Showing posts with label சுற்றுலா. Show all posts
Showing posts with label சுற்றுலா. Show all posts

Thursday, September 27, 2018

பறவையா பறக்கனும் - உலக சுற்றுலா தினம்


தண்ணி ஒரே இடத்தில் தேங்கி நின்னால் சாக்கடையாகிடும். அதனால ஓடிக்கிட்டே இருக்கனும். அதுமாதிரிதான் மனுஷங்களும் ஒரே இடத்தில் இருந்தால் பல விசயங்களை அறிய முடியாது. அடிக்கடி, வெளில போய்ட்டு வரனும்ன்னு சொல்வார்.  ஆதி மனிதன் உணவுக்காகவும் தோதான உறைவிடத்துக்காகவும் ஒவ்வோர் இடமாக சுற்றித்திரிந்து பின்னர் வாழ்வதற்கு ஏற்ற சூழல் பொருந்திய ஓரிடத்தை தேர்வு செய்து அங்கே நாகரிகத்தை வளர்த்தான் அவனும் வளர்ந்தான். பயணமென்பது ஒவ்வொரு மனிதனின் மரபணுவிலுமே பொதிந்து கிடக்குது. அதன் பரினாம வளர்ச்சிதான் இன்றைய சுற்றுலான்னு அப்பா அடிக்கடி சொல்வா அதுப்படி வருசம் ஒருமுறை எங்காவது கூட்டிட்டு போவார்.  கன்னியாகுமரி முதற்கொண்டு ரிஷிகேஷ் வரை டூர் போய் வந்தாச்சுது. பல்வேறு இடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்களை பார்த்தால் நம்மை மேம்படுத்திக்க உதவும்ன்றது அவரது எண்ணம்.  அவரது நினைப்புப்படியே எப்பேற்பட்ட உணவுக்கும், தண்ணிக்கும், சுற்றுச்சூழலிலும் வாழ என் பிள்ளைகள் உடலும் மனசும் ஒத்துக்கும். 
ஒரு பயணமென்பது வெறும் இடம் மாற்றம் மட்டுமல்ல. பல நினைவுகளின், அனுபவங்களின் தொகுப்பு. உலகை பல்வேறு பார்வையில் பார்க்க பயணம் உதவது. அதனால்தான் வெளிநாட்டில்லாம் வாரக்கடைசியில் குடும்பத்தோடு வெளிச்செல்வதும், வருடமொருமுறை சுற்றுலா போறதும் வாடிக்கை.  சுற்றுலான்ற வார்த்தைக்கு வழக்கமான இடத்தை விட்டு வேறு ஒரு இடத்துக்கு சென்று ஓய்வு, ஆராய்ச்சி மாதிரியான நோக்கத்துக்காக செல்வதுன்னு அர்த்தம். மனுசனுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் 
சுற்றுலா ஒரு மனுசனை மட்டும் மேம்படுத்துவதில்லை. மனுசனோடு சேர்த்து ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுலா உதவுது. உலகின் பளா நாடுகள் தங்களது கலாச்சாரத்தில் சுற்றுலாவுக்கென ஒரு இடத்தை வைத்துள்ளது. சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில், செப். 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக 1970ம் ஆண்டு ஐ.நா.சபை யால் அங்கீகரிக்கப்பட்டு அறிவித்தது. அதனால், உலக சுற்றுலா தினம் உலக சுற்றுலா நிறுவனத்தின் (WTO) ஆதரவில் 1980ல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.  அதுக்கு அப்புறம்தான் சுற்றுலாவுக்கான தினம் என தனியாக கொண்டாடப்படுது. இப்ப சுற்றுச்சூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, கல்வி சுற்றுலா என பல அவதாரமெடுத்துள்ளது.
ல்வித்துறை, மருத்துவத்துறை மாதிரி சுற்றுலாதுறைதான் உலகின் மிகப்பெரிய துறை. அதேப்போல, உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் சுற்றுலா. போக்குவரத்துறை, உணவுத்துறை, இடவசதி, ஓய்வு மற்றும் கேளிக்கை என 5 துறைகளை சார்ந்து சுற்றுலா துறை விளங்குகிறது. வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பலம் சுற்றுலாதான். 2010ன் கணக்குப்படி 940 மில்லியன் சர்வதேச சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2009ல் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் காரணமா 2008ன் இரண்டாம் பாதியிலிருந்து 2009ன் இறுதிவரை சரிவைக் கண்டது. சுற்றுலாத்துறை பல உலகநாடுகளின் முக்கிய தொழில்துறையாக இன்றளவும் இருக்கு. ஐரோப்பியர்கள்தான் சுற்றுலா செல்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களில் முதலிடத்தில் இருக்காங்க. தங்களது வருமானத்துல ஒரு பகுதியை இப்படி சுற்றுலா போறதுக்காவே  ஒதுக்கி வைக்குறாங்க. 
சுற்றுலா செல்ல மிக சிறந்ததாய் பத்து நாடுகள் தேர்வாகி இருக்கு. பேங்காங்க்(தாய்லாந்து) ஆடம்பர மாளிகை மற்றும் தண்ணீரில் மிதக்கும் சந்தையும், பழங்கால மாளிகை, கோயில்லாம் சுற்றுலா செல்ல காரணம். லண்டன் தேம்ஸ் நதியே முக்காவாசிப்பேர் லண்டன் செல்ல காரணம்.  அறிவியல் வளர்ச்சியோடு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய அழகை அப்படியே தக்க வச்சிக்கிட்டிருக்கு இந்த இடம். பாரீஸ் (பிரான்ஸ்) செலக்ட் மக்களால் உருவாக்கப்பட்ட இந்த  பாரிசி என அழைக்கப்பட்டு இப்ப பாரீஸ் என அழைக்கப்படுது. இங்கிருக்கும் செய்னி ஆறு, நோட்ரே கதீட்ரல் தேவாலயம், புனித செப்பல் தேவாலாயம் மற்றும் ஈபிள் டவர் இதுலாம் மக்களை ஈர்க்கும் அம்சம். துபாய் ஏழு அரபு நாடுகளின் தலைநகரமாய் விளங்கும் இந்த இடம் சிறந்த கடைத்தெருக்களையும் கொண்டு மக்களை ஈர்க்கின்றது. நியூயார்க் நகரம்  புல்வெளிகள், காடுகள், ஆறுகள், பண்ணைகள், மலைகள், ஏரிகள் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நகரத்தினை கொண்டு மக்களை ஈர்க்கின்றது.

சிங்கப்பூர் பூங்காக்களை கொண்டு நம்மை ஈர்க்கும். மிகச்சிறந்த வர்த்தக உலகின் முக்கிய வர்த்தக நகரம். கோலாலம்பூர்(மலேசியா) ஆல்பா  வோர்ல்ட் சிட்டி என அழைக்கப்படும் இந்நகரம் கலாச்சாரம், நிதி மற்றும் பொருளாதாரம், வர்த்தக மையமாக திகழுது. பெட்ரோனஸ் இரட்டை கோபுரம் மக்களை பெரிதும் கவர்ந்திழுக்குது. இஸ்தான்புல் (துருக்கி) பாரம்பரிய நகரமென யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட இடம். மர்மர காடும், கருங்கடலும் பிரசித்தம். டோக்கியோ (ஜப்பான்) ஹோன்சு, இஜூ, ஒகசாவரா ஆகிய தீவுகள் சுற்றுலாவுக்கு என சிறப்பு பெற்றது. சியோல் (தென் கொரியா)  இங்குள்ள ஹான் நதி 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வரலாற்று சிறப்பு பெற்றது. இந்த நகரில் உள்ள ஜேங்டியோக் அரண்மனை, Hwaseong கோட்டை, Jongmyo கோவில், Namhansanseong மற்றும் Joseon வம்சத்தின் அரச கல்லறைகள் ஆகிய ஐந்து இடங்களை யுனஸ்கோவால் பாரம்பரிய பகுதிகள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வாசலை தாண்டி சாலையில் கால்பதிக்கும்போதே சுற்றுலா தொடங்கி விடுது. அதனால், நமது உடல்நிலை, பொருளாதார சூழல், கால அவகாசத்தைக்கொண்டு முன்கூட்டியே திட்டமிடனும். குடும்பத்தோடு செல்வதென்றால் கூடுதல் கவனம் தேவை. நாம் செல்லுமிடத்தின் போக்குவரத்து, தங்குமிடம் ஆகியவற்றின் விவரங்களை முன்கூட்டியே விசாரிச்சு வச்சுக்கனும். என்னதான் கிரடிட், டெபிட் கார்ட்லாம் இருந்தாலும் கைவசம் பணத்தை இருப்பு வச்சுக்கனும்.  பணத்தை ஒருத்தரே வச்சுக்காம ஆளுக்கு கொஞ்சம்ன்னு பிரிச்சு வச்சுக்கனும். அப்படி ஆளுக்காள் வச்சிருக்கும் பணத்தையும் ஒரே இடத்தில் வச்சுக்காம வெவ்வேறு இடத்தில் வச்சுக்கிட்டா வழிப்பறி, விபத்து, திருட்டு போது பணமில்லாம திண்டாட வேண்டி இருக்காது. என்னதான் ஆளுக்கொரு போன் இருந்தாலும் முக்கியமான தொலைப்பேசி எண்களை ஒரு நோட்டில் குறிச்சு வச்சுப்பது நலம். பாதுகாப்பு குறைவா இருக்கும் இடத்தில் தங்க நேர்ந்தால் ஆளுக்கு கொஞ்ச நேரம்ன்னு காவலுக்கு ஒருவரை வச்சுக்கனும். ஹோட்டல் அறைகளில் தங்க நேரும்போது குளியலறை, படுக்கையறைகளில் கேமரா எதாவது இருக்கான்னு பார்த்துக்கனும். எங்க போய் தங்குறோமோ அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷன், இன்ஸ்பெக்டர், மருத்துவமனை தொலைப்பேசி எண்களை வாங்கி வச்சுக்கனும்.  பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்துடனும். எந்த ரயில், பஸ், ப்ளைட்ன்னும்,  கோச், இருக்கை  எண்கள்  முதற்கொண்டு எல்லா விவரங்களையும், குடும்பத்தில் எல்லாரும் தெரியப்படுத்தனும்.
சோப்பு, சீப்பு, தே.எண்ணெய், பேஸ்ட், பிரஷ், பொட்டு, ஷாம்பு, குடிதண்ணீர் பாட்டில், சின்னதா ஒரு கத்தி, பேட்டரி, டம்ப்ளர், துணி காய வைக்கும் கயிறு, பயணங்களை குறிச்சு வச்சுக்க சின்னதா ஒரு டைரிலாம் எடுத்துக்கனும், இதுலாம் போற இடத்துலயே கிடைக்கும்தான். விலை கூடுதலா இருக்கும். இல்லன்னா அலைஞ்சு திரிஞ்சு வாங்க வேண்டி வரும். குழந்தைகள், பெரியவங்களை அழைச்சுக்கிட்டு போகும்போது அவங்களுக்கு தேவையான மருந்துகள், படுக்கை வசதி, சுடுதண்ணி வைக்க சின்னதா ஒரு கெட்டில், கொஞ்சம் பிஸ்கட், பழங்கள், பால்பவுடரை கொண்டு செல்லனும். சாப்பாடு சரியில்லாத போது இதை வச்சு சமாளிச்சுக்கலாம். துண்டு, பெட்ஷீட் எடுத்துக்கனும். ஹோட்டல் ரூம்ல எத்தனை சுத்தமா இருக்கும்ன்னு தெரியாதுல்ல! ஆதார்கார்ட், வாக்காளர் அடையாள அட்டை மாதிரியான அடையாள அட்டையின் ஒரிஜினலை பத்திரமா வச்சுக்கிட்டு டூப்ளிகேட்டை பர்ஸ்ல வச்சுக்கலாம்.  முக்கியமா மொபைல் பவர் பேங்க், ஹாட்ஸ்பாட் எடுக்க மறக்காதீங்க. 
டூருக்கு போறேன்னு டமாரம் அடிச்சு ஊர் புல்லா சொல்லாம  பால், பேப்பர், சிலிண்டர் மாதிரியான நம்பிக்கையான முக்கியமானவர்களுக்கு மட்டும் சொல்லிட்டு போகனும். எல்லோரும் கிளம்புறதா இருந்தால் நம்பிக்கையானவங்களை வீட்டில் தங்க வைக்கலாம்.  நகை, பணம்லாம் பேங்க் லாக்கர்ல இல்லன்னா நம்பிக்கையானவங்கக்கிட்ட கொடுத்து செல்லலாம். அவசியாமான நகைகளை மட்டும் போட்டுக்கிட்டு போகனும், இருக்குங்குறதுக்காக அள்ளி போட்டுக்குறது வீண் ஆபத்தை வரவைக்கும். கேஸ், பேன், லைட்லாம் ஆஃப் பண்ணிட்டு போகனும்.  வெளி இடங்களில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கனும்.   என்னென்ன எடுத்து போறோம்ங்குறதை குறிச்சு வச்சுக்கனும். அதேப்போல என்னென்ன வாங்கிட்டு  வரனும்ங்குறதையும்  குறிச்சு வச்சுக்கனும். முக்கியமா போற இடத்துல கண்ட இடத்துல குப்பைகள் போடாம, எச்சில் துப்பாம சுத்தமா பராமரிச்சுக்கனும்.  நம்ம வீடு மாதிரியே இருக்கும் இடத்தையும் சுத்தமா வச்சுக்கனும்

ஜெய்ப்பூர் அரண்மனை, கலர்புல் காஷ்மீர், காதல் சின்னமான ஆக்ரா, மீனாட்சி அம்மன் கோவில், அமிர்த சரஸ் பொற்கோவில், மெரினா பீச், கடவுளின் தேசமான கேரளா, செங்கோட்டை,  காசி,  மகாபலிபுரம், செஞ்சி கோட்டை, வேலூர் கோட்டை, தஞ்சாவூர், கன்னியாகுமரி என கணக்கிலடங்கா வரலாற்று இடங்களையும், ஆன்மீக இடங்களையும் கொண்டிருந்தாலும்  மோசமான ஆட்சியாளர்கள், பொறுப்பில்லாத மக்களால் இந்தியா இந்த பத்து இடங்களில் வரமுடியலை என்பது வேதனையான விசயம் மட்டுமல்ல! வெட்கப்படவேண்டிய விசயமும்கூட! இனியாவது அரசாங்கமும், மக்களும் விழிச்சுக்கிட்டா சுற்றுலாவினால் பெரிய வருவாயை ஈட்டுவதோடு நம்ம நாட்டு அருமை பெருமைலாம் பார் எங்கும் பரவும்! 
 கஷ்டம், துன்பம், கவலை மறந்து
சுற்றி பறக்கும் பறவைப்போல
சுற்றுலா சென்று 
நாமும் சுகமாய் புத்துணர்வு  பெற்று வருவோம்.... 
நன்றியுடன்,
ராஜி.

Wednesday, July 04, 2018

அமிர்தி காடும், உயிரியல் பூங்காவும்....

திருவண்ணாமலை மாவட்டம் முழுக்க நெசவுத்தொழிலும், விவசாயத்தொழிலும்தான் பிரதானம். இந்த தொழிலுக்கு ஆணும், பெண்ணும், குழந்தைன்னு குடும்பமே பாடுப்பட்டால்தான் இரு தொழிலும் சிறப்பா நடக்கும்.  அதேமாதிரி வேலூர்லயும் நெசவு, உழவு, பீடி சுத்துதல்ன்னு பொழுதன்னிக்கும் வேலை இருக்கும். பீச், கோட்டை, அருவி, மலைன்னு இந்த இரு மாவட்டங்களிலும் பெருசா பொழுது போக்குத்தலம்ன்னு எதும் இல்ல.  திருவண்ணாமலை மாவட்டத்துல ஜமுனாமரத்தூரும், வேலூர்ல ஏலகிரியும் மலைவாசஸ்தலமா இருந்தாலும். சரியான போக்குவரத்து, தங்கும் வசதி இல்லாததால் அங்கலாம் குடும்பத்தோடு போகமுடியாது.   ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டைன்னு சொல்ற மாதிரி வறட்சி மாவட்டம்ன்னு பேர் எடுத்த இந்த இரண்டு மாவட்டத்துக்கும்ன்னு சேர்த்து வேலூர்ல அமிர்தி காடும், கொட்டாறும், அமிர்தி  வன இயல் பூங்காவும், சிறு உயிரியல் பூங்காவும் பொழுதுபோக்கு தலமா இருக்கு.

இயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாதுமலை நால்புறமும் உயர்ந்து நிற்க, நடுவில் 5 ஹெக்டேர் நிலப்பரப்பில் அழகிய நந்தவனமாய் இந்த அமிர்திக்காடு இருக்கு.  சொற்ப எண்ணிக்கையில் ஆட்கள் வருவதால் அமைதியான சூழலில் செழித்து, வளர்ந்த மரங்களுடன் சுத்தமா இருக்கு.  
சரியான சாலைவசதி இல்லாததும் இங்க கூட்டம் வராததுக்கு காரணம்.  சொந்த வாகனத்துல வந்தாலும் வழி விசாரிச்சு விசாரிச்சுதான் போகனும். ஏன்னா இந்த பக்கம் கிளைப்பாதைகள் அதிகம்.   வேலூரில் இருந்து அமிர்திகாடு 30கிமீ தூரத்தில் இருக்கும். வேலூர்ல இருந்து டவுன்பஸ் போகும். இல்லன்னா ஆரணி, திருவண்ணாமலை, போளூர்ல இருந்து கண்ணமங்கலம், கனியம்பாடி  வரை வந்துட்டு அங்கிருந்து மினி பஸ்சுல இல்லன்னா ஷேர் ஆட்டோக்களில் போகலாம்.
ஊர் நெருங்க நெருங்க தூரத்துல காடு இருக்குறதை தென்றல் நம் காதுகளில் வந்து ரகசியமாய் சொல்லி செல்லும்.  காட்டின் ஆரம்பத்தில் செக்போஸ்ட் இருக்கு. பிளாஸ்டிக் பொருட்கள், சரக்குகள் இருந்தா பறிமுதல் பண்ணிடுறாங்க. நுழைவுக்கட்டணமா பெரியவங்களுக்கு 2 ரூபாயும், சின்னவங்களுக்கு 1 ரூபாயும்ன்னு வசூல் பண்றாங்க. 

இங்க வனத்துறை சார்பா சிறு உயிரியல் பூங்கா இருக்கு. மைசூர், வண்டலூர் உயிரியல் பூங்காவுலாம் பார்த்திருக்கேன். அதேமாதிரி இங்கயும், ஒட்டகம், யானை, புலி, சிங்கம், சிறுத்தை, சிம்பான்சி, கரடிலாம் இங்க இல்ல. 
அட ஆண்டவா! என்னை ஏன் இந்த மாதிரி கழிச்சடை பசங்களோடு கூட்டு சேர்த்தேன்னு ஒரு படத்துல வடிவேலு புலம்புவார். அதுமாதிரி இங்க இருக்க மிருகங்களும் தன் தலையெழுத்தை நொந்தபடி தனிமையில் இருக்குதுங்க.
 வாத்தை நாங்க பார்த்ததே இல்ல பாரு....ன்னு நீங்க சொல்லலாம். அதுக்கு பதில், இதுகதான் இங்க இருந்ததுங்க.  சோ அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கப்பா.

வண்டலூர் ஜூவில் அந்தந்த உயிரினத்தை பத்தி அழகா போர்ட்ல போட்டிருப்பாங்க. அதனால் விவரம் தெரியும். ஆனா இங்க அப்படி எதும் குறிப்பு இல்லாததால் குத்துமதிப்பா இது வாத்து, இது நாரைன்னு சொல்லி மனசை தேத்திக்கனும்.

தனியே, தன்னந்தனியே, நான் காத்து காத்து கிடப்பேன்னு.. ரிதம் படத்துல வரும் பாட்டுக்கேற்ப சோலோவாய் திரியும் முதலை. முதலை சோம்பேறின்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இது 2 மணி நேரமா கண்ணை கூட அசைக்காம ஒரே பொசிசன்ல இருந்துச்சு. 

ஓநாய், கிட்ட நெருங்கி பார்க்க முடில. ஒரே கப்ப்ப்ப்ப்ப்பு... குளிச்சு எத்தனை காலமாச்சுதோ?!

சனி ஞாயிறுகளில் இங்க கூட்டம் பார்க்க முடியும். மத்த நாளில் இளைஞர்கள், காதலர்கள்தான் இருப்பாங்க. அவங்களைலாம் பார்த்து பார்த்து இந்த புறாக்களும் கெட்டு போயிட்டுதுங்க. நாங்க பார்க்கும்போதே வெக்கமில்லாம லவ்விக்கிட்டு இருந்துச்சுங்க.
தோழி வந்திருப்பதை கேள்விப்பட்டு என்னை பார்க்க ஓடி வந்த என் ஃப்ரெண்ட்.
தன் காதலை சுமந்துக்கிட்டு திரியும் பிச்சி பெண்போல தன் வீட்டை தானே சுமந்து செல்லும் நட்சத்திர ஆமை.
எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்ற வடிவேலு காமெடி இந்த நல்ல பாம்புக்குதான் பொருந்தும். பாவம் கூட்டில் அடைப்பட்டு சரியான ஆகாரம் இல்லாம நொந்து நூடுல்சாகி கிடக்குது. டேய்! என்னா ஆட்டம் ஆடி இருப்பே!?ன்னு மனசுக்குள் கேட்டுக்கிட்டேன்.
மனசுக்கு ஒரே ஆறுதல் அதிக எண்ணிக்கையில் மயில்கள் இருக்கு. வெள்ளை மயிலும் இருக்கு. 
நாங்க போன நேரம் மாலை நேரம் அழகா தோகை விரிக்க ஆரம்பிச்சது. ஆனா, எத்தனை நேரம் காத்திருந்தும் முழுசா தோகை விரிக்கல. மாமனை பார்த்து வெக்கமான்னு வடிவேலு கேக்குற மாதிரி மச்சினிச்சிய பார்த்து வெக்கமான்னு கேட்க தோணுச்சு. ஏன்னா, ஆண்மயில்தானே தோகை விரிக்கும். 

மயில்களுக்கு அடுத்தபடியா மான்கள் அதிக்கப்படியா இருக்கு. புள்ளிமான் மட்டுமே இருக்கு.

பிள்ளைகள் விளையாட ஊஞ்சல், சீசா பலகை, சறுக்கு மரம்லாம் இருக்கு. ஜோடி போடுவோமான்னு என் மச்சினர் மகள் கேட்க, அவள் சவாலை ஏத்துக்கிட்டு சீசா பலகையில் உக்காந்தா, அந்த பொண்ணு ஓவர் வெயிட்போல! அவள் பக்கம் தாழ்ந்து போச்சுது. இனி யாராவது என்னைய குண்டுன்னு சொல்வீக?!
மழைக்காலங்களில்போது மட்டுமே ஆர்ப்பரித்து கொட்டும் கொட்டாறு நீர்வீழ்ச்சி. நாங்க போனபோது ஆத்தில் தண்ணி இல்ல, புதைமணல் இருக்குறதால்  அருவிக்கிட்ட செல்ல அனுமதி இல்ல. இது எஃப்.பில சுட்ட படம்.

பூங்காவில் கிளிக்குன்னு தனி கூண்டிருக்கு.... 


மலைகளில் விளையும் தேன், தினை, சாமை மாதிரியான பொருட்களை விற்கும் சின்னதா ஒரு கடை இருக்கு. இங்க, சின்ன சின்னதான மரச்சாமான்களும் கிடைக்குது.
யானை, புலி, கரடின்னு இல்லாத குறைய போக்க வனவிலங்குகளை பத்தி எடுத்து சொல்லும் ஆடிட்டோரியம் இருக்கு.

ஹோட்டல் வசதி இல்ல. அதனால கையோடு சாப்பாடு கொண்டு வாங்க. இங்க ஒரு ஸ்னாக்ஸ் கடை இருக்கு. ஆனா ஊர்ப்பட்ட விலை.  சரியான பிளானிங்கோடு வரலாம், கூடவே சாப்பாடு கொண்டு வாங்க. குடும்பத்தோடு குறைஞ்ச செலவுல  பொழுதை கழிக்க தகுந்த இடம். விடுமுறை தவிர்த்து  மத்த நாட்களில் வரும்போது  கவனமா இருங்க. குடிமகன்கள் தொல்லை இருக்கும். எதிர்காலத்தில் யானைக்கான புத்துணர்வு முகாமாக மாறும் வாய்ப்புள்ள காடுகளில் இதுவும் ஒண்ணுன்னு இங்க இருக்கும் தகவல் பலகை சொல்லுது. 

நன்றியுடன்,
ராஜி



Wednesday, April 04, 2018

ஆலப்புழை படகுவீடு ஒரு பயண அனுபவம் - சுற்றுலா

கடவுளின் தேசமாம் கேரளாவில் பார்த்து, உணர்ந்து, ரசிக்க கோவில்கள்,  அழகான பெண்கள், வீடுகள், கடற்கரை, நீர்வீழ்ச்சி, புட்டு கொண்டைக்கடலை, அத்தப்பூ கோலம், கதகளி, மோகினியாட்டம், வர்மக்கலை, ஆயுர்வேத மசாஜ், மீன் உணவுகள்.... இப்படி பல இருக்கு. அழகை ரசிக்க, அமைதியை விரும்புறவங்க, எல்லா டென்ஷனையும் மறந்து ரிலாக்சா இருக்க நினைக்குறவுங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் கேரளாதான். ஆலப்புழா, மூணாறு,  தேக்கடி, துள்ளல்...ன்னு கேரளாவில் ரசிக்க எத்தனைய  இருந்தாலும்,  அதுல முக்கியமானது படகுவீடு.  இந்த படகுவீடு குடும்பத்தோடு போறவங்களுக்கும், நண்பர்களோடு போறவங்களுக்கும் முக்கியமா   ஹனிமூன் போறவங்களுக்குன்னு பெஸ்ட் சாய்ஸ் கேரளாவின் படகுவீடு.

 கேரளாவில் இருக்கிற ஆலப்புழாவிற்கு சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மார்க்கமாகவும், கோயம்பேடுல இருந்து தரை வழியாகவும் போகலாம். இல்ல, ஆகாயமார்க்கமா போகனும்னா கொச்சின் விமானநிலையத்தில் இருந்தும் போகலாம்.  ஆலப்புழாவில் இருந்து 82 கி.மீ தொலைவில் கொச்சின்  இருக்கு. அதில்லாம, இன்னொரு வழி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து 160கி.மீ தூரத்துல ஆலப்புழா  இருக்கு.  ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து ஒரு ஆட்டோ பிடிச்சு தான் ஆலப்புழா நகருக்குள் வரணும். பஸ்ல வரவங்களுக்கு ரொம்ப பக்கம் இந்த போட்(Boat) பாயிண்ட். பொதுவா ஒரு ஊருக்கு  பெயர் வைக்க அங்கிருக்கிற பழக்கவழக்கம், கலாச்சாரம், நிலஅமைப்பு, எதாவது வரலாற்று நிகழ்வு இதுமாதிரி எதையாவது அடிப்படையா கொண்டுதான்  அழைக்கப்படும். உதாரணத்துக்கு சென்னையில  எடுத்துகிட்டீங்கன்னா நிறைய இடங்கள் பாக்கம், பாக்கம்ன்னு  முடியும்.  உதாரணமா கோடம்பாக்கம், பட்டினப்பாக்கம், ஊரப்பாக்கம், கேளம்ப்பாக்கம் இப்படி நிறைய சொல்லலாம். பாக்கம்ன்னு சொன்னா  வியாபார ஸ்தலம் இருக்கும் இல்லன்னா இருந்திருக்கும். அதேப்போல பட்டினம்ன்னு சொன்னா  அங்க துறைமுகம்  அல்லது துறைமுக வியாபாரம் நடந்து இருக்கும். அதேப்போலதான் இந்த இடத்திற்கும் புழைன்னு முடியுற மாதிரி வந்ததும்  இதுமாதிரியாண காரணம்தான் .

மலையாளத்தில் புழைன்னா   ஆறுன்னு பொருள்.  தமிழில் ’ஐ’ன்ற உச்சரிப்பில் முடியும் வார்த்தைகளை மலையாளத்தில் ’ஆ’ன்னு முடியுற மாதிரிதான் உச்சரிப்பாங்க. உதாரணத்துக்கு, நம்ம ஊரின்  கதை, அங்க கதா,  நம்ம ஊர் கலை அங்க கலான்னு உச்சரிப்பாங்க. அதேமாதிரி, மழை-மழா, புழை-புழான்னுதான் உச்சரிப்பாங்க. அதேப்போல ஆறுகள் நிறைந்த கேரளாவின் மற்ற இடங்களான திருக்குன்னபுழா, மூவற்றின்புழா அழைக்கப்படுது.  தமிழுக்கும்  மலையாளத்துக்கும் அதிக வித்தியாசம்லாம்  இல்லை. தமிழில் கூட புழைக்கடை என்பது ஆற்றின் கடைப்பகுதி என்றுதான் சொல்லப்பட்டு வந்தது. ஆனா, அதை, இப்ப வீட்டின் பின்பகுதியை குறிக்கும் சொல்லாக்கிட்டாங்க. சரி, இப்ப மொழி ஆராய்ச்சிக்கு போகவேணாம்.  ஏன்னா இந்த ஆலப்புழை  நகரின் பல பிரதான இடங்கள் தரைவழிகளைவிட, நீர்வழிகளாலே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாகவே கேரளாவின் சாலை வழி இல்லாது பண்டைய காலகட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் நகரத்தை அடைய கெட்டுவள்ளம் என்று இந்த படகுகளின் மூலமாத்தான் பிரயாணம் செய்திருக்கிறாங்க. காலப்போக்கில் சுற்றுலா வர்றவங்களை இந்த படகுகள் கவரவே அதையே படகுவீடுகளாக மாற்றி முக்கியமான சுற்றுலாதலமாகவும் பொழுதுபோக்கும் இடமாகவும் மாத்திட்டாய்ங்க. 
படகுவீடு,   ஆலப்புழா பஸ் நிலையத்துக்கு அருகிலும்,  அதன் சுற்றுவட்டாரங்களிலும் நிறைய போட்ஹவுஸ் புக்கிங் ஆபீஸ் இருக்கு. முதலிலேயே ஒரு இடத்தை புக் பண்ணிடாதீங்க. இருக்கிற எல்லா அலுவலகத்திற்கும் போய்.   பார்த்து விசாரிச்சுட்டு, யார் குறைவா, அதேசமயம் அதிக வசதிகளை, யார் தர்றாங்களோ அவங்களை புக் பண்ணுங்க. முடிஞ்சளவுக்கு பினிஷிங் பாயிண்ட்ன்னு சொல்லுற போட் நிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள அலுவலகங்களை தேர்ந்தெடுங்க. அதேமாதிரி அங்க போய் நின்னால் படகுவீடு கிடைக்காது. இது ஆன்லைன் காலம். அதனால ஒருமாசம், ரெண்டு மாசத்துக்கு முந்தியே புக் பண்ணி இருப்பாங்க. அதேமாதிரி, அங்க போய் நின்னுக்கிட்டு, பட்டிக்காட்டான் முட்டாய்கடையை பார்த்தமாதிரி ஈஈன்னு நின்னா, நம்ம மொகரைய பார்த்தே, இவங்க வெளியூர்க்காரங்கன்னு ஆட்டோக்காரங்க, புரோக்கர்களும் அவங்களுக்கு கமிஷன் கொடுக்கிற போட்ஹவுஸ் ஏஜெண்ட்ஸ்கிட்ட கூட்டிட்டு போய்டுவாங்க. சிலசமயம் அது நம்முடைய பட்ஜெட்டையும்  தாண்டி செல்வதோடு, நமக்கு அந்த பயணம் திருப்திகரமா இல்லாம போறதுக்கும் வாய்ப்புண்டு. அதனால அதை தவிர்த்துடுங்க. இனி,  எப்படி ஒரு போட் தேர்ந்தெடுப்பது பற்றி பார்க்கலாம் .
முதலில் எத்தனை பேர் பிரயாணம் செய்கிறோம்ங்கிறத முடிவுபண்ணணும்.  இரண்டு பெட்ரூம் முதல் ஆறு பெட்ரூம் வரை கொண்ட படகுகள் கிடைக்கும். அதை நம்ம வசதிக்கேற்ப,  அவை  12,000ல இருந்து 25,000 வரை கிடைக்கும். ஒரு நாள் என்பது காலை 11 மணியில் இருந்து அடுத்தநாள் 9 மணிவரை. இனி பயண அனுபவத்தை பார்க்கலாம். நாம போட் அவுஸ் போனதும்,  அங்கே ஆயிரக்கணக்கில் படகுகள் காலை சவாரிக்காக வரிசையாக சுற்றுலா பயணிகளுக்காக காத்து இருக்கும்.  நாம செல்லும் வாகனங்களை பார்க்கிங் செய்ய, கட்டண பார்க்கிங் நிறைய இருக்கு. அதுல பார்க்கிங் செய்துக்கலாம். படகுவீடு செல்லும் வழியில் நிறைய உள்ளூர் படகு சவாரிகள் இருக்கு. அவற்றில் இரண்டு மணிநேரம் வரை சவாரி செய்ய  முதல் அரைநாள் என சவாரிக்கு 800 முதல் 1500 வரை வசூலிக்கின்றனர் . அவற்றில் உட்கார்ந்து இயற்கையை ரசிக்கமட்டுமே முடியும். ஆலப்புழை கால்வாய்களில் இதுப்போன்று நூற்றுக்கணக்கில் இருக்கு. நம் உள்ளூர் பிரைவேட் பஸ்களைபோல் பயணிகளை கூவிக்கூவி அழைக்கின்றனர். 
 ஆலப்புழாவில் படகுவீடு மட்டும் ஸ்பெஷல் இல்ல. சுத்தமான கள்ளுகள் கிடைக்கக்கூடிய கள்ளுக்கடைகள் இங்க இருக்கு. நல்ல மத்தி மீன்பொறிச்சு தர்றாங்க.  குடிமகன்கள்களுக்கு மட்டும் இந்த இடம் இல்ல! இங்கே பக்கத்தில சுற்றுலா தகவல்ன்னு ஒன்னு இருக்கு. அங்க விசாரிச்சா, நிறைய புண்ணிய ஷேத்ரங்கள் இருக்கு.  அதுமட்டுமல்ல, நாகராஜாவுக்கென தனிக்கோயில் கொண்டு அமைந்துள்ள ஆலயங்கள் இந்தியாவில் நான்கு இல்ல ஐந்துதான் இருக்கும். அதில் நாகர்கோயில் நாகராஜா க்ஷேத்ரம் மாதிரி, இங்க நாகராஜாவுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மன்னாரசாலா ஸ்ரீநாகராஜா கோயில் இங்கேதான் இருக்கு. அதேப்போல அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணா கோயில்,  முல்லக்கல் ராஜேஷ்வரி கோயில், செட்டிகுளங்கரா பகவதி கோயில்..., இப்படி ஏராளமான கோவில்களும் இங்கே இருக்கு 

ஏற்கனவே பிரயாணம் செய்தவர்களை இறக்கி விட்டுவிட்டு அதை சுத்தம் செய்து, புதிய ஊழியர்களை வைத்து, ஃப்ரெஷ்சாகிட்டு புதுப்பயணிகளை சுமக்க புக் செய்திருக்கும் நேரத்துக்கு கரைக்கு வரும் இந்த படகுவீடு.  உள்ள நுழைஞ்சு பார்த்தால், அசந்துதான் நிக்கனும். படகுவீட்டில் பயணிப்பது, தங்குவது, உறங்குவது என்பது ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது அனுபவிக்கவேண்டிய விஷயம். படுக்கை அறைகள் ஸ்டார் ஹோட்டல்களை மிஞ்சுமளவு இருக்கும். பெரிய ஹால், உணவு உண்ணும் இடம், காபி குடித்து இயற்கையை ரசிக்க உட்காரும் வராண்டா போன்ற முற்பகுதி ஆஹா என்ன அழகு!! எங்கு பார்த்தாலும் தண்ணீர் பிரதேசம். ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். நாம உள்ள நுழைஞ்சதும்  வெல்கம் ட்ரிங்க்ன்னு  எல்லோருக்கும் ஜூஸ் கொடுத்து இன்முகமாக வரவேற்குறாங்க.  . நமக்கு தேவையான உணவுகளை இங்கனயே தயார் செய்யுறாங்க . எதுவும் பாக்கெட்ல அடைப்பட்ட மசாலா கிடையாது, எல்லாமே அவங்களே தயாரிச்சு கையால அரைச்ச மசாலாக்கள்தான் பயன்படுத்துறாங்க. மீன்கள்கூட நம்ம கண் எதிரே பிடிச்சு சுத்தம் பண்ணி சமைச்சு தர்றாங்க. 
வழி எங்கும் பச்சை பசேலென வயல்வெளிகளும், நதிக்கரையில் அன்றாட வாழ்க்கை நடத்தும் மக்களும், பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளையும் பொழுதுபோக்கும் ஆடவர் கூட்டங்களையும், வீட்டுத்துணிமணி, பாத்திர பண்டங்களை அலசும் பெண்களையும், தண்ணீரில் தேங்காய், மற்ற பொருட்களை எடுத்து செல்லும் படகுகளையும் பார்த்து கொண்டே இருக்குறது மனசுக்கு மகிழ்ச்சியை கொடுக்க்கும். நாம் லாங்க் ட்ராவல் பண்ணும்போது, கமிஷன் கொடுக்கும் மோட்டல், காஃபிக்கடையில் பஸ்களை நிறுத்துறமாதிரி, படகுவீட்டையும் இளநீர், சர்பத், ஸ்னாக்ஸ் கடையில் நிறுத்துறாங்க. தேவைப்படுறவங்க வாங்கிக்கலாம் மீன்,இறால், நண்டுன்னும் விற்பாங்க. நமக்கு தேவைன்னா வாங்கிக்கலாம்.
இப்படி இயற்கை அழகை ரசிக்குறது சிலருக்கு ஆர்ட் ஃபிலிம் பார்க்குற மாதிரி போரடிக்கும். அதுமாதிரி ஆளுங்களுக்கு, நல்ல ஆடியோ சிஸ்டமும், படம் பார்க்க விரும்புறவங்களுக்கு பெரிய LED ஸ்க்ரீன் டீவியும் வச்சு இருக்கிறாங்க. மதிய சாப்பாடு சாம்பார், 2 வகையான கூட்டு, அப்பளம், மோர் மீன்குழம்பு, மீன் பொறிச்சது, வெஜிடபிள் சாலட், தயிர் என கேரள மணம் வீசும். முழுக்க தேங்காய் எண்ணெயில் செஞ்ச உணவுகள் நம்ம நாவுக்கு ருசியின் புது பரிமாணத்தை காட்டும். 

இப்படி படகுவீடு போகும் பாதையில் ஆயுர்வேத பாடி மசாஜ் சென்டர் இருக்கு. விதவிதமான மசாஜ்கள் இங்க இருக்கு. தேவைப்படுறவங்க செஞ்சுக்கலாம். மாலைநேரத்தில் சூடா பஜ்ஜி, வடையோடு காஃபி, டீன்னு கொடுப்பாங்க. எப்பயுமே தண்ணில இருந்தா எப்படி?! அதனால, மாலை வேளைகளில் காயல் பக்கமா இருக்கும் நிலப்பகுதியில் படகை நிறுத்துவாங்க. காலாற நடந்து ஊர்  அழகை ரசிக்கலாம். படகுகளில் பெரிய பெரிய ஜெனரேட்டர்கள் இருந்தாலும் போட்டிலிருந்து நீண்ட உயரழுத்த கேபிள்கள் மூலம் தரைகளிருக்கும் வீடுகளில் இருந்து மின்னிணைப்பு கொடுத்து ,படகுவீட்டின் எல்லா அறைகளிலும் ஏசிக்களை இயக்கி குளுகுளு இயக்குவாங்க. என்னதான் படகுவீடு கதவுகள் ஜன்னல்கள் கண்ணாடியினால் ஆனாலும் மாலை வேளைகளில் கதவுகளை அடைச்சுடுறது நல்லது . இல்லன்னா கொசு நம்மை தூக்கிட்டு போய்டும். 

இரவு உணவுக்காக,  சப்பாத்தி ,இட்லி ,சட்னி ,குருமா ,டீ ,காஃபி என அவங்கவங்களுக்கு தேவைப்படும் உணவுகளை செஞ்சு தருவாங்க.  குடும்பத்தோடு போறவங்களுக்கு தனி உணர்வையும், இளஞ்சோடிகளுக்கு தனி உணர்வையும், இளைஞர்களுக்கு தனி உணர்வினையும் இந்த படகுவீடு தரும். எந்த கவலையுமில்லாத, இளைஞர்கள் போனால் பாட்டு, குடி, கும்மாளம்ன்னு ஆட்டம் போடலாம். கால்கட்டு, பிள்ளைகள், குடும்பம்ன்னு ஆனால் இதுலாம் அனுபவிக்கமுடியாது. 
மொட்டைமாடில, ஆத்தங்கரையில, குளத்தங்கரையில் , வண்டியில், பயணங்களில் சூரியோதத்தை பார்த்திருப்போம். இல்லன்னா, ஆனா இப்படி ஒரு இடத்தில் சூரியோதயத்தை பார்க்க புது அனுபவம் கிடைக்கும். அப்படியே சூரிய நமஸ்காரமும் பண்ணிக்கலாம். இல்ல  என்னைப்பொறுத்தவரை சாமி கோவில்லதான் இருக்குன்னு நினைச்சுக்குறவங்களுக்கு, போற வழில இருக்கும் கோவில்களின் அருகாமையில் படகை நிறுத்தி அதுக்கும் ஏற்பாடு செய்யுறாங்க.
காலை உணவை அந்த ஊர் ஸ்பெஷல் புட்டு, கொண்டைக்கடலை கறியுடன் ஆரம்பிக்குறாங்க. மணி ஒன்பதை நெருங்க ஆரம்பித்ததும், நாம இறங்க வேண்டிய அவசியத்தை நமக்கு நினைவுப்படுத்துறாங்க. காயல் நெருங்க நெருங்க எத்தனை எத்தனை படகுகள்?! இந்த மாதிரியான படகுவீடுகள், நம்ம ஊர் டவுன் பஸ்கள் போல பள்ளி குழந்தைகள், ஆஃபீசுக்கு போறவங்களை, கோவில், குளம், மார்க்கெட்டுக்குன்னு போறவங்களை சுமந்து செல்லும் படகுகள், மீன்பிடி படகுகள் என தண்ணிலகூட டிராஃபிக் பிரச்சனை வந்திருமோன்னு பயப்படும் அளவுக்கு  எங்க பார்த்தாலும் இருக்கும் படகுகளை பார்த்து வியந்துக்கிட்டே பினிஷிங்க் பாயிண்டுக்கு நெருங்கி படகுவீட்டின் பயணத்தை முடிச்சுக்குறோம். இங்கே கவனிக்கப்படவேண்டிய அம்சம் என்னன்னா கோடை விடுமுறை, மற்றும் நேரு ட்ராபி நடக்கும் நேரம் எல்லாம் படகு வீட்டுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும் .
ஏன்னா அப்ப கட்டணம் இரண்டு மடங்காக இருக்கும். சரி, அது என்ன நேரு ட்ராபின்னு பார்த்தா, நேரு பிரதமாராயிருந்த காலத்தில் ஒருமுறை கோட்டயத்திற்கு வருகை தந்திருக்கார். அப்ப அவரை 50 கி.மீ தொலைவில் இருந்த ஆலப்புழாவில் படகுவீடு ஒன்றிற்கு அழைத்து சென்றனர். அந்த காயலின் இருபுறங்களிலும்  நீண்டு வளர்ந்த தென்னைமரம், அதனை அடுத்து பச்சைப்பசேலென வயல்வெளிகள், தண்ணீர் சூழ்ந்த அழகிய கிராமங்கள் என அவர் அந்த இயற்கை அழகில் மனதை பறிகொடுத்தார். அதுவும் அவரை மகிழ்விப்பதர்க்காக வல்லம் கழின்ற கேரளாவின் பாரம்பரிய படகு சவாரியும் நடத்தப்பட்டது. 100 அடி நீளத்தில் இருக்கும் அந்தப்  படகுகளை வலிக்கும் அழகு, நேருவை மிகவும் கவர்ந்ததாம்.  டெல்லி திரும்பிய நேருவுக்கு, ஆலப்புழாவின்  இயற்கை அழகும் படகுப்போட்டியும் மனதுக்குள்ளேயே நின்றதாம். எல்லோரிடமும் சொல்லி ஆனந்தப்பட்டாராம் .
உடனே தங்கத்திலான ஒரு கோப்பையை வடிவமைத்து, கூடவே அவரது விருப்பத்தையும் எழுதி அனுப்பினாராம். உங்கள் மண்ணின் இயற்கை அழகில் என் மனம் குளிர்ந்துவிட்டது. ஆண்டுக்கு ஒருமுறை அங்கே படகு போட்டி நடத்துங்கள். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு எனது சிறிய அன்பளிப்பாக இந்த தங்க கோப்பையை பரிசாக வழங்குங்கள் என்று எழுதி இருந்தார். அதை பார்த்து சந்தோஷப்பட்ட ஆலப்புழாவாசிகள் முதன்முதலில் 1952 ம் ஆண்டு நேரு டிராஃபி பாம்பு படகு போட்டி நடத்தினர். அன்றிலிருந்து, ஆண்டுதோறும்  ஆகஸ்ட் இரண்டாவது சனிக்கிழமை  இந்த போட்டியினை நடத்துகின்றனர் அந்த சமயத்தில் பலரும் தரையில் இருந்து பார்ப்பதை விட, ஒரு படகு வீட்டினை புக் செய்து அதிலிருந்து போட்டியை கண்டுகளிப்பார்கள்.  குறிப்பாக வெளிநாட்டு பயணிகள் இப்படி செய்வதுண்டு. அதனால, இந்தமாதிரி நாட்களில் சுற்றுலாவிற்கு மட்டும் செல்பவர்கள் ஆலப்புழை படகுவீட்டிற்கு செல்வதை தவிர்க்கவேண்டும்.
படகுவீட்டில் பயணிப்பது, தங்குவது, உறங்குவது  என்பது ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது அனுபவிக்கவேண்டிய விஷயம்.  அரபிக்கடல் மீன் டேஸ்ட் சற்று தூக்கலாகவே இருக்கும்.  மீனை ஃப்ரெஷ்ஷாகப் பிடித்து நாம் கேட்டபடி பொறித்தும்  கொடுக்கிறார்கள்.இல்லை நாமும் வாங்கி கொடுக்கலாம். கேரளா உண்மையில் `உண்மையிலேயே கடவுளின் தேசம்தான்' அவ்வுளவு அழகு எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சியளிக்கிறது இந்த தண்ணீர்தேசம் 
இத்தாலியின் வெனிஸ் நகரத்தைதான் மிதக்கும் நகரம் என்பார்கள். அங்கே வீட்டுக்கு வீடு படகுகள் வைத்திருப்பார்கள். அதேப்போல இங்கு ஆலப்புழையில் வீட்டுக்கு வீடு படகுகள் வைத்திருக்கிறார்கள். சிறிய நாட்டுப்படகுகள் முதல் பயணிகள் மோட்டார் படகுகள், ஆடம்பரப் படகுகள் என செம டிராஃபிக்தான். இந்த அழகைக் காண்பதற்கே கோடிக்கண்கள் வேண்டும்.  பெரும்பாலான கிராமங்களுக்கு, படகுதான் ஒரே போக்குவரத்து ஆதாரம்.  பள்ளிக்குழந்தைகள் முதல் வியாபாரம் செய்யும் படகுகள் வரை இருக்கின்றன. நாம சின்னவயசில ஸ்கூல் பக்கம் சைக்கிள்ல வச்சு விக்கிற குச்சி ஐஸ் பெட்டி,இங்கே படகுல வந்து விக்கிறாங்க. காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், இறைச்சி, மீன் கடைகள், வங்கி, தபால் சேவைகள், ஏ.டி.எம் சேவை தரும் படகுகள்கூட இங்க இருக்கு .
ஆலப்புழாவிலிருந்து  குமாரகம் ஏரிக்கு கூட  படகு வீடுகள் இயக்கப்படுகின்றன.  ஆலப்புழாவை - குமாரகம் ஏரியும்தான் காயலின் இரு முனைகள். ஆலப்புழாவிலிருந்து குட்ட நாடு, பம்பா நதி, சம்பக்குளம், வேம்ப நாடு ஏரி வழியாக குமாரகம் செல்லலாம் . மதியம் 12 மணிக்கு ஆலப்புழாவில் படகில் ஏறினால், அடுத்த நாள் காலை  9 மணிக்கு மீண்டும் ஆலப்புழா  திரும்பிவிடலாம்.  இரண்டு நாள் பயணம்கொண்ட பயண திட்டமும் உண்டு.  நமக்கு தேவையானதை நாமளே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதேப்போல் பாதுகாப்பும் ரொம்ப நல்லா செய்து கொடுக்குறாங்க. அதனால, குடும்பத்தோடு தாராளமா பயப்படாம போகலாம். ,படகுவீடுகளில் தண்ணியடிச்சு கலாட்டா பண்ணுறவங்களை போலீஸ் ரோந்து படகுகள் கண்காணிச்சிட்டே இருப்பதோடு, அவசியப்படும் நேரத்தில் கண்டிக்கவும் செய்றாங்க. .அதேப்போல் படகு வீட்டில் நம்முடன் கூடவே வரும் பணியாளர்களும் நட்புடனும், நம்முடைய பாதுகாப்பிலும், விருந்து உபசரிப்பிலும்  அதிக அக்கறை எடுத்துகிறாங்க. ஏன்னா கேரளாவின் முக்கிய சுற்றுலாத்துறை வருமானம் இந்த படகு வீடுகளில் இருந்துதான் கிடைப்பதை அவர்கள் உணர்ந்து இருக்காங்க.
நாம பல இடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்தாலும், ஒருநாள் மட்டும் படகுவீட்டில் தங்கி அந்த அனுபவத்தை ரசித்து பாருங்கள். நம் வாழ்நாளில் அது ஒருமறக்க முடியாத அனுபவமாகவே இருக்கும். மீண்டும் ஒரு சுற்றுலா பகுதியிலிருந்து அடுத்தப்பதில் உங்களை சந்திக்கிறேன் .
நட்புடன் 
ராஜி