Tuesday, August 14, 2018

ஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா?!



நம்மூர்ல கடவுளுக்கு, கடவுளோட அடியவர்களுக்கு, நாட்டை ஆண்ட மன்னாதி மன்னர்களுக்கு, காதலிக்கு, மனைவிக்கு, அம்மாக்கு, அப்பாக்கு, கணவனுக்கு.. இவ்வளவு ஏன் நடிகர், நடிகைகளுக்குன்னுகூட கோவில் இருக்கு. ஆனா, தமிழ்புலவருக்குன்னு தனி கோவில் இருக்குன்னு சொன்னா நம்பமுடியாது. அதும் பெண்புலவருக்குன்னு தனிக்கோவிலும், அவருக்குன்னு ஒரு நோன்பு இருக்குதுன்னு சொன்னா ஒருசில மாவட்டத்துக்காரர்கள் தவிர மத்தவங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்ல. வினாயகர்மேல் கொண்ட பக்தியால் முதுமைக்கோலத்தை வரமா வாங்கி, தமிழ் தொண்டாற்றி, சுட்ட பழம் வேண்டுமா?! சுடாத பழம் வேண்டுமாவென முருகனால் கலாய்க்கப்பட்ட அவ்வையாருக்குதான் தனிச்சன்னிதியும், தனி நோன்பும் நாஞ்சில் நாட்டில் கொண்டாடப்படுது.



பொதுவா  எட்டு செவ்வாய் கிழமைகளில் ஒரு செவ்வாய் கிழமை கெட்ட செவ்வாய்க்கிழமைன்னு சொல்வாங்க. அது எந்த செவ்வாய் கிழமைன்னு ஜோசியக்காரர்களாலேயே கண்டுப்பிடிக்க முடியாதுன்னும்  அதனால, செவ்வாய்க்கிழமைகளில் எந்த நல்ல காரியமும் செய்யக்கூடாதுன்னு எங்க ஊர்ப்பக்கம் சொல்வாங்க. ஆனா ஆடி செவ்வாய் மட்டும் ரொம்ப விசேசம்.. அம்மன் கோவில்ல திருவிழா, அம்மன் கோவில்களுக்கு போறதுன்னு ரொம்ப விசேஷம். அதேமாதிரி ஆடிச்செவ்வாய் தேடிக்குளின்னு ஒரு பழமொழி இருக்கு.

மதுரை, கன்னியாகுமரி பக்கம் அவ்வை நோன்புன்னு ஆடி இல்லன்னா தைமாசம் கொண்டாடுவாங்களாம்.  இந்த இரண்டு மாதங்களிலும் வழிபாடு செய்ய தவறும் பட்சத்தில் மாசியிலும் இவ்வழிபாடு செய்யலாம். "அசந்தால் ஆடி, தகுந்தது தை, மறந்தால் மாசி"ன்னு  ஒரு சொலவடையே உண்டு.  எங்க ஊர் பக்கம் இந்த நோன்பு இல்ல. என் அஞ்சு வயசு வரை ராமநாதபுரம் மாவட்டத்துல அம்மா, அப்பா குடும்பம் இருந்ததால ஒரு சில வருசம் இந்த நோன்பை அம்மா இருந்திருக்காங்க. அப்பப்ப சொல்வாங்க.  சாப்பிடும்போது அப்பா இல்லன்னு அழுவேனாம். அப்பாக்கு கொழுக்கட்டை, தேங்காய்லாம் எடுத்து பாவாடைல கட்டிக்கிட்டு அழிச்சாட்டியம் பண்ணுவேன்னும், அதை வாங்க படாதபாடு படனும்ன்னு அம்மா சொல்வாங்க. இந்த நோன்பை ஜாதி,  வயசு வித்தியாசமில்லாம அத்தனை பேரும் கொண்டாடலாமாம். நல்ல கணவன் அமைய, கிடைச்ச கணவன் அன்பா இருக்க, குழந்தைப்பேறு கிடைக்க இந்த நோன்பு இருக்கலாம்.

ஆடி செவ்வாயில் தெருவில் உள்ள பெண்கள்லாம் வயது வித்தியாசமில்லாம வயதில் மூத்த சுமங்கலி பெண்ணின் தலைமையில் பொழுதடைஞ்சதும் ஒரு வீட்டில் கூடுவாங்க.  எல்லா பெண்களும் வரும்முன் அந்த வீட்டில் இருக்கும் ஆண்கள் அத்தனைபேரும் சிறு ஆண்குழந்தைகூட அந்த வீட்டில் இருக்க அனுமதி இல்லை. ஆண்கள் இந்த நோன்பை பார்க்கவோ, இதுபற்றி பேசவோ இங்கு படைக்கப்படும் பிரசாதத்தை சாப்பிடவோ அனுமதியில்லை. எப்படி இந்த நோன்பு எப்ப செய்யுறாங்கன்னு கணவர், அப்பா, மகன், சகோதரன்னு யார்க்கிட்டயும் பகிர்ந்துக்க மாட்டாங்க. ஒருவேளை ஆர்வத்துல யாராவது ஒரு ஆண், நோன்பு நடக்கும் வீட்டிற்குள் எட்டிப்பார்த்தால் அவரின் கண்பார்வை பறிப்போகுமென்பது நம்பிக்கை.


வீட்டிலிருக்கும் ஆண்களையெல்லாம் வெளியேத்தி, அவரவர் வீட்டிலிருந்து பச்சரிசி, தேங்காய், பழம், வெத்தலை, பாக்கு, கற்பூரத்தோடு புங்க இலை, புளிய இலையையும் கொண்டு வருவர்.  வீட்டை சுத்தப்படுத்தி, செம்மண் இட்டு, சாணத்தால் பிள்ளையார் பிடிச்சு பூஜை ஆரம்பமாகும். இவ்வாறு பிடிக்கப்படும் பிள்ளையார் வருடக்கணக்கில் கெட்டித்தன்மை மாறாம கல்லுப்போல இருக்குமாம்.   அவரவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த பச்சரிசியை ஊற வச்சு, கையாலாயே இடிச்சு மாவாக்கி கொழுக்கட்டை பிடிப்பர்.  கொழுக்கட்டைதான் நைவேத்தியத்துக்கு முக்கியம். அன்றைய தினம் செய்யப்படும் உணவுப்பொருள் அத்தனையிலும் உப்பு சேர்க்க மாட்டாங்க. அதன்பின் விளக்கேத்தி பூஜைகள் செய்வர். பிறகு அம்மன் வரலாறுகளும், அவ்வை கதைகளும் இரவு முழுக்க வயதில் மூத்த பெண் சொல்ல மற்ற பெண்கள் கேட்பர்.

பின்னர், நீர் நிரம்பிய பாத்திரத்தில் மாங்கல்யத்தை காட்டுவர். தண்ணீரில் தெரியும் பிம்பத்தை அனைவரும் வணங்குவர். இறுதியில் நைவேத்தியத்துக்கு படைத்த அத்தனையும் விரதமிருந்தவங்க  வாழைப்பழம், தேங்காய் அனைத்தும் சாப்பிட்டு முடிப்பர்.  பொழுது விடிஞ்சதும் பூஜை செய்த தடமே தெரியாமல் வீட்டை சுத்தப்படுத்தி மொழுகி கழுவிய பின் அவரவர் வீட்டுக்கு செல்வர். அதுக்கப்புறம்தான் அந்த வீட்டு ஆண் உள் நுழைய அனுமதி.   இதுப்போல நோன்பு இருக்க வருடா வருடம் வீட்டை மாத்திக்கிட்டே இருப்பாங்க.  சுழற்சி முறைல எல்லார் வீட்டுலயும் இதுமாதிரி நோன்பு செய்வாங்க.  பெரும்பாலும் ஆடி மூணாவது செவ்வாய்ல இந்த விரதம் இருப்பாங்க.

சங்கக்கால பெண் புலவரான அவ்வை மூதாட்டியை தெய்வமாக்கி, நோன்பிருக்கும் வழக்கம் நாஞ்சில் நாட்டில்தான் உருவானதாம். ஆரல்வாய்மொழி - பூதப்பாண்டி சாலையில் உள்ள தாழக்குடிக்கு அடுத்து அவ்வையார் அம்மன் கோவில் உள்ளது. இங்கு அவ்வைக்கு நெல்லியடி அம்மன்னு பேரு. அவ்வையார் இங்கதான் இயற்கை எய்தினார்ன்னு சொல்லப்படுது. சுட்டப்பழம் வேண்டுமா என முருகன் அவ்வையாரிடம் விளையாடியது இங்கதான்ன்னு இங்க சொல்றாங்க. ஆனா, பாருங்க  மதுரை அழகர்கோவிலிலிருந்து பழமுதிர்சோலைக்கு போற வழில ஒரு நாவல் மரத்தையும் இதுப்போல சொல்லி போர்ட் வச்சிருக்காங்க. எது உண்மைன்னு அவ்வையாருக்கும், முருகனுக்கும்தான் வெளிச்சம்.



அவ்வையாருக்கு தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில்தான் கோவில்கள் இருக்கு. வேறெங்காவது இதுமாதிரி கோவில் இருக்கான்னு தெரில. அதேப்போல, இங்க ஒரே தாலுகாவில் மொத்தம் மூணு அவ்வை கோவில் இருக்குறது ரொம்ப ஆச்சர்யமான விசயம். தோவாளை தாலுகாவில் ஆண், பெண் பாகுபாடின்றி எல்லாருக்கும் அவ்வையார்ன்னு பேர் வைத்து அவ்வையாரை சிறப்பிக்குறாங்க.


தாழக்குடிக்கு அடுத்து ஆரல்வாய்மொழியை அடுத்த முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் அவ்வைக்கென தனிச்சன்னிதி இருக்கு. இசக்கியம்மன் கதையை வேற ஒரு பதிவில் விரிவா பாக்கலாம். வெறிக்கொண்டலைந்த இசக்கி என்ற பெண்ணை அவ்வையார் சாந்தப்படுத்தியதால் இங்கு அவ்வையாருக்கு தனிச்சன்னிதி உண்டானது. பரம எதிரியான   சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களுக்குள்ளான பகையை போக்கிக்கொள்ள அவ்வையார் தலைமையில் சமரசம் செய்ய இங்கு கூடியதாக வரலாறு. அவ்வாறு வரும் மன்னர்கள் தங்குவதற்கு தனித்தனியே பந்தல் போடப்பட்டதால் இவ்வூருக்கு முப்பந்தல் என பேர் உண்டானதாக செவிவழி கதை ஒன்றுண்டு.   இதுக்கடுத்து,, அழகிய பாண்டியபுரம் பக்கத்தில் உள்ள குறத்தியறை மலைச்சரிவில் உள்ள குடவரை கோவிலையும் அவ்வையார் அம்மன் கோவில்ன்னுதான் சொல்லுறாங்க. மேல சொன்ன மூன்று கோவில்களிலும் ஆடிமாதம் செவ்வாய் கிழமைகளில் கூழும், கொழுக்கட்டையும் வச்சு படைப்பாங்க. நோன்புக்குதான் ஆண்கள் அனுமதி இல்லியே தவிர, அவ்வையார் கோவிலுக்கு செல்வதற்கு ஒன்னும் தடையில்லை.


நாகை மாவட்டம் துளசியாப்பட்டிணத்திலும் அவ்வைக்கென தனிக்கோவில் இருக்கு. அதேப்போல உத்திரமேரூர்  அடுத்த ஆலஞ்சேரியிலும் அவ்வைக்கென தனிக்கோவில் இருக்கு. இங்கும் ஆடிச்செவ்வாய் மிக விசேசமாய் கொண்டாடப்படுது. அவ்வை நோன்பில் ஆண்களுக்கு அனுமதியில்லாததால், இந்த நோன்பை நிர்வாணமாய் கொண்டாடப்படுதா ஒரு சாரார் நினைச்சுக்கிட்டிருக்காங்க.  ஆனா, அப்படி இல்ல.  இந்த பேச்சினை நம்பி பெண்களை நிர்வாணமாய் பார்க்க ஆசைப்பட்டு பூஜை நடக்கும் இடத்தை எட்டி பார்த்தவ்ங்க பார்வை பறிபோனதாய் அம்மா சொல்வாங்க.  

தகடூரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி ஆலயத்தில் உள்ள சூலினி துர்க்கை அம்மனின் முழு உருவத்தை ஆடி மாதம் மூன்றாம் செவ்வாயில் மட்டுமே மாலை 4.00 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசிக்கலாம். மற்ற நாட்களில் முகதரிசனம் மட்டுமே!



ஆடிச்செவ்வாய் தேடிக்குளி...ன்னு ஒரு பழமொழி இருக்கு. சனிக்கிரகத்தை போல செவ்வாய் கிரகமும் ஜாதகக்காரருக்கு தோஷத்தை உண்டாக்கக்கூடியது. சனி, செவ்வாய்மாதிரியான பாவக்கிரகங்கள் கோசாரமாக சஞ்சரிக்கும்போது அதன் கதிர்வீச்சு தீவிரமாய் தாக்கும். இதனால் ஜாதகக்காரருக்கு மன, உடல்ரீதியாய் பெருத்த பாதிப்பை உண்டாக்கும். செவ்வாய் பலமாய் இருக்கும் ஜாதக்காரர் பணம், பதவி, நிம்மதின்னு ராஜவாழ்க்கை வாழ்வர். செவ்வாய் பலமில்லாதபோது படாத பாடு படுவர். செவ்வாய் பலமில்லாதவங்க எண்ணெய் தேய்த்து குளித்து முருகப்பெருமானையும். துர்க்கையையும் வணங்கி வந்தால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.


நன்றியுடன், 
ராஜி

16 comments:

  1. //"அசந்தால் ஆடி, தகுந்தது தை, மறந்தால் மாசி"ன்னு ஒரு சொலவடையே உண்டு. //

    இந்தச் சொலவடையெல்லாம் நான் கேட்டதேயில்லை!

    ReplyDelete
    Replies
    1. நானும்தான் கேட்டதில்லை. எங்க ஊர் பக்கம் இந்த நோன்பு இல்ல. ஆனா, சின்ன வயசில் அம்மா, அருப்புக்கோட்டை பக்கம் ஒரு கிராமத்தில் இருந்தபோது இந்த நோன்பை இருந்திருக்காங்க. அந்த கதைகளை அம்மா சொல்வாங்க.

      Delete
  2. ஐயோ... ஆண்கள் எல்லாம் இந்த விழா எப்படி நடந்தது என்று கேட்டால் கூட சொல்ல மாட்டார்கள், அவர்களுக்கு கண் போய்விடும் என்றால் இப்போது படிக்கக் கொடுக்கிறீர்களே.. படிக்க பயமா இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும். அந்த காலத்தில் வாய்க்கு ருசியா சாப்பிட முடியாத பெண் யாரோ கிளப்பி விட்ட நோன்பா இருக்கும்.

      Delete
  3. அழகர் கோவில் வழியில் இருக்கும் அந்த மரத்தை நானும் படம் எடுத்து முகநூலில் பகிர்ந்திருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. எங்கக்கிட்டயும் சீப்பு இருக்கு மொமண்ட்.
      நானும் பார்த்திருக்கேன். படமெடுத்து பகிர்ந்திருக்கேன்

      Delete
  4. பல தகவல்களை கொடுத்து அசத்துறீங்க சகோதரி... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே கேட்டது, பார்த்தது, படித்ததுண்ணே

      Delete
  5. தகவல்கள் எனக்கு புதிது.

    ReplyDelete
    Replies
    1. ஆச்சர்யமா இருக்குண்ணே

      Delete
  6. எத்தனை எத்தனை நம்பிக்கைகள்.....

    தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கை!! அதானே எல்லாம்?!

      Delete
  7. அவரு ஒளவையார் தாங்க, ஒரேயடியா "வ்"வீட்டிங்க! :)

    ReplyDelete
    Replies
    1. ஒ’ள’வையார்ன்னு எழுதாம போனேன்னு சந்தோசப்படுங்க சகோ

      Delete
  8. அருமையான பதிவு.ஒளவையாருக்குக் கோவில்.....இன்று உங்கள் புண்ணியத்தில் தெரிந்தது.விரத முறை ஆச்சரியப்பட வைத்தது......அழகான படங்கள். நன்றி,தங்கச்சி.......

    ReplyDelete
    Replies
    1. இந்த பழக்கம் எங்க ஊர் பக்கமில்லைண்ணே.

      Delete