எங்க ஊர் பக்கம்லாம் தலைப்பிள்ளையை சுமக்கும் கர்ப்பிணிகளுக்கு அம்மா, நாத்தனார், தாய்மாமன், அக்கா, அத்தை வீடுகளிலிருந்து விதம்விதமான சாதம், பலகாரம்லாம் செஞ்சு எடுத்துப் போய் கொடுக்குறது வழக்கம். அப்படி எடுத்துப் போற சாத வகைகளில் மாங்காய் சாதம், புளிசாதம், புதினா சாதம், புதினா துவையல் அவசியம் இருக்கும். இப்போதான் எல்லா சீசன்களிலும் மாங்காய் கிடைக்குது. அதுக்கு முன்னலாம் சீசன் இல்லன்னாலும் எப்படியாவது மாங்காய்களை வாங்கி சாதம் கிளறிக் கொண்டுப்போய் கர்ப்பிணிகளுக்குக் கொடுப்பாங்க.
இது மாங்காய் சீசன்... இனி கொஞ்ச நாளுக்கு மாங்காய் சாம்பார், பச்சடி, பொரியல்,ஊறுகாய்ன்னு சமையலில் இருக்கும். இன்னிக்கு மாங்காய் சாதம் செய்வது எப்படின்னு பார்க்கலாம்...
மாங்காய் சாதம் செய்ய தேவையானப் பொருடகள்:
உப்பு போட்டு உதிரியாய் வடித்த சாதம் - ஒரு கப்
முற்றிய மாங்காய் - 1
ப.மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - சிறுதுண்டு,
பெருங்காயம் -சிறிது
மஞ்சப்பொடி - சிறிது
கடுகு - சிறிது
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தப் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு தேவையான அளவு
சமையல் எண்ணெய் - 3 டீஸ்பூன்
அரிசியை 1 மணி நேரம் ஊற வச்சு உப்பு போட்டு உதிரி உதிரியாய் வடிச்சி, அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற வச்சுக்கோங்க. மாங்காயை கழுவி தோல் சீவி துருவிக்கோங்க. பச்சமிளகாயை நீளவாக்குல அரிஞ்சு வச்சுக்கோங்க, இஞ்சியை சுத்தம் பண்ணி தோல் நீக்கி நசுக்கி வச்சுக்கோங்க.
அடுப்பில கடாய் வச்சு எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும், கடுகு போட்டு பொரிஞ்சதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவக்க வறுத்துக்கோங்க.
அடுத்து பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க விடுங்க.
அடுத்து கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்குங்க.
இஞ்சி போட்டு வதக்குங்க.
அடுத்து மாங்காய் போட்டு வதக்குங்க.
பெருங்காயப்பொடி சேருங்க.
உப்ப்பு சேருங்க.
மஞ்சப்பொடி சேர்த்து சிறு தீயில் வதக்குங்க. மாங்காய்லாம் வெந்து எண்ணெய் பிரிஞ்சு வரும் நேரத்தில் அடுப்பை அணைச்சுட்டு இறக்கிடுங்க.
மாங்காய் விழுது ஆறினதும் ஆற வச்சிருக்கும் சாதத்தில் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து கிளறுங்க.
சுவையான மாங்காய் சாதம் ரெடி. பருப்புகளோடு முந்திரியும் சேர்த்துக்கலாம். இது மாங்காய் சீசன். பிள்ளைகளுக்கு மதியம் லஞ்ச் பாக்சுக்கு கொடுத்தனுப்பலாம். மிக்சர், வத்தல், அப்பளத்தோடு சாப்பிட நல்லா இருக்கும்.
நன்றியுடன்,
ராஜி