிக்கனும்ன்னும், பாரம்பரியத்தை மறக்ககூடாதுன்னும் இதே முறையில்தான் பொங்கல் வைக்குறேன். இதுல ஒரே ஒரு மாறுதல் பானைக்கு பதில் வெண்கல பானை என்பது மட்டுமே..,  நான் பெற்ற இன்பத்தை என் பிள்ளைகளும் அனுபவிக்கட்டுமே.

23 comments:

  1. மார்கழின்னா நானெல்லாம் அலாரம் வெச்சு எந்திருச்சு,சைக்கிள எடுத்துக்குட்டு கோலம் போன்ற புள்ளைங்கள சைட் அடிக்க கெளம்பிடுவேன்..கெரகம்-எல்லா புள்ளைங்களும் குளிருக்கு குல்லா போட்டுக்கிட்டு கோலம் போடும்...அது ஒரு அழகிய நிலா காலம்...

    ReplyDelete
  2. எங்க வீட்லயும் இன்னும் இப்புடிதான்க்கா பொங்கல் வெக்குறாங்க...
    வருஷத்துல ஒரு நாள் பழச நெனச்சு பாக்க இருக்கு...
    பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா..

    ReplyDelete
  3. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  4. கேஸ் அடுப்புல பொங்கல் பொங்குற இந்த நாளில்கூட குழந்தைகள் நான் பெற்ற இன்பத்தை அனுபவிக்கட்டும்னு அடுப்பு செஞ்சு குடும்பமா பொங்கல் வைக்கறதக் கேக்கவே சந்தோஷமாயிருக்கும்மா... குழந்தைங்க கலர் பண்ணின கோலமும், போன வருஷத்துக் கோலமும் ரொம்ப சூப்பர்! என் உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை உங்க எல்லாருக்கும் சொல்லிக்கறேன். (ஸ்பெஷலா குழந்தைங்களுக்கு)

    ReplyDelete
  5. எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. தித்திக்கும் அச்சுவெள்ளமாய்
    திகட்டாத செங்கரும்பாய்
    பொங்கி வரும் புதுப் பொங்கலாய்
    மனதிலும் வாழ்விலும்
    மகிழ்ச்சி பொங்கி தங்கி இருக்க

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  7. அருமையான பதிவு.
    எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. கிறுக்கின கோலமே இவ்வளவு சூப்பரா இருக்கு!!!

    ReplyDelete
  9. அருமையான பதிவு.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. பொங்கல் நினைவுகள் ரசிக்கவைக்கின்றன ராஜி. அன்று கூட்டுக்குடும்பமாக் கொண்டாடின பொங்கல் குதூகலம், இன்று ஆளுக்கொரு மூலையில் தனித்தனியே கொண்டாடும்போது கொஞ்சம் குறைவாதான் இருக்கு. கோலம் ரொம்ப அழகா இருக்கு. குழந்தைகளுக்கும் உங்களுக்கும் பாராட்டுகள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. மாசி மகளே, பங்குனி மகளே என அடுத்தடுத்த மாசங்கள்ல போஸ்ட் போடுவீங்களோ? அவ்வ்வ்

    ReplyDelete
  12. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. மண்வாசனை நிரம்பிய மரபு சார்நத கட்டுரை இது. இன்றைய இணைய உலகம் இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. தாங்கள் குறிப்பிட்டதுபோல என்னுடைய சிறுவயதில் பொங்கல் வருகிறது என்றால் அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னரே போகியன்று என்னென்ன எரிப்பது..கரும்பு வாங்க யார் அப்பாவுடன் போவது..அப்பாவின் வலது கையை யார் பிடித்துக்கொள்வது..இடது கையை யார் பிடித்துக்கொள்வது..வரும்போது இலைசுருட்டலை ஒரு கையில்..மஞ்சள் கொத்தை ஒரு கையில்.. அபபா சைக்கிளில் வைத்த கரும்புக்கட்டின் தோகை தரையெங்கும் உரசி சப்தம் எழ... எங்களப் பாருங்கள்..எங்க்ப்பா ஒரு கட்டு கரும்பு வாங்கியிருக்கோம்.. இப்படி பல நினைவுகள்.. மறுநாள் மாட்டுப்பொங்கல்.. மாடுகளோடு ஓடி.. சில்வர் சாப்பாட்டுத்தட்டை கைகளால் தட்டியபடி..அது ஒரு வசந்த காலம் ராஜி அவர்களே.. அருமையான பதிவு.. இவையெல்லாம் எதிர்காலப் பொக்கிஷத்தின் புதையல்கள்..

    ReplyDelete
  14. பொங்கல் கொண்டாட்டங்களை அழகாக விவரிச்சு இருக்கீங்க ராஜி.அருமை.
    பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. எவ்ளோ அழகா கோலம் போட்டிருக்கீங்க ராஜி.ஊர் ஞாபகம் வருது.இங்க எங்க இதெல்லாம்.
    தித்திக்கும் பொங்கல் வாழ்த்துகள் தோழி !

    ReplyDelete
  16. பொங்கலும் பதிவும் அருமை...

    நாங்களும் இப்படித்தான் பொங்குவோம்... ஆனா வெளிநாட்டில் இதெல்லாம் மிஸ் ஆகிட்டுது, பொங்குவது,படைப்பதெல்லாம் உள் வீட்டுக்குள்ளேயேதானே...

    ReplyDelete
  17. கிறுக்கின கோலம் நல்லாருக்கு -:)

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  18. உழைப்பு இல்லாமல் வாழ்த்து சொல்ல மாட்டீர்கள் போல சகோ!

    ReplyDelete
  19. //லேசா பானையை சாய்ச்சு வைக்கும் கூத்துலாம் நடக்கும். // :)

    ReplyDelete
  20. "நெஞ்சத்தில் இருந்த நாட்கள்
    நித்தமும் கலந்து பேசி
    கொஞ்சித் தன் காதல் முற்றும்
    குவிந்திட்ட நாட்கள் எல்லாம்
    பஞ்சத்தில் ஏழை பார்க்கும்
    பழங்கணக்கு ஆனது இங்கே!" - கண்ணதாசன் கவிதையைப்போல
    பொங்கலும் இன்று மலரும் நினைவுகளாக மாறி விட்டது!
    படங்கள் அழகோ அழகு!

    ReplyDelete
  21. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete