Monday, July 21, 2014

ஜோசியக்காரர்களே சிந்திப்பீரா!? - ஐஞ்சுவை அவியல்

போன வாரம் வாசல் தெளிச்சு கோலம் போட்டிருந்தேன். தாயி! கோல மாவு வேணுமான்னு ஒரு குரல். ஒடிஞ்சு விழுந்துடுற மாதிரி ஒரு உடல்வாகு.   வாதத்தால் வீங்கிய கால்கள் தலியில் சும்மாடு கூட இல்லாம தலையில் கணக்கும் கோலமாவு கூடை. . ரெண்டு பிள்ளைங்களாம். வாதம் வந்ததால், பேரப்பிள்ளைங்களுக்கும் தொத்திக்கும்ன்னு மருமகள்கள் துரத்திட்டாங்க. பிச்சை எடுக்க மனசு வரல தாயின்னு சொல்லி கேட்டாங்க. ஏற்கனவே வீட்டில் இருந்தாலும், அங்கம்மாவோட சுமையை குறைக்கனும்ன்னு தோணவே ரெண்டுப் படி கோல மாவு வாங்கிக்கிட்டேன். கூடவே, பாட்டி நீ இந்தப் பக்கம் எப்போ வந்தாலும் என்கிட்ட கேட்டுட்டு, அப்புறம் மத்த வீடுகளுக்குப் போன்னு சொன்னேன். கூடவே சூடாய் ஒரு டம்ப்ளர் காஃபியும் போட்டு தந்தேன். அதுக்குப் பதிலாய் , என் வீட்டு வாசலில் அழகாய் பெருசாய் ஒரு கோலம் போட்டுட்டுப் போனாங்க. அப்புறம் இன்னொரு சேதி இப்பலாம் நான் 5 புள்ளி கோலம்லாம் போடுறதில்ல. தினமும் 15 புள்ளி கோலம்தான் போடுறது.


சமீபத்துல என் தம்பிக்கு பொறந்த ஆண்குழந்தை நட்சத்திரப்படி என்ன எழுத்தில் பேர் வைக்கலாம்ன்னு ஜோசியக்காரர்கிட்ட போயிருந்தேன். ஒரு பத்துக்கு பத்து அறையின் நடுவில்.., கிழக்கு திசை பார்த்த மாதிரி உட்கார்ந்திக்கிட்டிருக்கா.., அவரைச் சுற்றி குறைந்தது இருபது பேர் இருந்தாங்க. எனக்கு முன் அமர்ந்திருந்தவர் தன் மகளுக்கு எப்ப கல்யாணம் நடக்கும்ன்னு கேட்க வந்திருந்தார். இந்தப் புள்ள, மூக்கும், முழியுமா நல்லா இருந்தாலும் வீட்டுக்கு அடங்காது. இதோட ஜாதகப்படி மாமியாருக்கு ஆபத்துன்னு சொன்னார். அடுத்து ஒரு அம்மா, தன் மூத்தாருக்கு  பேரன் பிறந்திருப்பதாகவும், அதைக் கணிக்க வந்திருப்பதாக சொன்னாங்க.

ஏதேதோ கணக்குப் போட்டு பார்த்தவர், அந்தம்மா முகத்தைக்கூட பார்க்காம, அவர் தந்த குழ்னதை பொறந்த நேரம் எழுதிய தாளை தூக்கிப் போட்டுட்டு, “குழந்தை மரன யோகத்தில் பொறந்திருக்கு. இது மரணத்தைதான் ச்மபவிக்கும்”ன்னு எடுத்த எடுப்பிலேயே போட்டுடைத்தார். அந்தம்மா, மீண்டு வேற தாளைக் கொடுத்து, ஐயா! இது அந்தக் குழந்தையோட அப்பாவோடது, இவன் ஆறு மாசமா நினைவு, நீச்சில்லாம கெடக்கான். கல்யாணமான அஞ்சாவது மாசத்துல, இந்தக்குழந்தை வயத்துல நாலு மாசமா இருக்கும்போது வண்டில போனவன் கீழ விழுந்து மண்டையில் அடிப்பட்டு ஹாஸ்பிட்டலில் கெடக்கான். அவன் நிலையைப் பார்த்துச் சொல்லுங்க ஐயான்னு கேட்டாங்க. புள்ள பொறந்த நேரம் அப்பனுக்கும் கண்டமிருக்கு. எதாவது பொழைச்சிருந்தா நீங்க ஆடி மாசம் 27 தேதிக்கு மேல் வாங்கன்னு சொல்லி அனுப்பிச்சிட்டார். அந்தம்மா அழுதுக்கிட்டே போனது மனசை என்னமோ பண்ணுச்சு. ஆண்டவா! அந்தக் குழந்தைக்கும், தகப்பனுக்கும் ஏதும் நேராம நீதான் அருள் புரியனும்ன்னு கண்ணீர் சிந்தி வேண்டிக்கிட்டேன்.

ஐயா! ஜோசியக்காரர்களே! ஜோசியம் சொல்றதுதான் தொழில்ன்னு ஆகிட்டுதே! நல்லாத்தானே கல்லா கட்டுறீங்க. இரண்டு அறைகள் இருக்கு இடத்தில் கடை விரிங்கப்பா. இப்படியா, அடுத்தவங்க முன்னாடி அவங்க குடும்ப கஷ்டத்தை சொல்லனும்!? அப்புறம் இன்னொன்னும் தாழ்மையோடு கேட்டுக்குறேன், நிஜமாவே எதாவது கண்டம் இருக்குறதா தெரிஞ்சாலும் பக்குவமா, அவங்க மனசு ஏத்துக்குற மாதிரி சொல்லுங்க. அப்பத்தான் உங்க ஜோசியத்துக்கும் ஒரு மரியாதை இருக்கும், பலிக்கும். 


சின்னவ பத்தாவது படிச்சிட்டு இருந்த போது,  டியூசனுக்குப் போயிட்டு எப்பவுமே சரியாய் நைட் 8.10க்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவா. ஒரு நாள் 8.45 ஆகியும் வீட்டுக்கு வரல. அன்னிக்குன்னு பார்த்து பலமான தூறல். டியூஷன் மாஸ்டருக்கு ஃபோன் போட்டால் அவர் நம்பர் நாட் ரீச்சபிள். கை, கால் லாம் உதறலெடுக்க சரின்னு குடையெடுத்துக்கிட்டு கிளம்பிட்டேன். கொஞ்ச தூரம் போனதும், தூரத்தில் அவள் வருவது தெரிந்தது. அருகில் வந்தவக்கிட்ட, அப்பாடி! வந்துட்டியா! ஏன் லேட்டு!? நீ வர்றதுக்குள் வயத்துல நெருப்பைக்கட்டிக்கிட்டு வாசலுக்கும், வீட்டுக்குமா அலைஞ்சுக்கிட்டிருந்தேண்டி!!ன்னு சொன்னேன்.

அப்படின்னா ஏன் குடை எடுத்திக்கிட்டு வந்தே!? அப்படியே வந்திருந்தா, மழையில் நனைஞ்சு வயத்தில் இருக்கும் நெருப்பு அணைஞ்சிருக்குமில்ல!  வீட்டுக்கு போனதும் முதல்ல குளி, அப்பவாவது நெருப்பு அணையுதான்னு பார்க்கலாம்ன்னு சொல்லி சிரிச்சா. என் கவலை எனக்கு. அதுலாம் அவளுக்குப் புரியுமா!?

 


10 க்கு கீழ் ஒரு எண் . அதை எட்டு முறை பயன்படுத்தி வெறும் கூட்டல் மூலம் 250 விடை வர வேண்டும். வரும்தானே!?


மல்லிகைப் பூவை வாங்கி பிரிட்ஜில் வைக்கும் போது பிளாஸ்டிக் டப்பாவை விட, எவர்சில்வர் டப்பாவில் போட்டு மூடி வைத்தால்  இன்னும் ஓரிரு நாள் புதுசா இருக்கும். எலுமிச்சை பழத்தை அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுற்றி வைத்தால் அதிக நாட்கள் கெடாமல் இருக்கும். கிரைண்டரை கழுவும்போது சிலர் வெறும் கிரைண்டரை ஆட்டுக்கல்லோடு சேர்த்து தண்ணி ஊற்றி சில சுத்து சுத்த விடுவாங்க. அப்படி செய்தால் கிரைண்டரின் கற்கள் சீக்கிரம் தேய்மானமாகிடும்.

30 comments:

  1. வயதான காலத்தில் மருமகள் துரத்திவிட்டும் பிச்சை எடுக்காது உழைத்து பிழைக்கும் அந்த பெண்மணிக்கு பாராட்டுக்கள்! அவருக்கு உதவி செய்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்! சில ஜோஸ்யர்கள் இப்படித்தான்! அவர்களுக்கு நேரம் நல்லா இருக்கிற வரை பிழைப்பு ஓடும். சின்ன மகள் உங்கள் அவஸ்தை புரியாமல் பேசினாலும் டைமிங்க் காமெடி! டிப்ஸ் அருமை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டு சின்னது மான் குட்டிப் போல துள்ளிக்கிட்டே இருப்பா. எதுக்கும் கவலைப்படாது. எல்லாமே டேக் இட் பாலிசிதான்.

      Delete
  2. ஜோசியமே வியாபாரம்தான் சகோதரி! அதை விட இறைவன் மீது நம்பிக்கை இருந்தால் போதுமே! என்ன சொல்லுகின்றீர்கள்?

    சின்ன பொண்ணு அடிச்ச கமென்ட் சூப்பருங்க! ஹஹஹா.....

    டிப்ஸ் நல்லாருக்குங்க!

    ReplyDelete
    Replies
    1. இறை நம்பிக்கை போதும்தான். ஆனா, கஷ்டம்ன்னு வரும்போது இப்படிலாம் தோணாதே! எப்படி மீளலாம்? யார் அதற்கு உதவுவாங்கன்னுதான் மனசு கிடந்து அலைப்பாயும்.

      Delete
  3. விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்கிறார்கள். ஜோதிடம் பார்த்துப் பரிகாரம் செய்வதால் விதியை வெல்ல முடியுமா?

    வென்றவர் எத்தனை பேர்?

    ஜோதிடர் சொல்லும் பலன் பலிக்கிறதோ இல்லையோ, சமுதாயத்தில் அவருக்கு நிறையவே மதிப்பு இருக்கிறது.

    மனம் திறந்த பதிவு. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஜோசியம் சொல்லுபவரை கடவுளாவே பார்ப்பவர்கள் பலருண்டு. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  4. அவியல் நன்றாகவே இருக்கிறது! இருந்தாலும் ஒரு வாக்கியப் பிழை. அப்படியே விட்டு விட்டுப் போக மனம் ஒப்பவில்லை.

    // அப்பா என் குடை எடுத்திக்கிட்டு வந்தே? //

    என்ற வாக்கியம் ” அப்ப ஏன் குடையை எடுத்திக்கிட்டு வந்தே?” என்று இருந்தால் சரியாக இருக்கும். நான் சொன்னதில் தவறு இருப்பின் மன்னிக்கவும்.
    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. திருத்திட்டேனுங்க. அருமை, நன்றுன்னு கருத்து சொல்லாம பிழைகளை சுட்டிக்காட்டுறது நல்லதுதானுங்க. தவறுலாம் ஏதுமில்ல!

      Delete
  5. பாட்டியின் உழைப்பு சோம்பேறிகளாக திரியும் பல பேருக்கு எடுத்துக்காட்டு.

    அப்பு தான் உங்களை வைத்து காமெடி பண்ணுபவன்னு, பார்த்தா இப்ப மகளுமா!!!

    ReplyDelete
    Replies
    1. என் வீட்டுக்காரர் தவிர்த்து எல்லோருமே என்னை கலாய்ச்சிக்கிட்டுதான் இருப்பாங்க.

      Delete
  6. கோல மாவு விற்றேனும் தன்னைத்தானே
    தேற்றும் அந்த வயதானவரின் உளவலிமை பாராட்ட வேண்டியது
    அதைவிட உதவும் உங்கள் மனப்பான்மைக்கு ஒரு சபாஷ்!

    ஜோஸியகாரர் செயல் உண்மையில் வெறுக்க வைத்தது.
    உங்கள் சின்னமகள் மனதில் நிக்கின்றாள்!.. டிப்ஸ் உபயோகமானது!
    அனைத்தும் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி இளமதி!

      Delete
  7. ஜோஸ்யர்களிடம் இத்தகைய நற் பண்புகளை எதிர்பார்க்க முடியாதுங்க. மேலும் இவர்கள் கூறுவதெல்லாம் அப்படியே நடக்கிறதா என்ன?

    பெண் குழந்தைகளை வெளியில் அனுப்பிவிட்டு அவர்கள் வீடு திரும்புவரை பதற்றத்துடன் காத்திருப்பது எனக்கு பழகிப்போய்விட்டது. நல்லவேளை இப்போது மொபைல் உள்ளது என் இரு மகள்களும் கல்லூரி படித்துக்கொண்டிருக்கையில் அந்த வசதியும் இல்லை. உங்களுடைய தவிப்பு நியாயமானதுதான். ஆனால் அதை பிள்ளைகள் உணர்ந்துக் கொள்வதே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. பெற்றவர்களின் கஷ்டத்தை புரிந்துக் கொள்வதில்லாம, நம்மையே கேலியும் செய்கிறார்கள்.

      Delete
  8. /போன வாரம் வாசல் தெளிச்சு கோலம் போட்டிருந்தேன்.//

    அட கோலம் கூட போடத் தெரியுமா?


    ///ஜோசியக்காரர்கிட்ட போயிருந்தேன்.///

    நல்லவேளை நான் அங்கு இல்லை இருந்திருந்தா நங்கு நங்குன்னு உங்க தலையில் நாலு கொட்டு கொட்டிருப்பேன்


    //மல்லிகைப் பூவை வாங்கி பிரிட்ஜில் வைக்கும் போது பிளாஸ்டிக் டப்பாவை விட, எவர்சில்வர் டப்பாவில் போட்டு மூடி வைத்தால் இன்னும் ஓரிரு நாள் புதுசா இருக்கும். //

    மல்லிகை பூபோல இருக்கும் நீங்களும் இப்படி பிரிட்ஜில் இருந்து பாருங்களேன். அதன் பின் டிப்ஸ் தரவும் சகோ

    ReplyDelete
    Replies
    1. கோலம் வரும் எனக்கு கோலம் போடவும் தெரியும் சகோ!

      Delete
  9. பகிர்வுக்கு நன்றி..

    ஜோசியத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சீனி!

      Delete
  10. ஜோசியத்தில் எனக்கு நம்பிக்கையில்லை சகோதரியாரே
    காசு பார்க்கத்தான் இன்று ஜோசியமே
    நமது பயம்தான் அவர்களது முலதனம்

    ReplyDelete
  11. ஜோசிய தொழிலை நம்புவதில்லை சகோ...

    222+22+2+2+2 = 250

    ReplyDelete
    Replies
    1. விடை சரிதானுங்கண்ணா!

      Delete
  12. இந்த கலிகாலத்திலயுமா ஜோசியத்தை நம்புகிறார்கள்?.

    ReplyDelete
    Replies
    1. இப்பத்தான் அதிகமான பேர் ஜோசியத்தை நம்புறாங்க சகோ!

      Delete
  13. ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருந்துக்கொண்டு தான் இருப்பார்களோ?.

    ReplyDelete
    Replies
    1. நாட்டு நடப்புலாம் அப்படித்தான் போல இருக்கு சகோ!

      Delete
  14. வித்தியாசமான பதிவு....

    ReplyDelete
  15. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிடமுகவரி.
    http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_2.html?showComment=1406943320490#c8058890132868713880
    வாருங்கள்..வாருங்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. Vithyasamana pathivu superb

    ReplyDelete