Friday, October 14, 2016

குருவும் பன்றியும் (மனித வாழ்வு ) - நன்னெறி கதைகள்

ஒரு ஊரில் ஒரு பெரிய துறவி இருந்தார்..அவர் இளம் வயதிலேயே ஐம்புலன்களை அடக்கி தவநெறி தவறாமல் ஞான ஜோதியாய் வாழ்ந்தார். ஊருக்கு வெளியே அவருடைய ஆஸ்ரமம் இருந்தது. ஏராளமான சீடர்கள் இருந்தார்கள்.
ஆஸ்ரமத்துக்கு அருகில் பன்றி ஒன்று, தன் குட்டிகளுடன் வசித்து வந்தது. அதைத் துரத்த துறவியின் சீடர்கள் எவ்வளவோ முயற்சித்தார்கள். அது அசைந்து கொடுக்கவில்லை."பரவாயில்லை, இருந்துவிட்டுப் போகட்டும். பன்றியும் இறைவன் படைப்புத்தானே! அது தன் வாழ்க்கையை வாழட்டும்! நாம் நம் வாழ்க்கையை வாழ்வோம்,'' என்று சொல்லிவிட்டார் துறவி. ஆனாலும், பன்றியோ அதன் குட்டிகளோ ஆஸ்ரமத்திற்குள் நுழைந்துவிட முடியாதபடி ஆஸ்ரமத்தின் வெளிப்புறக் கதவைப் பலப்படுத்தினார்கள். 
காலம் நகர்ந்தது. துறவி தினமும் காலையிலும் மாலையிலும் சீடர்கள் புடைசூழ சற்றுத் தொலைவில் இருந்த ஆற்றுக்குக் குளிக்கச் செல்வார். அப்படிப் போகும்போதும் வரும்போதும் அந்தப் பன்றியின் குடும்பத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்.அசிங்கத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் பன்றிக் குட்டிகளைப் பார்த்துத் துறவியின் சீடர்கள் முகம் சுளிப்பார்கள்.
""இறைவன் ஏன்தான் இந்த ஈனப் பிறவியைப் படைத்தானோ குருதேவா! பார்க்கும்போதே வயிற்றைக் குமட்டுகிறதே! பாருங்கள்! பன்றிக்குக்   கொஞ்சமாவது சுத்த உணர்வு இருக்கிறதா என்று !'' என்றான் பிரதான சீடன்.
""தவறு செய்கிறாய் மகனே! மனிதனின் கண்களைக் கொண்டு பன்றியின் வாழ்க்கையைப் பார்க்கிறாய். அதனால்தான் உனக்கு அருவருப்பாக தெரிகிறது. பன்றிக்கு அதன் வாழ்க்கை சொர்க்கம்தான். ஒருவேளை அந்தப் பன்றிகள் நம்மைப் பார்த்து, ""இறைவன் ஏன்தான் இந்த ஈனமான மனிதப் பிறவியைப் படைத்தானோ?'' என்று பேசிக்கொண்டிருக்கிறதோ என்னவோ! யாருக்குத் தெரியும்?''துறவியை பன்றிகளின் வாழ்க்கை அதிகமாக ஈர்த்தது. அவை தினமும் உணவு தேடும் அழகைப் பார்த்துக் கொண்டு இருந்தார். பன்றியின் குடும்பம் பெருகியது. அவ்வப்போது அந்தப் பன்றிகளுக்கு ஆஸ்ரமத்திலிருந்து உணவும் அளிக்கச் சொல்வார் துறவி.
காலம் ஓடியது. துறவி நோய்வாய்ப்பட்டடார். இன்னும் சில நாட்களில் தனக்கு மரணம் சம்பவிக்கப் போகிறது என்பதைத் தன் ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டார். அவருக்கு இருந்த அபரிமிதமான யோக சக்தியால், தான் அடுத்த பிறவியில் ஒரு பன்றியாகப் பிறக்கப் போகிறோம் என்பதையும் தெரிந்து கொண்டார். அதுவும் ஆஸ்ரமத்திற்கு அருகில் வசித்து வந்த பன்றிக்கூட்டத்திலேயே பிறக்கப் போகிறோம் என்பதைத் தன் நுண்ணுணர்வால் உணர்ந்து கொண்டார்.திடுக்கிட்டார்... இறைவனை வேண்டினார். "வாழ்நாள் முழுவதும் தவநெறி தவறாமல் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?' என்று புலம்பினார்.  

""நாளெல்லாம் நீ பன்றிகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால் ஒரு பிறவி மட்டும் நீ பன்றியாகப் பிறந்து பன்றி வாழ்க்கை வாழ வேண்டும். அந்த வாழ்க்கையை உடனே முடித்துக் கொண்டால், அதன்பின் உனக்குப் பிறவி கிடையாது. நேராக என்னிடம் வந்து விடலாம். ஆனால், பன்றி வாழ்க்கையில் திளைத்து உன் உண்மை நிலையை மறந்தால் உனக்கு விமோசனமே இல்லை.'' என்று இறைவன் மனமொழியாகப் பேசியருளினார்.
தான் இறக்கப் போகும் நேரம் நெருங்கியவுடன் மற்ற சீடர்களை வெளியே அனுப்பிவிட்டுப் பிரதான சீடனிடம் ரகசியக் குரலில் பேசினார்.""அப்பனே! இது தேவ ரகசியம். வேறு யாரிடமும் சொல்லிவிடாதே. நான் இன்று இரவு சாகப் போகிறேன். உடனே எதிரே வசிக்கும் ஒரு பெண் பன்றியின் கருவில் நுழைவேன். குறித்த காலத்தில் ஒரு பன்றிக் குட்டியாகப் பிறப்பேன். நீ பன்றிக் கூட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும். நமது சாஸ்திரங்களின்படி ஒரு பன்றியின் கர்ப்பகாலம் 120 நாட்கள். இன்றிலிருந்து 120 நாட்களில் பிறக்கப் போகும் குட்டியை அடுத்த இரண்டு மூன்று தினங்களில் கொன்றுவிடு. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பன்றியின் வாழ்க்கையை இரண்டு நாளாவது வாழ்ந்து .பார்த்துவிடுகிறேன்.''என்றார் குரு
அன்று இரவே துறவி மாண்டார். பன்றியின் கருவினுள் புகுந்தார். துறவியின் பிரதான சீடன் கையில் கத்தியுடன் காத்திருந்தான். குறித்த காலத்தில் பன்றி குட்டி போட்டது. தன் குருவின் மேல் உள்ள கருணையினால் அந்தப் பன்றிக்குட்டி ஒரு வாரம் நன்றாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டான் சீடன்.பிறகு ஒரு நாள், அந்தக் குட்டியைக் கொல்லக் கத்தியை ஓங்கியபோது பன்றியாக இருந்தும் யோக சக்தி நிறைந்த அந்தத் துறவி அழாத குறையாகக் கெஞ்சினார்.""பெரிய பிழை செய்துவிட்டேன். நான் சொன்னது எல்லாம் தப்பு. இந்தப் பன்றி வாழ்க்கைதான் எவ்வளவு சுகமாக இருக்கிறது தெரியுமா? இதை முழுமையாக வாழ விரும்புகிறேன்.''என சிஷ்யனிடம் மன்றாடினார் குரு .
""ஆனால் குருவே! நீங்கள் உடனே உயிரை விட்டால்தானே இறைவன் திருவடியை அடைய முடியும்?''""இறைவன் திருவடி யாருக்கு வேண்டும்? இந்தப் பன்றிக்குட்டியின் வாழ்க்கையைப் போல் இறைவன் திருவடி சுகமாக இருக்குமா என்ன? இது சொர்க்கமாக இனிக்கிறதடா! இனி நான் எடுக்கப் போகும் எல்லாப் பிறவிகளிலும் ஒரு பன்றியாகப் பிறக்கவே ஆசைப்படுகிறேன். என் கூற்றில் சந்தேகமிருந்தால் நீயும் வேண்டுமானால் ஒரு முறை பன்றியாகப் பிறந்துதான் பாரேன்.''தப்பித்தோம் பிழைத்தோம் என்று சீடன் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டான். 
அந்தத் துறவி செய்த ஒரே தவறு. தான் பிறந்த உடனேயே தன்னைக் கொன்றுபோட்டுவிட வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். இரண்டு நாட்கள் பன்றியாக வாழ்ந்து பார்க்கிறேன் என்று சொன்னார். அதில் பற்று வந்துவிட்டது.இந்தக் கதையில் ஒரு பெரிய வாழ்வியல் உண்மை ஒளிந்திருக்கிறது.இன்று பலரும் மது, புகை போன்ற தீய பழக்கங்களுக்கு எப்படி அடிமையாகிறார்கள் தெரியுமா? அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்றுதான் பார்ப்போமே என்ற ஆர்வத்தில் ஆரம்பித்துத் பின் அதைவிட்டு விலக முடியாத அளவிற்குத் தங்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள். இன்றைய இளைஞர் கூட்டம் மது, புகைப்பிடித்தல், தவறான உறவு என்று அனைத்தையும் ஒரு முறையாவது சுவைத்துப் பார்க்க விரும்புகிறது. 
அது இரண்டு நாட்கள் பன்றியாக வாழும் கதைதான். பன்றியாக இல்லாத வரைக்கும் தான், பன்றியைக் கண்டால் அருவருப்பாக இருக்கும். பன்றியாகிவிட்டால் அதுவே சுவர்க்க லோகமாக தான் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.விளையாட்டிற்குக் குடித்தாலும் விஷம், தன் வேலையைக் காட்டிவிடும். விஷம் என்று தெரிந்தபின் விலகி இருப்பது நல்லது.மீண்டும் ஒரு நன்னெறி கதைகளினூடே அடுத்தவாரம் உங்களை சந்திக்கிறேன் நன்றி ..


