என்ன புள்ள நாள் கிழமை இல்லாம தலைக்கு குளிச்சிருக்கே?!

நம்ம பக்கத்து தெருவுல இருக்கும் ஹரின்ற குட்டி பையனை பாம்பு கடிச்சு ஹாஸ்பிட்டலில் இருந்தான்ல. அவன் இறந்துட்டான். அதான் அவனுக்கு அஞ்சலி செலுத்த போய் வந்து தலைக்கு குளிச்சேன். தூங்கும்போது பாம்பு கடிச்சு ஹாஸ்பிட்டல்ல அவஸ்தை பட்டு போய் சேர்ந்துட்டான். அவன் அம்மா பாவம். ஒத்தை பிள்ளை அவளுக்கு. அவ அழுவுறதை பார்க்க சகிக்கல. நட்ட நடு ராத்திரிங்குறதால முதலுதவி செய்ய முடியல. பகல்பொழுதா இருந்தா யாராவது கட்டு போட்டு விசத்தை வாயால உறிஞ்சு எடுத்திருப்பாங்க.
அதுலாம் தப்பு. அப்படிலாம் செய்யக்கூடாது. பாம்பு கடிச்சா என்ன செய்யனும்?! என்ன செய்யக்கூடாதுன்னும் தெரிஞ்சுக்கோ. பாம்பு கடிச்சதும் கடிப்பட்ட இடத்துக்கு மேல டைட்டா கட்டு போடுறது காலங்காலமா நடக்குற விசயம். அப்படி செய்யக்கூடாது. டைட்டா கட்டினா விசம் அந்த இடத்துலயே நின்னு அந்த இடம் அழுகி போகிட வாய்ப்புண்டு. அதனால, லேசா கட்டுப்போட்டா போதும். சிலர் கடிப்பட்ட இடத்தை கீறி ரத்தத்தை வெளில எடுக்க பார்ப்பாங்க. அப்படி செய்யுறதும் தப்பு. வாயால ரத்தத்தை உறியுறதும் தப்பு. அது விசத்தை இன்னொருத்தர் உடம்புல பாய வாய்ப்பிருக்கு. அதுமட்டுமில்லாம கடிப்பட்ட இடத்துல பாக்டீரியாவை அதிகரிக்க செய்யும். ஐஸ்பேக்லாம் வைக்கக்கூடாது. பாம்பு கடிப்பட்டவரை பதட்டமடைய விடாம ஆறுதலா பேசி ரிலாக்சா வச்சிருக்கனும். இது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா இப்படி செய்யுறது அவங்க ரத்த ஓட்டத்தை குறைக்க உதவும். இதனால விசம் உடம்புல பாயும் நேரம் குறைக்க உதவும். கடிப்பட்டவரை தூக்கிட்டு ஓடக்கூடாது. அலுங்காம, குலுங்காம பச்சை குழந்தை மாதிரி கொண்டு போகனும்.. கடிப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் வந்தால் அப்படியே வடிய விடனும், ரத்தத்தை கட்டுப்படுத்த முயற்சிக்க கூடாது. ஏன்னா, விசம் ஏறிய ரத்தம்தான் முதலில் வெளிய வரும். கடிப்பட்ட இடத்தை நிறைய தண்ணியும் சோப்பும் கொண்டு கழுவனும். ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போகும்போது படுக்க வெச்சுதான் கொண்டுபோகனும். பாம்பு முதலான விசக்கடிக்கு கவர்ன்மெண்ட் ஹாஸ்பிட்டலே நல்லது. தனியார் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டுபோறதா இருந்தா முதல்லியே போன்ல விவரம் சொல்லி பாம்புக்கடிக்கு ட்ரீட்மெண்ட் தருவாங்களான்னு கேட்டுடுறது நல்லது. இது வீண் அலைச்சலை தடுக்கும். பாம்பு கடிப்பட்டவர்கிட்ட கடிச்ச பாம்பு எப்படி இருந்துச்சுன்னும் என்ன பாம்புன்னும் முதல்லியே கேட்டு தெரிஞ்சுக்குறது நல்லது. அப்பதான் டாக்டர் சீக்கிரமாவும், சரியாவும் ட்ரீட்மெண்ட் கொடுக்க வசதியா இருக்கும்.

நாகபாம்பு இல்ல கருநாகம் கடிச்சிருந்தா பல்தடத்துக்கிடையில் ஒரு அங்குலம் இடைவெளி இருக்கும். விரியன் கடிச்சிருந்தா ஒன்னு இல்ல ரெண்டு மூணு பல்தடம் இருக்கும். வரிசையா கடிச்சி வச்சிருந்தா விசப்பாம்பா இருக்காது. அப்படியே விசப்பாம்பு கடிச்சிருந்தாலும் தோலை மட்டுமே கடிச்சிருக்க வாய்ப்புண்டு. என்ன இருந்தாலும் ஹாஸ்பிட்டல் கொண்டு போய் பார்த்துடுறது நல்லது. ஹாஸ்பிட்டல் தூரமா இருந்தா வாழைச்சாறை குடிக்க கொடுக்குறதும். கொம்பு மஞ்சளை தீயில் காட்டி சூட்டோடு சூடாய் கடிவாய்ல வைக்குறதும் விசம் பரவும் வேகத்தை கொஞ்சம் குறைக்கும். கடிப்பட்டவருக்கு வேப்பிலை சாப்பிட கொடுத்து அவருக்கு கசப்பு சுவை தெரிஞ்சா விசம் பரவலைன்னு முடிவு பண்ணிக்கலாம். தும்பை பூவும் இலையும் சேர்த்து இடிச்சு சாறெடுத்து குடிக்க கொடுக்கலாம். நல்ல பாம்பு கடிச்சா ரத்தம் சட்டுன்னு உறைஞ்சு, கண் இமை சுருங்கும், பேச்சு குழறும், கட்டுவிரியன் கடிச்சா கடிப்பட்ட இடத்தோடு வயிறும் சேர்ந்து வலிக்கும். கண்ணாடிவிரியன் கடிச்சா கடுமையான வலியும், வீக்கமும், மூச்சுத்திணறலும், வாந்தி சோர்வும், சிறுநீர், மலத்தோடு ரத்தம் வெளியேறும்.
ம்க்கும்.... வாரா வாரம் வரும் ராகு காலத்தையே நினைவுக்கு வச்சுக்க முடில. இதுல பாம்புக்கடிச்சா என்ன செய்யனும்ங்குறதுதான் நினைவுக்கு வருமாக்கும்...

அதுக்கு ஈசியான வழி சொல்றேன் பாரு. ரெண்டே ரெண்டு வரியை நினைவு வச்சுக்கிட்டா போதும்.. ராகு காலம், எமகண்டத்தை ஈசியா நினைவுல வச்சுக்கலாம்.
ராகுகாலத்தை நினைவில் வச்சுக்க... திருவிழா சந்தையில் வெளியே புறப்பட்டு விளையாட செல்வது ஞாயமா?
ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தை கொண்டு கிழமைய கணக்கிடனும். முதல் நாள் மட்டும் ராகு காலம் ஆரம்பிக்கும் நேரமான 7.30 to 9.00ன்னு மட்டும் நினைவு வச்சுக்கிட்டா போதும். அடுத்தடுத்த ஒன்றரை மணிநேரத்தை கணக்குல வச்சுக்கலாம்..
திருவிழா திங்கள் 7.30 to 9.00, சந்தையில் சனி 9.00 to 10.30, வெளியே வெள்ளி 10.30 to 12.00, புறப்பட்டு புதன் 12.00 to 1.30, விளையாட வியாழன் 1.30 to 3.00, செல்வது செவ்வாய் 3.00 to 4.30, ஞாயமா? - ஞாயிறு 4.30 to 6.00ன்னு நினைவு வச்சுக்கலாம்.
அடுத்து எமகண்டத்தை நினைவு வச்சுக்கும் வரியை சொல்றேன். விளையாட்டாய் புண்ணியம் செய்தாலும் திருவருளும், ஞானமும், சத்தியமும் வெளிப்படும்.... முதல் நாள் எமகண்டம் காலை 6.00 to 7.30ல ஆரம்பிக்குது. அதை நினைவில் வச்சுக்கிட்டு அடுத்தடுத்த ஒன்றரை மணிநேரத்தை கணக்கிட்டுக்கலாம்...
விளையாட்டாய் - வியாழன் 6.00 to 7.30..., புண்ணியம் - புதன் 7.30 to 9.00... செய்தாலும் - செவ்வாய் 9.00 to 10.30...., திருவருளும் - திங்கள் 10.30 to 12.00... ஞானமும் - ஞாயிறு 12.00 to 1.30.... சத்தியமும் - சனி 1.30 to 3.00.... வெளிப்படும் - வெள்ளி 3.00 to 4.30..., இந்த வழியாவது ஈசியா இருக்காப்பாரு..
ம்ம்ம்ம்ம்ம்ம் இந்த வழியை ட்ரை பண்ணி பார்க்குறேன்... இதை நினைவுல வச்சுக்குறது மட்டும் போதாது மாமா. எத்தனையோ மூட நம்பிக்கை இருக்குற மாதிரி மரம் வெட்டுனா புள்ள பொறக்காதுன்ற மாதிரி ஒரு மூட நம்பிக்கை இருந்தால் நல்லா இருக்கும்ல்ல.
என்னடி திடீர்ன்னு சுற்றுசூழல் மேல அக்கறை?!
அக்கறைலாம் ஒன்னுமில்ல மாமா. இருக்குற மரத்தைலாம் வெட்டிட்டா அப்புறம் எப்படி பிள்ளையார், நாகர், அம்மன்னு சாமி கும்பிடுறதாம்?! இந்த படத்துல இருக்குற மாதிரிதான் சாமி கும்பிடனும்...
அடிப்பாவி... சின்ன புள்ளைலாம் என்ன புத்திசாலித்தனமா பேசுது?! யோசிக்குது?! நீ மட்டும் இப்படியே உளறிக்கிட்டு திரி... இந்த குட்டிப்பையன் என்னமா பதில் சொல்லுறான் பாரு....
என்னை மட்டம் தட்டுறதே பொழப்பா போச்சு உங்களுக்கு... இரவு நேரங்களில் மலரும் பூக்களுக்குன்னு இருக்கும் சிறப்பு என்ன? இதுக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்....

நன்றியுடன்,
ராஜி.





















