பிள்ளைகள் எத்தனை வளர்ந்தாலும் பெற்றோருக்கு குழந்தைதான்.. கருத்தரித்ததை உணர்ந்தது, கருவின் முதல் அசைவு, மசக்கை தொந்தரவு, உடல் உபாதைகள், பிரசவ வலியை தாங்கவேண்டுமென்ற பயம் என தாய் ஒரு பக்கமும், மருத்துவ செலவு, புதுசாய் ஜனிக்கும் குழந்தைக்கும் சேர்த்து பொருள் ஈட்ட என தந்தை ஒருபக்கமும் வெவ்வேறு பக்கம் பயணித்தாலும் தன் குழந்தை இந்த மண்ணில் ஜனிக்க போகும் அந்த நொடிக்காக காத்திருப்போம். அக்குழந்தை ஜனித்த முதல் நொடியில் இருவர் பட்ட கஷ்டமெல்லாம் மறந்து என்னமோ இமாலய சாதனை புரிந்தமாதிரி அத்தனை பரவசப்பட்டிருப்போம். அந்த பரவசத்தினை ஒருமுறை அனுபவித்தால் போதுமா?! ஒவ்வொரு நொடியும் அனுபவிக்க ஆசைதான். ஆனால், யதார்த்தம் அதற்கு ஒத்துவராது. அதனால்தான் பிறந்த நாள் என ஒன்றினை இறைவன் படைத்தானோ என்னமோ?!