Thursday, October 13, 2016

அர்ஜுனன் ஏன் யுதிஷ்டிரரை கொல்ல நினைத்தார்? - தெரிந்த கதை தெரியாத உண்மை

நமது இருபெரும் காவியங்களான ,இராமாயணம் மற்றும் மகாபாரதம் இவை இரண்டிலும் பல சொல்லப்படாத திருப்பங்களும் சுவாரஷ்யங்களும் விந்தையான சில சம்பவங்களும் நிறைந்து இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சுவாரஷ்யமான சம்பவத்தைத்தான் நாம் இப்பொழுது நமது தெரிந்த கதை தெரியாத உண்மையில் பார்க்கப்போகிறோம்.
இந்து மதத்தில் மிகவும் சமயப்பற்றான காவியமாக கருதப்படுகிறது மகாபாரதம். பகவத் கீதையும் கூட இந்த காவியத்தின் ஒரு பகுதியே. மகாபாரதகதை சுவாரசியமானதோடு, மிகவும் விந்தையான ஒன்றும் கூட. மகாபாரதத்தில் பல பேருக்கு தெரியாத பல விஷயங்கள் அடங்கியுள்ளது. இதில் ,பீஷ்மரில் இருந்து ஆரம்பித்தால்,அதற்கு முன்பு இந்தகதை,இங்கே விவரிக்க முடியாத அளவு,நீண்டு கொண்டே ,செல்கிறது.அவர்களின் பரம்பரை அட்டவணையை பார்த்தால் ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு, சுவாரஸ்யமான வரலாறுகள் இருக்கின்றன..ஆனால் நமக்கு தெரிந்தது எல்லாம் ,கௌரவர்கள் 101 பேர் ,பாண்டவர்கள் 5 பேர்தான் ,ஆகவே முதலில் நமக்கு தெரிந்த இவர்களுக்குள் நடந்த தெரியாத கதைகளை, நமது தெரிந்தகதை தெரியாத உண்மையில் பார்க்கலாம். 
இப்படி ஒற்றுமையாக இருந்த ஐவரில் ,முதன்மையானவர்,தருமன்,அவரை யுதிஷ்டிரர் எனவும் அழைக்கப்படுவதுண்டு,அவர்மீது மற்ற தம்பியாரெல்லாம் பாசமாக இருந்தனர் என்கிறது மஹாபாரதம்.இருப்பினும் ஒரு சமயத்தில் அர்ஜுனன், யுதிஷ்டரை கொல்ல நினைத்தது நம்மில் பலருக்கும் தெரியாது,. அவரது பாசமிகு தம்பியான அர்ஜுனன்  யுதிஷ்டிரரை கொல்ல நினைத்தாரா? என கேட்கும் போது நமக்கே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.அது பற்றி இங்கே பார்க்கலாம்.
மகாபாரத யுத்தம் பாண்டவர்களுக்கும்,கௌவர்களுக்கும் பங்காளி சண்டையாக நடக்கிறது.ஒவ்வாரு நாள் யுத்தத்திலேயும் ஒவ்வொருவராக வீழ்த்த படுகின்றனர்.போர் தொடங்கிய பத்தாவது நாளில் ,பீஷ்மர் வீழ்த்தப்படுகிறார்.குரு துரோணாச்சாரியார் கூட பதினைந்தாம் நாளில் வீழ்த்தப்பட்டுவிட்டார் .அவருக்கு அடுத்தது யார் படையை தங்குவது என ஆலோசனை நடக்கிறது.கர்ணன் மட்டுமே எஞ்சி இருக்கிறான் எல்லோரும் ஒருமனதாக கூடி தேரோட்டி மகனாக வளர்ந்த கர்ணனை தலைமை தங்குமாறு சொல்கின்றனர்.துரியோதனனும்,அவன் வீரத்தை மெச்சி கௌரவர் படையை தலைமை தாங்க அழைக்கின்றான்.படை சேனாதிபதியானவுடனே பாண்டவ படைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றான் கர்ணன், பாண்டவப்படை திணறுகிறது.    .    
கர்ணனின் தொடர்தாக்குதலால் ,பாண்டவர் படை பெருமளவில் குறைகிறது.காற்றை போல் சுழன்று ,சுழன்று, பாண்டவப்படைகளுக்கு பேரழிவை ஏற்படுத்தினான் கர்ணன்.அதைக்கண்டு கோபமுற்ற யுதிஷ்டிரன்,ஒரு பெரும் சேனையுடன்,கர்ணனை தாக்க தொடங்கினான். கர்ணனின் தாக்குதலுக்கு முன்பு யுதிஷ்டிரரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை  கடுமையான போரில் யுதிஷ்டிரர் தாக்கப்பட்டார்.கர்ணனின் அம்புகளால் அவர் காயமடைந்தார்.உடனே அவரை சிறை பிடிக்குமாறு கர்ணனுக்கு ,துரியோதனன் உத்தரவு பிறப்பித்தான்.யுதிஷ்டிரர் காயமடைந்ததை கண்டு அவருடைய தேரோட்டி அவரை ,போர்க்களத்தில் இருந்து அப்புறப்படுத்தி வேகமாக வெளியேறினான்.அப்பொழுதும் துரியோதனன் ,கர்ணனிடம் ,யுதிஷ்டிரரை சுற்றி வழைக்க பரிந்துரை செய்தான் .தன தாய்க்கு கொடுத்த சத்தியத்தின் படி ,பஞ்ச பாண்டவர்கள் உயிருக்கு தன்னால் எந்த வித ஆபத்தும் வராது,என சத்தியம் செய்து கொடுத்துத்திருந்ததினால் கர்ணன்,அதில்அக்கரை காட்டவில்லை.துரியோதனனும், பிற போர் வீரர்களும் யுதிஷ்டிரரை பின் தொடர்ந்தனர்.
ஆபத்தான சூழ்நிலை உருவானதை புரிந்து கொண்ட நகுலனும், சகாதேவனும், அவர்கள் மீது அம்புமாரி பெய்து அவர்களை ,தடுத்து நிறுத்தினர்.கர்ணனிடம் தோற்றுப்போன யுதிஷ்டிரர் அவமானம் அடைந்தார். காயமடைந்த யுதிஷ்டிரரை உடனே போர்க்களத்தில் இருந்து ,நகுலனும் ,சகதேவனும் அப்புறப்படுத்தினர்.காயமடைந்த யுதிஷ்டிரரை தங்கள் பாசறைக்குள் கொண்டுவந்து ,சிகிச்சை அளிக்க தொடங்கினர்,இதை கேள்விப்பட்ட அர்ஜுனன் உடனே கண்ணனுடன் அங்கு விரைந்து சென்றான்.இருவரையும் ஒன்றாக கண்ட யுதிஷ்டிரர்,தம்பியுடையான் ,படைக்கு அஞ்சான் ,என்பதற்கிணங்க,   தன்னை போரில் தோற்கடித்த கர்ணனை அர்ஜுனன் ,தோற்கடித்து பழிக்கு பழி வாங்கி வெற்றியுடன் தன்னைவந்து காண்கிறான் என நினைத்து ,யுதிஷ்டிரர் ,அர்ஜுனனை ஆரத்தழுவினார்.
அர்ஜுனன் எப்படியும் ,கர்ணனை கொன்றுவிடுவான் என்று ஆவலுடன் இருந்தவருக்கு ,அவன் காயமுற்ற தன்னை பார்க்கத்தான் வந்துள்ளான். மற்றபடி கர்ணனை போரில் வெல்லவில்லை,என தெரிந்து கொண்ட யுதிஷ்டிரர் ,அர்ஜுனன்   மேல்  கோபம் கொண்டார் .அதனால் அவர் அர்ஜுனனை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டினார். அர்ஜுனனுடைய ஆயுதங்களை யாரிடமாவது கொடுத்துவிட சொன்னார். இதைக்கேட்ட அர்ஜுனனை கோபம் கொண்டு யுதிஷ்டிரரை கொல்ல பாய்ந்தான். அங்கே ஒருபெரிய களோபரம்மே நடந்தது 
பாணடவர்களை எள்ளி நகையாடியதை மேற்கோள் கட்டிய யுதிஷ்டிரன். அவனை கொன்றிருந்தால்,நம்முடைய எதிரி ஒழிந்தான் என சந்தோசப்பட்டு இருப்பேன் ,என கோப்பட்டார். இப்போது,குறுக்கே வந்த கிருஷ்ணர்,அர்ஜுனனை தடுத்து, உங்களுக்குள் ஏன் சண்டையிட்டு கொள்கிறீர்கள் .நீங்கள் சண்டையிட வேண்டியது  எதிரிகளிடம் மட்டும்தான் என கூறினார்.அதற்கு பதிலளித்த அர்ஜுனன்,தன் ஆயுதங்களை கொடுத்து விடும்படி யாராவது கூறினால் அவர்களின் தலையை எடுத்து விடுவதாக தான் போட்டிருக்கும் சபதத்தை பற்றி கூறினான்.இப்பொழுது நான் என்ன செய்வது என கிருஷ்ணரிடம், ஆலோசனை கேட்டான் ,அர்ஜுனன்.       
துரோணாச்சாரியாரை விட நம் பக்கம் அதிக அழிவு ,ஏற்படுத்தியவன் ,கர்ணன். அவன் இறந்தான் ,என்ற சேதி கேட்டால்தான் ,எனக்கு நிம்மதி.நீங்கள் இருவரும் வந்த வேகத்தை பார்த்தவுடன் ,அவனை கொன்று இருப்பீர்கள் என நினைத்தேன் என்றான்.சரி தன்னுடைய சபதமும் வீணாக கூடாது ,அதேசமயம் ,யுதிஷ்டிரனுக்கும் ஒன்றும் ,ஆக கூடாது ,என்ன வழி ,என உபாயம் கேட்கும் போது ,நம்முடைய கண்ணன் தான் மாய கண்ணனாயிற்றே,தன்னை பிறர் மதிக்கும் வரையில் தான் ஒருவன், உயிருடன் இருக்கிறான். என்று ஒருவன் தன் மரியாதையை இழக்கிறானோ அன்றே அவன் இறந்ததற்கு சமமாகும். அதனால் யுதிஷ்டிரருக்கு மரியாதை அளிக்க வேண்டாம் என கிருஷ்ணர் கூறினார். இப்பொழுது போரின் போக்கு என்ன ,கர்ணனை எப்படி கொல்லப்போகிறாய் ,என அர்ஜுனனிடம் கேட்டார் யுதிஷ்டிரர்.
எதற்காக மாயக்கண்ணன் இந்தஇரு சகோதர்களுக்கிடையே , சண்டையை .மூட்டி  விடுகிறார் என்றால்,அவர்களை காப்பாற்ற அவர் நடத்தும் மாய யுக்திகளில் இதுவும் ஒன்று .இதனால் கோபப்பட்டு வார்த்தைகளை விடும்போது ,அர்ஜுனன் தன அண்ணனை அவமதித்தது போல் ஆகும்..மேலும், யுதிஷ்டிரரை தன் மூத்த சகோதரன் என நினைக்காமல், அவரை மரியாதை இல்லாமல் அர்ஜுனனை அழைக்க சொன்னார் கிருஷ்ணர்.அதனால் யுதிஷ்டிரர் தன் மரியாதையை இழந்து விடுவார். இந்த அவமரியாதை அவர் இறந்ததற்கு சமமாகும். கிருஷ்ணர் கூறியதை கேட்ட அர்ஜுனன், யுதிஷ்டரிடம் சென்று அவரை பல விஷயங்களுக்காக அவமதிக்க தொடங்கினார்.
இருப்பினும், தன் மூத்த சகோதரரான யுதிஷ்டரை அவமரியாதை செய்த பிறகு, அர்ஜுனன் மிகுந்த மனக்கவலை அடைந்தார். பொறுமையை இழந்த அர்ஜுனன் மீண்டும் தன் வாளை எடுத்தார். ஏன் மீண்டும் வாளை எடுக்கிறார் என கிருஷ்ணர் கேட்டார். நான் என் சகோதரனை அவமானப்படுத்தி விட்டேன். அதனால் அதற்கு தண்டனையாக தன் தலையை வெட்டிக் கொள்ள போவதாக கூறினார்.தன் சகோதரனை கொல்வதை காட்டிலும், தன்னை தானே கொல்வதற்கு நரகத்தில் தண்டனை மிகவும் அதிகம் என கிருஷ்ணர் அர்ஜுனனிடம் விளக்கினார். தன்னை தானே புகழ்ந்து கொள்ளும்படி அர்ஜுனனிடம் கிருஷ்ணர் கூறினார். இது தன்னை தானே கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தை போக்கும் என்றும் கூறினார்,பதினாறு நாள் ஓய்வில்லாமல் சண்டை இட்டு கொண்டிருக்கும் மனநிலையில்,வீரர்கள் ,மனதளவிலும் ,உடலளவிலும், சோர்ந்து போய் காணப்படுவர்.அதுபோல முடிவும் எடுக்கமுடியாமல், தடுமாறும் போது ,கிருஷ்ண பரமாத்மா,அங்கே வழிகாட்டியாக இருக்கிறார்.       
கிருஷ்ணர் கூறியதை கேட்ட அர்ஜுனன், தொடர்ச்சியாக தன்னை தானே புகழ்ந்து கொண்டு, தன் ஆயுதங்களை தூக்கி எறிந்தார். பின் யுதிஷ்டரின் காலில் தலை வணங்கி மன்னிப்பு கோரினார். பின் யுத்த களத்திற்கு தயாரானார்.தன்னுடைய முட்டாள் தனத்தால் இப்போது பெரும் பிரச்சனையில் உள்ளதாக அர்ஜுனனிடம் யுதிஷ்டர் கூறினார். அதனால் இனியும் தான் இங்கே இருக்க தனக்கு அருகதை இல்லை என்றும் கூறினார். இதனை கூறி விட்டு, யுதிஷ்டர் காட்டிற்குள் சென்றார். இருப்பினும் அர்ஜுனனின் சபதத்தை யுதிஷ்டருக்கு நினைவு கூறிய கிருஷ்ணர், அவரை காட்டிற்குள் செல்லாமல் தடுத்து நிறுத்தினார். இறுதியில் இங்கேயே இருந்து, கௌரவர்களுக்கு எதிரான போரில் தன் சகோதர்களுக்கு உதவி செய்ய ஒத்துக் கொண்டார் யுதிஷ்டர்.இறுதியில் ஒன்றாக இருந்து,போரில் வெற்றி கொண்டனர்,இதேபோல் இனி ஒரு சுவாரஸ்யமான கதையுடன்,மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம். நன்றி.     
 





