Sunday, August 19, 2018

சரும வியாதிகளை போக்கும் நாகர்கோவில் நாகராஜர் ஆலயம் - ஆவணி தலை ஞாயிறு ஸ்பெஷல்

1960ல் நாகராஜன் ஆலயம் 

நில அமைப்புபடி நாம் வாழும் நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைன்னு ஐந்தா பிரிச்சிருக்காங்க நம் முன்னோர்கள்.   எல்லா  ஊரும் எதாவதொரு இந்த கேட்டகிரில வந்திரும். ஒருசில ஊர்கள் மட்டும் ஓரிரு நில அமைப்புல இருக்கும். ஆனா கன்யாக்குமரி மாவட்டம் மட்டும் ஐந்து நில அமைப்புலயும் வரும். மலைகள், மணல், விளைநிலம், கடல், காடுன்னு எல்லா நில அமைப்பும் சேர்ந்த அழகானதொரு ஊர் கன்யாக்குமரி. கன்யாக்குமரி மட்டுமில்ல அந்த மாவட்டமே அழகானதாதான் இருக்கும். இந்த அழகான மாவட்டத்துலதான் நாகர்கோவில் ஊர் இருக்கு.

மதுரை, கும்பக்கோணம், காஞ்சிபுரத்துலதான் கோவில் அதிகம். இவைகளைதான் கோவில்நகரம்ன்னு சொல்வாங்க. ஆனா இந்த ஊர்களுக்குலாம் இல்லாத சிறப்பு ஊர்ப்பெயரின் பின்னாடி கோவில் இருக்குறது. இதுமாதிரி கோவில்ன்னு ஊர்பெயரோடு பிற்பாதில இருக்குறது ஒருசில ஊர்களே. அதுல இந்த நாகர்கோவிலும் உண்டு. அதே மாதிரி இந்த ஊர்ல எந்த தெய்வத்தோட கோவில் இருக்கோ அது ஊரோட முற்பாதில இருக்கு.  இந்த ஊரோட தெய்வம் நாகர். நாகர் குடிக்கொண்டிருக்கும் கோவிலை கொண்டதால இந்த ஊருக்கு நாகர்கோவில்ன்னு பேர் வந்திருக்கும் போல!! பேருக்காக கோவில் வந்துச்சா இல்லை கோவில் இருக்குறதால பேர் வந்துச்சான்னு ஒரு  பட்டிமன்றம் சன் டிவில வைக்கனும்.  


கன்யாக்குமரி மாவட்டத்தின் தலைநகரான கோட்டாறுதான் இப்ப நாகர்கோவில்ன்னு அழைக்கப்படுது (விவரம் சரியா கீதாக்கா, துளசி சார்) நாகர்கோவில்ன்னு பேரு வரக் காரணமான இந்த  நாகராஜர் கோவிலில் இரண்டு பிரதானமான சன்னிதிகள் இருக்கு. அதுல ஒன்னு ஓலைக் கூரையில் அமைந்திருக்கும். அச்சன்னிதியில் நாகக் கற்சிலை உள்ளது. மற்றொரு சன்னிதி, கருங்கற்களால் விமான வடிவில் அமைக்கப்பட்டுள்ள நாகராஜா சன்னிதியாகும். இச்சன்னிதியில், தலைக்குமேல் ஐந்தலை நாகப்படத்துடன் கூடிய ஆண் தெய்வத்தின் சிற்பம், இரு தேவியரின் சிற்பங்களுடன் காணப்படுகிறது.
இந்தியாவில் பாம்பையே ­மூலவராகக் கொண்ட ஒரே கோயில் நாகர்கோவில் நாகராஜா கோயில்தான்.  மற்ற கோயில்களில் நாகராஜா சிலைகள் தனிச்சன்னிதியில் இருக்கும். தனிச்சன்னிதியில் இருப்பதற்கும்,  மூலவராய் இருப்பதற்கும் நிறைய வித்தியாசமுண்டு.  நாக பிரதிஷ்டையும், சர்ப்பக்காவும் கேரளாவிற்கு மட்டுமே உரிய சிறப்பமாகும். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கேரளாவில் 15 ஆயிரம் சர்ப்பக்காவுகள் இருந்தன.  இன்று மன்னார்சாலை, வெட்டுக்காடு, பாம்பன் மேக்கோடு ஆகியவை பிரசித்தி பெற்ற சர்ப்பக்காவுகளாகும். மன்னார்சாலையில் ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து நாகபூஜை செய்யும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில்    உள்ளது. தமிழ்நாட்டில் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள கருமாரியம்மன்தான் கருநாகமாக தோன்றினார் என்று தலபுராண வரலாறு கூறுகிறது. திருவேற்காட்டில் கருமாரியம்மன் ஐந்து தலை நாகத்தின் குடை நிழலில் அமர்ந்து காட்சி தருகிறார். 


திருச்செங்கோடு மலைச்சரிவில் 60 அடி நீளத்தில் பாம்பு புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் பொங்கல் இட்டு வழிபாடு நடத்துகின்றனர். கன்யாகுமரி மாவட்டத்தில்  ஒரு சமுதாயத்தினர் நாகத்தை குலதெய்வமாக கொண்டு ஒடுப்பறை என்ற இடத்தில் கோயில் கட்டி வழிபடுகின்றனர். இப்படி நாக வழிபாட்டுக்காக பல கோயில்கள் இருந்தாலும் நாகர்கோவில் நாகராஜா கோயில் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. 

