Showing posts with label கிருஷ்ணர். Show all posts
Showing posts with label கிருஷ்ணர். Show all posts

Friday, August 23, 2019

கண்ணன் வந்தான் தாய்வீடு-கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்


எங்கெல்லாம் நன்மை அழிந்து தீமை அதிகரிக்கின்றதோ அங்கெல்லாம் நான் அவதரிப்பேன் என நமக்கு உணர்த்தவே  கோலாகல பகவான் மகாவிஷ்ணு பூமியின் பாரம் குறைப்பதற்காகவும், தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்தார். இந்தியா முழுவதும் இந்த விழாவானது கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, கிருஷ்ணர் ஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்று பலவிதமான பெயர்களில் கொண்டாடப்படுகிறது
துரா சிறைச்சாலையில், வசுதேவர் தேவகி தம்பதியருக்கு எட்டாவது குழந்தையாக கண்ணன் அவதரித்தான். அவதாரம் என்ற வடமொழிச் சொல்லுக்கு கீழே இறங்கி வருதல் எனப் பொருள். இப்படி மகாவிஷ்ணு நீதியை நிலை நாட்டும் பொருட்டும், கம்சனை வதம்செய்யும் பொருட்டும் இப்பூவுலகில் அவதரித்தார்.
துவாபர யுகத்தில் இராமயண காலத்தில் உருவான ஊர் மதுரா. இங்கு யது வம்ச போஜகுலத்தில், உக்ரசேன மன்னனின் மகனாக கம்சன் பிறந்தான். இவன் தன் தந்தையையே சிறை வைத்து, அரசை தானே ஆண்டு வந்த கொடியவன். இவனுக்கு கம்சை, தேவகி என்ற இரு தங்கைகள். தேவகிமீது கம்சன் மிகுந்த பாசம் வைத்திருந்தான். வசுதேவருக்கு தேவகியை மணம் முடித்து இருவரையும் தன் தேரில் ஏற்றிக் கொண்டு தானே ஓட்டி வந்தான் கம்சன். அப்போது வானில் அசரீரி, ""கம்சா! தேவகியின் எட்டாவது மகன் உன்னைக் கொல்வான்'' என்றது.
ஆத்திரமடைந்த கம்சன் தேவகியைக் கொல்ல முயல, அவனை வசுதேவர் தடுத்தார். ""கம்சா! தேவகியின் எட்டாவது மகன்தானே உன்னைக் கொல்வான்? நாங்கள் எங்களுக்குப் பிறக்கும் எல்லா குழந்தைகளையும் உன்னிடம் தந்துவிடுகிறோம் தேவகியை விட்டுவிடு'' என்று மன்றாடினார். அதை ஏற்றுக்கொண்ட கம்சன் இருவரையும் மதுரா சிறையில் அடைத்தான். வசுதேவர்- தேவகி தம்பதியருக்குப் பிறந்த குழந்தைகளை இரக்கமின்றிக் கொன்று தீர்த்தான் கம்சன். இவ்வாறு ஆறு குழந்தைகள் கொல்லப்பட்ட நிலையில், தேவகி ஏழாவது முறை கருவுற்றாள். கரு ஏழு மாதங்கள் வளர்ந்திருந்த நிலையில், அது மாயையின் உதவியால் கோகுலத்திலிருந்த வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியின் வயிற்றுக்கு மாற்றப்பட்டது. அந்தக் குழந்தையே பலராமன். (கரு கலைந்துவிட்டதாக கம்சனிடம் கூறிவிட்டனர்).
அடுத்து எட்டாவது முறையாக சூலுற்ற தேவகி, அஷ்டமி திதியில் நள்ளிரவு 12.00 மணிக்கு கண்ணனை ஈன்றெடுத்தாள். அந்த நேரத்தில் மாயையின் பிடியில் சிக்கி மதுராவிலிருந்த அனைவருமே உறங்கிக் கொண்டிருந்தனர். வசுதேவர், தேவகி, சந்திரன் ஆகிய மூவர் மட்டுமே விழித்திருந்தனர். மகாவிஷ்ணு உணர்த்தியபடி, வசுதேவர் குழந்தையை ஒரு கூடையில் வைத்துக்கொண்டு யமுனைக் கரைக்குச் சென்றார். அப்போது மழை பொழிய, ஆதிசேஷன் குடைபிடித்தபடி அவர் கள் பின் சென்றது. யமுனை நதி இரண்டாகப் பிளந்து வழிவிட, வசுதேவர் அக்கரையிலிருந்து ஆயர்பாடியான கோகுலம் சேர்ந்தார். அங்கே நந்தகோபரின் மனைவி யசோதையின் அருகே குழந்தையை வைத்துவிட்டு, யசோதைக்குப் பிறந்திருந்த பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு சிறைச்சாலை வந்து சேர்ந்தார்.
அப்பொழுது மாயை விலக, அனைவரும் கண் விழித்தனர். குழந்தையின் அழுகுரல் கேட்டு, செய்தி கம்சனுக்குத் தெரிவிக்கப்பட்டது. தன்னை அழிப்பதற்காகப் பிறந்திருக்கும் குழந்தை இதுதானே என்று ஆக்ரோஷமாகப் புறப்பட்டு வந்த கம்சன், பெண் குழந்தையென்றும் பாராமல் அதைக் கொல்ல முயல, அவன் பிடியிலிருந்து விலகி அந்தரத்தில் நின்று சிரித்த குழந்தை, ""கம்சா! உன்னைக் கொல்லப் பிறந்தவன் கோகுலத்தில் வளர்கிறான்'' என்று கூறி மறைந்துவிட்டது. அது காளிதேவி. பெருங்கோபம் கொண்ட கம்சன் தன் அசுரப் படைகளை அழைத்து, எந்த வடிவிலாவது சென்று கண்ணனைக் கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான்.

 வண்டிச் சக்கரமாக வந்த சகடாசுரன், கடத்த வந்த தீப்திகன், பாலூட்ட வந்த பூதகி, கொக்காக வந்த பகன், பாம்பாக வந்த ஆகா சுரன், கழுதையாக வந்த தேனுஜன், இடையர்களாக வந்த பிரம்பலன்- வியோமன், காளையாக வந்த அரிஷ்டன், குதிரையாக வந்த கேசி என பலரும் வஞ்சகமாக கண்ணனைக் கொல்ல வந்தனர். அத்தனை பேரையும் குழந்தைக் கண்ணன் விளையாட்டாகக் கொன்றான்.
தன்னை கொல்ல வந்த  காளிங்கனை மட்டும் அடக்கி மன்னித்துவிட்டான். கண்ணனுக்கு இப்படி பல இடையூறுகள் வருவதைக் கண்ட ஆயர்பாடியினர் ஐந்து வயதான கண்ணனை அழைத்துக்கொண்டு பசுக்கூட்டங்களுடன் பிருந்தாவனம் சென்று விட்டனர். எவ்வளவு முயன்றும் கண்ணனைக் கொல்ல முடியவில்லையே என்று ஆத்திரமுற்ற கம்சன், வேறொரு உபாயம் செய்தான். அதன்படி கண்ணனை தன் அரண்மனைக்கே வரவழைத் தான். அரண்மனை வாயிலில் ஒரு யானையிடம் இரும்பு உலக்கையைக் கொடுத்து, அதைக் கொண்டு கண்ணனைக் கொல்ல ஏற்பாடு செய்திருந்தான். ஆனால் பலராமனும் கண்ணனும் அந்த யானையையே கொன்று விட்டனர்.

பிறகு சானுகன், கூடன், சலன், முஷ்டிகன், தோகலன் என்னும் மல்யுத்த வீரர்கள் ஐவரை அனுப்பினான் கம்சன். அவர்களையும் கொன்றான் கண்ணன். இதைக் கண்டு பெருஞ்சினங்கொண்ட கம்சன் தன் படை வீரர்களை நோக்கி, ""இந்த இரு பயல்களையும் உடனே கொல்லுங்கள். அத்துடன் சிறையிலுள்ள வசுதேவன், தேவகி, உக்கிரசேனன் என எல்லாரையும் கொல்லுங்கள்!'' என்று கர்ஜித்தான். அதைக்கேட்ட கண்ணன் சிம்மாசனத்திலிருந்த கம்சனை இழுத்து தரையில் கிடத்தி, அவன்மீது ஏறி அமர்ந்து, தன் கைகளால் கம்சனின் மார்பில் குத்தியே கொன்றான். அதன்பின்னர் கம்சனின் தந்தையும் கண்ணனின் தாத்தாவுமான உக்கிரசேனர் அரியணை ஏறினார்.
பலராமனுக்கும் கண்ணனுக்கும் உபநயனம் செய்வித்து, சாந்திபணி என்ற குருவிடம் குருகுலக் கல்விக்கு அனுப்பி வைத்தார் உக்கிரசேனர். அங்கு 64 கலைகளையும் கற்ற அவர்கள், குருவின் மகனை மீட்டு குரு காணிக்கையாகச் செலுத்திப் பெருமை கொண்டனர். பின்னர் பூமாதேவியின் பாரம் தீர்க்க பாரதப்போர், உலக மக்கள் நற்கதி பெற கீதோபதேசம் என பல அருஞ்செயல்கள் புரிந்த கண்ணன் துவாரகையில் அரசு புரிந்துவந்தார். இறுதியில் தன் அவதார காலம் முடிவுறும் தருணம் நெருங்கிவிட்டதை உணர்ந்து, ஒரு மரத்தடியில் சென்று கால்நீட்டிப் படுத்தார்.
அப்போது வேடன் ஒருவன் மறைந்திருந்து எய்த அம்பின் விஷ நுனி கண்ணனின் காலில் பாய்ந்தது; கண்ணன் உயிர் பிரிந்தது. வைகுண்டம் சேர்ந்தார் பரமாத்மா. கண்ணன் மனைவிகள் ருக்மணி, சத்யபாமா, காளிந்தி, ஜாம்பவதி, விக்ரந்தை, சத்யவதி, பத்தரை, லட்சுமணை என பட்டத்தரசிகள் எட்டு பேர். இவர்களன்றி பதினாயிரம் இளவரசிகள். ஒவ்வொருவருக்கும் பத்துப் பிள்ளைகள். கண்ணனின் பல பிள்ளைகளில் 18 பேர் கீர்த்தி பெற்றவர்கள். பிரத்யும்னன், அனிருத்ரன், தீப்திமான், பானு, ப்ருஹத்பானு, சாம்பன், விருகன், அருணன், புஷ்கரன், வேதபாஸு, ஸ்ருததேவன், சுனந்தனன், இந்திரபாஸு, விருமன், கவி, நிகரோதனன், சித்திரபானு, மது என்பவர்களே இவர்கள். கண்ணனின் காலம் கண்ணனின் பூலோக சஞ்சாரம் 125 வருடங்கள். கி.மு. 3102 பிப்ரவரி 18-ல்- 125 வருடம், 7 மாதம், 6 நாட்கள், பிற்பகல் 2 மணி, 27 நிமிடம், 30 வினாடியில் கிருஷ்ணாவதாரம் முடிந்ததாகக் கூறப்படுகிறது. இதுப்பற்றி நாம விரிவா நம்ம பதிவில் பார்த்திருக்கோம்.  பார்க்காதவங்களுக்காக ஒரு சின்ன விளம்பரம்....

கண்ணன் அவதரித்த ஆவணி மாதம் அஷ்டமி திதியில். அந்நன்னாளைத்தான் கோகுலாஷ்டமியாக இமயம் முதல் குமரி வரை அனைவரும் கொண்டாடுகின்றனர். கண்ணன் பிறந்தது மதுரா என்ற வடமதுரை; கண்ணன் வளர்ந்தது ஆயர்பாடியான கோகுலம். இவ்விரு தலங்களும் யமுனையின் எதிரெதிர் கரையில் அமைந்துள்ளன.
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஆனவன் கிருஷ்ணன். கோகுலாஷ்டமி கொண்டாடும் விதம் அன்று இல்லங்களைத் தூய்மை செய்து, செம்மண் இட்டு, கோலம் வரைந்து மாவிலை தோரணம் கட்டி, வாயிற்படியிலிருந்து பூஜையறை வரை கண்ணனின் திருப்பாதங்களை மாக்கோலத்தால் வரைந்து அழகு பார்ப்பார்கள். கண்ணனே தன் திருப்பாதங்களைப் பதித்து பூஜையறைக்கு வந்து நாம் வைத்துள்ள நிவேதனப் பட்சணங்களை ஏற்றுக்கொள்வதாக நம்புகின்றனர்.


பூஜையறையில் கண்ணன் விக்ரகம் அல்லது படம் வைத்து அலங்கரித்து, இருபுறமும் குத்துவிளக்கேற்றி, பூஜைப் பொருட்களான தேங்காய், வெற்றிலை, பாக்கு, பூ, பழம் வைத்து, நிவேதனப் பொருட்களான வெல்லச் சீடை, சீடை, முறுக்கு, தேன்குழல், மைசூர்பாகு, லட்டு, பால்கோவா, அல்வா, பாதாம் கேக் போன்ற பட்சணங்களுடன் நாவல்பழம், கொய்யாபழம், வாழைப்பழம், விளாம்பழம் போன்றவற்றையும் வைக்க வேண்டும்.
முன்னதாக கிருஷ்ணன் பாடல்களைப் பாடி, பிறகு தூபதீபம் காட்டி நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர் ஆலயம் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடக்கும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் பார்த்து மகிழ்ந்து, இல்லம் திரும்பி பட்சணங்களை அனைவருக்கும் கொடுத்தபின் நாம் உண்ண வேண்டும். 
கோகுலாஷ்டமி தினத்தன்று கிருஷ்ண பகவானை வழிபடுபவர்களுக்கு சந்தான பாக்கியம் ஏற்படும். நீண்ட காலம் குழந்தையில்லாத தம்பதிகள் இவ்விரதம் இருந்தால் குழந்தை வரம் கிடைக்குமென்பது நம்பிக்கை.

அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்!!


மீள்பதிவு..
நன்றியுடன், 
ராஜி. 

Thursday, August 15, 2019

சகோதரத்துவத்தை மலர செய்யும் ரக்‌ஷாபந்தன்

தொப்புள்கொடியால்  வருவது பெற்றோர் பிள்ளை உறவு, தாய் தந்தையால் வருவது பிறந்த வீட்டு உறவு.  தாலிக்கொடியால வருவது கணவன் மனைவி உறவு. கணவன்/மனைவியால் வருவது புகுந்த வீட்டு உறவு.  இதுமாதிரி எல்லா உறவுக்கும் எதாவது ஒரு உறவுக்கொடி இருக்கும். ஆனா, எந்த உறவுக்கொடி இல்லாத ஒரு ஆணையும், பெண்ணையும் அண்ணன் தங்கையா மாத்துது இந்த ராக்கிக்கொடி. ரக்‌ஷாபந்தன் விழாவுக்கு பல காரணம் சொல்லப்படுது. அது என்னன்னு வரிசையாக பார்க்கலாம். இப்பத்திய பிள்ளைகள் இந்த விழாவை விமர்சையா கொண்டாடுறாங்க. தன்னை கிண்டல் செய்து, தொந்தரவு செய்யும் பிள்ளைகளை இக்கயிறு கட்டி நல்லவனா, தன்னோட நல்லது கெட்டதுல முன்னுக்கு நிக்குற சகோதரனா மாத்தும் சக்தி இக்கயிறுக்கு உண்டு.  இது வடநாட்டுல வந்த ஒரு பண்டிகை. எங்கிருந்து வந்தால் என்ன நல்லது நடந்தா சரி. 
No photo description available.
முதல் கதை மகாப்பாரதத்திலிருந்து...
பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, ஒருமுறை போரில் அடிப்பட்ட கிருஷ்ணரின் காயத்திலிருந்து வழியும் ரத்தத்தை தன் பட்டுப்புடவையை கிழித்து, துடைத்து, மருந்திட்டு காயத்தின்மீது கட்டுக்கட்டியதாகவும், அந்த நிகழ்வு கிருஷ்ணரின் மனதை பாதிக்க அன்றிலிருந்து திரௌபதியை தனது சகோதரியாய் ஏற்றுக்கொண்டு அவளது சுகதுக்கத்தில் பங்கெடுப்பேன் என உறுதிமொழி எடுத்து கடைசிவரை காப்பாற்றினார். இதனால்தான், அரசவையில் திரௌபதியின் துயில் உரியப்படும்போது புடவை தந்து மானம் காத்தான். 
Image may contain: one or more people and ring


அடுத்த கதை..

விஷ்ணுவின் பரமபக்தனான அரக்கன் பாலியின் வேண்டுக்கோளுக்கிணங்க வைகுண்டத்தைவிட்டு பாலியின் ராஜ்ஜியத்தை காக்க சென்றார். கணவர் இல்லாத இடத்தில் தானும் இருக்க விரும்பாத லட்சுமிதேவி சாதாரண பெண்ணாய் மாறி, அடைக்கலம் வேண்டி அலைந்து திரிந்தார். ஷ்ரவண் பூர்ணிமா  அன்று மன்னன் பாலியின் கரத்தில் ராக்கி கயிறை கட்டினாள். அவளின் அடையாளத்தையும்,  ராக்கி கயிறு கட்டியதற்கான நோக்கத்தையும் பாலி வினவ, தனது சுயரூபத்தை வெளிப்படுத்தினாள் லட்சுமிதேவிஇதனால் மனம் நெகிழ்ந்த, அன்பு மனைவிக்காக விஷ்ணுவை அனுப்ப முன்வந்ததோடு, தனது அனைத்து செல்வத்தையும் லட்சுமிதேவிக்கு அர்ப்பணித்தான்.  பாலியின் தியாகத்தின் பொருட்டு ரக்‌ஷாபந்தன் விழாவை பாலிவான்னும் சொல்வாங்க. இந்நிகழ்ச்சிக்கு பிறகே, ராக்கி கயிறு கட்டும் பழக்கம் உண்டானது. 

அடுத்த கதை..
கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாமீது படையெடுத்து வந்தபோது புருஷோத்தமன் மன்னருக்கும் அலெக்சாண்டருக்கு சண்டை நடந்தது. அலெக்சாண்டரின் மனைவி ரோக்சனா, மன்னர் புரோஷோத்தமனுக்கு ராக்கி கயிற்றை கட்டிவிடுகிறாள். போர்க்களத்தில் அலேக்சாண்டரைக் கொல்வதற்கு வாளை உருவிய புருஷோத்தம ராஜா, தற்செயலாக தன் கையில் கட்டப்பட்டிருந்த ராக்கியைப் பார்த்ததும் மனம் மாறி அலேக்சாண்டரை கொல்லாமல் விட்டுவிடுகிறார்.
அடுத்த கதை..
சித்தூர் ராணி கர்ணவதி,  முகலாய மன்னரான ஹுமாயூனுக்கு ஒருமுறை ராக்கி கயிற்றை அனுப்பி கட்டச் செய்கிறாள்.  அந்த சகோதர பாசத்திற்காக கர்ணவதியைக் காப்பாற்றும் பொறுப்பு ஹிமாயூனுக்கு வந்து விடுகிறது. குஜராத் மன்னர் பகதூர் ஷா, சித்தூர்மீது படையெடுத்து அந்த நாட்டைக் கைபற்றியதும் போர் தொடுத்துச் சென்ற ஹிமாயூன் நாட்டை மீட்டு, இறந்த சகோதரி கர்ணவதியின் மகன் விக்ரம்ஜித்சிங்கிடம் ஒப்படைத்தார். 
அடுத்த கதை..
வீட்டுக்கு தெரியாம கல்யாணம் கட்டிக்கிட்டு வாழும் இப்பத்திய ஆண்கள் மாதிரி பிள்ளையாரும்  இங்க  பிரம்மச்சாரி.  வடக்கே பிள்ளையாருக்கு இரு மனைவிகள், இரு மகன்களோடு வாழ்ந்து வர்றார். ரித்தி- சித்தி என்பது அவரது மனைவியரின் பெயர்கள். ரக்ஷாபந்தன் நாளில் எங்களுக்கு ராக்கி கட்ட தங்கை இல்லை என பையன்கள் இருவரும் அழ, அந்த நேரம் அங்கு வந்த நாரதரும் இதுக்கு தூபம் போட, திடீரென குழந்தை வருமாவென பிள்ளையார் நகைக்க, பக்தர்களின் துயரை அவர்கள் நினைத்த மாத்திரத்தில் அவர்களது துன்பத்தினை போக்கும் உனக்கு ஒரு பெண்பிள்ளையை உண்டாக்குவதா கஷ்டமென உசுப்பேத்தினார். அத்தோடு பெண்பிள்ளை இல்லாத வீடு சுபிட்ஷமாய் இருக்காது. எல்லா ஆணுக்கும், சகோதரிகள் முக்கியம் அதுக்காகவது ஒரு பெண்பிள்ளைக்கு தந்தையாகு என கட்டளையிட்டு சென்றார். உடனே பிள்ளையாரு, தனது மனைவிமார்களை அழைத்து இருவரும் சேர்ந்து ஒரு பெண்பிள்ளைக்கு என்னை தந்தையாக்க வேண்டும். அந்த பெண் இருக்குமிடம் சகல செல்வங்களோடு சந்தோசமாய் இருக்கவேண்டுமென உத்தரவிட, இருவரும் லட்சுமி, சரஸ்வதி, பார்வதிதேவியான முப்பெரும்தேவியரை வேண்டி சந்தோஷிமாதாவை பெற்றெடுக்கின்றனர்.  சந்தோஷிமாதாவும் தன் அண்ணன்களுக்கு ராக்கி கயிற்றை கட்டி மகிழ்விக்கிறாள் என வடநாட்டு புராணக்கதை. 
அடுத்த கதை
எமன் 12 ஆண்டுகள் தன் தங்கை யமுனாவைப் பார்க்கச் செல்லவே இல்லை. யமுனை, சக நதியான கங்கையிடம் ஆலோசனை கேட்டாள். கங்கை எமனுக்கு நினைவுபடுத்தினாள். எமன் தங்கை யமுனையைப் பார்க்க வந்தான். மகிழ்ச்சியில் திளைத்த யமுனைஅண்ணனுக்காக பெருவிருந்து படைத்தாள். என்ன பரிசு வேண்டும் என்றான் எமன். மீண்டும் விரைவிலேயே பார்க்க வர வேண்டும் என்றாள் யமுனை. அன்பில் திளைத்த எமன்யமுனைக்கு என்றும் அழிவில்லை என்று வாழ்த்தினான். வடக்கே அண்ணன்-தங்கை இடையிலான உறவைக் கொண்டாடும் பாய்-தூஜ் பண்டிகையின் வரலாறு இது. 

அடுத்த கதை..
இந்தி காலண்டர்படி வரும் ‘ஷ்ரவன்’ மாத பவுர்ணமி நாளில் ரக்க்ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது. ‘ரக்‌ஷான்னா பாதுகாப்பு, பந்தன்ன்னா இணைப்பு’ இரண்டையும் இணைத்தால் ரக்க்ஷாபந்தன். அதாவது பாதுகாப்பான ஒரு பிணைப்பு’ ன்னு அர்த்தம். தீய விஷயங்களில் இருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், சகோதரர்களின் நல்வாழ்வு, நீண்ட ஆயுளுக்காக இறைவனிடம் வேண்டுதல் செய்து, சகோதரிகள் கட்டும் ரட்சையே, ரக்க்ஷாபந்தன் ராக்கி என்று அழைக்கப்படுகிறது. இக்கயிறு சாதாரண மஞ்சள் நூலா இருந்தாலும் சரி, இல்ல தங்கச்செயினில் வைரம் பதித்ததா இருந்தாலும் ஒரே பலன் தான். 
பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து முடித்து பூஜை செய்து, சாப்பிடாமலிருந்து, இனிப்பு வழங்கி, நெற்றியில் சிவப்பு நிற குங்குமத்தை இட்டு சகோதரர்களின் கைகளில் அலங்கரிக்கப்பட்ட ராக்கி கயிறை கட்டி,  அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவர். தன்னை வணங்கும் சகோதரிக்கு பரிசுகளை கொடுக்குறதோட அன்றிலிருந்து அவளின் பாதுகாப்புக்கு தான் இருப்பேன் என உத்தரவாதம் அளிக்கிறான். ராக்கி கயிறு கட்ட வயது வித்தியாசம், சாதி மத பேதமில்லை. சகோதரிகளே இல்லாத ஆண்களை ‘காட் பிரதர்ஸ்’ என்று குறிக்கும் விதமாக அவர்களுக்கு பல பெண்கள் ராக்கி கயிறு கட்டி பாசத்தை சொல்லாமல் சொல்கிறார்கள்.
ராக்கி கட்டும்போது சொல்வதற்கு என்று ஒரு மந்திரம் இருக்கிறது. வெறும் கயிறு கட்டுவதோடு இந்த சடங்கு முடிந்துவிடுவதில்லை...
யேன பத்தோ பலி ராஜா தானவேந்த்ரோ மகாபலாஹ்

தேன த்வம் ப்ரதிபத்நாமி ரக்ஷே மாசல் மாசல்.

(அசுரர்களின் அரசன் பலியைக் கட்டிய இந்தக் காப்புக் கயிறை நான் உனக்குக் கட்டுகிறேன். உன்னைக் காக்கும் இந்த ரக்ஷை இது விழாமல் இருக்கட்டும், விழாமல் இருக்கட்டும்.) 


மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் இந்த நாளை நாரியல், அல்லது, தேங்காய் பௌர்ணமி என்று கொண்டாடுகின்றனர். தேங்காய்களுக்கு மலர் சூடி, கடற்பயணம் சென்றவர்கள் பாதுகாப்பாக திரும்பி வர வேண்டிக் கொள்கின்றனர்.
குஜராத்தில் உள்ள சிவபக்தர்கள் இந்த நாளை பவித்ராபனா என்ற திருவிழாவாய் கொண்டாடுகின்றனர். கடவுள்களுக்கு தண்ணீர் நைவேத்யம் செய்து தம் தவறுகளை மன்னிக்க பிரார்த்தித்துக் கொள்கின்றனர். மத்திய பிரதேசம், சத்திஸ்கர் பகுதியில் உள்ளவர்கள் கஜரி பூர்ணிமா என்று கொண்டடுகின்றனர். வரும் விவசாயப் பருவத்துக்கான உழவுப் பணிகளைத் தாய்மார்கள் துவக்கி வைக்கின்றனர்.

சகோதர உறவுகள் வளர்ந்தால் சர்ச்சைகளுக்கு இடமேது? உலகிலேயே உயர்வான சகோதர உறவை வெளிப்படுத்தும் இத்திருநாள் குடும்பத்தைப் பாசப் பிணைப்பில் இணைக்கிறது. உறவின் பெருமை, மதிப்பு மற்றும் உணர்வுகள் இத்திருவிழாவின் சடங்குகளோடு இணைக்கப்பட்டிருப்பதால், நல்வாழ்விற்குத் தேவையான நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்ற அடிப்படை பாடத்தை நமக்கு போதிக்கிறது.

சகோதரர்கள் அனைவருக்கும் ரக்‌ஷாபந்தன் வாழ்த்துகள். பதிலுக்கு வாழ்த்து சொன்னா மட்டும் போதாது. பெருசா எதாவது ரிட்டர்ன் கிஃப்ட் பண்ணனும்..

நன்றியுடன்,
ராஜி. 

Tuesday, May 07, 2019

நன்றி மறப்பது நன்றன்று - பலராம ஜெயந்தி

தன் தங்கைக்கு பிறக்கும் எட்டாவது பிள்ளையால் தன் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து தன் ஆசை தங்கை தேவகியை கொல்ல செல்கிறான் கம்சன். தேவகிக்கு பிறக்கும் எட்டாவது பிள்ளையால்தானே உனக்கு ஆபத்து. எங்களுக்கு பிறக்கும் அத்தனை குழந்தையையும் உன்னிடம் கொடுத்து விடுகின்றோம் என்று கம்சனின் தங்கை தேவகியின் கணவரான வசுதேவர் வாக்களிக்கிறார். தேவகிக்கு பிறக்கும் ஆறு குழந்தைகளையுன் ஒன்றன்பின் ஒன்றாக வசுதேவன் கம்சனிடம் கொடுக்க கம்சன் அவைகளை கொன்றான். 

தேவகி ஏழாவது முறையாக கர்ப்பமுற்றாள்.  விஷ்ணு துயில் கொள்ளும் ஆதிசேஷன் தேவகி வயிற்றில் கருவானது.   தேவகி மிகுந்த மகிழ்ச்சியும், அதேசமயத்தில் துக்கமும் கொண்டாள்.   குழந்தை பிறந்ததும் கம்சன் அதைக் கொன்றுவிடுவானே என்ற வருத்தம் அவளை கவலைக்கொள்ளச் செய்தது. விஷ்ணுவின் கட்டளைப்படி யோகமாயை  ( யோகமாயை என்பது விஷ்ணுவின் சக்திகளில் ஒன்று.  எல்லா சக்திகளுக்கும் மூலாதாரம் இந்த மாயைதான். சர்வ அலங்காரம் பூண்டது இந்த மாயை.) சிறையிலிருந்த தேவகி வயிற்றிலிருக்கும் கருவை, ஆயர்பாடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோகிணி கருப்பைக்குள் இடம் மாற்றியதோடு, நந்தகோபன் மனைவியான யசோதையின் வயிற்றில் கருவானாள். தேவகியின் கருக்கலைந்தது என வசுதேவரிடம் கம்சன் தெரிவித்தார்.  கம்சனின் தொல்லை தாங்காமல்தான் கருக்கலைந்தது என அனைவரும் நம்பினர். 
 இதற்கிடையில்  ஆயர்பாடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரோகிணிக்கு ஆண்குழந்தை பிறந்தது. யதுகுல குருவான கர்கர் யாருக்கும் தெரியாமல் பசுமடத்தில் வைத்து சடங்குகள் செய்து ராமன் என பெயரிட்டார். ராமன்ன்னா சமிக்க செய்பவன்னு அர்த்தம். ராமன் வளர்ந்து வருகையில் பலசாலியாய் திகழ்வதை கண்டவர்கள் பலராமன் என அழைத்தனர்.  இதேவேளையில் கிருஷ்ணரும் அவதரித்தார். இருவரும் கோவர்த்தனகிரி மலை அடிவாரத்தில் மாடுகளை மேய்ப்பது வழக்கம்.
நரகாசுரனின் தம்பியான மயிந்தன் தன் அண்ணனின் மரணத்திற்கு பழிவாங்க க்ருஷ்ணனை கோவர்த்தனகிரி தேடி வந்தான்.  அங்கிருந்த முனிவர்கள், மக்களை துன்பப்படுத்தினான், பலராமனை கிருஷ்ணன் என எண்ணி, பலராமனின் உடைகளை கிழித்தெறிந்து வம்புக்கிழுத்தான் மயிந்தன். மரங்களை வேரோடு பிடுங்கி அங்கிருந்த கோபியர்கள்மீது வீசி வம்புக்கிழுத்தான். இதைக்கண்ட பலராமன் கோபங்கொண்டு மயிந்தனோடு சண்டைக்கு சென்றார். பலராமனை கட்டிப்பிடித்து கைமுட்டியால் அடித்தான் மயிந்தன். பலராமன் தன் கைமுட்டியால் மயிந்தன் தலையில் ஓங்கி ஒரு கொட்டு கொட்டினார். வாயிலும், மூக்கிலும் ரத்தம் சிந்தி மயிந்தன் விழுந்து இறந்தான். இதுப்போல பலராமன் கிருஷ்ணரோடு சேர்ந்து பல அசுரர்களை வதம் செய்து கிருஷ்ணரோடு வளர்ந்து வந்தார்.
ரைவத நாட்டின் மன்னனான ரைவதன் மகள் ரேவதியை மணந்தார். தன் மகளான வத்சலையை துரியோதனனுக்கு மணமுடிக்க விருப்பம் கொண்டு தன் தம்பியான கிருஷ்ணரிடம் இதுப்பற்றி விவாதித்தார் பலராமர். அண்ணா! நம் தங்கையான சுபத்ரை மகனான அபிமன்யுக்கு வத்சல்யையை கொடுப்பதாக முன்னொருமுறை தாங்கள் வாக்களித்தீர்களே! மறந்துவிட்டீர்களாவென கிருஷ்ணர் கேட்டார். மறக்கவில்லை கிருஷ்ணா! அன்று அரசனாய் இருந்தார்கள் அதனால் வாக்களித்தேன். இப்போது ராஜ்ஜியத்தை இழந்து காடுகளில் வாழும் இவர்களுக்கு எப்படி பெண் கொடுப்பது என மறுத்து, துரியோதனனுக்கு மணமுடிப்பதாய் வாக்களித்து விட்டார் பலராமன்.

கிருஷ்ணர் சுபத்ரைக்கு இவ்விசயத்தை தெரிவிக்க , சுபத்ரை தன் மகன் அபிமன்யுவிற்கு இவ்விசயத்தை சொல்ல, அபிமன்யு விரைந்து வந்து வத்சல்யை மணமுடித்தான்...  இந்த நிகழ்ச்சியால் கிருஷ்ணர்மீது கோபம்கொண்ட   பலராமர் தீர்த்த யாத்திரை சென்றார். இதைத்தான் கிருஷ்ணரும் எதிர்பார்த்தார். பலராமன் இருந்திருந்தால் குருஷேத்திர போரின் போக்கே மாறிவிடும் என்பதை கிருஷ்ணர் உணர்ந்திருந்தார். 

குருஷேத்திர போர் முடிந்து 36வது வருடம். துவாரகைக்கும் விஸ்வாமித்திர முனிவர் வருகை புரிந்தார். அவரின் கோவம் தெரியாது விளையாட்டுத்தனமாய் கிருஷ்ணனின் மகன்களில் ஒருவனுக்கு வயிற்றில் இரும்புதுண்டை கட்டி கர்ப்பிணி வேடமிட்டு பிறக்கப்போவது ஆணா?! பெண்ணா?!வென  வினவ, விஸ்வாமித்தரர் கோபம்கொண்டு, பிறப்பது ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந்தாலும் அவற்றால்தான் உங்கள் குலம் அழியும்ன்னு சாபமிட்டார். இதைக்கேள்விப்பட்ட பலராமர், குருதேவர் அறிவுரைப்படி அந்த இரும்புத்துண்டை தூளாக்கி   கடலில் எறிந்துவிட்டார். இருப்பினும் அந்த பொடிகளால் உண்டான செடிகளை கொண்டே யதுகுலம் முடிவுக்கு வந்தது.

யதுகுலம் முடிவுற்றதையும், கிருஷ்ண அவதாரம் முடியப்போவதையும் உணர்ந்த பலராமர் யோகநிலையில் அமர்ந்தார். யோகத்தின் துணைக்கொண்டு தன் உடலை அழித்து வெள்ளை பாம்பாய்  உருக்கொண்ட அவர் ஆத்மா கடலில் கலந்தது.  தன் அண்ணனான பலராமனுக்கு சடங்குகள் செய்வித்து கிருஷ்ணரும் வேடன் இட்ட அம்பால் தன் அவதாரத்தை முடித்துகொண்டார்.


ஒருமுறை, நாரதர் விஷ்ணுவிடம், ஐயனே! நீங்கள் துயில் கொள்ளும் சாதாரண பாம்பான ஆதிசேசனை கிருஷ்ண அவதாரத்தில் உங்கள் அண்ணனாக பிறக்க செய்து, அவர் கால், கைப்பிடித்து பலவாறாக சேவை செய்த காரணமென்ன என கேட்டார்.   நாரதா! ஒருமுறை என் காலில் விழுந்து என் பாதுகையை வாங்கிய பரதனுக்கு கிடைத்தது 14 வருட அரச யோகம். ஒரேமுறை என் காலில் பட்டதன் விளைவு கல்லாய் இருந்த அகலிகையின் சாபம் நீங்கியது. ஆனால், சதா சர்வக்காலமும் ராம அவதாரத்தில் அண்ணாவென என் காலடியில் கிடந்த லட்சுமணனுக்கு நான் எதுவுமே செய்யவில்லையே!! அதனால்தான், லட்சுமணனாய் அவதரித்த ஆதிசேசனை பலராமனாய் பிறக்க செய்து அவன் கால்பிடித்தேன் என பதிலுரைத்தார்.  
கலியுகம்  ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே கிட்டத்தட்ட கிமு 3100 ஆண்டுகளுக்கு முன்னமயே கிருஷ்ணரும், பலராமனும் கம்சனின் வேண்டுகோளுக்கிணங்கி, அவன் அரசவைக்கு சென்று பல்வேறு மல்லர்களுடன் மோதி அவர்களை வானில் சுழற்றி எறிந்து, கடைசியில் கம்சனையும் அழித்ததை நாம கேள்விப்பட்டிருக்கோம். இதுக்கு  கம்ச சானூர மர்த்தனம்ன்னு பேரு. இன்றைய மல்யுத்தத்துக்கு இதுதான் முன்னோடி. மல்யுத்த சண்டையில் பலராமன் பேர்பெற்றவர். மல்யுத்த தந்தைன்னு பலராமனுக்கு பேர் வைக்கலாம்.  ஆனா, இந்தியன் கண்டுப்பிடிப்பை வெளிநாட்டுக்காரன் சொன்னாதானே நாம ஒத்துக்குறோம்!!!
இறைவனின் பாதங்களில் சரணடைந்தால் எல்லா வளமும் பெறலாம்ன்றதை பலராம அவதாரம் நமக்கு உணர்த்துது. இத்தனை பேரும், புகழும் பெற்ற ஆதிசேஷனான பலராமனின் அவதார தினம் இன்று. பலராமனை வணங்குவோம்.. பலசாலியாய் இருப்போம்..


நன்றியுடன்,
ராஜி. 

Wednesday, March 20, 2019

வண்ணங்கள் நிறைந்து வழியும் ஹோலிப்பண்டிகை

மனிதனின் பருவக்கால மாற்றத்தை விழாக்கள் எடுத்து கொண்டாடுவது இயல்பு. ஆனா, இயற்கையோட பருவக்கால மாற்றத்தை வரவேற்கும் விதமான ஒரு கொண்டாட்டம்தான் ஹோலி பண்டிகை என்கிற அரங்கபஞ்சமி.
இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளில் குறிப்பிட்ட இனத்தவரால் இப்பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுது.குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே  ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும்.  இந்த பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். பனிக்காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். விவசாயிகள் அறுவடை முடித்து மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள். இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.
கிருஷ்ண பகவான் தன் இளமை பருவத்தில் இப்பண்டிகைய கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இப்பொழுதும் ஹோலிப் பாடல்களில் கிருஷ்ணரின் லீலைகளையும், குறும்புகளையும் விவரித்து பாடுவர். இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு. இந்த பண்டிகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, 'பிச்கரிஸ்' என்னும் வண்ண நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயில், 'குலால்' என்னும் பல வண்ண நிறங்களில் இருக்கும் சிறுசிறு துகள்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்வர்.
ஹோலி பண்டிகையின் மற்றொரு வரலாறு ;
இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழவேண்டும் என பேராசை கொண்டு கடுந்தவம் புரிந்து இப்படிப்பட்ட மரணம்தான் வேண்டும் என தவம் செய்து வரம் வாங்கி, பலவிதமான அட்டூழியங்களில் ஈடுபட்டான்.  இரணியனின் மகன் பிரகலாதனே அதை எதிர்த்தான். பிரகலாதன்,  மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான். இதற்கு ஒரு வழி காண நினைத்த இரணியன் தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான். 
ஹோலிகா, நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள். எனவே, தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன், பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான். இதனால், பிரகலாதன் நெருப்பில் எரிந்து விடுவான் என்றும் இரணியன் நினைத்தான். ஆனால் மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள். இதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர். ஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடுகின்றனர்.
ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல்  மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னிதேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படும். அப்போது ஹோலிகா தகனமாவதை ஒட்டியும்,  பிரகலாதன் உயிர் பெற்று எழுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாகக்குரல் எழுப்புவார்கள். தேங்காயுடன் பூஜை செய்யப்பட்ட இனிப்பு வகைகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள்  மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளைத் தூவி, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம். 
உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மற்றும் பிருந்தாவனத்தில் தன்னைவிட ராதை சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதாக கண்ணன் எண்ணி கவலைப்பட, க்ருஷ்ணனின் வருத்தத்தை போக்க கோகுலவாசிகள் க்ருஷ்ணன்மீது வண்ணப்பொடிகளை தூவி விளையாடினர். அவர்கள் இருவரும் பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் விளையாடும்போது, ராதையின் மீது கண்ணன் விளையாட்டாக கலர் பொடிகளை பூசி மகிழ்கிறான். கண்ணனை ராதை செல்லமாக அடித்து விளையாடுகிறாள். இதை கொண்டாடும் விதமாக கணவன்&மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும்போது, கணவனை தன்னிடம் உள்ள துணியால் மனைவி அடித்துக் கொண்டே இருப்பாள். கணவன் எவ்வளவு அடி வாங்குகிறானோ, அந்தளவுக்கு தன்மீது மனைவி பிரியமாக இருக்கிறாள் என்று மகிழ்கின்றனர்.
சைவ சமயம் சார்ந்த மற்றொரு வரலாற்றை பார்ப்போம்...

ஒரு முறை மலைமகளான பார்வதி தட்சனுக்கு மகளாகப் பிறந்தார். அப்போது சிவனை கணவனாக அடைய வேண்டி தவம் இருந்தாள். சிவனும் அவரது தவத்தை மெச்சி, பார்வதியை மணக்க தட்சனிடம் பெண் கேட்டார். சுடுகாட்டில் வசிக்கும் உனக்கு என் பெண்ணை தரமாட்டேன் என தட்சன் ஆணவத்துடன் கூறினான். இதனால் கோபம்கொண்ட சிவப்பெருமான் தன்னிலை மறந்து தவம் செய்யத் தொடங்கினார். உலக இயக்கங்கள் அனைத்தும் நின்றுவிட்டன. தேவர்களும் முனிவர்களும் செய்வதறியாது திகைக்க, மகாவிஷ்ணுவோ மன்மதனை அழைத்து மன்மத பாணம் விடுமாறு கூறினார். மன்மதன் விட்ட அம்பு சிவபெருமானை சீண்டியது. தனது தவத்தை கலைத்ததால் கோபம் கொண்ட சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். பின்னர் பார்வதி மீது மையல் கொண்டு, அவரை திருமணம் செய்தார். 
இதைத் தொடர்ந்து, தங்கள் இருவரையும் சேர்ப்பதற்காகவே எனது கணவர் மன்மதன் உதவி செய்தார். அவரை மீட்டு தாருங்கள் என்று மன்மதனின் மனைவி ரதி வேண்டினாள். அவளது கோரிக்கைக்கு சிவபெருமான் செவிசாய்த்து மீண்டும் மன்மதனை உயிர்த்தெழ செய்தார். இந்த நிகழ்வையொட்டியே ஹோலி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 இத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகையை காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் தினமாகவும் கொண்டாடுகிறார்கள். தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை வரவழைத்து, அவர்கள் முகங்களில் சாயங்களை பூசி, தங்களின் அன்பை வெளிப்படுத்துகின்றனர். மொத்தத்தில், அனைத்து தரப்பு மக்களும் புன்னகையுடனும் சகோதரத்துவத்துடனும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழும் தினமாக இந்த ஹோலி பண்டிகை அமைகிறது.வடமாநிலங்களில் மிக சிறப்பாக கொண்டாடுவதைப் போல், தென்னிந்தியாவில் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து நாமும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம்.


மீள்பதிவு..
நன்றியுடன்,
ராஜி.