Friday, October 07, 2016

பர்வதமலை ஒரு பரவசபயணம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

பார்போற்றும் அதிசயங்களில் ஒன்று பர்வத மலை.இது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள, கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகா தேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலைபிரதேசமாகும்.போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை. மகாதேவமலை, கொல்லிமலை,சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று, பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். பர்வதம்ன்னு சொன்னாலும் மலைன்னு தான் அர்த்தம்,பர்வதமலைன்னா மலைகளுக்கெல்லாம் மலைன்னு சொல்லுவாங்க.இந்தமலைக்கு நவிரமலைதென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை, என்று பலபெயர்களும் உண்டு.அப்படிப்பட்ட பெருமைகள் வாய்ந்த பர்வதமலையில் இன்று நமது குழுவினருடன் புண்ணியம் தேடி ஒரு பயணம் செலல்லாம் வாங்க.
நாங்கள் பர்வதமலை செல்லும் போது,அதிகாலை 4 மணி,குளித்துவிட்டு மலை ஏறினால் புத்துணர்ச்சியாகவும்,அதேசமயம் வெயில் இல்லாதநேரம் மலை ஏறினால்,களைப்பு தெரியாமலும் குளுமையாகவும் இருக்கும் என்பதால், அதிகாலை குளித்துவிட்டு ,மலை ஏற தொடங்கினோம்.அதற்கு  முன், இந்த மலைக்கு ஏன் பர்வதமலை என பெயர் வந்தது என பார்த்தோம்னா அன்னை பார்வதி தேவி இங்கு வந்து தவம் செய்ததால், இதற்கு பர்வத மலைஎன்று பெயர் வந்ததாகவும், இமயத்திலிருந்து தென்பகுதிக்கு வந்தபோது முதன் முதலாக சிவன் காலடி எடுத்து வைத்த இடம் இந்த பர்வதமலை என்றும் சொல்லபடுகிறது.திருவண்ணாமலையில் தீ ப்பிழம்பாக தோன்றுவதற்கு முன் சிவபெருமான் இங்குதான் முதன் முதலில் கால் வைத்ததாக ஒரு ஐதீகம் உண்டு.அதனை  உண்மையாக்கும் விதத்தில் மலையின் மேலே அண்ணாமலையார் பாதமும் இருக்கிறது.ஆஞ்சநேயர் இமயதிலிருந்து சஞ்சீவி மலையை தூக்கிவந்தபோது விழுந்த ஒரு துளிதான் என்றும், மேலும் இது ஏழு சடை பிரிவுகளை கொண்டது என்றும் சொல்லபடுகிறது.
அடிக்கொரு லிங்கம் அண்ணாமலை,பிடிக்கொரு லிங்கம் பர்வதமலை என சொல்லபடுவதுண்டு,ஆகாயத்தில் ஒரு ஆலயம் என்றும் இந்த பர்வதமலை அழைக்கப்படும்.இந்த இடத்துக்கு பேரு தென்மகாதேவ மங்கலம் ஆகும்.தூரத்தில் இருந்து பார்க்கும் போது, ஒரு நந்தியின் வடிவில் தெரிகின்றது..படியேற தொடங்கும் முன்,இறைவனை மனதில் தியானித்து படிகள் ஏறுவதற்கு உடல் சக்தியும்,,வழிகளில் எந்தவித தங்குதடைகள் இல்லாமலும் இருக்க தியானித்து,பயணத்தை தொடர்ந்தோம்.முதலில் ஒரு சிறிய மண்டபம் போன்ற அமைப்பில் இருக்கும் மலையடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் தொடங்குகின்றன.அங்கே ஒரு பலிபீடமும் அதன்முன்னே இடப்பக்கம் விநாயகரும்,வலப்பக்கம் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சமேத காட்சி தருகிறார்.அவரையும் வணங்கிவிட்டு மலையேற தொடங்கினோம்.  
இந்த திருக்கோவில் சரியாக எப்போது கட்டப்பட்டது என்ற குறிப்பு எதுவும் இல்லை.கிட்டத்தட்ட 4,500 அடி உயரம் உள்ள கடப்பாறைமலை என்ற செங்குத்து பாறை மேல்,உள்ள ஒரு கடினமான நிலப்பரப்பின் மேல் கட்டப்பட்டு இருக்கிறது.ஆனால், வரலாற்று பதிவு கி.பி 300 -ம் ஆண்டு 'நன்னன் என்று ஒரு மன்னர் கூட அடிக்கடி இந்த மலை கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தார் என்று மலைபடுவடாகம் என்னும் நூலில் ஒரு குறிப்பு உள்ளது.சுமார் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெரும் யோகிகள் தியானம் செய்வதற்கு இந்த கோவில் கட்டப்பட்டது என்றும்,கூறப்படுகிறது.ஆனால், சில செவிவழி கதைகளில்,சொல்லபடுவது என்னனா ,ஒரு முறை சிவனும் பார்வதியும், கைலாயத்தில் உரையாடிக்கொண்டு இருந்தபோது, அன்னை ,சிவனிடம் ஒரு கேள்வியை கேட்கிறார்,சுவாமி இந்த உலகத்திலேயே அறம்,பொருள்,இன்பம்,வீடு இந்த நான்கையும் ஒருசேர அடைய மனிதர்கள் எந்த சிவஸ்தலத்தை வழிபடவேண்டும். என்று கேட்டார். அதற்க்கு பதில் கூறும் வண்ணம் சிவபெருமானால் அடையாளம் காட்டப்பட்ட மலைதான் இந்த பர்வதமலை  என்றும் சொல்லப்படுவதுண்டு.
அண்ணாந்து மலையை பார்க்கும் போது,நமக்கே பிரமிப்பாக இருந்தது ,நம்மால் முடியுமா என்ற எண்ணம் வரும்போது, ஏற்கனவே இந்த மலைக்கு அடிக்கடி செல்பவர்கள் .நமக்கு  உற்சாக மூட்டினர்.உங்களால் முடியும் ,என்று நம்பிக்கை சொல்லி மனதில் ,தைரியத்தை வரவழைத்தனர்.ஆகவே ஏற்கனவே மலை ஏறிபழக்கப்பட்டவர்களுடன் செல்வது நல்லது. இந்தமலையில் ஏறுவது ஏன் இவ்வுளவு கஷ்டம் என்றால்,இதில் உள்ள தத்துவம் என்னனா 4 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் வீசும் மூலிகைக் காற்று, தீராத நோயும் தீர்க்கும்.மேலும் இதற்க்கு எடுத்துக்காட்டாக ,குண்டலினி சக்தி ,மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது.அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம்,என்பதை தான் இந்த மலை சூசகமாக உணர்த்துகிறது.  .
நாம மலையில் ஏறும் போது மிகுந்த களைப்பு வரும்,தண்ணீர் தாகம் எடுக்கும்,அபொழுது சில அடிதூரங்களுக்கு இடைஇடையே சில கடைகளும் இருகின்றன,அங்கே 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் 40 ரூபாய் எனவும்,லைம் கலந்த சோடவுக்கு 50 ரூபாய் என விற்பனை செய்கிறார்கள்.ஆனால் காலம்காலமாக வரும் சில பக்தர்கள் மலையின் இடையே இருக்கும் சில சுனைகளில் இருந்து தண்ணீர் எடுத்து கொள்கின்றனர்.இங்கே மலைகளில் நூற்றுக்கணக்கான குகைகள் காணபடுகின்றன எனவும்.அதில் இபோழுதும் சித்தர்கள் வசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.மேலும் இந்த பர்வதமலையில் ஜமதக்னிமுனிவர்,விஸ்வமித்திரமகரிஷி,போகர் ,அகஸ்தியர்,போன்ற பலசித்தர்கள் இங்கே தவமிருந்ததாகவும் சொல்லபடுகிறது.மேலும், பலருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. .
சுமார் 1300 படிகளை கடந்து வந்தபிறகு இந்த இடத்தில் தான் படிக்கட்டுகள் முடிவடைந்து, கரடு முரடான மலைப்பாதைகள் ஆரம்பிக்கின்றன.வழியில் சிறிய சிறிய தற்காலிக கடைகளில் இளனீர்,பன்னீர் சோடா, பஜ்ஜி, தண்ணீர்பாட்டில், குழிபணியாரம் எல்லாம் கிடைக்கும்.அங்கு சிலநேரம் ஓய்வெடுக்க வசதியாக கூடாரங்கள் அமைத்துள்ளனர்..அதிக நேரம் ஓய்வெடுத்தால் மீண்டும் மலையேற சற்று கஷ்டமாக இருக்கும்.இந்த மலையில் மூலிகைகள் நிறைய இருப்பதால் அவைகளின் மேல் பட்டு வீசும் காற்றினை சுவாசிக்கும் போது நோய்கள் குணமாகும் என்றும் சொல்லபடுகிறது.மலைப்பாதையில் குரங்குகளை தவிர வேறு காட்டு விலங்குகள் அல்லது பூச்சிகளின்  தொல்லை எதுவும் இல்லை வயதானவர்கள் கூட மன உறுதி இருந்தால் சுபலமாக மலையேறி விடலாம்.
இந்த இடத்தில ஒரு சிறிய மண்டபம் இருக்கிறது,அதில் சிவலிங்கமும் நந்தியும் இருக்கிறது.அந்த மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்யும்போது, ஒரு அதிர்வு நிலையை நம்மால் உணர முடிகிறது.மேலும் நம்முடைய முன்னோர்கள் மற்றும் குடும்பத்தில் இறந்தவர்களின் பெயரை சொல்லி இங்கே,ஆன்ம விமோசனத்திற்கு பிரார்த்தனை செய்தால் அது நிறைவேறும் என்றும் சொல்லபடுகிறது..நாங்களும் சிறிதுநேரம் அங்கே பிரார்த்தனை செய்துவிட்டு அங்கிருந்து மலையேற தொடங்கினோம். மேலும் இந்த இடம் மலையின் பாதிஅளவு இருக்கும் என தெரிகிறது. சிறிது ஓய்வுக்கு பின் மீண்டும் நடக்க தொடங்கினோம்.
தொடர்ந்து 48 முறை பௌர்ணமி,அமாவாசைகளில் எவர் ஒருவர் தொடர்ந்து இங்கு வந்து வழிபடுகிறார்களோ அவர்களுக்கு ஞானம் சித்திக்கும் என்பதும் ஐதீகம்.மேலும், இந்த பர்வதமலையின் ஒவ்வொரு பகுதியும்,அதாவது இந்த ஏழு சடை பிரிவுகளிலும்,பிரம்மா ,விஷ்ணு ,முப்பத்து முக்கோடிதேவர்களும்,  சித்தர்களும்,  மாகான்களும், முனிவர்களும்,ரிஷிகளும் தவம் செய்து கொண்டிருப்பதாக சொல்லபடுகிறது.மேலும் தேவேந்திரன் இந்த கலிகாலத்திலும் இடி மின்னல் வடிவில் வந்து ,மல்லிகர்ஜுனருக்கும் ,பிரம்மராம்பிகைக்கும் பூஜை செய்வதாக ஸ்தல புராணங்கள் கூறுகின்றன. மேலும், திருவண்ணமாலையை சுற்றி உள்ள 30 கிமீ தொலைவில் இருப்பவர்களுக்கு எந்த குருவும் தேவைபடாது.அவர்களுக்கு நானே குருவாக இருந்து வழிநடத்தி செல்வேன் என ரமண மகரிஷி கூறியுள்ளார்.ஆகவே ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள் இங்கு வந்து யோகம் செய்தால் ஞானம் பெறுவது உறுதி.
நாம் பார்க்கும் இந்த இடம் குழந்தை சித்தர் சமாதி என சொல்லபடுகிறது. ஆனால் அதுபற்றிய குறிப்போ தகவலோ சரியாக இல்லை. சிலர் அதில் ஒன்றுமில்லை இடைக்காலங்களில் வைக்கப்பட்டது எனவும் சொல்கின்றனர்.ஆனால், மதவேறுபாடுகளை களைந்து முஸ்லீம் நண்பர்கள் கூட இங்கே வரும் பக்தர்களுக்காக கடைவைத்து உள்ளனர்.சித்ரா பௌர்ணமி ,ஆடி 18, ஆடி பூரம் ,புரட்டாசி ,ஐப்பசி,கார்த்திகை தீபம்,மார்கழி,மகா சிவராத்திரி,பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் இங்கே விசேஷ வழிபாடுகள் உண்டு.குழந்தை பேறு இல்லாதவர்கள் மலையை கிரிவலம் வர குழந்தைபாக்கியம் கைகூடும் என்றும் சொல்லப்படுகிறது.அதேபோல இரவினிலில் திசைமாறி போனாலோ  இல்லை, கடைகள் அருகில் இருப்பதையோ உணர்த்தும் வைகயில் பைரவ மூர்த்தியார் ஓசை எழுப்பி , நம்மை வழிகாட்டுவதை நாம் ஒவ்வொருவரும் அனுபவமாக உணரலாம்..
அதுபோல புதியதாக மலை என்ற தொடங்குபவர்கள் முதலில், மலைக்கு கீழே இருக்கும் தலைக்கோவிலில் இருக்கும் பிரம்மாண்டமான ,சூலத்தை வழிபட்டு,அங்கிருந்து நேரே வந்தோம்னா ,அங்கிருக்கும் பச்சைஅம்மனை தரிசித்து ,பின்னர் வெளியே இருக்கும் ,சப்த முனிவர்கள் அதாவது ஏழு முனீஸ்வரர்களுடைய உருவங்கள் பிரம்மாண்டமாக ,இருக்கின்றன ,அவர்களிடமும் மலையேற சக்தியும் அருளும் வேண்டும் என பிரார்த்தித்து ,அதற்க்கு எதிரிலேயே அமைந்து இருக்கும் புற்றுக்கோவிலையும் ,தரிசித்து ,நேர் பாதையில் வரும் போது, ஆஞ்சநேயரையும் தரிசித்து ,அங்கிருந்து வீரபத்திரர் ,வனதுர்க்கை ,ரேணுகா பரமேஸ்வரி ,இவரைகளையெல்லாம் தரிசித்து ,பர்வதமலை ஏற தொடங்கினா சிறப்புன்னு சொல்லப்படுது.
ஒருவழியாக முக்கால்பாகம் மலை எறிவந்துவிட்டோம்.நமது குழுவினர் எல்லாம் சோர்ந்து போய்ட்டாங்க,மலையின் எந்த உச்சிக்கு போனாலும், கடைகள் இருக்கின்றது.மலையேறுபவர்களுக்கு அது வசதியாக உள்ளது ,அதே சமயம் விலைகள் கொஞ்சம் அதிகம் தான்,ஏன்னா எல்ல பொருட்களையும் அவ்வுளவு உயரத்திற்கு தூக்கிகொண்டு வருவது மிகவும் சிரமான விஷயம்.பக்தர்களில் சிலர் பாடிக்கொண்டு வருகின்றனர்,சிலர் கால்வலியில்,ஐயோ ,அம்மா என சொல்லும்போது அப்பனே,அம்மையே என கூறிக்கொண்டு ,மலையேறுவாதாக தான் எனக்கு கேட்கிறது.மற்ற மலைகள் போல் அல்லாமல், பர்வத மலை செங்குத்தான (மலை) பாறை வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்க்கும் போது அற்புதமாக காட்சி அளிக்கிறது. இந்த மலை சுற்றி எட்டு திசைகளில் இருந்து எட்டு வெவ்வேறு வடிவங்களில் காட்சியளிக்கிறது.மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது 50 கி.மீ. வரை கூட கீழே இயற்கைஅழகு தெளிவாக தெரிகிறது.
மலையேறிவந்த ,பாதைகளும் தெளிவாக தெரிகின்றன.அமாவாசை இருட்டில் கூட பாதைகளை ,மட்டும் தெளிவாக ஒளிருமாம்,இந்த பர்வதமலையில்,சில நேரங்களில் சித்தர்கள் சூட்சும ஒளி உடலை எடுத்து, பறவையாயாகவோ, விலங்காகவோ, வேறு மனித ரூபத்திலோ மலை மீது இறைவனை வழிபட செல்வார்களாம்,அந்த சமயத்தில். அவர்கள் எடுத்து செல்லும் கற்பூரம், அகர்பத்தி, சாம்பிராணி போன்ற பொருட்களின் வாசனை மூலம்தான் அவர்கள் கடப்பதை அறியமுடியுமாம்.சில நேரங்களில் சித்தர்கள் தேனீ, பைரவர், போன்ற வடிவத்தில் கூட உண்மையான பக்தர்களுக்கு வழிகாட்டும் விதமாக மலை ஏறுவதற்கு உதவி செய்வார்களாம்.
இந்த இடத்தில கொஞ்சம் இளைப்பாறலாம்,ஏன்னா இனி நாம ஏறபோறது கொஞ்சம் செங்குத்தான பாறை.அதை ஏறுவதற்கு ,வசதியாக கம்பிகளை நீளவாக்கில் வேலிபோல் வச்சு இருக்கிறாங்க அதை பிடிச்சு,அழகா ஏறலாம். இதுல முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது ,கடலாடிங்கிற இடத்தில இருந்தும் மலைக்கு மேலே ஏறலாம்,அப்படி ஏறும்போது,கடலாடி ஆஸ்ரமத்தைத்தையும் தரிசிக்கலாம்,தென்மாதிமங்கலத்தில் இருந்தும் மலைமேல் ஏறலாம்,இப்படி இரண்டு வழிகள இருக்கு,எங்களுடன் வந்த வழிகாட்டி நண்பர் ,ஒருவர் சொன்ன தகவல் இது, அவர் முதன் முதலில் மலையேறும் போது ,கடப்பாரை மலையின் அருகே இராத்திரி 8 மணி அளவில் தனியாக நின்று கொண்டு இருந்தாராம்,கீழே பார்த்தா பள்ளம் ,மேலே பார்த்தா மலை,ஆனா போகிற வழி தெரியல.ஏன்னா செய்வது வழி மாறி வந்திட்டமோன்னு,தயங்கி நிற்கும் போது,அங்கெ ,வயதான ஒருவர் வந்து என்ன,மலைக்கு போகணுமான்னு கேட்டுட்டு சூடம் ஏத்தி கும்பிட்டுட்டு ,கடப்பாரை மலை ஏற வழிகாட்டினாராம்.மலைக்கு மேலே செல்ல செல்ல ,இவருக்கு ஓய்வு தேவைப்பட்டுதாம்,சரிங்க நான் கொஞ்சம் ஓய்வு எடுத்துகிறேன்ன்னு சொன்னாராம்.அப்ப அந்த பெரியவர் சரிப்பா,நான் கிளம்புறேன்னு கிள்ளம்பிட்டாராம்.அதன்பிறகு ,அவரை அந்த மலை பகுதியிலேயே பார்க்கவே இல்லையாம்.என்று கூறி ஆனந்த பட்டார்.இப்படி நிறைய அதிசயங்கள் கொண்டது இந்த பர்வதமலை.
இந்த கம்பியை பிடித்துத்தான் இனி இருக்கும் செங்குத்துது பாறைகளில்,ஏற வேண்டும்,இருபதுவருடங்களுக்கு முன்பு ,இங்கு தங்கி இருந்த ஸ்வாமிகள் ,அப்ப வர 50 பைசா 1 ரூபாய் காணிக்கைகளை கொண்டு மலைக்கு மேலே வரவங்களுக்கு கஞ்சிகாய்ச்சி கொடுப்பாராம்.ஒருசமயம் .நல்லமழை அவருக்கோ பாசியாம்,மழையில் சுருண்டு படுத்து இருந்தாராம் ,பசிமயக்கத்தில் எலி காலில் கடித்தது கூட தெரியாமல்,இரத்தம் வடிந்த நிலையில் படுத்து இருந்தபோது, கீழே கடைவைத்திருக்கும் பெண்மணி ,ஒருவர்,மேலே போன ஸ்வாமி 2 நாள் ஆகியும் கீழே வரவில்லையே என பார்க்கப்போகும் போது,அவர் இரத்தம் வடிந்த காலோடு இருப்பதை பார்த்து இரத்தத்தை துடைத்து துணியால் கட்டுப்போட்டு,பின் சாப்பாடு கொடுத்தாராம்.அன்றிலிருந்து, இனியாரும் இங்கே வந்து பசியோடு செல்லக்கூடாது என முடிவெடுத்து,மலையேறி வரவங்க வெறும் வயித்தோட போக கூடாதுன்னு,அன்னதான மடம் ஏற்பாடு பண்ணினாராம்.ஒருமுறை காஞ்சிபுரத்திலிருந்து ஒரு மனிதர் சாமிகும்பிட மலையேறினாராம், மலைமேல் ஏறினபோது, பசி தாங்காமல் சிவன் சன்னதியில் மனமுருகி நின்றாராம்,எனக்கு சொந்தமா அரிசிஆலை இருக்கு ஆனா ஒருபிடி சோறு இல்லையே ஆண்டவான்னு கண்ணீர்ரோட நின்னுகிட்டு இருக்கும் போது ,மேலே அன்னதான கூடம் இருக்கு அங்கெ போங்க சாப்பாடு போடுவாங்கன்னு சொல்லி இருக்கிறார் .கூட்டத்தில் ஒருவர்.மேலே இருப்பவன் யாரு என் அப்பன் சிவனாயிற்றே ,ஆண்டியும் ஒண்ணு,அரசனும்  ஒண்ணு ,இருப்பவனுக்கும் ,ஒரே மாதிரி ,இல்லாதவனுக்கு ஒரே மாதிரித்தான் நடத்துவான்.தான் என்கிற அகந்தை அழிப்பது தானே அவன் வேலை,அங்கு சென்று வயிறார சாப்பிட்டு,பின் இறைவனுக்கு நன்றி சொல்லி,முன்பு ஸ்வாமிகள் இருக்கும் போது ,அன்னதானத்திற்கு அரிசி மூடைகள் அனுப்பிக்கொண்டு இருந்தாராம்.
ஒருவழியாக எல்லாம் முடித்துக்கொண்டு ,நாம மலை உச்சிக்கு வந்துவிட்டோம்,இங்கேதான் அபாயகரமான ,கம்பிப்பாறை ,தண்டவாள பாறை படிகள் ,ஆகாச படிகள் என இருக்கின்றன .மிகவும் கனமாக சொல்லவேண்டியது அவசியம் சூரியனோ மேற்கில் மெல்ல சாய்கிறான் .இந்த இடத்தில முக்கியமா கவனிக்க வேண்டியது என்னனா ,ஏற்கனவே பலமுறை மலையேறினவங்களோட வழிகாட்டுதல் ,இல்லை உதவி கட்டாயம் வேணும் ,அது மிக மிக அவசியம் ,ஏன்னா , பாறைகள் எல்லாம் செங்குத்து பாறை கீழே விழுந்தால் எதுவும் மிஞ்சாது.ஆனா, கடவுள் அருளாலே இதுவரை ஒரே ஒருத்தத்தான் அப்படி வழுக்கி விழுந்தாராம் ,மற்றவங்க யாருக்கும் ஒரு பாதிப்பு இல்லையாம்.நாங்கள் போகும் போது ஒரு 10 வயது குழந்தை ஓடும்போது கால்தவறி விழுந்தது ,சிவன் அருளால் அது பாறை இடுக்கில் மாட்டி கொண்டதால் உயிருக்கு ஒன்றும் இல்லை,ஆகவே குழந்தைகளை மற்றும் சின்ன பிள்ளைகளை கூட்டி செல்பவர்கள் கவனமாக செல்லவேண்டும்.
சின்ன கரடு முரடான ,கடைசி பகுதி ,மிகவும் கடினமானது.அங்கிருந்து சுற்றிலும் பார்க்கும்போது மலையைச்சுற்றி மேகங்கள் ஓடுவது அழகாக காட்சியாக இருக்கிறது.மேலிருந்து பார்க்கும் போது ஊரே முழுவதுமாக நாம் வானத்தில் இருந்து பார்ப்பது போல அழகாக தெரிகிறது.இந்த இடங்களில் எல்லாம் கட்டாயம் வழிகாட்டிகள் உதவி அவசியம் தேவை,புதியதாக மலை ஏறுபவர்கள் ,கடலாடி,அன்னதான மடத்திலுள்ள சுப்பிரமணி(9003161140) என்பவரை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.அவர் மலையேறும் பக்தர்களுக்கு உதவியாக இருக்கிறார்.
அந்திசாய தொடங்கிவிட்டது ,இனியும் மலையேறுவது கஷ்டம்,ஆனால் ,வழிகாட்டி நண்பர் கொடுத்த தைரியத்தில் மீண்டும் மலை ஏற முடிவு செய்தோம் .இங்கே மலையின் மேல் ஒரு சிறப்பு உண்டு.கன்னியாகுமரியில் சூரிய அஸ்தமனமும் ,உதயமும் எப்படி பார்க்கிறோமோ அதேபோல் இங்கே மேக மூட்டம் இல்லாமல் இருந்தால் இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பொறுத்திருந்து அதைப்பார்த்து விட்டு செல்லலாம்.இரவு கடப்பாரை மலையில் ஏறினால்,கீழே பள்ளத்தை பார்க்கும் இருட்டில் தெரியாது.வெளிச்சத்தில் பார்க்கும் போது,பயமாக இருக்கும் என்பதால்,எல்லோரும் மலையேற அவசர படுத்தினார்கள்.ஆனால் நான் தான் பிரபல பதிவராயிற்றே,நான் ஒருத்தி பார்த்தேன்னா லட்சம் பேர் பார்த்ததுக்கு சமம்ன்னு சொல்லிட்டு அங்கேயே தங்க முடிவெடுத்தேன். உண்மையில் காலைலயில் அந்த இடங்களை பார்க்கும் போது எவ்வுளவு அழகாக இருந்தது தெரியுமா.இரவில் மலையேறி இருந்தால் ,இந்த காட்சிகளையெல்லாம் ,என்னுடைய ,சகோதர ,சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்ளமுடியாமல் போயிருக்கும் .கடப்பாரை மலையிலிருந்து, தொடங்கிய(தொங்கிய) திரில் பயணம், இதுவரை யாரும் ,இந்த மலையை பற்றி சொல்லாத விஷயங்களுடன் ,அடுத்தவாரம், நமது புண்ணியம் தேடி ஒரு பயணத்தில் சந்திக்கலாம் .நன்றி. 
 


Wednesday, September 28, 2016

வாட்ஸ் அப்பில் கலக்கிய இன்டர்நெட் பொய்கள் -தெரிந்த கதை தெரியாத உண்மை

நமது தெரிந்த கதை தெரியாத உண்மையில், எப்பொழுதும் ஆன்மீகம் பற்றியே பதிவிட்டு கொண்டு இருந்தால்,சிலருக்கு அது போரடிக்க கூடும் அதனால் சிறிது மாறுதலுக்காக,பொது வாழ்வு சார்ந்த,சமுதாயத்தையே பொய் உலகில் கட்டிப்போட்ட சில செய்திகளை இங்கு பார்க்கலாம்.பலரும் படித்து பயன்பெறும் வண்ணம் இங்கு கொடுக்கும் தகவல்களை,சிலர் கல்வெட்டில் கூட பதித்து ,தங்கள் வீட்டில் வைத்து கொள்ளலாம். அதற்கு கம்பெனி அனுமதி தேவை இல்லைசரி இனி விஷயத்திற்கு வருவோம்,இந்த நவீன காலத்தில் மக்களிடையே முக்கியமான தகவல்களை கொண்டுசெல்வதில் முக்கிய பங்கு வகிப்பது,இன்டர்நெட் மற்றும்,ஊடகம், இவற்றில் உண்மை 10% என்றால் பொய்கள் 90% மக்களிடையே பரப்பப்படும்.அதற்கு நிறைய உதாரணம் ,சமீபத்திய நடந்த சில விஷயங்களும் அதை மறைத்து,சில ஊடகங்கள் வேறுவிதமாக பரவச்செய்ததும்.அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு இன்டர்நெட் மூலம் பரப்பப்பட்ட சில பொய்கள்,உண்மை போலவே திரிக்கப்பட்டு உலாவந்தன,அந்த, பொய்களை இங்கு ஆதாரத்துடன் நம்முடைய தெரிந்த கதை தெரியாத உண்மையில் பார்க்கலாம்.
இதுபோன்ற விழிப்புணர்வு இருக்கவேண்டும்,என்பதற்காக மத்திய அரசு கூட NATIONAL  DIGITAL LITERACY MISSION  என்ற அமைப்பை தொடஙகி ,மாணவர்கள்,கிராமங்களில் இருக்கும் நடுத்தர மற்றும் கல்வி அறிவு பெற்றவர்களுக்கும்,இலவசமாக  இன்டர்நெட் பயன்படுத்துவது எப்படி, ஆன்லைன் மூலம் அரசுசார்ந்த துறைகள் அவர்களது திட்டங்கள் ,மற்றும்  புகார்களை பதிவு செய்யவும் ,ஆன்லைன் வர்த்தகம் ,செய்திகள் போன்றவை எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் ,என்ற எண்ணத்தோடு ,நமது மத்திய அரசு, இந்ததிட்டத்தை செயல்படுத்தி அதில் சிறிய தேர்வும் வைத்து சான்றிதழ் கொடுக்கிறது.எதிர்காலத்தில் மத்திய அரசே,டேப்,ஸ்மார்ட் போன் போன்றவற்றை ,இந்த சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மானியமாக கொடுக்கவும் திட்டம் வகுத்துள்ளது .அப்படி ஒரு விழிப்புணர்வு இருந்தால்தான்,மக்களிடையே ,பரப்பப்படும் பொய்கள் புரளிகள்,வதந்திகள் தடுக்கப்படும் .
முதல் பொய்,காந்தியை கோட்சே சுட்ட புகைப்படம்.சுடுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம், என்று ,நெட்டில் உலாவந்து.உண்மையில் அது ஒரு ஜெர்மன் நடிகர் நடித்து ,மார்க் ராபின்சன்,டைரக்ட் செய்து ,கதைவசனம் Nelson Gidding, Stanley Wolpert  எழுதி ,நடிகர்களாக, Horst Buchholz, José Ferrer, Valerie Gearon |See full cast & crew ஆகியோர் நடித்து 1963-ம் ஆண்டில் வெளிவந்த 'Nine hours to Rama' என்ற படத்தில் உள்ள காட்சியே அது.
 அதன் சாராம்சம் என்னனா,காந்தியின் கடிகாரத்தை,மையமாக கொண்டு அமைக்கப்படுகிறது.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காந்திஜியின் கால்படாத இடமே இல்லை,அனைத்து இடங்களுக்கும்,நேரம் தவறாமல் செல்வார்,அவருடைய கடிகாரத்தின் துணையோடு.ஆனால், அன்று அவர் இறப்பதற்கு சிலமணிநேரம் முன்பு மட்டும்,தாமதமாக நடந்து காந்தி தன் சாவை நோக்கி நடக்க துவங்குகிறார்.வழக்கமாக செல்லும் பாதையை விட்டு விலகி பசுந்தரை வழியாக வேகமாக அந்த கால்கள் சாவை நோக்கி முன்னேறுகின்றன.அதே நேரம் நேரு தன் அலுவலகத்தில் பணியில் இருக்கிறார். பட்டேல் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். மவுண்ட்பேட்டன்  தன் வசிப்பிடத்தில் உரையாடிக்கொண்டிருக்கிறார். மீராபென் இமயமலையில் உள்ள ஆசிரமத்தில் இருக்கிறார்.லைப் இதழின் புகைப்பட நிபுணர் மார்க்ரெட் புருக் சில தெருக்கள் தள்ளியிருந்த விடுதியில் காத்திருக்கிறார்.வின்சென்ட் சீன் என்ற அமெரிக்க பத்திரிக்கையாளர் காந்தியின் நேர்காணலுக்கு நேரம் ஒதுக்கபட்டு பிரார்த்தனை முடிந்து காந்தி வரட்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.
கோட்சே தனது இத்தாலிய பெர்தா துப்பாக்கியை தொட்டுப்பார்த்துக் கொள்கிறான்.காந்தியின் முன்னால் போய் நிற்கிறான். அவனது உதடுகள் நமஸ்தே காந்திஜி என்று சொல்கின்றன..காந்தியின் கைகள் கூப்புகின்றன, வணக்கம் சொல்கிறார்.காந்தியின் கண்களை கோட்சே எதிர்கொள்கிறான். கோட்சேயின் வலது கை துப்பாக்கியை எடுக்கிறது.இடது கையால் மனுவை தள்ளிவிடுகிறான் கோட்சே. மூன்று முறை துப்பாக்கியை இயக்குகிறான், வெடிக்கிறது. அடிவயிறு இதயம் என தோட்டா பாய்கிறது. காந்தி தான் சுடப்பட்டோம் என்பதை உணர்ந்தபடியே நிற்கிறார்.அந்த கண்கள் உலகை கடைசி முறையாக காண்கின்றன.அவரது உடல் சரிகிறது.கால்கள் நடக்க மறுத்து ஒடுங்குகின்றன.புகையின் நடுவில் கூக்குரல் எழுகிறது.காந்தி மண்ணில் சரிகிறார்.அவரது உதடு ராம்,ராம் என முணுமுணுக்கிறது.ஆஸ்திரேலிய கம்பளியால் தயாரிக்கபட்டிருந்த அவரது வெண்ணிற சால்வை இரத்தகறை படிகிறது.கூச்சலும் சப்தமும் அதிகமாகிறது.காந்தியின் கடிகாரம் தரையில் விழுந்து அப்படியே நிற்கிறது.அப்போது மணி 5.17. அதன் பிறகு அந்த கடிகாரம் ஒடவேயில்லைஇதுதான் கதையின் சாராம்சம் ,அந்த படத்தில் உள்ள காட்சியானது,அந்த சினிமாவிற்க்காக எடுக்கப்பட்டது.இந்த புகைப்படம் காந்திஜி சுடப்பட்ட கடைசி நிமிடத்தில்,எடுக்கப்பட்ட புகைப்படம் என நெட்டில் வந்தது .இது ஒரு முழுப்பொய்.
இதேபோல்,காந்தியை பற்றி அவதூறு சொல்லும் வகையில்,காந்திஜி ஒரு ஆங்கில பெண்ணுடன் நடனம்ஆடுவது போன்ற போட்டோ நெட்டிலும், வாட்ஸ் அப்பிலும் பரப்பப்பட்டது.உண்மையில் அது ஆஸ்திரேலியா நடிகர் ஒருவர் காந்தியை போல வேடமிட்டு ஒரு பார்ட்டியில் நடனமாடும் போது எடுத்த புகைப்படம்.அதை எப்படியெல்லாம் திரித்து,இவர்களது கற்பனையில்  என்னவெல்லாம் எழுதவேண்டுமோ,அதையெல்லாம் எழுதிவிட்டார்கள், .இப்பொழுது இருக்கிற எழுத்து போராளிகள். தங்களை எழுத்தாளர்கள் சொல்லிக்கொள்பவர்களுக்கு, ஒரு உண்மையை சொல்லிக்கொள்கிறேன்.எது எழுதினாலும் .ஒன்றுக்கு 10 முறை யோசித்து எழுதுங்கள். ஏனெனில் உங்கள் கற்பனையும் ,காப்பி அடித்து எழுதும் பொய்த்திறனும்,சிலவருடங்கள் கழித்து ,உண்மைபோல் வலம் வரும்,ஒரு சமுதாயத்தில் விஷத்தை பரப்பிய பாவமும் அவர்களையே சாரும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
அடுத்த பொய் என்னவென்றால்,மூன்றுதலை நாகம் ,இதுவும் இந்தியாவில் ஒவ்வெருநாளும்,ஒவ்வெரு இடத்தில பிடித்ததாக சொல்லப்பட்டு,நெட்டில் ஜோராக வலம்வந்தது.ஒருவர் இது ஊட்டியில் பிடிக்கப்பட்டது எனவும்,மூன்று தலையுடன் காணப்பட்டது எனவும்,மக்கள் எல்லோரும் வேடிக்கை பார்த்தனர்,என்று செய்தி வெளியிட்டனர்.போட்டோஷாப் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இதில் உள்ள அனைத்துமே போலியானவை,ஒற்றைதலை கொண்ட பாம்பின் படத்தைக்கொண்டு போட்டோஷாப் தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்டு இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் புகைப்படங்களில் இதுவும் ஒன்று என.
,உண்மை என்னவெனில்,ஜனவரி மாதம் கேரளாவில் பெரிய நாகப்பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியது.இதனை அங்கிருந்த சிலர் புகைப்படம் எடுத்தனர்.புகைப்படக்கலைஞர் ஒருவரால் எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படம் தான் அது.அந்த படத்தை சிலர் போலியாக சித்தரித்து மூன்று தலை நாகப்பாம்பு ஒன்று ஊட்டியில் காணப்பட்டதாக புரளியைக் கிளப்பியுள்ளனர்,என்ற விவரம் கண்டறியப்பட்டுள்ளது.இங்கே எப்படியெல்லாம் கிராபிக்ஸ் மூலம் ஒரு புகைப்படத்தை மாற்றியமைக்கமுடியும் என்பதை அந்த போட்டோஷாப் கலைஞர் நிரூபித்து நெட்டிலும் பறக்கவிட்டு விட்டார். 
இந்திய இரயில்வே துறை தான் உலகிலேயே மிகவும் பெரியது என சிலர் சொல்வதுண்டு ஆனால், இது உண்மையல்ல.இந்திய ரயில்வே துறையில் 16 இலட்சம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.ஆனால் அமெரிக்க ரயில்வே துறை தான் உலகிலேயே மிகவும் பெரியது அதை தொடர்ந்து, இந்தியா மற்றும் சீனா உள்ளது..
1950 கால்பந்து உலகக் கோப்பையில் இந்திய வீரர்கள் வெறும் காலுடன் விளையாட முற்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்,என ஓர் செய்தி பரவலாக பேசப்படுகிறது. உண்மையில் நடந்தது என்னவென்றால் இந்திய கால்பந்து அணி, அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டு 1948-ஆம் ஆண்டிலிருந்து ஃபிஃபாவுடன் இணைந்துள்ளது.ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு 1954-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது, இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு ஒரு தொடக்ககால உறுப்பு அமைப்பாக இணைந்தது.இந்திய தேசிய கால்பந்து அணியின் பொற்காலம் 1950-கள் மற்றும் 1960-கள் ஆகும். அக்காலகட்டத்தில் (1950-ல்) கால்பந்து உலகக்கோப்பைக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.காரணம்,மற்ற ஆசிய நாடுகளான, பர்மா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா,போன்ற நாடுகள் கலந்துகொள்ளவில்லை அதனால், இந்தியா தானாகவே,உலக கால்பந்து போட்டியில் தகுதி பெற்றது. ஆனால் அவர்கள் இதற்குமுன் எந்த உலக கோப்பை போட்டியிலும் பங்கேற்கவில்லை ஆனாலும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
ஆனால் இந்திய அணி பங்கேற்க்காததற்கு வெறும் காலுடன் விளையாடுவதாய் கூறியது மட்டுமல்ல காரணம். உண்மையில் பயணச்செலவுகள்,பொருளாதார நிலை, குறைவான பயிற்சி, அணித்தேர்வுக் குழப்பங்கள் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை உலகக் கோப்பையை விட முக்கியமானதாகக் கருதியமை,ஆகிய பல காரணங்கள் உலகக் கோப்பையில் பங்கேற்காததற்குக் கூறப்படுகின்றன. ஆனால் இந்தியஅணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், ஒரு ஆசியக் கோப்பையில் வெள்ளி மற்றும் உலகக் கோப்பையில் சிறந்த செயல்திறன் காட்டிய ஆசிய நாடு என்ற சிறப்பு ஆகிய பெருமைகள் கொண்டது.
அடுத்த பொய் ,வாட்ஸ் அப்பிலும் பேஸ்புக்கிலும் பெப்சி, மாசா, ப்ரூட்டியில் எச்.ஐ.வி வைரஸ் பரவியதை,பொய்யர்களான இவர்கள் வைரலாக பரவிட்டுட்டார்கள் இது மிகவும் கொடுமையான பொய்.

டெல்லி போலிஸ் தான் இப்படி ஓர் அறிக்கையை வெளியிட்டது என பரப்பப்பட்ட இந்த பொய்  பெப்சி, ப்ரூட்டி, மாசாவில் ஓர் ஊழியரில் இரத்தம் கலந்துவிட்டது. அவர் ஓர் எச்.ஐ.வி நோயாளி. எனவே, அவற்றை பருகுவதை நிறுத்துங்கள் என்று கூறி பரப்பினர்.ஆனால், இது பொய்யான தகவல் என டெல்லி காவல்துறையே கூறிவிட்டது. கடைக்காரர்களிடம் கேட்டால்,அது அவர்களுடைய வியாபாரத்தை நஷ்டமடைய செய்வதற்காக பரப்பபட்ட பொய் என்கின்றனர்.
அடுத்த பொய், சாதனை வீரர்  மில்கா சிங் பற்றியது. 1960-ம் ஆண்டின் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் மில்கா சிங், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற போது, முதலாவதாக சென்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் திரும்பி பார்த்ததால்  தோல்வியுற்றார் என பரவலாக கூறப்படுகிறது.ஆனால் ஒலிம்பிக் சார்பிலிருந்த வந்த தகவல்களில் அவர் ஐந்தாவதாக தான் வந்தார், முடிக்கும் போது நான்காம் இடத்தில் முடித்தார். அவர் முதல் நிலைக்கு வரவே இல்லை என கூறப்படுகிறது.ஆனால் உண்மையில்,மில்கா சிங் பற்றிய உண்மையை நாம் ஒவ்வருவரும் அறிந்து கொள்ளவேண்டும்.
1956 ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்ட மில்கா சிங், 400 மீ ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வாங்கிய அமெரிக்க வீரர் சார்லஸ் ஜென்கின்ஸ், என்னென்ன பயிற்சிகள் எடுக்கிறார் என்பதை அறிந்துகொண்டு, அடுத்த இரண்டு வருடங்களில் அந்த அமெரிக்கரின் டைமிங்கைத் தாண்டிக் காண்பித்தார். அதன்பிறகு, உலகளவில் முதல் எட்டு சிறந்த தடகள வீரர்களில் ஒருவராக அறியப்பட்டார் மில்கா சிங்.ஆனால், 1960 ஒலிம்பிக்ஸில் மயிரிழையில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டதுதான் பெரிய சோகம்.காமன்வெல்த்தில் ஒரு தங்கம், ஆசியன் கேம்ஸில் 4 தங்கங்கள் என ஒலிம்பிக்ஸைத் தவிர இதர சர்வதேசப் போட்டிகளில் மில்கா சிங் எப்போதும் சாம்பியன்தான்.1960ல் பாகிஸ்தானில் ஓர் ஓட்டப்பந்தயத்துக்கு அழைப்பு வந்தபோது பழைய நினைவுகளால் அங்குச் செல்ல மறுத்தார் மில்கா சிங்.ஆனால், அப்போதைய பிரதமர் நேரு விடுத்த வேண்டுகோளினால் பாகிஸ்தானுக்குச் சென்றார். பாகிஸ்தான் வீரர் அப்துல் காலிக் வெர்ஸஸ் மில்கா சிங் என்று அப்போட்டி விளம்பரப்படுத்தப்பட்டது. இதைச்சவாலாக ஏற்றுக்கொண்டு,ஏழாயிரம் பேர் கூடிய மைதானத்தில், அப்துல் காலிக்கைத் தோற்கடித்தார் மில்கா சிங்.பரிசளிப்பு விழாவில், 'நீங்கள் இன்று ஓடவில்லை, பறந்து சென்றீர்கள்' என்று மில்காவைப் பாராட்டினார் ஜெனரல் அயூப் கான்.அங்குதான் அவருக்கு 'ஃபிளையிங் சிங் (பறக்கும் சீக்கியர்)' என்கிற பட்டமளிக்கப்பட்டது."பாகிஸ்தானில் ஓடும்போது,சிறு வயதில் என் உயிரைக் காப்பாற்ற ஓடியது ஞாபகத்துக்கு  வந்தது”  என்கிறார் மில்கா சிங்.ஆனால்,அவர் ஓடத்தொடங்கியது ஒலிம்பிக்சில் மட்டுமல்ல ,சிறிய வயதில்,உயிரை காப்பாற்றவும் தான்.
இன்று பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் கோவிந்த்புராவில் 1935ல் பிறந்தார் மில்கா சிங். இளம் வயதில் கால் கடுக்க நடந்ததுதான் அவர் தடகள வீரராக மாறியதற்கான ஆரம்பப் புள்ளி. தினமும் 20 கிமீ நடந்து சென்று கல்வி பயின்றார்.15 வயதில், இந்தியப் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தில், மில்கா சிங்கின் கண் முன்னாலேயே அவருடைய பெற்றோர்கள் கொல்லப்பட்டார்கள்.கூடப் பிறந்த மூன்று பேரையும் கலவரத்தில் இழந்தபோது செய்வதறியாமல் தவித்தார்.'ஓடிவிடு, இல்லாவிட்டால் உன்னையும் சுட்டுக்கொன்று விடுவார்கள்' என்று இறக்கும் தறுவாயில் தந்தை சொன்னதைக் கேட்டு பதைபதைத்துப் போனார் மில்கா சிங்.அந்தச் சமயம், கலவரக்காரர்கள், கண்ணில் படும் இந்துக்களையும் சீக்கியர்களையும் கொன்று குவித்துக்கொண்டிருந்தார்கள்.உயிருக்கு அஞ்சி, காட்டு வழியே ஓடி, ஒரு இரயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அங்கிருந்து டெல்லியில் உள்ள தன் சகோதரியிடம் அடைக்கலமானார். பிறகு, அவருடைய சகோதரரின் உதவியால் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் மிக்குறைந்த நேரத்தில் 5 மைல்கள் ஓடும் முதல் பத்து வீரர்களுக்கு அடுத்தக்கட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.அதில் ஒருவராக வந்து, 400 மீ ஓட்டப்பந்தயமொன்றில் ஜெயித்தபோதுதான் தன் திறமையை அறிந்தார் மில்கா சிங்.அவரையும் விட்டுவைக்கவில்லை இந்த பொய்யர்கள்.
குர்குர்ரேவை யாரும் சாப்பிட வேண்டாம்,அதில் பிளாஸ்டிக் கலப்படம் உள்ளது,பாருங்கள் எப்படி உருகுகிறது என்று இந்த படம் பகிரப்பட்டது.ஆனால், குர்குர்ரேவில் சோளம் மற்றும் மசாலாப் பொருட்கள் தான் கலக்கப்படுகிறது இது போலியான புகைப்படம் என குர்குர்ரே நிறுவன மேலாண்மை துறையில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் எது உண்மை என உருவாக்கியவர்களுக்கும்,ப்பிட்டவர்களுக்கும் தான் தெரியும்.
அடுத்த பொய் ,குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது ,நமது ,வாட்ஸ் அப் முகவரிக்கோ ,இல்லை ,பேஸ்புக் பக்கத்திற்கோ ,பாராட்டுகளுடன் வந்த பொய் செய்தி இது .உலகின் சிறந்த தேசிய கீதம் ஜன கன மன என்று யுனெஸ்கோ சற்று முன் அறிவித்தது என, இந்தியன் என்பதில் நாம் பெருமை கொள்வோம் என்று,சுற்றறிக்கை போல அடிக்கடி வந்துவிடும்.ஆனால்,இது உண்மை இல்லை ,இது முற்றிலுமான பொய் தகவல் என யுனெஸ்கோவே அறிவித்துவிட்டது..
உண்மையில் ,தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுப்பது என்றால் ,இது போன்ற ,பொய் செய்திகளை ,பரப்பாமல் ,அதன் தமிழ் அர்த்தத்தை புரிந்து கொண்டு ,அதன் பின் படித்தாலோ செய்தி வெளியிட்டாலோ நலம் /

மக்களின் மனங்களில் ஆள்பவள் நீயே
இந்திய வளங்களின் அரசி
பஞ்சாப் சிந்து குஜராத் மராட்டியம்
திராவிடம் ஒடிசா வங்கம்
விந்திய இமயம் யமுனா கங்கை
முக்கடல் நின் புகழ் பாடும்
உன்புகழ் பாடி மகிழ்வோம்
உன் ஆசி வேண்டி நிற்போம்
உன் வெற்றி தனையே புகழ்வோம்
இந்திய வெற்றியின் தாரகை நீயே...
இந்திய வளங்களின் அரசி
வெற்றி... வெற்றி... வெற்றி...

உனக்கே என்றும் வெற்றி...

ஆனாலும், இது தேசிய கீதமான,வங்க மொழி - ஜன கண மன பாடலுக்கு என்றுமே ஈடாகாது. மாறாக தேசிய கீதம் பொருளுணர்ந்து பாட இது ஒரு வழியாக அமையும் இருக்கும் .அவ்வுளவுதான் .
அடுத்து ஒவ்வரு  தீபாவளிக்கும்,வரும் புதுப்பட ரிலீஸ் போல ,தவறாமல் வந்துவிடும்,இந்த படம் ,நாசா நடுவானில் இருந்து ,இந்தியாவை படம்பிடித்தது என்று. இது வெறும் புரளி. இதை புரளி என்று நாசாவும் அறிவித்து விட்டது. 
அடுத்தபடம் ,கேரளாவில் மது அருந்திக்கொண்டு ,தூங்கிக்கொண்டு இருந்த மனிதனை,மலைப்பாம்பு விழுங்கிவிட்டது.என புரளி கிளப்பப்பட்டது.இதே புரளி சீனா,இந்தோனேஷியா,தென்னாப்பிரிக்கா மற்றும் மலேசியாவில் கூட அந்த அந்த அந்த நாட்டிற்கு ஏற்றவாறு புரளியை பரப்பினர். உண்மையில் இந்த படம் மலைப்பாம்பு ஒன்று ,மானை முழுவதுமாக விழுங்கியபோது எடுத்தப்படம். அதுபோல கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள மேடுப்பள்ளியில் கூட ஆட்டை மலைப்பாம்பு ஒன்று ஆட்டையை போட்டது ,நல்லகாலம் அதையும் மனிதர்களை விழுங்கிவிட்டது என பரப்பாமல் விட்டார்களே .. 
ஒரே பிரசவத்தில் 11 குழந்தைளைகளை,பெற்ற பாகிஸ்தான் பெண்மணி ,என்று இணையத்தையே கலக்கியது .அதில் ஒரு பெண்மணியின் படமும் ,கூடவே பதிவேற்றம் செய்தனர் .சிலர் அது இந்திய பெண்மணி செய்த சாதனை என புரளியை கிளப்பினார் இது அப்பட்டமான பொய் ..     
உண்மையில் நடந்தது என்னவென்றால்,கடந்த 11/11/11 அன்று சூரத்தில் உள்ள செஞ்சுரி மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகளின் புகைப்படம் இது.அன்று சரியாக 11 குழந்தைகளை பிறந்தன,அதை கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. 
அடுத்து வருவது ,மிகவும் அதிர்ச்சிக்குள்ளானது,இந்தியாவின் தேசிய விளையாட்டு எது என்றால் சிறு குழந்தை கூட ஹாக்கி என கூறும், உண்மையில் இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று எதுவும் இல்லை. ஆனால் கிரிக்கெட் மீது மக்கள் அதிக மோகம்,கொண்டுள்ளனர்.ஒலிம்பிக் பேட்டியில் ஹாக்கியில் 8 முறை தங்கப்பதக்கம் வென்றது  இந்திய ஹாக்கி அணி.இது எப்படி வெளியுலகிற்கு தெரிந்தது என்றால்,நம் நாட்டின் தேசிய சின்னங்களை குறித்து புத்தகத்தில் படித்தார் லக்னேவை சேர்ந்த 10 வயது சிறுமி அய்ஸ் வர்யா பராஷர். இதில் சந்தேகமடைந்த அவர், இது குறித்து அவரது ஆசிரியர்களிடம் கேள்வி கேட்டுள்ளார். இறுதியில் தேசிய விலங்கு, தேசிய பறவை, தேசிய பூ, தேசிய விளையாட்டு உட்பட தேசிய சின்னங்கள் அறிவிக்கப் பட்டதற்கான உத்தரவின் சான்றிதழ் நகலை தருமாறு, தகவல் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தார்.இந்த விண்ணப்பம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து உள்துறை அமைச் சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.இது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது,ஹாக்கி நமது தேசிய விளையாட்டு அல்ல? மேலும் இந்தியாவின் தேசிய விளையாட்டு என்ற தகுதி எந்த ஒரு விளையாட்டுக்கும் அளிக்கப்படவில்லை,ஹாக்கி உட்பட எந்த விளையாட்டையும், தேசிய விளையாட்டாக மத்திய அரசு அறிவிக்க வில்லை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது..
12 மீற்றர் நீளமான மிகப்பெரிய மனித எலும்புக்கூடொன்று மேற்கு இந்தியாவின் பாலைவனைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்துக்கு சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளதுடன், இந்திய இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இது இந்திய புராணக்கதைகளில் குறிப்பிடப்படும் காடுகளில் வாழ்ந்த Rakshasas என்ற அரக்கனுடைய எலும்புக்கூடாக இருக்கலாமென நம்பப்படுகிறது என்று இணையத்தையே கலக்கியது இந்த போட்டோ,இந்தியா மற்றும் வங்காள தேசத்திலும் கூட இந்த புகைப்படம் அதிகமாக பரவியது.
ஆனால்,உண்மையில் worth1000.com என்ற இணையத்தில் புகைப்பட எடிட்டிங் போட்டியில் பங்கெடுத்த புகைப்படம்.இதை வைத்துக்கொண்டு நம் மூளையை எடிட் செய்துவிட்டார்கள்கள் .இந்த பொய்யர்கள். 
அடுத்த புரளி, ஹனுமானின் கதாயுதம் ,ஸ்ரீலங்காவில் பூமிக்கு அடியில் தோண்டியபோது,கிடைத்துவிட்டது.இராமாயண போரில் ஹனுமான் உபயோகபடுத்தியது என்றெல்லாம் இன்டர்நெட்டில் பரப்பப்பட்டது.உண்மையில் இது அப்பட்டமான பொய். நிஜத்தில் இது கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 நியதி, ஹனுமான் ஜெயந்தி அன்று,இந்தூர் பகுதியில் உள்ள நந்தா நகரில் 125 உயர ஹனுமானின் சிலைக்கு 45 அடி நீளத்திற்கு 21 டன் எடையில் செய்யப்பட்ட கதாயுதத்தை நிறுவும் பொது எடுக்கப்பட்ட புகைப்படமாகும். 

சுவிஸ் பேன்க் வெளியிட்ட கருப்பு பண பட்டியல்,இதைவைத்து பெரிய விவாதமே,பேஸ்புக்கிலும்,ட்விட்டரிலும்,விவாத மேடைகள் ஓடின.இது பொய் என தெரிந்து கொள்ளாமலே,காரசாரமாக,கத்தியெடுத்தா நாங்க இரத்தம் பார்க்காம வைக்க மாட்டோம்டான்னு பேசினாங்க.பாவம் அவங்களுக்கு என்ன தெரியபோகிறது,இது ஒரு ஏமாற்று செய்தி என்று ,உண்மையில்.சுவிஸ் கோட் 0041, இந்த புகைப்படத்தில் 0044 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மேனேஜர் கையொப்பம் வலதுப்பக்கம் உள்ளது. ஐரோப்பிய வழக்கத்தின் படி அவர்கள் இடதுபக்கம் தான் கையொப்பம் இடுவார்கள்.பொய்களை பரப்புபவர்கள் இதைக்கூட பார்க்காமல் விட்டுவிட்டார்கள்.ஆனால் ,நம்ம கழுகு கண்ணுக்கு அது தப்புமா...நாம யாரு,பிரபல பதிவராச்சே?!ஓகே  ரொம்ப புகழாதீங்கப்பா .சுய விளம்பரம் எனக்கு பிடிக்காது.           
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு,என்று சொல்லப்பட்டாலும்,உண்மையில் 
நாடு சுதந்திரம் பெற்றபோது,இந்தியா இந்து நாடாகதான் இருந்தது. பின்பு, 1976-ம் ஆண்டு தான் இந்திய சட்டப்புத்தகத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மதசார்பற்ற நாடு என்ற சொல் சேர்க்கப்பட்டு,அறிமுக உரையில் சேர்க்கப்பட்டது.அதுபோல்இந்தியாவின் ஆட்சி மொழி,ஹிந்தி இல்லை.பெரும்பான்மையான மக்கள் பேசும்,மொழி ,ஹிந்தியே தவிர இந்தியாவின்,ஆட்சிமொழி,தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா போன்ற 20க்கும் மேற்பட்ட இந்திய ஆட்சி மொழிகளில் இந்தியும் ஒன்று என்பது தான் உண்மை.இனியும் நிறைய உண்மை போல் உலாவந்த பொய்களை பார்த்தோமானால் ,இந்த பதிவும் ,தாங்காது ,பக்கமும் போதாது.ஆகவே பதிவின் நீளம் கருதி என்னுடைய சிற்றுரையை இத்துடன் முடித்துக்கொண்டு,அடுத்து வேறு ஒரு செய்தியுடன்,நம்முடைய தெரிந்த கதை தெரியாத உண்மையில் சந்திக்கலாம் நன்றி.