Showing posts with label ஏழுமலை. Show all posts
Showing posts with label ஏழுமலை. Show all posts

Thursday, August 16, 2018

திருப்பதி மலைவாழ் வெங்கடேசா - திருப்பதி கும்பாபிஷேகம்

எதிர்காலத்தில் பிரம்மாண்டம்ன்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடினா திருப்பதின்னு வந்தாலும் வரலாம். அந்தளவுக்கு, தங்குமிடம், போக்குவரத்து,  சாப்பாடு, சுத்தம்ன்னு எங்க திரும்பினாலும் வியந்து பார்க்குமளவுக்கு திருப்பதி இருக்கு.  எல்லாத்துக்கும் வரிசை, நொடி நேர தரிசனம்ன்னு கடுப்படிச்சாலும் மீண்டும் மீண்டும் போக தூண்டும் ஆவலை உண்டாக்கும் இடம் திருப்பதி.  அந்த திருப்பதி கோவிலின் கும்பாபிஷேகம் இன்னிக்கு நடக்குது. நம்மால் போக முடியாது. ஆனா, இங்கிருந்தே இறைவனை நினைச்சுக்கலாமில்ல!!
திருப்பதி பத்தி எழுதனும்ன்னா,  எழுதிக்கிட்டே போகலாம். அம்புட்டு விசயம் இருக்கு, ஆனா, சுருக்கமா!! சொல்ல முயற்சிக்குறேன்.  கிருஷ்ண அவதாரத்தில், பகவான் தன்னுடைய திருக்கரங்களால் கோவர்த்தன மலையைத் தாங்கினார்.  தன்னை ஏந்திய கிருஷ்ணனை, தான் தாங்க வேண்டும் என விரும்பியதாம் கோவர்த்தன மலை. அதன்படி இந்த கலியுகத்தில் திருப்பதி ஏழுமலையானை திருவேங்கட மலையாய் இருந்து தாங்கி நிற்பதாக புராணங்கள் சொல்லுது. வேங்கடாத்ரி, சேஷாத்ரி, வேதாத்ரி, கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி எனும் ஏழு சிகரங்களுடன் வேங்கடமுடையானைத் தாங்கி நிற்கிறது  வேங்கட மலை.
திருவேங்கடம் என்ற சொல்லுக்கு   தன்னை அண்டியவர்களுடைய பாவங்களை எரித்துவிடுதல்ன்னும் (வேம்- பாவங்கள், கடம்-எரித்தல்), தன்னை அண்டியவர்களுக்கு அழிவில்லாத ஐஸ்வரியங்களைத் தருதல் (வேம்-அழிவில்லாதது, கடம்- ஐஸ்வர்யம்)ன்னு பொருள். சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் இத்தலத்தை திருவேங்கடம்ன்னுதான் குறிக்கின்றன. திருமலையை மேல்திருப்பதி என்றும் அழைக்கிறார்கள். திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என பொருள்படும்படி, இதற்கு ‘திருப்பதி’ ன்னு பேர்.
ஒருமுறை பூமாதேவியைப் பாயாகச் சுருட்டி பாதாளத்தில் அடைத்து வைத்தான் இரண்யாட்சன் என்னும் அசுரன். திருமால் பூமாதேவியைக் காக்க,  வராகமாக அவதரித்து இரண்யாட்சனுடன் போரிட்டு அவனைக் கொன்று பூமாதேவியை மீட்டார். பூமித்தாயை தன் மடியில் தாங்கி வராக மூர்த்தியாய் தேவர்களுக்கு காட்சிக்கொடுத்தார். அப்போது பிரம்மதேவன் திருமாலை வேண்டி, ‘வராக மூர்த்தியாகியத் தாங்கள், கலியுக மக்களைக் காக்கும்பொருட்டு திருவேங்கடத்தின் சேஷாத்ரி சிகரத்தில் எழுந்தருளவேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார். அதன்படி வராகமூர்த்தி திருமலை எனும் திருவேங்கடத்தில் எழுந்தருளினார்.
பிருகு முனிவரின் அலட்சியத்தால் தனக்கு மரியாதை இல்லாத இடத்தில் இருக்க மாட்டேனென கூறி மகாலட்சுமி பூலோகம் வந்தார், மகாலட்சுமியைத் தேடி மகாவிஷ்ணுவும் சீனிவாசனாய்  பூலோகம் வந்து திருமலையில்  ஒரு புற்றில் மறைந்து வாழ்ந்து வந்தார். அப்போது ராமாவதாரத்தில் வாக்கு கொடுத்தபடி, வேதவதி(வேகவதி என்ற திருமாலின் பக்தை ராம அவதாரத்தில் தன்னை மணக்க வேண்டி, ராமரிடம் கேட்க, இந்த அவதாரம் ஏகபத்தினியாய் இருக்க வேண்டும். அதனால் அடுத்த அவதாரத்தில் மணப்பதாய் வாக்களித்தார். அதன்படி, ஆகாசராஜன் என்ற மன்னன் ஏர் உழும் பொழுது கிடைத்த பேழையில், ஆயிரம் இதழ்க்கொண்ட தாமரை மலர் மீது கிடந்தமையால் அலர்மேல் மங்கை எனப்பெயரிட்டு வளர்த்தான். 'அலர்' என்றால் தாமரை, 'மங்கை' என்றால் நற்குணங்கள் பொருந்திய பெண் என பொருள். பத்மாவதி என்ற வடமொழி சொல்லுக்கு இதே பொருள்தான். அவதார நோக்கம் நிறைவேறும் நாள் வந்ததும், சீனிவாசனும், அலர்மேல்மங்கையும் சந்தித்து காதல் கொண்டனர்.
சீனிவாசனின் வளர்ப்பு தாயாரான வகுளாதேவி, ஆகாசராஜனிடம் சென்று சீனிவாசன் யாரென சொல்லி, பெண் கேட்க திருமணம் நிச்சயமானது. மகாலட்சுமியை பிரிந்திருக்கும் நிலையில் வறுமையில் இருந்த சீனிவாசன் திருமணச்செலவுக்கு பணமில்லாமல்  திருமணச்செலவுக்கு குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் தங்கக் காசுகளை கடனாகப் பெற்றார் திருமால். அந்த தங்கக்காசுகளை கலியுக முடிவில் தந்து விடுவதாகவும், அதுவரை வட்டியைக் கொடுத்துவிடுவதாகவும் கூறினாராம். திருமணமும் சுபமாய் முடிந்தது.

இதற்கிடையில்  மகாவிஷ்ணு, பத்மாவதியை மணந்து கொண்டதை நாரதர் மூலம் அறிந்து கொண்ட மகாலட்சுமி கோவமாய் திருமலைக்கு வந்தார். அப்போது மகாவிஷ்ணு மகாலட்சுமியை வாஞ்சையுடன் அணைத்து, தமது திருமார்பில் இருத்திக் கொண்டார். திருச்சானூர் என்ற இடத்தில் அலர்மேலுமங்கை என்னும் பத்மாவதி தாயாரை அமர்த்தினார்.  திருப்பதி மலையில் பெருமாளை தரிசித்தபின் திருச்சானூர் சென்று தாயாரை வணங்குதல் முக்கியம்.
திருப்பதி வெங்கடேசப்பெருமாள்  கோவிலுக்கு அருகிலேயே ‘சுவாமி புஷ்கரணி’ என்னும் தீர்த்தக்குளம் இருக்கு. இக்குளத்தின் மேற்குக்கரையின் வடமேற்கு மூலையில் வராகமூர்த்தி ஆலயம் இருக்கு. இந்த வராக மூர்த்தியே திருமலையின் ஆதிமூர்த்தி ஆவார். அதனால் திருமலையில் வெங்கடாசலபதியை தரிசிக்கும் முன்பு ஆதிவராக மூர்த்தியை தரிசித்து அனுமதி வாங்கிய பிறகே  பெருமாளை வணங்குதல் வேண்டும். 

 2.2 ஏக்கர் அளவிற்கு பரந்து விரிந்திருக்கும் இக்கோவிலின்  நீளம் 415 அடி, அகலம் 263 அடி.  பக்தர்கள் நடக்கும்போது அவர்களின் இடது பக்கம் "ரங்கநாயக மண்டபம்" இருக்கும். வலது பக்கத்தில் "அயன மஹால்" இருக்கும். முடிவில்லாத பிம்பங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி நிறைந்த மண்டபம் இருக்கும். பக்தர்கள் " வெள்ளிவாசல்" என்கிற வெள்ளி நுழைவாசல் வழியாக பிரதான கர்ப்பக்கிரகத்திற்குள் செல்லனும்.



அதற்கடுத்து "பங்கார வாசல்"ன்னு சொல்லப்படும் தங்க வாசலின்முன் நின்று இறைவனை தரிசிக்கனும். சாதாரண பக்தர்களால் அதை தாண்டி உள்ள போக முடியாது. ஜருகண்டி, ஜருகண்டின்னு தள்ளும் வேகத்தில் வெங்கியை அஞ்சு நொடிகளுக்கு மேல் பார்த்தாலே பூர்வ ஜென்ம புண்ணியம்.  ஒரு மணிநேரத்தில் சராசரியாய் 4000 பேர் இறைவனை தரிசிக்குறாங்க. ராஜ கோபுரத்திலிருந்து போகபோக பாதை குறுகிக்கிட்டே போகும். உலக சுகபோகத்திலிருந்து நம் எண்ணைங்களை இறைவன்மீது செலுத்தினால் அவனை அடையலாம்ன்னு சொல்லும் குறியீடா இருக்கு. ஆகம விதிப்படி இந்த குறுகிய வாசலை மாத்தமுடியாது. 


கருவறையினுள் ராமானுஜர் சாத்திய சங்கு, சக்கரம் மற்றும் நெற்றியில் மிகப்பெரிய திருநாமப் பட்டையுடன் வேங்கடவன் அருள்கிறார். 

விமானத்தின் வடகிழக்கு மூலையில் வெள்ளியால் வேயப்பட்ட திருவாசியோடு, விமான வெங்கடேசப்பெருமாள் வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டு வலம் வந்தால் ஆனந்த வாழ்வு அமையும் என்கிறார்கள். 
கருவறை வெளிச்சுற்றில் வரதராஜர், ராமானுஜர், யோக நரசிம்மர், சீனிவாசனின் வளர்ப்பு தாயான வகுளாதேவி சன்னிதிகளும், பிரார்த்தனை உண்டியலும் இருக்கு. 

புரட்டாசி சனிக்கிழமை திருவோண நாளில்தான், திருமலைக்கு  மகாவிஷ்ணு எழுந்தருளினாராம். எனவே இத்தலத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளும், புரட்டாசி திருவோண விழாவும் மிகச்சிறப்பாக கொண்டாடப் படுகிறது. நாரத முனிவரின் வழிகாட்டலின்படி புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து, வேங்கடவனை வழிபட்டு பெரும் செல்வமும், வைகுண்டபதவியும் பெற்றானாம் பீமன் என்னும் ஊனமுற்ற குயவன். மண்பானை செய்யும் அவன், பெருமாள் பக்தன். தினமும் புதுபானை ஒன்றை மலைமீதிருக்கும் பெருமாள் கோவிலுக்கு கொடுப்பதை வழக்கமாய் வைத்திருந்தான். அந்த மண்பாண்டத்தில்தான் நைவேத்தியம் படைப்பது வழக்கம். 

 மழைக்காலத்தில் ஒருநாள், பானை கொண்டு செல்லும்போது மழைநீரில் வழுக்கிவிட, பானை உடைந்தது, தெய்வ கைங்கரியம் பாழ்பட்டதே என மன வருத்தத்தோடு மலைமீதேறி இறைவனிடம் மன்றாட சென்றான்.  ஆனால் அவனுக்கு முன்பாகவே, அவன் உருவமெடுத்து வந்தவர் புதுப்பானையை கோவிலுக்கு கொடுத்து பூஜையும் முடிஞ்சிருந்தது.  வந்தவர் பெருமாள் என உணர்ந்த கோவில் நிர்வாகிகள் பீமனின் பக்தியை மெச்சி அவன் நினைவாகவே   தினமுமொரு புது மண்பாண்டத்திலேயே  நைவேத்தியம் செய்யும் பிரசாதங்களை மண்பாண்டங்களிலேயே தயாரித்து படைக்கிறார்கள். 
வெள்ளிக்கிழமைகளில் இங்கு வெங்கடேச பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்கிறார்கள். மகா சிவராத்திரி அன்று  ‘ஷேத்ர பாலிகா’ உற்சவத்தின்போது, பெருமாளுக்கு வைரத்தில் திருநீற்று நெற்றிப் பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடக்கும். பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெரும் புண்ணியத்திருத்தலம் திருமலை திருப்பதி ஆகும்.
மகாவிஷ்ணுவின் கட்டளைப்படி தொண்டைமான் என்னும் மன்னனால் தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன்  திருப்பதி ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் சோழர்களாலும், பல்லவர்களாலும், பாண்டிய மன்னர்களாலும், விஜயநகரப் பேரரசாலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.


