Saturday, December 23, 2017

வளையலுக்குப்பின் இத்தனை கதை இருக்கா?!




ஆணோ பெண்ணோ எது பிறந்தாலும் பாட்டி வீட்டில் காப்பு,. வசதியானவங்களா இருந்தா தங்க காப்பு, வசதி இல்லன்னா செம்பு காப்பு. பெண் பிள்ளைகளின் காது குத்து, மஞ்சள் நீராட்டு, கல்யாணத்துக்கு வரை பாட்டி வீட்டிலிருந்து சீர் வரிசையில் வளையல் இருக்கும். கல்யாணமான பெண்ணு உண்டாகி சீமந்தம் செய்யும்போதும், வயசாகி சுமங்கலியா இறந்து கடைசி காரியம் செய்யும்போதும் பொறந்த  வீட்டிலிருந்து  வளையல் வரும்.  ஒருவேளை கணவன் இறந்தாலும், தாய் வீட்டு சீதனமா வளையல் வரும். ஆகமொத்தம் பெண்ணின் வாழ்வில் வளையலுக்கு முக்கியம் இடமுண்டு.

 பிறந்த குழந்தைக்கு காத்து கருப்பு அண்டாம இருக்க கருப்பு வளையல்.  கல்யாணத்துக்கு சிவப்பு, பச்சை வளையல். சீமந்தத்துக்கு பச்சை கலர் வளையல், இறப்புக்கு சிவப்பு பச்சை வளையல், தாலி அறுப்புக்கு கலர் கலர் கண்ணாடி வளையல்ன்னு வளையல் அணிவதிலும் ஒரு வரைமுறை உண்டு.  காது, மூக்கு, கழுத்துன்னு பவுன் கணக்கில் நகை போட்டிருந்தாலும் கைகளில் வளையல் போடாம இருந்தா அந்த பொண்ணு அழகு முழுமையடையாது. 
வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது...ன்னு கமலும், இளம்வயசு பொண்ணை வசியம் பண்ணும் வளவிக்காரன்னு கார்த்திக்கும்... மலர் கொடுத்தேன், கைக்குலுங்க வளையலிட்டேன்ன்னு சிவாஜியும், கண்ணான பொண்ணு, கல்யாண பொண்ணு கொண்டாடும் வளையல்ன்னு எம்.ஜி.ஆரையும் பாடவைத்தது இந்த வளையல். வளையல் போடாத கையால் சாப்பாடு பரிமாறக்கூடாதுன்னு சாஸ்திரம் சொல்லுது.  ஆனா, இப்பத்திய பசங்க அதை கிண்டல் செய்வாங்க. வெளில போய்ட்டு வந்து வாட்சை கழட்டி வச்சிட்டு வளையலை அணிய மறந்திருந்தா என் மாமனார் திட்டுவார்.  விளக்கு வச்ச பிறகு வளையலை கழட்டக்கூடாது. தெருவிலிருந்து வளையலை கையிலிருந்து உடைக்ககூடாது. மாசப்பிறப்பு, அமாவாசை, கிருத்திகை, வெள்ளி, செவ்வாயிலும் வளையலை கழட்டக்கூடாதுன்னு ஆயிரத்தெட்டு கண்டிசன் உண்டு.  மெட்டி ஒலி, கொலுசொலி, வளையலின் சிணுங்கல் ஒரு வீட்டில் ஒலிச்சுக்கிட்டே இருக்கனும், வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசுவதை சிணுங்கல்ன்னு சொல்வாங்க. வளையோசை வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்ன்னு ஐதீகம்.



அல்கலும் கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய நாளும் கலங்கும் துன்பத்தால் வருந்தி நாம் இங்கே தனித்திருக்க.... தலைவனை பிரிந்த தலைவி உடல் இளைத்து கைவளையல் கழண்டு விழும் நிலையில் அவன் நினைவால் நான் வாடி நிற்கிறேன்னு பாடுகிறாள்., இதுமாதிரி பலப்பாடல்கள் சங்க இலக்கியத்தில் உண்டு. என்னதான் உடல் இளைத்தாலும் கன்னம், இடுப்பு, தொடை, மாதிரியான இடங்கள் மட்டும்தான் இளைக்கும். எந்த நாளிலும் மணிக்கட்டு இடம் இளைக்காது. ஏன்னா, அது எலும்பு சார்ந்தது. சதைப்பகுதி கரைவது எளிது.எலும்பு கரைவது அரிது. ஆனால், அந்த எலும்பும் கரைவது போல தலைவனை நினைத்து உருகுகிறாள்ன்னு புலவர்கள் தலைவியின் காதலை பெருமையா சொல்றாங்க. இந்த பெருமைக்கு ஆண்டாள், பார்வதி, கண்ணகி, மாதவி தொடங்கி, சாதாரண பெண் வரை பசலை நோயால் ஆட்பட்டவர் ஏராளம். பதிவு காதல், சங்க இலக்கியம்ன்னு டாபிக் மாறுது. நாம வளையலுக்கு வருவோம். 

முக்காலமும் பெண்களை அழகுப்படுத்துவதில் வளையலுக்கு முக்கிய இடமுண்டு.  கண்ணாடி, வெள்ளி, பீங்கான், தங்கம், பிளாட்டினம், முத்து, மூங்கில், ஃபேசன் வளையல்கள்ன்னு வளையல்களில் பல உண்டு. எந்த வளையலா இருந்தாலும் பரவாயில்லை. ஆனா, வளையலை அணிவது மிக முக்கியம். வளையலை அணிவதால் மனதுக்கு அமைதி உண்டாகுது. கருப்பை, மூளை, இதயத்துக்கு சுத்த ரத்தத்தை கொண்டு செல்லும் தமனிகள் மணிக்கட்டில்தான் இருக்கு. வளையலை அணிவதால் அந்த ரத்த நரம்புகள் தூண்டப்படுது.  அப்ப ஆண்களுக்கு இந்த தமனி தூண்ட வேணாமான்னு சண்டைக்கு வர்றவங்களுக்கு ஒரு இன்ஃபர்மேஷனுங்க.. முன்னலாம் ஆம்பிளைங்க கைகளில் காப்பு, கங்கணம்ன்னு போட்டுட்டு இருந்தாங்க. ஆண்கள்தான் இதையெல்லாம் சுமக்க வெசனப்பட்டுக்கிட்டு விட்டுட்டாங்க.
பெண்களுக்கு வளைக்காப்பு செய்யும்போது எங்க ஊர்பக்கம் வேப்பிலை கொழுந்தால் ஆன வளையலை செஞ்சு சாமிக்கிட்ட வச்சு படைச்சு, அதைதான் முதல்ல போடுவாங்க, ஏன்னா, கர்ப்பிணி பெண்ணை சுற்றி திருஷ்டி, தோஷம் இருந்தால் விலகும்., கூடவே வளைக்காப்புக்கு வர்றவங்களில் யாருக்காவது நோய்த்தொற்று இருந்தா, இந்த வேப்பிலை வளையல் கிருமி நாசினியா செயல்படும்ங்குறதாலயும்தான். வேப்பிலையில் அம்மன் வாசம் செய்வதாக ஒரு நம்பிகை. இதன்மூலம் அம்மனின் அருளும் கிடைக்கும்.



கண்ணாடி வளையல்...
கண்ணாடி வளையல் பார்க்க அழகா இருக்குறது மட்டுமில்லாம, வளையல்கள் ஒன்னோடு ஒன்னு உரசுவதால் ஏற்படும் ஒலி மங்கலகரமானதும், மகிழ்ச்சியையும் கொடுக்கக்கூடியது.  அதனாலதான் வளைக்காப்பின்போது  கண்ணாடி வளையலை அணிவிக்குறாங்க. எந்த துஷ்ட சக்தியையும்  வளையோசை அண்ட விடாது. வளையலை அணியறதுக்கும் ஒரு வரைமுறை உண்டு. ஒற்றை வளையலை அணியக்கூடாது. ஒரு கையில் வளையலை  அணியக்கூடாது. ரொம்ப இறுக்கமாவும், ரொம்ப லூசாவும் அணியக்கூடாது. ஆனா, சின்னதிலிருந்து பெருசுன்னு வரிசையாய் அணியலாம். உடைந்த வளையலையும் அணியக்கூடாது. 

