Friday, August 03, 2018

ஆனந்தம் பெருக ஆடிப்பெருக்கு விரதம் - அறிவோம் திருவிழா


இன்னிக்கு ஆடி மாசம் பதினெட்டாம் நாள். பதினெட்டு என்பது வெற்றியை குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வதங்கள். பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், குருஷேத்திர போர் நடந்தது 18 நாட்கள், மகாபாரத போரில் ஈடுபட்ட சைனியங்களின் எண்ணிக்கை 18,  சபரிமலையின் படிகட்டுகள் 18.   போகர், அகத்தியர், உள்ளிட்ட புகழ்பெற்ற சித்தர்கள் 18,  நம்மை நல்வழிப்படுத்தும் திருக்குறள், நாலடியார், நாண்மணிக்கடிகை, உட்பட 18 நூல்களை பதினெண்கீழ்கணக்கு என சொல்றோம். மெய் எழுத்துகள் 18... இப்படி பதினெட்டுக்கென பல சிறப்புகள் இருக்கு. அந்த வரிசையில் ஆடி மாதம் 18ம் நாளில் கொண்டாடப்படும் பண்டிகைக்கும் ஆடிப்பெருக்குன்னு பேரு. இந்த நாளில் ஆடி 18, ஆடிப்பெருக்கு, ஆடிப்பட்டம்ன்னு அழைப்பாங்க.  

அம்பிகையின் மகிமையை விளக்கும் ஸ்ரீமத் தேவிபாகவதத்தில், இரண்டு காலங்களை யமனுடைய கோரைப்பற்கள் என வியாசர் கூறியிருக்கிறார். அதில் ஒன்று கடும் காற்றடித்து மழை கொட்டத் துவங்கும் காலமான தட்சிணாயண காலம்.  அடுத்தது, வெயில் வீசிக் கொளுத்தத் தொடங்கும் காலமான உத்தராயண காலம். வெயிலில்கூடத் தப்பிடலாம். ஆனா, மழைக்காலத்தில்?! அதுவும் புதுத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும்போது, அந்தப் புது நீர் பல வகையான நோய்களை வரவழைச்சுடும். அதன் காரணமாகவே தட்சிணாயண காலத் தொடக்கமான ஆடி மாதத்தில் அம்பிகைக்கு (காப்பவள் தாய்தானே!) விசேஷமான வழிபாடுகள் நடத்தப்படுது. அதிலும் ஆடி 18 மிக விசேசமானது. அன்றைய அம்மனை வழிப்பட்டு குடும்ப நலனுக்கும், தாலி பாக்கியம் வேண்டியும் மாங்கல்ய சரடை மாற்றிக்கொள்வர்.
தாயை பழித்தாலும் தண்ணியை பழிக்காதன்னு நம்மூர்ல ஒரு பழமொழி உண்டு. இதோட அர்த்தம் நாம சொல்லுற மாதிரி அம்மாவை கடுஞ்சொல்லால் திட்டினாலும், தண்ணியை திட்டாதன்னு கிடையாது. தாயை அசிங்கப்படுத்தினாலும், அவளை கவனிக்காம விட்டாலோ அல்லது அவள் அழிவுக்கு காரணமா இருந்தால் தாய் மட்டும் இல்லன்னா அவளோடு சேர்ந்து அவள் குடும்பம் மட்டுமே  பாதிக்கும். ஆனா, தண்ணியை அசிங்கப்படுத்தி, கவனிக்காம விட்டு அதோட அழிவுக்கு காரணமானா நம் வம்சமே இல்லாம போகும். இந்த அர்த்தம் உண்மையா பொய்யான்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை....  
பொங்கி வரும் நீரினால் ஆற்றிலிருக்கும் கழிவுகள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு, ஆறு சுத்தமாகிடும். அதுமாதிரி, மனதிலிருக்கும் அழுக்குகள் நீங்கவும், வாழ்க்கையிலிருக்கும் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி, குடும்ப நலனுக்காக அனைவரும் வேண்டிக்கொள்ளும் நாளே இந்த ஆடிப்பெருக்கு.

