Wednesday, October 24, 2018

அன்னம் பகிர்ந்திடு - ஐப்பசி அன்னாபிஷேகம்

உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோர்....  தானத்தில் சிறந்தது அன்னதானம், தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்.... அன்னமிட்ட வீட்டில் கண்ணம் வைக்காத... அன்னையை பழித்தாலும் அன்னத்தை பழிக்காத...ன்னு உணவின் பெருமையை சொல்லிச்செல்லும் பழமொழிகள் ஏராளம்.   "அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” ன்ற சாமவேதத்திலிருக்கும்  வரியின் பொருள்   எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கு என்பதாகும். உணவே உலகில் வாழும் அத்தனை ஜீவராசிக்கும் உயிர்நாடி. உலக வாழ்க்கைக்கு அச்சாணி உணவுன்னு சொல்லலாம்.  அன்னமானது பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம். பராசக்தியின் அம்சமான பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாக காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.  
பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு
பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும்
அன்றுற் பவித்திடும் கருப் பையுறு சீவனுக்கும்
மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும்
மற்றுமொரு மூவருக்கும் யாவருக்கும்

 னைத்து உயிர்களுக்கும் படியளக்கும் ஆண்டவனுக்கே  அமுது படைக்கும் விழாதான் அன்னாபிஷேகம். ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் மாலை வேளையில்   சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்விக்கப்படுகின்றது.


பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் இருக்குறதால  அமிர்த கலைன்னு சொல்வாங்க. அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்னிக்கு அறுவடையான புது நெல்லை அரிசியாக்கி சோறாக்கி  சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் செய்வது வழக்கம்.  சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்னபூரணியை தனது இடப்பாகத்தில் கொண்ட அந்த சிவனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.


தில்லையில்  தினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் செய்து, சுவாமிமேல் சாற்றிய அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்ன்னு பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை. அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம்.  எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம். லிங்க ரூபம் நீள் வட்ட வடிவம். அரிசியும் நீள் வட்டவடிவம்.  அதனால், அரிசி சிவரூபம் என்பர். அன்னாபிஷேகத்தன்று இறைவன்மேல் சாற்றப்படும் அனைத்து பருக்கைகளும் சிவனின் அம்சம். அதனால், அன்னாபிஷேகராக காணப்படும் சிவனை தரிசித்தால் கோடானு கோடி சிவனை ஒருசேர தரிசித்தற்கு சமம். 

சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்னுதான் சாதம், சோறுன்னு சொல்லப்படும் வெறும் அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையது. ஆலய வழிபாட்டில் மாத பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும். ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிட்சமா விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.

சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே நாம் அனைவரும். சிவனும், நாமும் வேறல்ல! ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிந்து, நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது. அரிசி, நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிசேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்படுத்தி சிவனுக்குள் தன்னை   அடைக்கலமாகின்றது.  ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பதை அன்னம் நமக்கு உணர்த்துகின்றது. அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.

ஐப்பசி பௌர்ணமியன்ன்னிக்கு காலையில சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.  பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து லிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு  சாற்றுகின்றனர். இது அன்னாபிஷேகனம் எனப்படுது. சாயரட்சை பூஜை அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு நடைபெறும்.
பின் இரண்டாம் காலம்வரை ( மாலை 6.00 மணியிலிருந்து 8:30 மணி வரை) அன்னாபிஷேகராக சிவன் காட்சி தருவார்,   இரண்டாம் காலம் பூஜை முடிந்தபின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.  மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ, கோவில் கிணற்றிலோ கரைக்கப்படும்.  எம்பெருமானின் அருட்பிரசாதம் கரையேறி வரமுடியாத நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்கனும்ன்னு இந்த மாதிரி செய்வது வழக்கமாம்!

எல்லா சிவன் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடக்கும். அதிலும் குறிப்பா தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் இருக்கும் லிங்கத்திருமேனி பெரியதாகியதால் காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்கிடும். சோழநாடு சோற்றுடைத்துன்னு சொல்றதுக்கு தகுந்தமாதிரி  அறுவடையான புத்தம்புது அரிசி,  மூட்டை மூட்டையாக வந்து குவியும். நெற்களஞ்சியமென பேரெடுத்த தஞ்சை, அதன் சுற்றுவட்டார உழவர் பெருமக்கள் நெல்லை கோவிலுக்கு இலவசமாக கொடுப்பாங்க. அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும்., அவ்வரிசியைக் கண்டு சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக அன்னம் வந்து சேர சேர ஐயனின் திருமேனிமேல் சிறிது சிறிதாக அன்னம் சாற்றப்படும். எம்பெருமானின் திருமேனி முழுவது அன்னாபிஷேகம் ஆக மாலை ஆகும். பின்னர் மாலை பூஜைகள் முடிந்து அர்த்த சாமத்திற்கு பின் அன்னம் அனைவரும் பிரசாதமாக வழங்கப்படும்.

