Showing posts with label சஷ்டி விரதம்.. Show all posts
Showing posts with label சஷ்டி விரதம்.. Show all posts

Saturday, October 21, 2017

முப்பேற்றை அளிக்கும் முருகன் வழிபாடு - கந்த சஷ்டி


உடலை வருத்தி செய்யும் தவத்தால் ஒரு பயனும் இல்லை. மனதார கடவுளை நினைத்து வழிபட்டு, இயன்றளவுக்கு தானங்கள் செய்தாலே இறைவனை அடையலாம். ஆனாலும், உடல் நலத்துக்காகவும், மனதை ஒருமுகப்படுத்தவும் விரதங்கள் அனுஷ்டிக்கப்படுது. தீமிதி, ஒருபொழுது இரு, அலகு குத்துன்னு எந்த தெய்வமும் சொல்லல. ஒருபொழுது இருப்பதுலாம் உடலை சுத்தம் செய்ய... மத்த நேர்த்திகடன்லாம் மனிதனால் உருவாக்கப்பட்டதே அன்றி இறைவன் வகுத்ததல்ல.  இறைவன் சொல்வதெல்லாம் தூய மனதுடன், அடுத்த உயிர்களை மதித்தலும், காதலும்தான்... மத்தபடி நாம் செய்யும் அனைத்து விழாக்களும், விரதங்களும், நேர்த்திகடன்களும் நமது திருப்திக்கே!

முருகப் பெருமானின் அருளை பெற   முத்தான மூன்று விரதங்கள்ன்னு விரத நூல்களிலே சொல்லப்பட்டிருக்கு.  திங்கள் அல்லது வெள்ளி என வாரம் ஒருநாள்,  சஷ்டி திதி என மாதம் ஒருநாள், அதில்லாம வருடத்திற்கொருமுறை கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரம் என மொத்தம் மூன்று விரதங்களை அந்நூலில் சொல்லி இருக்கு.  இந்த மூன்று விரதங்களை பத்தி சுருக்கமா பார்ப்போம்...

 எல்லா  உயிர்களுக்கு வேண்டுவது மூன்று சுகம். இகம், பரம், வீடுபேறு இந்த மூன்று இடங்களிலும் காத்தருளும் தெய்வம் முருகன் அதனால் அப்பெருமான் மூன்று உகரங்களுடன் கூடிய முருகு என்ற சொல்லை உடைய தனிப்பெருந் தெய்வமாக விளங்குகின்றான். இந்த மூன்று நலன்களை வழங்க வல்ல தெய்வம் முருகவேல்.  இக நலனை வள்ளிதேவியைக் கொண்டும். பரநலனை தெய்வயானைய்யை கொண்டும், முக்தி நலனை வேலாயுதத்தைக் கொண்டும் நமக்கு அருள் புரிகின்றான். எனவே முருகப் பெருமானை பயன்கருதாது மெய்யன்புடன் வழிபட்டால் இம்மூன்று பேற்றையும் அடையலாம்.  அழகு உறையும் குன்றுகளிலெல்லாம் அழகன் முருகன் குடியிருப்பதாய் எண்ணி  விழாவெடுத்து வழிபடுகின்றோம்.
சுக்கிர வார விரதம்...
வெள்ளிக்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருக்கலாம். இந்த விரதத்தை ஐப்பசி மாத முதல் வெள்ளிக்கிழமையில் ஆரம்பிக்கனும்.  அன்றைய தினம் உபவாசம் இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். இதும் முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் உணவை உட்கொள்ளலாம்.. இதுமாதிரி மூன்று வருடம் தொடர்ந்து விரதமிருந்தால்  பிறவி பெருங்கடலை கடக்கலாம். 
கார்த்திகை விரதம்.....

கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் முதலாக (திருக்கார்த்திகை) மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப் பெருமானைக் குறித்துக் கைக்கொள்ளப்படும் விரதம் இது. உபவாசம் இருத்தல் நலம். முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். அல்லது ஒருவேளை மட்டும் உணவு உட்கொள்ளலாம்.   மாலை ஐந்து மணிக்கு மேல் கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளே விரத நாளாகும். திருக்கார்த்திகைத் தீபம் என்று இத்தினத்தில் தீபங்களை ஏற்றிவைத்து ஜோதிவடிவில் இறைவனை வழிபடுவர். சிவராத்திரி நாளில் பிரமவிஷ்ணுக்களுக்குத் தமது சோதிவடிவை இறைவன் காட்டிய பொழுது அவ்வடிவைத் தமக்கு என்றும் காட்டியருள வேண்டுமென அவர்கள் வேண்டினர். அதற்கு இறைவன் திருக்கார்த்திகை நாளில் மீண்டும் இவ்வரவை காட்டுவோம் என்றார்.அதனை நினைவு கூர்ந்தே கார்த்திகைத் தீபநாள் கொண்டாடப்படுகின்றது. கார்த்திகை கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் ஆரம்பித்து ஒவ்வொரு கிருத்திகைக்கும்  விரதம் இருக்கலாம். இவ்வாறு 12 வருடம் கடைப்பிடித்தால் மறுமை இல்லாத முக்திபேறு கிடைக்கும்.

சஷ்டி விரதம்..
தமிழ்கடவுளும், குறிஞ்சி நிலத்து தலைவனுமான முருகனுக்குரிய  மூன்று விரதங்களில் மிக முக்கியமானது ஸ்கந்தஷஷ்டி விரதம். ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையையடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டி திதி வரையிலான ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதமே  ஸ்கந்தஷ்டி விரதமாகும். சகல செல்வங்களையும், சுகபோகங்களையும் தரவல்லது இவ்விரதம். முக்கியமாக, குழந்தைசெல்வத்தை வழங்குவது.  முருகபக்தர்கள் ஒரு கடுந்தவமாகவே இவ்விரதத்தைக் கருதி ஆறு நாட்களும் முழுப்பட்டினியாக உபவாசதிருத்தல் இருப்பர். முதல் நாள் அமாவாசையன்றே ஒரு நேர உணவுண்டு விரதமாக இருந்து மறுநாளைய உபவாசமிருப்போரும் உண்டு.  

 முன்பெல்லாம் பிரதமையிலன்று அதிகாலை நீராடித் தூய ஆடையணிந்து க முருகன் ஆலயம் சென்று அங்கேயே ஆறு நாட்களும் அன்ன ஆகாரங்கள் எதுவுமின்றி இறைவழிபாடு, முருகநாம்பஜனை, நாமஐபம், புராணபடனம், புராணம் கேட்டல் என்றித்தகைய புனித காரியங்களுடன் அங்கேயே தங்கியிருப்பர். அவசர யுகத்தில் அவரவர் வசதிக்கேற்ப,விரத முறைகளும் தளர்த்தப்பட்டிருக்கு. காலையில் நீராடி, உபவாசமிருந்தோ அல்லது பால் பழம் அருந்தியோ அல்லது ஒரு வேளை உண்டோ விரதமிருந்து மாலையில் முருகனை தரிசித்து அன்றைய விரதத்தை முடிப்பர். 

ஏழாம் நாள் சஷ்டியன்று அதிகாலையில் நீராடி, உபவாசமிருந்து, வீட்டில் படையலிட்டு மாவிளக்கேற்றி, அன்னதானமிட்டு, சூரசம்ஹாரம் நிகழ்வினை கண்டபின் தங்களுடைய விரத்தை முடிப்பர்.  அன்றைய தினம் கண்விழித்து முருகன் நினைவாகவே இருத்தல் வேண்டும். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போல முருகனுக்கு ஸ்கந்த சஷ்டி விழாவாகும். அன்றைய இரவு கந்த புராணம், கந்த சஷ்டி கவசம், ஸ்கந்தகுரு கவசமென பாராயாணம் செய்தல் நலம்
இதுப்போல ஆறு அல்லது 12 வருடம் விரதமிருந்தால் முப்பேறும் கிட்டும்... குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருந்தாலும் நம் நினைவுக்கு வருவது அறுபடை வீடும், மருதமலை(கோவை), வெள்ளி மலை (குமரி), வள்ளி மலை (ஆற்காடு), சென்னிமலை(ஈரோடு), எட்டுக்குடி(நாகப்பட்டினம்) பத்துமலை (மலேசியா), கதிர்காமம்(இலங்கை) மாதிரியான சில கோவில்களே! நாளையிலிருந்து தினம் ஒன்றாக ஒவ்வொரு முருகன் கோவில் பத்தி பார்க்கலாம்....

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
நன்றியுடன், 
ராஜி.