Sunday, May 12, 2019

வாழா என் வாழ்வை வாழவே..... - பாட்டு புத்தகம்

வாழ்க்கை பயணத்தில் அம்மா, அப்பா, பிள்ளைங்க, உற்றார், உறவினர்கள்ன்னு எல்லாருமே சக பயணியே! அவரவர் இடம் வரும்போது சொல்லாமகொள்ளாம இறங்கி போய்க்கிட்டே இருப்பாங்க.   என்னதான் கூட்டுக்குடும்பம், நண்பர்கள், சமூக வலைத்தளம், குடும்பம்ன்னு இருந்தாலும் தனிமை மட்டுமே நிரந்தர நண்பன். அவன் மட்டுமே நம்மோடு கடைசி வரை இருப்பான். 

அப்பா அம்மா ஆசைப்படி படிச்சு, கல்யாணம் கட்டி, அதுக்கப்புறம் வீட்டுக்காரர், மாமனார் மாமியார் பேச்சை கேட்டு, மச்சினர் ஓரகத்தின்னு கட்டுப்பாடா இருந்து, பிள்ளைகளுக்காக பலதை விட்டுக்கொடுத்து  திரும்பி பார்த்தா என் வாழ்க்கையை என் உறவுகள்தான் வாழ்ந்திருக்கு. என் விருப்பம் எதாவது நிறைவேறி இருக்கான்னு அடிக்கடி யோசிச்சு பார்ப்பேன்...ம்ஹூம்... சாப்பாடு, உடைகள் உறவுகள், அதனால் நேர்ந்த பிரிவுகள்ன்னு எல்லாமே எனக்கு திணிக்கப்பட்டவையே! எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா..ன்ற வடிவேலு காமெடிக்கு தகுந்தமாதிரி இந்த திணிப்புகள் இன்னும் தொடருது....  இந்திய பொண்ணுகளுக்கே உண்டான சாபக்கேடு இது...

எனக்கு ஒரு ஆசை இருக்கு. பிள்ளைகளுக்கு கல்யாணம் கட்டிக்கொடுத்து, அம்மா அப்பாக்கான கடமைகளை முடித்து...  உறவுகளைலாம் விட்டு தூரமாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு நீர்நிலைக்கு பக்கத்துல வீடு பார்த்து அங்க இருந்திக்கிட்டு,  ஹோம் தியேட்டரோடு ஒரு ரூம்ல ஒரு சுவத்தில்  பிடிச்ச பாட்டு கேசட்(இப்ப பென் ட்ரைவ்), இன்னொரு சுவத்தில்  புத்தகங்கள், ஒரு கம்ப்யூட்டர், அதில் நெட் கனெக்‌ஷன்... மாசம் ஒருக்கா ஊர்ப்பயணம், அதை பகிர்ந்துக்க என் வலைப்பூன்னு இருக்கனும்ன்னு ஆசை.... வீட்டில் சண்டை வந்தால், எப்ப என் கடமை முடியப்போகுதோன்னு அடிக்கடி சொல்வேன்.... 

நான் ஆசைப்பட்டபடி வாழ நினைச்சதை 96 படத்துல  கதாநாயகன் ஒரு பாட்டுல வாழ்ந்திருப்பார். அந்த பாட்டை பார்க்கும்போதெல்லாம் என்னை பார்க்குறமாதிரியே இருக்கும். பிடிச்ச மாதிரி வாழுறதா காட்டினாலும், வாழ்வின் வெறுமையை விஜய் சேதுபதியின் முகம் காட்டிக்கொடுக்கும். பாட்டை கேட்கும்போதெல்லாம் அழாம இருந்ததில்லை..

இந்த பாட்டு முழுக்க அழகான தமிழ்வரிகள் தாண்டவமாடும்...  கார்த்திக் நேத்ரா பாடி  கலக்கி இருப்பார். 


கரை வந்த பிறகே
பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே
புரியுது உலகை..
நேற்றின் இன்பங்கள்
யாவும் கூடியே
இன்றை இப்போதே
அர்த்தம் ஆக்குதே!!
இன்றின் இப்போதின்
இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே!!

வாழா
என் வாழ்வை வாழவே
தாழாமல் மேலே போகிறேன்...
தீரா உள் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்!!
இங்கே இன்றே ஆழ்கிறேன்!!

ஹே.. யாரோபோல்
நான் என்னைப் பார்க்கிறேன்.
ஏதும் இல்லாமலே இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்!!
நானே இல்லாத
ஆழத்தில் நான் வாழ்கிறேன்..
கண்ணாடியாய் பிறந்தே
காண்கின்ற எல்லாமும்
நான் ஆகிறேன்!!

இரு காலின் இடையிலே
உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா!!
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா..
நானே நானாய் இருப்பேன்..
நாளில் பூராய் வசிப்பேன்..
போலே வாழ்ந்தே சலிக்கும்
வாழ்வை மறுக்கிறேன்..
வாகாய் வாகாய் வாழ்கிறேன்..
பாகாய் பாகாய் ஆகிறேன்..

தோ…காற்றோடு
வல்லூரு தான் போகுதே!!
பாதை இல்லாமலே அழகாய்
நிகழே அதுவாய்..
நீரின் ஆழத்தில்
போகின்ற கல் போலவே..
ஓசை எல்லாம் துறந்தே!!
காண்கின்ற காட்சிக்குள்
நான் மூழ்கினேன்..

திமிலேரி காளைமேல்
தூங்கும் காகமாய்
பூமி மீது இருப்பேன்..
புவி போகும் போக்கில்
கைக்கோர்த்து
நானும் நடப்பேன்..
ஏதோ ஏகம் எழுதே!!
ஆஹா ஆழம் தருதே!
தாய் போல் வாழும் கணமே!
ஆரோ பாடுதே..
ஆரோ ஆரிராரிரோ..
ஆரோ ஆரிராரிரோ..

கரை வந்த பிறகே
பிடிக்குது கடலை!!
நரை வந்த பிறகே.
புரியுது உலகை!!

நேற்றின் இன்பங்கள்
யாவும் கூடியே
இன்றை இப்போதே
அர்த்தம் ஆக்குதே!!
இன்றின் இப்போதின்
இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே!!

படம் : 96 

பாடியவர்: பிரதீப் குமார்
இசை: கோவிந்த் வசந்தா
பாடலாசிரியர்: கார்த்திக் நேத்தா
நடிகர்: விஜய் சேதுபதி

நன்றியுடன்,
ராஜி


11 comments:

  1. புதிய படங்கள் பார்க்கும்போது பெரும்பாலும் பாடல்களை பாஸ்ட் செய்து ஒட்டி விடுவது வழக்கம். இந்தப் படமும் பார்த்திருக்கிறேன். இந்தப் பாடல் கேட்டதில்லை.

    ReplyDelete
    Replies
    1. புதுப்பாட்டுலாம் கேக்குற மாதிரியா இருக்கு?!

      Delete
  2. பாடல் கேட்டதில்லை ராஜி. இப்பத்தான் கேட்கிறேன்.

    நல்லாருக்கு....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருந்தால் சரி

      Delete
  3. நல்ல பாடல். கேட்டதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  4. 'தனிமை மட்டுமே நிரந்தர நண்பன்' - நீங்க எழுதியிருப்பது, எனக்கு பாடலைவிட மிகவும் பிடித்தது.

    ஆழ்ந்து சிந்தித்தால் அது உண்மைதானே...

    ReplyDelete