Showing posts with label அகத்தியர். Show all posts
Showing posts with label அகத்தியர். Show all posts

Friday, April 26, 2019

ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு 600 ஆண்டுகால முற்பிறவி ரகசியத்தை உணர்த்திய மலை

சித்ரா பௌர்ணமிக்கு பல சிறப்புகள் உண்டு. அம்மா! தாயே! சித்ரா பௌர்ணமி முடிஞ்சு ஒரு வாரமாச்சு!! இன்னிக்கு பதிவு போடப்போறியான்னு கேக்காதீக! இது அதுபத்திய பதிவு இல்ல. தேர்தல் லீவுக்கு வந்திருந்த மகனார், கார் எடுத்து ஒரு மாசமாச்சுது. எங்கிட்டாவது போகலாம்ன்னான். சித்தர்லாம் கிரிவலம் வருவாங்களாம். திருவண்ணாமலைக்கு போகலாம்டா...ன்னு சொன்னால்,  எனக்கு லீவ்  இல்லம்மா, கிரிவலம் வந்துட்டு மறுநாள் என்னால ஆபீசுக்கு போகமுடியாதுன்னு பெரியவ ஜகா வாங்க,  சரி காஞ்சிபுரம் சித்ராகுப்தன் கோவிலுக்கு போகலாம்ன்னா, தேர்தல் நடக்குது.   எதாவது கலவரம் வந்தால் என்ன பண்ணுவீங்க! வேணாம். இது அம்மா.  கார் எடுத்து ஒரு மாசமாச்சு. இன்னிக்காவது எங்காவது போங்க! இது அப்பா... ரொம்ம்ம்ம்ப யோசனைக்குபின் சுமார்  25 கிமீ தூரத்திலிருக்கும் இஞ்சிமேடு சிவன் கோவிலுக்கு போகலாம்ன்னு முடிவாகிட்டுது.  லாங்க் ட்ரைவ் போகலாம்ன்னா விடுறீங்களான்னு முணுமுணுத்திக்கிட்டே காரை எடுத்தான்.
கிராமங்கள் சூழ்ந்த இடம்ங்குறதால வயல்வெளிகள், டிராபிக், வாகனப்புகைலாம் இல்லாம இயற்கையை ரசிச்சுக்கிட்டே வந்தாரு மகனார். சின்ன மேடம் எப்பவும்போல செல்பி...  மாலை 5 மணிக்கு கோவிலுக்கு போய் சேர்ந்தோம்.   இந்த கோவிலுக்கா கூட்டி வந்தே?!ன்னு மகனார் ஒரு முறைப்பு..

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்னு சொல்வாங்க. ஆனா, இந்த குன்றை அப்பாவுக்குன்னு  முருகன் விட்டுக்கொடுத்திட்டாரு போல! வெற்றிலை, பாக்கு, சூடம்லாம் விற்கும் திடீர் கடைகள்  ரெண்டு மூணு இருந்துச்சு.  என்ன வேணும்ன்னாலும் வாங்கிக்கோம்மான்னு சொன்னார் மகனார்.  என்னைய கலாய்க்குறாராம்.  பூஜைக்கூடையை வாங்கிட்டு  மொத்தம் 60 படிகளை ஏற ஆரம்பித்தோம்.  
60 படிகளுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் வழித்துணையாய் வரவேண்டுமென  அங்கிருந்த வழித்துணை வினாயகரை வேண்டிக்கிட்டு படிகள் ஏறினோம்.

சில படிகள் ஏறினதும் வலது பக்கமா பிரிஞ்ச பாதையில் அகத்தியர் கோவில் இருக்கு.  சிவன் - பார்வதி திருமணத்திற்காக ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள், பூதகணங்கள் எல்லாம் கயிலாயத்தில் குடி இருந்தனர். சிவன் அகத்தியரிடம் பூமியை சமநிலை செய்யுமாறு  கூறி அனுப்பினார்.  வான்வழியே அகத்தியர் வந்துக்கொண்டிருந்தபோது கயிலாயத்திற்கு இணையாக ஒரு பெரிய மலை இருப்பதை கண்டு அதன்மீது ஏறி நின்றார்.  

 அடுத்த கணம் இமயமலைக்கு நிகராக இருந்த பெரியமலை பூமியில் அழுந்த, அதன் நுனி மட்டும் வெளியில் நின்றது. அன்றுமுதல் இந்த பெரியமலை “தென் கயிலாயம்” என அழைக்கப்படுகிறது. கொஞ்ச நாள் இங்கு தங்கி இருந்து சிவனை வழிபட்ட பின்னரே பொதிகை மலைக்கு அகத்தியர் சென்றாராம். 
அந்த அகத்தியர் கோவிலில் நாங்க போன நேரத்துல ஒரு சாமியார் கோ பூஜை செய்துக்கிட்டிருந்தார். இன்னிக்கு சடைமுடி, விபூதி, காவி உடையோடு இருக்கும் இவர் ஒரு ஐ.ஏ.எஸ்ன்னு சொன்னா யாரும் நம்பமாட்டோம். ஒரு ஐ.ஏ.எஸ் சாமியாரா மாற 600 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த நிகழ்வே காரணம்.   இவர் பெயர் பெருமாள்.  இவர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி. இஞ்சிமேட்டில் பிறந்து வளர்ந்தவர். 1982ல் ஐ.ஏ.எஸ் கர்நாடகா பேட்ஜ்ல அதிகாரியானார்.   பல்வேறு இடங்களில் பணியாற்றி மக்களின்  நன்மதிப்பை பெற்று, எடியூரப்பாமீது கொண்ட மதிப்பின் காரணமாய் அவரது கட்சி சார்பா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.   ஆரம்பத்திலிருந்தே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட இவர் இங்க வந்து தன் மனைவியோடு சாமியாராகிட்டார். அவரோட மகளும் ஐ.ஏ.எஸ் அதிகாரிதான்.   ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி எப்படி சாமியாரானார்ன்னு பார்க்கலாம். வாங்க. 

இந்த மலையில் சிலாதரன்ன்ற முனிவர் ஒரு மூலிகை லிங்கத்தை நிறுவி வணங்கி வந்தார். முனிவரது பக்தியை சோதிக்க நினைத்த இறைவன், ஒரு யானையை அனுப்பினார். முனிவர் தியானத்தில் இருந்தபோது, அந்த யானை அருகிலிருந்த குளத்திலிருந்து நீரை எடுத்து முனிவரின்மேல் தெளித்து விளையாடியது. ஆனால், அவரது தியானம் கலையவில்லை. யானை முனிவரின் அருகே சென்றபோது, ஒரு நெருப்பு வளையம் உண்டாகி, அருகில் செல்ல விடாமல் தடுத்தது. தவத்தை மெச்சிய சிவன், முனிவரின் முன்பு தோன்றி வரம் கேட்க சொன்னார். “பெரியமலையில் இருந்து அருள் புரிய வேண்டும்” என முனிவர் வேண்டிக் கொண்டார். இறைவனும் பெரியமலையில் தங்கினார்.
திருமணிச்சேறை உடையார் (உடையார்ன்னா அரசன் என அர்த்தம்)
சிலாத்தியர் என்ற முனிவர் தனது கடும் தவத்தால் உடலுடனேயே சொர்க்கம் செல்லும் வரத்தை சிவனிடம் பெற்றார். வழியில் இவரைப் பார்த்த நாரதர், “உமது மூதாதையர்களுக்கு யாரும் சரிவர திதி கொடுக்காததால் ஆவியாக அலைந்து கொண்டிருக்கின்றனர்” என்றார். சிலாத்தியர் “மிஞ்சி” என்ற தர்ப்பை புல்லை வைத்து, மூதாதையர்களுக்கு திதி கொடுத்தார். இந்த இடமே காலப்போக்கில் மிஞ்சி மருவி “இஞ்சி” மேடானது ன்னு சொல்கிறார்கள். அன்று முதல் மூதாதையர்களுக்கு, அமாவாசை தோறும் திதி கொடுக்கும் முறை வழக்கத்திற்கு வந்தது. 
யார் பெரியவர்ன்ற போட்டியில் அடியை காண விஷ்ணுவும், முடியைக்காண பிரம்மனும் புறப்பட,  ஒருக்கட்டத்தில் முடியை காண முடியாதென உணர்ந்த பிரம்மன் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மனமில்லாமல் என்ன செய்யலாமென தவித்திருக்கும்போது , இறைவனின் முடியிலிருந்து வந்துகொண்டிருந்த தாழம்பூவை தான் முடியை கண்டதுக்கு நீ சாட்சி சொல்ல வேண்டுமென சொல்லி  அழைத்து வந்து சிவனிடம் பொய்யுரைக்கின்றனர்.
 உண்மையை உணர்ந்த சிவன், தாழம்பூவை இனி தனது பூஜைக்கு தகுதி கிடையாதென சொல்லி சாபமிட, தனது தவறுக்கு வறுந்திய  தாழம்பூ   சாபவிமோஷனம் வேண்டி நிற்க இஞ்சிமலைக் குன்றின்மேல் தாழையாக உருவெடுத்து தவம் செய். உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்!’ என்று ஈசன் அருளினார். அந்தத் தாழை மரமே  இங்கு ஸ்தல விருட்சமாகத் திகழ்கிறது .
இங்குதான்  முதன்முதலில் எம்பெருமானை சுமக்கும் பாக்கியத்தை நந்தி பகவான் பெற்றார்.  சிலாதர மாமுனிவரின் புதல்வராக பிறந்த  சிற்சபேசன் , இங்கு தவமிருந்து சிவபெருமானின் வாகனமாய் மாறினார். முதன்முதலில் நந்தி பகவான் தோன்றிய இடமென்பதால் இங்கிருக்கும் நந்தி பகவான் உருவம் வளர்ந்த காளை யாய் இல்லாமல் கன்றுக்குட்டியாய் இருக்கும். இக்கோவிலுக்காக எத்தனை நந்தி சிலைகள் செய்தாலும் அது கன்றின் உருவத்திலேயே அமைகிறது. 

அன்னை திருமணி நாயகி...
அக்காலத்தில்  பண்டமாற்று வியாபாரமே இருந்தது. வியாபாரத்துக்காக பொன்னையும் நவரத்தினங்களையும் எடுத்துக்கிட்டு கங்கை நதி பக்கமா  தென்னாட்டைச் சேர்ந்த 49  வணிகர்கள்  புறப்பட்டாங்க. விண்ணுலகில் இருந்து பொன்னையும் பொருளையும்  பார்த்த நட்சத்திரக் கூட்டத் தலைவனான துருவனுக்கு அதன்மீது ஆசை வந்தது அதை அவனும் நட்சத்திர பட்டாளத்தோடு  வந்து வியாபாரிகள்கூட போர் செய்தனர்.  மனுஷங்கன்னு நினைச்சு வியாபாரிகள் போரிட்டு 48 பேர் இறந்தனர். மிச்சமிருந்த ஒரு வியாபாரி, தன்கிட்ட இருந்த பொன் , நவரத்தினங்களை எடுத்துக்கொண்டு தப்பியோடி, இறுதியில் இஞ்சிமேட்டில் வந்தடைந்தான். அந்த வியாபாரி, முற்பிறவியில் தேவதூதன்ன்ற பேரோடு இறைவனுக்கு சேவை செய்துக்கொண்டிருந்தான். அப்போது ஏழ்மை நிலையிலிருந்த அந்த தேவதூதன் அடுத்த பிறவியில் உனக்கு நான் கோவில் எழுப்ப அருளவேண்டுமென வேண்டிக்கொள்ள, அதன்படி நடக்க ஈசனும் அருளினார். முற்பிறவி பயன்படி இங்கு வந்து சேர்ந்த வியாபாரி தன்னிடமிருந்த நவரத்தினங்களையெல்லாம் அந்த லிங்கத்தின் அடியில் வைத்துவிட்டு தப்பித்து ஓடினான். சிறிது நாள் கழிச்சு வந்து லிங்கத்தினை எடுத்து அருகிலிருந்த கிணற்றில் போட்டுவிட்டு, தஞ்சையிலிருந்து லிங்கத்திருமேனி வரவழைத்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிறியதொரு கோவிலை கட்டி வணங்கி வந்தான். 












நாட்கள் போனது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி சிற்றரசனின் ஆட்சிக்கு இப்பகுதி இருந்தது. மடமும், மடாதிபதியும் தோன்றி இந்த கோவிலை நிர்வகித்தனர். சிவலிங்கத்தின் அடியில் நவரத்தினங்கள் இருப்பதை அறிந்த இளைய மடாதிபதி, பதவிக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்டு பெரிய மடாதிபதியை கொன்றான்.   சாகும் தறுவாயில் பெரிய  மடாதிபதி உன்னையே நினைத்திருந்த என்னை கைவிட்டாயே என சிவனை நொந்தபடியே உயிரை விட்டார்.   சிற்றரசனுக்கும், ஆதிக்க வெறிக்கொண்ட வேற்று அரசருக்கும் போர் மூண்டது. எதிரிகளின் தேவாலயங்களை சிற்றரசன் இடிக்க, பதிலுக்கு எதிரிப்படைகள் மலைக்கோவிலை இடித்து தரைமட்டமாக்கி, சிவனை மண்ணுக்குள் புதைத்து சிற்றரசனை கொன்றனர். மீண்டும் பிறந்து வந்து இந்த சிவன் கோவிலை நானே கட்டுவேன் என சிவனை பார்த்தபடியே   உயிர் விட்டான் சிற்றரசன். 
கோவில் பாதிப்புக்குள்ளானாலும் லிங்கத்திருமேனிக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை. பரிவாரை தேவைகள், கோவில், பூஜைகள் ஏதுமின்றி வெற்று பிரதேசத்தில் இருந்தார். லிங்கத்தின்மீது அமர்ந்து ஆடு மாடுகள் மேய்ப்பது சிறுவர்களின் வழக்கம். ஆடுமாடுகளை கட்டி வைக்கவும் சிவலிங்கம் பயன்பட்டது. 
இம்மலைமீதிருக்கும் ஒரு குகைக்குள் பாம்பாட்டி சித்தர்  தியானத்தில் இருந்ததாகவும், இப்பொழுதும் பாம்பு ரூபத்தில் இருப்பதாய் நம்புகின்றனர்.   இந்த குகையிலிருந்த பாம்பாட்டி சித்தரை கண்ட இப்பகுதியில் வாழ்ந்த ராஜா என்பவருக்கு கல் லிங்கத்திருமேனி புலப்பட, லிங்கத்திருமேனியை சுத்தம் செய்து பாம்பாட்டி சித்தரின் வழிகாட்டுதலின்படி நெய்தீபம் ஏற்றி வந்தார். ராஜா சுவாமிக்கு நெய்தீப முனிவர்ன்னு பேர் உண்டானது.  ராஜா சுவாமிகளோடு அவரது ஏழு வயது மகனும் நெய்தீபம் ஏற்ற செல்வது வழக்கம்.   கோவிலில் தங்கி இருந்த ஒரு நாள் பச்சை உடை உடுத்திய பெண் ஒருத்தி சலங்கை ஒலிக்க கையில் சூலாயுதத்துடன் நடக்க, அவரை சுற்றி ஏழு பெண்கள் கையில் விளக்கினை சுமந்து செல்லும் காட்சியை கண்டாராம். கோவிலின் நிலையை கண்ட அந்த சிறுவன், நான் வளர்ந்து வந்தபின் உனக்கு கோவிலை கட்டுவேன்னு வேண்டிக்கிட்டானாம். 
சிறுவன் வளர்ந்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி, தன்  பணியில் சிறந்து நல்ல பேரை வாங்கினார். அவருக்கு திருமணமாகியது. அவருக்கு சின்ன வயசிலிருந்தே அம்மன் பக்தையான அவருக்கு சாமியாடும் பழக்கம் இருந்திருக்கு. கணவனும் மனைவியும் ஒரு அம்மன் கோவிலுக்கு போகும்போது சாமி வந்து ஆடினாங்க. அதும் பச்சை பட்டு உடுத்தி, பாம்பு மாதிரி நெளிஞ்சு ஆடி இருக்காங்க. அதன்பிறகு இப்படி சாமியாடுவது வழக்கமாகிட்டுது. இஞ்சிமேட்டுக்கு விடுமுறைக்கு வந்து தங்கி இருந்தபோது வாசலில் வந்த சாமியாடி ஒருவர் மூலமாய் சிறுவயதில் கோவில் கட்டுவதாய் சொன்ன சொல்லும், முன் ஜென்மத்தில் ராஜனாய் இருந்து. இறக்கும்போது, இந்த கோவிலை திரும்ப கட்டுவேன்னு சொன்னதும்  நினைவுக்கு வந்தது.


அதன்பிறகு திருமணிச்சேறை உடையார் திருக்கோவில் கட்டும் பணி வெகுவேகமாய் நடந்தது. கோவில் எழும்பனும்ன்னு விதி இருந்தால் அதுக்கு ஏன் 600 ஆண்டுகாலம்ன்னு நினைக்கலா?! பெரிய மடாதிபதியின் சிவனை நொந்ததன் விளைவே இத்தனை காலம். முனிவரின் சாபம் 600 ஆண்டுகாலம் உயிர்ப்போடு இருக்குமாம். முற்பிறவியில் சிற்றரசனாய் பிறந்தவர் இப்பிறப்பில் பெருமாள் என்னும் ஐ.ஏ.எஸ் ஆபீசராய் பிறந்து பெருமாள்சாமியாரானார். ஐ.ஏ.எஸ் பதவியும் கிட்டத்தட்ட சிற்றரசர் பதவி போலதான். மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, பாதுகாப்பு, வரிவசூல் என எல்லாமும் இருவராலும் செய்யமுடியும். ஆனா தனித்து இயங்கமுடியாது.  முருகன்,  சண்டிகேஸ்வரர், துர்க்கை, கால பைரவர் என தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருக்க கோவில் எழுப்பினார். மலைக்கு கீழே, தங்களுக்கு சொந்தமான இடத்தில் சிறு திருமண மண்டபம் எழுப்பினார். வெளியூர் பக்தர்கள் தங்கி செல்ல, திருமணம், காதுகுத்து மாதிரியான நிகழ்ச்சிகள் நடக்க  இது பயன்படுது. பௌர்ணமிதோறும்இங்கு சிறப்பு வழிபாடும் அன்னதானமும் நடைப்பெறுகிறது, பிரதோசம், பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி, கார்த்திகை தீபம் உள்ளிட்டா சிவனுக்குண்டான எல்லா விசேசங்களும் இங்கு  நடக்கும்.

இங்கு, சங்கு தீர்த்தம் எனப்படும் நவபாஷாண தீர்த்தம் இருக்கு. இது சர்வரோக நிவாரணி என சொல்லப்படுது. இந்த தீர்த்தத்தில் நீராட சப்த கன்னியர் பௌர்ணமி இரவு நேரத்தில் வருவதாய் சொல்லப்படுகிறது.  இந்த தீர்த்தம் பாம்புகடி, தேள்கடி மாதிரியான விஷக்கடிகளுக்கு சிறந்த மருந்து. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பௌர்ணமி இரவுகளில் இக்கோவிலில் தங்கி இத்தீர்த்தத்தை குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.


  நவபாஷாண சிலையை வியாபாரி இந்த சுணையில் போட்டததால்தான் இத்தீர்த்தம் மருந்தாய்  மாறியதாய் சொல்றாங்க. பாகீரதி நதிக்கு ஒப்பானது இது.,  இந்த தீர்த்தத்தினை கொண்டுதான் திருமணிச்சேறை உடையாருக்கு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது.  குழந்தைகளின் வயிற்று உபாதையை தீர்க்க உரைப்பான் எனப்படும் வசம்பினை உரைத்து ஊற்றுவது வழக்கம். அதை விளக்கு வைத்தபின்னும், வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கடைகளில் கொடுக்க மாட்டாங்க. அந்த நாட்களில் குழந்தைகளின் உடல்நலத்துக்காக இரவில்கூட இந்த தீர்த்தத்தினை கொண்டு செல்வாங்களாம். 


இங்கிருக்கும் நவக்கிரக சன்னிதியில் நவக்கோள்கள் தங்களது வாகனங்களோடு காட்சி தருவது தனிச்சிறப்பு.. 





முதலில் ஸித்தி விநாயகர். பரோடா சமஸ்தானத்தில் செய்யப்பட்டது. பரவசப்பட வைக்கும் பளிங்கு உருவம்.  
மலைமீதிருந்த சிவலிங்கத்துக்கு முதன்முதலில் யாரால் கோவில் எழுப்பப்பட்டது என எந்த குறிப்புகள் ஏதுமில்லை. ஆனால் ஸ்ரீவிக்ரமாதித்த சோழன் இக்கோவிலுக்கு 7 திருக்களிற்று படிகளை கட்டினான் என்னும் ஒரே ஒரு கல்வெட்டு மட்டுமே கிடைத்துள்ளது. 
Image may contain: 1 person
பேஸ்புக்கில் சுட்ட படம்..
திருக்களிற்று படின்னா, படிகளின் ஓரத்தில் யாழி அல்லது  யானை முகம் கொண்ட யாழியின் உருவம் செதுக்கிய படிகள் என அர்த்தம். இந்த ஏழு படிகளை எந்த சேதமுமின்றி தனித்து தெரியும்படி அப்படியே விட்டுவிட்டு படிகளை உயர்த்தி  கட்டி இருக்கிறார்கள். 


பாம்பாட்டி சித்தர் வசித்த குகையில் தீய எண்ணத்துடன் நுழைபவர்கள் உயிரோடு திரும்பியதில்லை என சொல்லப்படுகிறது.  இக்குகையினுள் பத்து பேர்வரை அமர்ந்து தியானம் செய்யலாம். இக்கோவிலுக்கு வந்தவாசி, திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, சேத்பட்டிலிருந்து நேரடி பேருந்து உண்டு. பெரணமல்லூர் வரை வந்து அங்கிருந்து ஆட்டோக்களிலும் வரலாம்.  பெங்களூர் ஆட்சியரா இருந்ததால்  பெங்களூரிலிருந்து தினமும் ஒரு நேரடி பேருந்தும் முன்பு இருந்தது. இப்ப இருக்கான்னு தெரில. இக்கோவில் நடை காலை 6 மணிமுதல், முற்பகல் 11 வரையும், மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையும் திறந்திருக்கும். பௌர்ணமி தினங்களில் திருவண்ணாமலை மாதிரியே இங்கும் வலம் வருவது வழக்கம். ஏன்னா, திருவாரூரில் பிறந்தால் முக்தி,  காசியில் இறந்தால் முக்தி, தில்லையில் தரிசித்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அந்த வரிசையில் இஞ்சிமேடு திருமணிச்சேறை உடையாரை வணங்கினால் முக்தி.... 

பெரணமல்லூரில் இருந்து வரும் வழியில் சாலை ஓரத்தில் புதுசா ஒரு ஆஞ்சினேயர் கோவில்  வந்திருக்கு. பார்க்க அத்தனை அழகா இருக்கு. 


யாருக்குலாம் முக்தி வேணுமோ அவங்கலாம் வணங்கினாலே முக்தி தரும் இக்கோவிலை வாய்ப்பு கிடைக்கும்போது ஒருமுறை வந்து வணங்கி முக்தி பெறுங்கள்.

நன்றியுடன்,
ராஜி 

Tuesday, September 12, 2017

மூன்று தலைமுறைக்கும் இனி கிட்டவே கிட்டாத பாக்கியம் - காவேரி மகாபுஷ்கரணி

நீரின்றி அமையாது உலகுன்னு உலக பொதுமறையாம் திருக்குறள்ல சொல்லி இருக்கு. அதேப்போல, நதிக்கரைகளில்தான் நாகரீகம் தோன்றியதுன்னு அறிவியல் சொல்லுது. அந்த நதிகளை புனிதத்தன்மையா கருதி பெண் கடவுளாய் பாவித்து வணங்குது இந்தியா.  நதி, நீர்களை கொண்டு ஏராளமான விழாக்கள் கொண்டாடப்படுது. கும்பமேளா, மகாமகம், தீர்த்தவாரின்னு ஏராளமானது இருந்தாலும் 144 வருசத்துக்கொருமுறை கொண்டாடும் மகாபுஷ்கரணி விழாவும் ஒண்ணு. 
காவிரி நதியின் கதை....

