கொடுக்குறவங்களுக்கு சந்தோசத்தையும், வாங்கிக்குறவங்களுக்கு எரிச்சலையும் கொடுக்கக்கூடியது எதுன்னு பார்த்தா அது அட்வைசாதான் இருக்கும். நம்மூர்ல கேட்காமயே கிடைக்கக்கூடியது அட்வைஸ்தான். வயசு, இன, மொழி பேதமில்லாம அள்ளி அள்ளி வாரி வழங்குவாங்க. அப்படி வழங்கும் எதிர்க்க இருக்கவுங்களுக்கு உதவுமா?! இல்ல காத்துல விடுருவாங்களா இல்ல கொலைவெறில இருக்காங்களான்னுகூட யோசிக்க மாட்டாங்க. கிலோ கணக்குல அட்வைசை நம்ப தலைல இறக்குவாங்க.
இந்த அட்வைஸ் நம்ம கைரேக, நிழல் மாதிரி நாம பொறந்ததிலிருந்து சுடுகாட்டுக்கு போற வரைக்கும் நம்ப கூடவே இருக்கும். சர்க்கரை தண்ணி கொடுக்காத, இந்த துணி போடாத, இந்த பவுடர் போடுன்னு நமக்கான அட்வைஸ் அம்மா, அப்பாக்கள் வழியா நிறைவேத்தப்படும். மத்தவங்க சொல்றதை புரிஞ்சுக்க ஆரம்பிச்ச பின், நிக்காத, நடக்காத, ஓடாத, இதை தொடாத, வாயில் விரல் வைக்காதன்னு டைரக்டா நம்மகிட்டயே அட்வைஸ் பண்ணுவாங்க. இன்னும் கொஞ்சம் வளர்ந்து ஸ்கூல் போக ஆரம்பிச்சதும் இப்படி அ போடாத, ழவை ஒழுங்கா சொல்லு, பல்பத்தை திங்காத, பென்சிலை தொலைக்காதன்னு அட்வைஸ் மாறும். இதுக்கப்புறம், அட்வைஸ் பாலினம் பார்த்து தரம் பிரிக்கப்படும். பையன்னா, ஒழுங்கா படி உன்னை நம்பிதான் குடும்பம் இருக்குன்னும், பொண்ணுங்கன்னா, வேலைலாம் ஒழுங்கா கத்துக்க போற வீட்டில் பெத்தவ என்னைதான் குறை சொல்வாங்கன்னும், பயலுங்கக்கூட சேராத, ஏரெடுத்தும் பாராதன்னு மாறும்.
பதின்ம பருவத்தை தாண்டிட்டா, ஆம்பிளைன்னா நல்ல வேலையை தேடிக்க, சிக்கனமா இரு, கார் வாங்கு, வீடு கட்டு, அம்மா அப்பாவை பார்த்துக்க. பொண்ணுங்கன்னா, வேலைலாம் செய், அடக்கமா இரு எதிர்த்து பேசாத, போற இடத்துல மாமியார் மாமனாரை எதிர்த்து பேசாத. மச்சினர், ஓரகத்தி, நாத்தனார்ன்னு அனுசரிச்சு போ. கல்யாணம் கட்டிக்கிட்ட ஆண்ன்னா, பொண்டாட்டி வந்ததும் அம்மா அப்பாவை மறக்காதப்பா. பொண்ணுங்கன்னா, பொறந்த வீட்டை மறந்து, புகுந்த வீட்டை உன் வீடா நினைக்கனும், காலைல எந்திரிக்கனும், அவங்க மனசுக்கோணாம நடந்துக்க. அந்த பொண்ணு கர்ப்பம் ஆனா, மெல்ல நட, பால் நிறைய குடி, பழம் சாப்பிடு, லேகியம் முழுங்கு, நிமிர்ந்து படுக்காத. குழந்தை பெத்தா, வாய கட்டு, குழந்தை தூங்கும்போதே எல்லா வேலையும் செஞ்சிடு. குழந்தை வளர்ந்தா ஆணுக்கு பசங்க வளர்ந்து வருது சிக்கனமா இரு, பேங்க்ல பைசா போடு. பொண்டாட்டி, பசங்கன்னு வந்த பிறகு எங்களைலாம் மறந்துட்ட, அக்காக்கு செயின் செய், அண்ணன் மகளுக்கு சீர் செய்,
பசங்க பெருசாகி கல்யாணத்துக்கு வந்திட்டா, ஆணுக்கான அட்வைஸ் நகை செய், வரண் பாரு. பொண்ணுக்கு பசங்க கல்யாணத்துக்கு வந்திட்டாங்க, அடக்கமா இரு. நீ மேக்கப் போடாத. பொறுப்பா நடந்துக்க... வயசான காலத்துல, ஆணுக்கு, இத்தனை காலம்தான் ஓடி ஓடி வேலை செஞ்சு அலுத்துட்ட, இனியாவது கோவில் குளம்ன்னு போயி வாழ்க்கைய எஞ்சாய் பண்ணு. உடலை பார்த்துக்க. சர்க்கரை பிபிலாம் குறைச்சுக்க, பென்சன், கையிருப்புலாம் எல்லாருக்கும் கொடுத்து காலி செய்யாம உனக்குன்னு கொஞ்சம் சேர்த்து வச்சுக்க. . பொண்ணுன்னா, ரிட்டையர்டா வந்திருக்குறவங்க மனசு ஒரு நிலையில் இருக்காது. அவரை பத்திரமா பார்த்துக்கோம்மா. அவருக்கு தேவையானதுலாம் செய். நீ இருக்கும்போதே உன் நகைகளை யார் யாருக்குன்னு பிரிச்சு கொடுத்துடும்மா... வயசான காலத்துல சும்மா உக்காராம பேரப்பசங்களுக்கு கதை சொல்லு, கறிகாய் நறுக்கி கொடு...
இந்த அட்வைஸ் படலம் இத்தோடு முடியல. நம் இறப்புக்கு பின்னும் தொடரும். ராமேஸ்வரத்துல போய் அஸ்தியை கரைச்சுட்டு வா. அப்பதான் அம்மாக்கு சொர்க்கம் கிடைக்கும். அமாவாசை அன்னிக்கு திதி கொடு அப்பதான் அவங்க பசிதீரும். அவங்க படத்தை இங்க மாட்டு. அதுக்கு மாலை போடுன்னு... இந்த அட்வைஸ் கோவில், பேங்க், ஸ்கூல், படிப்பு, வாழ்க்கைத்துணை, பேருந்து, ட்ரெயின், கடல், நதி, நாடு நகரம்ன்னு விடாது கருப்பு மாதிரி நம்மோடவே சுத்தும்.
என் அப்பா அம்மாலாம் எனக்கு அட்வைஸ் பண்ணதே இல்ல. ஒரேயடியாய் ஆர்டர்தான். என் அப்பா அடிக்கடி சொல்லும் அட்வைஸ் யாரையும் நம்பாத, லூசு மாதிரி பேசாத. என்னை கட்டுன மனுசன் சொல்லுறது அடக்கம் ஆயிரம் தப்பை மறைக்கும்.. என் அம்மா சொல்லும் அட்வைஸ் சும்மா லொடலொடன்னு பேசாத. இதைத்தவிர வேற எதும் எனக்கு அட்வைஸ் யாரும் பண்ணதில்ல. யோசிச்சு பார்த்தா, என் கெட்டதுக்குலாம் காரணம் இந்த பேச்சுதான் இப்ப புரியுது. அதனால, இப்பலாம் பேச்சை குறைச்சுக்கிட்டேன். அவசியப்பட்டா மட்டுமே கருத்து பரிமாறல்கள்.
அப்பா, அம்மா முதற்கொண்டு எல்லாருமே எனக்கு அட்வைஸ்ங்குற பேர்ல அவங்க கருத்தை திணிச்சதால, என் பசங்களுக்கு பெரும்பாலும் அட்வைஸ் பண்ணுறதில்லை. எனக்கு பதிலா, என் அப்பா அம்மா, வீட்டுக்காரர்ன்னு அந்த வேலையை பார்த்துப்பாங்க. அட்வைஸ் செஞ்சுட்டா மட்டும் அதுபடி நடக்க போறாங்களா?! அதான்.
பசங்களுக்கே அட்வைஸ் பண்ணாதவ, உங்களுக்கா பண்ண போறேன்.. அதனால, இந்த பதிவை யார் வேணும்னாலும் தொடரலாம்... மதுரை தமிழன் அண்ணா தொடர்பதிவு க்கான அழைப்பை ஏத்து பதிவும் போட்டுட்டேன். இப்ப சந்தோசமா?!
நன்றியுடன்,
ராஜி.










