முருகப் பெருமானின் அருளை பெற முத்தான மூன்று விரதங்கள்ன்னு விரத நூல்களிலே சொல்லப்பட்டிருக்கு. திங்கள் அல்லது வெள்ளி என வாரம் ஒருநாள், சஷ்டி திதி என மாதம் ஒருநாள், அதில்லாம வருடத்திற்கொருமுறை கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரம் என மொத்தம் மூன்று விரதங்களை அந்நூலில் சொல்லி இருக்கு. இந்த மூன்று விரதங்களை பத்தி சுருக்கமா பார்ப்போம்...
எல்லா உயிர்களுக்கு வேண்டுவது மூன்று சுகம். இகம், பரம், வீடுபேறு இந்த மூன்று இடங்களிலும் காத்தருளும் தெய்வம் முருகன் அதனால் அப்பெருமான் மூன்று உகரங்களுடன் கூடிய முருகு என்ற சொல்லை உடைய தனிப்பெருந் தெய்வமாக விளங்குகின்றான். இந்த மூன்று நலன்களை வழங்க வல்ல தெய்வம் முருகவேல். இக நலனை வள்ளிதேவியைக் கொண்டும். பரநலனை தெய்வயானைய்யை கொண்டும், முக்தி நலனை வேலாயுதத்தைக் கொண்டும் நமக்கு அருள் புரிகின்றான். எனவே முருகப் பெருமானை பயன்கருதாது மெய்யன்புடன் வழிபட்டால் இம்மூன்று பேற்றையும் அடையலாம். அழகு உறையும் குன்றுகளிலெல்லாம் அழகன் முருகன் குடியிருப்பதாய் எண்ணி விழாவெடுத்து வழிபடுகின்றோம்.
சுக்கிர வார விரதம்...
வெள்ளிக்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருக்கலாம். இந்த விரதத்தை ஐப்பசி மாத முதல் வெள்ளிக்கிழமையில் ஆரம்பிக்கனும். அன்றைய தினம் உபவாசம் இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். இதும் முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் உணவை உட்கொள்ளலாம்.. இதுமாதிரி மூன்று வருடம் தொடர்ந்து விரதமிருந்தால் பிறவி பெருங்கடலை கடக்கலாம்.
கார்த்திகை விரதம்.....
கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் முதலாக (திருக்கார்த்திகை) மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப் பெருமானைக் குறித்துக் கைக்கொள்ளப்படும் விரதம் இது. உபவாசம் இருத்தல் நலம். முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். அல்லது ஒருவேளை மட்டும் உணவு உட்கொள்ளலாம். மாலை ஐந்து மணிக்கு மேல் கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளே விரத நாளாகும். திருக்கார்த்திகைத் தீபம் என்று இத்தினத்தில் தீபங்களை ஏற்றிவைத்து ஜோதிவடிவில் இறைவனை வழிபடுவர். சிவராத்திரி நாளில் பிரமவிஷ்ணுக்களுக்குத் தமது சோதிவடிவை இறைவன் காட்டிய பொழுது அவ்வடிவைத் தமக்கு என்றும் காட்டியருள வேண்டுமென அவர்கள் வேண்டினர். அதற்கு இறைவன் திருக்கார்த்திகை நாளில் மீண்டும் இவ்வரவை காட்டுவோம் என்றார்.அதனை நினைவு கூர்ந்தே கார்த்திகைத் தீபநாள் கொண்டாடப்படுகின்றது. கார்த்திகை கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் ஆரம்பித்து ஒவ்வொரு கிருத்திகைக்கும் விரதம் இருக்கலாம். இவ்வாறு 12 வருடம் கடைப்பிடித்தால் மறுமை இல்லாத முக்திபேறு கிடைக்கும்.
தமிழ்கடவுளும், குறிஞ்சி நிலத்து தலைவனுமான முருகனுக்குரிய மூன்று விரதங்களில் மிக முக்கியமானது ஸ்கந்தஷஷ்டி விரதம். ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையையடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டி திதி வரையிலான ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதமே ஸ்கந்தஷ்டி விரதமாகும். சகல செல்வங்களையும், சுகபோகங்களையும் தரவல்லது இவ்விரதம். முக்கியமாக, குழந்தைசெல்வத்தை வழங்குவது. முருகபக்தர்கள் ஒரு கடுந்தவமாகவே இவ்விரதத்தைக் கருதி ஆறு நாட்களும் முழுப்பட்டினியாக உபவாசதிருத்தல் இருப்பர். முதல் நாள் அமாவாசையன்றே ஒரு நேர உணவுண்டு விரதமாக இருந்து மறுநாளைய உபவாசமிருப்போரும் உண்டு.
இதுப்போல ஆறு அல்லது 12 வருடம் விரதமிருந்தால் முப்பேறும் கிட்டும்... குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருந்தாலும் நம் நினைவுக்கு வருவது அறுபடை வீடும், மருதமலை(கோவை), வெள்ளி மலை (குமரி), வள்ளி மலை (ஆற்காடு), சென்னிமலை(ஈரோடு), எட்டுக்குடி(நாகப்பட்டினம்) பத்துமலை (மலேசியா), கதிர்காமம்(இலங்கை) மாதிரியான சில கோவில்களே! நாளையிலிருந்து தினம் ஒன்றாக ஒவ்வொரு முருகன் கோவில் பத்தி பார்க்கலாம்....
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
ராஜி.