இங்கு வியாழக்கிழமைகளில் அதிகாலைப் பூஜைக்குப்பிறகு வேங்கடவனின் அனைத்து ஆபரணங்களும், கவசங்களும் கழற்றப்பட்டு, அவருக்கு வேஷ்டியும், துண்டும் அணிவித்து அழகு செய்கிறார்கள். இதற்கு ‘நேத்ர தரிசனம்’ என்று பெயர். அதேநாளில் பின்பு பெருமாளுக்கு அலங்கார மாற்றம் செய்விக்கிறார்கள். இதற்கு ‘பூலாங்கி சேவை’ எனப் பெயர். இந்த சேவையில் பெருமாளை தரிசித்தால் தரித்திரம், வறுமை அகன்று வாழ்வில் வளம் சேரும்.


எட்டாயிரம் சதுர கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் ஏழுமலைகள் 50 கோடி வருடங்கள் பழமையானது. கடல் மட்டத்திலிருந்து 2500 அடி உயரத்தில் இருக்கிற இந்த "திருமலை" உலகத்திலேயே அதிகமாக தரிசிக்கப்படுகிற கோவிலாகும்.  ஒரு நாளைக்கு சராசரியாக 60000 லிருந்து 70000 மக்கள் வருகிறார்கள். விழாக்காலங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வருவாங்க.
பல்லவர்கள் காலத்தில்தான் ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் விநியோகிக்கும் முறை முதன்முறையாக அமல்படுத்தப்பட்டதாக கல் வெட்டு சொல்லுது.  2-ம் தேவராயுலு அரசர் காலத்திலும் பல வகையான பிரசாதங்கள் பக்தர்களுக்காக விநி யோகிக்கப்பட்டன. அவரிடம் அமைச்சராக இருந்த சேகர மல்லண்ணா என்பவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்கென்றே பல தானங்களை செய்துள்ளார். 
இப்ப மாதிரி போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில்  திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானத்துக்கு பதிலாக புளிசாதம், தயிர்சாதம் மாதிரியான பிரசாதங்களே விநியோகிக்கப்பட்டன. இந்த பிரசாதங்கள் ‘திருபொங்கம்’ என அழைக் கப்பட்டது. இக்காலகட்டத்தில் பக்தர்களுக்கு வெல்ல பணியாரம், அப்பம், வடை, அதிரசம் என்று ‘மனோஹரபடி’ எனும் பெயரில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் வடை தவிர மற்ற பிரசாதங்கள் அதிக நாட்கள் தாக்குபிடிக்காமல் வீட்டுக்கு போவதற்குள் கெட்டு போனதால் ஊற வைக்காத உளுந்தை உப்பு சேர்த்து அரைத்து, மிளகு, சீரகம் மட்டுமே சேர்த்த  வடை மட்டுமே அதிகமாய் விற்பனை ஆனது.

இதை கவனித்த அப்போதைய மதராஸ் அரசு, 1803-லிருந்து பிரசாதங்களை பக்தர்களுக்கு விற்கும் முறையை தொடங்கியது. அதன் பிறகு இனிப்பு பிரசாதமாக பூந்தி விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1940 முதல் பூந்தி லட்டு பிரசாதமாக உருமாறியது. லட்டு பிரசாதம் தயாரிக்கும் அளவை ‘திட்டம்’ என சொல்வாங்க. ஒரு லட்டு தயாரிக்க பயன்படும் 51 பொருட்களை ஒரு ‘படி’ சொல்வாங்க. லம் ஒரு படிக்கு 5,100 லட்டுகள் தயாரிக்கலாம்.  பசு நெய் 185 கிலோ, கடலை மாவு 200 கிலோ, சர்க்கரை 400 கிலோ, முந்திரி 35 கிலோ, உலர்ந்த திராட்சை 17.5 கிலோ, கற்கண்டு 10 கிலோ, ஏலக்காய் 5 கிலோ அளவுள்ள பொருட்களைக்கொண்ட 852கிலோ பொருட்கள் சேர்ந்ததே ஒரு படி.  லட்டு ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோக்தம் லட்டு   மூணு விதமா பிடிக்குறாங்க.  இதில் ஆஸ்தான லட்டு முக்கிய விழா நாட்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு பிரமுகர்களுக்கு கொடுப்பாங்க. சாமன்யர்களானா நாம வாங்கும் லட்டு 175கிராம் எடையுள்ளது. ஏழுமலையான் கோயிலின் ஆக்னேய மூலையில் ‘போட்டு’ என அழைக்கப்படும் இடத்தில்தான் லட்டு உட்பட அனைத்து பிரசாதங்களும் தயாராகிறது. பிரசாதங்களை  ஏழுமலையானுக்கு படைக்கப்படுவதற்குமுன், அவரின் வளர்ப்பு   தாயான வகுள மாதாவிற்குதான் முதலில் படைக்கப்படும் . அதன் பின்னரே மூலவருக்கு நைவேத்தியங்கள் படைக்கப்படும். 1940-களில் ஒரு லட்டின் விலை 8 அணா. பின்னர் இவை படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு இன்று ரூ.25க்கு பக்தர்கள் கைகளில் மகாபிரசாதமாக கிடைக்குது. திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு கிடைச்சிருக்கு, ஆனாலும் இப்ப மாடர்ன் கிச்சன் வந்தப்பின் பழைய ருசியும், அளவும் கிடையாதென்பதே உண்மை. 
1964ல் திருப்பதி கோவிலில் அன்னதான திட்டத்தினை கொண்டுவந்தபோது தெருக்களில் உக்கார வைக்கப்பட்டே உணவு பரிமாறப்பட்டது. முப்பது வருடங்களுக்கு முன்னர், அன்னதானத்துக்கென தனியாய் மண்டபத்தை கட்டினர். இதில் வரிசையில் காத்துக்கிடந்தே மக்கள் நொந்து போயினர். இதைக்கண்ட ஒருவர், தேவஸ்தான அதிகாரியை அணுகி, ஐயா! மக்கள் பசியோடு வரிசையில் காத்துக்கிடப்பது பார்க்க பாவமா இருக்குன்னு சொல்ல, அவ்வளவு அக்கறையா இருந்தால் நீ பணம் கொடு. உன் பேரில் பெரிய  கட்டடம் கட்டி, மக்களை நிக்க வைக்காம சோறு போடுறோம். இஷ்டமிருந்தா லைன்ல நின்னு சாப்பிடு. இல்லன்னா கிளம்பி போன்னு  எகத்தாளம் செய்ய, ஐயா! நான் எனக்காக சொல்லலை, அவரின் அனைத்து பக்தர்களுக்காகவும்தான் கேட்டேன்னுஅவர் தன்னிடமிருந்து ஒரு காசோலையை நிரப்பி கொடுத்தாராம்.
அதில் 25கோடிக்கு எழுதி இருந்ததை கண்டு திகைத்த அதிகாரி, அந்த பக்தரை யாரென விசாரிக்க தன் விலாசத்தை சொல்ல மறுத்து, தான் தொழில் தொடங்கும்போது சீனிவாசனை பங்குதாரராய் மனசுக்குள் நினைச்சு ஆரம்பிச்சதாகவும், அதன்படி வரும் வருமானத்தில் சீனிவாசன் பங்கினை வங்கியில் போட்டு வந்ததாகவும், அந்த பணத்தின் வட்டியினை அப்பப்போ வந்து உண்டியலில் போட்டு போனதாகவும், தான் போட்ட பணமுடிச்சின் அடையாளத்தை சொன்னாராம். முதலிலேயே சொல்லி இருந்தால் தகுந்த மரியாதை செய்திருப்போமே என நிர்வாகி சொல்ல. இது நண்பர்களுக்கான உறவு. இதில் யாரையும் சேர்க்க எனக்கு விருப்பமில்லை. அதனாலேயே வரிசையில் நின்று அவனோடு பேசியபடியே அவனை பார்ப்பது வழக்கமென கூறி சென்றாராம். அந்த பக்தர் கொடுத்த பணத்தில் கட்டப்பட்ட கட்டிடமே, இன்று புஷ்கரணி குளத்துக்கு பக்கத்திலிருக்கும் அன்னதான கட்டிடம். இதில் ஒரேநேரத்தில் 6000 பேர் சாப்பிடலாம். 
பேருந்து, ரயில், விமானம்ன்னு அவரவர் வசதிப்படி வந்து, கீழ்திருப்பதியிலிருந்து மூன்று வழிகளில் மேல் திருப்பதிக்கு வரலாம். பேருந்து மூலமாய் வரலாம். கட்டணம் 40ரூபாய்.   
அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஶ்ரீஆதிவண் சடகோப யதீந்த்ர மகா தேசிகன் என்னும் ஜீயர் ஸ்வாமிகளே திருமலைக்கு படிக்கட்டுகளை முதன்முதலில் அமைத்தவர். அலிபிரியிலிருந்து பெருமாள் குடிகொண்டிருக்கும் கோயில் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 3,800 படிக்கட்டுகள் உள்ள இந்த வழியாக முதல் மலையில் இருந்து ஏழு மலைகளைக் கடந்து வர குறைந்தது 4  முதல் 6 மணி நேரம்  ஆகும். இன்னொரு வழி இருக்கு. முழுக்க முழுக்க படிக்கட்டுகளால் ஆனது. அது வழியா போனால் 2 மணிநேரத்தில் போயிடலாம். வயசானவங்க இந்த பாதையில் போவதை தவிர்க்கலாம். மலை முழுக்க காவல், மருத்துவம், உணவு, குடிநீர், கழிவறை வசதி இருப்பதால் மீண்டும் மீண்டும் போகத்தூண்டுது. 

பனிரெண்டு வருசத்துக்கொருமுறை கும்பாபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, திருப்பதி கோவிலின் கும்பாபிஷேகம் இன்று (16/8/2018) காலை 10 மணிக்கு சிறப்பா நடந்தேறியது. 
ஓம் நிரஞ்ஜநாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீநிவாஸஹ் ப்ரசோதயாத்’
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பகவானை அறிவோம். பந்தங்களில் இருந்து விடுபடச் செய்யும், அந்த பரம்பொருளின் மீது தியானம் செய்வோம். ஸ்ரீனிவாசனான அவன் நம்மை காத்து அருள்புரிவான் என்பது இதன் பொருளாகும்.

கோவிந்தன் பெருமை பேச இந்த ஒரு பதிவு போதாது . புரட்டாசி மாசம் வருதுல்ல. அப்ப, ஒவ்வொரு வாரமும் ஏழுமலையானின் பெருமைகளை பார்ப்போம் . திருப்பதி போனால் வாழ்க்கையில் திருப்பம் உண்டாகுமாம். கோவிந்தா! கோவிந்தா!  ஏழுகுண்டலவாடா! வெங்கடரமணா! கோவிந்தா கோவிந்தா!


நன்றியுடன்,
ராஜி

Friday, January 03, 2014

திருப்பதி போனா திருப்பம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் வீற்றிருக்கும் ”திருப்பதி” ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய சின்னமாகவும் உலக அளவில் புகழ் பெற்று விளங்குது. உலகப்பிரசித்தி பெற்றுள்ள ஸ்ரீவெங்கடாசலபதி கோயில் , ஏழுமலைகளுக்கு இடையில் இருக்கும் ஒரு மலை உச்சியில் திருமலை யில் அமைந்திருக்கு. வேறெங்கும் காண முடியாத வகையில் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர். 

”திரு”ன்ற சொல்லுக்கு “எல்லாத்துக்கும் அப்பாற்பட்ட இறைச்சக்தி”ன்னு பொருள், ”பதி”ன்ற சொல்லுக்கு ”ஸ்தலம்”ன்னு பொருள். அதாவது, இறவன் குடிக்கொண்டிருக்கும் இடம்ன்னு பொருள் படும்படியா திருப்பதின்னு இத்தலத்திற்கு பேர் வந்திருக்கு.

வெங்கடேசப்பெருமாள் கோவில் அமைந்திருக்கும் மலைபகுதி திருமலைன்னும், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அமைந்திருக்கும் மலையின் கீழ்ப்பகுதி திருப்பதின்னும் அழைக்கப்படுது. திருமலைன்னு அழைக்கப்படும் மலைப்பகுதி, உலகிலேயே இரண்டாவது பழமையான பாறை மலையமைப்பைக் கொண்டதாக புவிஅறிவியல் ரீதியாகக் கண்டறிப்பட்டிருக்கு.
 
திருப்பதிக் கோவில், யாரால, எப்போது கட்டப்பட்டதுன்னு ஆதாரம் ஏதுமில்லை. ஆனா, சங்கத் தமிழ் இலக்கியங்களில் திருமலையானது “திருவேங்கடம்”ன்ற பேரால் இடம் பெற்றிருக்கு.

இக்கோவில் தொண்டை மண்டல மன்னனா இருந்த “தொண்டைமான் இளந்திரையன்” என்பவரால் எழுப்பப்பட்டிருக்கலாம்ன்னு பல தமிழ்ப்புலவர்களின் பாடல்களிலிருந்து திரட்டப்பட்ட ஆதாரங்களிலிருந்து ஓரளவு கணிக்க முடிகிறது.

பின்னர் இக்கோவில் 4ம் நூற்றாண்டிலிருந்து பல தமிழ் மன்னர்களால் ஆதரிக்கப்பட்டு வந்தற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கு. பல்லவ வம்சத்தைத் தொடர்ந்து சோழ வம்சம், விஜயநகர வம்சத்தவர்கள் பராமரிப்பில் இக்கோவில் இருந்து வந்திருக்கு.”திருவேங்டமலை” என்பது காலப்போக்கில் மாறி திருமலைன்ற பேர்ல நிலைத்து நின்று விட்டது. இக்கோவிலின் ஸ்தல விருட்சம் ”புளிய மரம்”.

எல்லா இந்தியக் கோவில்களையும் போல இக்கோவிலும்,14ம் மற்றும் 15ம் ஆண்டுகளில் நிகந்த முஸ்லீம் ஊடுருவல் மற்றும் கொள்ளையிலிருந்து தப்பியது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது காலணிய ஆட்சியாளர்கள் இந்த கோவிலின் நடைமுறையில் தலையிடாமல் இருந்தனர்.

1933 ம் ஆண்டில் “மெட்ராஸ் பிரசிடென்சி” அரசாங்கம் ”திருமலா தேவஸ்தான கமிட்டி”ன்ற தன்னாட்சி குழுவை அமைத்து கோவில் நிர்வாகத்தை ஒப்படைத்தது, அரசால் நியமிக்கப்படும் கமிஷ்னர் மூலம் இக்கோவில் நிர்மானிக்கப்படும் முறையை கொண்டு வந்தனர்.  ஆகம நெறிகளில் இந்த கமிட்டிக்கு அறிவுறை கூற ‘ஆகம ஆலோசனைக்குழு’ ஒன்றையும் உருவாக்கினாங்க. 

தினம் ஒரு பண்டிகைக் கொண்டாடினாலும் மே மாதத்தில் நடைபெறும் கங்கம்மா ஜாத்ரா, விஜயநகர திருவிழா, சந்திரகிரி கோட்டை திருவிழா மற்றும் ராயலசீமா நடனம் மற்றும் உணவுத்திருவிழா போன்ற முக்கிய நிகழ்ச்சிளை கொண்டாடுறாங்க.


கோவில் வளாகத்திற்குள் வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணி மற்றும் கைக்குழந்தைக்காரர்களுக்கு வசதியாக பேட்டரி கார் இயக்கப்படுது. அதுமட்டுமில்லாம, ஆங்காங்கு கழிப்பிட வசதியும் இருக்கு. 

மலைக்கோவில் மட்டுமில்லாமல் வராகஸ்வாமி கோவில், வெங்கடேஸ்வரஸ்வாமி கோவில், பத்மாவதி தாயார் கோவில், கோவிந்தராஜா கோவில், சீனிவாசக் கோவில், பாபநாசம், ஆகாசக்கங்கை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவையும் பார்த்துட்டு வரலாம். கோவிலுக்குள் ஆண்கள் வேட்டி சட்டை, ஃபேண்ட் சட்டை, குர்தா போன்ற உடைகளும், பெண்கள் சேலை, சுடிதார், பாவாடைதாவணி போன்ற உடைகளிலும் மட்டுமே அனுமதி. செல்போன், கேமரா போன்றவை கோவிலுக்குள் அனுமதி இல்லை.

டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு,கொல்கத்தாவிலிருந்து விமானசேவையும், நிறைய ரயில் மற்றும் பேருந்து வசதியும் இருக்கு. சொந்த கார் இருந்தால் போகலாம். வாடகைகார் கொண்டுப்போவது பண விரயம். மேல் திருப்பதியில் எந்த இடத்திற்கும் போக வர இலவச பஸ் வசதி இருக்கு. இலவச தங்குமிடம் நிறைய இருக்கு. 50,100,250, 500 கட்டணம் அறைகளும் உண்டு. 100,520 ரூபாய் அறைகளில் சுடுதண்ணீர் வசதி இருக்கு.

பேருந்து நிலையத்திற்கு பக்கத்திலயே மொட்டை அடிக்கும் இடம் இருந்தாலும் அதுல க்யூல நின்னு மொட்டை அடிச்சுட்டு வருவதற்குள் எப்படியும் 3 இல்ல 4 மணி நேரம் ஆகிடும். ரூம் எடுத்து தங்கும் பக்தர்கள் வசதிக்கேற்ப அங்கயே மொட்டை அடிக்கும் இடம் இருக்கு. அங்க சீக்கிரம் அடிச்சுக்கிட்டு வந்துடலாம். இங்கு காணிக்கையாக தரப்படும் முடிகள் தர வாரியாக பிரிக்கப்பட்டு விக், சவுரி செய்யப் பயன்படுது. ரொம்பவும் சின்ன முடிகள்லாம் சாக்லேட் செய்ய மூலப்பொருள் தயாரிக்கப் பயன்படுது.


