Showing posts with label திருத்தணி. Show all posts
Showing posts with label திருத்தணி. Show all posts

Wednesday, September 05, 2018

ஆசிரியர் தின கொண்டாட காரணமானவர்

நம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொருவரும் நமக்கொரு பாடத்தை கத்து கொடுத்துட்டு போவாங்க. அவங்கக்கிட்ட இருந்து பாசம், அன்பு, உழைப்பு, நேர்மை, துரோகம்ன்னு விதம்விதமா வாழ்க்கை  பாடத்தை கத்துக்குவோம்.  வாழ்க்கை பாடத்தை நாமளே கத்துக்கிட்டாதான் உண்டு. ஆனா, ஏட்டு படிப்பை கத்துக்கொடுக்க ஆசிரியர்கள் வேணும். அந்த ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமா ஒவ்வொரு வருடமும் செப் 5 ஆசிரியர் தினமா இந்தியாவில் கொண்டாடப்படுது. அது ஏன் செப் 5ல கொண்டாடுறாங்கன்னு தெரிஞ்சுக்கனும்ன்னா, முன்னாள் ஜனாதிபதி தத்துவமேதை டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்களை பத்தி தெரிஞ்சுக்கனும். . 
டாக்டர் ராதாகிருஷ்ணன்  அன்றைய   திருத்தணிக்கு அருகிலிருக்கும்  சர்வபள்ளின்ற ஊரில்  1888ம் வருடம், செப்டம்பர் 5ம் நாள் தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.  இவர் தந்தை பெயர் வீராசாமி, தாயார் சீதம்மா. இவர் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர். ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவர், அரசு உதவித்தொகையில்தான் தனது படிப்பை தொடர்ந்தார்.  ஆரம்பக் கல்வியைத்  திருவள்ளூரிலுள்ள ‘கௌடி’  பள்ளியிலும்,  பின்னர் திருப்பதியிலுள்ள ‘லூத்தரன் மிஷன் உயர் பள்ளியிலும்’ படித்தார். அவர் வேலூரிலுள்ள ஊரிஸ் கல்லூரியில் சேர்ந்த பின், சென்னையிலுள்ள கிறிஸ்துவர் கல்லூரிக்கு மாறினார். தத்துவத்தை முதல் பாடமாக தேர்ந்தெடுத்த அவர், அதில் இளங்கலை (பி.ஏ) மற்றும் முதுகலைப் பட்டமும் (எம்.ஏ) பெற்றார்.
தன் கல்லூரி படிப்பை முடித்ததும்  கல்வித் துறையில் அரசு ஊழியராகச் சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் 1909 ஆம் ஆண்டு தத்துவ இயல் துறையில் பணிக்குச் சேர்ந்தார். கல்வி கற்பித்தலில் பட்டம் பெறுவதற்கு சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியில் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்ததும் சென்னை மாநிலக் கல்லூரியே  இவரை சேர்த்துக்கொண்டது. டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன், மாணவர்களால் சிறந்த ஆசிரியர் என்று அழைக்கப்பட்டார். மாணவர்களின் நலனிலும், முன்னேற்றத்திலும், தனி அக்கறை காட்டினார். ஆசிரியர்களுக்கு எல்லாம் ஆசிரியராக சிறந்து  விளங்கினார்.
ஆசிரியர் பணியோடு ’பன்னாட்டு அறிவியல்’, ‘ஆசியவியல் மறுசீராய்வு’ போன்ற பன்னாட்டு இதழ்களுக்கு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.  மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவ இயல் பேராசிரியராக 1918ம் ஆண்டு பொறுப்பேற்றார். பின்பு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும்போது,  மகாகவி இரவீந்தரநாத் தாகூருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றார். அங்கு தத்துவ இயல் பேரவையைத் தோற்றுவித்தார். அந்தப் பேரவையில் நிகழ்ந்த முதல் சொற்பொழிவாற்ற இரவீந்திரநாத் தாகூரை அழைத்தார்.
லண்டனில்  நடைபெற்ற பிரிட்டிஷ் பேரரசுப் பல்கலைக்கழகங்களின் பேரவைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு, கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சார்பாக கலந்து கொண்டார். அங்கு, மான்செஸ்டர் கல்லூரியில் சொற்பொழிவாற்றினார். அவரது அறிவார்ந்த சொற்பொழிவுகள் அங்கு கூடியிருந்த அறிஞர் பெருமக்களிடையே  பாராட்டினை பெற்றது. சிகாகோ நகரில் ஹாஸ்கெல் சொற்பொழிவுகளை ஆற்றினார். ஹார்வார்டில் நடைபெற்ற பன்னாட்டுத் தத்துவப் பேரவையில் கலந்து கொண்டு, ‘உலக நாகரிகங்களை வளர்ப்பதில் தத்துவத்தின் பங்கு’ன்ற தலைப்பில்  சொற்பொழிவை நிகழ்த்தினார்.
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் முதுகலை கல்விக் கழகத்தின் தலைவராகவும், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராகவும், பல்கலைக்கழக அமைப்பாண்மைக் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். புகழ் பெற்ற பெனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெற்றர். அப்போது, நாட்டின் விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. அடக்கு முறையை எதிர்த்து மாணவர்கள் கிளர்ந்து எழுந்தனர்; பிரிட்டிஷ் அரசு பல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவத்தை அனுப்பி, மாணவர்களை ஒடுக்க முயன்றது. ஆனால் துணை வேந்தராய் இருந்த டாக்டர். எஸ்.இராதாகிருஷ்ணன், நாட்டுப்பற்று மிக்க நல்லறிஞர் என்பதால், மாணவர்கள் சார்பாக நின்றார். இராணுவம் பல்கலைக் கழகத்திற்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்தினார்.
