என்னதான் வீரம், காதல், சூது, பண்பாடு, நாகரீகம்லாம் சுமந்து மௌனமா நிற்கும் இடிந்த கோட்டைகள் மட்டுமே பார்க்குறது!? அதையெல்லாம் பார்த்து, படிச்சு, டைப்படிச்சு படுத்தா நைட்ல நெஞ்சம் மறப்பதில்லை, அது தன் நினைவை இழப்பதில்லை...,ன்னு ஒரு ஆவி வந்து பாடுற மாதிரி இருக்கு. இது கோவை ஆவியா இருந்தா பரவாயில்ல. நம்ம தம்பிதானேன்னு தாஜா பண்ணிடலாம். ஆனா, இது ஏதோ மன்னர், ராணி, தளபதியோட ஆவி போல. அதான் பயம் வந்திட்டு. அதனால, இந்த வாரம் நம்ம லொக்கேஷனை மாத்தியாச்சு.
கண்ணுக்கும், கருத்துக்கும் குளிர்ச்சியா இருக்கும் இடமான பேச்சிபாறை அணை பத்திதான் இன்னிக்கு மௌனசாட்சிகள்ல பார்க்க போறோம். போலாமா!?
இந்த அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கு. இது கோதையாற்றின்
குறுக்கே கட்டப்பட்டிருக்கு. இது, மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய அணையாகும்.
நாகர்கோவிலிலிருந்து 43 கிலோமீட்டர் (27 மைல்) தொலைவில் இருக்கு இந்த அணை. இங்கப் போறதுக்கு நாகர்கோவில்ல இருந்து நிறைய பஸ் வசதிகள் இருக்கு. பேச்சிபாறை போற வழிலாம் மரங்களும், மலைகளும் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு.இங்க இருக்கும் மக்கள் கூட கேரள கலாச்சாரங்களையே பிரதிபலிக்குறாங்க. பேச்சிபாறையிலும் சிறிய பஸ் ஸ்டான்ட் இருக்கு. இந்த அணை மாணவ மாணவியருக்கும் கல்வி சுற்றுலாகவும், பொறியியல் படிக்கும்
மாணவர்களுக்கு இது தொழிநுட்ப சுற்றுலாகவும் போறதுக்கு தகுந்த இடம்.
இந்த அணைக்கட்டு திருவிதாங்கூர்
மகாராஜா மூலம் திருநாள் காலத்தில்
ஐரோப்பிய பொறியாளர் திரு ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் அவர்களால் 1897-1906
காலக்கட்டத்தில் கட்டப்பட்டது. இந்த அணை கட்ட செலவழிக்கப்பட்ட தொகை 26.1 லட்சம்.
இந்த அணையின் உயரம் முதலில் 42 அடியாகதான்
இருந்ததாம். . பின்பு 1964-ஆம்
ஆண்டு மேலும் 6 அடிகள் கூட்ட
முடிவு செய்து 1969 ஆம் ஆண்டு
அணையின் உயரம் 48 அடியாக
கட்டி முடிக்கப்பட்டதாம்.
இந்த அணையை கட்டிய ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் நினைவுச் சின்னமும், கல்லறையும் இங்க காணப்படுது. இவரது காலம் (பிறப்பு) 08.10.1868
-(இறப்பு) 25-09-1913 அவர் முதலில் சென்னை பிரிட்டிஷ் மாகாணத்தில் மதுரை நகராட்சியில்
நகராட்சி பொறியாளராக பணியாற்றினாராம். பின்னர், திருவிதாங்கூர் அரசாட்சியில்
அணைகட்டுவதற்காக பணியில் அமர்த்தபட்டதாக கூறப்படுது. ஹம்ப்ரி மிஞ்சின் தனது 45 வயதில் 1913 ல் காலமானார்.
இந்த அணையின் கொள்ளளவு 207.19
சதுர கிலோமீட்டர்கள். ஆழம் 14.6 மீட்டர்கள் ( 48 அடி). அணையின் நீளம் 425.5
மீட்டர்கள் உயரம் 120.7 மீட்டர்கள். இந்த பகுதியில் காணப்படும் நீர்நிலைக்கு
பின்புறம் இருக்கும் மலையில் மலைவாழ் மக்கள்
வசிக்கின்றனர். அவர்கள் படகுமூலம் தான் போக்குவரத்து செய்கின்றனர்.
இந்தமலையில்
எல்லாவிதமான காட்டுமிருகங்களும் இருக்குறதா சொல்றாங்க இங்க வாழும் மலைவாழ் மக்கள். இந்த இடம் முழுதும் பாரஸ்ட்
துரையின் கட்டுபாட்டில்இருக்கு. இந்த பரந்த நீர்நிலையால் கல்குளம், அகத்தீசுவரம், தோவாளை மற்றும் ராதாபுரம் ஆகிய வட்டங்கள் இதன்
மூலம் பலன் பெறுது. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் இதனால் பாசன வசதி
பெறுகின்றதாம்.
இங்கே இருக்கும் முக்கியமான இடம்
பேச்சியம்மன். அதனாலதான் இந்த இடத்துக்கு பேச்சிபாறை ன்னு பேர் வந்ததாம். நாங்கள்
அணையை பார்த்துக்கிட்டு கொண்டு இருந்தப்போ, அங்க இருந்த ஒரு பெரியவர், இப்ப நீங்க கரையில் பார்க்கும் இந்த
பேச்சியம்மன் கோவில் இந்த தண்ணீர் பரப்பின் நடுவில் இருந்தது. அணை கட்டுவதற்கு
இந்த கோவில் இடைஞ்சலா இருந்ததால ஹம்ப்ரி மிஞ்சின் இந்த கோவிலை இப்ப இருக்கும்
இடத்திற்கு மாற்றினாராம்.
கோவிலை இடம் மாத்துறதுக்கு மலைவாழ் மக்கள் அதை எதிர்த்து இருக்காங்க. ஆனா, பெரும்பரப்பளவு கொண்ட அணையா இதை இடத்தை மாற்ற வேறு வழியில்லாமல மிஞ்சின் இந்த கோவிலை
கரைக்கு மாறினாராம். அவர் மரணம், கொடிய விஷப்பாம்பு கடித்ததாலதான்ன்னு சொல்றாங்க. அவர் மரணத்துக்கு காரணமானது இங்குள்ள அம்மனின் பாம்பு ன்னு இங்குள்ள மக்கள் இன்று வரை நம்புறாங்க.
இதுல எது நிஜம்? எது கதை? என்பதைச் சொல்ல மிஞ்சின்னும் இப்ப இல்லை. அவர்காலத்தில் வாழ்ந்த மலைவாழ்மக்களும் இல்லை. இதுலாம் நூற்றாண்டுகள் கடந்த வரலாறு.
சரி, இங்க கரையில் அமர்ந்து
அருள்புரியும் பேச்சியம்மன் கோவிலுக்கு போலாம் வாங்க. இந்தக் கோவில் கேரளபாணி கட்டிடகலை அமைப்பில் இருக்கு. பூஜை செய்பவர்கள் கூட நம்பூதிரி வகையினர் போலதான் இருக்காங்க. பசுமையான மரங்களுக்கு இடையில் கோவில் பார்க்க ரொம்ப அழகா இருக்கு. சிலர் குழந்தைக்கு மொட்டை அடிக்கவும் வந்திருந்தனர். சிலர் பாயாசம் செய்து
அம்மனுக்கு படைக்கவும்செய்தனர்.பார்பதற்கு பரவசமூட்டும் அம்மனின் சிலை கருணை
வடிவாக அலங்காரத்துடன் இருந்தது. அம்மனை கும்பிட்டு அங்கே இருந்து கிளம்பலாம் வாங்க.
போகும் வழிலாம் பச்சைபசேல்ன்னு மரங்களும், செடி கொடிகளும், மலை சூழ்ந்த இடங்களும் விடுமுறையில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடம். இந்த அணை, தென்மாவட்டங்களுக்கு நீர்வளத்தையும் மின்சாரத்தையும் அளிக்கும் முக்கியமான அமைப்பாக இருக்கு. மேட்டூர் அணைக்கு அடுத்தபடியான பெரிய அணை இதுவே ஆகும்.
குடும்பத்தோடு படகு பயணம் வரலாம். குழந்தைகள் பொழுது போக்குறதுக்கு வசதியா பார்க், விளையாட்டு திடல்ன்னு இன்னும் கொஞ்சம் உருவாக்கலாம். அணைக்கட்டை சுத்தி பார்த்து கால் வலிக்குது. கொஞ்சம் ஓய்வெடுத்துக்குறேன்.
மீண்டும் அடுத்த வாரம் வேற ஒரு இடத்தைப் பத்தி மௌனச்சாட்சிகள்ல பார்க்கலாம்.


















