Showing posts with label நந்தவனத்தேரு. Show all posts
Showing posts with label நந்தவனத்தேரு. Show all posts

Sunday, July 29, 2018

என்ன வரம் வேண்டும்?! இந்த வரம் போதும்!! - பாட்டு கேக்குறோமாம்

ஒரு பாடல் எப்படி இருக்கனும்ன்னா, அலங்காரமில்லாத வரிகளுடனும், ஆர்ப்பாட்டமில்லாத இசையுடனும், பாடலை கேட்கும்போதே மனசை  ஒருமுகப்படுத்தி,  செவி வழியே நுழைந்து ஆத்மாவோடு கரைஞ்சுடனும். அதுமாதிரி அனுபவித்துக் கேட்கவைக்கும் ஒரு பாடலைதான் இன்னிக்கு பார்க்கப்போறோம். 
கிழக்குவாசல், சின்ன கவுண்டர், பொன்னுமணின்னு வெற்றி படங்களை தந்தவர், இயக்குனராகவும் பாடலாசிரியராகவும்  அறியப்பட்டவரான ஆர்.வி.உதயக்குமார்  இயக்கி தோல்வியடைஞ்ச படம் நந்தவனத்தேரு.  படம் தோல்வி அடைஞ்சிருந்தாலும் இசைஞானி குறை வைக்காத படங்களில் இதுவும் ஒன்று .   இந்த படத்தில் வெள்ளி நிலவே.. வெள்ளி நிலவே..ன்னு ஒரு பாட்டு வரும். அதான் அப்ப செம ஹிட். ஆனா, எனக்கு இந்த பாட்டுதான் பிடிக்கும். கார்த்திக் இருக்கவே மொத்த பாடலும் கேட்டாலும் இந்த பாடல் மட்டும் ஓரிரு முறை மீண்டும் கேட்பேன். 
மிகப்பெரிய ஹிட் படத்தில்கூட கெட் அப் மாத்தாத கார்த்திக், இந்த படத்தில் மீசை இல்லாம, லேசாக முளைத்த தாடி, மீசையோடு இருப்பார். கார்த்திக்க்கும் வயசாகும்ன்னு உணர்ந்த தருணம். சண்டை, டான்ஸ், கோவம்ன்னு எந்த சீனா இருந்தாலும் அனாயசமா நடிச்சு கொடுக்கும் ஆளு இந்த படத்தில் திக்கி திணறுனாப்ல. ஜாடிக்கேத்த மூடி மாதிரி ஸ்ரீநிதின்னு ஒரு பொண்ணு நடிப்புன்னா கிலோ என்ன விலைன்னு கேட்டுக்கிட்டு குறுக்க மறுக்கா இந்த படத்துல ஹீரோயினா வந்திட்டு போச்சுது. விவேக்கும், வடிவேலுவும் இருந்தும் காமெடிக்கு பஞ்சம். 

வெக்கம், மானம், சூடு, சுரணை இருந்திருந்தா அன்னிக்கே கார்த்திக்கை வெறுத்திருக்கனும் நானு. எனக்குதான் அதுலாம் கிடையாதே! கெட்டதுலயும் நல்லது தேடி பாட்டு வச்சு ஒப்பேத்திக்கிட்டேன். எனக்கு புடிச்ச பாட்டு உங்களுக்கும் பிடிக்குதான்னு கேளுங்க. 
 
இங்கே இரண்டு ஜீவன் நனையும்.
இன்பம் என்னும் மழையில் நனையும் ஓ ஓ ஓ
துன்பம் என்னும் கனவு கலையும்
தூபம் போட்டு உறவு மலரும்..
தந்தோம் நல்வாழ்த்து....

என்ன வரம் வேண்டும்?!
இந்த வரம் போதும்!!
ஜென்ம ஜென்மம்தோறும் உந்தன் கரம் வேண்டும்..
உன்னையே நினைத்தேன்.. நிழலாய் தொடர்ந்தேன்..
எனை நீ தொடவே நிஜமாய் மலர்ந்தேன்...  
(என்ன...)

மௌனமொழி நின்று போனது
உண்மை ஒன்று கேட்டது
 காதல் என்னும் வழி கண்டது
கையில் உன்னை தந்தது..

இன்றல்ல நேற்றல்ல என்றைக்கும்
இங்கு உன்னோடு என் உள்ளம் சங்கமம்
ஒன்றல்ல ரெண்டல்ல  இன்பங்கள்
அதை சொல்லிட வந்திடும் குங்குமம்.

நிலமும் இங்கு நீரும் நிலவும் அந்த வானும்
காலம் முழுவதும் காதல் வாழும் என்று சொல்லும்
என்ன வரம் வேண்டும்?!
இந்த வரம் போதும்!!

நாணத்திலே பெண்மை வேர்த்தது
தென்றல் மெல்ல பார்த்தது
வானத்திலே மின்னல் வாழ்த்திட
என்னை உன்னில் சேர்த்தது

நீர் இன்றி வேரில்லை மண்ணிலே
இங்கு என் பார்வை என்றும் உன் கண்ணிலே
உள்ளத்தை உன்னிடம் சொல்லியே
அன்பு தேன் அள்ளி தந்தது மல்லியே!

நதிகள் ஒன்று சேரும், அலைகள் சந்தம் போடும்
காலம் முழுவதும் காதல் வாழும் என்று சொல்லும்
என்ன வரம் வேண்டும்?!
இந்த ஜென்மம் போதும்!!

படம் : நந்தவனத் தேரு
பாடியவர்கள் : மனோ, லேகா, குழுவினர்
இசை : இளையராஜா
எழுதியவர்: ஆர்.வி.உதயக்குமார்
நடிகர்கள்: கார்த்திக், ஸ்ரீநிதி

பாடலை கேட்டு பாருங்க. படம் பார்த்துட்டு பாட்டை  கேக்காதீங்க.  அப்புறம் வருத்தப்படுவீக..


நன்றியுடன்,
ராஜி