Showing posts with label மார்கழி மாதம். Show all posts
Showing posts with label மார்கழி மாதம். Show all posts

Monday, December 17, 2018

வாழ்க்கையை வண்ணமாக்கும் வண்ண கோலங்கள் - ஐஞ்சுவை அவியல்

காலங்காத்தால என்ன வெட்டி முறிச்ச மாதிரி ஒய்யாரமா சோபாவில் உக்காந்து ரெஸ்ட் எடுத்திக்கிட்டு இருக்கே!.  பிள்ளைகளை அனுப்பனுமே! சமையல் செய்யலியா?!

ம் செய்யனும்.  இப்ப  மார்கழி  ,மாசமாச்சுதே! அதான் தெருவை அடைச்சு கோலம் போட்டு, கலர்பொடி தூவி முடிக்க ஒன்றரை நேரமாச்சுது. இடுப்புலாம் வலிக்குது மாமா. அதான் கொஞ்ச நேரத்துக்கு ரெஸ்ட். 

மார்கழி மாசத்துல மட்டும் ஏன்டி வாசலை அடைச்சு கோலம் போடுறாங்க?! 

மார்கழி மாசம் முழுக்க காத்துல ஏதோ ஓசோன் காத்து இருக்குதாம் மாமா. அதை சுவாசிக்கத்தான் இப்படி ஒரு ஏற்பாடுன்னு கேள்விப்பட்டிருக்கேன். 

கரெக்டாதான் சொல்லி இருக்கே. இந்துக்கள் கலாச்சாரத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. சில பழக்க வழக்கங்களின் பின் மறைந்துள்ள பல அறிவியல் அர்த்தங்கள் காலப்போக்கில் மறந்துப்போய் இந்தக்காலத்து பெண்கள் மூடநம்பிக்கைன்னு நிறைய விசயங்களை ஒதுக்கினாலும் கோலம் போடுறதை மட்டும் நம்ம பொண்ணுங்க இன்னும் ஒதுக்கல. அறிவியல் காரணம் புரிஞ்சு செய்யுறாங்களோ இல்லியோ! ஆனா, வீடு அழகா இருக்கவாவது விதம்விதமா போடுதுங்க. ஆனா புள்ளி வச்சு கோலம் போடாம ரங்கோலின்னு கிறுக்கி வைக்குதுங்க.  எது எப்படியோ கோலம் போடுதுங்களா?! அதுவரைக்கும் சந்தோசம். 


தொடர்ந்து  21 நாட்களுக்கு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் பழக்கவழக்கம் அதுக்கப்புறம் மறந்துபோகாம, நம்ம வழக்கத்துலயே வந்திடும். அந்த வகையில் மார்கழி முழுக்க அதிகாலையில் எழுவதை வழக்கமா வச்சிக்கிட்டா அதுவே பழக்கமாகி அதிகாலையில் எழுந்துப்போம். அதிகாலையில் எழுந்துக்குறதால பல நன்மைகள் உண்டாகும். சோம்பேறித்தனம் அண்டாது. உடலும் மனசும் ஃப்ரெஷ்சா இருக்கும். அந்தநேரத்துல ஆக்சிஜனைவிட ஓசோன் வாயு அதிகளவில் கலந்திருக்கும். இந்த ஓசோன் வாயு   காயங்களை ஆற்றவும், இதய, நுரையீரல், கண், தோல் மற்றும் மூட்டு நோய்களைக் குணப்படுத்தவும், வயோதிகத்தைக் குறைக்கவும் செய்யும்.
குளிர்காலத்தில் இழுத்து போர்த்திக்கிட்டு தூங்கத்தான் தோணும். இந்த மாசத்துல இயற்கையாகவே தூக்கமும், சோர்வும் சற்று அதிகமாகவும், வளர்சிதை மாற்றங்கள் (Basal Metabolic Rate) குறைவாகவும் உடலில் மாறும் என்பது அறிவியல் கண்டெடுத்த உண்மை. மாதம் முழுவதும் தொடர்ச்சியாக வைகறையில் நோன்பு நோற்கும்போது, மனித உடலுடன் இயைந்து விடுகிறது மார்கழி மாசத்தைய குளிர். ஆக, உடலிலும், உள்ளத்திலும் சுறுசுறுப்பை அளித்து, வளர்சிதை மாற்றங்களை சீரமைத்திட நமது முன்னோர்கள் தொடங்கிய ஏற்பாடுதான், விடியலுக்கு முன்பே வேக நடையுடன் கூடிய மார்கழி நோன்பும், பஜனையும்... 

ஓசோன் காற்று மண்டலத்தின் மேற்பகுதியில் அமைந்திருக்கும் stratosphereன்ற ஓசோன்வளியில் காணப்படும்.. இந்த ஓசோன், உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்கள் பூமிக்கு வராமல் வடிகட்டி ஒளியை மட்டும் பூமிக்கு அனுப்பும் வேலையை செய்யுது. காற்று மண்டலத்தில் நிறைந்திருக்கும் இந்த மாசுகளற்ற ஓசோன், சூரியனுக்குக் கீழுள்ள அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதுடன், விடியற்காலை வேளையில் வாக்கிங் போகும்போது, நுரையீரலுக்குப் புத்துணர்ச்சியும், சரும நோய்களிலிருந்து பாதுகாப்பும் அளிக்கும். இந்த  ஓசோன் படலம் எளிமையா எல்லோருக்கும் புரியவைக்கும்படியான ஒரு புராணக்கதை உண்டு. 
பாற்கடலில் அமுதத்தைக் கடைந்து,  அதைத் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பங்கிடும்போது ஏற்பட்ட சண்டையில் சூரியன் கோபங்கொண்டு, `` இனி நான் ஓரிடத்தில் மட்டும் நின்று, இந்த உலகைச் சுட்டெரிப்பேன்.." என சபதமெடுத்தார். ஏழுலகமும் அவரின் வெப்பம் தாளாமல் தவித்தது. அகில உலகத்தை காக்கவேண்டி, பிரம்மா, சூரியனுக்கும்., பூமிக்குமிடையில் ஒரு திரையை உண்டாக்க நினைத்தார். ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்ச், சிவப்பு என ஏழு நிறத்தாலான குதிரைகளை உண்டாக்கி சூரியன்முன் நிறுத்தி, அந்த தேருக்கு சாரதியாய்  கருடனின் அண்ணனான அருணனை அழைத்து, ``சூரியனை ரதத்தில் உட்காரவைத்து, நீ முன்னால் நின்று ரதத்தை ஓட்டுவாயாக..!" என சொல்ல அன்றுமுதல், வண்ணக்குதிரைகளும், தேரும், அருணனும் ஒரு கவசமாய் நின்று  சூரியனின் வெப்பம் பூமியில் நேரடியாய் விழாமல் பூவுலக ஜீவராசிகளை காப்பாற்றப்பட்டனர். சூரியன் முழுமையாய் வெளிவரும்முன் வானில் தோன்றும் வர்ணஜாலத்தையே அருணோதயம்ன்னு சொல்றோம். தவம், தியானம் மாதிரியான காரியங்களுக்கு உகந்த நேரமது. இதனால்தான் சூரியனுக்கு புத்திரகாரகன்னு பேர் வந்தது. 

அருணன் பத்தி இன்னொரு பதிவில் பார்க்கலாம். இப்ப மார்கழி மாசக்கோலம் பத்தி பார்க்கலாம் மாமா.  இப்பவே பதிவு நீண்டுட்டுதுன்னு குறை சொல்வாங்க.

எல்லா நாளிலும் எல்லா கோலத்தையும் போட்டுடக்கூடாது புள்ள. பிறந்த குழந்தையை தொட்டில்ல போடும்போதும், முதன்முதல்ல வீட்டுக்கு கூப்பிட்டு வரும்போது தொட்டில் கோலம் போடனும்.  சுபிட்சத்தை வரவைக்க ஹிர்தய கோலம், கல்யாணம் செய்து வரும் புத்தம்புது தம்பதிகளை வரவேற்க மனைக்கோலம்ன்னு.. வட்டக்கோலம், கம்பிக்கோலம், புள்ளிக்கோலம், தந்திரிக் கோலம், ரங்கோலி கோலம்ன்னு விதம் விதமா இருக்கு. ஆனா, இறப்பு நடந்த வீடு, திதி, அமாவாசை தினங்களில் வாசலில் கோலம் இடக்கூடாது.. கோலத்தை சுத்தி பார்டர் கோலம் போடுறதும், செம்மண் இழுப்பதும், தீய சக்திகள் அந்த கோலத்தினை தாண்டி அந்த வீட்டுக்குள் நுழையவிடாம தடுக்குறதுக்காகத்தான்.