பச்சை நிற வளையல்  மனதை அமைதி படுத்தும். வாழ்வை செழிப்பாக்கும். சிவப்பு நிற வளையல் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை தரும்.  மஞ்சள் மகிழ்ச்சியை, மங்கலத்தை தரும்.   நல்ல எண்ணங்களை தரும். ஊதா நிறம் சுயமாய் சிந்திக்கும் திறனை தரும்.  ஆற்றலை அதிகப்படுத்தும், ஆரஞ்ச் நிறம் வெற்றியை தேடி தரும். வெள்ளை நிற வளையல் இனிய தொடக்கத்தை உண்டாக்கும். கருப்பு நிற வளையல்  மன தைரியத்தை உண்டு பண்ணும்.   மனதை அமைதிப்படுத்தி வாழ்வை செழிக்க வைக்கும் பச்சை நிற வளையலையும், எதையும் எதிர்கொள்ள வைக்கும் சிவப்பு நிற வளையலையும்தான் சுப நிகழ்ச்சிகளில் அணிவாங்க. 
தங்கம் வளையல் ....
தங்க வளையலை அணிவது பொருளாதார முதலீடு, ஸ்டேட்டஸ் மட்டுமில்லாம அணிபவருக்கு அழையும் கொடுக்கும். தங்கம் சக்தி ரூபம்.  தங்க வளையோசை  எழுப்பும் ஒலி இல்லத்தில்  லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்., தங்க வளையலோசைக்கும் இப்ப வரும் மத்த உலோகத்தால் ஆன வளையோசைக்கும் வித்தியாசமுண்டு.
கடல் சிப்பி, தாமிரம், தங்கம், அகேட், சால்சிதோனி போன்ற பொருட்களிலான வளையல்கள் இந்தியாவில் முற்றிலும் வெவ்வேறு இடங்களில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இடக்கையில் வளையல்கள் அணிந்து நடனமாடும் ஒரு பெண்ணின் உருவம் மோகஞ்சதரோ அகழ்வாய்வுகளில் (கி.மு 2600) கிடைத்திருக்கு. இதன்மூலம் வளையல் அணிவது தொன்றுதொட்டு வந்திருக்கு என்பது புலனாகுது. 

உத்திரப்பிரதேசத்திலிருக்கும் பிரோஜாபாத் தான் வளையல் உற்பத்தியில் முதலிடம்.  அதுக்கடுத்து ஆந்திராவில் இருக்கும் ஹைதராபாத்தில் உற்பத்தி ஆகுது.  கண்ணாடி வளையல் தயாரிக்க ஒருவித சிலிக்கா மணல்,  காஸ்டிக் சோடா, உடைந்த வளையல்தான் மூலப்பொருள். இவைகளை, சுண்ணாம்பு உலைப்போல இருக்கும் வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் கிடங்குஅகளில் கொட்டி உச்சக்கட்ட வெப்பநிலையில் உருக வைப்பாங்க. அவரி உருகி பிழம்பாய் மாறும். அந்த பிழம்பை நீண்ட குச்சியில் எடுத்து, இறுகுவதற்குள் சிறிய ரோலரில் வைத்து  தேவையான கலர்ப்பவுடரை தூவுறாங்க.  அந்த நிறத்துக்கு மாறியதும் கம்பி சுருள் மாதிரி இருக்கும்.  அதை ஒரு கம்பியில் சேகரிப்பாங்க.

வளையல் உருவாகும் முறை
அந்த சுருளை கொஞ்ச நேரம்  வெயிலில் உலர்த்தி,  சுருள்களுக்குள் இருக்கும்  இணைப்பை கட் செஞ்சு, இணைச்சு வளையலாக்குவாங்க. அதுக்கு பிறகு, கல், சமிக்கி, பெயிண்ட், கிளிட்டர்ன்னு விதம் விதமா அழகான வளையல் தயார். இந்த வேலையில் ஆண், பெண், குழந்தைகள்ன்னு குடிசைதொழிலா செய்றாங்க. அதுமட்டுமில்லாம, குறைஞ்ச கூலி, அதிக சூடு, ரசாயண கலவையால்  விரைவில் நோய்களுக்கு ஆளாகுதல்ன்னு இந்த வேலையிலும் சிரமங்கள் அதிகம்.  ஆனாலும் இந்தியா மட்டுமில்லாம உலகம் முழுக்க உள்ள பெண்கள் தங்களால்தான் அழகா தெரியுறாங்கன்னு பெருமையா சொல்றாங்க. இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள்.
 பொதுவா பொண்ணுங்கன்னா புடவை, நகை பைத்தியமா இருப்பாங்க. ஆனா நான் வளையல் பைத்தியம்.  எனக்கு வளையல்ன்னா கொள்ளை பிரியம். எங்க போனாலும் ஒரு செட் வளையல் வாங்கிடுவேன்.அதும் புடவைக்கு மேட்சிங்கா கண்ணாடி வளையல் போட்டுக்க பிடிக்கும். கண்ணாடி வளையல், மெட்டல் வளையல், பேப்பர், சில்க் த்ரெட் வளையல்ன்னு விதம் விதமா 100 செட்டுக்கு மேல இருக்கு. என் அம்மாகூட திட்டும் இத்தனை வளையல் வாங்குறதுக்கு தங்க வளையல் வாங்கி இருந்தா பொண்ணுங்களுக்காவது யூஸ் ஆகும்ன்னு. ஆனா, என்ன திட்டியும் இந்த பைத்தியம் குணமாகல. சரி சரி பதிவை போட்டுட்டு கடைவீதிக்கு போய் பொங்கல் சேலைக்கு மேட்சிங்க வளையல் வாங்கி வரேன். பை.. பை..