திருத்தணியில் அவரை கௌரவிக்கும்பொருட்டு... 
வால்டேரில் உள்ள ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றிய போது, அந்தப் பல்கலைக்கழகத்தினைத் தனித்தகுதி பெற்ற கல்வி நிறுவனமாக உயர்த்தினார். அப்பல்கலைக்கழகத்தில் சிறந்த நூலகத்தையும் உருவாக்கினார். கீழ்த்திசைச் சமயங்களுக்கான பேராசிரியராக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பிரிட்டிஷ் கழகத்தில், 1937 ஆம் ஆண்டு புத்தரைப் பற்றி ‘தலைமை ஞானி’ என்ற தலைப்பில் உரை நிகழ்ந்தினார்.
டாக்டர். ராதாகிருஷ்ணன் பெயரில் ஆண்கள் பள்ளி
ந்தியா விடுதலை பெற்றவுடன் டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் தலைமையில் கல்வி நலன் சார்ந்த பத்து உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவை இந்தியாவில் உள்ள இருபத்தைந்து பல்கலைக்கழகங்களுக்கு அழைத்துச் சென்றும், நேரில் ஆய்வு செய்தும், சிற்ப்பான அறிக்கையை அரசுக்கு அளித்தார். அந்த அறிக்கை தற்கால இந்தியக் கல்வி முறைக்கு நல்வழிகாட்டும்  துணையாக இன்றும் விளங்குகிறது. உயர்கல்வி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் களைவதற்கும், கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும் அக்குழுவின் பரிந்துரைகள் துணை நிற்க்கும். ஆனா, இக்குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளின்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவை செயல்படுத்தப்படாததால், உரிய பலனைத் தராமல் தூசு படிந்து இன்றைய கல்வித்துறையே பாழ்ப்பட்டு கிடக்குது.
ரஷ்யாவிற்கான இந்தியத் தூதராக டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் 1949ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். “இந்த மனிதர் பிற வழக்கமான தூதுவர்களைப் போல இல்லை. இவர் தனது இதயத்தில் மனித நேயமும், அன்பும் கொண்டவர்” என்று ரஷ்ய நாட்டுத் தலைவர் ஸ்டாலின் இவரைப் புகழ்ந்துள்ளார். இந்தியக் குடியரசின் துணைத்தலைவராக டாக்டர். இராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 1954 ஆம் ஆண்டு ‘பாரத் ரத்னா’ விருது வழங்கப்பட்டது. இந்தியக் குடியரசுத் தலைவராக 1962 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டாக்டர். ராதாகிருஷ்ணன் ஆண்கள் பள்ளியின் ஒரு தோற்றம்
1967ல் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.  தனது 86வது வயதில், ஏப்ரல் 17, 1975ம் ஆண்டு சென்னையில் காலமானார். இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் நாளை ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுது. இவரது பெயரில் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுது. 
42 முறை பட்டம் பெற்ற இவருக்கு பாரதிய வித்யாபவன் தலைவர் கே.எம் முன்ஷி, டாக்டர். எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு ‘பிரம்ம வித்யா பாஸ்கரர்’ என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். சாகித்திய அகாடமி, பென் அனைத்திந்திய மையம் போன்ற உயர் நிறுவனங்களைத் தமது அறிவாண்மையால் நடத்திச் சென்றார், சாகித்திய அகாடமியின் ஆட்சிக்குழு உறுப்பினராக 1968ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். தத்துவ இயல் ஆய்வில் அவர் ஆற்றிய பணிக்காக டெம்ப்லீடன் பரிசு (Templeton Prize) வழங்கப்பட்டது. 
ராதாகிருஷ்ணன் குடும்பம் வசித்ததா சொல்லப்படு இடம்... 
ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது தூரத்து உறவினரான சிவகாமு, என்பவரை தனது பதினாறாவது வயதில் மணமுடித்தார். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்றுத் துறையில் மிக முக்கியமான ஒருவர். 1956-ம் ஆண்டு, ராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவி சிவகாமு இறந்தார்.  மேற்காணும் வீட்டை அவரோட சொந்தக்காரங்கதான் இந்த வீட்டை கோயிலுக்கு எழுதி கொடுத்துட்டாங்க. அப்போ இருந்து கோயில் நிர்வாகம்தான் இந்த இடத்தை பராமரிச்சுட்டு வர்றாங்க.    ஆரம்பத்துல அங்க ஒரு கல்லூரி நடத்துனாங்க. அதுக்கப்புறமா கோயில் சார்பா நடக்கற கல்யாணம்லாம் அங்கதான் நடந்துச்சு. 1964-ல் இருந்து நூலகத்தையும், 1997ல் இருந்து சிறுவர்களுக்கான விடுதியையும் நடத்தி வர்றாங்க. 15 பசங்க இருக்கற இந்தக் காப்பகத்துக்கு மட்டும் அரசு சார்பா பணம் வருகிறது. நான் 9 டூ 12வரை திருத்தணிலதான் படிச்சேன். இந்த வீட்டுக்கு பக்கத்துலதான் டியூஷன் போவேன். அப்ப இத்தனை விவரம் தெரியாது. லைப்ரரி இருந்தது மட்டுமே தெரியும். 

அவர் வசித்த தெருவுக்கும், ஒரு பள்ளிக்கு அவர் பேரை வைத்தும், திருத்தணியில் ஒரு சிலையை வைத்ததோடு தன் கடமை முடிந்ததென அரசு நினைக்குது போல! அவரின் நினைவிடத்தில் பாட்டில்களும், அழுக்கு துணிகளுமா இருக்குறதா படிச்சேன்.  1990 வாக்கில் அத்தனை அழகா இருக்கும் அந்த வீடு. மூன்று மாடி கொண்டது. மிகப்பெரிய தாவாரம்ன்னு.. படிக்க போனதைவிட ஓடிப்பிடிச்சு விளையாட போனதே அதிகம். 
அந்தந்தப் பகுதிகளின் தாய் மொழியிலேயே பல்கலைக்கழகக் கல்வியை வழங்குவதுதான் சிறந்தது. ஆசிரியர்கள், தம்முடைய துறையில் நிகழும் அண்மைக்கால வளர்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அறிவுத் தாகம் கொண்ட மாணவர்களை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் திறன் படைத்தவர்களாகவும் விளங்க வேண்டும். அனைவருக்கும் உயர்க்கல்வி அளிப்பது அரசின் கடமையாகும். கல்வியானது மனிதனை நெறிமுறைப் படுத்துவதோடு சுதந்திரச் சிந்தனையாளனாக்க வேண்டும். பல்கலைக் கழகங்கள், மனித நேயத்தையும்,  கருத்துப் புதுமையையும், உண்மைத் தேடலையும் நோக்கமாகக் கொண்டு கற்பிக்க வேண்டும். ஆற்றல்மிகு எழுத்தாளர்கள், அறிவியல் வல்லுநர்கள், கவிஞர்கள்,  கலைஞர்கள், புதியன கண்டுபிடிப்பவர்கள் மறைந்துள்ளவற்றைத் தேடி அறிபவர்கள் ஆகியோரை நம்புதல் வேண்டும். அவர்களுக்குப் பல்கலைக் கழகங்களில் பயிற்சிகள் தருதல் வேண்டும்.  பல்கலைக் கழகங்கள், ஆய்வுக்கும், ஞானத்துக்கும் வழிகாட்ட வேண்டும். ஒழுக்க உணர்வுக்கும், உள்ளத் தூய்மைக்கும் பயிற்சி அளித்திட வேண்டுமென கல்வி சார்ந்து அறிவுறுத்தினார். 
சாதியம், சுய  சிந்தனையின் வளர்ச்சியைத் தடைசெய்கிறது. ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்கள் வளர்வதை ஊக்கப்படுத்துகிறது. இதனால் ஒழுக்கம் கெட்டுவிடுகிறது. ஒருவரை ஒருவர் அவமதிக்கும் செயல்கள் பெருகின. எனவே, எந்தச் சாதியும், சமயமும், தத்துவமும் மனிதகுல முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தால் தூக்கி எறிந்துவிட வேண்டும்.  கடமைகளையும் உரிமைகளையும் பிரித்துப் பார்த்துச் செயல்பட வேண்டும். அணு ஆயுதங்களின் கொடுமையால் ஒட்டுமொத்த சமூகமும் அழிந்து பாழாகிறது. எனவே, அணு ஆயுதங்களை எந்த நாடும் போரில் பயன்படுத்தக் கூடாது என சமூகம் சார்ந்து அறிவுறுத்தினார்.  தன் வாழ்நாள் முழுவதும் கல்வி உலகம் வளம் பெற அயராது பாடுபட்டவர்.  சோதனைக்காலத்திலும் நிமிர்ந்து நின்று, நடுநிலையுடன் செயல்பட்டவர்.  மக்களிடம் நம்பிக்கை விதையை நட்டவர்.  எழுதியவாறே நடந்துக்கொண்டவர். இலட்சிய ஆசிரியர் வளமான அறிவுத் திறம் படைத்தவர்! அவரைத் ‘தத்துவமேதை’ என்று உலகம் புகழ்வது மிகவும் பொருத்தமாகும். 

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகிறான். பாடம் கத்துக்கொடுக்கும் எல்லாருமே இறைவனுக்கு சமம். எழுத்தறிவித்த ஆசிரியர்களுக்கும், வாழ்க்கை பாடத்தை கத்துக்கொடுக்கும் சக மனிதர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். ஸ்பெஷலா கவிதைவீதி சௌந்தர், வேடந்தாங்கல் கருண், ராஜப்பாட்டை ராஜா, கரந்தை அண்ணாக்கு வாழ்த்துகள்.  ஏன்னா எனக்கு தெரிஞ்சு நம்ம செட்டுல இவங்கதான் ஆசிரியரா இருக்கார். 

நன்றியுடன்,
ராஜி

Tuesday, August 15, 2017

ஆறு தலை முருகா! ஆறுதலை தர வா! - ஆடிக்கிருத்திகை


ஊரு உலகத்துல எத்தனையோ ஆயிரம் மொழி கிடக்கு. அதுல எந்த மொழிக்காவது கடவுள் இருக்கா?! ஆனா, நம் தாய்மொழியாம் தமிழுக்குன்னு தனி கடவுள் இருக்கார். தமிழைப்போலவே அழகும் இளமையும் கொண்டவர் முருகக்கடவுள்.இம்முருகனுக்கு கிருத்திகை நாளில் விரதமிருப்பது வழக்கம். மாதத்தில் ஒரு கிருத்திகை வரும். வெகு சில மாதத்தில் இருமுறையும் வரும். ஆனாலும், தை, ஆடி, கார்த்திகை கிருத்திகை மிக விசேசமாக கொண்டாடப்படுது. அதுக்கு என்ன காரணம்ன்னு பார்க்கும்முன் முருகனின் தோற்ற மகிமையை பார்ப்போம்...

தமிழ்க்குடி உருவான நாளிலிருந்து இயற்கை அழகு எல்லாத்துலயும் முருகனை கண்டனர்.  அதனால, தங்கள் இனக்கடவுளாக முருகனை வரித்துக்கொண்டனர். "முருகு"ன்ற சொல்லிற்கு அழகு, இளமைன்னு அர்த்தம். அதனால, முருகன்ன்னா அழகன்ன்னு அர்த்தமாகுது. மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் .

முருகன்ன்ற  பேருக்கு அழகு, இனிமை, இளமை, தெய்வத்தன்மை, மணம், மகிழ்ச்சி ஆகிய ஆறு தன்மைகளை தன்னகத்துள் கொண்டவன்னும் பொருள்படும். முருகன்ன்னா உயர்வானவன். அதனாலதான் குன்றிருக்கும் இடமெல்லாம் முருகனுக்கு கோவில் எழுப்பி கொண்டாடினர்.  முருகன் குறிஞ்சி  நிலத்து கடவுள்ன்றதால குறிஞ்சிக்கிழான்னும் பேருண்டு. இதுமட்டுமில்லாம, கார்த்திகை பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன்,  பக்தர்களின் இதயக்குகையில் வசிப்பதால் குகன், அசுரர்களை வெல்ல படை நடத்தி சென்றதால் சேனாதிபதி, வேலினை கொண்டிருப்பதால் வேலன், கங்கையால் தாங்கி வரப்பட்டதால் காங்கேயன், அப்பனுக்கு உபதேசித்ததால் சுவாமிநாதன், சரவணப்பொய்கையில் சேர்ந்ததால் சரவணன், ஆறு பிள்ளையாய் இருந்தவனை ஒன்று சேர்த்து ஒரு பிள்ளையாதலால் கந்தன், ஆறு முகங்களை கொண்டதால் ஆறுமுகன், விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன்.... இப்படி அவனின் பெயர்க்காரணத்தை சொல்லிக்கிட்டே போகலாம்.... 

கார்த்திகை விரதம் உண்டான வரலாற்றை பார்ப்போம்....



சிவனிடம் வரங்கள் வாங்கி, அதனால் உண்டான மமதையால் தேவர்களை சிறைப்பிடித்து, மக்களை கொடுமைப்படுத்திய சூரனை வதைக்க வேண்டி ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளை கங்கை தாங்கி, வாயுபகவானின் துணையோடு சரவணப்பொய்கையில் கொண்டு போய் சேர்த்தாள். 


ஆறு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு ஆறு கார்த்திகை பெண்களிடம் கொடுக்கப்பட்டது. கார்த்திகைப் பெண்களும் குமரனை பாலூட்டி போற்றி வளர்த்தார்கள். ஒருநாள் அம்மையும், அப்பனும் தங்கள் பிள்ளையை காண வந்தனர். ஓடோடி வந்த பிள்ளைகள் அறுவரையும் அன்னை சேர்த்தணைக்க ஆறுமுகமும், பன்னிரு கையும் உடைய குழந்தையாய் முருகன் மாறினான்.


கார்த்திகைப்பெண்களின் சேவையினை பாராட்டி அவர்களை நட்சத்திர பட்டியலில் சேர்ப்பித்தோடு, கார்த்திகை நட்சத்திர நாளில் விரதமிருந்து முருகனை வழிப்படுவோருக்கு முருகனின் அருளும், முக்தியும் பரிபூரணமாய் கிட்டுமென அன்னை அருளியதோடு அன்றிலிருந்து முருகன் கார்த்திகேயன் எனவும் அழைக்கப்படுவான் எனவும் சொன்னாள். இதுதான் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம் என்று அழைக்கப்படுகிறது. 'ஆறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின் வெறிகமழ் கமலப்போதில் வீற்றிருந்து அருளினானே' என்று கந்த புராணம் சிறப்பித்துக் கூறுமளவிற்கு  கிருத்திகை விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது.


கிழமைகளில் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. திதிகளில் சஷ்டி திதி முக்கியமாகும்.  நட்சத்திரத்தில் 'கிருத்திகை' முருகனின் நட்சத்திரம்.  மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமானது. முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை கிருத்திகை.  மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.


முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரிய கண் இமைக்கும் நேரத்தில் காற்றை கிழித்து வருமாறு உருவம் கொண்டது. அழகிய மயில் அழகனுக்கு வாகனாமானது எத்தனை பொருத்தம்?! அழகோடு வேகமாய் பறக்கும் ஆற்றலும் கொண்டது. பக்தர்களின் துயரினை துடைக்க வரும் முருகனுக்கு மயில் வாகனமானது.  மயில் மனித மனத்தின் சின்னம். பரிசுத்தமான, அழகான உள்ளம்தான் இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம் விளக்குகிறது. சிறு சத்தத்துக்கே அச்சமுறும் தாவர பட்சிணியான மயில் , மாமிசபட்சிணியான கொடிய விசம் கொண்ட பாம்பின்மீது மயில்  முருகன் எல்லா சக்திகளையும் அடக்கி ஆட்சி செய்வதோடு, முருகனால் முடியாதது எதுமில்லை என்பதையும்  காட்டுகிறது.


கிருத்திகை விரதமிருப்பவர் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டை தூய்மைப்படுத்தி காலை உணவெதும் உட்கொள்ளாமல் மதியம் உப்பில்லா உணவை முருகனுக்கு படைத்து அதை உண்டு, இரவு பால் பழத்தோடு விரதத்தை முடிக்க வேண்டும்.    காலமாற்றத்தில் உப்பில்லாமல் உணவு படைப்பது நின்று போயிற்று..


எல்லா முருகன் கோயில்களிலும் ஆடிக்கிருத்திகையன்று பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என விமரிசையாக பல விழாக்கள், உற்சவங்கள் நடைப்பெறும்.  பழனி,. திருச்செந்தூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷமென்றாலும் திருத்தணி முருகன் கோவில்தான் ஆடிக்கிருத்திகைக்கு மிக விசேசமானது. இந்நாளில், திருத்தணி முருகன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த உலகெங்கும் இருந்து பக்தர்கள் வருவர்.  இங்கிருக்கும் சரவணப்பொய்கையில் மூன்று நாட்கள் இரவு வேளையில் தெப்போற்சவம் நடக்கும். 


கந்தன் காவடிப் பிரியன் என்பதால், அவரவர் வேண்டுதலுக்கேற்ப பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, மயில் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்துவது வழக்கம். 



ஜோதிட சாஸ்திரத்தின்படி முருகப் பெருமான் செவ்வாயின் அம்சமாதலால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடை, செவ்வாய் தோஷ தடை, குரு, செவ்வாய் திசை நடப்பவர்கள் ஆடி கிருத்திகை நாளன்று முருகப் பெருமானை பக்தியுடன் மனமுருக பிரார்த்தித்தால் சகல தோஷ, தடைகளும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும். முறையாக விரதங்கள் மேற்கொள்வதால் நமது உடலும், உள்ளமும் தூய்மையாகி மனம் அமைதியும் சந்தோஷமும் அடைகிறது.

வேலுண்டு வினையில்லை.....மயிலுண்டு பயமில்லை...

ஓம் முருகா துணை.... 
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 
வீரவேல் முருகனுக்கு அரோகரா! 
ஞானப்பண்டிதனுக்கு அரோகரா! 
பழனி முருகனுக்கு அரோகர!
பாலதண்டாயுதபாணிக்கு அரோகரா!

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1469509

நன்றியுடன், 
ராஜி.