ஆடியும், விவசாயமும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதது. 'ஆடியில் காத்தடித்தால் ஐப்பசியில் மழை பொழியும்' என, நம் முன்னோர் கணித்து 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்றனர். வானம் பார்த்த பூமியில் பயிரிடும் விவசாயிகள் ஆடி மாதம் துவங்கியதும் வறண்ட பூமியை ஆழமாக உழுது மானாவரி சாகுபடிக்காக சூரிய பகவானை வணங்கி வானத்தை பார்த்து பூமியில் விதைகளை விதைப்பர். ஆடி மழை பெய்ததும் விதைகள் துளிர்விட்டு பயிர்களாக வளர்ந்து விவசாயிகள் வயிற்றில் பால்வார்க்கும். ஆடியில் விதைத்து ஐப்பசியில் அறுவடை செய்து தானியங்களை சேகரித்து வைப்பர். சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதம் கரும்புடன் பொங்கலிட்டு வணங்குவர். இது ஆண்டாண்டு காலமாக தமிழர்கள் கடைப்பிடிக்கும் விவசாய பண்பாடு. 

புதிதாக திருமணமாகும் மணப்பெண் அணிந்திருக்கும் மாங்கல்யத்தின் இருபுறமும் லட்சுமிக்க்காசு, மணி, பவளம் கோர்த்து, அவரது கழுத்தில் சுமங்கலிப் பெண்கள் அணிவிப்பதுதான் தாலி பெருக்குதல் வைபவம். முதன்முதலில் மஞ்சள்கயிற்றை மாற்றும் சடங்கு இது. புதிதாக மாற்றும்போது மங்களகரமான தாலியுடன், லட்சுமிக்காசு, மணி ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இதை ஒற்றைப்படை மாதத்தில் மணமகன் வீட்டில் நடத்துவர். பெரும்பாலும் திருமணமான மூன்றாவது மாதத்தில் இந்த வைபவம் நடக்கும். ஆடிப்பெருக்கன்று இதனை செய்வது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று நதிகளில் நீர் பெருக்கு ஏற்படும் என்பது நம்பிக்கை. அன்று நதிக்கரைகளில் வழிபாடு நடத்தப்படும். அந்த நாளில் நதிக்கரைகள், கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிடும் மரபு இருந்துள்ளது. புதிய திருமண தம்பதிகள் நதிக்கரையில் அன்று இரவு நிலாச்சோறு சாப்பிடும் பழக்கமும் உண்டு. அன்றைய தினம் பெண்கள், கோயில்களில் தாலிக்கயிற்றை மாற்றி புதிய தாலி கயிறு அணிவதுண்டு. திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும் என அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வர்.

ஆட்டனத்தி ஆதிமந்தி கண்ணதாசன் படைத்த சிறந்த காவியம். கதையின் தலைவன் ஆட்டனத்தி, சேரமன்னன். வீரத்துடன், ஆடல் கலையிலும் வல்லவனாக விளங்கினான். இவனிடம் ஆடல் கற்க வந்த மாருதி, ஆதிமந்தி இருவரும் ஆத்தியிடம் காதல் கொண்டனர். அவன் நெஞ்சமோ மாருதியை விரும்பியது. அவளுக்காகவே கரூர் மன்னனுடன் போர் செய்தான். வென்றான். அதற்குப் படை கொடுத்து உதவிய சோழன் கரிகாலனின் வேண்டுகோளுக்காக அவரது மகளான ஆதிமந்தியை மணக்க நேர்ந்தது. மாருதி புத்தத் துறவியானாள். காவிரிப் புதுவெள்ளத்தில் நீராடும்போது ஆத்தியை வெள்ளம் அடித்துச் சென்று கடலில் தள்ளியது. அங்கிருந்த மாருதி அவனை மீட்டுக் காப்பாற்றினாள். தானே மூச்சை அடக்கி உயிர்நீத்தாள். கணவனைத் தேடிக் கரைவழியே வந்த ஆதிமந்தி அவனைக் கண்டாள். இருவரும் மாருதிக்குச் சிலைவடித்துக் காதல் தெய்வமாய் வழிபட்டனர். இது காப்பியக்கதை. பொதுவா நம்மூரில் திருமணமாகாத கன்னிப்பெண்கள் இறந்துட்டா, அவங்க நினைவு நாளில் காதோலை கருகமணி எனப்படும் ஓலைச்சுருளும், கறுப்பு வளையலும் படைப்பது வழக்கம். மாருதியின் நினைவினால்தான் இந்நாளில் இதை வச்சு படைக்குறாங்க.
சகல உயிர்களுக்கும் தண்ணிதான் உயிர் வாழ முக்கியம்ன்றதால நதியான தான் உயர்ந்தவள்ன்ற எண்ணம் காவேரியின் அடிமனசிலிருந்ததால், ஒருமுறை அகத்திய முனிவரை சந்திக்கும்போது காவேரி எடுத்தெறிந்து பேசியதால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் காவிரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைத்தார். நதி இல்லாமல் உயிரினம் எப்படி வாழுமென்பதால் தேவர்கள் அனைவரும், விநாயகரிடம் சென்று முறையிட்டனர். வினாயகரும் காக்கை ரூபத்தில் வந்து அகத்திய முனிவரின் கமண்டலத்தை தள்ளி விட்டதால் காவிரி தாய் மீண்டும் பூமியில் ஓடி சகல உயிர்களையும் வாழ வைத்தாள். மற்ற நதிகளைப்போல இல்லாம காவிரி புண்ணிய நதியாகும். காவிரி புனிதத்தன்மை பெற்று மக்களின் பாவத்தை எப்படி போக்குவதுன்னு இனி பார்ப்போம்.

மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி, நீராடி மக்களின் பாவம் அனைத்தும் கங்கையின்மீது சேர்ந்து பாவத்தின் பாரம் சுமக்க முடியாத அளவுக்கு போனது. தன்னுடைய பாவம் தீர என்ன செய்ய வேண்டுமென விஷ்ணுபகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு மகாவிஷ்ணு நீ காவிரியில் நீராடு. உன் பாவங்கள் நீங்கும் என யோசனை செய்தார்.  அந்த சமயம் கர்ப்பவதியாக இருந்த காவேரி, விஷ்ணுவின் யோசனையை கேட்ட்டு சந்தோசப்பட்டாள். பெருமானை தரிசிக்க காவேரி நதி பொங்கி வந்தது. கர்ப்பிணியாக இருந்த காவிரி தாய்பெருமானை தரிசித்த நாளே ஆடிப்பெருக்காகும். அதேப்போல வருடா வருடம் தன் தங்கையை காண ஆவலோடு இருப்பார் அரங்கன். 
ராமனுக்கும், இராவணனுக்கும் நடந்த போரில் பல உயிர்களையும் ராமன் கொல்லநேர்ந்ததுராமன் கொன்றது அசுரர்களைதான் என்றாலும் யுத்தத்தல்பலர் கொல்லப்பட்டதால் ராமனுக்கு பிரம்மஹத்திதோசம் பிடித்துக்கொண்டது.  இந்த தோசத்திலிருந்து தான் விடுபட என்ன செய்ய வேண்டுமென வசிஷ்ட முனிவரிடம் ராமன் கேட்டான்.  இந்த பாவத்திலிருந்தும், தோசத்திலிருந்தும் விடுபட காவிரியில் ஆடிப்பெருக்கு நாளில் நீராடினால் உன்னை பிடித்திருக்கும் தோசங்கள் நீங்குமென கூறினார் வசிஷ்டர். முனிவர் கூறியது போல ஆடிப்பெருக்கு நாளில் காவிரியில் நீராடி தன் பாவத்தை போக்கிக்கொண்டார்.  


இந்நாளில் சகோதரர்கள், தங்கள் சகோதரிகளையும், அவர்தம் கணவரையும் வீட்டிற்கு அழைத்து விருந்திட்டு, தங்களால் முடிந்த புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், பூக்கள், நகை, பாத்திரமென சீர் செய்வர். சாதாரண மனிதனே இவ்வாறு சீர் செய்யும்போது , காவிரியை தங்கையாய் ஏற்றுக்கொண்ட ரங்கநாதர் சும்மா இருப்பாரா?!

தங்கைக்கு சீர் செய்ய யானைமீதேறி, சீர்வரிசை பொருளோடு அம்மா மண்டபத்தில் எழுந்தருள்வார். தங்கைக்கு சீராக தர புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பூ பழம் போன்றவற்றை யானை மீது கொண்டு வருவதாக புராணம் சொல்கிறது. அதன் நினைவாகவே இன்றும் சகோதரிக்கு சகோதரர்கள் ஆடிச்சீர் செய்வது.(எத்தனை பதிவு போட்டும்,எத்தனை கெஞ்சியும்,எனக்கு ஒருபயலும் ஒருஸ்பூன்கூட வாங்கிக்கொடுக்கல) அதனால் இன்று வரை ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து யானை மீது அம்மன் மண்டபம் படித்துறைக்குசீர் வரிசையை கொண்டு   வருவார்கள்அதை பெருமாள்முன் வைத்து, உங்கள் தங்கைக்காக நாங்கள் கொண்டு வந்திருக்கும் சீரை பாருங்கள் என காட்டுவார்கள்.  அதன்பின் தீப ஆராதனையும் செய்வார்கள். அதன்பின், புடவை, தாலிப்பொட்டு, பூ,பழம், வெற்றிலை, பாக்கு என அத்தனையையும் காவிரியில் மிதக்க விடுவர்.    .
ஆடி மாதத்தில் புண்ணிய நதியான காவிரி கர்ப்பவதியாக  இருப்பதால் அவளுக்கு பலவகையான உணவுகளை படைத்து, மஞ்சள், காதோலை, கருகுமணி மாலை, வளையல், தேங்காய், பூ, பழங்கள், அரிசி, வெல்லம் வைத்து , அதோடு மஞ்சள் சரடையும் காவிரிக்கரையில்  வைத்து தீப ஆராதனை செய்து காவிரியை பூஜிப்பர்.
அம்மன் கர்ப்பவதி என்பதால் அவள் நாவுக்கு சுவையாய் புளிசாதம், எலுமிச்ச சாதம், மாங்காய் சாதம், ஊறுகாய், வடை, பாயாசம், கற்கண்டு சாதம், சர்க்கரைபொங்கல்ன்னு விதம் விதமா கொண்டு வந்து நைவேத்தியம் செய்து மத்தவங்களுக்கு கொடுத்து குடும்பத்தோடு காவிரிக்கரையில் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம்.