இன்னிக்கு குடகுமலைன்னு சொல்லப்படும் சஹ்யாசலம்ன்ற இடத்துல கவேரர்ன்ற மன்னன்  தன் மனசாட்சிக்கு கட்டுப்பட்டும், இறைவனுக்கு பயந்தும் நீதி தவறாமல்  ஆண்டு வந்தான். தனக்கு இப்பிறவியே போதுமென எண்ணிய மன்னன் முக்தியை பெற வேண்டி பிரம்மாவை நோக்கி கடுந்தவம் இருந்தான்.   அவன் முன் தோன்றிய பிரம்மா தனக்கு முதியை தரும் அதிகாரமில்லை. ஆனால், முக்தியை தரக்கூடிய வழியை காட்ட முடியுமெனக்கூறி  தன்னுடைய மானச புத்திரியான ஒரு பெண்குழந்தையை சாமுத்திரிகா லட்சணப்படி படைத்து  காவேரர் மன்னனுக்கு தத்து கொடுத்தார். அவள்தான் காவேரி.  இவளால் உனக்கு முக்தி கிடைக்குமெனக்கூறி மறைந்தார். காவேரியும், காவேரர் மன்னனின் அரண்மனையில் சீரும் சிறப்போடு மிகுந்த அன்புக்காட்டி வளர்த்து வந்தாள்.
தன்னுடைய ஐந்தாவது வயதில் மகாவிஷ்ணுவை நோக்கி,  தலைக்காவேரி என்று இன்று அழைக்கப்படும் இடத்தில் தவமிருந்தாள். பிரம்மாவின் மானச புத்திரி என்பதால் மகாவிஷ்ணு, காவேரிக்கு தாத்தா முறையாகும். அதனால், ஓடோடி வந்து, விளையாட்டு குழந்தையான நீ தவமிருக்க என்ன காரணம்?! உனக்கு என்ன வரம் வேண்டுமென மகாவிஷ்ணு கேட்டார். அதற்கு,  காவிரி குழந்தை ’என் பெயருக்கு உள்ள மகிமைகளை எனக்கு வரமாக வேண்டும்’ என கேட்டார்.  அதாவது கா என்றால் பாவத்தை போக்குபவள். வே என்றால் விருப்பங்களை நிறைவேற்றுபவள். ரி என்றால் முக்தியை தருபவள். இந்த மகிமையை எனக்கு வரமாக வேண்டும் என கேட்டாள்.  மகாவிஷ்ணு மிகவும் மனமகிழ்ந்து அகில உலகத்திலும் 5 வயதில் பரோபகரமான சிந்தனையுடன் லோகத்திற்கே பயன்படும் வரத்தை, இதுவரை யாருமே கேட்டிராத வரத்தை நீ கேட்டதனால் இன்று முதல் நீ லோபா முத்திரை என்ற பெயருடன் விளங்குவாய். தகுந்த நேரத்தில் அகத்திய பெருமான் உன்னை மணமுடிப்பார். அவர் மூலம் உன்னுடைய வரங்கள் நிறைவேறும் என அருளினார்.

மணமுடிக்கும் பருவம் வந்ததும்  அகத்திய பெருமான்,  லோபா முத்திரையை மணமுடித்தார். அவரிடம் தான் 5 வயதில் வரம் பெற்றதை சொல்லி அகத்தியரும் லோபா முத்திரையும் 5 வயதில் தவம் செய்த இடத்திற்குச் சென்றார்கள். இருவரும் மகாவிஷ்ணுவை தியானம் செய்ய மகாவிஷ்ணு அவர்களிடம் நீ தவம் செய்த இடத்தில் நான் நெல்லி மரமாக மாறுவேன்.  லோபா முத்திரையான உன்னிலிருந்து ஒரு (அம்சம்) கூறு பிரிந்து நெல்லி மரமான என்னுடைய வேர் பாகத்திலிருந்து (பாதகமலம்) காவேரி எனும் புனித நதியாக வருவாய் என அருளினார். பிறகு மகாவிஷ்ணு நெல்லி மரமாக மாற, லோபா முத்திரையின் ஒரு கூறு காவேரி நதியாக மாறியது. நதியான காவேரி, அகத்திய முனிவரை வணங்கி புனித நதியாக தனக்கு பூரணத்துவத்தை தரும்படி வேண்டினார். 

அனைத்து புண்ணிய நதிகளுடைய பாவங்களை நீக்கும் ஆற்றலையும், விரும்பியவற்றை தரும் ஆற்றலையும், முக்தியை தரும் ஆற்றலையும் தரும்படி வேண்டினார். அகத்தியர்,  காவேரி நதியை கமண்டலத்தில் அடக்கி பூரணத்துவம் பெற தவத்தில் வைத்தார். நீண்ட நெடுங்காலமாக தவத்தில் ஆழ்ந்து விட்டார். நாட்டில் புண்ணிய நதிகள் இல்லாமையால் பாவங்கள் பெருகி மழையின்றி வறுமையால் மக்கள் வாடினார்கள்.  அதே நேரத்தில்   தமிழகத்தை ஆண்ட காந்தமன் எனும் சோழ மன்னன் தன் நாட்டிற்கு வற்றாத ஜீவநதி வேண்டும் என திருமாலை துதித்து தவமிருந்தான். அதேசமயத்தில் சீர்காழியில் சாபம் பெற்ற இந்திரன் மூங்கில் காட்டில் சிவனை வழிபட்டு வந்தார். பூஜைக்கு நீரும் மலர்களும் இல்லாததால் அவரும் நீருக்காக வேண்டினார். 



திருமாலும், சிவபெருமானும் கணபதியை வேண்டும்படி வழிகாட்ட கணபதியும் அகத்தியர் தவம் செய்த இடத்திற்கு சென்றார். என்ன செய்தும் அகத்தியர் தவம் கலையாததால்,  கமண்டலத்தில் பூரணத்துவம் பெற்றிருந்த காவிரியை காகம் உருக்கொண்டு பூமியில் ஓட விட்டார். நதியின் தண்ணீரில் சத்தம் கேட்டும் துளிகள் பட்டும் அகத்தியர் தவம் கலைந்தது. நீண்ட கால தவத்தில் ஆழ்ந்ததால் கணபதியின் அருளால் காவிரி பூமியில் பெருகி ஓடுவதை கண்டு ஆசீர்வதித்தார். 

காவிரித்தாய் அகத்தியரை வணங்கி தான் சோழ மன்னன் பெற்ற வரத்தின் காரணமாக தென்னகம் நோக்கி சென்று கடலில் சங்கமிக்கும் வரை தன்னை வழி நடத்தி, தான் போகும் பாதை முழுமையும் சிவாலயங்களையும், விஷ்ணு ஆலயங்களையும் அமைக்க வேண்டினார். அதன்படியே, இருவருக்கும் ஆலயங்களை அமைத்த  அகத்தியரும் தான் சந்தியாவந்தனம் செய்யும் இடமெல்லாம் சிவபெருமான் சுயம்புவாக தோன்ற வேண்டிக்கொண்டு அதன்படி சிவன் அருள, தேவார பாடல் பெற்ற 269 தலங்களில் 190 தலங்களும், 108 திவ்ய தேசங்களில் பெரும்பான்மையான தலங்களும், காவிரி நதியினுடைய தென்கரையிலும், வடகரையிலும் அமைந்துள்ளன. அதேப்போல வைணவத்தின் 108 திவ்ய தேசங்களில் பெரும்பான்மையானது காவிரிக்கரையில்தான் இருக்கு . தென்னகத்தை ஆண்ட சோழ மன்னன் ஜீவ நதி வேண்டித் தவம் இருந்து வரம் பெற்ற காரணத்தால் சோழநாடு சோறு உடைத்து எனும் பெருமையை காவிரித்தாயால் பெற்றது. பொன்னி வளநாடு எனும் பெயரும் பெற்றது.  
நெற்கதிரில் நெல்மணிகள் நிறைந்து கதிர் கொள்ள முடியாமல் தலை சாய்த்துக் கொட்டிய கதிர்கள்,  கரை புரண்டு ஓடும் காவேரியில் கொட்டி,  நீர் தெரியாமல் தங்கபாலம் விரித்தது போல் காவேரி முழுமையும் நெல் மணி நிறைந்து ஓடியதால் இந்த பகுதியில் காவேரி பொன்னி என பெயர் பெறுகிறாள். 

மக்களின் பாவத்தை தீர்ப்பதோடு மட்டுமில்லாம,  நதிகளின் பாவத்தைத் தீர்ப்பதற்கு வரம் வாங்கியதால் துலாமாதமான ஐப்பசி மாதத்தில் புனித நதியான கங்கையும் காவிரியில் 30 நாளும் வாசம் செய்து தன் ஒரு வருட பாவத்தை நீக்கிக் கொண்டு தன்னுடைய இருப்பிடம் செல்கிறாள் என்பது ஐதீகம். கங்கையே காவிரி நதியில் வாசம் செய்வதால் 66 கோடி புண்ணிய தீர்த்தங்களும் காவிரியில் வாசம் செய்து தங்கள் பாவத்தை போக்கி கொண்டு தங்கள் இருப்பிடம் செல்கின்றனர். இவ்வளவு பெருமை வாய்ந்த காவிரி தாயினுடைய மகா புஷ்கர நாட்களில் காவிரித் தாய்க்கு மாலையில் லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ர நாமம், பாராயணங்களும், தேவாரம், திருவாசகம் திவ்விய பிரபந்த பாராயணங்களும் நடைபெறும். மாலை 6 மணிக்கு தினமும் காவிரி தாய்க்கு தீப ஆரத்தி செய்யப்படும்.
குரு கிரகம் ஒரு ராசிக்குள்  பிரவேசிக்கும் காலம் தொடங்கி 12 நாட்கள் முடிய புண்ணிய நதிகளில் நீராடுவதை  "புஷ்கரம்" ன்னு சொல்லப்படுது. அதை தொடர்ந்து குரு நின்ற காலம் முழுவதும் "புஷ்கர ஆண்டு" என நதியில் நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்பணம்செய்து தான தர்மங்ககளை செய்வதாகும்
அந்த வகையில் குருகிரகம் துலா இராசியில் 12.9.2017 செவ்வாய் அன்று காலை 6:51 மணிக்கு பிரவேசிக்கிறார் அன்று முதல் 23.9.2017 வரை புஷ்கரம் எனும் நீராடல் வைபவம் காவேரி நதி பாயும் அனைத்து ஊர்களிலும் கொண்டாடப்படும். 
புஷ்கரம் கொண்டாடப்பட காரணம்...


நவக்கிரகங்களில் ஒன்றாக குருபகவான் பிரம்மனை நோக்கி கடுந்தவம் செய்தான். அவனின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றி, "உனக்கு என்ன வேண்டும்" எனக் கேட்டார்.  " எனக்கு தங்களுடைய புஷ்கரன்  வேண்டும்" என குருபகவான் கேட்டார். புஷ்கரன் என்பது அனைத்து ஈரேழு உலகத்திலும் உள்ள 66 கோடி தீர்த்தங்களின் அதிபதி. இவர் அமிர்த கலசம் ரூபம்கொண்டு பிரம்மன் கைகளில் இருக்கிறார்.  குருபகவானின் விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரனை அவருக்கு அளிக்க பிரம்மன் ஒப்புக் கொண்டார்  ஆனால் புஷ்கரன்,  பிரம்மனை விட்டுப் பிரிந்து குருபகவானிடம் செல்ல மறுத்தது. இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரனிற்கும், குருபகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அதன்படி மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் புஷ்கரன் இருக்க முடிவு செய்யப்பட்டது. 
அதன்படி புஷ்கரன் மேஷம் ராசியில் (கங்கை நதியிலும்), ரிஷபம் ராசியில் (நர்மதை நதியிலும்), மிதுனம் ராசியில் (சரஸ்வதி நதியிலும்), கடகம் ராசியில் (யமுனை நதியிலும்), சிம்மம் ராசியில் (கோதாவரி நதியிலும்) கன்னி ராசியின் போது (கிருஷ்ணா நதியிலும்), துலாம் ராசியில் (காவேரி நதியில்) விருச்சிக ராசியில் (தாமிரபரணி ஆற்றிலும்), தனுசு ராசியின் போது (சிந்து நதியிலும்), மகரம் ராசியில் (துங்கபத்திரா ஆற்றிலும்), கும்பம் ராசியில் (பிரம்ம நதியிலும்), மீனம் ராசியில் (பிரணீதா ஆற்றிலும்) என குருபகவான் எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த நேரத்தில் புஷ்கரன் அங்கு தங்கி இருப்பார் அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் முதலான முப்பது முக்கோடி  தேவர்கள் எல்லாம் இந்நதியில் தங்கியிருப்பார்கள் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது. 
பிரம்மனின் அருளாலும் குருப்பெயர்ச்சியாலும், புஷ்கரன் நதியில் கலக்கும்போது  66கோடி தீர்த்தங்களும் கலப்பதாய் ஐதீகம். இந்த குருப்பெயர்ச்சியின் போது குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம்பெயர்கிறார். துலாம் ராசிக்கான நதி காவிரியாகும். அதனால், கர்நாடகாவின் குடகு மாவட்டம் பிரம்மகிரி தொடங்கி, ஸ்ரீரங்கப்பட்டினம், சிவன்சமுத்திரம், ஒக்கேனக்கல், மேட்டூர் பவானி பள்ளிப்பாளையம், கொடுமுடி, திருச்சி, ஸ்ரீரங்கம், திருவையாறு, சுவாமிமலை, கும்பகோணம், பூம்புகார் வரையிலான அனைத்து காவிரிக்கரை மக்கள் இந்த காவேரி புஷ்கரணியை மிகச்சிறப்பாய் கொண்டாடுகின்றனர்.

இந்த புஷ்கரணியை நம் அப்பா, நாம், நம் பிள்ளைகள் உள்ளிட்ட மூணு தலைமுறையும் அடுத்த புஷ்கரணி விழாவை கண்டு களிக்கவும், நீராடி புண்ணியம் பெறவும் முடியாது. அதனால வாய்ப்பு கிடைக்குறவங்க இன்று முதல் செப் 23 வரை காவிரி நதியில் நீராடி இறை அருள் பெறுவோம். பண்டிகை என்பது வெறும் கொண்டாட்டமன்று. அந்த நன்னாளில் நம்மால் முயன்றளவு இயலாதவர்களுக்கு தான தர்மங்களை செய்வதும்க்கூட.... 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1471475

நன்றியுடன்,
ராஜி.

Thursday, November 03, 2016

மூன்றாவது படைவீடு பழனி - பக்தி

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போக சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர்மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன.மலைகளில் மருந்து கிடைப்பது  இயற்கை. ஆனா ஒரு மலையே மருந்தாய் அமைந்தது அபூர்வம்...  அந்த அபூர்வ மலையே திருஆவினன்குடி என்றும் பழனி என்றும் அழைக்கப்படுது
 பழனி என்பது மலையின் பெயராகும். பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி ஸ்தலத்தையும் உள்ளிட்ட நகரமே பழனி என்று அழைக்கப்படுது. இத்தலம் "பழனி" என அழைக்கப்படுவதன் காரணம், சிவனும், பார்வதியும் தம் இளைய மைந்தன் முருகப்பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப் பெற்றுப் பின்னர் பழனி என மருவியது
திரு - லட்சுமி
ஆ - காமதேனு
இனன் - சூரியன்
கு - பூமாதேவி
டி - அக்கினிதேவன்
இந்த ஐவரும் முருகனை பூசித்தமையால் இந்த ஸ்தலத்திற்கு "திருவாவினன் குடி" என்று ஆயிற்று.இந்நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்துள்ளது. கடைச்சங்ககாலத்தில் பழனி - பொதினி என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும், பொதினி என்ற பெயரே நாளடைவில் பழனி என்று ஆகிவிட்டதாகவும் அகநானூறு கூறுகிறது.
திருவாவினன்குடி கோயிலுக்கு அருகில், முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கை தீர்த்தமும், கோயிலில் உள்ள மகாலட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி முதலியவர்களின் சன்னதிகளும், சித்திரங்களும் இவ்வரலாற்றை விளக்குகின்றன. கயிலையில் முருகப்பெருமானைப் பிரிந்த சிவனும், உமாதேவியும் வருந்தினர். இறைவனைக் குறிக்கும் "சச்சிதானந்தம்" என்ற பெயரில் வருகின்ற "சத்" என்னும் பதம் சிவபெருமானையும், "சித்" என்னும் பதம் பார்வதி தேவியையும், "ஆனந்தம்" என்னும் பதம் முருகப்பெருமானையும் குறிக்கும்.
முருகனைப் பிரிந்த துயர் தாளாத சிவபெருமானும், உமாதேவியும், முருகனைப் பின் தொடர்ந்து திருவாவினன் குடிக்கு வந்து "பழம் நீ" என்று முருகனுக்குச் சூட்டிய திருப்பெயரே நாளடைவில் மருவி "பழனி" என்று ஆகிவிட்டது என்று பழனி ஸ்தல புராணம் கூறுகிறது.பழனி மலைமேல் உள்ள கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிவன், பார்வதி, கணபதி, முருகன் ஆகிய சிற்பங்கள் பழத்திற்காக உலகை வலம் வந்த போட்டியையும், மலைமேல் முருகப்பெருமான் சன்னதிக்குத் தென்பாகமாக காணப்படும் கைலாசநாதர் ஆலயம் இறைவனும் இறைவியும் முருகனைப் பின் தொடர்ந்து வந்து சமாதானம் செய்ததையும் உணர்த்துகின்றன.
பொதிகை மலையில் வந்து தங்கிய அகஸ்திய முனிவர் தன் சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று அங்கு முருகனுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார். இடும்பாசுரன் சிறந்த பக்திமானாக இருந்தப்படியினால், அகஸ்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடியாகக் கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான். 
இவ்விரு கிரிகளையும் திருவாவினன் குடியிலேயே நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருள்புரியவும் பெருவிருப்பம் கொண்டு முருகப்பெருமான் குதிரை மேல் செல்லும் அரசனாக வடிவெடுத்து வந்தார்.இடும்பன் வழி தெரியாது தவித்துக் கொண்டு நின்றான். முருகப்பெருமான் இடும்பனைத் திருவாவினன் குடிக்கே அழைத்து வந்து சற்று இளைப்பாறி விட்டுப் போகும்படி கூறினார். அவ்வண்ணமே இடும்பனும் காவடியை இறக்கி வைத்துவிட்டு இளைப்பாறினான். மீண்டும் காவடியைத் தூக்க முடியவில்லை. அதன் காரணத்தை ஆராய்ந்தான் இடும்பன்.
அப்போது சிறுவன் ஒருவன் கோவணத்தாண்டியாய் கையில் ஒரு சிறு தண்டு ஏந்தி சிவகிரி குன்றின்மீது நிற்பதைக் கண்டான் இடும்பன். அச்சிறுவனை நோக்கி மலையை விட்டுக் கீழிறங்கும்படிக் கட்டளையிட்டான் இடும்பன்.ஆனால் அச்சிறுவனோ அக்குன்று தனக்கே உரியதென்று உரிமை கொண்டாட, இதனால் கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்று, பிறகு முடியாமல் வீழ்ந்தான்.பின்னர் இடும்பன் மனைவியான இடும்பியும், அகஸ்திய முனிவரும் ஓடி வந்து வேண்டிக் கொள்ளவே, அவர்களுக்காகவே சிறுவனாக வந்த முருகன் மனமிறங்குவது போன்று இடும்பனை உயிர்ப்பித்தார்.
இடும்பனது சீலத்தையும் குருபக்தியையும் மெச்சிய முருகப்பெருமான் அன்று முதல் இடும்பனுக்கு, தனது காவல் தெய்வமாக விளங்கும் பேற்றை அளித்ததோடு இடும்பனைப் போன்று, சந்தனம், பால், புஷ்பம், பன்னீர் போன்ற பொருட்களையெல்லாம் காவடி எடுத்துத் தன் சன்னதிக்கு வருவோர்க்கெல்லாம் அருள்பாலிப்பதாக வாக்களித்தார்.அன்றுமுதல் முருகன் ஆலயங்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது.
மலைமீது முருகனை வழிபடச் செல்பவர்கள் முதலில் மலைப் பாதையிலுள்ள இடும்பன் சன்னதியில் வணங்கிச் செல்லுதல் வேண்டும். இடும்பன் சிறந்த வரப்பிரசாதியாய் விளங்கி அருள்புரிகின்றார். இச்சிவகிரியின் உச்சியில்தான் தண்டாயுதபாணி என்று அழைக்கப்படும் முருகன் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது.
திருவாவினன்குடி ஆலயம் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் இருக்கிறது. இவ்வாலயத்தின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை காணப்படுகிறது. முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இப்பொய்கையில் நீராடிச் செல்வர்.இப்பொய்கையின் அருகிலிருந்துதான் காவடி எடுக்கப்போகும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளைக் கொண்டு செல்வர். திருவாவினன்குடி கோயிலில் முருகப்பெருமான் மயில் மீதமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாகக் காட்சி தந்தருள்கின்றார்.இங்குள்ள முருகப்பெருமானைத் தரிசிக்கும் பொருட்டு, மகாவிஷ்ணு, சிவபெருமான், இந்திரன் முதலியோர் வந்து இங்கே கூடியதாகவும் நக்கீரர் கூறுகிறார்.
இப்பெருமானை வழிபட்ட பின்பே மலைக்கோயிலுக்கு செல்வது மரபு. இத்திருத்தலம் முன்பு நெல்லிவனமாக இருந்தது என்பதற்கு ஓர் ஆதாரம் உண்டு. என்னவெனில், இங்கு தல விருட்சம் நெல்லி மரமாகும். திருவாவினன்குடி கோயிலிருந்து ஞான தண்டாயுதபாணியின் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் விளங்கும் மலை பழனி மலையாகும். இம்மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்றழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது.