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...

நன்றியுடன்,
ராஜி.

14 comments:

  1. பாட்டு சொல்லும்போது உரிமைக்குரல் பாட்டு கல்யாண வலையோசை கொண்டு பாடலையும் ஜீவநாடி படப்பாடலான அருவிமகள் வளையோசை பாடலையும் சேர்த்துக்கோங்க...!

    சுவாரஸ்யமான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவில் சேர்த்துக்குறேன் சகோ

      Delete
  2. ஸ்வாரஸ்யம். வடக்கிலும் பெண்களுக்கு வளையல் முக்கியமானது - குறிப்பாக திருமணத்தின் போது! திருமணம் நடந்து சில மாதங்கள் வரை அந்த வளையல்களை கழற்றவே மாட்டார்கள்!

    ReplyDelete
    Replies
    1. தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் வளையல் செண்டிமெண்ட் அதிகம்தான்னு கேள்விப்பட்டிருக்கேன்ண்ணே

      Delete
  3. வளையல் பற்றி வளைத்து வளைத்து பதிவு கொடுத்துவிட்டு வளையல் வாங்கவும் கிளம்பி போயாச்சு

    ReplyDelete
    Replies
    1. அதென்னமோ தெரிலைங்க பூ.. வளையல் மட்டும் விதம் விதமா பல நிறத்துல வாங்குவேன். கிட்டத்தட்ட நூறு செட் இருக்குது. எடுத்து வெளில போடவும் மனசு வரல. ஒவ்வொரு வளையலுக்கு பின்னயும் ஒரு கதை இருக்கு...

      Delete
  4. வளையல்களின் பன்முகப் பார்வையிலான சிறப்புகளைப் பார்த்தேன். எங்கள் இல்லங்களில் நடக்கின்ற வளையலணி விழாவினை நான் அதிகம் ரசிப்பேன். வளையல்களோடு, அதுவும் வளைகாப்பின்போது, இருக்கும் நம் மகள், மருமகள், சகோதரிகளின் அழகே அழகு.

    ReplyDelete
    Replies
    1. கண்ணாடி வளையலின் மகிமையே மகிமைதான். என்னதான் தங்கம், பேன்சி வளையல்களை அணிந்தாலும் கண்ணாடி வளையல் அணியும்போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்ல

      Delete
  5. ஏலோர் எம்பாவாய் விளக்கம் கூறு வீர்களா

    ReplyDelete
    Replies
    1. திருப்பாவைக்கா?! முதல் எட்டு பாடல்களும், அதன் விளக்கமும் இன்னிக்கு பதிவாக்கி இருக்கேன்ப்பா.. ஞாயித்துக்கிழமையே பதிவு போட்டிருக்கனும். காய்ச்சல் காரணமா இன்னிக்குதான் பதிவு வந்திருக்கு

      Delete
  6. திருப்பாவையில் வரும் வரிகளுக்கு ஏலோர் எம்பாவாய் அதற்கு

    ReplyDelete
    Replies
    1. ஏலோர் எம்பாவாய்ன்னா அன்பிற்கினிய தோழின்னு அர்த்தம்..

      ஏலோர் எம்பாவாய்.. இதை ஏல்+ஓர்+எம்பாவாய்ன்னு பிரிப்பாங்க. இதில் ஏல்ன்னா ஏற்றுக்கொள், ’ஓர்’ன்னா யோசித்து பார்ன்னு அர்த்தம்.. மார்கழி மற்றும் பெருமாளின் மகிமையை எண்ணி, அதிகாலையில் எழுவதை பத்தி யோசின்னு சொல்ற மாதிரியும் பொருள் வரும்ப்பா

      Delete
  7. அழகான படங்களுடன்
    வளையல்களின் தகவல்
    பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete