எதிரியே ஆனாலும் மறைந்திருந்து தாக்குவதும், நிராயுதபாணியை தாக்குவதும், முதுகுக்கு பின்னிருந்து தாக்குவதும், பெண்களை தாக்குவதும் கூடாதென்பது போர் விதிகளில் முக்கியமானதொன்றாகும். சாதாரண மனிதர்களே இப்படிப்பட்டி போர் விதிகளை கடைப்பிடிக்கனும்ன்னு இருக்கும்போது ஒரு மனிதன் எப்படிலாம் வாழனும்ன்னு எடுத்துக்காட்டாய் விளங்கிய அவதாரபுருசன் ராமன் வாலியை மறைந்திருந்து தாக்கியது எதற்காக?! அப்படி செயதது தவறல்லவா?! ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் இடையில் நடைப்பெறும் முக்கியமான விவாதங்களில் ஒன்று இராமன் ஏன் வாலியை மறைந்து இருந்து கொன்றான்??!! உங்கள் இராமன் கடவுள்தானே/?!! நேருக்கு நேர் நின்று வதம் செய்யவேண்டியதுதானே?! உங்கள் கடவுளே தர்மத்தை நிலைநாட்டவில்லை. ஆகையால் கடவுளே இல்லை என்ற வாதத்திற்கு வாலியின் வதம் வாதத்திற்குறியதாகிட்டுது.
இராமர் பாவமற்றவர். கறையற்றவர். குற்றமற்றவர் என்பதை வேத வரலாற்றை நம்புபவருக்கு தெரியும். இருப்பினும், போதிய சாஸ்திர ஞானம் இல்லாத என்னை மாதிரியான அறிவிலிகளால் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அர்த்தம் கண்டுப்பிடிக்க முடியாது. இச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் நம்பிக்கையற்ற மக்கள், இராமர் நல்லவர் அல்ல” என்னும் மூடத்தனமான முடிவிற்கு வருகின்றனர்.சரி இந்த வாலியின் வதம் ஏன் மறைந்து இருந்து நடத்தப்பட்டதென இன்றைய தெரிந்த கதை.. தெரியாத உண்மைல பார்ப்போம்.

உண்மையில் குற்றம் செய்தது யார்? இராமரா இல்ல வாலியா? என்பதற்கான விடை எங்கிருந்து கிடைக்கும்?! வேறெங்கு கிடைக்கும்?! இராமாயணத்தில் இருந்துதான். பொதுவாக ஒருவரை குற்றம் சொல்வதற்கு முன் அவர்மீதான குற்றச்சாட்டு என்ன என்பதை முழுவதுமாக ஆராய வேண்டும். கண்ணால் காண்பதும் பொய். காதால் ல் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்ற முதுமொழிக்கேற்ப வால்மீகி எழுதிய இராமாயணத்தில் சென்று இதுக்கான விடையை தேடுவோம். வாலி யாரென நம் அனைவருக்கும் தெரியும் கிஷ்கிந்தையின் வானர அரசன். பெரும்பாலும் இராமாயணத்தின் கதைகள் அனைவருக்கும் தெரியும் என்பதால் நாம் நேரடியாக வாலி வதம் செய்யப்பட்டுக்கிடக்கும் களத்திற்கு செல்வோம். அங்கே என்ன உரையாடல் நடக்கிறது என நாமும் மறைந்து இருந்து கேட்கலாம்... வாங்க!
.

உக்கிரமான யுத்தம் நடைபெற்று முடிவில், இராமனது அம்பு எய்யப்பட்டு வாலி கீழே விழுகிறான். தன்னை தாக்கவருபவரது பலத்தில் சரிபாதி தனக்கு வந்து சேரவேண்டுமென வாலி வரம் வாங்கி வந்தது நம் எல்லோருக்கும் தெரியும். வாலியின் இந்த பாசிட்டிவ் பாயிண்ட் எல்லாருக்கும் பொருந்துவது சரி. ஆனால், வாலியோடு சண்டையிடுவது அவதாரப்புருசனான ராமன். அவனை எந்த விதி என்ன செய்யும்?! அதும் ராமர் கையிலிருக்கும் வில் இராமனுக்கு பரம்பொருள் கொடுத்தது. அதை வெல்ல யாரால் முடியும்?! இங்கே பரம்பொருள் என்று சொல்லப்படுவது ஆதிசிவன். அவரிலிருந்துதான் சிவன், விஷ்ணு, பிரம்மன் என்ற மும்மூர்த்திகள் தோன்றினார்கள். மும்மூர்த்திகளில் இருக்கும் ருத்திரனையே இங்கே சிவமாக வழிபடுகின்றனர். இதுக்கு மேல விளக்கினால் பதிவு நீளும்.
பரம்பொருள் என்றழைக்கப்படும் ஆதிசிவனே இராமருக்கு தனுசு என்ற வில், அம்பை கொடுத்தவர்.

வாலி வதம் நடைபெறுவதற்கு முக்கியகாரணமாக இருந்த சம்பவத்தினை இனி பார்ப்போம். வாலிக்கு மயவி என்ற அசுரனுடன் ஒரு பெண்ணின் காரணத்தினால் பெரும் முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில் மயவி வாலியைப் போருக்கு அழைத்தான். வாலி பெருங்கோபத்துடன் மாளிகையைவிட்டு வெளியேற, சுக்ரீவனும் அவனைப் பின்தொடர்ந்தான். வாலியைக் கண்டு அச்சமுற்ற மயவி, புதர்கள் நிறைந்த ஆழமான இருண்ட குகைக்குள் ஓடி ஒளிந்தான் .உடனே தன்னுடைய தம்பியை கூப்பிட்டு தம்பி சுக்ரீவா! நான் போர் முடிந்துவரும் வரை இந்த குகையின் வாயிலை காவல் காப்பாயாக! என சுக்ரீவனுக்கு கட்டளையிட்டு போருக்கு சென்றான். வாலி அசுரனுடன் போரிட குகைக்குள் சென்றான். வெளியே இருந்த சுக்ரீவன் ஒருவருடம் காவல் இருந்தான். வாலி குகைக்குள் இருந்து வெளிவரவில்லை. வாலியைப் பற்றிய எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. குகையிலிருந்து இரத்தம் வெளிவருவதையும் பல்வேறு அசுரர்களின் குரலையும் கேட்ட சுக்ரீவன், பலமுறை குரல்கொடுத்து வாலியிடம் இருந்து எந்தப்பதிலும் வராததினால் வாலி கொல்லப்பட்டிருக்கலாம் என்று தீர்மானித்து குகையின் வாயிலை ஒரு பெரும் பாறையினால் மூடினான்.

சகோதரனுக்குச் செய்ய வேண்டிய எல்லா ஈமச்சடங்குகளைச் செய்துவிட்டு, சுக்ரீவன் கிஷ்கிந்தைக்குத் திரும்பியபோது, அமைச்சர்கள் அவனை அரியணையில் அமர்த்தி பட்டாபிஷேகம் செய்தனர். சுக்ரீவனும் நீதி நெறிப்படி அரசாளத் தொடங்கினான். சில மாதங்கள் கழித்து, எல்லாரும் வியக்கும் வகையில், வாலி அசுரனைக் கொன்றுவிட்டு கிஷ்கிந்தைக்குத் திரும்பினான். சுக்ரீவனை அரியணையில் கண்ட வாலி கடுங்கோபம் கொண்டு அமைச்சர்களைக் கைது செய்தான். சுக்ரீவனோ தனது சகோதரனுடன் சண்டையிடாமல் அவன் மீதுள்ள மரியாதையால் பணிவுடன் ராஜக்கிரீடத்தை வாலியின் காலடியில் வைத்து வணங்கினான். தான் ஒருபோதும் பலவந்தமாக இராஜ்ஜியத்தைப் பறிக்க எண்ணியதில்லை என்றும், தனது உள்நோக்கமற்ற குற்றத்தினை மன்னித்துவிடுங்கள் என்றும் வேண்டினான். ஆனால் வாலியின் கோபம் சற்றும் தணியவில்லை, குகை வாயிலை மூடிவிட்டு இராஜ்ஜியத்தை கைப்பற்றியதாக சுக்ரீவன்மீது குற்றம் சாட்டினான். சுக்ரீவனுடைய மனைவி, சொத்துக்கள் உட்பட அனைத்தையும் பறித்துவிட்டு, உடுத்தியிருந்த ஒரே உடையுடன் அவனை இராஜ்ஜியத்தை விட்டே வெளியேற்றினான். காடுகளில் அலைந்து திரிந்த சுக்ரீவன், அங்கே சீதையை தேடிவந்த ராமனை சந்திக்கின்றான்.

தனக்கு இழைக்கப்படட அநீதியை ராமனிடம் எடுத்துக்கூறி , தனது சகோதரனை கொன்று தனது மனைவியை மீட்டுத் தரவேண்டும் என இராமரிடம் வேண்டினான். அதற்கு பிரதிபலனாக சீதையைத் தேடுவதில் தானும் வானர சேனைகளும் தங்களுக்கு உதவுவோம் என்று சுக்ரீவன் இராமனிடம் உறுதியளித்தான். அதன் விளைவாகத்தான் இராமன் வாலியுடன் சுக்ரீவன் சண்டையிட்டபோது, ஒரு மரத்திற்குப் பின்னால் மறைந்து நின்று வாலியை வதம் செய்தார். வாலியின் கடைசி நிமிடத்தில் நடந்த உரையாடல்தான் தவறு யார்பக்கம் என நமக்கு உணர்த்தும். அதனால, நாமும் மறைஞ்சு நின்னு அவங்க உரையாடலை கேக்கலாம். அம்பால் தாக்கப்பட்டு வீழ்ந்துகிடந்த வாலி, ராமரின்மேல் கடுங்கோபம் கொள்கிறான். பலவாறு புலம்பி தீர்க்கின்றான். சிலது நமது காதில் விழவில்லை. அதனால, இன்னும் கிட்டக்க போகலாம் வாங்க. அங்கே வாலி, ராமா! நீயும் ஒரு அரசக்குடும்பத்தில் பிறந்தவன். வருங்காலத்தில் நீயும் அரியணையில் அமர்ந்து அரசாள்வாய். ஒரு நாட்டின் அரசன் என்பவன், வாய்மை, மன்னிக்கும் தன்மை, மனவுறுதி ஆகிய தன்மைகளுடன் தீயோர்களை தண்டிப்பவராக இருக்க வேண்டும். நான் என்ன தவறு செய்தேன்? உங்கள் நல்ல பண்புகளை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். குற்றமற்ற என்னிடம் நீங்கள் போருக்கு வரமாட்டீர்கள் என நம்பினேன். ஆனால், என்மீது மறைந்து இருந்து அம்பெய்துவிட்டாயே ராமா!! ஏன் என கேள்வி கேட்கின்றான் வாலி .

வாலி நீ குற்றமே செய்யாதவன் அல்ல. ஒரு நாட்டின் அரசன் என்பவன் மன்னிக்கும் தன்மையுடையவனாக இருக்கவேண்டும் என்று நீதான் கூறுகிறாய். ஆனால், அதன்படி நீ நடந்தாயா?! சுக்ரீவன் அறியாமல் செய்த தவறுக்காக உன்னிடம் மன்னிப்பு கேட்டபோதும் நீ என்ன செய்தாய்?! ஓர் அரசனின் கடமையை செய்தாயா? காமத்தாலும், பேராசையினாலும் அடாத செயல்களை செய்தாய். மகளாய் நினைக்க வேண்டிய உனது இளைய சகோதரனுடைய மனைவியான ரூமாவை அபகரித்து அவளை உனது மனைவியாக்கி கொண்டாய். ,இந்த ஒரு பாவச்செயல் போதும். உன்னை நான் தண்டிக்க. மேலும் ,மகள் .மருமகள் ,சகோதரி ,சகோதரனின் மனைவி ,ஆகியோருடன் உறவு வைப்பவர்களுக்கு கொடுந்தண்டனை ,மேலுலகத்திலும் உண்டு. ஓர் அரசன் என்ற முறையில் கடும் பாவம் செய்தவனை கொல்லாமல் விட்டால் ஒரு அரசன் என்ற முறையில் நான் நீதி தவறியவன் ஆவேன் என இராமன் கூறினான் .