இதேமாதிரி, குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை என்னும் கோவிலிலும் அன்னாபிஷேகம் சிறப்பா நடக்கும்.  பகல் 11 மணிக்கு முதலில் திருநீற்றால் அபிஷேகம் நடத்தி, பிறகு, எப்போதும்போல  மற்ற பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெறும்.  மாலை ஐந்து மணிக்கு எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னத்தாலும் மற்றும் காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு,தீபாரதனை நடக்கும். இரவு 9 மணி அளவில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் அன்னாபிஷேக திருமேனியின்மீது பூரண சந்திரன், தனக்கு சாப விமோசனம் அளித்து தன்னை ஜடா முடியிலே சூடிக்கொண்ட அந்த சந்திரசேகரனை தனது அமிர்த கலைகளால் பூஜிப்பான். இத்தலத்தின் சிறப்பு இதுதான்.  

பொதுவாக அன்னம் எம்பெருமானின் மேனி முழுவதும் சாற்றுவதுதான் அன்னாபிஷேகம் எனப்படும். இப்பலாம் பலக்கோவில்களில், தங்கள் பக்திக்கும் கற்பனை சக்திக்கும் தகுந்தவாறு, அன்னம் சாற்றி பழங்கள், பட்சணங்கள் கொண்டு இறைவனின்  முகத்தை கொண்டு வருகின்றனர், இன்னும் சிலகோவில்களில் கருவறையின் படியிலிருந்தே படிப்படியாக ஆவுடை வரைக்கும்  படிகள் அமைத்து அந்த படிகளிலே அனைத்து காய்கறிகளையும் பழங்களையும் பட்சணங்களையும் கொலுவாக அமைத்து அலங்காரம் செய்கின்றனர்.

இன்று பெரும்பான்மையான சிவன் ஆலயங்களில் அன்னதானம் சிறப்புற நடக்கும். இந்நாளில் உபவாசம் இருந்து, மகாபிஷேகம் செய்து, பின் சிவனுக்கு அன்னாபிசேகம் செய்த பிரசாதத்தை உண்ணும்போது என்றென்றும் பிடி சோற்றுக்கு அல்லலுறும்  நிலை உண்டாகாது.   ஒருமுறை அனைத்து உயிருக்கும் அன்றைய தினத்துக்கான உணவை சேர்ப்பிக்க வேண்டி சிவபெருமான் தயாரானபோது,அவருடன் விளையாட எண்ணிய பார்வதிதேவி, அருகில் ஓடிக்கொண்டிருந்த ஒரு எறும்பினை பிடித்து ஒரு பாட்டிலில் அடைத்து முந்தானையில் முடிந்துக்கொண்டாள். அனைத்து உயிருக்கும் சேரவேண்டிய உணவினை ஏற்பாடு செய்துவிட்டு சிவபெருமான் திரும்பினார்.
எல்லா உயிருக்கும் உணவினை சேர்பித்தாகிவிட்டதா என ஐயனிடம் பார்வதிதேவி வினவ, ஓ படியளந்தாகிவிட்டதென சிவபெருமான் பதிலுரைக்க, இதோ இதிலிருக்கும் இந்த எறும்புக்கு?! என்றவாறு முந்தானையில் முடிந்திருந்த டப்பாவினை எடுத்து காட்டினாள். திறந்து பார் என சிவபெருமான் சொல்ல, அன்னை டப்பாவை திறந்து பார்க்க, அதிலிருந்த எறும்பு ஒரு பருக்கை சாதத்தை சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. எறும்பை டப்பாவினுள் அடைத்த குற்றத்திற்காக பார்வதிதேவி பூமியில் பிறப்பெடுத்ததெல்லாம் தனிக்கதை. அப்ப, இன்னிக்கு பலபேர் பட்டினியாய் இருக்காங்களே! சாமி ஏன் உணவு கொடுக்கலைன்னு விதண்டாவாதம் செய்யலாம். ஆனா, சிவம் வேறில்லை, நாம வேறில்லை. கடவுளே நாம். நாமே கடவுள். வசதி, வாய்ப்பு இருக்க நாமதான் மத்தவங்களுக்கு கொடுக்கனுமே தவிர, புலியாடை உடுத்தி, சாம்பல் பூசி, உடுக்கையுடன் கயிலையிலிருக்கும் சிவபெருமான்தான் வரனும்ன்னு இல்ல.  இதுக்குதான் தெய்வம் மனுஷ ரூபேன ன்னு சொல்லுறது.
இறைவனுக்கு இந்த அன்னாபிஷேகம்  செய்விக்கும் முறை ஏழாம் நூற்றாண்டு காலத்துக்கு முன்பிருந்தே இருக்குன்றதுக்கு சான்று இருக்கு. திருஞானசம்பந்தருக்கு கல்யாணம் கட்டி கொடுக்க தன்னுடைய பெண்ணான பூம்பாவை அருமை பெருமையாய் வளர்த்து வந்தார் மயிலாப்பூரில் வசிக்கும் சிவநேசன். தனது ஏழாவது வயதில் தோழிகளுடன் நந்தவனத்தில் பூப்பறிக்க சென்ற பூம்பாவையை நாகம் தீண்டி இறந்தாள். அவளுடைய திருஞானசம்பந்தரிடம் சேர்ப்பிக்க வேண்டி அஸ்தியை  பத்திரப்படுத்தி வச்சிருந்தார் சிவநேசன். சில வருடங்கழித்து அந்த ஊருக்கு திருஞானசம்பந்தர் வந்தார். விவரங்களை சொல்லி அஸ்தியை அவரிடம் ஒப்படைத்தார் சிவநேசன்.


மைப்பயந்த வொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.
என பதிகம் பாடி பூம்பாவையை 12 வயது  குமரியாய் உயிர்பித்தார்.  தனது மகளை உங்களுக்காகத்தான் வளர்த்து வந்தேன். அவள் இறந்தபின் ஈமக்காரியங்களை செய்ய அஸ்தியை உங்களுக்காக பாதுகாத்து வந்தேன். நீயே! என் மகளுக்கு மணாளன். நீயே என் பெண்ணை மணக்க வேண்டுமென  சிவநேசன் திருஞானசம்பந்தரை வேண்டி நிற்க, கடவுளும், தந்தையும் மட்டுமே உயிர் கொடுக்க முடியும். நான் கடவுள் அல்ல. உயிர் கொடுத்ததால் பூம்பாவைக்கு தந்தை முறையாவேன் என திருமணம் செய்ய மறுத்து விலகினார். அதன்பின் பூம்பாவை இறைத்தொன்றாற்றி இறைவனடி சேர்ந்தார். பூம்பாவை பதிகத்தின் வழியே ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னமயே அன்னாபிஷேக செய்யும் வைபவம் நடந்துக்கிட்டிருந்ததை அறியலாம்.
இந்த நாளிலிருந்து தினத்துக்கு சமைக்கும்போது ஒரு பிடி அரிசியை எடுத்து தனியா சேமிச்சு வரனும். மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும்போது இப்படி சேமிச்சு வச்சிருக்கும் அரிசியை கொண்டு வந்து சமர்பிக்கலாம். இதுக்கெனவே, பிடி அரிசி உண்டியல்ன்னு வச்சிருக்காங்க. இது அடியவர்களுக்கு பசியை போக்க உதவுது. இப்படி மைலாப்பூருக்கு வரமுடியாதவங்க, அருகிலிருக்கும் சிவன் ஆலயங்களுக்கு கொடுத்துடலாம். இல்லன்னா, எதாவது பள்ளி, ஆதரவற்ற இல்லத்துக்கோ கொடுப்பதை வழக்கமா வச்சுக்கலாம்.
வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து
ஓங்கிமிக அருள் மழை பொழிந்தும் இன்ப
வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால்
வருந்தாமலே யணைத்து 
கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல்
குஞ்சரக் கூட்ட முதலான சர்வ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும் 

அந்த சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து,  அனைத்து உயிர்களும் பசி, பிணி, பஞ்சத்தில் அல்லலுறாமல் இருக்க எம்பெருமானை வேண்டிக்கொள்வோம்.
நன்றியுடன்,
ராஜி

11 comments:

  1. அன்னத்தைப்பற்றி இவ்வளவு விடயங்களா ? ஆச்சர்யமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஒரு பானை சோத்துல ஒரு சோறுதான் இந்த பதிவு. விவரம் இன்னமும் இருக்குண்ணே

      Delete
  2. தகவல்கள் அருமை சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  3. தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  4. அருமையான அன்னாபிஷேக வரலாற்றுப் பதிவு......... நன்றி தங்கச்சி,பதிவுக்கு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  5. பசித்திருப்பவன் முன்னால் ஈசனும் உணவு வடிவில்தான் வரவேண்டும் / முடியும் என்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. மக்கல் பசித்திருக்க பஞ்சம் காரணமில்லைப்பா. மனசில்லாததே காரணம்

      Delete
  6. தகவல் நல்லா இருக்கு. அன்னாபிஷேகம்னு சொல்லிட்டு வெண்டைக்காய், பஜ்ஜி மிளகாய், கேரட் கொண்டெல்லாம் அலங்காரம் செய்வதுதான் ஒரு மாதிரி இருக்கு.

    ReplyDelete