Friday, December 06, 2013

சொர்ணாகர்ஷண கிரிவலம்,திருவண்ணாமலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

கார்த்திகைத் தீபம் போய் மாசமாச்சு!! இன்னிக்கு, பௌர்ணமியும் இல்ல. அப்புறம் என்ன திடீர்னு திருவண்ணாமலை கிரிவலம் பத்தி பதிவு எழுதுறேன்னு நினைகிறீங்களா!? இது சாதா கிரிவலம் இல்ல. என்னை மல்டி மில்லினியர் ஆக்கப்போற கிரிவலம். ஆமா கடந்த வாரம் சனிகிழமை 30 ம் தேதி திருவண்ணாமலைல நடந்த சொர்ணாகர்ஷண கிரிவலம் பத்திதான் ஒரு லைவ் விசிட் புண்ணியம் தேடி போற பயணத்துல இன்னிக்குப் பார்க்கபோறோம். 

சரி  கிரிவலம் கேள்விபட்டு இருக்கோம்.  அது என்ன சொர்ணாகர்ஷண கிரிவலம்!?  ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் தேய்பிறை சிவராத்திரியில்  குபேரன் அருவ வடிவத்தில் அருணாச்சலேஸ்வரர் பெரிய கோவிலில் பிரதோஷ பூஜையில் (பெரிய நந்திக்கு அபிஷேகம் )வழிபட்டுவிட்டு கிரிவல பாதையில் உள்ள (தான் பிரதிக்ஷை செய்த சிவலிங்கத்தில் ) குபேர சன்னதியில் வழிபட்டு, கிரிவலம் வந்து அதன்  பின்பு திருப்பதி செல்வதாக நம்பிக்கை. 

இந்த நாளில் பெரியகோவிலில் பிரதோஷ பூஜையில் கலந்துக்கிட்டு, அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு குபேர சன்னதிக்கு வந்து  குபேர லிங்கத்தை வணங்கி கிரிவலம் வருவது பொருளாதார  ரீதியாக பெரிய அபிவிருத்தியை தரும் என்பது ஒரு நம்பிக்கை.  அதற்காக எல்லோரும் சுத்தினா எல்லோருக்கும்  எல்லாம் கிடைத்துவிடும்னு இல்லை தொண்டு உள்ளத்துடன்  இறைவழிபாட்டை மேற்கொண்டால் மட்டுமே சுபிக்ஷம் கிட்டும்...!!!  

 இந்த சொர்ணாகர்ஷண கிரிவலத்துக்கு    திரளான பக்தர்கள் அண்ணாமலையை வந்திருந்தாங்க. நமக்கும் அழைப்பு வந்திருந்தது. பணக்க்காரியா மாற ஆசை ஒரு பக்கம் இருந்தாலும், பதிவு தேத்த ஆசைப்பட்டு போனதுதான் அதிகம். 

வாங்க! சொர்ணாகர்ஷண கிரிவலத்துல கலந்துக்கிட்டு நீங்களும் செல்வம் பெறலாம்.    இப்ப, திருவண்ணாமலை ன்னு அழைக்கப்படும் இந்த மலை பல்வேறு காலங்களில் பலவிதமான உருவத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த மலை கிருதாயுகத்தில் அக்னியாகவும், தீர்த்தயுகத்தில் மாணிக்கக் கல்லாகவும், துவாபரயுகத்தில் தங்கமாகவும், தற்பொழுது இக்கலியுகத்தில் வெறும் கல்லால் உருவெடுத்த மலையாகவும் விளங்குகிறது. மேலும், "மலையே லிங்க வடிவமாக இருப்பதுனாலதான் மலையை சுற்றுவது இறைவனையே சுற்றுவதற்கு சமம்" ன்னு நம்பபடுது.

 இரட்டை பிள்ளையார் கோவிலிலிருந்து, காலையில் வரும் குரு சூட்சும ஓரையில், குரு அமிர்தாதி கணத்தில் கிரிவலம் கிளம்புறாங்க. ஏன்னா கிரிவலம் செல்வதற்கு ஒரு விதி முறை இருக்கு.  எங்க வேணும்னாலும் தொடங்கி எங்க வேணும்னாலும் முடிக்கக் கூடாது.  கோவிலின் புறத்தே இருக்கும் பூத நாராயணரிடம், மலையை சுற்றுவதற்கு அனுமதி வேண்டிகொள்ளவேண்டுமாம் அதன்பிறகு கிரிவல பயணம் வெற்றிகரமா அமைய இரட்டை பிள்ளையாரை வணங்கி, கோவில் சென்று அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசித்து, அதன் பின் வெளியில் வந்து ராஜ கோபுரத்தை தரிசனம் செய்து கிரிவலத்தை ஆரம்பிக்கனும்.வாங்க எல்லோரும் இரட்டை பிள்ளையாரை வணங்கி கிரிவலம் ஆரம்பிக்க தயாராகிடாங்க நாமும் அவங்க கூட செல்வோம்
 சொர்ணகர்ஷண கிரிவலத்தின் பலன் என்னன்னு கூட வந்த பக்தரிடம் கேட்டகுக்கு,துவாதசி திதியும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து வரும்  சனிப்பிரதோஷம் அன்று அண்ணாமலை கிரிவலம் சென்றால்,ஐந்து வருடங்களுக்கு கிரிவலம் சென்றதற்கான பலன்கள் கிடைக்கும். மேலும், சனிப்பிரதோஷ நேரத்தில்,  பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டு,பிரதோஷ நேரம் நிறைவடைந்த பின்னர் அண்ணாமலையாரை தரிசனம் செய்தால் ஐந்து வருடங்களுக்கு தினமும் அண்ணாமலையாரை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதை  கும்பமுனி என்னும் சித்தர் தனது பாடல்களில் எழுதி இருக்கிறாராம்.

 சுவாதி நட்சத்திரமும், சனிப்பிரதோஷமும் சேர்ந்து வருவது பல ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடக்கும் அற்புத நிகழ்வு. அத்துடன் துவாதசி திதியும் சேர்ந்து வருவது சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வருமாம். அதையே சொர்ணகர்ஷண கிரிவலநாள்ன்னு அண்ணாமலை ஏடு சொல்கிறது. இப்படியே, நாம பேசிக்கிட்டு இருந்தா நம்மோடு வந்தவங்க நம்மை விட்டு கூட்டத்துல காணாம போய்டுவாங்க. அவர்களுடன் அண்ணாமலையானே போற்றி ன்னு உச்சரித்துக்கிட்டே கிரிவலம் நடப்போம். வாங்க!!
இக்கோவிலின் சிறப்பம்சம் என்னன்னா, 66 அடி உயரம் கொண்ட கோவிலின் கோபுரம். இது பதிமூன்று அடுக்குகளை கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கு. இத்துடன் ஏழு பிரகாரங்கள் மற்றும் ஒன்பது அழகான கோபுரங்கள் இருக்கு. பதினைந்தாம் நூற்றாண்டில் மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட இக்கோபுரம் உயரத்தில் இரண்டாவது கோபுரமாகும். கிழக்குப்புறம் உள்ள கோபுரம் ராஜகோபுரம் என அழைக்கப்படுகிறது. அருணாசலேஸ்வரர் கோயில் 25 ஏக்கர்  நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. 

