Showing posts with label மீனாட்சி அம்மன். Show all posts
Showing posts with label மீனாட்சி அம்மன். Show all posts

Friday, March 28, 2014

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் பாகம் 3 - - புண்ணியம் தேடி

கடந்த இரண்டு வாரங்களாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வலம் வந்துக்கொண்டு இருக்கின்றோம். போன வாரம் மீனாட்சி அம்மனைத் தரிசித்துவிட்டு அடுத்து சொக்கநாதரைத் தரிசிக்கச் செல்லும் வழியில் நாம முதலில் தரிசிப்பது முக்குருணிப் பிள்ளையார்.
இங்கே இவரைப் பத்தி ஒரு குறிப்பு வச்சு இருக்காங்க. இருந்தாலும் சொல்கிறேன்...,

மதுரையை 16 ம் நூற்றாண்டில் ஆண்ட திருமலை நாயக்க மன்னர் தனக்கு அரண்மனை கட்டுவதற்காக வண்டியூரில் அருள்மிகு மாரியம்மன் கோவிலின் தெற்கு பக்கம் மண்ணை வெட்டி எடுக்கும்போது, இந்த முக்குருணி விநாயகர் கிடைத்திருக்கிறார். உடனே, அவரை இங்கே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். திருமலை நாயக்க மன்னன் பிரதிஷ்டை செய்த ஆண்டு 1645. ஒரே கல்லினால் ஆன இந்த விநாயகருக்கு, விநாயகர் சதுர்த்தி தோறும் 18 படி, அதாவது முக்கால் குறுணி அரிசியில் ஒரே கொழுக்கட்டையாக செய்து நைவேத்தியம் செய்வார்கள். அதுனாலதான் இவருக்கு முக்குருணி விநாயகர்ன்னு பெயர் வந்ததாம். நமக்கு ஏதாவது தடங்கல் வந்தா இந்த முக்குருணி விநாயகருக்கு சந்தனகாப்பும் விருப்பப்பட்ட நாளில் முக்குருணி அரிசியில் கொழுக்கட்டையும் படைத்தால் தடங்கல்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
நாம மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த நாளும் பிரதோஷ நாளும்ங்குறதால உற்சவர் பிரகார உலா தொடங்கிட்டார்.  முதலில் அவரது வாகனமான நந்தியும் (காளை மாடு ), அதன் பின்னே பட்டு பீதாம்பரம் தரித்த யானையும், அதன் பின்னே பல்லக்கில் உற்சவரும் பிரகாரம் சுற்றும் காட்சி நமக்கு கிடைத்தது பூர்வ ஜென்ம புண்ணியம்.


சரி, இந்த முக்குருணி பிள்ளையாருக்கு மேலும் சில புராண கதைகள் சொல்றாங்க. அதையும் தெரிஞ்சுக்கலாம்.  பழைய காலத்தில இப்ப முக்குருணிப்பிள்ளையார்  இருக்கிற இடத்தில், நடராஜர் இருந்தாராம்.  அவரது பார்வையின் உக்கிரம் தாங்காமல் எதிரே இருந்த வீடுகள் அடிக்கடி எரிந்து போனதாகவும், உயிர் சேதம் கூட ஏற்பட்டதாகவும், அதனைத் தடுக்கும் வகையில்தான் இந்த முக்குருணிப் பிள்ளையார் சிலை அமைக்கப்பட்டது எனவும், முக்குருணிப்பிள்ளையார் வந்த பிறகு தீப்பற்றி எரியவில்லையாம். சரி, வாங்க நாம பிரகாரம் சுற்றிவரலாம்...,  
பிரகாரங்களின் தூண்கள் உயரமாகவும், அகலமாகவும் இருக்கு. இந்தப் பிரகாரத்து மூலையில் கொஞ்ச பேர் தியானத்தில் அமர்ந்து இருக்காங்க. பக்கத்தில் சென்று கேட்கலாம் வாங்க!! இங்கே பல சித்தர்கள் ஜீவசமாதியானதாகவும், அதில் ஒரு சித்தரின் ஜீவசமாதி இந்த இடத்தில இருப்பதாகவும், இங்கே இருந்து பிரார்த்தித்தால் மன அமைதியும், நினைத்த காரிய சித்தியும் கிடைக்குமாம். வாங்க நாமளும் சிறிது நேரம் இங்கே உட்கார்ந்து தியானத்தில் செய்வோம். இங்க, மேலும் ஒரு தனி சிறப்பு என்னனா உத்திரத்தில் வரையப்பட்டு இருக்கும் சுழலும் லிங்கங்கள் நாம் செல்லும் திசையெல்லாம் நம்மைப் பார்த்து சுழலுகின்றது.
அடுத்து நாமப் பார்க்கப் போறது சங்கப் புலவர்கள் திருக்கோவில். கடைசங்கப் புலவர்கள் 49 பேருக்கும் இங்கே கோவில் இருக்கிறது. ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், வெண்ணி குயத்தியார், காவர்பெண்டிர் ஆகிய பெண்பால் புலவர்களும் இந்த 49 புலவர்களில் இருக்கிறாங்க. மேலும் திருவாலவுடையார்பாணபத்திரர்பொருட்டு சேரமான், பெருமான் நாயனாருக்கு எழுதிய திருபாசுரங்கள் இந்த சங்கப்புலவர்கள் கோவில்ல கல்வெட்டா வடிக்கப்பட்டு இருக்கு. இங்கே சிவபெருமானே தமிழ் சங்கப் புலவரா அமர்ந்து தொண்டாற்றியதும் இங்கு குறிப்பிடபட்டு இருக்கு.  
அடுத்து நாமப் பார்க்கப் போறது கல்யாண மண்டபம். இந்த  மாதத்தில் இங்கு இறைவன் திருக்கல்யாணம் சிறப்பாக கொண்டாடபடும். இங்கே பல சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், திருமணத்தடை உள்ளவர்கள் இந்த சன்னதிக்கு வந்து முதலில் இங்கிருக்கும் விநாயகருக்கு தேங்காய், பழம், சர்க்கரை, நெய்விளக்கு வைத்து அர்ச்சனை செய்யணும். அப்புறமா சுவாமிக்கும், அம்பாளுக்கும் பூஜை செய்யவேண்டும். தேங்காய் ஒன்று, பழம், சுவாமிக்கு இரண்டு மாலை, அம்பாளுக்கு மாலை ஒன்று, மஞ்சள், குங்குமம், எலுமிச்சை பழம் ஆகியவற்றை அர்ச்சகரிடம் கொடுத்து  அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி செய்தால் திருமண தடை உள்ளவர்களுக்கு உடனே திருமணம் நடக்கும். பின் அர்ச்சனை செய்த மாலையைப் பத்திரப்படுத்தி வைத்து திருமணம் நடந்த உடன் சன்னதிக்கு வந்து அர்ச்சனை செய்து பழைய மாலையை அர்ச்சகர் கையாலே திருக்குளத்தில் சமர்ப்பித்து விடவேண்டுமென்பது கோவில் மரபு.
நாமக் கோவில் கொடி மரத்தின் தரிசனம் செய்யலாம் வாங்க. முழுவதும் தங்கத் தகடுகளால வேயப்பட்டு, விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்கிறது இந்த கொடிமர மண்டபம். சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு எதிரில் உள்ள இந்த மண்டபத்தில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தின் நடுவில் தங்கக் கொடி மரமும்,  நந்தியும், பலிபீடமும் உள்ளன. சுற்றிலும் உள்ள எட்டுத் தூண்களிலும் அற்புதமான சிலைகள் உள்ளன. சங்கரநாராயணர், சோமாஸ்கந்தர், அர்த்தநாரீஸ்வரர் போன்ற தோற்றங்களும் திருமாலின் தசாவதாரக் காட்சிகளும் அழகா சிற்பங்களா இருக்கு. அதைவிட,  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணச் சிற்பம் பார்க்கவே ரொம்ப அழகா பெரிய அளவில் செதுக்கபட்டு இருக்கு.
அக்கினி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் சிலாரூபங்களும், அடுத்தடுத்துள்ள தூண்களில் அழகாக செதுக்கபட்டு இருக்கு. நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சுந்தரேஸ்வரர்.  சொக்கநாதர் என்று அறியப்படும இத்தல இறைவன். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கம்.

ஊர்த்துவதாண்டவர், காளியின் சிலாரூபங்களும் மிகவும் அழகுடன் காட்சி அளிக்கின்றன. அங்குள்ள ஒரு வயதான பெண்ணின் சிலை காஞ்சனமாலான்னு சொல்கிறாங்க. இந்த வயதான தாய், மீனாட்சியை வளர்த்தவராவார். தன் மகளை ஒரு ஆண்டிக்கு (சிவபெருமான்) மணமுடித்துவிட்டோமே என்று அவர் கவலைப்படுவதாக அர்த்தப்படுத்தப்பட்டு இருக்கும் விதமாக அமைந்து உள்ளது இச்சிலை.
இப்ப நாம சுந்தரேஸ்வரர் சன்னதி சுற்றுக்குள் செல்லலாம் வாங்க. இங்கே எல்லாம்வல்ல சித்தர் சன்னதி இருக்கிறது. இந்த எல்லாம்வல்ல சித்தர் அங்கே உள்ள மக்களுக்கு பல்வேறு சித்துக்கள் செய்தாராம். கண்பார்வை இல்லாதவருக்கு கண் பார்வையும், பேச முடியாதவர்களை பேசவும் வைத்திருக்கிறார்.  அதைக் கேள்விப்பட்ட மன்னன் அவரை சபைக்கு அழைத்தானாம்.  அதை மறுத்த சித்தர் ஒருநாள் ராஜாவும், அவரும் கோவிலில் நேருக்கு நேர் சந்திக்கவேண்டிய சூழலில் மன்னன் அவரது சக்தியை சோதிக்க என்னினானாம்.  சித்தரிடம் ஒரு கட்டு கரும்பை கொடுத்து இந்த கல்யானைக்கு சாப்பிடக் கொடுக்கமுடியுமான்னு கேட்க...., எல்லோரும் ஆச்சரியப்படும் வண்ணம், அந்தக் கல்யானை கரும்பைத் தின்னது மட்டுமின்றி, மன்னன் கழுத்தில் உள்ள முத்து மாலையையும் தன் தும்பிக்கையை நீட்டி எடுத்ததாம். தன் தவறை உணர்ந்த மன்னவன் சித்தரின் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார். அந்தச் சித்தரின் நினைவாக இந்த சன்னதி எழுப்பப்பட்டுள்ளதாம். இன்றும் எல்லா வரம் கொடுக்கும் சித்தரின் திருவிளையாடல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த பிரகாரத்தின் தெற்கு சுற்றில் தட்சிணாமூர்த்தி உள்ளார். அவருக்கு அருகிலேயே உத்சவ விக்கிரகங்கள் இருக்கும் அறையும் இருக்கு. பிரகாரத்தின் மேற்குப் பகுதியின் கடைசியில் மார்பிள் கற்களால் ஆன காசி மற்றும் பெனாரஸ் விஸ்வநாதரைக் காணலாம். அந்தச் சிலைகள் காலம் சென்ற பெனாரஸ் மன்னர் ஒருவரின் தென்னிந்திய புனித யாத்திரையின்போது அவர் மதுரைக்கு வந்தபோது கொடுத்து. இந்த சுற்றினுள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை . 

அதன் வடக்கு பாகத்தில்  துர்கையம்மன் சன்னதி இருக்கு. அதற்கு அடுத்து ஒரு கடம்ப மரம் உள்ளது. இந்த மரத்தின் அடியில் இந்திரன் அமர்ந்து, சிவனை சிந்தித்து வழிபட்டதாகக் சொல்லபடுகிறது.  இன்னமும் அந்த மரம் கவனமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த நடைப்பாதை மூலையில் ஒரு சாட்சிக் கிணறு இருக்கு.


இப்ப நாம உள் பிரகாரத்திலிருந்து கருவரைக்கு முன் உள்ள மரத்தினாலான மேடை போன்ற அமைப்புடைய பாதையில் நிற்கிறோம். இப்ப நமக்கு வலப்பக்கம் இருக்கிற பளபளப்பான மண்டபம் தான் வெள்ளி அம்பலம் என்ற பெரிய மண்டபம். வெள்ளி அம்பலம்னா என்னனு தெரிஞ்சுக்கலாம்...,

முதலில் அம்பலத்தாடும் அய்யன் பஞ்ச சபைகளுள் முதன்மையானது பொன்னம்பலம். அது தில்லையிலே இருக்கு. பஞ்ச சபைகளுள் இரண்டாவது, வெள்ளியம்பலம். அது மதுரைல இருக்கு.  அடுத்து தாமிர  அம்பலம். அது திருநெல்வேலிலயும், அதனை அடுத்த அம்பலம்  ரத்னசபை திருவாலங்காட்டினிலும், அதனை அடுத்த சித்திரசபை குற்றாலத்திலும் இருக்கு.  ஐந்து சபைகளிலே மதுரையின் வெள்ளியம்பலதிற்க்கு என்ன சிறப்புன்ன நடராஜ பெருமான் கால்மாற்றி ஆடும் திருகோலம் இங்குதான் நிகழ்ந்தது.

மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருமணத்தைக் காணவந்த பதஞ்சலி முனிவரும்,  வியாக்கிரபாதர் முனிவரும் சிதம்பரம் நடராசனின் ஆனந்த தாண்டவத்தைக் காணாமல் உணவு உண்ண மறுக்க, சிவன் அவர்களுக்காகத் தனது ஆடியக் கோலத்தை மதுரையில் காட்டியருளிய இடம் வெள்ளியம்பலம் என சொல்லபடுகிறது. இந்த  வெள்ளியம்பலத்தின் இருபக்கத்திலும் பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதர் முனிவரும் ஐயனைத் தொழுத நிலையில் இருக்கிறாங்க. நடனக் கலையைக் கற்ற பாண்டிய மன்னன் இராஜசேகர பாண்டியன், நடனமாடுவதில் உள்ள சிரமத்தை உணர்ந்தான். வெள்ளியம்பலத்தில் உள்ள நடராசர் ஒரு காலில் எப்பொழுதும் நின்றபடி ஆடுவதால் அவருக்குக் கால் வலிக்குமே என்று கருதி அவரிடம் காலை மாற்றி ஆடும்படி அன்பின் மிகுதியால் வேண்ட அவனுக்காக  இடதுகாலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடினதாகத் திருவிளையாடற் புராணம் ( திருவிளையாடற் புராணம் -கால் மாறி ஆடிய படலம்)த்தில் சொல்லப்பட்டு இருக்கு.
நாம இப்ப சுந்தேரேஸ்வரர் கோவில் கருவறைக்குள் இருக்கிறோம். விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாக வரலாறு. அவன் பெயரிலேயே இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. இந்த கருவறையைப் பத்தின சுவையான தகவல் ஒன்று உண்டு. மீனாட்சி அம்மன்  கோயிலில் சொக்கநாதர் கருவறை 48 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தது. 1330ம் ஆண்டு ஒரு முஸ்லிம் படையெடுப்பின்போது அம்பாளையும், சுவாமியையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது. கோயில் ஸ்தானிகர்கள் கருவறை வாயிலை, கற்சுவர் கொண்டு மூடி, கருவறைக்கு முன்பு அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை அமைத்தனர். முஸ்லிம்கள்  அந்த சிலைதான் சுந்தரேஸ்வரர் என்று நினைத்து அதை சிதைக்க முற்பட்டனர். சுந்தரேஸ்வரர் சன்னதி 48 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது.

கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களை வென்று மீண்டும் கருவறையை திறக்க ஏற்பாடு செய்தார். அப்போது 48 ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட சந்தனம் நறுமணம் வீசியது. சிவலிங்கத்தின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்துகொண்டு இருந்ததாம். சிதைக்கப்பட்ட லிங்கத்தில் இப்பவும் கம்பி கொண்டு இடித்த தடங்கள் இபோழுதும் இந்த லிங்கத்தில் பார்க்கலாம் அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டி, பிரகாரத்தில் உள்ளது. அதன் அருகிலேயே இந்த வரலாறும் இடம் பெற்றுள்ளது.
பொன்னாலான தாமரையையே தன் சன்னிதியில் கொண்டிருக்கும் இறைவனுக்கும், இறைவிக்கும்,  தூய தாமரை மலர்களை இறைவனின் பாதத்தில் சமர்பித்துவிட்டு, இருவரின் அருளாசியோடு புண்ணியம் தேடும் நம் பயணத்தைத் தொடரலாம்.....,

Friday, March 14, 2014

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் பாகம் 2 - புண்ணியம் தேடி

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் நாம இரண்டாம் நிலையில் இருக்கும் முக்கியமான ஐந்து இடங்களை போன வாரம் திவில் பார்த்தோம். பார்க்காதவங்க ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துட்டா ,பதிவைத் தொடர வசதியாய் இருக்கும்.  கோவில் பற்றிய விரிவான வரலாற்று சம்பவங்களையும், பெருமைகளையும் பார்க்கலாம். இந்த வாரம் புண்ணியம் தேடி பதிவில் கிழக்கு வாசல் வழியே ராஜகோபுரம் தாண்டி அம்மன் வாசல்னு சொல்லபடுகிற அஷ்ட சக்தி மண்டபத்திற்கு செல்லலாம். வாங்க!

இதற்கு அஷ்ட சக்தி வாசல்ன்னு ஏன் சொல்றாங்கன்னா, இந்த மண்டபத்தில் அன்னை மீனாட்சியை எட்டு விதமான சக்திவடிவில் தரிசிக்கலாம். திருமலை நாயக்கரின் பட்டத்து ராணி ருத்ரபதி அம்மையாரால் இந்த மண்டபம் கட்டப்பட்டது. ஒரு காலத்தில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு ஓய்வு எடுக்கவும், உணவு வழங்கவும் இந்த மண்டபத்தை பயன்படுத்தினார்கள். இந்த மண்டபத்தின் மேற்பக்கம் அன்னை மீனாட்சியின் திருவிளையாடல்கள் பத்தின சிற்பங்கள் இருக்கு.    இதில் மீனாட்சி அம்மனின் பிறப்புவாழ்க்கை,   மதுரையின் இளவரசியானது போன்றவை சிற்பங்களாக வடிவமைக்க பட்டுள்ளன.

அடுத்து வருவது மீனாட்சி நாயக்கர் மண்டபம். இது திருமலை நாயக்கரின் அமைச்சர்களில் முக்கியமான மீனாட்சி நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டதுனால இது மீனாட்சி நாயக்கர் மண்டபம்ன்னு சொல்றாங்க.  இந்த மண்டபம் ஆறுவரிசை தூண்களால் தாங்குகிற மாதிரி கட்டப்பட்டு இருக்கு. இதில் 110-க்கும் மேற்பட்ட யாளி-சிங்க உடலும் யானை முகமும் கொண்ட யாளி சிற்பங்கள் இருக்கு. இதுவா மீனாட்சி நாயக்கரின் சிலைன்னு கேட்காதீங்க ஒரு தகவலுக்கு இணைக்கப்பட்ட படம் அவ்வளவுதான். 

அடுத்து ஆடிவீதி, அதனை அடுத்து மீனாட்சி நாயக்கர் மண்டபத்திற்கு மேற்கில் ஏழு அடுக்குகள் கொண்ட சித்ரா கோபுரம் இருக்கு.  உள்ளே இருக்கிற கோபுரங்களில் உயரமானதும், கலைநயம் கொண்டதும் இதுதான். இந்த கோபுரத்தில் கிட்டத்தட்ட 730 அழகிய சின்னஞ்சிறிய சிலைகள் இருக்கு. சித்ரா கோபுரம் வழியே சென்றால் வருவது முதலி மண்டபம். இதில் . சிவன் பிக்ஷாந்தராக உள்ள சிற்பம், மோகினியின் சிற்பங்கள், தாருகா காடுகளின் முனிவர் ஒருவரது சிலை போன்றவை இருக்கு.

இனி உள்பக்கம் இருக்கும் இரண்டாம் நிலை சுற்றில் நாம பார்க்கபோறது
1. பொற்றாமரைக்குளம்
2. ராணி மங்கம்மாள் மண்டபம்
3. ஊஞ்சல் மண்டபம்
4. கிளிக்கூண்டு மண்டபம்

தெற்கு  வாசல் வழியா கோவிலுக்குள் வந்தோம்னா நேரே  இந்த 0x60 மீட்டர் அளவுள்ள பொற்றாமரைக் குளத்திற்கு  வந்திடலாம்.  இந்தக் குளத்தைச் சுற்றி நாலுபக்கமும் தூண்கள் கொண்ட பாதை இருக்கு. அதிலிருந்து இந்தக் குளத்தை முழுமையாகப் பார்க்கலாம். இந்த நடைப்பாதையை சுற்றி நிறைய படங்கள் வரையப்பட்டு இருக்கு.

குளத்துக் கரையில் உள்பக்கம் கிழக்கு நோக்கிய வகையில் ஒரு சிவலிங்கம் இருக்கு. அதை அழகாக அலங்கரிக்கப்பட்டு பரிவட்டம் கட்டப்பட்டு இருந்தது. ஆனா அதனை பற்றிய தெளிவான வரலாறு கிடைக்கல. கோயிலுக்கு வர்றவங்க மாலை வேளையில இங்கே அமர்ந்து தண்ணீரில் தெரியும் நான்கு கோபுரங்களின் பிம்பங்களையும் பார்க்கலாம். இந்த குளத்தின் கீழ் பக்கமும் சிமன்ட் தளம் அமைச்சு இருகிறதனால குளத்துல மீன்கள் இல்லைன்னு நினைக்கிறேன்.

மேலும், இங்கே எந்த தாமரை மலரும் இல்லை. அதற்க்கு ஒரு கதை  சொல்லுவாங்க. இந்திரன் பூலோகம் வந்த போது இந்தக் குளத்தில் இருந்துதான் தாமரை மலரை பூஜைக்காக பறித்து வந்ததாக ஐதீகம். முன்னொருக் காலத்தில் இந்தக் குளத்தின் அருகில் ஒரு கொக்கு தவம் செய்ததாம். அப்போது இக்குளத்தில் உள்ள மீன்கள் சும்மா இருந்த அந்த கொக்கை சீண்டி விளையாட்டினவாம். ஆனால் கொக்கு அதை கண்ண்டுக்காம கருமமே கண்ணாயினர் போல முக்தி அடையும் வழியை மட்டும் மனதில் கொண்டு தவம் செய்ததாம். பிறகு அது முக்தி அடைஞ்சவுடனே தனக்கு மாதிரி வேற யாருக்கும் தொந்தரவு இருக்க கூடாதுன்னு  "இந்தக்குளத்தில் எந்த உயிரினமும் இருக்கக் கூடாது " ன்னு இறைவனிடம் வரம் வாங்கிச்சுன்னும், அதனாலதான் இந்த குளத்தில வேறு எந்த உயரினமும் இல்லன்னும் ஒரு கதை உண்டு.

அடுத்து பார்க்கப்போறது ராணி மங்கம்மாள் மண்டபம். 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள், 15 ஆண்டுகாலம் மதுரையை சிறப்பாகவும், வீரமாகவும் ஆட்சி செய்தார் அவர் பின்னாளில் சதிகாரர்களால் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்தார் எனபது வரலாறு. இந்தக் குளத்தில் இவர் கட்டிய ஒரு மாடம் இருக்கு. குறிப்பிட்ட சில விழாக்களின் போது மட்டும்  இறைவனும் இறைவியையும் இந்த மண்டபத்தில் வைத்திருப்பார்கள்.  மேல்கூரையில் மங்கம்மாள் அரசி, அவரது பேரன் சொக்கநாதர், தளபதி ராமய்யன் தளவாயின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தில் ராணி, அவரது அமைச்சர் ராமய்யன், அவரது பேரன் விஜயரங்கச் சொக்கநாதர் ஆகியோரது சிலைகள் உள்ளன. ராணி மங்கம்மாள் காலம் முதற்கொண்ட பல ஓவியங்கள் இம்மண்டபத்தில் உள்ளன.

ராணி மங்கம்மாள் மண்டபத்திற்கு எதிரே ஒரு மண்டபம் இருக்கு. அதன் விதானத்தில் ஒரு ஊஞ்சலும் இருக்கு. இதுதான் ஊஞ்சல் மண்டபம். இந்த இடத்தில்தான் மீனாட்சி-சுந்தரேசுவரர் விக்கிரகங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6.00 மணிக்குக் கொண்டுவரப்பட்டு சம்பிரதாய ஊஞ்சலாட்டு நடத்தப்படுகிறது. தெய்வத்திருப்பாடல்கள் இசைக்க, மீனாட்சி அம்மாவும், சுந்தரேசுவரரும் ஊஞ்சலாடுவது பார்க்க நல்லா இருக்கும். இந்த சிலைகள் கூட 16ஆம் நூற்றாண்டிலிருந்து, அதாவது விஸ்வநாத நாயக்கர் காலத்திலிருந்தே வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மண்டபத்தின் அருகில் உள்ள மேற்குக் கரையின் கூரையில் உள்ள தற்கால ஓவியங்களும், பக்கவாட்டில் உள்ள சுவற்றில் சிவனின் திருவிளையாடல்களை நினைவுப்படுத்தும் சிலைகளும் இருக்கு.

பொற்றாமரைக் குளத்திற்கு வடமேற்கில்இருக்கிறது. கிளிக்கூண்டு மண்டபம். இந்த மண்டபத்தில் 28 ஒரே கல்லினால் ஆன தூண்களும், அதில் இதிகாசங்களை நினைவுப்படுத்தும் பாண்டவர்கள், வாலி, சுக்ரீவன் இவங்களது சிலை உருவங்களும், அவர்களைத் தொடர்ந்து வரிசையாக  யாளி சிலைகளும் இருக்கு. இந்த சிலைகள் விஜயநகர மன்னர்கள் வடித்ததாகச் சொல்றாங்க.  இதுல என்ன விஷேஷம்னா கோவிலின் ஒவ்வொரு கூடத்திலும் குறைஞ்சது நான்கைந்து தூண்களாவது விஜயநகரக் கலைப்பாணியைச் நமக்கு உணர்த்துகிறது. இந்த மண்டபத்தின் தெற்கு மூலையில் விநாயகர் சன்னதி இருக்கு.