Wednesday, September 19, 2018

கர்ணனும், அவன் வாரிசுகளும் வீழ்ந்த கதை - தெரிந்த கதை தெரியாத உண்மை


பலவித திருப்பங்களை கொண்டது மகாபாரத கதைகள் என்பதை நமது முந்தைய பதிவுகளின் மூலம் பார்த்தோம்.  அதில் அர்ஜுனன் தன் மகனால் கொல்லப்பட காரணம் என்ன என்பது பற்றி பாகம் 1 ,பாகம் 2  பதிவுகளில்  பார்த்தோம் .அதனுள்ளும் ஒரு கிளைக்கதை இருக்கிறது என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இடியாப்ப சிக்கல் என்பது மகாபாரத கதைகளில்தான் இருக்கிறது ஒன்றிலிருந்து ,ஒன்று என வரிசையாக பல திருப்பங்களையும் சுவாரசியங்களையும் கொண்டது மகாபாரத கதை அதில் இன்று  கர்ணன் மகனை,  அர்ஜுனன் மகன் ஏன் கொன்றான் என்பது பற்றி இன்றைய தெரிந்த கதை தெரியாத உண்மைகளில் பார்க்கலாம் 
கர்ணனை கதை எல்லோருக்குமே தெரியும். இருந்தாலும் சுருக்கமாக... குந்திதேவிக்கு முனிவர் ஒருவர் தந்த வரத்தினால், குந்திக்கும், சூரியபகவானுக்கும் பிறந்த குழந்தைதான் கர்ணன். குந்தி திருமணமாகாமலேயே குழந்தையை பெற்றதால் ஊருக்கு அஞ்சி குழந்தையை பேழையில் வைத்து  ஆற்று நீரில்  அனுப்பி வைத்தாள். அப்படி அடித்து வரப்பட்ட பேழையை திரிதராஷ்டிரனின் தேரோட்டி அதிரதனால்  கண்டெடுக்கப்பட்டார். அதிரதனும் அவரது மனைவி ராதாவும்  குழந்தை இல்லாத காரணத்தால் கர்ணனை தங்களின் சொந்த மகனாகவே வளர்த்தனர். கர்ணனுக்கு அவர்கள் வாசுசேனா என்று பெயரிட்டு அழைத்தனர். மேலும், ராதேயன் என்றும் அழைத்தனர். கர்ணன் மற்றும் அவரது வளர்ப்பு பெற்றோர்கள் இடையேயான உறவானது தூய அன்பு, மரியாதை மற்றும் பாசம் ஆகியவற்றால் நிறைந்து இருந்தது.
அதிரன், ராதாவின் சொந்த  மகனாகவே  தனது கடமைகளை விருப்பத்துடன் கர்ணன் செய்துவந்தார். இருப்பினும் அவர் அங்க தேசத்தின் அரசனானது மற்றும் முடிவில் அவரது உண்மையான பிறப்பு பற்றிய ரகசியம் வெளிவந்தது .ஆயினும் கர்ணன் தனது இறப்பு வரையில் அவரது வளர்ப்பு பெற்றோருக்கு உண்மையானவராகவும் விசுவாசமுள்ளவராகவும் இருந்தார். கர்ணனுக்கு விருஷாலி மற்றும் பொன்னுருவி என்று இரண்டு மனைவியர் இருந்தனர் பின்னர், துரியோதனனின் வேண்டுகோளுக்கிணங்க சுப்ரியா என்னும் பெண்ணை திருமணம் முடித்தார். சுப்ரியா துரியோதனன் மனைவி பானுமதியின் நெருங்கிய தோழி ஆவார். மூன்று மனைவிகள் மூலம் கர்ணனுக்கு பல மகன்கள் இருந்தனர். அதில் முக்கியமான பத்துபேர்கள் மட்டுமே உலகறியும் வண்ணம் இருந்தனர்.  அவர்களின் பெயர்கள் முறையே விரிஷேசன், சுதாமா, விரிஷகேது, சித்ரசேனா, சத்யசேனா, சுசேனா, சத்ருஞ்சய, திவிபாதா, பனசேனா மற்றும் பிரசேனா. 
மகாபாரத போரில் பாண்டவர்களின் வீரமும், கண்ணனின் சூழ்ச்சியும்  பாண்டவர்களுக்கு பெரிய வெற்றியை தேடித்தந்தது என்றாலும், முடிவில் பாண்டவர்கள் பெற்றது ராஜ்ஜியமாய் இருந்த போதிலும், அவர்கள் இழந்தது ஏராளம்.  ஐந்து புதல்வர்கள், அன்பு மகன் அபிமன்யு, மூத்த சகோதரன் கர்ணன், பிதாமகர் பீஷ்மர், சிறுவயது முதலே வழிகாட்டிய குரு துரோணர், பீமனின் மகன் கடோத்கஜன்,  அர்ஜுனனின் மகன் அரவான்,  என பாண்டவர்களின் இழப்புகள் நீண்டுக்கொண்டே செல்லும். இதில் கர்ணன் இறந்த பிறகு குந்தி வந்து அழுது புலம்பிய பிறகுதான் அவர் தங்களின் மூத்தவன்  என்பதை அறிந்து சொல்லவொண்ணா துயரத்திற்கு ஆளாகினர் பாண்டவர்கள். துரியோதனன்கூட  தன் ஆருயிர் நண்பன் கர்ணன், தன் எதிரிகளுடைய சகோதரன்  என்பதை அறிந்ததும், முன்பே இது தெரிந்திருந்தால் போரிலேயே ஈடுபட்டிருக்க மாட்டேனே! என   தன் நண்பனின் மரணத்தை நினைத்து அழுது துடித்தான்.
கர்ணன் பாண்டவர்களில் மூத்தவனாக இருந்தாலும், அவனது பிறப்பின் மர்மத்தினால், தன் திறமைக்கு அங்கீகாரம் இல்லாமல் ,கடைசிவரை செஞ்சோற்று கடனுக்காக உயிரை விட்டவன். பீஷ்மர் இருக்கும்வரை போர்க்களம் புகமாட்டேன் என சபதம் புரிந்த கர்ணன் பீஷ்மரின் மறைவுக்கு பின்னரே போர்க்களம் புகுந்து தன் வீரத்தால் பாண்டவ சேனைகளை துவம்சம் செய்தான். இந்திரன் வழங்கிய சக்தி எனும் ஆயுதத்தால்  கடோத்கஜனை கொன்றான். கர்ணனுக்கு முன்னர் பாண்டவர்கள் யாரும் தாக்கு பிடிக்கமுடியவில்லை. தருமன், பீமன், நகுலன், சகாதேவன் எல்லோரும் கர்ணனிடம் தோற்று கைதிகளாக ஆனபின்னரும், தனது தாய்க்கு கொடுத்த வாக்குறுதியினால் அவர்களை கொல்லாமல் கர்ணன் விட்டுவிட்டான். அவனது ஒரே இலக்கு அர்ஜுனன் மட்டுமே!அந்த அர்ஜுனனால்கூட கர்ணனை நேருக்குநேர் நின்று கொல்ல முடியாது என்பது கிருஷ்ணருக்கும் தெரியும். அவ்வளவு ஏன்?! பாண்டவ, கவுரவ சேனைகள் உள்பட எல்லோருக்குமே தெரியும். தனது குருவான துரோணரும், கர்ணனும் பரசுராமரின் நேரடி சீடர்கள் என்பது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் தெரியும். ஆகவே,  கர்ணன் தன்னை வெல்ல எவருமில்லா தன்னிகரில்லாத வீரனாக இருந்தான். பரசுராமர்கூட தன்னிடமிருந்த எல்லாக்கலைகளையும் கர்ணனுக்கு  கற்றுக் கொடுத்தார். பரசுராமர் கர்ணனை போர்க்கலை மற்றும் வில்வித்தை ஆகியவற்றில் தனக்கு நிகரானவராக அறிவித்தார். தன்னுடைய சிறந்த மாணவர்களில் கர்ணனும் ஒருவன் என்று அறிவித்தார் அதானல் கர்ணனின் பராக்கிரமத்தை அனைவரும் அறிவர்.
திரௌபதியின் சுயம்வரத்தில் நடந்த  கைக்கலப்பில் கர்ணனின் மகனான சுதமா இறந்தான் அதை நமது துரோகமே வடிவான குரு துரோணர் பதிவில் பார்த்தோம். குரு துரோணர் கௌரவ படைகளுக்கு தலைமை தாங்கி நடத்திய போரில் அன்று கர்ணனின் மகன்களான ஷத்ருஞ்ஜயா மற்றும் த்விபடா ஆகியோர் அர்ஜுனனால் கொல்லப்பட்டனர். பின்னர் இன்னொரு மகனான சுஷேனா குருஷேத்திர போர்க்களத்தில் பீமனால் கொல்லப்பட்டான். மற்றவர்களான சத்யசேனா, சித்ரசேனா மற்றும் சுஷர்மா நகுலனால் கொல்லப்பட்டனர். மஹாபாரத போரின் பதினாறாம் நாள், கர்ணன் அன்றைய போருக்கு தளபதியாக தலைமை பொறுப்பை ஏற்று யுத்தத்தை நடத்தினான். அந்த பதினாறாவது நாளில் கர்ணன் ஒற்றை ஆளாக அனைத்து பாண்டவர்களையும் வீழ்த்தினான். முதலில், பீமனை வீழ்த்தினான் கர்ணன்.  ஆனால் தனது தாய் குந்திக்கு செய்து கொடுத்த சத்தியத்தினால், பீமனை கொல்லாமல், ஏ ..பீமா! நான் உன்னை விட வயதில் பெரியவன் ,என்னை விட சிறியவயதில் இருக்கும் உன்னை கொல்வது கூடாது இது எனது குரு பரசுராமர் கற்றுக்கொடுத்தது.  ஆகையால் உன்னை கொல்லமாட்டேன் இங்கிருந்து சென்றுவிடு என்று பீமனை கொல்லாமல் விட்டுவிட்டான் கர்ணன் . 
அடுத்து தருமரையம் வீழ்த்தினான் கர்ணன், தருமனையும் கொல்லாமல் ஏ யுதிஷ்டிரா! உனது குரு உனக்கு கற்றுக்கொடுத்த வித்தை அனைத்தையும் மறந்துவிட்டாயா?! போ... முதலில் பயிற்சி எடுத்துவிட்டு பின்னர் சண்டையிட வா" என்று கூறி தருமனையும் உயிருடன் விட்டுவிட்டான் கர்ணன். அதன்பிறகு  நகுலன் மற்றும் சகாதேவன் கர்ணனின் முன்னே தாக்குப்பிடிக்க முடியாமல் தோற்று நின்றனர். அவர்களையும் கொல்லாமல் தனது தாய் குந்திக்கு அளித்த சத்தியத்தினால் தனது சகோதரர்கள் அனைவரையும் போரில் வீழ்த்தினாலும் கொல்லாமல் விட்டுவிட்டான். பின்னர், கர்ணன் தனது மாமனாரும்,தோரோட்டியுமான சல்லியனை அர்ஜூனனின்  தேர் இருக்கும் இடத்திற்கு எடுத்து செல்லக் கூறினான். அர்ஜுனனும், கர்ணனும் நேருக்கு நேர் சந்தித்தனர் .போர்க்களத்தில் இருவரும் ஆவேசமாக போரிட்டனர். போர்க்களமே இருவரின் யுத்தத்தை பார்த்து வியந்து நின்றது. அர்ஜுனனும் கர்ணனுக்கு எதிராக சளைக்காமல் போரிட்டான். ஆனால்,  அவனால்  கர்ணனின் வில் வித்தைக்கு முன்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை.  அங்கிருந்து அர்ஜுனனை, பகவான் கிருஷ்னர், அப்புறப்படுத்தி காப்பாற்றினார். தங்களது குரு துரோணாச்சாரியாரும் கர்ணனும் பரசுராமரின் நேரடி சீடர்கள். அதனால் அவர்களை எப்படி வீழ்த்த முடியுமென்பதை உணர்ந்து, துரோணரை எப்படி வெல்லமுடியாமல் சதியின் மூலம் கொன்றனரோ ,அதுபோலத்தான் கர்ணனையும் வீழ்த்த முடியும் என்பதை அர்ஜுனனும் நன்கு உணர்ந்திருந்தான்.  இங்கேதான் மாயக்கண்ணன் விளையாட ஆரம்பித்தான். அர்ஜுனனின் பாணங்கள் கர்ணனை ஒன்றும் செய்யமுடியாது அப்படியானால் அவனை வெல்ல சாதகமான வழிகளை நோக்கி கண்ணன் காய் நகர்த்த தொடங்கினான்.
உடனே அர்ஜுனனை கர்ணனின் முன்னிருந்து விலகி செல்லுமாறு தேரை ஓட்டிச்சென்று, கர்ணனின் மகனான வீரஷசேனனின் முன் கொண்டு சென்றார் அங்கே, தனது சகோதரர்கள் துஹ்ஷசேனா மற்றும் சித்ரசேனா ஆகியோர் நகுலனால் கொல்லப்பட்டதால் கடுங்கோபமுற்ற வீரஷசேனா நகுலனை கடுமையாக தாக்கினான். நகுலன் மற்றும் வீரஷசேனனுக்கும் இடையே பயங்கர யுத்தம் நடந்தது. வீரஷசேனா நகுலனின் குதிரைகளைக் கொன்று, நகுலனை அம்புகளால் தாக்கினான். இதனால் நகுலன் தனது தேரிலிருந்து இறங்கி, தனது உடைவாள் மற்றும் கேடயத்தை எடுத்துக்கொண்டு, வீரஷசேனாவை நோக்கிச் பாய்ந்து சென்றான். நகுலனுக்கு முன்னர் இருந்த பாதையில்  இரண்டாயிரம் குதிரைவீரர்களின் தலையை வெட்டிச் சாய்த்தான். வீரஷசேனா, நகுலன் அருகில் வந்ததும் வீரஷசேனா தனது உடைவாளை சக்கரம் போல் சுழற்றி நகுலனை நோக்கி ஆவேசமாக பாய்கின்றான். உடனே நகுலன் நான்கு பிறைச்சந்திர வடிவிலான முனைகளைக் கொண்ட அம்புகளைக் கொண்டு வீரஷசேனாவின் வாளை உடைகின்றான். ஆனாலும், தாக்கு பிடிக்கமுடியாத நகுலன் அங்குவந்த பீமனின் தேரில் ஏறி அவ்விடம் இருந்து அகன்றான். அப்பொழுது அர்ஜுனனின் தேரும் அருகில் வர , வீரஷசேனாவை கொல்லுமாறு, அர்ஜுனனிடம் நகுலன் சொல்கிறான் .