அண்ணாமலையார் கோயிலில் உள்ள ஏழு பிரகாரத்தில் முதல் இரண்டு பிரகாரங்கள் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. மற்ற ஐந்து பிரகாரங்கள் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.இக்கோயிலில் இரண்டு தெப்பகுளங்கள் இருக்கு. இவை பிரம்ம தீர்த்தம் என்று சிவகங்கா தீர்த்தம் என்றும் அழைக்கப்படுது. மேலும், இங்கு ஓர் பிரம்மாண்டமான ஆயிரம் தூண்கள் கொண்ட அழகான மண்டபம் இருக்கு. இவை அக்காலத்தில் ஆட்சி செய்த மன்னர்களால் கட்டப்பட்டது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் ஆட்சி புரிந்த ஹோசலா மன்னர்களால் இங்கு இருக்கும் சில சன்னதிகள் மற்றும் பிரகாரங்கள் கட்டப்பட்டது.
மேல பார்த்த படம் பழைய ஆல்பங்களில் இருந்து எடுக்கப்பட்டது இந்த கோபுரங்கள் எல்லாம் இப்ப இல்லை.  சரி, நம் பயணத்திற்கு வருவோம். விஜய நகரை ஆண்ட மன்னர் கிருஷ்ணதேவராயர் திருவண்ணாமலை கோயில் வளர்ச்சிக்காக கோபுரங்கள், மண்டபங்கள் என பல கட்டிடங்களை கட்டிக்கொடுத்து உதவியுள்ளார்.இதில் 217 அடி கொண்ட ராஜகோபுரம் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியால் உருவாக்கப்பட்டது மேலும் சிவனடியார் இங்கு அக்னி வடிவத்தில் உருவான மற்றொரு வரலாறு உண்டு
இன்றைய அண்ணாமலைப் பகுதியில் அக்காலத்தில் போரூர் என்ற கிராமம் இருந்ததாம் ;இந்த கிராமத்தில் நெசவு சமுதாயத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார் தனகாந்தன்+பொன்னம்மாள் தம்பதியருக்கு சுபக்கிரகங்கள் சுபமான இடத்தில் வலுப்பெற்று நின்றபோதுசிவாம்சத்துடன் ஒரு ஆண் குழந்தை கி.பி.1403 ஆம் ஆண்டில் பிறந்ததாம். பெயர் தனகாந்தன் வயது அதிகரிக்க,அதிகரிக்க யாருடைய உபதேசமும் இல்லாமல் வேத மந்திரங்களைப் பாடத் தொடங்கினான்  தனகாந்தன். தினமும் மந்தார இலையில் யாசகம் பெற்று, ஒவ்வொருவருக்குமே அண்ணாமலையின் பெருமைகளை விவரித்துஐந்து வயதில் அண்ணாமலையாரை எப்படி வழிபட்டால்,அவர்களின் அனைத்து பிரச்னைகளும்,கர்மவினைகளும் தீரும் என்று உரைக்கத் துவங்கினார்.   
இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து செல்வ வளங்களையும் படைத்துஅதை காக்கும் சக்தி ஈஸ்வரனுக்கு மட்டுமே உண்டு என்று தனது தந்தைக்கு உபதேசித்திருக்கிறான்.  தனகாந்தன் ஐந்து வயது முதல் 16வயது வரையிலும் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஆறு வேளைகளிலும் ஆறுமுறை கிரிவலம் வந்திருக்கிறான். கூடவே,ஏராளமானவர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு அந்த குறிப்பிட்ட நாளில் கிரிவலத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறான்.

ஒரே ஒரு முறை கிரிவலம் வந்தவர்கள் கூட தமது துயரங்கள் நீங்கிவளமான வாழ்வை அடைந்தனர்அவ்வாறு கிரிவலம் வரும்போது சிவசக்தி ஜீவ ஐக்கிய தரிசனம் செய்யும் இடத்தில் நின்று நீண்டநேர பிரார்த்தனை செய்து கி.பி.1419 ஆம் ஆண்டில் அதே இடத்தில் இருந்து அண்ணாமலையை நோக்கி ஒளி வடிவில் பயணித்து இரண்டற கலந்திருக்கிறான்  தனகாந்தன். அந்த நாளே கார்த்திகை மாதம் வரும் சனிப்பிரதோஷமும்,அபிஜித் நேரமும் கூடிய சுபயோக சுபவேளை ஆகும். தனகாந்தன் என்ற சதாசிவ பரமேஸ்வர சித்தருக்கு ஜீவசமாதி கிடையாது . பேசிகிட்டே நாம இப்ப தெற்கு கோபுர வாசல் வந்துட்டோம்.
இந்த கிரிவலம் பத்தி மேலும் சில தகவல்கள் உண்டு.  பார்வதி தேவியார் சிவனின் இடபாகம் பெற வேண்டி,  தன் பரிவாரங்களுடன் கார்த்திகை மாதம், கிருத்திகை நட்சத்திரத்தில் மலை வலம் வந்தாராம். அப்பொழுது சிவன் காட்சி கொடுத்து உமையாளுக்கு தன் இடப்பாகம் கொடுத்தார் எனபது வரலாறு.  கூடுதல் தகவலாக நம்முடைய மன செயல்களுக்கு அதிபதி சந்திரனாம். இந்த பௌணமி நாளில் சந்திரன் சூரியனிடமிருந்து அதிகபடியான சக்தியை  கொடுப்பதால் பௌர்ணமியில் மலை வலம் வருவது நல்லது என்றும் அறிவியலாளர்கள் சொல்றாங்க.


மலை சுற்றும் பாதையில் உள்ள நந்திகேஸ்வரர் சன்னதியை வணங்கி விட்டுதான் மலை சுற்ற வேண்டும். மலையின் எட்டு திசைகளிலும் அஷ்டதிக் பாலகர்கள் வழிபட்ட லிங்கங்களில், மலையை சுற்றும் போது முதலில் வருவது இந்திரலிங்கம். கிரிவலம் செல்லும் வழியில் முதன்முதலில் நாம் தரிசிக்க போவது இந்திரலிங்கம். 

இந்த லிங்கம் கிழக்கு திசையை பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. இது தேவர்களின் தலைவன் இந்திரதேவனால் நிறுவப்பட்டதா சொல்றாங்க. சூர்யன் மற்றும் சந்திரன் ஆட்சியில் இந்த லிங்கம்  இருக்கு. தேவர்களின் தலைவனான இந்திரன் தன் பதவியை நிலை நிறுத்திக் கொள்ள திருவண்ணாமலையில் அங்கப் பிரதட்சனம் செய்துள்ளார். அப்படி வரும்போது கிழக்கு திசையில் ஒரு இடத்தில் வரும்போது ஒரு இடத்தில் மின்னல் வெட்டியுள்ளது அப்போது அண்ணாமலையாரின் திருஅருள் என்பதை அறிந்த இந்திரன் தனது பதவி நிலைக்க சிவனிடம் வேண்டினார். 

அப்போ, இந்திரனுக்கு சுயம்பு லிங்கமா சிவன் காட்சி அளிச்சிருக்கார். அதுதான் இப்போ நாம கும்பிடுற இந்திர லிங்கத்தின் வரலாறு. இந்திர லிங்கத்தை வழிப்பட்டா திருமகளின் அருள் கிடைக்கும். செல்வம் பெருகும், பதவி உயர்வு, பணி மாற்றம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது இதன் எதிரே கிழக்கே இந்திர தீர்த்தமும் உள்ளது .
அடுத்து வருவது அக்னிலிங்கம். கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் இரண்டாவது லிங்கம். இதைக் கடந்ததும்,  நகர்ப்பகுதி முடிவடைந்து  மலையும், காடும் சூழ்ந்த பகுதி துவங்கும்.  கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். கிரிவலப் பாதையில் ரெண்டாவதாகவும், இடதுப் புறத்திலயும் இருப்பதுதான் அக்னி லிங்கம்.  தென் கிழக்கு திசையை நோக்கி இருக்கு இந்த லிங்கம். பஞ்சப் பூதங்களில் அக்னி ஸ்தலமே திருவண்ணாமலைன்றதால இந்த லிங்கத்துக்கு தனி இடம். 

கிரிவலப் பாதையில் 3 ருத்ர மூர்த்திகள் அங்கப் பிரதட்சணம் செய்தனர். அவர்க்ளின் திருமேனிகள் ஜோதியாய் மாறியது. ஒரு செவ்வாய்க்கிழமை மூவரும் கிரிவலம் வந்தப்போ ஒரு இடத்தில் பனிமலைப் போன்ற குளிர்ச்சியை உணர்ந்தனர். ஆச்சர்யத்துடன் சாஷ்டங்கமாய் ருத்ரமூர்த்திகள் பணிந்த இடமே இப்போதைய அக்னி லிங்கம். இதுவும் சுயம்பு லிங்கமே. இந்த லிங்கத்தை வழிப்பட்டால் நோய்கள் நீங்கும், பயம், எதிரிகள் தொல்லை நீங்கும். கற்பு, சத்தியம், தர்மம் அனைத்தையும் காக்கும் வல்லமை கொண்டது இந்த அக்னி லிங்கம். அக்னிலிங்கத்தை பிராத்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள்.
இங்கிருந்து எட்டாவது லிங்கமான(தற்போது ஒன்பதாவது! சில ஆண்டுகளுக்கு முன்பு குபேர லிங்கத்திற்கு சற்று முன்பாக ஒரு வயல்வெளியில் சந்திர லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது) ஈசான லிங்கம் வரையிலும் சாலையோரம் அமைந்திருக்கும் முட்புதர்களில் நவதானியங்களையும் கற்கண்டுகளையும் தூவி சென்றனர் பக்தர்கள்.  அதற்கான விளக்கம் கேட்டதற்கு, நவக்கிரகங்களின் கதிர்வீச்சுக்களை ஈர்க்கும் ஆற்றல் நவதானியங்களுக்கு இருக்கின்றது. நமது கைகள் பட்டு நவதானியங்களை அண்ணாமலை கிரிவலப் பாதையில் தூவுவதால்   அவைகள் நமது ஜாதகப்படி இருக்கும் கிரக தோஷங்களுடன் கிரிவலப்பாதையின் ஓரங்களில் மழை பொழிந்ததும் முளைக்கத் துவங்கும்அவ்வாறு முளைக்கத் துவங்கியதுமேநம்மைப் பிடித்திருந்த கிரகதோஷங்களை நாம்  தூவியிருந்த நவதானியங்கள் வாங்கிக்  கொள்ளும்; நம் தினசரி வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் தீரும் என்றார்.  டயமண்ட் கற்கண்டு தூவுவதால் அதை எறும்புகள் எடுத்து சென்று பத்திரபடுத்தி சாப்பிடும்போது அது பல நாட்கள் அவற்றிக்கு உணவாக வருவதினால் தினசரி அன்னதானம் பண்ணுகிற பலனை பெறலாம்ன்னும் சொன்னார். அதை ஒரு சிறுவன் அக்னி லிங்க சன்னதிக்கு பின்னே இருக்கிற மரங்களில் தூவுகின்றான். இந்த லிங்கத்துக்கு தென் கிழக்கில் அக்னி தீர்த்தம் அருகே உள்ளது.
அடுத்து மூன்றாவதாக அமைந்துள்ள எமலிங்கம் செல்லும் வழியில் அமைந்து இருக்கிறது சத்குரு சேஷாத்ரி ஆஸ்ரமம். மகத்தான சக்தியுடன் கேட்டவர்க்கு கேட்டவரம் தரவல்லது. இங்கே 22க்கு மேற்பட்ட சித்தர்கள் ஜீவசமாதியடைந்துள்ளனர். .இவரது துணைவியார் அன்னை உமாதேவி இங்கே ஜீவசமாதியடைந்துள்ளார். இவர் 30 ஆண்டுகள் கடும் தவம் இயற்றியவராம். அதன் காரணமாக அண்ணாமலையார் தாயார் உண்ணாமலை அம்மன் அருள் பெற்றவர். இதனால் எல்லா கடவுள்களிடமும் மாகான்களிடமும் சூட்சுமமாக பேசும் ஆற்றல் கொண்டவராக இருந்தாராம். . இதனால் ஆயிரகணக்கான பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லி திருமணம் ஆகதவர்களுக்கும், தோஷ நிவாரணம் செய்பவர்களுக்கும் பரிகாரம் சொல்லி நிவர்த்தி செய்து அருளாட்சி செய்திருக்கிறார். இங்கு இன்னும் அருபமாக இருந்து அருள் பாலிக்கிறார். ஆகவே பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை ஒரு பேப்பரில் எழுதி இங்கே இருக்கும் மரத்தில் கட்டிவிட்டு செல்கின்றனர்.
  
அடுத்து கிரிவலபாதையில் வருவது எல்லை காளியம்மன். இங்க பலரும் சூடம் ஏற்றியும், எலுமிச்சை பழம் சாத்தியும் வழிபாடு செயதனர்  அருகே ஒரு நவகிரக பீடமும் இருக்கு.
அதே வரிசையில் அடுத்து வருவது ரமணாஷ்ரமம். இங்க ரமணர் ஜீவசமாதியடைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அருகே அவரது புகைப்படங்கள் சொற்பொழிவுகள், அவரது தத்துவங்கள்,  அவர் உபயோகித பொருட்கள்லாம் காட்சிக்கு வச்சு இருக்காங்க. அங்க ஒரு கோவில் இருக்கு. அதன் உள் பிரகாரத்தில் ரமணருடைய பெரிய சிலை உட்கார்ந்த நிலையில் வச்சு இருக்காங்க. அதையும்  தாண்டி போனா அவருடைய ஜீவ சமாதி இருக்கு. ரஜினியும், இளையராஜாவும் ரமணர் அவர்களின் சீடர்கள். நேரம் கிடைக்கும்போது மாறுவேடத்தில் கிரிவலம் வர்றாங்க.
நாங்க போன நேரம் பூஜைகளும், பிரார்தனைகளும் நடைபெற்றன கிரிவலம் சென்றவங்களும் ஏற்கனவே அங்கே தங்கி இருந்த பக்தர்களும் அந்த மண்டபத்தில் உட்கார்ந்து அமைதியா பிரார்த்தனை செய்துட்டு இருந்தாங்க. வாங்க நாமளும் கொஞ்ச நேரம் மன அமைதிக்காக அங்க பிரார்த்தனை செய்வோம்.
அடுத்து வருவது திரௌபதி அம்மன் கோவில்.  தூரத்திலிருந்து பார்பதற்கு அழகாக இருக்கு. ஆனா அங்கே செல்லும் பாதைலாம் நம்ம மக்கள்  கெடுத்து வச்சு இருக்காங்க. அதனால அங்கேயும் நல்லது நடக்கட்டும் என்று கிவலம் சென்றவர்கள் நவதானியங்களையும் கற்கண்டுகளையும் தூவிவிட்டு சென்றனர்..நாமும் அவர்கள் பின்னே போலாம் வாங்க. 
அடுத்து போகிற வழியில ஒரு சிம்ம தீர்த்தம் இருக்கு நிறைய சாதுக்கள்  அதில குளிச்சுகிட்டு இருந்தாங்க. அங்க கரையில் இருக்குற சிம்மத்தின் உருவம் கம்பீரமா இருந்துச்சு மலையில் இருந்து தண்ணீர் இந்த தீர்த்திற்கு வரது மாதிரி அமைப்பு செஞ்சு இருக்காங்க.
தீர்த்தத்திற்கு அருகில் தட்சிணாமூர்த்தி உருவ சிலை பிரம்மாண்டம்மா இருக்கு. எல்லோரும் அதில் சூடம் ஏற்றி வழிபட்டு, கிரிவலத்தை தொடர்ந்தனர். அடுத்து நாம பார்க்க போறது எமலிங்கம்.

கேக்கவே பயமா இருக்கும் எமலிங்கத்தைப் பத்தி அடுத்த வாரம் புண்ணியம் தேடிப் போற பயணத்துல பார்ப்போம். 

Thursday, December 05, 2013

நூறாண்டு காலம் வாழ்க!! நோய் நொடி இல்லாம வளர்க!!

நண்பர்களின் வேண்டுதல், உறவுகளின் அலட்சியம் தாண்டி இரண்டு பெண் பிள்ளைகளுக்குப் பின் கடவுள் அருளால் பிறந்த ஆண்பிள்ளை. 6.12.1999 அன்னிக்கு அவன் பிறந்தப்போ ஹஸ்பிட்டலே அல்லோகலப்பட்டது என் அப்பாவின் சந்தோஷத்தால்!! அப்பா, அம்மா, நண்பர்கள் வேண்டுதலுக்காக திருச்செந்தூர் தொடங்கி, திருப்பதி வரை நேர்த்திக் கடன் செய்தே ஓய்ந்துப்போனோம். இன்னமும் சில வேண்டுதல் நிறைவேத்தலை!!


(தன் தம்பிக்காக தூயா ஆர்டர் செய்த கேக்)

அக்காக்களுக்கு அவன் செல்லம், நான் கூட சில சமயம் கோவம் வந்து அடிச்சுடுவேன். ஆனா, பெரியவ அவனை தாங்குவா! ஆனா, என்னதான் மனசுக்குள் பாசம் இருந்தாலும், சின்னவ தன் தம்பியோடு சண்டைப் போடுவா!

(அப்புக்காக கேக் ரெடி!!)
அக்காக்களோடு சண்டைப் போட்டாலும் அளவுக்கடந்த பாசம் வச்சிருக்கான். வெளியே எங்காவது போகும்போது, பெரிய மனுசன் போல அவங்க அக்காக்களை பாத்துப்பான். அவங்களுக்கு உடம்புக்கு முடியாட்டி சாமிக்கிட்ட வேண்டிப்பான். பெரியவளுக்கு உடம்புக்கு ரொம்ப முடியாம ஹாஸ்பிட்டலில் இருந்தப்போ 3 கோவிலுக்கு நேர்ந்துக்கிட்டு மொட்டை அடிச்சுக்கிட்டான்.
தன் தம்பிக்கு ஆசையாய் ட்ரெஸ் வாங்கி வந்தா பெரியவ, உன் இஷ்டத்துக்கு ட்ரெஸ் வாங்கி வந்தா நான் போட்டுக்கனுமா!?ன்னு சண்டை போட்டு ஸ்கூல் யூனிஃபார்ம்லயே கேக் வெட்டியாச்சு!! ஆனா, ஹோட்டலுக்கு போகும்போது மட்டும் புது ட்ரெஸ்ல! டேய் அப்பு! உன்னை புரிஞ்சுக்க தனியா எனக்கொரு மூளை வேணும் போல!!

தாத்தா, பாட்டி செல்லம். ஆனா, தாத்தாக்கிட்ட எப்பவும் சண்டை போடுவான். சின்ன சின்ன எலக்ட்ரிக் வேலை நல்லா செய்வான்.  கடைக்கு போறதுன்னு பொறுப்பா நடந்துப்பான். வீட்டுல எல்லார்க்கிட்டயும், எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பான். ஆனா, வெளில போய்ட்டாலோ பொட்டி பாம்பாகிடுவான். ஒருவேளை அங்கயே விட்டுட்டு வந்துட்டா என்ன செய்யுறதுன்னு நினைக்குறானோ என்னமோ!! 

(பெரிய அக்கா தன் சம்பாத்தியத்தில் பொம்மை, கேக், ட்ரெஸ் வாங்கித்தர, சின்ன அக்கா தான் சேர்த்து வச்ச காசுல flair பேனா வாங்கி தந்தாள்)

ஒருநாள் நைட் எல்லோரும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது, தூயா! உனக்கு 23 வயசாகும்போது மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செஞ்சுடனும். அதுதான் பெண்களுக்கு கல்யாணத்துக்கு சரியான வயசு. அங்கிருந்து 4 வருசம் கழிச்சு இனியாக்கு கல்யாணம் பண்ணனும். ஏன்னா, உனக்கும், பாப்பாக்கும் 4 வருசம் இடைவெளி, அதனாலயும், 4 வருசத்துல உன் கல்யாணத்துக்கு செஞ்ச செலவுலாம் அப்பாவல ஈடுக்கட்டி, பாப்பா கல்யாணத்துக்கு காசு சேர்க்க  முடியும்.

அங்க இருந்து நாலு வருசம் கழிச்சு தம்பிக்கு கல்யாணம் கட்டி வச்சுட்டா, எங்க கடமைலாம் தீர்ந்துடும்ன்னு சொன்னேன். உடனே..., அப்பு, 

இரு, இரு, தூயாக்கும், இனியாக்கும் 4 வருசம் கேப் அதனால நாலு வருசம் கழிச்சு கல்யாணம் பண்றே. அது ஓக்கே. எனக்கும் இனியாக்கும் 2 வயசுதானே வித்தியாசம்!! நீ ஏன் நாலு வருசம் கழிச்சு கல்யாணம் பண்ணுவேன்னு சொல்றே! உன் பொண்ணுங்களுக்கு ஒரு நியாயம். எனக்கு ஒரு நியாயமா!?ன்னு கேட்டான். நிஜமாவே பதில் சொல்ல முடியல :-(
(தூயா தன் தம்பிக்கு கிஃப்டா தந்த பொம்மை...,)

வீட்டுல அடங்கி உக்காந்து படிக்க மாட்டான். ஆனா, மார்க் மட்டும் சுளையா o grade ல வந்து நிக்கும். ஆனா, அவன் கையெழுத்து, டாக்டர்களுக்கு கூட புரியாது.அப்படி இருக்கும். என்ன எழுதி இருக்கான்னு புரியாமயே மார்க் போட்டுடுறாங்க அவன் டீச்சர்ன்னு சின்ன பொண்ணு கிண்டலடிக்கும். கிராஃப்ட், சயின்ஸ் மினியேச்சர் செய்யுறதுல படு கெட்டி.  சாதாரண அட்டைல செஞ்ச ஃபேன், சோலார் ப்ளேட்னால ஓடும் கார்ன்னு அவன் செய்யும் பட்டியல் நீளும்..,

(ஹோட்டல்ல சின்னதா ஒரு பார்ட்டி)

,ஒரு ஐஸ்கட்டியைப் போல!!
மெல்ல மெல்ல என்னை உருக 
,வைத்துக்கொண்டிருக்கிறது,
என் மடியினில் உறங்கும் இந்த
குட்டி சூரியன்.


தொட்டால் உறக்கம் தெளிந்திடுமென
கரங்களால் தீண்டாமல்
கண்களால் வருடிக் கொண்டிருக்கிறேன்
அவன் அழகை!!

நரி பயங்காட்டியதோ!
இல்லை எறும்பு கடித்ததோ!
”அழுதுடுவேன்”ன்னு என்னைப்
பயங்காட்டிக் கொண்டிருக்கிறான்!!

வேதனை நீங்கி, புன்சிரிப்பொன்று
அவன் இதழில்.
நடிகர் திலகம் போல நொடிக்கொரு
பாவம் அவன் முகத்தில்!!

பிள்ளை வாசம் உணர
அவனை உச்சி மோர்கையில்
அவன் உயிர் சுவாசம், என் சுவாசக் கூட்டில்
இடம் மாறுகிறது!!

குட்டி தாமரை உருக்கொண்ட 
வயிற்றை தொட்டு தடவிப் பார்க்கிறேன்!
எந்த மொழி வார்த்தையாலும், என்
பூரிப்பையும், அவன் மீதான
என் பாசத்தையும் விளங்க வைக்க முடியாது!!

காதல், காமம், வேலை,
சம்பாத்தியம், குடும்பப்பொறுப்பு
என எந்தக் கவலையுமில்லாமல்
உறக்கம் அவன் விழிகளில்!!

அவன் உறங்கட்டும்!
ஆணுக்குண்டான பொறுப்புகள் 
அவனை உறங்க விடாமல் 
செய்யலாம்!

அதனால், இப்பவே உறங்கி, சக்தியை 
சேமித்துக் கொள்ளட்டும்.
தன் முதுகில் நீர் சுமக்கும்
ஒரு ஒட்டகத்தைப் போல!

டிஸ்கி: நாளைக்குதான் அவன் பிறந்த நாள். ஆனா, அவன் அக்காக்கு நாளைக்கு லீவ் கிடைக்காததால் ரெண்டு நாள் முன்னமயே நேத்தே கொண்டாடியாச்சு!!  




Wednesday, December 04, 2013

கடலோரம் வாங்கிய காத்து, எம்.ஜி.ஆர் சமாதி - மௌனச்சாட்சிகள்

90 காலக்கட்டத்துல வெளி வந்த படங்கள்ல, கிராமத்துல இருந்து பட்டணம் வரும் ஹீரோ இல்ல ஹீரோயினை குறிப்பால் உணர்த்த எல்.ஐ.சி பில்டிங்க், எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன், எம்.ஜி.ஆர், அண்ணா சமாதி, கிண்டி குதிரைவீரன் சிலையை காட்டுவாங்க. கல்யாணத்துக்கு முந்தி மெரினா போனதோடு சரி. ரொம்ப நாளாவே போய் பார்க்கனும்ன்னு ஆசைப்பட்டேன். எப்பவாவது, பீச்சுக்கு போனாலும் அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதிக்குலாம் போக நேரமில்லாம பீச்சுல காத்து வாங்கி வருவதோட சரி.

இந்த முறை போகும்போது கண்டிப்பா சமாதிலாம் பார்த்தே ஆகனும்ன்னு ஒரு ஆசை. சமாதிலாம் பார்க்கனும்ங்குறதை விட பதிவு தேத்தனும்ங்குறதுதான் உண்மையான காரணம்.

 மௌனச்சாட்சிகள்ல போனவாரம் நாம மெரினா பீச்ல இருக்கும் கலங்கரை விளக்கத்தை பார்த்தோம். இந்த வாரம் நாம பார்க்கபோறது மெரினா பீச்ல இருக்கிற  எம்.ஜி.ஆர் சமாதி. ரொம்ப நாளா பாக்கனும் நினைச்சு போக வாய்ப்பு கிடைக்காதவங்களுக்கு நான் சுத்திக் காட்டுறேன். வாங்க போலாம்....,
நாங்க பீச்சுக்கு போனது சாயங்கால நேரம்.  கடற்கரை மணலெங்கும் தாஜ்மாஹாலுக்கு அஸ்திவாரம்  தோண்டுறவங்களும்,  தாஜ்மஹாலுக்கே குழி தோண்டுறவங்களும் வந்துகிட்டே இருக்க, நாங்க ஒரு ஓரமா கடற்கரை பக்கம் போய்க்கிட்டு இருந்தோம். அங்க,  ஒரு கட்டுமரத்திலே இரண்டு மீனவர்கள் கருமமே கண்ணாய் மீன்பிடிச்சுக்கிட்டு இருந்தாங்க. அவங்களை நம்ம கேமராவுல க்ளிக்கிட்டு கரைபக்கமா திரும்பினோம்.    