இம்மலையைச் சுற்றி சுமார் 3 கி.மீ. தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிரகாரமும், இப்பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளை உடைய மண்டபங்களும் இருக்கின்றன. கிரிவலம் மிகவும் சிறப்புடையதாகும்.மலைப் பாதையின் முன்பக்கம், மலையின் அடிவாரத்தில் பாத விநாயகர் ஆலயமும், அதற்கு எதிரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன.அருகிலுள்ள மயில் மண்டபத்திலிருந்து 695 படிக்கட்டுகள் நம்மை மலைக் கோயிலுக்கு அழைத்துச் செல்கின்றன. வழி நெடுக இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு ஏராளமான மண்டபங்களும், இடையிடையே பல ஆலயங்களும் இருக்கின்றன.
மூன்றாவது படைவீடான இத்திருத்தலத்தில் குமரப்பெருமான் தனது ஆண்டிக் கோலத்தின் மூலமும் குன்றின் உச்சியில் கோயில் கொண்டிருப்பதன் மூலமும் ஒரு உண்மையைப் போதிக்கிறார். ஆனந்தமயமான ஆண்டவனை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை இறைவனிடம் செலுத்தினால்தான் முடியும்.மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் சிலை வடிவில் தோன்றினாலும், உண்மையில் அவரது திருமேனி போகர் எனும் சித்தரால், "நவபாஷாணம்" எனப்படும் ஒன்பது வகை மருந்துகளால் உருவாக்கப்பட்டதாகும்.
இப்படை வீட்டில் முருகப்பெருமான் அபிஷேகப் பிரியராக சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்ற திருத்தலங்களைப் போலல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை.அதிகாலை முதல் இரவுப் பூஜை முடியும்வரை சதா பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்தவண்ணமே இருக்கின்றன. அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன. தண்டாயுதபாணி சுவாமியை மொட்டையாண்டியாகப் படங்களில் சித்தரித்திருந்தாலும், இப்பெருமான் சடாமுடியுடனே விளங்குகின்றார் என்பதனை அபிஷேக காலத்தில் நன்கு அறியலாம்.
ஆதியில் போக சித்தராலும், அவரது சீடராகிய புலிப்பாணி முனிவராலும் வழிப்பட்டு வந்த ஞான தண்டாயுதபாணியின் கோயில் முதன்முதலில் சேர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதாகவும், அதன் காரணமாக இத்தலத்தில் வழிபட கேரள மக்கள் மிகவும் அதிகமாக வருவதாகவும் சொல்லப்படுகிறது.சபரிமலை ஐயப்ப சுவாமியைச் சென்று தரிசித்து வருபவர்களும், குருவாயூரப்பனைத் தரிசித்து வருபவர்களும் பழனிக்குச் சென்று பழனி ஆண்டவனையும் வழிபட்டே தங்களது ஸ்தல தரிசனத்தைப் பூரணமாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்ற வழக்கமும் நிலவி வருகிறது.
 இவ்வளவு சிறப்பு வாய்ந்த கந்தப் பெருமானை ஞான தண்டாயுதபாணி வடிவில் வணங்கி, தரிசனம் செய்து ஞானமும், அருளும் பெறுவோமாக!

வழித்தடம்: இக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தின் கீழ் வருகிறது. திண்டுக்கல்-கோயம்புத்தூர் ரயில் பாதையில் சுமார் 60 கி.மீ. தொலைவில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது.இனி வேறு படைவீட்டில் இருந்து சந்திக்கலாம்.நன்றி.