அடுத்து இரண்டாம் நிலை பிரகாரத்தில் முக்கியமாக நாமப் பார்க்கப் போறது அன்னை மீனாட்சி சன்னதி.  இந்த சன்னதி வாசலில் உள்ள விநாயகர், சுப்ரமணியரை வணங்கிவிட்டு சன்னதிக்கு செல்லும் போது அங்கே இந்துக்கள் அல்லாதோர் நுழைய வேண்டாம் என ஒரு வாசகம் இருக்கு. மேலோட்டமாக பார்த்தால் அது தவறாக தோணும். ஆனா, உண்மையில் இந்த கோவிலின் அமைப்பு சக்கரத்தின் சக்தியிலயும், நம்பிக்கையின் அடிப்படையிலும், அதற்கு மேலே பவித்ரம் மிகவும் முக்கியம்.  சும்மா வேடிக்கை பார்க்க செல்பவர்களால் அங்கே நன்மை செய்யும் எண்ண அலைகளுக்கு தீமை உருவாகக்கூடும் என்பதற்காக வைக்கபட்டுள்ளதே தவிர, யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு அல்ல.


இந்துக்களாக இருந்தாலும் யார் பயபக்தியும், பவித்ரமும் இல்லாமல் செல்கிறார்களோ அவர்களும் இந்துக்கள் அல்ல என விளக்கம் சொல்வார் ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி.சிவம் அவர்கள். இங்கே உள்பிரகாரத்தில் தெற்குப் பக்கம் திருமலை நாயக்கரின் பெரிய சிலை வடிவம் இருக்கு இங்கே பெரியபுராண சிற்பங்கள் அறுபத்துமூவரின் காட்சிகள் எல்லாம் தரிசிக்கலாம்.

அடுத்து அம்மனைத் தரிசிக்கச் செல்லும் வரிசையில் நிற்கும் போது ஒரு பெண்மணி மீனாட்சியின் ஸ்தல புராணத்தை சொல்லிகொண்டு வந்தார் அவங்க சொன்னது மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனுக்கு வெகு நாட்களாக குழந்தைப் பிறக்கவில்லை. அதனால மன்னன் வாரிசு வேண்டி பல யாகங்கள் செய்தான். அப்ப அந்த யாகத்தீயிலிருந்து மூன்று வயது குழந்தை மீனாட்சி வந்ததாம் . ஆனால் அந்தப் பெண்ணிற்கு மூன்று தனங்கள் இருந்ததாக இருந்ததாம். இதனால்  மலையத்வஜ பாண்டிய மன்னன் குழப்பமும் பயமும் அடைந்தான். அப்போது வானத்தில் ஒரு அசரீரி கேட்டது. மீனாட்சி எப்போது தன் துணையைக் காண்கிறாளோ அப்போது அந்தக் குறை காணாமல் போகும் என்று.

சிறிய வயதிலையே மிகவும் வீரம் மிக்க இளவரசியாக வளரத் தொடங்கினாள் மீனாட்சி. சின்னவயசிலேயே அரசுப் பொறுப்பை ஏற்று மதுரையை ஆட்சி புரிந்தாள். எல்லாத் தேவர்களையும் போரில் தோல்வியுற செய்தாள் மீனாட்சி.  கடைசியாக கைலாயம் சென்று சிவனைப் போருக்கு அழைத்தாள். அங்க இறைவனை கண்டவுடன் தன் மனதை அவரிடம் பரிகொடுத்தாள். அன்னை மீனாட்சி இறைவனை கண்டதும்  தன் மூன்றாவது தனம் மறைந்தது. அப்போதுதான் தான் யாருமல்ல, சிவனுடன் ஐக்கியமான பார்வதி தேவி என்பதை உணர்ந்தாள். அதன் பிறகு சிவன் மதுரையின் அரசனாக பூலோகத்திற்கு வருகிறார். மதுரையை சில காலம் ஆண்ட பின், மீனாட்சி அம்மன் கோயிலில் அவர்கள் தெய்வங்களாக ஐக்கியமாகி மதுரையை ஆண்டு வருவதாக அந்த அம்மா சொன்னாங்க. இந்தச் செய்திகள் அனைத்தும் அஷ்ட சக்தி மண்டபத்தில் சிற்பங்களாக வடிக்கப்பட்டு வர்ணம் பூசப்படடு இப்பொழுது சென்றாலும் பார்க்கலாம்.
  
ஒருவழியாக மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தால், திருமூர்த்தி நாயனார் வரலாறு சொல்லப்பட்டு இருக்கு. மதுரையில் உள்ள ஒரு வணிகர் குலத்தில் அவதரித்த திருமூர்த்தி நாயனார். அவர் இறைவனுக்கு தினமும் சந்தனக்காப்பு செய்து வணங்குவார்.அந்த சமயத்தில் மதுரையை கர்நாடக மன்னன் கைப்பற்றி ஆண்டுவந்தான். அவன் சமணர் பக்கம் சார்ந்து சிவனடியார்களுக்கு எல்லாம் தொல்லை கொடுத்தான்.  இவருக்கும் தீமை செய்தான்.

ஒரு சமயத்தில், இறைவனுக்கு சந்தன காப்பு செய்ய அவருக்கு சந்தனக் கட்டை கிடைக்காமல் செய்தான். ஆதிருமூர்த்தி நாயனாரும் மிகவும் மனம் வருந்தி தன் கையையே கல்லில் வைத்து தேய்த்தார். ரத்தமும் சதையுமாக நாற்புறமும் தெறிக்க அவர் வேதனயுடன் இறைவனுக்காக தன கையையே அரித்தபோது அவருடைய பக்தியை மெச்சி இறைவன் அவர்முன்னே தோன்றி அப்பனே இந்த பாண்டிய நாட்டின் அரசனாக ஆட்சி செய்து பின் என்னை வந்து சேர்வாயாக என கூறி மறைந்திருக்கிறா.


 அன்றிரவே மதுரையை ஆண்டு வந்த மன்னன் இறந்தான். வாரிசு இல்லாத காரணத்தால், பட்டத்து யானையின் கண்களை கட்டிக்கொண்டு அது யாருக்கு மாலை இடுகிறதோ அவரை மன்னனாக முடிவு செய்தபோது பட்டத்து யானை நேராக திருமூர்த்தி நாயனார் கோவிலில் இருந்தபோது அவருக்கு மாலை சார்த்தி தன் முதுகில் சுமந்து அரசவையை அடைந்தது. பின்னர், அவர் அரசனாகி இறைவனுக்கும் மக்களுக்கும் தொண்டு செய்தார். திருமூர்த்தி நாயனார் கையைத் தேய்த்த கல் இந்தக்கல்தான் என சொல்கின்றனர். 

மீனாட்சியை தரிசனம் செய்யும் முன் பொற்றாமரை குளத்தின் தெற்கு கரையில் வீற்று இருக்கும் இந்த தீருநீறு விநாயகரை பத்தி முழுமையாக தெரியவில்லை. அருகம்புல் சார்த்தி முழுவதும் திருநீரினால் அபிஷேகம் செய்யபட்டு இருக்கிறார் இந்த குளக்கரை விநாயகர்.  வர்றவங்க எல்லாம் அந்த திருநீரை எடுத்து செல்கின்றனர். இதுபற்றிய விவரங்களும் தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லலாம். மீனாட்சி அம்மையை தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது சண்டிகேஸ்வரர் இருக்கிறார். அவரையும் தரிசனம் செய்யலாம். வாங்க! 

இனி நாம மீனாட்சி சன்னதி வழியாக இறைவன் சுந்தரேஸ்வரர் சன்னதிக்குள் செல்லலாம். இந்த சுந்தரேஸ்வரர் சன்னதிக்குள் நுழையும் முன் நாமப் பர்ர்க்கப் போற இடங்கள் நிறைய இருந்தாலும் இதில் 5 இடங்கள் முக்கியமா நாம தரிசனம் செய்யணும். அது...,
1.முக்குருணிப் பிள்ளையார்
2.சுந்தரேசுவரர் கோயில் பிரகாரங்கள்
3.எல்லாம் வல்ல சித்தர்
4.சாட்சிக்கிணறும் சாட்சி லிங்கமும்
5.வெள்ளியம்பலம்
இந்த வெண்தாமரை மலரை இறைவனின் பொற்பாதங்களில் சமர்ப்பித்துவிட்டு மீண்டும் அடுத்தவாரம் மேலே சொன்ன ஐந்து பிரகாரங்களையும், சுந்தரேஸ்வரர் சன்னதியையும் புண்ணியம் தேடிப் போறப் பதிவில் பார்க்கலாம்.

நன்றி! வணக்கம்!