 

தூரத்துல இளசுகளின் முகம் சுளிக்க வைக்கும் செயல்களும், மிளகாய் பஜ்ஜியும், பானி பூரி, பட்டாணி சுண்டல் வியாபாரம் செய்பவர்களின் அழைப்புகுரலும், பந்து விளையாடும் சிறுவர்களும், கடலை போடும் விடலைகளும், கடலை விற்கும் சின்ன பையன்களும், தன எதிர்காலமே தனக்கு தெரியாமல கடற்கரையில் ஜோசியம் பார்க்க வற்புறுத்தும் பெண்களும், குதிரையை  சவாரி செய்ய வைத்து தன வாழ்கையை குதிரையின் முதுகில் வைத்து சவாரி செய்பவர்களும்ன்னு எத்தனை விதமான மனிதர்கள்!! எப்படிதான் தாங்குகிறதோ இந்த கடற்கரை!!
அதையும் தாண்டி வந்தா பலூனை, துப்பாகியால சுட்டுகிட்டு இருந்தாங்க. சரி நாமளும் சுட்டு பழகலாம்னு வீட்டுகாரர் கிட்ட கேட்டா முதலில் பூரி, சப்பாத்தி,தோசையை ஒழுங்கா சுடக் கத்துக்கோ.  அப்புறம் துப்பாகியால பலூனை சுடலாம்னு என்னை சுட்டெரிக்க, அந்த இடத்தில இருந்து மீ எஸ்கேப்.
 செயற்கையா அமைக்கப்பட்ட பாறையின் மேல இருந்த வாட்டர் ஃபௌண்டெய்ன் அழகா இருந்துச்சு. நிறையப்பேர் அதுக் கிட்டக்க நின்னு போட்டோ எடுத்து கிட்டாங்க. ஆனா, நான் இதுவரை இதை பார்க்காத நம்ம பிளாக்குக்கு வருபவங்களுக்காக போட்டோ எடுத்துகிட்டேன். இதுக்காக சீரணி அரங்கத்துல எனக்கு பாராட்டு விழாலாம் எடுக்க வேணாம். 
அங்க இருந்து மெதுவா நடந்து வந்தா உடம்பில் உள்ள எலும்புகள் எல்லாம் தேய உழைத்து ஓடாகிபோன உழைப்பாளர்களின் சிலை. எனக்கு நினைவுத் தெரிஞ்ச நாளி இருந்து அந்த கல்லை தள்ளிப்பார்க்குறாங்க. ம்ஹூம் ஒரு அடி கூட நகர்ந்த பாடில்லை. கவர்ன்மெண்ட் சம்பந்தப்பட்டதாச்சே! அதான்.  ராய் சவுத்தரி அவர்களால் செதுக்கிய சிற்பம். அந்த சிற்பமும் நம் மனசைவிட்டு அகலவில்லை அதையும் தாண்டி போனா நம்ம எம்ஜிஆர் (மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்) சமாதி .

 இப்பதான் பல கோடி ரூபாயில் புனரமைச்சு இருக்காங்க. முகப்பில் இருபக்கமும் சுமார் 16 மீட்டர் உயரத்தில் இரண்டு தூண்களும்  12 அடி உயரத்தில் முன்கால்களை தூக்கி பறப்பதற்கு தயாராக நிற்கும் சிலை அவர் உருவாக்கிய10.2 மீட்டர் உயரமுள்ள இரட்டை இலை சின்னத்தின் பின்னணியில் இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. சரி வாங்க உள்ள போகலாம்.

 உள்பக்கம் முழுவதும் சலவைகர்கள்ல செய்த வேலைப்பாடு. நடப்பது அவங்க ஆட்சின்றதாலயோ என்னமோ, இந்த இடத்தை தூய்மையா வச்சு இருக்கிறாங்க. நேரா உள்ளே போனா அவருடைய வாழ்க்கை வரலாறு பத்தின சிறு குறிப்பு இருக்கு.

அங்க எம்.ஜி.ஆர் அவர்களின் மார்பளவு சிலை இருக்கு. சிலையோடு நின்னு நிறையப்பேர் போட்டோ எடுத்துகிட்டு இருந்தாங்க. அவர் மறைந்து 25 வருஷத்துக்கு மேல ஆகியும் அவர் புகழ் மறையலங்கிறதுக்கு இது ஒரு எடுத்துகாட்டு.

உள்ளே புல்வெளிலாம் அமைச்சு அழகுப்படுத்தி இருக்காங்க. மலர்ந்தும் மலராத பாதி மலர்போலங்கிற மாதிரி ஒரு வெண்தாமரை விரிந்து அதனுள் கருப்பு சலவைக் கல்லால் சதுரவடிவில் கட்டப்பட்ட மேடை போன்ற அமைப்பில் அவருடைய சமாதி அமைக்கபட்டு இருக்கு.  வாங்க கிட்டக்கப் போய் பார்க்கலாம். 
கீழ இருந்து பார்க்கும் போது அழகான வளைவுகளுடனும், ஒரு நீண்ட தூண்களுடனும் கொண்ட அமைப்பு. நாங்களும் வித்தியாசமா போட்டோ எடுப்போம்ன்னு நிருபிக்க இப்படி எடுத்தோம்!! :-(
இங்க ஒரு அணையாதீபம் எரிந்துக்கிட்டு இருக்கு.முன்னலாம் மக்கள் இந்த சமாதிக்கு வரும் மக்கள், அந்த கருப்பு கலர் மேடை மேல காதை வைச்சு கேட்கும்போது அவருடைய கடிகாரம் டிக் டிக்'ன்னு ஓடும் சத்தம் கேக்குமாம். இப்ப யாரும் அது மாதிரி காது வச்சு கேட்கிற மாதிரி தெரியலை. ஒருவேளை கடிகார செல் தீர்ந்துப் போய் சவுண்ட் நின்னு போயிருக்குமோ!! 24 வருஷம் ஆகபோகுது இல்ல. 

மெரினா பீச்ன்னா கடல், அலை, மணல், மீன், ஐஸ்கிரீம், சுண்டல், காத்து, கடலை, குதிரை சவாரி மட்டும்தான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, இங்கயும் சுத்திப் பார்க்க நிறைய இடங்கள் இருக்கு போல!! நமக்குதான் நேரம் இல்ல.

சரி, அடுத்த வாரம் அண்ணா சமாதி பத்தி மௌனச்சாட்சிகள்ல பார்க்கலாம்! 

Tuesday, December 03, 2013

கதம்பச் சட்னி - கிச்சன் கார்னர்

ஒரு பொண்ணுக்கு மாமியார், நாத்தனார், சீரியல் பிரச்சனையை விட பெரிய பிரச்சனை, காலை டிஃபனுக்கு சைட் டிஷ் தேடுறதுதான். தேங்காய் சட்னியும், வேர்கடலை சட்னியும் கொலஸ்ட்ரால், சாம்பார் வச்சா எப்பப் பாரு சாம்பாரா!? குருமா வச்சா அது பூரிக்குதான் சரியா இருக்கும்ன்னு எதை செஞ்சாலும் நொள்ளை நொட்டை சொல்லுவாங்க. 

வீட்டுக்காரருக்கு முள்ளங்கி பிடிக்காது, சின்னவளுக்கு கத்திரிக்கா பிடிக்காது. அப்புக்கு கேரட் பிடிக்காது. இந்த காய்கறில இருக்கும் சத்துலாம் எப்படி கிடைக்கும்!? அதனால எல்லா காய்கறியும் போட்டு ஒரு சைட் டிஷ் ரெடி பண்ணிட்டா, எல்லோரையும் எல்லா காய்களையும் சாப்பிட வச்ச மாதிரி ஆச்சுன்னு அம்மா செய்வாங்க.

4 பேர் சாப்பிடும் அளவுக்கு தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
ப.மிளகாய் - 1
பூண்டு - 4 பல்
கத்திரிக்காய் - 1
கேரட் - 1
முள்ளங்கி -1
உருளைக்கிழங்கு - 1
மிளகாய் தூள் - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - சிறிது
கடுகு -சிறிது
கடலை பருப்பும், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 இணுக்கு.

கத்திரிக்காய் தவிர மத்த காய்கறிலாம் தண்ணில நல்லாக் கழுவிட்டு பொடியா நறுக்கி வச்சுக்கோங்க.  கத்திரிக்காயை பொடியா நறுக்கி தண்ணில போட்டு வைங்க. அப்படி இல்லாட்டி, கத்திரிக்காய் கறுத்து போகும்.

வாணலியை அடுப்புல வச்சு ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி காய வைங்க.

அடுத்து பச்சை மிளகாயை போட்டுக்கோங்க.


அடுத்து பூண்டு போட்டுக்கோங்க. 

அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்குங்க. பொன்னிறமா வதங்கனும்ன்னு அவசியமில்ல. வெங்காய வாசனை போனால் போதும்.

வெங்காய வாசனை போனதும் தக்காளி சேர்த்து லேசா வதக்கிங்கோங்க.

அடுத்து பொடியா வெட்டி வச்ச காய்கறிகளை சேர்த்து நல்லா வதக்கிங்கோங்க.

தேவையான அளவு உப்பு சேருங்க... பொறியல், காரக்குழம்புக்கு வெங்காயம், காய்கறிகள் வதக்கும்போது உப்பு சேர்த்துக்கிட்டா காய்கறிகள் சீக்கிரம் வேகும். பாத்திரத்துல ஒட்டவும் ஒட்டாது.


மிளகாய்ப் பொடி சேர்த்து வதக்குங்க. மிளகாய்தூள் வாசனை போனதும் தேவையான அளவு தண்ணி ஊத்தி கொதிக்க விடுங்க.

அப்படி கொதிக்கும்போதே மஞ்சப்பொடி சேர்த்துக்கோங்க. மஞ்சப்பொடி சிறந்த கிருமி நாசினி. நம்ம கவனத்தையும் மீறி சாப்பாட்டுல சேரும் கிருமிகளை கொல்ல மஞ்சப்பொடி சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க. காய்லாம் நல்லா வெந்ததும் கல்சட்டில போட்டு காய்கறிலாம் உருத்தெரியாம  கடைஞ்சிக்கோங்க. 

அடுப்புல வாணலி வச்சு சூடானதும், ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ஞ்சதும் கடுகு சேர்த்து பொரிய விடுங்க. 

கடுகு பொரிஞ்சதும் கடலைப்பருப்பும், உளுத்தம்பருப்பும் சேர்த்து, அது சிவந்ததும் கறிவேப்பிலை போடுங்க.
கறிவேப்பிலை பொரிஞ்சதும் கடைந்த குழம்பை ஊத்தி சூடு பண்ணி இறக்கிக்கோங்க. கொதிக்கனும்ன்னு அவசியமில்ல. சூடேறினால் போதும்.

சூடான சுவையான கதம்ப சட்னி தயார். இது இட்லி, தோசைக்கு தொட்டுக்கலாம். சமயத்துல சாதத்துக்கும் நல்லா இருக்கும். 

தக்காளி விலை அதிகமா இருக்கும் நேரங்களில் தக்காளி குறைச்சுக்கிட்டு கொஞ்சம் புளி சேர்த்து கடைஞ்சாலும் டேஸ்ட் மாறாது. கடையும்போதே டேஸ்ட் பார்த்தால் ஒருவேளை காரம் கம்மியா இருந்தா காய்ந்த மிளகாய் சேர்த்தால் காரமும் சரியாகும். ருசியும் கூடும். பிள்ளைகளும் காய்கறிகளை எடுத்து வச்சுடாம சாப்பிட்டுடும்.

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட கிச்சன் கார்னர்ல சந்திக்குறேன். அதுவரை, டாட்டா, பை பை, ஸீ யூ.

Monday, December 02, 2013

இப்படிப்பட்ட மாணவர்களை என்ன செய்யலாம்!? ஐஞ்சுவை அவியல்

ஸ்ஸ்ஸ்ஸ் அபா! வெளில வேலைக்குப் போய் வீட்டுக்குள் வந்தோமா! கசகசப்பு போக கொஞ்ச நேரம் காத்து வாங்க ஃபேனுக்கடியில நின்னோமான்னு இல்ல. ச்ச்சே எப்ப பார்த்தாலும் கரண்ட் கட்.

ஆமா மாமா! தினமும் 12 மணி நேரம் கரண்ட் கட்டாகுது. எப்ப கரண்ட் கட்டாகும்ன்னு பயந்து பயந்து மிக்சில அரைக்க வேண்டியதுலாம் முதல்லியே அரைச்சு வச்சுக்குறதா இருக்கு.இந்த கரண்ட் கட்னால எந்த எலக்ட்ரானிக் பொருள், எப்ப ரிப்பேர் ஆகி என்ன செலவு வைக்கும்ன்னு தெரியல.  ம்ம்ம் சென்னைல பொறந்திருக்கலாம். நிம்மதியா இருந்திருக்கலாம்.

ரொம்ப அலுத்துக்காத! இன்னில இருந்து (2.12.2013) முதல் சென்னையிலயும் தினமும் ரெண்டு மணி நேரம் பவர் கட்ன்னு மின்சார வாரியம் அறிவிச்சிருக்கு. 

அப்படியா! மாலை ஆறு மணிக்கு முன்னயும், காலை ஆறு மணிக்கு பின்னயும் எரிய விடப்படும் தெரு விளக்குகள், கட்சிக் கூட்டம், மத விழாக்களுக்காக எரியவிடப்படும் அலங்கார விளக்குகள், பகலிலேயே தேவையில்லாம அரசு அலுவலகங்களில் எரிய விடப்படும் விளக்குகள்ன்னு இருக்குறதை அக்கறையா யாராவது அணைச்சா நல்லா இருக்கும்.

சும்மா அரசாங்கத்தையே குறைச் சொல்லாம வீடுகள்லயும் ஆளுக்கொரு ரூம்ல டிவி பார்க்காம, ஒரே ரூம்ல டிவி பார்க்கலாம். தேவையில்லாத நேரங்களில் சாமி ரூம், தெரு வாசப்படில எரியும் ஜீரோ வாட்ஸ் பல்ப்களை அணைச்சு வைக்கலாம். குழந்தைகள் தனித்தனி ரூம்ல படிக்காம ஒரே ரூம்ல படிக்க வைக்கலாம். முடிந்த வரை குழந்தைகளை ஒரே ரூம்ல படுக்க வைக்கலாம். பகல்ல ஜன்னல்லாம் திறந்து வச்சு லைட் எரிக்காம பார்த்துக்கலாம். வெயில் நேரத்துலயும் வாஷிங் மெஷின் ட்ரையர்ல துணிகளைத் துவைச்சு போடாம, துணிகளை துவைச்சு, அலசுறதை மட்டும் செட் பண்ணிக்கலாம். 

நீ சொல்றதுலாம் கூட சரியாதான் இருக்கு புள்ள. அரசாங்கத்தோடு சேர்ந்து நாமளும் பொறுப்பா நடந்துக்கனும்.

ஆனா, எனக்கொரு டவுட் மாமா. கரண்ட் கட்டுக்கு காரணம்ன்னு நீதான், நீதான்னு இப்போ ஆள்றவங்களும், ஏற்கனவே ஆண்டவங்களும் அடிச்சுக்குறாங்களே! அதைவிட்டு ஆக்கப்பூர்வமா சிந்திச்சு பிரச்சனையை சரிப்பண்ண மாட்டாங்களா!? அதுமில்லாம எதாவது ஒரு இடத்துல ரிப்பேர்ன்னு சொன்னா பரவாயில்ல. நெய்வேலி. மேட்டூர்ன்னு எங்கெல்லாம் கரண்ட் தயாரிக்குறாங்களோ அங்கெல்லாம் ஒரே நேரத்துலயா ரிப்பேர் வரும்!? 

நீயும், நானும் பேசி என்ன பிரயோஜனம்!? யோஒசிக்க வேண்டியவங்க யோசிக்கனும். நம்ம வூட்டு வேலைகளை செய்யவே அலுத்துக்குறியே! ராஜி வூட்டுக்கு எதிர்க்க செல்வின்னு ஒரு அக்கா இருக்காங்க. படிப்பறிவில்லாதவங்க. குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட அவங்க, தினமும் காலைல 4  மணிக்கு எழுந்து பஜாருக்கு போய் சில கடைகள் வாசல் தெளிச்சு கோலம் போட்டு, அதுக்கப்புறம் 2 வீடுகளில் வேலை செய்து, 9 மணிக்கு வீட்டுக்கு வந்து குளிச்சு சித்தாள் வேலை இல்லாட்டி அரிசி ஆலை வேலைக்கு போய் வருவாங்க. 

மீண்டும் சாயந்தரம் 6 மணில இருந்து 3 வீட்டு வேலைக்குப் போய் வருவாங்க. இதுக்கிடையில் அவங்க வீட்டில் சமைச்சுன்னு ஓயாம ஓடி உழைக்குறங்க. இப்படி உழைச்சு 3 வீடு கட்டி இருக்காங்க. வேலை விட்டு வரும்போது ரோடு ஓரத்துல நாம எறியும் அட்டைப் பெட்டிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், குடிமகன்கள் போடும் சரக்கு பாட்டில்கள், புத்தகம்ன்னு எல்லாத்தையும் எடுத்து வந்து காசாக்கி தன் ஒரே பையனை டிப்ளமோ மெக்கானிக் படிக்க வைக்குது.

ம்ம்ம் எனக்கும் தெரியும்ங்க. இவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதுவரை யார்கிட்டயும் எதுக்காகவும் கையேந்தினதில்லைன்னு ராஜி சொல்லுவா. 

அவங்களும் அவங்க குடும்பமும் நல்லா இருக்கனும்ன்னு நாம எல்லோரும் வேண்டிக்கலாம்!! 

ராஜியோட பையன் அப்பு எட்டு மாச கைக்குழந்தையா இருக்கும்போது, அவனுக்கு கிஃப்டா வந்த டெடி பியர் பொம்மையை பார்த்தாலே அழுவான்.  முட்டிப் போட்டு நகர ஆரம்பிச்சதும் தெருக்கதவை திறந்தாலே தெருவுக்கு ஓட ஆரம்பிச்சுடுவான். அப்போ அவங்க வீட்டுக்கு எதிர்க்க பெரிய தரைக் கிணறு இருக்கும். அதனால, இடுப்புல கயிறுக் கட்டி சோஃபாவுல கட்டி வைக்க ஆரம்பிச்சா. அது தப்பு குழந்தை மனசு பாதிக்கும்ன்னு யாரோ சொன்னதால என்னப் பண்றதுன்னு தெரியாம முழிச்சா ராஜி. 

அப்புறம் அவன் பார்த்து பயப்படும் டெடி பியர் பொம்மையை வாசப்படில வச்சு பார்த்தா. பயப்புள்ள அதுக்கப்புறம் மந்திரத்துக்கு கட்டுப்பட்ட மாதிரி டெடி பியர் பொம்மையைத் தாண்டி தெருவுக்கு ஓட ஆரம்பிக்கலியே! ராஜியும் நிம்மதியா இருந்தா.

புள்ளையை கயிறுல கட்டலாமா!? உன் ஃப்ரெண்டுக்கு அறிவே இல்லியா!? 

என் ஃப்ரெண்டை பத்தி சொல்லாதீங்க. உங்களுக்கு அறிவிருக்கா!? அப்படி இருந்தா நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்!!

ஒரு சாக்லேட் ஒரு ரூபாய், இது கூட‌ 3 சாக்லேட் எம்ப்டி க‌வ‌ரை குடுத்தால், அதுக்கும் ஒரு சாக்லேட் த‌ர்றாங்க‌. உங்ககிட்ட‌ 15 ரூபாய் இருக்கு.அப்போ உங்களால எத்த‌னை சாக்லேட் வாங்க‌ முடியும்?

விடைதானே!? சொல்றேன் அதுக்கு மின்னாடி ஒரு ஜோக் சொல்றேன். கேளு..,
மூன்றாம் வகுப்பு மாணவன் :டீச்சர் இந்த உலகத்தின் எடை என்ன ?
ஆசிரியை : ( பதில் தெரியாததால் ) மிக அருமையான கேள்வி .நாளை வகுப்பிற்கு வரும்பொழுது இதற்க்கு யார் சரியான பதிலை சொல்றாங்கன்னு பார்க்கலாம்.


அன்று மாலையே ஆசிரியை நூலகத்திற்கு சென்று பல நூல்களை புரட்டி பதில் கண்டுபிடித்தார் .

ஆசிரியை :மறுநாள்....  உலகத்தின் எடை என்ன ன்னு யாருக்காவது பதில் தெரியுமா!?

யாருமே பதில் சொல்லலை!!


சிரியை :- (பெருமையாக ) தான் கண்டுபிடித்த விடையை சொல்ல ....,
மாணவன் : - டீச்சர் நீங்க சொன்ன எடை உலகிலுள்ள மனிதர்களை சேர்த்தா சேர்க்காமலா!?


ஆசிரியை :- ?????????????????

ஹா! ஹா! சிரிச்சுட்டேன். சாக்லேட் புதிருக்கு விடை சொல்லுங்க!!

விடைதானே!? இரு ஒரு முக்கியமான ஃபோன் பண்ணனும். பண்ணிட்டு வந்து சொல்றேன்.

ம்ம்ம் போங்க மாமா! போங்க. எப்படியும் சாப்பிட வீட்டுக்குதானே வந்தாகனும்!? அப்ப இருக்கு உங்களுக்கு கச்சேரி!?