Showing posts with label அரவிந்தசாமி. Show all posts
Showing posts with label அரவிந்தசாமி. Show all posts

Sunday, March 24, 2019

மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே! - பாட்டு புத்தகம்

என்னதான் சந்தோசமாக இருக்கிற மாதிரி வெளிய நடிச்சாலும், சிலநேரத்துல காரணமே இன்றி ஒரு சோர்வு வரும்.  நினைவுகள் எல்லாம் அறுத்து எறிஞ்சுட தோணுற மாதிரி ஒரு உணர்வு. யார்கிட்டயாவது பகிர்ந்துக்கலாம்ன்னா இதுவும் கடந்து போகும்.  இதுவும் கடந்து போகும்ன்னு எங்களுக்கும் தெரியும். ஆனா, அதை கடக்குறதுக்குள்  வலி வேதனைன்னு அனுபவிச்சுதானே தீரனும். 


நடந்தத ஒரு கெட்ட கனவா நெனைச்சு மறந்துடு...ன்னு ஈசியா சொல்லிடுவாங்க.  மறக்குறதுன்னா எப்படி, எதை மறக்குறதாம்?!   அதுக்குன்னு நேரமெடுத்து நினைக்காம வேணூம்ன்னா இருக்கலாம். ஆனா, தறியில் ஊடுபாவு போல நினைவுகள் மனசுக்குள் அலைமோதிக்கிட்டுதான் இருக்கும்.



கொஞ்சம் முயற்சி பண்ணால் மறந்துடலாம்ப்பா..ன்னு அடுத்த அட்வைசை அள்ளி விடுவாங்க. நினைவுகள் எங்கிருக்கு?! மனசிலா?! இல்ல மூளையிலா?! நினைவுகள் என்னிக்குமே மறக்கமுடியாது. ஆனா மனசு மறத்துப்போகும். காலம் எந்த காயத்தையும் ஆற்றிவிடும்ன்னு சொல்வாங்க. அது என்னமோ உண்மைதான். காயங்கள் ஆறிடும். ஆனா,  தழும்புகள் இருக்கும். காய்ந்த மண்ன்னு நாம நினைக்கும் இடத்தில்கூட சுரண்டி பார்த்தா அடி ஈரம் இருக்கும்.  நமக்கு நாமே எப்போதாவது நினைவுகளை சுரண்டி பார்த்து சித்ரவதைப்பட்டு கொள்கிறோம். கண்ணதாசன் பாடி வச்சது உண்மைதான். நினைக்க தெரிந்த மனதுக்கு மறக்க தெரிவதில்லை - பழகிய உயிர் விலகி பற்பல ஆண்டுகள் ஆன போதும்.... 

என் காதலி.... என் கண்மணி, என் சிநேகிதிந்ன்னு சொன்னதும் தபு  கொடுக்கும் ரியாக்‌ஷன் ஏதோ எல்லாமும் சாதிச்ச மாதிரி ஒரு பெருமூச்சு. இந்த ஒற்றை வார்த்தைக்குதானே எல்லா பொண்ணுங்களும் மெனக்கெடுறது?!

நான் மறந்துட்டு ஜாலியா இருக்கேன்பா..ன்னு எவனா/ளாவது சொன்னா தூக்கி போட்டு மிதிங்க. கவிதைக்கு பொய் அழகுதான். அது வர்ணனைக்கு மட்டுமே! ஆனா, கவிஞர்கள் ஒருபோதும் பொய் உரைத்ததில்லை.   அப்படி வைரமுத்து அனுபவித்து எழுதிய பாட்டுதான் இருவர் படத்துல வரும் உன்னோடு நான் இருந்த... பாட்டு. இந்த பாட்டு இருமுறை வரும். ஒன்னு காதல், காமம் சார்ந்தது. இன்னொன்னு இனம், மொழி சார்ந்தது.  மணிரத்ணம் மனசுல நினைச்சதை வைரமுத்து வார்த்தையாக்கி இருப்பார். வார்த்தைக்கு உயிர் கொடுத்தது நடிகர் அரவிந்த சாமி.  லேசான நடுக்கத்தோடு அவர் குரல் இதயத்தின் ஆழம்வரை எதாவது மிச்சம்மீதி நினைவிருக்கான்னு தோண்டி பார்க்கும். வேற யார் இந்த கவிதையை வாசித்திருந்தாலும் இம்புட்டு உணர்வுப்பூரவமாய் இருக்குமான்னு தெரில. சின்னதான ஒரு ஹம்மிங்கோடு ஆரம்பிச்சு, பியானோ, இரவின் சில்வண்டு சத்தம், ட்ரம்ஸ், இடி, மழை...ன்னு இசை நீண்டு ஹைபிட்ச்ல முடிவில் இசையும், கவிதையும் ஒருசேர ஒலிக்கும்போது காதலின் ஆக்ரோஷம் புரியும்.  கேட்டு பாருங்க.. 


படத்துல வரும் சீன்....

அரவிந்தசாமி அனுபவிச்சு கவிதை சொல்லும் காட்சி...
என் காதலி....
என் கண்மணி...
என் சினேகிதி......

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் 
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே ! 

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம்தான் 
எண்ணூறு ஆண்டுகளா இதயத்தில் கனக்குதடி !

பார்வையிலே சில நிமிடம்..
 பயத்தோடு சில நிமிடம்!
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்!
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும் 
முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம் !

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் 
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே ! 

எது நியாயம்?!
 எது பாவம்?!
 இருவருக்கும் தோன்றவில்லை !
அது இரவா?! அது பகலா?! அதுப்பற்றி அறியவில்லை!
யார் தொடங்க?! யார் முடிக்க?!
 ஒரு வழியும் தோன்றவில்லை !
இருவருமே தொடங்கிவிட்டோம்..
 இதுவரைக்கும் கேள்வியில்லை !

அச்சம் களைந்தேன்..
 ஆசையை நீ அணிந்தாய் ! 
ஆடை களைந்தேன் 
வெட்கைத்தை நீ அணிந்தாய் !
கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும் 
கடைசியிலே அழுத கண்ணீர் கண்ணில் இன்னும் கொட்டுதடி ! 

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் 
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!
திரைப்படம்: இருவர்
நடிகர்கள்: பிரகாஷ்ராஜ், தபு’
எழுதியவர்: வைரமுத்து
வாசித்தது: அரவிந்தசாமி
இசை: ஏ.ஆர். ரகுமான்

நன்றியுடன்,
ராஜி