Friday, March 03, 2017

பொங்கல் வைப்பதில் கின்னஸ் சாதனையா?!

படி ஏறுதல், விமானத்திலிருந்து குதித்தல், கல்யாணம்,  கோலம், பூசணிக்காய் உடைத்தல், முத்தம்......ன்னு எத்தனையோ கின்னஸ் சாதனையை பார்த்திருப்போம்.ஆனா, ஒரு மத சடங்குல?! இது வெளிநாட்டுலன்னா நம்புவோம். ஆனா, இந்த சாதனை இந்தியாவுல இந்துக்கள்லதான் இருக்கு.

பெண்களின் சபரிமலை என்று பேரெடுத்த ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலில் பெண்களால் மட்டும் வைக்கும் பொங்கல்தான் கின்னஸ்ல பதிவாகியிருக்கு.. அங்க  ஏன் பெண்கள் மட்டும் பொங்கல் வைக்குறாங்க?! ஏன் ஆம்பிளைகளுக்கு இடமில்ல... கின்னஸ்ல எப்ப பதிவாச்சு?! பொங்கல்ல என்ன சிறப்பு?! தமிழகத்துலகூடதான் வித விதமான பொங்கல் வைக்கும் வைபவம் நடக்குதுன்னு யோசிக்குறவங்களுக்கு பதில் இதோ......
கேரளம் உருவெடுக்க காரணம் பரசுராமர். அவர், 108 சிவாலயங்களையும், 108 அம்மன் கோவில்களையும் உருவாக்கினார். கேரளாவில் அம்மன் கோவில்கள் நிறையவே இருந்தாலும் தனிப்பட்ட பெயரால் அழைக்கப்படுவதில்லை. பகவதி என்றே அழைக்கப்படுகின்றனர். ஆனால் எல்லா பகவதி அம்மன் கோவில்களுக்கும் இல்லாத சிறப்பு “ஆற்றுக்கால் பகவதி அம்மன்” கோவிலுக்கு உண்டு.

பராசக்தியின் பக்தர் ஒருவர், ’’கிள்ளி” என்ற ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய சிறுமி ஒருத்தி வந்தாள். அவளைப் பார்த்ததும் அந்த அன்னையே குழந்தை வடிவில் வந்திருப்பதாக எண்ணினார் அந்த பக்தர். கருணை மிகுந்த சிரிப்புடன் அம்மனின் பக்தரைப் பார்த்த சிறுமி, ”என்னை ஆற்றின் மறுகரையில் கொண்டு விடமுடியுமா? என்று கேட்டாள். அவ்வாறே மறுகரையில்  கொண்டு போய் சேர்த்தார்.
ஆனால், சிறுமியை உடனே அனுப்ப பக்தரின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிக்க எண்ணினார். அதனை அந்த சிறுமியிடம் கூற எண்ணி திரும்பியபோது, அந்த இடத்தில் சிறுமி இல்லாதது கண்டு திகைத்தார். பின்னர் வந்தது அம்பிகை தான் என்பதை எண்ணி மகிழ்ந்தார். 

அன்று இரவு அந்த பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, ‘தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் 3 கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து, என்னை குடியேற்றுங்கள்’ என்று கூறினாள். 

மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்கு சென்ற பெரியவர், அங்கு 3 கோடுகள் இருப்பதை கண்டு ஆனந்தம் கொண்டார். அங்கு சிறிய கோவிலை கட்டி அம்மனை வழிபட்டார். நாளடைவில் இந்த கோவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக எழுச்சியுற்றது என்கிறது கோவில் வரலாறு. 
இக்கோவிலை பற்றிய மற்றொரு கதை....


கற்புக்கரசியும், சிலப்பதிகாரத்தின் நாயகியுமான கண்ணகியின் அவதாரம்தான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்றும் கூறப்படுகிறது. தன் கணவன் கள்வன் அல்ல, என்பதை மதுரை பாண்டிய மன்னனிடம் நிரூபணம் செய்து விட்டு, மதுரையை தீக்கிரையாக்கினாள் கண்ணகி. 


பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரளா மாநிலத்தின் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்கு செல்லும் வழியில் ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினார் என்றும், அதன் நினைவாகவே அங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திகழ்கிறது என்றும் கூறுகிறார்கள். 
கேரள மற்றும் கேரள தமிழக எல்லை வாழ் பெண்கள் மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டி இக்கோவிலுக்கு செல்கின்றனர். அதனால் இக்கோவில பெண்களின் சபரிமலை என்று பெயர் பெற்றது. கேரளத்து மக்கள் பகவதி அம்மனை தங்கள் தாயாக பாவித்து தங்கள் இல்லத்து விசேசத்துக்கு அம்மனுக்கு முதல் மரியாதை செய்கிறார்கள். ஆதிசங்கரர் இத்தலத்தில் ஸ்ரீ சக்கர யந்திரம் பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவருக்குப்பின், வித்யாதிராஜ சட்டம்பி  சுவாமிகள் இத்தலத்தில் வெகுகாலம் தங்கி பூஜை செய்துள்ளார்.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டுள்ளது.. கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவபார்வதியின் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. 
கருவறையில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் போன்றவற்றை கரத்தில் தாங்கி, அரக்கியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. மூல விக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. 

மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரகம் உள்ளது. அம்மனின் கருவறை ஸ்ரீகோவில் என்று அழைக்கப்படுகிறது. கருவறையை சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் அமைந்துள்ளன. 
அம்மனே பொங்கலிடும் ஐதீகம்;

கேரளம் மட்டுமின்றி, தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து பெண்கள் இங்கு வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபடுகின்றனர். மாசி மாதம் பூர நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடும் நாளன்று இந்த பொங்கல் விழா நடைபெறுகிறது. பொங்கல் விழாவின் போது திருவனந்தபுரமே புகை மூட்டமாகத்தான் காட்சியளிக்கும். 

ஆண்கள் அனுமதிக்கப்படாத இந்த பொங்கல் விழாவில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள். பொங்கல் வைக்கும் பெண்களின் ஊடே, பகவதி அம்மனும் ஒரு பெண் வடிவில் பொங்கல் வைப்பதாக இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. மாலையில் கோவில் பூசாரிகள் ஆங்காங்கே இருக்கும் அனைத்து பொங்கல் பானைகளிலும் தீர்த்தம் தெளிப்பார்கள். 

அப்போது வானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பூ தூவப்படும். இந்த நிகழ்ச்சியின் போது கோவில் உள்ளேயும் பகவதிக்கு பொங்கல் விடுகிறார்கள். அந்த அடுப்பிற்கு ‘பண்டார அடுப்பு’ என்று பெயர். 

கருவறையில் உள்ள விளக்கில் இருந்து தீ எடுத்து வந்தே, ‘பண்டார அடுப்பு’ பற்ற வைக்கிறார்கள். இந்த அடுப்பில் இருந்து செய்யப்பட்ட பொங்கலே அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது
இனி கின்னஸ் சாதனை பற்றி பார்ப்போம்...

1997–ம் ஆண்டு பிப்ரவரி 23–ந் தேதி நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். அது ‘கின்னஸ்’ உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இதே போல் 2009–ம் ஆண்டு மார்ச் மாதம் 10–ந் தேதி நடந்த பொங்கல் விழாவின் போது 25 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்ததாக முந்தைய சாதனையை முறியடித்து மீண்டும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் வைக்கும் திருவிழா. 

உலகப்புகழ் பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா வரும் 11/3/2017 நடைப்பெற உள்ளது.. இயன்றவர்கள் சென்று பகவதி அம்மன் அருள் பெறுவோம்.
வேறொரு பதிவில் சந்திக்கும்வரை..
நன்றியுடன்..
ராஜி..

4 comments:

  1. 25 லட்சம்...! பெரிய சாதனை...!

    இந்த வருடம் மேலும் அதிகமாகுமோ...?

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா அதிகமாகும்ண்ணே

      Delete
  2. பகவதி அம்மன் படங்கள் அழகு...

    தகவல்களும் அருமை..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு கருத்துக்கும் நன்றி சகோ

      Delete