Friday, May 24, 2019

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்- புண்ணியம் தேடி


முருகன் அழகுக்கும், தமிழுக்கும் மட்டும் சொந்தக்காரனில்லை. ஞானத்துக்கும் அவன்தான்  சொந்தக்காரன். ஞானத்தை அள்ளி, அள்ளி தன் பக்தர்களுக்கு அளிப்பதால்தான்  அவனுக்கு சுப்ரமணியர் என பெயருண்டானது.  முருகனை நினைத்து பக்தியோடு வணங்குபவர்களுக்கு ஞானம் கிட்டும் என்பது அடியார்களது நம்பிக்கை. சுப்ரமணியருக்கு தமிழகத்தில் பல கோவில் இருக்கு. திருத்தணியில் அருளும் முருகனும்  சுப்ரமணியர்தான்.  

முருகன் சுப்ரமணியராக அருள்புரியும் தலங்களில் திருத்தணிகைக்கு அடுத்தபடியா புகழ் பெற்றது குன்றத்தூர் ஆகும்.  இக்கோவில் சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்திருக்கு.  

போரூரில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் அழகிய குன்றின்மீதிருந்து அருள்புரிகிறான். படிகட்டின் வழியாகவும், முடியாதவர்கள் வாகனங்களில்  செல்ல தனி பாதையென இரு பாதை உள்ளது. பல படங்களில் பாடல்,சண்டைக்காட்சிகள் இங்க படமாக்கி இருக்காங்க. மெட்டி ஒலி நாடகம் இந்த ஊரில்தான் எடுத்தாங்க. 

கீழிருந்து மலைமீதிருக்கும் முருகனை அடைய 80 படிகளில் ஏறி செல்லனும்.  எப்படிடா மலை ஏறப்போறோம்?! பேசாம வண்டிலயே மேல போய் இருக்கலாமோன்னு மலைத்து நிக்குறவங்களுக்கு வழியில் இருக்கும் வலஞ்சுழி வினாயகர்தான் சீக்ரெட் ஆஃப் தி எனர்ஜி. அவர் கொடுக்கும் எனர்ஜியோடு படியேறி போனால், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கொடிமரம் நம்மை வரவேற்கும். கொடிமரத்து முன்பு சாஷ்டாங்கமா வணங்கி முருகனை தரிசிக்க செல்லலாம். கொடிமரத்துமுன் விழுந்து வணங்குவதுக்கு காரணம், கொடிமரத்துக்குமுன் பலிபீடம் இருக்கும். அங்கு நமது கோவம், பொய், களவு, காமம் மாதிரியான தீய எண்ணங்களை இறைவன்முன் பலிகொடுத்து தூயவனாகிறேன்ன்னு சொல்லாம சொல்லத்தான்....
கருவறைக்குள் நுழையும்முன்  நம்மை வரவேற்கும் துவாரபாலகர்கள் கையில் வஜ்ரம், சூலாயுதமென முருகனுக்குரிய ஆயுதங்களே உள்ளது. கருவறையில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகன் காட்சியளிக்கின்றான். இக்கோவிலின் சிறப்பம்சம் என்னவெனில், ஒரே நேரத்தில் தம்பதி சமேதராய் மூவரையும் வணங்குவது மிகக்கடினம். காரணம், அவ்வாறு சிலாரூபாங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.  கருவறைக்கு நேராய் நின்று வணங்கினால் முருகன் மட்டுமே தெரிவார். ஒருபுறம் நின்று வணங்கும்போது வள்ளியுடன் மட்டும் முருகன் தெரிவார். அதற்கு எதிர்புறம் நின்று வணங்கினால் தெய்வானையுடன் மட்டும் முருகன் தெரியும்படி மூலவர் ரூபங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

திருமணத்தடைகளை நீக்குவதில் வல்லவர் இவர். ஒரு கல்யாணத்துக்கு இரு கல்யாணம் முடிச்சவராச்சே! தொழில் நுணுக்கம் தெரியுமில்லையா?! அதனால், நேர்த்திகடனாக, இவருக்கு திருமணம் செய்து வைப்பது, வஸ்திரம் சாத்துவதுன்னு இங்க நடக்குது.  இக்கோவிலில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை, காசி விசுவநாதர், விசாலாட்சி, பைரவர், நாகர், நவக்கிரக சன்னிதிகள்ன்னு இருக்கு. மூலவர் சன்னிதி மீதுள்ள விமானம் ‘ஷட்கோண’ அமைப்பில் அதாவது முருகனின் சடாட்சர மந்திர அலைகளுக்கு உகந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. கோவில் அமைந்துள்ள மண்டபத்தின் ஓரத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் நாகலிங்கேஸ்வரர் அருள் தருகிறார்.