வீரஷசேனாவின் அருகில் சென்ற அர்ஜுனன் போர்க்களத்தில் உரக்க கத்தினான் ஏ ..கர்ணா! சக்ர வியூகத்தில் நிராயுதபாணியாக நின்ற என் மகன் அபிமன்யுவை எப்படி கொன்றாயோ!? அதேப்போல் இன்று உன்மகன் வீரஷசேனாவை கொல்வேன். முடிந்தால் நீயும் உன்படைகளும் அவனை காப்பாற்றி கொள்ளுங்கள் என அறைகூவல் விடுத்தான். யாரும் அருகில் இல்லை என அறிந்ததும், தன்னை காப்பாற்றி கொள்ள தானே களத்தில் இறங்கினான் வீரஷசேனா.  அர்ஜுனனுக்கே சவால் விடும் வண்ணம் பல்வேறு வகையான அம்புகளை விட்டு அர்ஜுனனை திணறடித்தான் வீரஷசேனா. அர்ஜுனனின் தோளில்  பத்து அம்புகளை குறிபார்த்து எய்தான். அர்ஜுனனால் அதை தடுக்கமுடியாமல் பத்து அம்புகளும் அர்ஜுனனது தோளில் பாய்ந்தன. அடுத்து, கிருஷ்ணரை நோக்கி அம்புகளை வீசினான்  வீரஷசேனா.  கிருஷ்ணரும் காயமுற்றார். உடனே,  அர்ஜுனன் கடுங்கோபத்துடன், அதேமுறையில் பத்து அம்புகளை ஒருசேர பூட்டி  வீரஷசேனாவைத் தாக்கினார். அதனால் தாக்குண்ட வீரஷசேனா படுகாயமடைந்தான். உடனே அஜுனன் கூரிய முனைகளை உடைய நான்கு பெரிய அம்புகளை நாண் ஏற்றி வீரஷசேனாவின் வில் மற்றும் அவனது இரண்டுகைகளையும் தலையையும் வெட்டி சாய்த்தார் . அதேநேரத்தில் கர்ணனும் அங்கே வந்தான். வீரஷசேனா கொல்லப்படுவதை தன் கண்ணால் பார்த்ததும் கடுங்கோபம் கொண்டு அர்ஜுனனை தாக்கினான் கர்ணன்
அடுத்தநாள் காலையில் கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடக்கும் போரை காண குருஷேத்திர போர்க்களமே ஆவலுடன் காத்திருந்தது. கிருஷ்ணர் அர்ஜுனனிடம், ஓ!பாண்டுவின் மைந்தனே! எதிரில் நிற்கும் கர்ணன் உன்னைவிட எல்லா வித்தைகளிலும் சிறந்தவன். இந்த பயங்கரமான யுத்தத்தில் சிறந்த கவனம் மற்றும் தெளிவு ஆகியவற்றைக் கொண்டே அவனைக் கொல்ல முடியும் ஆற்றலில் அவன் நெருப்புக்கு சமமானவன். வேகத்தில், அவன் மூர்க்கத்தனமான காற்றுக்குச் சமமானவன். சீற்றத்தில், அவன் தன்னையே அழித்துக்கொள்ளக் கூடியவன். வலிமையான பண்பில், அவனது உடல் அமைப்பில் சிங்கத்திற்கு ஒப்பானவன். அவன் உயர அளவில் எட்டு ரேட்னிக்களைக் கொண்டவன். அவரது கரங்கள் பெரியவை. மார்பு அகன்றது. அவன் வெல்லமுடியாதவன். அவன் உணர்ச்சிமிக்கவன். அவன் இங்கிருக்கும் வீரர்களில்  முதலாமானவன். அவன் மிகவும் நேர்த்தியானவன். போர்க்கலையின் ஒவ்வொரு செயல்பாட்டின்மீதும் வெறிபிடித்தவன், அவனை எதிர்த்தவர்களை  சிதறடிப்பவன்.அவனுக்கு நீ ஒரு சவாலாக இருக்கவேண்டும்.  அதை நீ கவனத்தில் கொள். வேறு யாராலும் அவனை வீழ்த்த முடியாது. கடவுளர்கள்கூட கவனத்துடன் போரிடவில்லையென்றால் அவன்முன் தோற்றுத்தான் போகவேண்டும். மூன்று உலகத்தின் அனைத்து வீரர்களும் ஒன்றிணைந்து சண்டை செய்தால் அந்த மாவீரனை வெற்றியடையலாம். ஆகையால் இந்த சண்டையில் மிகவும் கவனம் என்று அர்ஜுனனுக்கு கிருஷ்னன் அறிவுரை கூறினார். 
அன்று சூரியன்கூட காலையிலையே சீக்கிரமாக எழுந்து தனது மகன் கர்ணனின் யுத்தத்தை பார்க்க ஆவலுடன் காத்து இருப்பது போன்று இருந்தது . பதினேழாம் நாள் ,குருஷேத்திர போர்க்களமே ஆவலுடன் இருந்தது. இருவரின் யுத்தத்தை காண்பதற்கு, கர்ணன் எய்த அம்புகளின் வேகத்தை தாளாமல் அர்ஜுனனின் தேர் பல நூறு அடி பின்னுக்கு தள்ளப்பட்டது. கர்ணனின் வித்தையை பகவான் கிருஷ்ணர் வெகுவாக பாராட்டினார். இதைக்கண்ட அர்ஜுனன், ஏ... கிருஷ்ணா! எதிரியின் திறமையை பாராட்டுகிறாயே என்று அதிர்ச்சியடைந்தான். உடனே கிருஷ்ணர்,  .ஏ அர்ஜுனா!  கர்ணனின் தேர், கர்ணன் மற்றும் சல்லியன் ஆகியோரின் எடையை மட்டுமே தாங்குகின்றது.ஆனால் அண்டத்தின் மொத்த எடையையும் என்னுள் வைத்திருக்கும் நான் உன்தேரில் அமர்ந்துள்ளேன் மற்றும் தேர் கொடிமரத்தில் அனுமன் அமர்ந்துள்ளான். ஆனாலும் கர்ணனால் அதை எளியதாக நகர்த்த முடிகிறதே என்றார். இந்த இருகாரணங்களும் இல்லையென்றால், கர்ணன் அம்புகள் உனது ரதத்தை பூமிக்கு அப்பால் வீசியிருக்கும்" என்று கூறினார். போரில் கர்ணன் அர்ஜூனனின் வில்லின் நாணை பலமுறை அறுத்தான். ஆனால் அர்ஜுனனோ மிக குறுகிய நேரத்தில் வில்லின் நாணை திரும்ப கட்டுவதை கண்டு கர்ணன் அர்ஜூனனைப் பாராட்டினான். இருவரும் ஒருவரை ஒருவர் வியந்தபோதும் போர் அதி உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் தான் கர்ணனின் சாபம் வேலை செய்ய ஆரம்பித்தது.  முதல் சாபம். தனது குரு பரசுராமர் கொடுத்தது. கர்ணன் பரசுராமரிடம் வித்தையை கற்று கொள்வதற்காக பிராமணன் என்று பொய்யுரைத்ததற்கு, அவர்  கர்ணனுக்கு அதிகம் தேவைப்பட்ட பிரம்மாஸ்திரப் பயன்பாடு உள்ளிட்ட போர்த்திறன்கள் இக்கட்டான சூழ்நிலையில் அவரைவிட்டு நீங்க சாபமிட்டார். இருந்தாலும் கர்ணனின் திறமையைக்கண்டு, கோபத்தில் கர்ணனுக்கு தான் அளித்த சாபத்தை நினைத்து பரசுராமர் வருந்தினார். இருந்தாலும்  கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற முடியாது.  அவர் கர்ணனுக்கு பார்கவாஸ்திரம் என்ற தெய்வீக ஆயுதத்தை விஜயா என்றழைக்கப்பட்ட அவரின் தனிப்பட்ட வில்லுடன் பரிசளித்து கர்ணனை எக்காலத்திற்கும் அழியாத பெருமை மற்றும் அழியாத புகழைப் பெறவேண்டும் என்று ஆசிர்வதித்தார். இருந்தாலும் அதி உக்கிரமான இந்த வேளையில் கர்ணனின் வித்தைகள் அவனுக்கு சரியாக நினைவுக்கு வராமல் ,கர்ணனை தடுமாற வைத்தன.
இரண்டாவது சாபம் பரசுராமரின் ஆசிரமத்திலிருந்து கர்ணன் புறப்பட்டதும், குருவின் சாபத்தினால் கர்ணன் சில காலம் குழப்பமடைந்து காணப்பட்டார். இருந்தாலும் பயிற்சியை கவனமாக தினமும் செய்தார். அப்பொழுது காடுவழியாக சென்றபோது  ஷப்தவேதி வித்யா (சத்தத்தை கவனிப்பதன் மூலம் இலக்கைத் தாக்கும் திறன்) பயிற்சி செய்தபோது, அவர் தவறுதலாக காட்டு விலங்கு என்று எண்ணி ஒரு பசுவை அம்பால் எய்து அதனைக் கொன்று விட்டார். இந்த நிகழ்வு அந்தப் பசுவை வளர்த்த பிராமணருக்கு கோபத்தை ஏற்படுத்தி அவரும் கர்ணனுக்கு  சாபமிட்டார். அவர் ஒரு உதவியற்ற விலங்கைக் கொன்றதால், கர்ணனும் அதே போல் உதவியற்ற நிலையில் பகைவர் முன்பு கொல்லப்படுவாய் என்று சாபமிட்டார். மூன்றாவது பூமாதேவியின் சாபம், ஒருமுறை கர்ணன் அவரது தேரில் தனது அங்க தேசத்தில் சென்றுகொண்டிருக்கையில்,  ஒரு குழந்தை தனது பானையிலிருந்த நெய்யை   பூமியில் சிந்திவிட்டது.  தனது கவனமின்மையால் தனது சித்தி என்னை அடிப்பாள் என   பயந்து அழுதது. கர்ணனும் அந்த சிறுமியிடம்,  தான் புதிய நெய்யை அளிப்பதாகக் கூறினார். ஆனால், அந்தக் குழந்தை மண்ணில் கலந்த அதே நெய்தான் வேண்டும் என்றும் புதிய நெய்வேண்டாம் என்று கூறியது.   கர்ணன் அந்த சிறுமியின்மீது இரக்கம் கொண்டு ,மண்ணுடன் கலந்த நெய்யை தனது உள்ளங்கையில் எடுத்து பிழிந்து நெய்யைப் பிரித்து பானையில் திருப்பி ஊற்றினார். இந்தச் செயலின்போது, கர்ணன் வலியால் துடிக்கும் பெண்ணின் குரலைக் கேட்டார். அவர் தனது உள்ளங்கையைத் திறந்தபோது, அந்தக்குரல் பூமிதேவியின் குரல் என்பதை உணர்ந்தார். கோபம் மிகுந்த பூமாதேவி, கர்ணனை ஒரு சிறிய குழந்தைக்காக பூமித்தாய்க்கு மிகப்பெரிய வலியை அளித்ததற்காக தண்டித்தாள். எனவே, பூமாதேவி அவருக்கு, அவரது வாழ்வில் மிகவும் முக்கியமான் போரில், அதே வழியில் அவர் தனது தேரின் சக்கரம் மண்ணில் சிக்கி, அப்பொழுது உனது கரங்கள் பயனற்று போய், உனது எதிரிகளுக்கு பலம் சேர்ந்து நீயும் இதே வலியினால் எதிரிகளால் கொல்லப்படுவாய் என்று  சாபமிட்டார். ஆகவே, கர்ணன் மூன்று வேறுபட்ட மற்றும் தனித்தனி சூழ்நிலைகளில் சாபத்தைப் பெற்றுள்ளார். எதிர்பாராத விதமாக, இந்த சாபங்கள் அனைத்தும் குருச்சேத்திரப் போரில் முக்கியமான கட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்தது 
கர்ணனின் தேர்ச்சக்கரம் தரையில் சேற்றில் மூழ்கியபோது (பூமாதேவியின் சாபம் செயல்படத் தொடங்கியதன் விளைவு) அவர் தடுமாற்றமடைந்தார். அவரது குரு பரசுராமர் முன்னறிந்து கூறியது போலவே, அவரால் தெய்வீக ஆயுதங்களுக்கான மந்திரங்களை அவரால் நினைவுபடுத்திக் கண்டறியவும் முடியவில்லை. அவர் தேரிலிருந்து இறங்கி சக்கரத்தை அகற்றினார், அவர் அர்ஜூனனிடம் போர் விதிமுறைகளின்படி, தான் சரிசெய்துவிட்டு வரும்வரையில் கார்த்திருக்கக் கோரினார். கிருஷ்ணர் அர்ஜூனனிடன் அபிமன்யூவைக் கொல்லும்போது அதையேஅவன் மீறிய பின்னர், இந்த நேரத்தில் விதிமுறைகளைப் பற்றிக் குறிப்பிட கர்ணனுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார். கர்ணன் உதவியின்றி உள்ளபோதே கொல்லும்படி (பிராமணரின் சாபம் நடைமுறைக்கு வந்தது) அர்ஜூனனை கிருஷ்ணர் நிர்ப்பந்தித்தார். பகவான் கிருஷ்ணர் அர்ஜூனனிடம், போரின் இந்த சிக்கலான தறுவாயில் கர்ணனைக் கொல்லாவிட்டால், அவர் வேறு எப்போதும் அவரைக் கொல்லவும் முடியாது மற்றும் பாண்டவர்கள் போரில் வெல்லவும் முடியாது என்று கூறினார். எனவே, அர்ஜூனன் ஊழ்வினையின் படி தெய்வீக அம்பைப் பயன்படுத்தி கர்ணனைக் காயப்படுத்தினார்.ஏனெனில் அவர் அந்த முறையில் சாகவேண்டும் என்று பரசுராமரால் சபிக்கப்பட்டிருந்தார். அர்ஜுனன் அம்பு மாரி பொழிந்து கர்ணனை வீழ்த்தினான் .

உடனே அர்ஜுனன் அஞ்சலிகம் என்னும்  ஆயுதத்தைக் கொண்டு, கர்ணனின் தலையை நோக்கி ஏவினான். அஞ்சலிகத்தால்  வெட்டப்பட்ட கர்ணனின் உடல் பூமியில் விழுந்தது. அப்போது வீழ்ந்துவிட்ட கர்ணனின் உடலில் இருந்து ஓர் ஒளியானது ஆகாயத்தினூடாகக் கடந்து சென்று சூரியனுக்குள் நுழைந்தது. இதை அங்கிருக்கும் போர் வீரர்கள் அனைவரும் கண்டனர். போரினைத் தொடர்ந்து, வீழ்ந்தவர்கள் அனைவருக்கும் ஈமச்சடங்குகள் நிகழ்த்தப்பட்டது. குந்திதேவி கர்ணனுடைய  பிறப்பைப் பற்றி பாண்டவர்கள் ஐவரிடமும் கூறினாள். தாங்கள் கொன்றது  தங்கள் உடன்பிறப்பு என்று அறிந்து அதிர்ச்சியடைந்தனர். தருமர் தனது தாயின்மீது கடுங்கோபம் கொண்டு, இனிமேல் எந்தப் பெண்ணாலும் எந்த ரகசியத்தையும் காப்பற்ற முடியாது என்று பெண்களுக்கே சாபம் கொடுக்கிறார். கர்ணனின் சாவிற்கு முதல் காரணம் முனிவர் துர்வாசர் இரண்டாவது சூழ்ச்சிக்காரன் இந்திரன், கவச குண்டங்களையும் வாங்கிவிட்டு வண்டாக வந்து உடலையும் துளைத்து பரசுராமரிடம் கட்டிக்கொடுத்தவன். மூன்றாவது கர்ணனது குரு பரசுராமர். பொய்யுரைத்தமைய்க்காக சாபமிட்டார். நான்காவது பசுவை கொன்றதற்காக பிராமணனின் சாபம். ஐந்தாவது பூமாதேவியின் சாபம். ஆறாவது அவனது தாய் குந்தி.  அவள்தான் அர்ஜுனன் மேல் ஒருமுறைக்கு மேல் நாகாஸ்திரம் மாதிரியான சக்தியான ஆயுதங்களை பயன்படுத்தமாட்டேன். அர்ஜுனன் தவிர்த்த ஏனைய சகோதர்களை கொல்லமாட்டேன் என்று உறுதிமொழியை வாங்கினாள். ஏழாவது சல்லியன், போர் மிகமுக்கியமான கட்டத்தில் இருந்தபோது நடுவழியில் கர்ணனின் தேரை விட்டுச்சென்றது. எட்டாவது அர்ஜூனனை கர்ணனின் நாகாஸ்திரத்திலிருந்து காக்க கிருஷ்ணன் தேரை அழுத்தியது. உடனே, பகவான் கிருஷ்ணர், கர்ணன் தனது தேரை சேற்றிலிருந்து வெளியே கொண்டுவரும்போது அவரைக் கொல்லும்படி அர்ஜூனனை வற்புறுத்தியது.  இவையெல்லாம் சேர்ந்து கர்ணனின் உயிரை வாங்கியது .
அதேப்போல் போரின்போது, கர்ணனின் அம்பின் பலத்த அடியால் மயங்கி விழுந்த அர்ஜுனனை  கர்ணனால் பாதுகாக்கப்பட்ட நாக அரசன் ஆஷ்வசேன், தன்னுடைய இனத்தை அழித்த அர்ஜுனனுக்கு எதிராக கர்ணனிடம் தனது விஷத்தை அர்ஜூனனுக்கு எதிராகப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொண்டது. கர்ணன் அதை மறுத்து எந்த மனிதன்மீதும் பாம்பைப் பயன்படுத்துவது மனித இனத்திற்கு செய்யும் நம்பிக்கைத் துரோகம் என்று கூறி மறுத்தான் .இப்படியாக கர்ணனின் இறப்பு நிகழ்ந்தது கர்ணனது தியாகத்தால் என்பதை நன்கு உணர்ந்திருந்த அகமகிழ்ந்து, கிருஷ்ணர் கர்ணனுக்கு தனது கருட வாகனத்தில் தனது மனைவியர் ராதா மற்றும் ருக்மணி ஆகியோருடன் இணைந்து காட்சியளித்தார். பகவான் கிருஷ்ணர் அவர் விரும்பிய வரத்தை கேள். தருகிறேன் என்று கர்ணனுக்கு உறுதியளித்தார். ஆனால் கர்ணன், துரியோதனனுக்கு வெற்றியை அளிக்கும்படியும் அவரது படைகளுக்கு மீண்டும் வாழ்வு அளிக்கவும் கேட்கமுடியும்.  ஆனால், கர்ணன் அப்படி செய்யவில்லை. தன் இறப்புக்கு முன்னே தன் தாயை பார்க்கவேண்டுமெனவும்,  நான் அவள் மகன் என்று ஊரறிய அவள் உரைக்க வேண்டுமெனவும் நான் பல்வேறு பிறவிச்சுழலில் மீண்டும் மீண்டும் பிறக்காமல் பகவானின் பாதத்தை அடையவேண்டுமென  கோருகிறான்.
போரில் கொல்லப்பட்டது தங்களுடைய மூத்த சகோதரன் என அறிந்ததும் பாண்டவர்கள் அனைவரும் சொல்லவொண்ணா துயரத்தை அடைந்தனர். கர்ணனின் பிறப்பு இரகசியத்தை முன்னரே கூறாத தங்கள் தாய் குந்தியின்மீது கோபம் கொண்டனர், கர்ணனின் எல்லா புதல்வர்களும் போரில் கொல்லப்பட மீதம் இருந்தது விரிஷகேது மட்டுமே. போருக்குப்பின் தன் சிறிய தந்தைகளான பாண்டவர்களின் அரவணைப்பில் வளர தொடங்கினான். கர்ணனை தன் கையால் கொன்றதால் என்னவோ அர்ஜுனன் விரிஷகேது மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தான். சொல்லப்போனால் அபிமன்யுவின் இடத்தை விரிஷகேது நிரப்பினான். அர்ஜுனனே தன் தமையனின் மகனுக்கு ஆசானாய் இருந்து வில்வித்தையை கற்றுக்கொடுத்தான். விரிஷகேதுவும் தன் தந்தை கர்ணனை போலவே வில்வித்தையில் சிறந்து விளங்கினான். மேலும் கிருஷ்ணர் விரிஷகேது மீது அதிக அன்பு பாராட்டினார். விரிஷகேது அர்ஜுனனுடன் சேர்ந்து விரிஷகேது பல போர்களில் பங்குக்கொண்டு தன் வீரத்தை சிறப்பாய் வெளிப்படுத்தினான். மேலும் போரில் வெற்றிக்கொண்டு யவன தேசத்தின் இளவரசியை விரிஷகேதுவிற்கு மணம் முடித்தான். பல நாடுகளை வெற்றிகொண்ட அர்ஜுனனும் விரிஷகேதுவும் இறுதியில் நாக உலகத்திற்கு சென்றனர்.
அர்ஜுனனும், விரிஷகேதுவும் நாக உலகத்துக்கு சென்று போர் புரிந்தனர். அங்கு பப்புருவாகனன் என்ற வீரனிடம் போர்புரிந்தனர்.  தன் எதிரே இருப்பது தன் மகன் என்பதை அறியாத அர்ஜுனன் விரிஷகேதுவுடன் இணைந்து போர்புரிந்தான். போரில் பப்புருவாகனன் வில்லாற்றல் அர்ஜுனனையும்  விட மிஞ்சியவனாக இருந்தான். போரின் இறுதியில் அர்ஜுனனும், விரிஷகேதுவும் பாப்புருவாகனனால் கொல்லப்பட்டனர். இந்த கதையை நமது அர்ஜுனன் தன் மகனால் கொல்லப்பட காரணம் - தெரிந்த கதை தெரியாத உண்மை பாகம் 2 பதிவின் மூலம் பார்த்துவிட்டோம் ,அதுபற்றி விரிவாக எழுதவேண்டாம் தன் மகன் புரிந்த செயல் கண்டு அதிர்ச்சியடைந்த உலூபி தன் சக்தி மூலம் அதிசய நாகமணியை கொண்டுவந்தார். ஆனால் அதனை வைத்து ஒருவரைத்தான் உயிருடன் கொண்டு வரமுடியும் என்பதால் கிருஷ்ணருடைய ஆலோசனை பேரில் அர்ஜுனனை மீண்டும் உயிருடன் கொண்டுவந்தார். விரிஷகேது வீரமரணம் அடைந்து வீரசொர்க்கம் சென்றடைந்தான். தன் மரணத்திற்கு பிறகு விரிஷகேதுவிற்கு முடிசூட்ட நினைத்திருந்தார் யுதிஷ்டிரன் ஆனால் காலம் அர்ஜுனனுடைய மகன் கையாலேயே கர்ணனின் மிச்சமிருந்த ஒரே மகனின் உயிரையும் பறித்துவிட்டது. விதி வலியதுன்னு சும்மாவா சொல்றாங்க?!
நன்றியுடன்,
ராஜி