Showing posts with label சுந்தர காண்டம். Show all posts
Showing posts with label சுந்தர காண்டம். Show all posts

Wednesday, March 13, 2019

அனுமனுக்கு வால்மீகி காட்டிய நன்றிக்கடனே சுந்தர காண்டம் - தெரிந்த கதை, தெரியாத உண்மை

ராமாயணத்தை ஏழு காண்டங்களாக பிரிச்சு வச்சிருக்காங்க. எல்லார் வீட்டிலும் இருக்க வேண்டியது சுந்தர காண்டம். எதாவது கஷ்டமான சூழலில் சிக்கி தவிக்கும்போது சுந்தர காண்டத்தினை பாராயணம் செய்தால் நம்ம கஷ்டம்லாம் விலகும் என்பது நம்பிக்கை. சுந்தர காண்டம் என்பது அனுமன் சீதையை தேடி இலங்கைக்கு போனது, அங்க சீதையை கண்டது, ராமர் வருவார் என தைரியமளித்தது, அவளிடம் கணையாழி பெற்று திரும்பியது, ராம தூதன் என ராவணன் அறிந்து, அனுமன் வாலில் தீ வைப்பது, இலங்கை தீக்கிரையாக்கியது, கண்டேன் சீதையை என ராமனிடம் உரைத்தது வரையிலான  செய்திகளை உள்ளடக்கியதாகும்.

ராமாயண கதையிலேயே சுந்தர காண்டத்துக்கென தனி இடம் உண்டு.  பாராயணம் என்றால் மனம் ஒன்றி படிப்பது என பொருள். சுந்தர காண்டத்தினை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். தீமைகள் விலகி, நன்மைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை. சுந்தர காண்டத்தினை படிப்பது ராமாயணம் முழுவதையும் படிப்பதற்குச் சமம். பிரச்சனைகளில் சிக்கி, கலங்கி தவிக்கும்போது சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்வதால் மனத் தெளிவும், அமைதியும் ஏற்படும். வால்மீகி சம்ஸ்கிருதத்தில் எழுதிய சுலோகங்களைப் படிப்பதுதான் பாராயண முறையாகும். சம்ஸ்கிருத எழுத்துக்களைப் படிக்க முடியாதவங்க சுலோகங்களின் தமிழ்(தாய்மொழி) எழுத்து வடிவங்களைப் படிக்கலாம்.
சுந்தர காண்டத்தின் குறிப்பிட்ட சில அத்தியாயங்களை குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் படிக்கலாம் என நம் முன்னோர் வகுத்து வைத்திருக்கிறார்கள். சுந்தர காண்டம் முழுசையும் படிக்குறதுலாம் இந்த எல்லாராலும் ஆகாது, சில பகுதிகளையாவது படிக்கட்டுமேன்னுகூட இந்த  ஏற்பாடு நடைமுறைக்கு வந்திருக்கலாம்.    சீதையைக் கண்டுப்பிடிக்க முடியாமல் அனுமன் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ளலாமாவென சிந்திக்கிறார். பிறகு அதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணிப் பார்த்து, ராமரை தியானித்து உற்சாக மனநிலையைப் பெறுவதை 13வது பாடல் விளக்குகிறது. இதில் மொத்தம் 73 சுலோகங்கள் இருக்கு. தினம் பத்து சுலோகங்கள்வீதம் படித்தால் ஒரு வாரத்தில் இந்த பாடலை படித்து முடிக்கலாம். அடுத்து  மனச்சோர்வுடன் இருந்த சீதைக்கு சில நல்ல சகுனங்கள் தென்படுவதை 29வது பாடல் விவரிக்கிறது.  இதில் இருப்பது எட்டு சுலோகங்கள்தான். தினமும் இதைப் பாராயணம் செய்வது அனைவராலும் முடியும்.  மனச்சோர்வாய் இருக்கும்போது இந்த பாடலை படிக்கலாம்.  
#Sita maa giving Ring to #Hanuman Ji


ராமாயணம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம் பிரிக்கப்பட்டுள்ளது.  ராமாயணத்தின் நாயகன் ராமன், நாயகி சீதை, தியாகத்தின் உருவங்களான லட்சுமணன், பரதன், ஊர்மிளா, மண்டோதரி, வில்லனான ராவணன் என எந்த காண்டத்துக்கான தலைப்பிலும் இவர்களது பெயர்கள் இருக்காது.  ஆனால், வால்மீகி அனுமனின் அரிய செயல்கள் அனைத்தையும் கொண்ட ஒரு பகுதிக்கு அனுமன் பெயரை தாங்கிய தலைப்பில் வைக்க விரும்பினார். இதற்கு அனுமன் மறுப்பு தெரிவித்தார். அப்படியே ஆகட்டுமென வால்மீகி இப்பகுதிக்கு சுந்தர காண்டம் எனப் பெயரிட்டார்.   பெயர்காரணத்தினை வால்மீகியிடம் அனுமன் கேட்க சுந்தரம் என்றால் அழகு. எனவே இது ஒரு அழகான (சிறப்பான) காண்டம் எனப் பொருள் கொள்ளலாம் என வால்மீகி சொல்ல, அனுமன் மனம் சமாதானமடைந்தது.
வனவாசம் முடித்து வந்த ராமனுக்கு பட்டாபிஷேகம் முடிந்தது. அனைவரும் மகிழ்ந்திருந்த ஒரு அதிகாலை வேலையில் ராமன் வேடிக்கை பார்க்க, சீதை வெள்ளி மணி ஒலிக்கு ஈடாக சிரிப்பினை சிந்த,  பரதன், லட்சுமணன், சத்ருக்ணன் துரத்த, அனுமன் அங்குமிங்குமாய் ஓடிக்கொண்டிருந்தான். சகோதரகள் மூவர் கையில் ஸ்நான எண்ணெயும், ஸ்நான பொடியும் இருந்ததைக்கண்ட அன்னையர் மூவரும் என்னவென்று விசாரிக்க, இன்று அனுமனது பிறந்த நாள் அதனால் ஸ்நானம் செய்யவேண்டி அழைத்தால் மறுக்கிறார் என அன்னையர்களிடம் மூவரும் புகார் பட்டியல் வாசித்தனர்.  அன்னையரும் ஸ்நானம் செய்ய மறுத்ததன் காரணத்தை அனுமனிடம் கேட்க, எண்ணெய் ஸ்நானம் செய்ய நேரம் பிடிக்கும், அத்தனை காலம் என்னால் ராமனை பிரிந்திருக்கா ஆகாதென அனுமன் சொல்ல, உன் அருகிலேயே நான் இருக்கிறேன் என ராமன் வாக்களிக்க அனுமன் ஸ்நானம் செய்து முடித்தார். 
Bhakta Anjaneya
பட்டாடை உடுத்தி, அணிகலன் அணிந்து ராமனை பணிந்து நின்றார் அனுமன். அரண்மனை விழாக் கோலம் பூண்டது. அண்மையில்தானே ராமர் பட்டாபிஷேகம் முடிந்தது. பின்னர் எதற்காக இவ்விழாக் கோலம் என்பதை அறிய அனைவரும் காத்திருந்தனர்.  இந்நிலையில் அரசவை கூடியது. அப்பொழுது, சுந்தரா! என்றழைத்தபடியே அஞ்சனை அரண்மனையுள் நுழைந்தாள். தன் மகன் அனுமனின் அழகிய திருக்கோலம் கண்டாள். அனுமனும் ஓடி வர, ஆரத்தழுவிக் கொண்டாள் அனுமனின் அன்னை. ராமரும் சீதையும் பரிசுகளை அனுமனுக்கு வழங்கி, அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். தனக்குப் பிறந்த நாளா என்று ஆச்சரியக்குறி தோன்ற கண்களை விரித்து பார்த்தார்  அதைவிட, ஆச்சர்யம் அஞ்சனை தன்னை சுந்தரா! என அழைத்தது. அன்னையிடம் காரணம் கேட்டார். 
anjana devi and son hanuman.
நீ பிறந்தபோது அழகிய முகத்தோடுதான் இருந்தாய். அதனால் சுந்தரா எனப்பெயரிட்டு அழைத்து வந்தோம். ஒருநாள் கனியென நினைத்து சூரியனை பிடித்து விழுங்க, அப்போது ஏற்பட்ட போரில் இந்திரன் உன் தாடையை கதாயுதத்தால் தாக்க உனது தாடை பெரியதாகியது. பெரிய தாடையை உடையவன் என்ற பெயர்படும்படி உனது பெயர் அனுமன் என நிலைத்தது என அஞ்சனை சொல்லி முடித்தாள். இதைக்கேட்டதும், அனுமன் ஓட்டமெடுத்தார். அந்த ஓட்டம் வால்மீகியிடம் போய் முடிந்தது. சுந்தர காண்டத்திற்கு பெயர் மாற்றும்படி வால்மீகியிடம் கேட்டார். அது நடவாத காரியம். ராமாயணம் எழுதி முடித்தாகிவிட்டது என வால்மீகி சொல்லி, அனுமனை தேற்றினார். 

இந்த பஞ்சாயத்து ராமரிடம் சென்றது. ராமர் வால்மீகியிடம் அனுமனுக்காக பரிந்து பேசினார். அதற்கு வால்மீகி, சுந்தரன் என்ற சொல்லுக்கு அழகன் என்ற அர்த்தம் மட்டுமில்லாது காதலரிடையே தூது செல்பவன், அரச தூதன் என்ற  அர்த்தமுண்டு. நீ இரண்டு பொறுப்புக்களையுமே ஏற்றுச் செயல்பட்டிருப்பதால் இதற்கு  சுந்தர காண்டம் எனப்பெயரிடப்பட்டது  சுந்தரம் என்றால் குரங்கு என்று ஒரு பொருளும் உண்டு.  அதுமட்டுமில்லாமல், இந்த பகுதிக்கு சுந்தர காண்டம் என அனுமன் பெயரினை வைக்க எனது நன்றிக்கடனும் ஒரு காரணம் என வால்மீகி ராமரிடம் கூறினார். இதென்ன புதுக்கதை என வால்மீகியிடம் ராமன் விசாரிக்க.. வால்மீகி நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தார்.

பலசாலி, சிரஞ்சீவி, ராம பக்தர், பிரம்மச்சாரி... என அனுமனை பற்றி பல தகவல்கள் நமக்கு தெரியும். ஆனா, அவர் ராமாயணத்தை எழுதி இருக்கார்ன்னு நம்மில் கித்னா பேருக்கு மாலும்?!  ராமா! அனுமன் சிறந்த எழுத்தாளரும்கூட...    வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியபின்  ஒருநாள் இமயமலைச் சாரலில் ஒரு சிகரத்தின் மீது ஏறி நடந்துகொண்டிருந்தேன்,. அந்த சிகரத்திலிருந்த பாறைகளின்மீதும், கற்களின்மீதும் எழுதப்பட்டிருந்ததை படிக்க நேர்ந்தது.  அந்த வாசகங்கள்லாம் தங்களின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திரித்திருந்தன. அவை, நான் எழுதிக்கொண்டிருக்கும் ராமாயண வரிகளைவிட, கவிதை நயமும் கருத்து நயமும் உள்ளவையாக இருந்தது.  பிரமித்து நின்ற நான். அதை எழுதியவர் யார் என அங்கு தேடினேன். அங்கு, அனுமன் யோகநிஷ்டையில் இருந்தபடி ஸ்ரீராம நாமத்தை ஜெபித்துக்கொண்டிருந்தார். அனுமன் நிஷ்டையிலிருந்து விழித்தெழுந்து, வால்மீகியை வணங்கி நின்றார். அவரிடம், இங்க பாறைகளில் எழுதியவர் யாரென கேட்க,  ராமனின் கதை யுகம்யுகமாய் பேசப்படவேண்டி நான்தான் நான் ராமனை சந்தித்தது முதல் பட்டாபிஷேகம் வரையிலான நிகழ்ச்சிகளை  நகத்தால் பாறைகளில் எழுதினேன். ஆனாலும் தாங்கள் எழுதிக்கொண்டிருக்கும் ராமாயணத்துக்கு இது ஈடாகாதெனவும், எதாவது தவறிருந்தால் எடுத்துச்சொல்லும்படி அனுமன் கேட்டார். சிறப்பானதொரு காவியத்தை படைத்துவிட்டு தவறிருந்தால் சொல்லுமாறு நின்ற அவரது பணிவினையும், தங்கள்மீதான பக்தியினையும்  எண்ணி என் கண்களில் கண்ணீர் பெருகியது.
☀ SHRI HANUMAN ॐ ☀ “Those persons who always chant “Shri Ram”, “Shri Ram”, without any doubt would get victory as well as salvation and happiness.”~Ram sthava Raja
எனது கண்ணீருக்கான காரணத்தை அனுமன்  கேட்க, இந்த கருத்தாழமிக்க உன்னுடைய ராமாயணத்தை உலகோர் படிக்கும்போது, என் ராமாயணம் காலப் போக்கில் மறைந்துவிடும்'' என நான் பதிலுரைத்தேன்.  என் பதிலைக்கேட்ட மாத்திரத்தில், அனுமனின் கண்களில் தாரை தாரையாக நீர் சுரந்தது. உணர்ச்சிவசப்பட்ட அனுமன், பாறைகளில் தான் செதுக்கியிருந்த ராமாயண காவிய வரிகளை தனது வாலால் துப்புரவாக அழித்துவிட்டார். பின்னர் என்னை வணங்கி, ''தாங்கள் எழுதிய ஸ்ரீராமக்காவியமே மிகச் சிறப்பானது! காலத்தால் அழியாதது! நான் செதுக்கியது வெறுமே என் உணர்ச்சிகளின் பிரதிபலிப்புதான். தாங்கள் உருவாக்க்கிக்கொண்டிருக்கும் காவியமே ராமனும் பாராட்டிய காவியம். அதற்கு ஈடு இணை எதுவும் இருக்காது'' இருக்கவும்கூடாதென அமைதியுடன் கூறினார். அனுமன் தான் எழுதியதை அழித்தாலும், அந்த பாடல்கள் என் மனதில் பதிந்துவிட்டது. அவரது அந்த தியாகத்தினை எண்ணி அவர் உங்களை சந்தித்தது முதல் சீதையினை கண்ட தகவலை தங்களிடம் சொல்லும்  வரையிலான பகுதிக்கு அவரது பெயரினை சூட்ட ஆசைப்பட்டேன். ஆனால் அனுமன் மறுக்கவே, சுந்தரன் என அஞ்சனை அன்னை அழைத்த பெயராலேயே   சுந்தர காண்டம் என பெயரிட்டு எனது நன்றிக்கடனை தீர்த்துக்கொண்டேன் என வால்மீகி ராமனிடம் சொன்னார். இதைக்கேட்ட ராமனும் சுந்தரகாண்டத்தினை படிப்பவர்களுக்கு தீவினை அண்டாது, தன்னம்பிக்கை பிறக்கும்.  திருமணம் கைகூடும். ஆரோக்கியம், வாக்கு சாதுர்யம், உடல் வலிமை, திறமை, துணிச்சல் பெறலாம் என அருளினார். 

"யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்சலிம்
பாஷ்ப வாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்."

எங்கெல்லாம் ராமனின் கதை பாட/சொல்ல/கேட்கப்படுகிறதோ அங்கெல்லாம் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி வணங்கிய நிலையில் கண்களில் நீர் வழிய ராமனின் கதையைக் கேட்டபடி அனுமன் நின்றிருப்பாராம் ஆஞ்சனேயர்!  பரந்து விரிந்திருக்கும் கோவில்களிலும், உயர்ந்து நிற்கும் சிலைகளிலும் கடவுள் இருப்பதில்லை. நம்பிக்கை கொண்டோரின் உள்ளத்திலேதான் கடவுள் இருக்கிறார். இதைதான் அனுமன் கதை நமக்கு சொல்லுது... நம்பிக்கைதானே எல்லாம்!?

நன்றியுடன்,
ராஜி.