”சோயா உருண்டை” 1980 களில் கல்யாண பந்திகளில் வெஜ் பிரியாணிகளில் தென்பட்டது. ருசி பிடிச்சு போய் அப்பா, அம்மா இலைகளில் இருப்பதையும் வாங்கி சாப்பிட்டதால அப்பா தேடி பிடிச்சு வாங்கி வந்தார். அப்போலாம் அதன் பேர் கூட தெரியாது, அது தயாரிச்சு வித்த கம்பெனி பெயராலேயே “மீல் மேக்கர்”ன்னுதான் சொல்லிட்டு இருந்தேன். வெஜ் பிரியாணி செய்யும்போது பீன்ஸ், கேரட், பட்டாணி கூட இது கண்டிப்பா இருக்கும்.
சில சமயம் காய் எதும் இல்லாட்டி கூட இந்த சோயா உருண்டையை போட்டு கூட சமைச்சிருக்கோம். டிவில பார்த்து செஞ்சாங்களா?! இல்ல தானா செஞ்சாங்களா?!ன்னு தெரியலை.., இப்போலாம் காய் எதும் இல்லாட்டி டக்குன்னு இதை பத்து நிமிசத்துல பொறியலா செஞ்சுடுவோம். என் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
சோயாவை சாப்பிடுறதால வரும் நன்மைகள் என்னன்னா, இதெல்லாம் தெரியாமதான் சாப்பிட பழகினேன். ஆனா, பதிவு போடுறதுக்காகதான் தேடினேன். ஏன்னா, சமைக்குறது நல்லா இல்லைன்னாலும் இப்படி டிப்ஸ் குடுக்குறதால கொஞ்சம் தப்பிச்சுக்கலாமே அதனால்தான்!!
*சோயாவை சாப்பிட்டுல சேர்த்துக்கிட்டா எலும்புலாம் உறுதியாகும். சோயாவுல கால்சியம் குறைவா இருந்தாலும் இதுல இருக்குற தாவர ஹார்மோன் எலும்புகள் தேய்மானத்தையும், உதிர்வையும் தடுக்கும் சக்தி கொண்டதாம்.
* மெனோபாஸ் (Menopause) பிரச்னைகளைத் தடுக்குற ஆற்றல்
சோயாவுக்கு இருக்கு. . இதில் இருக்கிற ஐசோ பிளேவினாஸ்ன்ற பொருள் பெண் ஹார்மோனான
”ஈஸ்ட்ரோஜன்” போல செயல்படும் சக்தி கொண்டது. இது மெனோபாஸ்
நிலையின்போது ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கும் சக்தி கொண்டதாம்.
2. இருதயத்தின் சக்தியைக் கூட்டுதாம்.
இரத்தக் குழாய்களின் இளகுத் தன்மையை அதிகரித்து, கொலஸ்டிரால் அளவைக்
குறைத்து, இரத்தக் குழாய்களுக்குள் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்குமாம்.
4. சோயா சில வகை புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டதாம். ஆரோக்கியமான உடல் நிலை இருக்குறவங்க தினமும்
25கி. சாப்பாட்டுல சேர்த்துக்கலாம். ரிஸ்க் இருக்கிறது
என்றால், 50 கி. எடுத்துக்கொள்ளுங்கள். இது ப்ராஸ்டேட் கான்ஸர்
உருவாக்குகிற என்ஸைமைத் தடுக்கும் சக்தி கொண்டது. பெண்களுக்கு கர்ப்பப்பை
கான்ஸர் வராமல் தடுக்குமாம்.
5. சோயாவின் உணவுப்பொருள் தகுதி மற்றவற்றைவிட அதிகம். இயற்கையாகவே
இருக்கிற ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், வைட்டமின் "ஈ" லெசித்தின் போன்றவை கெட்ட
கொலஸ்டிராலைக் குறைத்து இருதயப் பாதுகாப்பில் ஈடுபடுகின்றதாம்.
சோயாவில் இருக்கும் சத்துகள்:
தானிய வகைகளிலேயே சோயாவில்தான் அதிக புரோட்டின் இருக்குதாம். 100 கிராம்
சோயாவில் 43 கிராம் புரோட்டின் கிடைக்குதாம். இந்த புரோட்டினில் நம்
உடலுக்குத் தேவையான அடிப்படை அமினோ அமிலங்கள் அனைத்தும் இருக்குதாம். (இந்த
அமினோ அமிலங்களை நம் உடல் தானாகவே உருவாக்கிக்கொள்ள முடியாது). மாமிச
புரோட்டினுக்கு இணையாக வரக்கூடிய ஒரே ஒரு சைவ புரோட்டின் சோயா பீன்ஸ்தான். அப்படி இருந்தாலும் சோயாவில் கொழுப்பு குறைவாகவே இருக்குது. 100 கிராமில் 20 கிராம் கொழுப்புதான் இருக்குது. சோயாவில் கார்போஹைட்ரேட் (Carbohydrate) அளவும் குறைவுதான். 100 கிராமில் 30 கிராம்தான். சோயாவில் நல்ல நார்ச்சத்து இருப்பதால் தளர்ந்த சோர்வடைந்த இருதயத்திற்கு சோயாவின் பாதுகாப்பு அபரிமிதமானது. சோயா ஒரு இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட். இதில் லெசித்தினும், வைட்டமின் "ஈ" யும் சேர்ந்து இருக்கிறது. மினரல்கள் சோயாவில் நிறைய இருக்கின்றன.மக்னீஷியம் (magnesium) 280 மி.கி.,கால்சியம் (calcium) 277
மி.கி., பாஸ்பரஸ் 704 மி.கி. இருக்கிறது. இதனால் சோயா சுலபமாக
எலும்புகளுக்கும், பற்களுக்கும் பாதுகாப்பு வழங்கும். தவிர, சோயாவில்
இருக்கும் இரும்புச்சத்து இரத்தத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
ம்ம்ம்ம் போதும் லெக்சர். என்ன சமைக்குறேன்னு பார்க்கலாம்ன்னு நீங்க சொல்றதுக்குள்ள....,
4 பேர் கொண்ட குடும்பத்துக்கு சமைக்க தேவையான பொருட்கள்:
சோயா உருண்டை - 25
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு 10 பல்
மிளகு - சிறிது
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
பட்டை- 1
சோம்பு- சிறிது
கிராம்பு- 2
கரம் மசாலா பவுடர் - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1டீஸ்பூன்
வாசனைக்கு கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி இலை
வாணலில கொஞ்சம் தண்ணி ஊத்தி கொஞ்சம் உப்பு போட்டு கொதிக்க வைங்க. ரெண்டு கொதி வந்ததும் சோயா உருண்டையை கொட்டி ஒரு கொதி வந்ததும், அடுப்பை ஆஃப் பண்ணி 5 நிமிசம் வாணலியை மூடி வைங்க.
அஞ்சு நிமிசம் கழிச்சு, வெந்த சோயா உருண்டைகளை வடிகட்டி, மீண்டும் நல்ல தண்ணி ஊத்தி ரெண்டு முறை அலசிக்கோங்க. ஏன்னா, அப்படியே சேர்த்துக்கிட்டா ஒரு சிலருக்கு அந்த சோயா வாசனை பிடிக்குறது இல்ல. அதுக்காக.
அப்படி 2 முறை அலசி, தணி வடிக்கட்டுன சோயா உருண்டையை ரெண்டா மூணா பிச்சுக்கோங்க.
ஒரு வாணலில எண்ணெய் ஊத்தி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்துக்கோங்க.
கடுகு பொறிஞ்சதும், சோம்பு, பட்டை, கிராம்பு சேர்த்துக்கோங்க.
அவையும் பொறிஞ்சதும் வெங்காயம் சேர்த்துக்கோங்க.
கூடவே கொஞ்சம் உப்பு சேர்த்துக்கோங்க. உப்பு சேர்த்துக்கிட்டா வெங்காயம் சீக்கிரம் வேகும், பச்சை வாசமும் சீக்கிரம் போகும்..,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கும்போது அடிப்பிடிக்காது.
வெங்காயம் பொன்னிறமா வதங்கினதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் இருந்தா சேர்த்துக்கோங்க இல்லன்னாலும் பரவாயில்லை.
தக்காளி நல்லா வெந்து மசிஞ்சதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக்கோங்க.
மிளகாய் தூள்லாம் லேசா எண்ணெய்ல வதக்கி கொஞ்சமா தண்ணி ஊத்தி கொதிக்க வைங்க.
மிளகாய் தூள் வாசனை போனதும் சோயா உருண்டையை கொட்டிவச்சு மிதமான தீயில கிளறுங்க.
அப்படி வதக்கும்போது கொஞ்சம் கரம் மசாலா தூள் சேர்த்துக்கோங்க.
கடைசியா மிளகை கரகரப்பா இடிச்சு பூண்டை பஞ்சு போல நசுக்கி சேர்த்துக்கொங்க. கடைசியா வாசனைக்கு கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி இலை கிளறி பறிமாறுங்க.
டிஸ்கி: மிளகு போட்டிருப்பதால சின்ன குழந்தைங்க காரம்ன்னு சொல்லலாம். அதனால, சின்ன பிள்ளைங்க இருந்தா மிளகு கொஞ்சமா சேர்த்துக்கோங்க. நாலஞ்சு நாளா வெளியூருக்கு போய்ட்டு வந்து ஹோட்டல் சாப்பாட்டுனால நாக்கை அடக்கம் பண்ணி வச்சிருந்தா சாதம், ஒரு பருப்பு சாம்பாரோடு சேர்த்து இதை சாப்பிட்டா அடக்கமான நாக்குக்கு ருசி தெரியும்.
சாம்பார்சாதம், தயிர்சாதம், எலுமிச்சை சாதத்துக்கு தொட்டுக்க நல்லா இருக்கும். அதுமட்டுமில்லாம “அந்த” மெயின் டிஷ்சுக்கு இது நல்ல சைடு டிஷ்சா இருக்கும். அது எப்படி உங்களுக்கு தெரியும் அக்கான்னு வந்து பாசமா கேட்டாலும் கம்பெனி ரகசியங்கள் வெளியே சொல்வதற்கில்லை.
சமைச்சுக்கிட்டே பதிவை தேத்த போட்டோ எடுக்கும்போது என் வீட்டு சின்ன அம்மிணி வந்து எதுக்குன்னு கேட்டுச்சு. இதுப்போல பதிவு போடறதுக்குன்னு சொன்னா,,, ஆமாமா! ரொம்ப கஷ்டமான டிஷ் பாரு. யாருக்கும் தெரியாது பாரு. போம்மா போய் உருப்படியா சமைச்சு எங்களுக்கும் போட்டு, பதிவையும் போடுன்னு சொல்லுச்சு. பார்ப்போம் பதிவுக்கு என்ன ரெஸ்பான்ஸ்ன்னு!!??
அடுத்த புதன் வேறொரு ஈசியான அதாவது எனக்கு ஈசியான சமையற்குறிப்போடு வரேன்.