திருமணத்தை நடத்தி வைப்பவன் குழந்தை பேற்றை தரமாட்டானா?! அதுக்கும் இங்க வேண்டுதல் வைக்குறாங்க. இங்கிருக்கும் அரச மரத்தில் தொட்டில்கட்டி வேண்டிக்கிட்டா குழந்தை பேறு கிடைக்கும். அவ்வாறு வரம் கிடைக்கப்பட்டங்க குழந்தையின் எடைக்கு எடை சர்க்கரை, வெல்லம், பழம்ன்னு காணிக்கை செலுத்துறாங்க.  குழந்தைக்கு உடல்நலமில்லாம இருந்தா, இங்க வந்து குழந்தையை கோவிலுக்கு தத்து கொடுத்துவிட்டு பின் குழந்தைக்கு ஈடாக தவிடு, வெல்லம் கொடுத்து வாங்கிட்டு போறாங்க. இங்கிருக்கும் வில்வ மரத்தினடியில் வில்வ வினாயகர் இருக்கார்.  அவரை வணங்கினால் படிப்பு வருமாம்! (என்னையும் என் அப்பா, அம்மா கூட்டி போயிருக்கலாம்... ம்ம்ம் இட்ஸ் ட்ட்ட்ட்ட்டூ லேட்ட்ட்ட்ட்). 
பெரிய புராணத்தை எழுதிய சேக்கிழார் பிறந்த ஊர் இதுங்குறதால, அவருக்கு மலை அடிவாரத்தில் ஒரு தனிச்சன்னிதி இருக்கு. அதுமட்டுமில்லாம, ஆண்டு தோறும் நடக்கும் சேக்கிழார் குரு பூஜையின் போது மலையில் இருந்து முருகன் இறங்கி வந்து சேக்கிழாருக்கு காட்சி தருவது ஐதீகமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இக்கோவில் ராஜகோபுரம் மூன்று நிலைகள் கொண்டது.  திருக்கல்யாண மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம்ன்னும் இருக்கு. 


எல்லாம் பார்த்தாச்சு.. கோவில் தலவரலாற்றை என்னன்னு இன்னும் தெரிஞ்சுக்கவே இல்லியே!  தேவர்களை கொடுமைப்படுத்திய தாரகாசுரனை அழிக்க முருகப்பெருமான் படையுடன் வந்தார். திருப்போரூர் திருத்தலத்தில் நடந்த போரில் தாரகாசுரனை முருகன் வதம் செய்தார். அந்த சம்ஹாரம் முடிந்ததும் ரெஸ்ட் எடுக்கவும், வள்ளியை மணம் முடிக்கவும் திருத்தணி நோக்கி புறப்பட்டார். வழியில் குன்றத்தூர் மலையின்மீது சிரம பரிகாரம் செஞ்சிக்கிட்டார். 


இங்கு  தங்கி இருந்த முருகன், ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டையும் செய்து பூஜித்தார். அந்த சிவன், மலை அடிவாரத்தில் ‘கந்தழீஸ்வரர்’ என்ற பெயரில் தனி கோவில் கொண்டு அருள்புரிந்து வருகிறார். கந்தனால் உருவாக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டதால் அவருக்கு இந்த பெயர் வந்தது. அதன்பிறகு இத்தலத்தில் இருந்து புறப்பட்டு திருத்தணியை அடைந்ததாக தலவரலாறு சொல்லுது... இங்கு, கிருத்திகை, திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, மற்றும் சூரசம்ஹாரம் ஆகிய விழாக்கள் சிறப்புற நிகழ்த்தப்படுது..

நன்றியுடன்,
ராஜி.

6 comments:

  1. சென்னை வந்தீர்களா என்ன? எப்போது? மகள் கல்லூரி அட்மிஷன் நல்லபடிமுடிந்ததா?

    ReplyDelete
  2. குன்றத்தூர் போயிருக்கிறேன்.

    படங்கள் மற்றும் விவரணம் அருமை ராஜி

    கீதா

    ReplyDelete
  3. குன்றத்தூர் தரிசனம்.நன்றி.

    ReplyDelete
  4. அருமை
    அருமை சகோதரியாரே

    ReplyDelete
  5. என் தம்பியின் சில்வர் ஜூபிலீ மணநா குன்றத்தூரில்தான்நடந்தது அப்போதுசென்றி ருக்கிறேன்

    ReplyDelete
  6. குன்றத்தூர் முருகா சரணம்...

    ReplyDelete