சில அதிசய தகவல்கள்:
கருங்கல்லில் செதுக்கப்பட்ட எல்லா சிலைகளிலும் சிற்பியின் உளிப்பட்ட இடம் தெரியும். ஆனா, திருப்பதி வெங்டாச்சலப்பதியின் சிலையில் அப்படிக் காண முடியாது. சிலையின் நகைகள்கூட பாலீஷ் போட்டதுப் போல பளப்பளக்குது.

கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 3000 அடி உயரத்தில் இறைவனின் சிலை இருந்தாலும் 110பாரன்ஹீட் வெப்பத்திலேயே இருக்கு. அபிஷேகத்திற்கு முன் இறைவனின் நகைகளைக் கழட்டும்போது சூடாய் இருப்பதை அர்ச்சகர்கள் உணர்வர்.

ஹரியும் சிவனும் ஒன்று என்பது போல மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை. 

காளி, பைரவர் போன்ற ருத்ர கடவுள்கள் மட்டுமில்லாமல் முருகன், விநாயகர் போன்ற சாத்வீக கடவுள்கள் கூட போர் ஆயுதங்கள் தாங்கி அருள் புரிகின்றனர். ஆனா, வெங்கடேசப் பெருமாள் மட்டும் நிராயுதபாணியாய் அருள் புரிகிறார்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் தங்கம், வெள்ளி, வைர பொருட்கள் இருந்தாலும், நைவேத்தியத்துக்கு மண்சட்டியையே உபயோகிக்குறாங்க. தினமும் புது சட்டியிலேயே நைவேத்தியம் நடக்குது. நைவேத்தியப் பொருளான தயிர்சாதம், புளிச்சாதம், லட்டு, அதிரசம், வடைலாம் கோவிலின் குறிப்பிட்ட வாசல் தாண்டி வெளிவருவதில்லை. 
கீழ் திருப்பதியிலிருந்து மேல் திருப்பதி செல்ல, கோவிலுக்கு சொந்தமான பஸ் உண்டு. பிரைவேட் ஜீப் வசதியும் உண்டு. சிலர் வேண்டுதல் காரணமாக கீழ் திருப்பதியிலிருந்து மேல் திருப்பதி வரை நடந்து வருபவர்களும் உண்டு. அப்படி வருபவர்களுக்கு தனிப்பாதை உண்டு. அப்படிப்பட்ட பாதை ஒன்றைதான் மேல் படத்தில் காண்பது.

ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) கலக்குது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மை கூடுது. 
1180 கல்வெட்டுகள் கோவிலில் காணப்படுது. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளது.


இக்கோவில் ஆதிக்காலத்தில் முருகன் கோவிலாய் இருந்ததாகவும், அதை பெருமாள் கோவிலாய் மாறியதாகவும், அதனால்தான் இறைவனுக்கு பக்தர்கள் முன் அபிஷேகம் செய்யப்படுவதில்லைன்னும் ஒரு பேச்சு உலவுது. மேல இருக்கும் முருகன் மற்றும் ஏழுமையானின் படத்தில் இருக்கும் இடதுகையை  உற்றுப்பார்க்கும்போது புலப்படும்ன்னு தங்கள் வாதத்திற்கு ஆதாரம் காட்ட முனைகிறார்கள். 


திருப்பதி போகும்போது சோத்து மூட்டையை கட்டிக்கிட்டு சுமந்துக்கிட்டு போக வேணாம். ஏராளமான அன்ன சத்திரங்கள் இருக்கு. காலை 11 மணி முதல் இரவு 11 வரை இயங்குது. இரண்டு வகை பொறியல், சாம்பார், ரசம், மோர், சர்க்கரைப் பொங்கலுடன். அதுமட்டுமில்லாம நிறைய ஹோட்டல்களும் இயங்குது. அசைவ உணவு மேல் திருப்பதியில் இல்லை. புகை மற்றும் போதைப் பொருட்களுக்கும் அனுமதி இல்லை.

உலகப்புகழ் பெற்ற திருப்பதி லட்டை மேல் படத்துல வச்சிருக்கேன். எல்லோரும் எடுத்துக்கோங்க. அடுத்த வாரம் புண்ணியம் தேடி வேற ஒரு கோவிலுக்கு போகலாம்.