கோலமென்பது வெறும் அழகுக்காக, புள்ளிகள், கோடுகளால் ஆனது மட்டுமில்ல. தெய்வீக சக்தியை வரவைக்கும் எந்திரமாகும். அதனாலதான் அவை வீட்டுவாசலிலும், பூஜையறையிலும் வரையப்படுது. மேலும் மார்கழியில் அதிகாலையில் கோலமிடுவதும் அவசியம்ன்னு நம் முன்னோர்கள் சொல்வர். அதற்கு காரணம் மார்கழி மாதத்தில் பூமத்திய ரேகையில் பல மாற்றங்கள் நிகழுமாம் மார்கழி அதாவது டிசம்பர் மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் முதல் நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கிற்கும் சூரியனின் ஓட்டம் மாறுகிறது. இந்த மாற்றத்தின்போது பூமினுடைய சக்திநிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மார்கழியில் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறது. இந்த சக்தி மாற்றத்தின்போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவே இந்த ஏற்பாடு. அதில் ஒரு வழிமுறைதான் இந்த கோலமிடுதல். காலையில் எழுந்து வாசலில் சாணம் பூசுவது, தூசி பறக்கும் மண்ணை திட்டமாக்குவதுலாம் கோலம் கலையாமல் இருக்க உதவுவதோடு நம உடலுக்கு ஒரு உடற்பயிற்சியாவும் இருக்கும். அதேநேரம்,  சாணம் ஒரு கிருமிநாசினியும்கூட. இது நம் வீட்டு வாசலில் இருக்கும் கிருமிகளை போக்கும்.

சூரிய உதயத்திற்குமுன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்கு தேவையான முழுமையான பிராணவாயுவை நம் உடல் முழுக்க பரவுது. இதனால் ரத்த ஓட்டம் சீராகுது. மேலும் அந்நேரத்தில் வாகன போக்குவரத்து இல்லாம ஓரளவுக்கு சுத்தமான காத்து சுவாசிக்க கிடைக்கின்றது. இது நாள் முழுக்க நம்மை சுறுசுறுப்பா வச்சிருக்க உதவுது.  குனிஞ்சு நிமிர்ந்து கோலம் போடும்போது இடுப்பெலும்பு வலுப்பெறுது.   கோலம் போடும்போது செருப்பு போட்டுக்கிட்டு கோலம் போடக்கூடாது. வளைந்து செல்லும் கோடுகள் இறுதியில் அழகான கோலத்தினை உண்டாக்கும். இது,  வாழ்க்கை நெளிவு சுளிவுகளை உணர்த்துது. அந்த நெளிவு, சுளிவுகளை பக்குவமாய் கையாண்டால் அழகான வாழ்க்கை கிடைக்கும் என உணர்த்துது.
புள்ளியிட்டு கோலம் போடும்போது நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுது. நம்முடையை சிந்தனை சிதறலையும் தடுக்கும் இது ஒருவித பயிற்சியாகும். மேலும் புள்ளிக்கோலம் போடும்போது புள்ளிகளை உற்று நோக்கும்போது கண்பார்வை அதிகரிக்குது. இதனாலதான் சாகும்வரைகூட சில பாட்டிங்க கன்ணாடி போட்டதில்ல.

அரிசிமாவுக்கொண்டு கோலம் போடுவது எறும்பு மாதிரியான சிறு பூச்சிகளுக்கும், குருவி மாதிரியான சிறு பறவைகளுக்கும் உணவாகுது. கோலம் என்பது மனிதனின் உடலுக்கு நன்மை அளிக்கும் அதேவேளையில் விலங்குகளுக்கும் உணவாகட்டும் எனற தத்துவம் இந்தியர்களின் பகுத்துண்டு வாழும் உயரிய பண்பினை காட்டுது.



கோலம் போடுறதால ஐந்து குணநலன்கள் பெண்களுக்கு கைவரும்.  

நேர மேலாண்மை..
என்னதான் திட்டமிட்டிருந்தாலும் காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது பலருக்கு குதிரை கொம்புதான். ஆனா, ஏதோ ஒரு காரணம் இருந்தால் நிச்சயம் எழுந்திருக்க தவறமாட்டோம். அந்தக் காரணம் கோலமாக வச்சுக்கலாம். ஒவ்வொரு கோலத்திற்கு எவ்வளவு நேரமாகும் என நேரத்தினை திட்டமிடும் வழக்கம் நம் அன்றாட நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு உதவும்.
2. படைப்பாற்றல்
கோலம் போடுறது என்ன கவிதையா இல்ல கதை எழுதுறதா இதுல படைப்பாற்றல் வெளிப்படன்னு   நினைக்கலாம். உண்மையில் அவற்றைப் போலவே ஒரு கலைதான் கோலம் போடுவதும். கோலப் புத்தகம் பார்த்து போடுவது, இணையதளங்கள் உதவியோடு சில நாட்களையே தள்ள முடியும். ஒரு கட்டத்தில் நாமே புதிதான கோலம் போட்டால் என்ன யோசனை வரும். அப்போது இதுவரை நாம் போட்டிருக்காத கோலம் என யோசிக்க தொடங்கும்போது, உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் படைப்பாளியையும் எழுப்பி விடுகிறீர்கள்.
3. சிக்கலைத் தீர்க்கும் பொறுமை ....
 32 புள்ளிகள் வைத்து, அதனை யொட்டி நேர்புள்ளி, ஊடு புள்ளிகள் வைத்து முடிப்பதற்குள்ளேயே முக்கால் மணி நேரமாகியிருக்கும். அதற்கு அடுத்து, கவனமாக பூக்கோலம் அல்லது சிக்கு கோலமாக போடுவோம். அதற்கு முக்கால் மணிநேரம். இந்த ஒன்றரை மணிநேரத்தில் கவனமும் நிதானமும் இருந்தால் மட்டுமே உங்கள் மனதில் இருக்கும் கோலம் வாசலுக்கு வரும். இதுவே தினசரி செய்யும்போது அந்த கவனமும் நிதானமும் உங்களின் இயல்பு குணமாக மாறிவிடும். இது இரண்டும் இருந்தாலே எவ்வளவு பெரிய சிக்கலையும் தீர்த்துவிடலாம்.
முடிவெடுக்கும் திறன்...
இன்று இந்த பூக்கோலமா?! சிக்கு கோலமா என்ற முடிவு எடுக்கிற திறனைச் சொல்லலை. சிறப்புத் தினங்களுக்கு ரங்கோலி ஸ்டைலில் புதிதாக ஏதேனும் முடிவு செய்வோம். அதற்கு எந்த டிஸைன் எல்லோருக்கும் பிடிக்கனும், என்ன கலர் கொடுக்கலாம்.. அது பொருத்தமா இருக்குமான்னு முடிவு செய்யுறோமில்லையா அதைதான் சொல்றேண்.  இது உங்களுக்கு ரசனையை மட்டும் கொடுக்கலை. சரியான இடத்தில் பொருத்தமான முடிவெடுக்கும் திறனையும் கொடுக்கும். அது நீங்கள் ஜவுளி கடையில் புடவை தேர்வு செய்வதிலிருந்து அலுவலகத்தில் எடுக்கும் முடிவு வரை நீளும்.
5. போட்டி மனப்பான்மை:

'நான் யாருக்கும் போட்டி இல்லை.. எனக்கு யாரும் போட்டி இல்லன்னு சினிமா டயலாக்குலாம் சொல்லாம நான் எந்த போட்டியை சொல்றேன்னு புரிஞ்சுக்கனும். ஆரோக்கியமான போட்டி சொல்றேன். நாம தினமும் கோலம் போடுவதைப் பார்த்து அக்கம் பக்கத்து வீடுகளிலும் கோலம் போட ஆரம்பித்துவிடுவார்கள். நல்ல பழக்கத்தை அவர்களும் தொடங்குவது நல்லதுதான். அவர்களைவிட சிறப்பான கோலம் போடும் மனநிலையை உங்களுக்கு தரும். இது, வேலை செய்யும் இடங்களிலும் பிரதிபலிக்கும். உங்களுக்கு பதவி உயர்வையும் பெற்றுத் தரும்
இனியும்  வீட்டு வாசல்ல ஸ்டிக்கர் கோலத்தை அலங்காரத்திற்கு ஒட்டாமல், அர்த்தமுள்ள அரிசி கோலத்தைப் போடலாம்.  கோலம் போட்டு முடியும் திசையை வைத்து கூட அன்றைய பொழுது எப்படி போகும்ன்னு சொல்வாங்க. கோலம் மேற்கு, கிழக்கு நோக்கி முடிந்தால் நல்லது. இப்படி கோலத்தினை பத்தி ஏகத்துக்கும் சொல்லிக்கிட்டே போகலாம். இனி கோலங்களை பத்தி அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம் புள்ள.

பார்க்கலாம் மாமா.. நான் போய் சமைக்க ஆரம்பிக்குறேன். பிள்ளைகளுக்கு டைமாச்சுது. நீ கோவிலுக்கு போய்ட்டு வந்து சாப்பிடு.
நன்றியுடன்,
ராஜி

Sunday, December 16, 2018

மார்கழியின் மகத்துவம் -1


“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்’ என வைணவமும், “போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்’ என சைவமும் இணைந்து போற்றும் அதி உன்னத மார்கழி மாதம் இன்று ஆரம்பம்.  பொதுவா, இரவின்போது பெய்யும் பனிப்பொழிவை விட, அதிகாலையில் பொழியும் பனிப்பொழிவானது நோய் உண்டாக்கும் தன்மையற்றதா இருக்கும். அதிகாலை வேளையில் உடலுக்கு தேவையான கதிர்களின் தாக்கம் அதிகமிருக்கும். வாகனங்களால் உண்டாகும் புகை நச்சு அதிகம் இருக்காது.   கார்த்திகையில் மாலையிலும், மார்கழியில் அதிகாலையிலும் விளக்கேத்தி வைப்பதும் நம் வழக்கம். அதுக்கு காரணம், கார்த்திகை மாதம் முதல் பனிப்பொழிய ஆரம்பிக்கும். வீட்டில் கதகதப்பை உண்டாக்கவே இந்த ஏற்பாடு. ஓசோன் வாயுக்கள் அதிகம் இருக்கும் அதிகாலை வேளையில் கோலமிடுவதால் பல சுவாச பிரச்சனைகள் தீரும்.  ஆனா, இப்பலாம் அதிகாலை எழ சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு நைட்டுலயே கோலம் போட்டுட்டு படுத்துடுறாங்க. அது தப்பான செயல். மார்கழி மாசத்தின் முக்கிய நோக்கமே அதிகாலையில் எழுவதும், பின்பனி நேரத்தில் காற்று மாசுபாடு இல்லாதபோது கோலமிட்டு இறைவனை வணங்குவதுமாகும். 


பூசணிப்பூ வைப்பதின் ரகசியம்..

அப்பலாம்,  கல்யாண புரோக்கர்கள் ,  மேட்ரிமோனியல் தளங்கள், திருமண தகவல் அமைப்புலாம் இல்ல.  வீட்டில் திருமணத்துக்கு தயாராக  பெண்ணோ இல்ல பிள்ளையோ இருந்தா,  அந்த வீட்டின் வாசலில்  மட்டும்தான் கோலத்தின்மேல் பூசணிப் பூ வைப்பாங்களாம்.. ஒட்டுமொத்தமா எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டாங்களாம்.  மார்கழி மாத அதிகாலையில் பஜனைப்பாடல் பாடிக்கிட்டு வர்றவங்க பார்வையில் இந்த பூசணிப்பூ தென்பட்டு, தகவல் அறிந்து, விசாரித்து, பேசி தை மாசம் கல்யாணத்தை முடிப்பாங்களாம். அதனாலதான் தைப்பிறந்தால் வழிப்பிறக்கும்ன்னு சொல் வந்துச்சாம்.  பூசணிப்பூ வைக்க இன்னொரு காரணம், இப்பூக்களிலிருந்து வரும் வாசமும் மகரந்தமும் பனிக்காற்றில் கலந்து கிருமிகளை கொல்லும் என்பதாலும்தான்.  
போன வருசத்து படம்..

மார்கழி மாதம் பீடை மாதம்ன்னு இப்ப சொல்றாங்க. ஆனா, அது அப்படி இல்ல. நமக்கு வீடு உள்ளிட்ட சகல செல்வமும்  பெற்று நம் வாழ்வில் பீடு நடைப்போட உதவும் மாதம் என்பதால் இதுக்கு பீடுடைய மாதம்ன்னு பேராம்.  காலப்போக்கில் அது மருவி பீடை மாசமாகிட்டுது. பீடுன்னா உயரிய, சிறந்த, உன்னதமான..ன்னு பொருள். இறைவனை வழிபட்டால், வாழ்வின் உன்னத நிலைக்கு செல்லலாம்ன்னு பொருள்படும். இந்த மாசத்தில் கரும்பு, நெல், மஞ்சள், காய்கறிகள்ன்னு அறுவடைக்காலம். வயல்ல பொழுது கழிக்கவும், விளைப்பொருட்களை விற்பனைக்கு அனுப்பவுமே சரியாய் இருக்கும். அப்படி இருக்க, மாமன் மச்சான் வீடுகளின் விசேசங்களில் கலந்துக்க முடியாதில்லையா?! அதுமில்லாம, இந்த மாசம் முழுக்க நிறைய ஆன்மீக விழாக்கள் வர்றதாலயும்தான் இந்த மாதத்தில் திருமணம் மாதிரியான சுப நிகழ்ச்சிகளை தவிர்த்தாங்க. சுப நிகழ்ச்சிகளை  நடத்தக்கூடாதே தவிர அதுக்குண்டான ஏற்பாடுகளை செய்யலாம்.   இந்த மார்கழி மாசத்தில்தான்  அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ஆண்டாள் கல்யாணம்,  ஆருத்ரா தரிசனம் மாதிரியான ஆன்மீக நிகழ்வுகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுது. 
போன வருசத்தைய படம்
வைணவ திருக்கோவில்களில் மார்கழிமாதம் முழுவதும் திருப்பாவை பாடுவாங்க.  திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலா ஆண்டாளின் திருப்பாவையைத்தான் இந்த மாசம் முழுக்க  திருப்பள்ளியெழுச்சிக்காக பாடுவாங்க. சகல சிவாலயங்களில் திருவெம்பாவை பாடல்கள்  திருப்பள்ளியெழுச்சியாக  இம்மாசத்தில் பாடப்படும். இந்த மாசத்துலதான் நல்ல கணவன் கிடைக்கனும்ன்னு பாவை நோன்பை வயசு பொண்ணுங்க இருப்பாங்க.  பாவை நோன்புன்னா, அதிகாலையில் அருகிலிருக்கும் நீர்நிலைகளில் நீராடி, அப்படியே பெருமாள் அல்லது சிவன் கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்வதாகும். இந்த நாளில் பால், வெண்ணெய், நெய் சேர்த்த உணவுகளை உண்ணாமலும், மையிடுதல், தலை அலங்காரம், என தன்னை அழகுப்படுத்துதலிலும் ஈடுபடாமல், முழுக்க முழுக்க இறை சிந்தனையிலேயே இருப்பதேயாகும்.
இன்றைய படம்
மாதங்களில் நான் மார்கழியாயிருக்கிறேன்னு கீதைல கண்ணன் சொல்றாப்ல. அப்ப மத்த பதினோரு மாதம் என்ன தக்காளி தொக்கான்னு சண்டைக்கு வர்றவங்களுக்கு பதில் இதோ...

மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம்ன்றது தேவர்களைப் பொறுத்தவரை  ஒருநாள்.  அந்தவகையில் கணக்கிட்டால்  நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு 2 மணிநேரம் மட்டுமே! ( 1 மாதத்திற்கு 2 மணி நேரம் வீதம் 12 மாதத்திற்கு 24 மணிநேரம் = 1 நாள்) இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வருகின்ற ஆறுமாதக்காலம் தேவர்களுக்கு பகல்பொழுது.  இந்தக்காலத்துக்கு உத்தராயணம்ன்னு பேரு. ஆடிமாதம் முதல் மார்கழிமாதம்வரை வருகின்ற ஆறுமாதக்காலம்  தேவர்களுக்கு இரவுப்பொழுது. இந்தக்காலத்துக்கு தட்சிணாயணம்ன்னு பேரு. தட்சிணாயணத்தின் நிறைவுப் பகுதி,  அதாவது, தேவர்களை  பொறுத்தவரை இரவுப்பொழுது நிறைவடையும் காலமான அதிகாலை 4 மணி  முதல் 6 மணி வரையான நேரமே மார்கழிமாதம்ன்னு கணக்கிட்டு சொல்றாங்க. இந்த காரணத்தினால்தான் தேவர்களை வரவேற்கும்விதமாக மார்கழி மாசத்து அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் வீட்டு வாசலில் பெண்கள்  வண்ணக்  கோலமிடுவதை வழக்கமா வச்சிருக்காங்க. 

ஜோதிடரீதியா சொல்லனும்ன்னா  மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி தோன்றும் மாதத்தை ‘மார்க்கசிர’ ன்னு  வடமொழியிலும்,  மார்கழின்னு தமிழிலும் சொல்றோம்.  இந்த மிருகசீரிஷ நட்சத்திரம் ம்ருகண்டு மகரிஷிக்கு உரியது. ஜோதிடப்  பிதாமகராகத் திகழ்பவர்  ம்ருகண்டு மகரிஷி. இவரது ‘ம்ருகண்டு சூத்ரம்’ மற்றும் ‘ம்ருகண்டு வாக்கியம்’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அந்நாளில்  பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. என்றும் சிரஞ்சீவியாக விளங்கும் மார்க்கண்டேயரின் தந்தை இந்த ம்ருகண்டு மகரிஷி என்பதும் மார்க்கண்டேயரின்  ஜென்ம  நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பதும் நம்மில் பலபேருக்கு தெரியாது. சப்த சிரஞ்சீவிகள் என்றழைக்கப்படும் அஸ்வத்தாமர், மகாபலி, வியாசர், ஹனுமான், க்ருபாசார்யர், பரசுராமர், விபீஷணர் ஆகிய ஏழு பேருக்கு  அடுத்தபடியாக  நேரடியாக சிரஞ்சீவிப் பட்டத்தைப் பெற்றவர் மார்க்கண்டேயர். தனது உயரிய பக்தியின் மூலமாக மரணத்தை வென்றவர். . மார்கழி மாதத்திற்கு  உரிய நட்சத்திரமான மிருகசீரிஷத்தில் உதித்த அவர், தனது 16வது வயதில் மரணம் நிச்சயம் என்பதை  உணர்ந்தும் இவ்வுலக சுகங்களை  நாடாமல் இறைவனை மட்டுமே சிந்தையில் கொண்டிருந்தார். தனது அபரிமிதமான பக்தியினால் சிவலிங்கத்தைக்  கட்டித் தழுவியிருந்த அவரைக் கொண்டு  செல்ல நினைத்த எமதர்மனை சிவபெருமான் வதைத்த கதை நமக்கு தெரியும்தானே?! மார்க்கண்டேய சரித்திரம்  மரணத்தை வெல்லும்.   அதனாலதான் நினைத்தது நிறைவேற, எதிரிகள் தொல்லை நீங்க  ம்ருத்யுஞ்ஜய ஹோமத்தை மட்டும் மார்கழிக்குன்னு காத்திருந்து செய்வாங்க. 
ஒருவரையொருவர் காணாமலே அவர்பற்றி பேசி அன்புக்கொண்டு அவர்களை அடைந்தது இருவர். அதில் ஒருவர் ஆண், இன்னொருவர் பெண்,  ராமனின் பராக்கிரமத்தை கேள்விப்பட்டு, அவர்பால் ஈர்க்கப்பட்டு ஆண்கொண்ட அன்புக்கு பக்தி, சேவகம்ன்னு பெயர்சூட்டி கடவுளாய் கொண்டாடப்படுது. பக்திக்கு இலக்கணமான  அனுமன் ஜனித்தது இந்த மார்கழியில்தான்.  காதால் கேட்டு பெண் கொண்ட அன்புக்கு காதல்ன்னு பேர் சூட்டி, அவள் நோன்பிருந்து அரங்கனை அடைந்தது இந்த மார்கழி மாதத்தில்.. மார்கழி மாசத்தில்  சூரிய பகவான் தனுசுராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர்மாதம்ன்னும் சொல்வாங்க. தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான். அதாவது,  குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும்  நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள்  உட்பட சத்திரியர்கள் யாரும் போர்த்தொழிலில் ஈடுபடமாட்டார்கள். அதனாலும் இந்த மாதத்தில் இறைப்பற்றுக்குன்னு ஒதுக்கி வச்சுட்டாங்க. 
இந்த மாசத்தில்தான்  மகாபாரத யுத்தம் நடந்தது. திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாசத்தில்தான். இந்திரனால் பெருமழை, வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மாசத்தில்தான். 
எங்க ஊர்லலாம் மார்கழி மாத அதிகாலையிலும், மாலையிலும் பஜனை பாடிக்கிட்டு வருவாங்க. அரிசி, பணம், கோவில் விளக்குக்கு எண்ணெய்ன்னு கொடுப்போம். பதிலுக்கு துளசியை பிரசாதமா தருவாங்க. இப்ப அதுலாம் இல்ல. ஆன்மீக மலர்ச்சிக்கு இந்த மாசம் உகந்தது. இத்தனை சிறப்பு வாய்ந்த  இந்த மாதத்தில் நாமும் அதிகாலை நேரத்தில்  மட்டுமாவது இறைவனின் மீது சிந்தனையைச் செலுத்துவோம்; வாழ்வினில் வளம் பெறுவோம்..!

மார்கழி மகத்துவம் தொடரும்....

நன்றியுடன்,
ராஜி

Tuesday, December 26, 2017

திருப்பாவையின் முதல் எட்டு பாடல்களும் அதன் விளக்கமும்...

மார்கழி மாசம்ன்னாலே பஜனையும், கோலமும்தான் முக்கியம். அத்தோடு, திருப்பாவை, திருவெம்பாவை பாடுவதும் முக்கியம். முப்பது பாடல்களை போட்டா பதிவு நீளும். அதனால ஒரு வாரத்துக்குண்டான திருப்பாவையும், அந்தந்த நாளில் நான் போட்ட கோலமும் வார இறுதியில் பதிவாக்கப்படும்.

மார்கழி 1ம் நாள்...

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.


முழு நிலவு நிறைந்த மார்கழி மாதத்தில் செல்வ வளம் நிறைந்த ஆயர்பாடியின் அழகிய சிறுமிகளே ! அழகிய அணிகலன்களை அணிந்த அணங்குகளே ! எழுந்திருங்கள்.
இன்று முதல் நாம் அதிகாலையில் நீராடப் புறப்படுவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதா பிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவனும், சூரிய, சந்திரர்களைப் போல பிரகாசிக்கும் திருமுகத்தை உடையவனும், நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் தர காத்திருக்கிறான்.
அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று கூறி ஆயர்பாடியில் வசிக்கும் தன்தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் கோதை நாச்சியார் .

மார்கழி 2ம் நாள்...

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்


விளக்கம்
இந்த உலகத்தில் வாழ்வதால் பாவை நோன்பு நோற்கப்பெரும் வாய்ப்பினை உடைய நாம் அனைவரும், பாவை நோன்பிற்காக செய்ய வேண்டிய செயல்களை கூறுகின்றேன், நீங்கள் அனைவரும் கேட்பீர்கள்...
பாற்கடலில் யோக நித்திரையில் ஆழ்ந்துள்ள பரமனின் திருநாமத்தை எப்போதும் பாட வேண்டும், நெய் பால் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தினமும் விடியலில் நீராடவேண்டும்; கண்ணுக்கு மை இட்டுக் கொள்வது, கூந்தலுக்கு மலர் சூடிக்கொள்வது போன்று நம்மை அழகு படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது; நமது முன்னோர்கள் தவிர்த்த தீய காரியங்களை நாமும் தவிர்க்க வேண்டும் பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வீணாக அடுத்தவர் மீது கோள் சொல்லக் கூடாது; குருகுலத்தில் பயிலும் மாணவர்களுக்கு தானமும், துறவிகளுக்கு பிச்சையும், அவர்கள் போதும் என்று சொல்லும் அளவுக்கு இட வேண்டும்; அவ்வாறு செய்த பின்னரும், நாம் புகழத்தக்க செயல்கள் ஏதும் செய்யவில்லை என்றும், இன்னும் செய்ய வேண்டிய நற்செயல்கள் உள்ளன என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும்; மேலே குறிப்பிட்டவாறு செய்ய வேண்டிய செயல்களைச் செய்தும், தவிர்க்க வேண்டிய செயல்களைத் தவிர்த்தும், நாம் உய்யும் வழியினை நினைத்தவாறே, பாவை நோன்பில் நாம் அனைவரும் ஈடுபடுவோமாக.

மார்கழி 3ம் நாள்...
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்:
நீங்காத செல்வம் நிறைந்து — ஏலோர் எம்பாவாய்.


விளக்கம்...
மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்த திருவிக்கிரமனின் நாமங்களைப் பாடி, நாம் நோம்பிற்கு நீராடினால் நாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம் மூன்று முறை மழை பெய்யும். (அதனால்) செந்நெல் வளர, நடுவே கயல் மீன்கள் துள்ளி விளையாடும். அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும். பருத்த முலைகளைப் பற்றி இழுக்க இழுக்க அசையாமல் நின்று வள்ளல்களை போல் பால் குடங்களை நிரப்பும் பசுக்கள் இருக்க குறைவற்ற செல்வம் நிறைந்திருக்கும்.

மார்கழி 4ம் நாள்....


ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்: ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.

மார்கழி 5 ம் நாள்...


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

மாயச்செயல்கள் செய்பவனை, வடமதுரையின் மைந்தனை, தூய நீர்கொண்ட யமுனையின் கரையில் வாழ்பவனை, ஆயர் குலத்தின் மணிவிளக்கை, தன் தாயின் பெருமையை உலகறியச் செய்த தாமோதரனை, தூயவர்களாக வந்து நாம் மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனதினால் சிந்தித்தால், செய்த பிழைகளெல்லாம் தீயினில் எரியும் தூசென ஒழியும். ஆகையால் பாடுங்கள்

மார்கழி 6ம் நாள்...

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
     வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
     கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை
     உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
     உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.
அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.

மார்கழி 7ம் நாள்...
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்"
கீசு கீசு என்று ஆனைச் சாத்தன் (செம்போத்துப் ) பறவை தங்களுக்குள்ளே பேசும் பேச்சரவம் கேட்கவில்லையா பேய்ப் பெண்ணே? பகலாகியும் இன்னும் உறங்குகிறாயே? காசு மாலைகளையும் தங்க மணி மாலைகளையும் அணிந்த வாசம் மிக்க கூந்தலையுடைய ஆயர்குலத்துப் பெண்கள் மத்தினால் ஓசையோடு தயிர் கடையும் அரவம் கேட்கலையோ? நீ இவர்களின் தலைவியான பெண்பிள்ளை ஆயிற்றே, நாராயணன் மூர்த்தி கேசவனைப் நாங்கள் பாடக் கேட்டும் நீ படுத்திருக்கிறாயே, ஒளியுடையவளே கதவைத் திறவாய்.. என்பாவாய்.

மார்கழி 8ம் நாள்...


கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து  உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்;  கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால்,
ஆவாவென்று ஆராய்ந்து அருள் — ஏலோர் எம்பாவாய்.
 கிழக்குத் திசையில்  வானம் வெளுத்துள்ளது. எருமைகள் சிறுது நேரம் பனிப்புல் மேய சிறு தோட்டங்களுக்குப் பரவின. கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி உன்னையும் அழைத்துச்செல்ல வாசலில் வந்து காத்திருக்கிறோம். குதூகலமுடைய பெண்ணே! எழுந்திரு. கண்ணனைப் பாடி நோன்பு மேற்கொள்வோம்.  குதிரையாக வந்த அசுரனை(கேசியை) வாயை கிழித்தவன்,  மல்லர்களைக் கொன்ற தேவாதிதேவன், அவனைச் சேவித்தால் நம் குறைகளை ஆராய்ந்து ஐயோ என்று இரங்கி வருவான்.
அடுத்த எட்டு பாடல்களை அடுத்த ஞாயிறு அன்னிக்கு பதிவு வரும்
ராஜி.