நான் ஒரு சாதாரண வானரம். இராமா! உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்னை கொல்ல?! மேலும், தனிப்பட்ட முறையில் நான் உனக்கு எந்த தீமையையும் செய்யவில்லையே! இல்லை உனது ஆளுகைக்குட்பட்ட நாட்டிலோ அல்லது உனது நகரத்திலோ நான் எந்த எந்த தீங்கும் செய்யவில்லையே! அப்படியிருக்க நீ எப்படி என்னை கொல்ல முயற்சிக்கலாமென கேட்டான் வாலி. ராமன் அதற்கு பதிலுரைத்தான். வாலி! ,மலைகள், காடுகள், நதிகள் மற்றும் இந்த முழு பூமியிலுள்ள அனைத்தும் இஷ்வாகு வம்சத்தினரின் ஆட்சிக்குட்பட்டது. இஷ்வாகு வம்சத்து அரசர்களுக்கு தவறு செய்யும் எல்லா மனிதர்களையும், எல்லா விலங்குகளையும் தண்டிப்பதற்கு முழு அதிகாரம் உள்ளது. மேலும், எனது அரசனான பரதனின் ஆணைப்படி, நீதிக்கு புறம்பாக செயல்படுபவர்களை தண்டிக்கும் அதிகாரமும் எனக்குள்ளது என இராமர் வாலி கேட்ட கேள்விக்கு பதிலளித்தார் .

உடனே வாலி அவனது பக்கம் உள்ள நியாயத்தை வலியுறுத்த இப்போதைய வக்கீல்கள், எதிராணியினரை மடக்குவதற்கு, சட்டத்தில் உள்ள ஓட்டையை கொண்டு வாதாடுபதுப்போல மீண்டும் ஒரு வாதத்தை வைத்தான். அது என்ன வாதம்ன்னு கேட்கலாம். நான் ஒரு சாதாரண வானரம், காடுகளில் வாழும் மிருகங்களான நாங்கள் பழங்களையும் கிழங்குகளையும் உண்டு வாழ்பவர்கள், எங்களுக்கு குடும்பம், உறவுமுறை மாதிரியான சட்டத்திட்டங்கள் ஏதுமில்லை. குரங்கான தான், தன் சகோதரனின் மனைவியுடன் கொண்ட உறவிற்காக தண்டிக்கக் கூடாது என்று வாதிட்டான். குரங்குகளைக் கொல்வது எதற்கும் பயனற்றது, குரங்கின் தோலை உடுத்த முடியாது, குரங்கின் மயிரும் எலும்புகளும் புறக்கணிக்கப்படுகின்றன, குரங்கின் மாமிசத்தைக்கூட உண்ண முடியாது அப்படியிருக்கும் பட்சத்தில் என்னை ஏன் கொல்ல வேண்டும்?” என்று வாலி தன்பக்க நியவாதங்களை இராமர் முன்பு வைத்தான். வாலி தன்னை வெறும் சாதாரண ஒரு குரங்காக அடையாளம் காட்ட நினைத்தான். வாலியின் வாதம் சரிதானே?! வாலி சாதாரண குரங்குதானே?! என்ற கேள்வி இப்பொழுது நமக்கே எழுகிறது. வாலிதரப்பு வாதம் ஓரளவு ஏற்கக்கூடியதாக இருந்தாலும் வேதம் படித்தவர்கள் செய்யும் , சந்தியாவந்தனம், சூர்யோபஸ்தானம் போன்றவற்றிற்காக வாலி விரதங்களை அனுஷ்டிப்பதுண்டு. இதை வைத்துப் பார்க்கும்போது வாலி சாதாரண ஒரு வானரம் அல்ல எனவும் தோணுது. சரி, இதற்கு இராமர் என்ன கூறுகிறார் என பார்க்கலாம் .

(இந்தப்படம் வாலியின் இறுதி சடங்கு சுக்ரீவனாலும்,அவனது மகனாலும் நடத்தப்படுவதை காட்டும் குகை ஓவியம் பஞ்சாப் மாநிலத்தின் மலை குகையில் காணப்பட்டது 18 ம் நூறாண்டு கால ஓவியம் )
வாலியின் வாதத்திற்கு ராமன் இவ்வாறு பதில் கூறுகிறார் ,: நீ வானரமாக உன்னை காட்டிக்கொள்கிறாய். உன் வாதப்படி பார்த்தாலும் நான் மறைந்திருந்து தாக்கியதிலும் ஒரு நியாய தர்மம் இருக்கிறது மனிதர்கள் மிருகங்களைப் வேட்டையாடும்போது, சில சமயம் நேரடியாகவும், சிலசமயம் மறைமுகமாகவும், சிலசமயம் தந்திரமாகவும் செயல்படுவதுண்டு. மேலும், சத்திரியர்கள் வேட்டையாடும்போது கவனமின்றி இருக்கும் மிருகங்களை மறைவான இடத்திலிருந்து அம்புகளால் தாக்குவதுண்டு. நீ ஒரு வானரம் என்பதால், மறைந்திருந்து, முன்னறிவிப்பின்றி உன்னைத் தாக்கியதில் எந்தக் குற்றமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. மேலும் ,வேத விதிகளின்படி அக்கிரமக்காரர்கள் ஆறு வகையாக பிரித்து கூறுகின்றனர் (பகவத் கீதை உண்மையுருவில், 1.36). இதுப்போன்றவர்களை கணநேரங்கூட தாமதியாது கொல்லப்படுவதால், ஒரு சிலரேனும் அந்த பாதிப்பிலிருந்து நிம்மதியடைவார்கள். அதனால் பாவம் ஏதுமில்லை எனக்கூறினார்.
வாலி சுக்ரீவனிடத்தில் செய்த அக்கிரமத்திற்காக அவனை தண்டிக்க வந்த காவல் அதிகாரியைப் போன்றவர் இராமர். குற்றவாளியான உன்னை தண்டிக்க நான் வருகிறேன், உன்னை தயார்படுத்திக்கொள்” என்று ஒரு காவல் அதிகாரி அறிவித்துக்கொண்டு வந்தால் அந்த குற்றவாளி உடனே அங்கிருந்து ஓடிவிடுவான். ஆகையால் எந்த முன்னறிவிப்புமின்றி வாலியை வதம் செய்தது சரியே என இப்போது நமக்கு தோன்றுகிறது , சரி மேலும் எதிர் தரப்பு வாதங்களையும் அலசி ஆராயும் போது நடுத்தரப்பு வாதத்தையும் நாம் இங்கே சற்று பார்ப்போம்..
வாலியை நிச்சயம் நான் வதம் செய்வேனென சுக்ரீவனுக்கு இராமர் வாக்கு கொடுத்துத்திருந்தார். அப்படி பார்க்கும்போது ஒருவேளை இராமர் எதிர்தரப்பில் நேருக்கு நேராக நின்றிருந்தால், வாலி என்ன செய்திருப்பான்?
(1) பயத்தினால் ஓடி ஒளிந்திருக்கலாம்,
(2) இராவணனிடம் கூட்டு சேர்ந்திருக்கலாம்,
(3) சுக்ரீவனைப் போன்று இராமரிடமே தஞ்சமடைந்திருக்கலாம்,
(4) மொத்த வானரப் படைகளையும் கொண்டு இராமருடன் போர் புரிந்திருக்கலாம்.
இதில் எது நடந்திருந்தாலும் இராமரின் வாக்குறுதி தாமதமாகியிருக்க வாய்ப்பு உண்டு. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். இது மனுதர்மம் .

ஒருவேளை சுக்ரீவனைப் போன்று இராமரிடம் வாலி தஞ்சமடைந்திருந்தால், சரணடைந்தவனைக் கொல்வது மரபல்ல என்பதால் வாலி கொல்லப்பட்டிருக்கமாட்டான். இராமரால் சுக்ரீவனுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேறாமல் போகக்கூட வாய்ப்புண்டு. இல்லை வாலி தன்னுடைய மொத்த வானர சேனைகளையும் கொண்டு இராமருடன் போரிட்டிருந்தால், வானரங்கள் அனைவரும் மடிந்திருப்பர். வானரங்கள் இராமருக்கு உதவுவதற்காகத் தோன்றிய தேவர்கள், அவர்கள் கொல்லப்படுவதை இராமர் விரும்பவில்லை. அகந்தையால் மதிமயங்கிய வாலியை மட்டும் கொல்வதற்கு அவர் முனைந்தார் என்ற முடிவுக்குத்தான் வரமுடிகிறது. மேலும், யாரேனும் தனக்கு நேராக நின்று போரிட்டால், அவர்களின் சக்தியில் பாதி தனக்கு வந்துவிட வேண்டும் என்று வாலி ஒரு வரம் பெற்றிருந்தான். (இத்தகவல் வால்மீகி இராமாயணத்தில் இல்லை என்றபோதிலும் மற்ற இடங்களில் கூறப்படுவதுண்டு) தேவர்கள் வாலிக்கு கொடுத்த வரத்தைக் காக்கவும் அவர்களின் மதிப்பை குறைத்துவிட வேண்டாம் என்பதற்காகவும், பகவான் இராமர் வாலியை மறைந்திருந்து வதம் செய்து இருக்கலாம் .இச்சமயத்தில், பிரம்மதேவரிடமிருந்து பல வரங்களை பெற்ற ஹிரண்யகசிபுவை நாம் நினைவு கொள்ளலாம். அவன் பெற்றிருந்த வரங்கள் அவனைப் பல்வேறு சூழ்நிலைகளில் காப்பாற்றியபோதிலும் இறைவனே பிரம்மதேவரின் வரம் பொய்க்காமல் இருக்கும்படி பாதி மனிதனும் பாதி சிங்கமுமான நரசிம்மராகத் தோன்றி ஹிரண்யகசிபுவைக் கொன்றார். அதுபோல, வாலி பெற்ற வரத்தையும் பொய்க்கச் செய்ய இராமர் விரும்பவில்லை எனவும் எடுத்துக்கொள்ளலாம்.

நம்முடைய அனுமானம் எப்படி வேண்டுமாலும் இருக்கட்டும். வாலி மீண்டும் ராமனிடம் ஏதோ கூறுகிறான் அது என்னவென்று கேட்கலாம் வாங்க. இராமா! உன்னுடைய மனைவியை கவர்ந்து சென்றவனுடன் போர் புரிய சுக்ரீவனுடன் கூட்டு சேர்ந்தததிற்கு பதிலாக என்னிடம் கேட்டு இருந்தால் நான் ஒரே நாளில் அவனைக் கொல்லாமல், கயிற்றால் கட்டி தங்களிடம் கொண்டு வந்திருப்பேன். சீதையை உங்களிடம் ஒப்படைத்து இருப்பேனே! என்று கூறினான். வாலியே! தர்ம சாஸ்திரங்களின்படி, ஒரு மன்னன் தனது எதிரியை வெற்றிகொள்ள நட்புடைய மற்றொரு மன்னனின் உதவியை நாடலாம். அதன்படி, உன்னைக் கொல்வதாக நான் சுக்ரீவனுக்கு உறுதியளித்தேன். சத்திரியன் கொடுத்த வாக்கை மீறுவதில்லை என்பதால், அந்த வாக்கை தற்போது நிறைவேற்றியுள்ளேன். நீ தர்மத்தின் விதிகளை மீறியவன். மேலும், நீ எனது நண்பனான சுக்ரீவனின் எதிரி என்பதால், எனக்கும் நீ எதிரியே.”என்கிறார் இராமர் .

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நாம் இப்ப ஒரு முடிவுக்கு வரலாம். இராமர் முதலில் சந்தித்தது சுக்ரீவனைத்தான். அப்போதே வாலியைக் கொல்வதாக உறுதிகொடுத்தார். எனவே, வாலியுடன் சமரசத்திற்கு வாய்ப்பே இல்லை. வாலி மன்னிக்கப்பட்டால், சுக்ரீவனுக்குக் கொடுத்த வாக்குக்கு களங்கம் வந்திருக்கும். மேலும், வாலியே இராவணனை அடக்கி சீதையை அழைத்து வந்திருந்தால், இராவணனைக் கொல்வதற்காக தோன்றிய இராமரின் அவதாரம் பூரணமானதாக அமைந்திருக்காது. இராவணனைச் சார்ந்த மற்ற அசுரர்களும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். அதுமட்டுமின்றி, ருமாவின் நிலை என்ன? எனவே, எப்படிப் பார்த்தாலும், வாலியின் பக்கம் எந்தவொரு நியாயமும் இல்லை, இராமரின் செயலில் எந்தவொரு அநியாயமும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. சரி இந்த வழக்கின் முடிவு என்ன என்பதை அடுத்தவாரம் நமது தெரிந்த கதை தெரியாத உண்மையில் பார்க்கலாம்....
வெயிட் அண்ட் சீ..
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி