Friday, June 26, 2020

அருள்மிகு சோழராஜா திருக்கோவில், ஒழுகினசேரி-புண்ணியம் தேடி ஒருபயணம்.

லாங்க்.. லாங்க்.. அகோ.. ஒன்ஸ் அப்பான் எ டைம்..  கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் கோவில்களை பற்றிய தொடர் ஒன்றை பதிஞ்சது உங்களுக்கு நினைவிருக்கலாம்.   இப்ப லாக் டவுன் காரணமா எங்கும் போகமுடியாத சூழல். ஆடின காலும், பாடின வாயும் மட்டுமல்ல ஊர்சுற்றி எஞ்சாய் பண்ணினதை பதிவாக்கின மனசும்   சும்மா இருக்காது. பதிவாக்காக  எங்காவது போகலாம்ன்னா முடியல. எதையாவது மீள் பதிவா போட்டுக்கலாம்ன்னு முடிவு பண்ணியாச்சுது.  சரி, எருமைமாடு அசை போடுற மாதிரி டூர் போய் வந்த போட்டோக்களை பார்த்துக்கிட்டே வரும்போது சில கோவில்களை பதிவாக்காம இருந்தது தெரியவர லாஸ்ட் பாலில் சிக்ஸர் அடிச்சு ஜெயிச்ச மாதிரி ஒரு பீல் வந்துச்சு.. உடனே இன்னிக்கு அதை பதிவாகவும் போட்டாச்சுது.  

புண்ணியம் தேடி.. தொடரில் இன்னிக்கு நாம பார்க்கப்போற கோவில், நாகர்கோவிலில் இருக்கும் அருள்மிகு சோழராஜா திருக்கோவில்ஒழுகினசேரி. நாகர்கோவிலில் டொக்குல இருக்கும் இந்த கோவிலுக்குலாம் தேடிப்பிடிச்சு போகனுமா?!ன்னு யோசிக்கலாம். நாகர்கோவிலின் ஒரு பகுதியான இந்த இடத்துக்கு மற்றொரு பெருமை இருக்கு, நாடகங்களில் அவ்வையாராக வேஷம் கட்டி அவ்வை சன்முகம்ன்னு  பேர் எடுத்த திருவனந்தபுரம் கண்ணுசாமி சன்முகம் என்பவரும்(26.4.1912-15.2.1973), இவரது தம்பி தி.க.பகவதியும் அவர்தம் குடும்பத்தாரும் இந்த பகுதியில்தான் சில காலம் வசித்தனர்.  மற்றும் கலைவாணர் என அழைக்கப்படும் நகைச்சுவை நடிகரான என்.எஸ்.கிருஷ்ணன் இந்த ஊரில்தான் பிறந்தாரு. இப்ப சொல்லுங்க. இந்த கோவிலை தேடிப்பிடிச்சு போவீங்களா?! மாட்டீங்களா?
(இதுதான் கலைவாணர் N.S.கிருஷ்ணன் வாழ்ந்த வீடு) 
ஏம்மா, சினிமா நடிகரும், நாடக நடிகரும் பிறந்த ஊர்ன்னா மட்டும் போயிடனுமா?!ன்னு கேக்கலாம்.. இந்த கோவிலின் சிறப்புகளை சொல்றேன். தேடிப்பிடிச்சு போறீங்களா?! இல்லியான்னு பார்க்கலாம்.. நாகர்கோவிலின் ஒரு பகுதியான இந்த ஒழுகினசேரி சங்ககாலத்தில்  உலகமுழுதுடையான்சேரின்னு அழைக்கப்பட்டதாம்.  200 ஆண்டுகளுக்கு முன்புவரை திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் இருக்கும் செப்பு பட்டயங்களில் உபமங்களனேரி என குறிப்பிடப்பட்டுள்ளது.  காலப்போக்கில் மருவி ஒழுகினசேரி என்று பேச்சுவழக்கில் வந்துவிட்டதாம்(உபமங்களனேரி எப்படி ஒழுகினசேரி ஆகும்ன்னுலாம் கேடகப்படாது.) நாகர்கோயில் நகருக்குள் நுழையும்முன்பே  பழையாற்றின் கரையில் இருக்கும் இந்த ஒழுகினசேரியை தாண்டித்தான் நகருக்குள் நுழையமுடியும்.

நாகர்கோவில் ஊரின் பெயர்காரணமாய் அங்கிருக்கும் நாகராஜா கோவிலைத்தான் சொல்றாங்க.   நாக வழிபட்டிற்குரிய பல ஆலயங்கள் கேரளாவில் இருக்கு. ஆனா, தமிழ்நாட்டிலும் நாக வழிபாட்டிற்கு பல ஆலயங்கள் இருப்பினும், நாகராஜனை மூலவராய் கொண்டு தனிக்கோவிலாய் இருக்கும் நாகர்கோயிலில் உள்ள நாகராஜா கோவிலே முதன்மையானது.  கோவில் உள்ள எல்லா ஊர்களையுமே ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்தில் kovil என்றே குறிப்பிட்டு உள்ளனர். தமிழகத்தில் ஆவுடையார்கோவில்உத்தமர்கோவில், காட்டுமன்னார்கோவில், காளையார்கோவில்சங்கரநயினார்கோவில், நாச்சியார்கோவில், நயினார்கோவில், சிங்கப்பெருமாள் கோவில் ன்னு இருக்கும் எல்லா கோவில்களையும் ஆங்கிலத்திலும் அப்படியே எழுதினர். உதாரணத்திற்கு சங்கரன்கோவில் - sankarankovil) ன்னுதான் எழுதினாங்க. ஆனா, நாகர்கோயிலின் பெயரை மட்டும் koil ன்னு எழுதாமல் coil ன்னு எழுதினாங்க. coilன்னா  அருள், சுற்றுதல்ன்னு பொருள்.  நாகராஜா கோவிலில் உள்ள நாகர் சிலைகளையும்,  நாகங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து இருக்கும் சிலைகளையும் கண்டு அதிசயித்து அந்த நாகராஜா கோவிலை சிறப்பிக்கும் வகையிலும் Nagercoil என்றே குறிப்பிட்டு தங்கள் ஆன்மீக உணர்வை ஆங்கிலேயர்கள் வெளிப்படுத்தி கொண்டனர். மற்ற ஊர்களில் இல்லாத தனி சிறப்பை அவர்கள் நாகர்கோயிலில் கண்டு அதிசயிதிருக்க வேண்டும்.

ஊர்கதை போதும். இனி கோவிலின் சிறப்பை பார்க்கலாம்.. கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்தின் பகுதிகள்லாம் சேர மன்னர்களின் ஆட்சியில் இருந்ததுஅப்பொழுது சோழ தேசத்தை ஆண்ட  ராஜராஜ சோழனின் பேரனும், ராஜேந்திர சோழனின் மகனுமான ராஜேந்திர சோழீஸ்வரன் சேர நாட்டைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தஞ்சையிலிருந்து பெரும்படையுடன் சேரநாட்டிற்கு படைதிரட்டி வந்தான்அப்பொழுது தன்னுடைய படைகளுடன் இந்த நாகர்கோயில் பகுதியில் உள்ள உலகமுழுதுடையான்சேரி என்னும் ஒழுகினசேரி பகுதியில் தன்படைகளுடன் இளைப்பாறியிருக்கிறான். அன்றிரவு மன்னனின் கனவில் இறைவன் தோன்றி, அங்கு ஒரு கோவில் எழுப்பும்படி கூறி மறைந்தார். இறைவனின் ஆணைக்குட்பட்டு, மன்னன் உடனடியாக ஏற்பாடுகள் செய்து, தஞ்சைப் பெரிய கோவிலின் சாயலில் சிறிய அளவில் ஒரு கோவிலை சிறப்பாகக் கட்டி முடித்தான்.

இக்கோவிலில் சிவபெருமான் அரவ நீள் சடையான் என்ற பெயரில் சற்று உயரமாக லிங்கவடிவில் காட்சி தருகிறார். இக்கோவிலில் சிவன் அருள்பாலித்து வந்தாலும் சோழ மன்னன் உருவாக்கம் செய்ததால் சோழ ராஜகோவில் என்ற பெயரிலேயே இப்பகுதியில் இக்கோவில் பிரசித்தமாகி உள்ளது. சிலர் இந்த மூலவரை அரவ நீள்நடையான் என்றும் சொல்வர். கல்வெட்டுகளில் அரவ நீள்நடையான் என்று உள்ளதாகவும்மேலும் சோழீஸ்வரமுடையர், ராஜேந்திரசோழீஸ்வரமுடைய நயினார்பெரிய நயினார் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். இக்கோவில் அமைந்துள்ள சுற்றுப்புறத் தெருக்களும் சோழராஜ கோவில் தெரு என்ற பெயரில் அமைந்துள்ளன. தஞ்சைப் பெரிய கோவில் விமானத்தின் சாயலில் சிறிய அளவிலான  விமானமும், நான்கு பக்கக் கற்சுவர்களும், மேல்கூரையில் நான்கு மூலைகளிலும் நந்தியின் சிலைகளும் அமைந்துள்ளன.

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் நாகர்கோவில், ஒழுகினசேரி, வடசேரி, கிருஷ்ணன்கோவில் என்ற பெயருள்ள இன்றைய நகரப் பகுதிகள் அனைத்தும் கோட்டாறுன்ற ஒரே பெயரில் அமையப் பெற்றிருந்ததாயும், நாகராஜாகோவில் நகரின் நடுப்பகுதியில் அமைந்த பின்னர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் நாகர்கோவில்ன்ற பெயர் பெற்றதாக வரலாறுகள் கூறுகின்றன. பண்டைய காலத்தில் இந்த கோவில் பழையாற்றின் மேற்குபக்க கரையோரம் அமைந்திருந்தது என்றும் கோவிலில் இருந்து பார்த்தால் பழையாறு தெரியும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி புகழ்மிக்க பழையாற்றின் கரையில் அரவ நீள்சடையான் என்ற பெயரில் சிவபெருமான் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பலிக்கிறார். சோழர்கள் காலத்திற்கு பிறகு பாண்டிய மற்றும் திருவிதாங்கூர் மன்னர்களால் இந்தக்கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது.


இறைவன் கருவறையில் மூன்றடி உயரத்திலும், நிலத்தினடியில் பதினெட்டடி புதைக்கப்பட்ட நிலையிலும் லிங்க வடிவில் கிழக்குப்பார்த்து அருள்பாலித்து வருகிறார். மனம் நிறைந்த தூய உள்ளத்தால் பக்திப்பரவசம் கொண்டு லிங்க உருவில் அற்புதமாக அமைந்துள்ள இறைவன் அரவ நீள்டையானை ஓம் நமசிவாய! என்று இருகரம் கூப்பி வணங்கினால், லிங்க உருவில் இல்லாது, ஈசனே நேரில் வந்து நின்று அருள்பாலிப்பது போன்ற உணர்வு கிடைக்கும். பூமிக்கடியில் இருந்தும் இறைவன் அருள் செய்வதால், இக்கோவிலில் அமர்ந்து ஆழ்நிலைத் தியானத்தில் ஈடுபட்டால் இறையுணர்வை அதிர்வலைகளால் உணரமுடியும் எனறும், நினைத்ததை வேண்டிப் பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது. 

கருவறையின் முன்பக்கமுள்ள அர்த்த மண்டபத்தில் இறைவனை நோக்கி நந்திசிலை அமைந்துள்ளது. பிரதோஷ பூசை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இறைவன் சன்னதியைச் சுற்றிக் கோவிலுக்குள் சுற்றுப்பாதை உள்ளது. கோவிலுக்குள் நுழைந்தவுடன், வலது பக்கமுள்ள மண்டபத்தில் வடகிழக்கில் அன்னையின் சன்னதி தெற்குப்பார்த்து உள்ளது. அழகும், அமைதியும் நிறைந்து, ஐஸ்வர்ய சொரூபியாய், அழைத்த குரலுக்கு ஓடிவந்து கேட்ட வரம் தரும் அன்னை, இறைவனை நோக்கிச் சற்றுத் தலைசரிந்து கோலவார் குழலாள் ஈஸ்வரி என்ற பெயர் தாங்கித் தெற்கு பார்த்து அருள்பாலித்து வருகிறாள். கன்னிப்பெண்கள் திருமணம் வேண்டி வாரத்தில் ஒருநாள் என ஒன்பது வாரங்கள் அர்ச்சனை செய்து அம்பாளைத் தரிசித்து மனமுருகி வேண்டிக்கொண்டால், அம்பாளின் அருளால் திருமணம் விரைவில் கைkகூடும் எனக்கூறப்படுகிறது.
கோவிலின் சுற்றுப்பகுதியில் தென்மேற்குப் பகுதியில் விநாயகப்பெருமானும், வடமேற்குப் பகுதியில் சுப்பிரமணியரும் கிழக்கு பார்த்துத் தனித்தனி  சன்னதிகளில் அமர்ந்து அருள்புரிந்து வருகின்றனர். அம்பாள் சன்னதிக்கு மேல்பக்கம் ஒரு கிணறு உள்ளது. முன்பெல்லாம் கோவில்களின் விக்கிரங்களை தூய்மைபடுத்துவதற்கும், அபிஷேகத்திற்கும் கோவிலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்துதான் தண்ணீர் எடுப்பார்கள். காலப்போக்கில் அவை மாறிவிட்டன. இக்கோவிலின் தல விருட்சம் வில்வமரமாகும்.  இந்த விருட்சம் அருகில் உள்ள கொன்றை மரத்துடன் சேர்ந்து பூஜிக்கப்படுகிறது. கொன்றை மரம் பங்குனி, சித்திரை மாதங்களில் மாத்திரமே பூக்கிற இயல்புள்ளது. ஆனால் இக்கோவில் உள்ள கொன்றை மரம் வருடத்தில் எல்லா மாதங்களிலும் பூத்துக் குலுங்குவது இக்கோவிலின் சிறப்பு. கோவிலின் வெளிப்பக்கம் பெரிய அளவில் தற்போது சுற்றுச்சுவரும், தென்பகுதியில் ஒரு கலையரங்கமும், கோவில் நுழைவாசலுக்கு வடபக்கம் நவக்கிரக சன்னதியும் அமைக்கப் பட்டுள்ளன. தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையின்கீழ் இக்கோவில் நிர்வகிக்கப்படுகிறது.

இக்கோவிலின் வடக்குச் சுவரில் கல்வெட்டுக்கள் அதிகமாக இருப்பதை காணலாம். இந்த கோவிலில் 11 -ம் நூற்றாண்டிலிருந்து 15 -ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வெட்டப்பட்ட 19 கல்வெட்டுகள் இருக்கு. இவை கன்னியாகுமரி மாவட்டத்தில் சோழர்களின் பண்பாட்டை பற்றி தெரிந்துகொள்ள உதவுகிறது. அதிலும் குறிப்பாக 11- ம் நூற்றாண்டை சேர்ந்த 7 சோழர்கால கல்வெட்டுகள் அவர்கள் நிர்வாகத்தினையும் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் பற்றிய குறிப்புகளும் அடங்கியவை. கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் இக்கோவில் சுந்தரசோழ மன்னர் ஆட்சிக்காலத்தில் ராஜேந்திரசோழ ஈஸ்வரமுடையார் கோவில்ன்ற பெயரில் இருந்தது என்றும், சோழமாராயர் என்பவர் கோவிலுக்கு விளக்கெரிக்க நன்கொடை கொடுத்தார் என்றும், சோழர்களின் தரைப்படை தலைவர்தான் கோவிலின் நிர்வாகத்தையும் கவனித்து வந்திருக்கிறார் என்றும் கோவில்களில் நிர்வாக அதிகாரிகளையும்கோவில் பணியாளர்களையும் அவர் அனுமதியுடன்தான் பணியமர்த்தியுள்ளனர் என்றும் இங்கிருக்கும் கல்வெட்டு குறிப்புக்கள் சொல்லுகின்றனவாம். கிபி 1252-ம் ஆண்டு சோழர்கால கல்வெட்டுகள் இக்கோவிலில் உள்ள குன்றமெறிந்த பிள்ளையாருக்கு ஓத்துக்கபட்ட நிலங்கள் பற்றி குறிப்பிடுகின்றன. 13 -ம் நூற்றாண்டு கல்வெட்டுகளில், இங்குள்ள கைக்கொட்டிப்பாடும் மண்டபத்தில் தினசரி தேவாரப்பாடல்கள் பாடப்பட்டு வந்ததை பற்றிய குறிப்புக்கள் இருக்காம். கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியன் ஆட்சிக்காலத்தில் இக்கோவில் பழுதுபார்க்கப்பட்டது என்றும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றனவாம்.

இந்த திருக்கோவிலிலிருந்து நாகர்கோவிலின் பிரதான பேருந்து நிலையமான வடசேரி பேருந்து நிலையம் மிக அருகில்தான் இருக்கு. இங்கிருந்துதான்கேரளாவுக்கும்,தமிழ்நாட்டின் பலநகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த திருக்கோவிலிலிருந்து கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலுக்கு செல்லும் தேசியநெடுஞ்சாலை வழியாக சென்றால் நாகராஜா கோவில் 0.6 கிமீ தொலைவிலும்வடிவீஸ்வரம் ஸ்ரீஅழகம்மன் திருக்கோவில் 1.1 கிமீ தொலைவிலும்ஸ்ரீ தாணுமாலையன் கோவில், சுசீந்தram  5.2 கிமீ தொலைவிலும் அமைண்.  

திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞசாலை வழியாக போனால்,  புரவசேரி சடைநாதர் கோவில் 1.5 கிமீ தொலைவிலும்108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதிசாரம் அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோவில் 2 கிமீ தொலைவிலும், அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் ,ஜடாயுபுரம் ஸ்ரீஇராமலிங்கசுவாமி திருக்கோவிலும்மருங்கூர் முருகன்கோவில் 7.9 கிமீ தொலைவிலும்தோவாளை முருகன் கோவில்  8.7 கிமீ தொலைவிலும் இருக்கின்றது. 

இப்ப சொல்லுங்க, இத்தனை பெருமைவாய்ந்த கோவிலை தேடிப்பிடிச்சு போவீங்களா?! மாட்டீங்களா?!

நன்றியுடன்,
ராஜி

18 comments:

  1. அழகான படங்கள் சகோ
    //சினிமா நடிகரும், நாடக நடிகரும் பிறந்த ஊர்ன்னா மட்டும் போயிடனுமா ?//
    நான் கேட்க நினைத்தேன் அடுத்த வரிகளில் நீங்களே சொல்லி விட்டதால் சும்மா விடுறேன் இறைவனை வணங்குவதற்காக நான் போவேன்.

    (N)நாகர்கோவில் (S)சுடலைமுத்து மகன் (K)கிருஷ்ணனை எனக்கு மிகவும் பிடிக்கும் நடிப்புக்காகவும், அவரது உதவும் நல்ல மனதுக்காகவும் மிகச்சிறந்த மனிதர்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா ..உங்களுக்காகவே,N.S.கிருஷ்ணன் வீடு இருக்கிற போட்டோ தேடிப்பிடிச்சு பதிவு பண்ணிட்டேன்..

      Delete
    2. பார்த்தேன் நன்றி. அவர்கள் அப்பொழுதே பணக்காரர்கள்தான்.

      Delete
    3. இந்த வீடு கிரகப்பிரவேஷத்திற்கு தியாகராஜ பாகவதரின் கச்சேரி நடந்ததாம்,இந்த வீடு பலகாலமாக கவனிப்பாரற்று இருந்தது.இப்பொழுது அதில் பல வியாபார நிறுவனங்கள்,சிறுவியாபாரிகள் என நிறைய கடைகள் உள்ளன.ஆனாலும் அதன் பொலிவை இழந்துதான் நிற்கிறது...

      Delete
  2. // மீள் பதிவா போட்டுக்கலாம்ன்னு... //

    தொடர்பு கொண்ட போதும் சொல்லவேயில்லை...

    கூடையை பின்ன ஏன் பல வாரங்கள் ஆவுதுன்னு இப்ப தான் புரியுது... ஹிஹி....

    ReplyDelete
    Replies
    1. ஒரு பக்கம் கூடை பின்னிக்கிட்டே இருந்தாலும் மனம் ஒருபக்கம்,நாங்கள் சென்று வந்த ஊர்களை பற்றி மனசு அசைபோட்டுக்கொண்டே இருக்கும்,அதுபற்றிய தகவல்களை திரட்டிக்கொண்டே இருப்பேன்,உடனே அது பதிவாகிடும்,நான் எப்போ பதிவிடுவேன்,என்ன பதிவிடுவேன்னு எனக்கே தெரியாது,நினைவு சொல்லும் பதிவுகள் வெளிவரும்..நாங்களும் பஞ்ச் டயலாக் பேசுவோம் இல்ல ..

      Delete
  3. இக்கோயில் பற்றிய தகவல்கள் சிறப்பு.

    துளசிதரன்

    அட! என ஊர் கோயில் பற்றி சொல்லியதுக்கு ரொம்ப நன்றி ராஜி. நிறைய த்டவை போயிருக்கிறேன். இப்ப நல்லா செஞ்சுருக்காங்கன்னு தோன்றுகிறது நீங்கள் கொடுத்திருக்கும் படம் பார்த்ததும்.

    என் எஸ் கிருஷணன் வீடு வழியா என் தோழி வீட்டுக்குப்ப் போவதுண்டு. அங்குதான் முத்து தியேட்டர். அதை ஒட்டி பெரிய குளம் ஒன்று...பல நினைவுகள் அதன் பின் போகவே இல்லை ஊருக்கு. இனி எப்போது போவேனோ ஊருக்கு தெரியவில்லை.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கீதாக்கா N.S.கிருஷ்ணன் வீடு இருக்கிற தெருவழியாக நீங்க முத்து தியேட்டர் கடந்து நாகராஜா கோவிலின் கிழக்கு வாசல்வழியாக நாகராஜா கோவிலுக்கு போகலாம்,அதற்கு பக்கத்தில இருக்கிற பெருமாள் கல்யாண மண்டபத்துக்கு எதிரே இருக்கிற செம்மான் குளத்தை பற்றித்தான் சொல்லுறீங்கன்னு நினைக்கிறேன்.நான் சின்னவயசில எங்க அப்பா கூட முதல்முதலா சென்ற சமயத்திலையே,நகரின் மொத்த சாக்கடையும் அந்த குளத்தில்தான் பாய்ந்துகொண்டிடுருந்தது,அதுவும் நீங்கள் சொன்ன முத்துதியேட்டர் பக்கத்தில் உள்ள ஓடை வழியாக,பிறகு அதைச்சுற்றி உள்ள விவசாயநிலங்கள் வீட்டுமனைகளாக மாறிய பிறகு குளம் முற்றிலுமாக அழிந்துவிட்டது .அந்த குளத்தின் நடுவே ஒருகல்மண்டபம் இருந்ததாக சொல்லப்படுகிறது .குளத்தின் நடுவே இன்றும் அதன் சிதிலங்கள் இருப்பதாக அந்தக்காலத்தில் வாழ்ந்த பெரியவர்கள் சொன்னதாக ஒரு செவிவழி செய்தியும் உண்டு...

      Delete
  4. இந்த திருக்கோவிலிலிருந்து நாகர்கோவிலின் பிரதான பேருந்து நிலையமான வடசேரி பேருந்து நிலையம் மிக அருகில்தான் இருக்கு. இங்கிருந்துதான், கேரளாவுக்கும்,தமிழ்நாட்டின் பலநகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த திருக்கோவிலிலிருந்து கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலுக்கு செல்லும் தேசியநெடுஞ்சாலை வழியாக சென்றால் நாகராஜா கோவில் 0.6 கிமீ தொலைவிலும், வடிவீஸ்வரம் ஸ்ரீஅழகம்மன் திருக்கோவில் 1.1 கிமீ தொலைவிலும், ஸ்ரீ தாணுமாலையன் கோவில், சுசீந்தram 5.2 கிமீ தொலைவிலும் அமைண். //

    ரொம்ப சுத்தி வளைச்சு சொல்லியிருக்கீங்க ஹிஹிஹிஹி!! ஒழுகினசேரியிலிருந்து வடசேரி நடக்கும் தூரம் தான். நாகராஜாகோவில் மிக மிக அருகில்.

    //இந்த திருக்கோவிலிலிருந்து கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலுக்கு செல்லும் தேசியநெடுஞ்சாலை வழியாக சென்றால் நாகராஜா கோவில் 0.6 கிமீ தொலைவிலும், //

    முதல்ல பயந்துட்டேன் கன்னியாகுமாரி பகவதி கோயில் செல்லும் தேசிய நெடுஞ்சாலைன்னு பார்த்து என்னடா நாகராஜா கோயில் இடம் மாறிடுச்சான்னு!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹா ஹா ஹா

    எங்க ஊர் திருப்பதிசாரம் ஒழுகினசேரிலருந்து 4 அரை கிலோமீட்டர்.

    நாங்க நடந்தே சென்றுவிடுவதுண்டு. அப்போ எல்லாம். ஒழுகினசேரி என்றதும் சில நினைவுகள் வருது..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அடடே...   உங்க ஊரா கீதா...   சூப்பர்.   நீங்க இந்தக் கோவிலுக்கு சென்றிருக்கிறீர்கள் என்பதும் சந்தோஷம் தருகிறது.

      Delete
    2. ஆமாம் கீதாக்கா ...சோழராஜா கோவிலில் இருந்து சத்திரம் ஸ்கூல் வழியாக நடந்தே சென்று தீயணைப்புத்துறை அலுவலகம் வழியாக வெளியே சென்றால்.நாகராஜா கோவிலுக்கு செல்லும் பிரதான சாலைக்கு போய்டலாம்.நான் கூகுள் மேப் சொன்னபடி சொன்னேன்.நீங்க நடராஜா மேப் படி வழி சொல்லிடீங்க..அப்புறம் எங்க அப்பா சொல்வர்,அவர் சின்னவயசா இருக்கும் போது நாகராஜா கோவிலுக்கு சென்றதுண்டாம்,அப்பொழுது கிழக்கு வாசல் போறவழி வயல்வரப்பு வழியாக தான் நடந்த்து செல்வார்களாம்.இப்பொழுது அந்த இடமெல்லாம் வீடாக மாறிவிட்டன என்று சொல்வார்,சரி ஒழுகினசேரிஎன்று ஒரேவரியில சொல்லிடீங்க,அந்த ஒழுகினசேரி எப்படி உருமாறிடுச்சுன்னு தேடி தேடி பதிவு பண்ணி இருக்கிறேன்.உபமங்களநேரி என்ற பெயருக்கு ஆதாரம் இருக்கு,ஒழுகினசேரி கிராமத்தில் உள்ள பிராமண சத்திரம் பலகையில் அப்படிதான் இருக்கிறது.நாங்க புத்திசாலியாக்கும் ..அதுக்கே நீங்க ஒருதடவை உங்க ஊரை சுத்திக்காட்டலாம் ..

      Delete
  5. அழகான கோவில். தகவல்களும் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அண்ணா ...

      Delete
  6. போரிட வந்த சோழன் கோவில் கட்டிவிட்டு போரிட்டானா, திரும்பிப் போய்விட்டானா என்று சொல்லவே இல்லையே!

    படங்கள் அழகு.  அழகான கோவில்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க அண்ணா..போரிட வந்தது வரைதான் சொன்னாங்க திரும்போனது பற்றி சொல்லல..ஒருவேளை அப்போ தஞ்சாவூருக்கு பாஸ் சர்வீஸ் இல்லை போல,நான் வேணுமின்னா டைம் ட்ராவல்ல ஒருஎட்டு போய் கேட்டுட்டுவந்து சொல்லவா ..ஹா..ஹா..

      Delete
    2. ஈ பாஸ் கிடைக்கவில்லையோ என்னவோ சோழனுக்கு!

      Delete
  7. நாகர்கோயில் போயிருக்கேன். ஆனா இந்தக் கோயில் போகல. அடுத்தமுறை போகும்போது கண்டிப்பா பார்க்கிறேன். எதுக்காக இல்லனாலும் உங்களோட இந்த பதிவுக்காக.

    ReplyDelete
    Replies
    1. வெளியூரில் இருந்து வருவதாக இருந்தால்,நாகர்கோயிலில் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன...இந்த கோவில் அதிகம் யாருக்கும் தெரியாது.அதுவும் தெருவுக்குள் இருப்பதால் செல்வது கடினம்,நீங்கள் செல்வதாக இருந்தால்,வேறு ஒரு சார்ட் உங்களுக்கு தருகிறேன்.இது தெரிந்து வைத்துக்கொள்வதற்க்காக...

      Delete