Thursday, November 08, 2018

குழந்தை வரம் தரும் சஷ்டி விரதம்


திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. வாழ்க்கையில் நாம் எதற்கு ஓடிக்கொண்டு இருக்கிறோம்?!  எதற்கு சம்பாதிக்கிறோம் என்பதற்கு அர்த்தம் கொடுப்பது குழந்தை செல்வம்தான். முன்ஜென்ம வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, "கந்தசஷ்டி விரதம்". குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.

முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது? கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். அதிகாலையில் எழுந்து நீராடி பூஜை அறையில் திருவிளக்கேற்றி கந்தசஷ்டி கவசம், ஸ்கந்தகுராகவசம், கந்தர் அலங்காரம் படிக்கலாம்.தெரியாதவர்கள் முருகன் பெயர் சொல்லி கும்பிடலாம். 

சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். சஷ்டி தேவி என்பவள் பச்சிளங்குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்கும் கருணை நாயகி இவள். இந்தத் தேவியைக் குறித்த வரலாறு தேவி பாகவதம் ஒன்பதாம் ஸ்காந்தத்தில் வருகிறது. இவளுக்கு ஸம்பத் ஸ்வரூபிணி என்றும் பெயர். சுவாயம்ப மனு என்பவனின் மகன் பிரியவிரதன். இவனுக்கு இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லாமலே இருந்தது. எனினும், பிரம்மாவின் வற்புறுத்தலின்படி மாலினி என்பவளை மணந்துகொண்டான்.
திருமணமாகி பல ஆண்டு ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாத காரணத்தால், காச்யபரைக் கொண்டு புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தான் பிரியவிரதன், இதனால் மாலினி, பன்னிரண்டாம் ஆண்டு பிள்ளையைப் பெற்றாள். ஆனால் குறைப் பிரசவமாக இருந்ததால், குழந்தை உருத்தெரியாமலும் உயிரற்றும் இருந்தது. மனம் உடைந்த பிரியவிரதன் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தானும் இறக்கத் துணிந்தான். அப்போது தெய்வாதீனமாக ஒரு பெண் தோன்றினாள். உயிரற்ற - உருவமற்ற அந்தக் குழந்தையை அவள் தொடவும், குழந்தை அழகிய உருவத்துடன் உயிர்பெற்று அழத் தொடங்கியது.
பிரிய விரதன் மிகவும் நெகிழ்ந்து தேவி! தாங்கள் யார் என்று கேட்டான். நான் சஷ்டி தேவிதேவசேனையின் அம்சம். பிரம்மாவின் மானசீக புத்திரி. நான் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பவள்பிள்ளைப்பேறு இல்லாதவருக்கு அவ்விரத்தை அருள்பவள். மாங்கல்ய பலம் இழக்கும் நிலையில் உள்ளவருக்கு அதனை நிலைப்படுத்துபவள். அவ்வாறே வினைப்பயன் எப்படியிருப்பினும்அவரவர் வேண்டுகோளுக்கு இணங்கி கணவன்மார்களுக்கு இல்லற சுகத்தையும் செல்வப்பேற்றையும் அருள்பவள் என்று கூறிஅந்தக் குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டாள். குழந்தைகளுக்கு நலமும் வாழ்வும் அருளும் சஷ்டிதேவிஎப்போதும் குழந்தைகளின் அருகிலேயே இருந்துகொண்டு விளையாட்டு காட்டுவதிலும் திருப்தி கொள்வாள். இவள்அஷ்ட மாத்ரு தேவதைகளில் சிறந்தவள்யோகசித்தி மிக்கவள்
ஸ்கந்த சஷ்டி ஆரம்பம் முதல் இறுதி வரை விடியற்காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் 4.30 மணியில் இருந்து 6.00 மணிக்குள் நீராட வேண்டும். பகலில் பழம் பால் மட்டுமே உண்ணவேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் எளிய உணவாக காலையில் சிற்றுண்டி அருந்தலாம். முருகருக்குரிய மந்திரங்களை பாடல்களை நாள் முழுவதும் பாராயணம் செய்து வருதல் நலம். ஓம் சரவணபவாய நம என்று ஜபித்து வரலாம். திருப்புகழ்,ஸ்கந்த சஷ்டி கவசம், போன்ற கவசங்களை பாராயணம் செய்யலாம். அருகில் உள்ள முருகர் ஆலயங்களுக்கு சென்று விளக்கேற்றி அர்ச்சனை வழிபாடு செய்து வருதல் வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து விட்டு வீட்டில் பூஜையறையில் முருகரை வழிபட வேண்டும். முடிந்தால் கோயிலில் வழிபாடு செய்யலாம்.

இதன் பின்னர் மணிக்கு மேல் பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். இவ்வாறு ஆறுநாட்கள்செய்து ஆறாவது நாளில் சூரசம்ஹாரம் எனும் நிகழ்ச்சி முருகர் கோயிலில் தரிசனம் செய்து விரதம் முடிக்க வேண்டும். இந்த விரதத்தை தொடர்ந்து அனுஷ்டித்து வர புத்திர தோஷம் விலகி புத்திர பாக்கியம் கிடைக்கும் குழந்தை முருகர் அருளால் பிறக்கும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி ஒருநாள் மட்டும் அனுஷ்டிப்பது சஷ்டி விரதம். இதையும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அனுஷ்டிக்க குழந்தை பிறக்கும்.

நன்றியுடன்,
ராஜி.

6 comments:

  1. நல்ல விளக்கம் சகோதரி...

    ReplyDelete
  2. முருகன் பற்றிய விவரங்கள் நன்று. என் இஷ்ட தெய்வம் உருகன்.

    ReplyDelete
  3. சிறப்பான தகவல்கள்....

    தேர்ந்தெடுத்த படங்கள் அழகு.

    ReplyDelete
  4. சஷ்டிதேவியைப் பற்றி தற்போதுதான் அறிகிறேன்.

    ReplyDelete
  5. நல்ல தகவல்கள் தெரிந்ததும் தெரியாததும்...தெரிந்து கொண்டோம்

    துளசிதரன், கீதா

    ReplyDelete