எங்க ஊரில் ஆறு இல்லன்னு சொல்றவங்களும் சரி, ஆறிருந்தாலும் அதில் தண்ணி இல்லன்னு சொல்லும் என்னைய மாதிரி ஆளுங்களும் சரி மனசை தளரவிடாம  ஒரு செம்பில் அரைத்த மஞ்சள் கலந்த நீரை, திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்கனும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போடனும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து,  காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. 

கல்கியின்  பொன்னியின் செல்வன் கதை தொடங்குவது இந்நாளில்தான். ராஜராஜசோழன் பெருமை இருக்கும்வரை வந்தியத்தேவனின் புகழும் மறையாம இருக்கும். அதேப்போல, அந்நிய ஆட்சியை எதிர்த்தும், தமிழர் நிலத்தை தமிழரே ஆளும் பொருட்டும் போர் புரிந்து, பல போர்களில், வெள்ளையனை ஓட ஓட விரட்டியடித்த தீரன் சின்னமலை, அவர் தம்பி மார்கள் தம்பி, கிலோத்தர் மற்றும் வீரத் தளப‌தி கருப்பன் சேர்வை தூக்குக்கயிற்றை முத்தமிட்ட தினமும் இன்றுதான். அட்சய திருதியை விட இன்னாளில் நகை, பொருட்கள், தொழில் தொடங்க நல்ல நாள். ஏன்னா பெருக்குதல், சுத்தம் செய்தல் என பொருள்படும். 
இந்த ஆடிப்பெருக்கு நாளில் பிள்ளைகள் சப்பரமிடுதலும் ஒரு சடங்கு. ஒரு குட்டி வண்டியில் கலர் பேப்பர் எல்லாம் ஒட்டி சப்பரம் ரெடி பண்ணுவாங்க. யார் சப்பரம் கெத்தா இருக்குன்னு போட்டியும் நடக்கும். இந்த ஆடிப்பெருக்கில் நல்ல எண்ணங்களை மட்டுமே நினைத்து கொண்டு அடுத்த வருடத்தில் ஆடி காரில் வர்ர அளவுக்கு நம் வளர்ச்சி பெருகட்டும்.

நன்றியுடன்,
ராஜி

12 comments:

  1. 18-ன் சிறப்பு உட்பட அனைத்தும் அருமை...

    ஆடி கார் ஆசையே வேண்டாம்மா... அதற்கு பலரின் துயர வாழ்விற்கு உதவி செய்யலாம்...

    ReplyDelete
    Replies
    1. அதும் செய்வோம். அதே நேரம் நாமும் அனுபவிப்போம்ண்ணே. உழைக்கனும், சாப்பிடனும், அனுபவிக்கனும். அதேநேரம் அடுத்தவங்களுக்கும் உதவனும்.

      Delete
  2. அருமை...அருமை...அருமை...

    ReplyDelete
  3. அறிந்தோம் ஆடிப்பெருக்கு விரதம் சிறப்புகள் பற்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆடிப்பெருக்கின் சிறப்புகளில் ஆடிச்சீரும் உண்டு. அது ஒருத்தர் கண்ணுக்கும் தெரிலயே!

      Delete
  4. ஆடிப் பெருக்கு வாழ்த்துகள்......

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊர் பக்கம் ஆடிப்பெருக்கு விழா இல்லண்ணே.

      Delete
  5. தகவல்களும் அதற்கேற்ற படங்களும் சிறப்பு. நல்ல தேடல். வாழ்த்துகள்.

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    https://newsigaram.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  6. ஆடித் திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும், கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete