Showing posts with label புரட்டாசி விரதம். Show all posts
Showing posts with label புரட்டாசி விரதம். Show all posts

Saturday, September 22, 2018

பெருமாள் கோவிலை வலம் வரும் முறைகள் - புரட்டாசி விரதம்

பொதுவா ஏழுமலையானை கும்பிடும்போது, பகவானே! என்னைக் காப்பாத்துன்ன்னு  சொல்லி கும்பிடுறது வழக்கம். பகவான்ன்னா பகம் +ஆன் எனப் பிரிக்கலாம். ‘பகம்’ ன்னா ‘ஆறு’. ‘ஆன்’ன்னா‘உடையவன்’. ஆறு குணங்களை உடையவர் பெருமாள். நானே எல்லாம் என்கிற ‘ஞானம்’, உலகத்தை எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப் படைக்கும் ‘பலம்’, உலகிலுள்ள செல்வத்துக்கெல்லாம் சொந்தமாகிய ‘ஐஸ்வர்யம்’, எதையும் வெற்றி கொள்ளும் ‘தைரியம்’, உலகத்திலுள்ள கிரகங்கள், பொருட்களை அந்தந்த இடத்தில் இருந்து மாறவிடாமல் செய்யும் ‘ஆற்றல்’, சூரிய, சந்திரர் போல ஒளிவீசும் ‘தேஜஸ்’ (ஒளி) ஆகியவையே அந்த ஆறு குணங்கள். ஞானம், பலம், வீரியம், ஐஸ்வர்யம், ஆற்றல், தேஜஸ் ஆகிய ஆறு குணங்களுக்கு அதிபதி என்பதே பகவான் என்பதன் பொருள் ஆகும்.
புரட்டாசி மாதத்தின் சிற்ப்புகள், பகவானை எப்படிலாம் வழிபடனும்ன்னு போன பதிவில் பார்த்தோம். இந்த வாரம் பெருமாள் கோவிலுக்கு போனால் எப்படி வழிபடனும்ன்னு பார்க்கலாம். இதுக்கெல்லாமா டிப்ஸ்?! கோவிலுக்குள் போறதுக்கு முன் கை கால் அலம்பி, ராஜகோபுரத்தை வணங்கி, பலிபீடத்து முன் நமஸ்கரித்து, கோவிலை வலம் வந்து, மூலவரை வணங்கினால் முடிஞ்சுது சோலின்னு நினைக்கலாம். ஆனா, ஒவ்வொரு தெய்வத்துக்குன்னு தனிப்பட்ட வழிபாட்டு முறை இருக்கு. அதுலாம் பெரும்பாலும் எல்லாருக்குமே தெரிவதில்லை. அதனால்தான் இதுமாதிரியான பதிவு.
பொதுவா எல்லா கோவிலில்களையும் நெருங்கும்போதே  கண்களில்  படும் பிரம்மாண்டமான ராஜகோபுரத்தை தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். கோவிலுக்கு வரமுடியாதவர்கள்கூட தூரத்தில் இருந்தபடியே கோபுரத்தை தரிசனம் செய்தால் இறைவனை வணங்குவதற்கு சமமாகும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு.   அதுமாதிரியே ராஜகோபுரத்தை வணங்கி பெருமாள் கோவிலுக்குள் செல்லலாம். உடல் சுத்தம் மிக முக்கியம். இறை வழிபாட்டில் ஈடுபட, ஈடுபட மனசு தானாய் சுத்தமாகிடும். அதுக்குதான் அங்க போறது. 

கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும். அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில்தான் கோவிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றுவார்கள். அதற்கு அடுத்து பெருமாளின் வாகனமான கருடனின் மண்டபம் அமைந்திருக்கும். அதனையும் வழிபட வேண்டும். 
பெருமாள் கோயில்கள்ல முதல்ல தாயாரை தரிசனம் செய்த பிறகே பெருமாளை தரிசிக்கறது மரபு. தாயார்தான் மனமிரங்கி பெருமாள்கிட்டே நமக்காக பரிந்து பேசுவாளாம். அதனால் தாயாரை வணங்கி, அடுத்ததா, துவாரபாலகர்கள்கிட்ட மனதால் அனுமதி கேட்ட பின்னரே கருவறைக்குள் நுழையனும். மூலவரைத் தரிசித்ததும்  பிராகார தெய்வங்களை வரிசையாக கோஷ்டத்தில் உள்ளபடி (மாடங்கள்) கும்பிட்டு கோயில் பிராகாரத்தைச் சுற்றி வாங்க. ஞாபகம் இருக்கட்டும். கோயிலுக்குள்ளே எந்த தெய்வத்தையும் தனித்தனியா வலம் வரவேண்டியதில்லை. இது எல்லா தெய்வ சன்னிதிக்கும் பொருந்தும். 

பெருமாளை தரிசிக்கும்போது முதலில் பாதத்தைத்தான் பார்க்கனும்.  இப்படி சாமிக் கும்பிட ஒரு காரணமிருக்கு. மகாபாரதத்தில் போர் நடக்கும் முன்பு போரில் உதவி கேட்டு கிருஷ்ணரிடம்  முதலில் வந்த துரியோதனன்,  இன்னொருவரின் காலடியில் நான் அமருவதான்ற தலைக்கணத்தோடு தூக்கத்தில் இருந்த கிருஷ்ணரின் தலையருகில் அமர்ந்தான். ஆனால் அடுத்து வந்த அர்ஜுனனோ பாதத்தின் அருகில் அமர்ந்து காத்திருந்தான். கிருஷ்ணர் தூக்கம் நீங்கி கண் திறந்ததும் முதலில் அவருடைய அருள் பார்வை காலடியில் அமர்ந்திருந்த அர்ஜுனன்மீதே விழுந்தது. அப்போதே பாண்டவர்களின் வெற்றி உறுதியாகி விட்டது. அர்ஜுனனுக்கு வெற்றி கிடைத்தது போல, பெருமாளின் பாத தரிசனம் எல்லாருக்கும் வெற்றி தரும் என்பதால் தான் பெருமாளை முதலில் பாதத்தை பார்த்து தரிசனம் செய்ய வேண்டும். 

பிறகு லட்சுமி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆழ்வார்கள் ஆகியோரை தனித்தனியே வணங்கனும். அடுத்து, கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படும்படியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும்படியான சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யனும். 
 பெருமாள் கோவிலில் முதல்ல தீர்த்தம் தந்து, சபாரி சாத்தி, பிறகு துளசி தருவாங்க. தீர்த்தத்தை கீழே சிந்தாம் வாங்கி, சத்தமாக உறிஞ்சி குடிக்காம மெல்லமா குடிக்கனும். குடிச்சு முடிச்சதும். சிறிதளவு தலையில தடவிக்குங்க. துளசியை வாங்கி காதுல செருகிக்கறதும் சிறிதளவு உட்கொள்வதும் பெரியவர்களோட பழக்கம். ஆனா, துளசியை தேவைக்கு அதிகமாக வாங்கி கீழே இறையும்படியோ வீட்டுல அநாவசியமாகக் கிடக்கும்படியோ போடாதீங்க. தாயார் சன்னதியிலதான் குங்கும் தருவாங்க. நரசிம்மர் சன்னதியில குறிப்பிட்ட தினங்கள்ல பிரத்யேக பூஜை செய்து தீவினைகள் நீங்க தீர்த்தத்தை முகத்துல தெளிச்சுயும் விடுவாங்க. இந்த மாதிரி ஒவ்வொரு கோயில்லயும் உள்ள பித்யேக பூஜை 

பெருமாள் கோவிலுக்கு போனால் சடாரி வச்சுக்காம வரக்கூடாது, ஏன்னா, சடாரி நம்மாழ்வாரின் அவதாரம். குழந்தை தாயின் கருவறையிலிருந்து பிறப்புறுப்பு வழியா வெளிவரும்போது சடம்ன்ற வாயு வெளிப்படும். இந்த வாயு குடும்ப பாசம்ன்ற உலக மாயைக்குள் நம்மை தள்ளிவிடுது. ஒரே ஒருவர் மட்டுமே இந்த மாயையை வென்றவராய்,  பிறப்பின்போதே பூலோகத்தில்  பெருமாளால் தள்ளப்பட்டவர். அவரே நம்மாழ்வார். நம்மாழ்வார், பெருமாளின் பாதத்துக்கு இணையானவர். அதனாலேயே அவரது பாதம் பதித்த சடாரி என்னும் உலோக கலனை நம் தலையில் வைத்து ஆசீர்வதிக்கின்றனர். இதனால், பாசம்,பந்தம்ன்ற உலக மாயையிலிருந்து அவன் விலகி, இறைவனை நெருங்குவான் என்பது நம்பிக்கை. 
பொதுவா எல்லா கோவில்களிலும் இறைவனை வணங்கி முடிச்சதும், கோவில் பிரகாரத்தில் அமர்ந்து, இறைவன் திருநாமம் சொல்லி தியானிப்பது வழக்கம். ஆனால், பெருமாள் கோவிலில் அவ்வாறு அமர்வதை தவிர்க்கனும். ஏன்னா, பெருமாள் நம்மோடு லட்சுமிதேவியை அனுப்புவதால், அவளை நம்மோடு நம் வீட்டுக்கு கூட்டி போகனும்ன்றதாலதான்.  

எந்த கோவிலானாலும் இறை வழிபாடு முடிஞ்சதும் கைகால் அலம்புதல் கூடாது. வீட்டுக்கு வந்ததும் குளித்தல் கூடாது. கோவிலுக்கு செல்லும்  பக்தர்கள் இறைவனை வழிபட்டால் மட்டும் போதாது. இறைவனுக்கு பிடித்த மாதிரியும் நடந்து கொள்ளனும். கோவிலில் தரும் எந்த பிரசாதத்தையும் கண்ட இடங்களில் போடாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள இடங்களில் போடனும். கோவிலில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் எப்போதும் தியானத்தில் இருப்பதால் தொட்டு வணங்குதல் கூடாது. கோவிலில் இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர வேறெதும் பேசக்கூடாது. 
இறைவன் எளிமையையே விரும்புபவர். இறைவனை தரிசிக்க செல்லும் போது ஆடம்பரமான உடையை தவிர்ப்பது நல்லது. பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது சுக்கிரனின் சக்தி முழுமையும் கிடைக்க, அங்கு ஸ்தாபித்து இருக்கிற சுக்கிர தன்மையும் அதுக்கு தூண்டுகோலாக இருக்கிற, அங்கு பயன்படுத்துகின்ற பச்சை கற்பூரம், சந்தனம், சம்பங்கி பூ,  துளசி தீர்த்தம் போன்றவை உதவும். மேலும் உடம்பில் அசுரத் தன்மையை தூண்டக் கூடிய உணவுகளை தவிர்த்து விரதம் இருந்து தெய்வ சிந்தனையுடன் வாழ்வில் ஈடுபட்டு நல்ல வாரிசுகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் புரட்டாசியில் பெருமாள் வழிபாடு வலியுறுத்தப்பட்டது.

ஏழுகுண்டலவாடா! வெங்கடரமணா!
கோவிந்தா! கோவிந்தா!
நன்றியுடன்,
ராஜி