இந்த கோயிலின் பெயரை கொண்டுதான் மாவட்ட தலைநகரான நாகர்கோவில் விளங்குகிறது. மிக பழமையான இந்த கோயில் எப்போது யாரால் கட்டுனதுன்னு தெரியாது. இங்கிருக்கும் நாகராஜர் சுயம்பு மூர்த்தி.  இப்ப கோயில் இருக்கும் இடம் ஒருகாலத்தில்  புல்லும், புதரும் நிறைந்த இடமாக இருந்ததாம்.
இங்கு இளம்பெண் ஒருவர் புல் அறுத்து கொண்டிருந்தபோது அவரது அரிவாள் ஐந்து தலை நாகத்தின் தலையில் பட்டு ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது.  இதைக்கண்டு பயந்துப்போன அந்தப்பெண் அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று ஆட்களை  அழைத்து வந்து இடத்தை காட்டினாள். மக்கள் உடனே அங்கு, தங்களிடமிருந்த ஓலைகளால் கோயில் கட்டி வணங்கியதாகவும், பிற்காலத்தில், உதய மார்த்தாண்டவர்மா மன்னர்  இக்கோவிலை புதுப்பித்து கொண்டிருந்தபோது, ஒரு நாள் மன்னர் கனவில் நாகராஜர் தோன்றி, "ஓலைக்கூரையாலான இருப்பிடத்தையே நான் மிகவும்  விரும்புகிறேன். முதன் முதலில் அக்கூரையினடியில் தான் வாசம் செய்தேன்.  ஆதலால் அதை  மாற்ற வேண்டாம்'' ன்னு சொன்னதால அந்த திட்டம் கைவிடப்பட்டு மூலவரின் கருவறை மட்டும் இன்றுவரை ஓலைக்கூரையின்கீழ் உள்ளது.
இந்த கோயிலின் உள்ளே போகும்போது உள்வாசலின் இருபுறமும் அமைந்திருக்கும் ந்து தலை நாகத்தின் படம் எடுக்கும் வடிவிலான சிலை அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இவை தர்னேந்திரன் என்ற நாகராஜனும்பத்மாவதி என்ற நாகராணியும் ஆகும்.   இந்த கோயிலின் கருவறை இன்றும் ஓலை கூரையின் கீழ்தான் இருக்கு.  இந்த கூரையில் ஒரு பாம்பு காவல் புரிவதாக நம்பப்படுகிறது. இந்த ஓலைக்கூரை மாற்றி கட்டும் போது ஒரு பாம்பு வருவது வழக்கமாக இருக்கு.



மூலவர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாக இருக்கும். ­மூலவர் இங்கு தண்ணீரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அந்த தண்ணீர் ஊற்றில் இருந்து எடுக்கப்படும் மண்தான் இக்கோயிலின் முக்கிய பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இது ஆறு மாதகாலம் கறுப்பாகவும், ஆறு மாதகாலம் வெள்ளையாகவும் காட்சி தருகிறது. இங்கிருந்து மண் எடுக்க எடுக்க குறையாமல் இருப்பது அதிசயமாகும். திருமணம் நடக்க வேண்டியும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டியும்  பெண்கள் இங்கு நாகருக்கு பால் அபிஷேகம் நடத்துகின்றனர்.  

பால் பாயாச வழிபாடு இங்குள்ள முக்கிய வழிபாடு ஆகும். பால், உப்பு, நல்லமிளகு, மரப்பொம்மைகள் போன்றவற்றையும் பக்தர்கள் இங்கு காணிக்கையாக வழங்குகின்றனர்.  ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு பெண்கள் கூட்டம் அலை மோதும். ஆயிரக்கணக்கான பெண்கள் வரிசையாக நன்று நாகருக்கு பால் ஊற்றுவதைகாணமுடியும்.  ஆண்டு தோறும் தை மாதம் பத்து நாட்கள் திருவிழா நடக்கிறது. எல்லா மாதமும் ஆயில்ய நாளில் விசேஷ பூஜைகள் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நாகராஜனுக்கு பால் வார்ப்பது புனிதமாக கருதப்படுகிறது.  திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை விழாவும், கந்தசஷ்டி விழாவும் இங்கு நடக்கும் இதர முக்கிய விழாக்களாகும்.

இந்த கோவில்ல இருக்கும்  துர்க்கை சிலை, இங்க இருக்கும் நாக தீர்த்தத்தில் கிடைச்சதால "தீர்த்த துர்க்கை"  ன்னு சொல்றாங்க.  துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமை  அன்று ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து, நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப்பழ தீபம்  ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள்  உடனே அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  

ஆவணி முதல் ஞாயிறு அன்னிக்கு இக்கோவில் விழாக்கோலம் காணும். 

நன்றியுடன்,
ராஜி

8 comments:

  1. முன்னாடியே வெளியிட்ட பதிவோ? படித்த மாதிரியே இருக்கே....

    படங்களும் தகவல்களும் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ண்ணே, படம் மட்டும் மாத்திட்டேன்

      Delete
  2. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  3. வெங்கட் சாந்தி மாரியப்பன் ( அமைதிச்சாரல்) போட்டு இருந்தார்கள் இந்த கோவில் பற்றி.
    நான் சின்ன வயதில் நாகர்கோவிலில் இருந்த போது பார்த்த்து. இப்போதும் வேண்டுதல் இருக்கு.
    போக வேண்டும் நாகராஜன் கோவிலுக்கு. என்று அழைப்பாரோ நாகராஜன்.

    பதிவும், படங்களும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நானும் நாகராஜனை பார்த்து ரொம்ப நாளாச்சுதும்மா

      Delete
  4. நாகராஜர் ஆலயம்..வாசல் வரை சென்றோம் ..உள்ளே செல்ல முடியவில்லை

    அடுத்த முறை பார்க்கவேணும் ராஜி க்கா ..அனைத்து தகவல்களும் சிறப்பு..

    ReplyDelete
    Replies
    1. பதிவில் பார்த்தேன் அனு.

      Delete