Friday, December 28, 2018

அரங்கநாயகி சமேத உத்தர அரங்கநாத பெருமாள் கோவில் - பள்ளிக்கொண்டா, அறிவோம் ஆலயம்

மனசுக்கு அமைதி கொடுக்கக்கூடிய கோவில்கள் பல இருக்கு. அந்த வரிசையில் வேலூர் மாவட்டத்திலிருக்கும் பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதர் கோவில். ஊரின்  மையத்திலிருந்தாலும் வாகன இரைச்சல், ஜனநெருக்கடியின்றி, ரொம்ப சுத்தமா விசாலமா இருக்கு. இந்தக்கோவில் இந்திரனின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலமாகும். ஸ்ரீரங்கத்தில் ஆண்டாளை ஆட்கொண்டதுபோல இங்கு செண்பகவல்லியை ஆட்கொண்டது, பிரம்மன் செய்த யாகத்தை காத்தது, பொங்கி வந்த ஆற்றுவெள்ளத்தை படுத்து தடுத்தது என பல வரலாற்றினை கொண்டது திருமணத்தடை இருப்பவர்கள் இத்தலத்தில் வந்து வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்குமென்பது நம்பிக்கை.

இத்தலம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் நாரத மாமுனிவர் பிருகு மகரிஷிக்கு சொன்னதாய் இரண்டு அத்தியாயங்களாய் கூறப்பட்டுது. காஞ்சி மகாத்மியத்திலும், ஹஸ்தகிரி மகாத்மியத்திலும் சொல்லப்பட்டுள்ளது என பள்ளிகொண்டை எனும் உத்திரரங்கஷேத்திர புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகொண்டா ரங்கநாதரைத் தரிசித்து மகிழ்ந்த பிரம்மா, யாகம் செய்ய விரும்பினார். அதற்கான இடத்தைத் தேடினார். முடிவில் வேறு இடங்களில் நூறு யாகங்கள் செய்வதைவிட, சத்யவிரத ஷேத்திரம் எனும் காஞ்சீபுரத்தில் செய்வதே சாலச் சிறந்தது என்று தீர்மானித்தார். இந்த நிலையில் சரஸ்வதிக்கும், லட்சுமிக்கும் தங்களுக்குள் யார் பெரியவர்?ன்ற போட்டி ஏற்பட்டது. இதற்கான பஞ்சாயத்து பிரம்மாவிடம் வந்தது. பிரம்மா, லட்சுமியே உயர்ந்தவள் எனக்கூறினார். கோபங்கொண்ட சரஸ்வதி அங்கிருந்து, மேற்கேயுள்ள நந்திதுர்க்க மலைக்குச் சென்று, லட்சுமிதேவியைவிட தன் நிலை உயர தவம் செய்தாள். காஞ்சிபுரத்தில், தான் செய்யவிருக்கும் யாகத்திற்கு, தம்பதி சமேதராய் கலந்துக்க வேண்டியிருப்பதால்  சரஸ்வதியை அழைத்தார் பிரம்மா. ஆனா, பிரம்மாவுடன் வர  சரஸ்வதிதேவி சம்மதிக்காமல் அங்கேயே தங்கிவிட்டார்.
தனியாளாய் யாகத்தில் உட்காரமுடியாமல், சரஸ்வதிதேவியின் அம்சத்தினைக்கொண்டு சாவித்திரின்ற  பெண்ணை உருவாக்கி, அவளை மணம்புரிந்து யாகத்தைத் தொடங்கினார் பிரம்மா. இதைக் கேள்வியுற்ற சரஸ்வதி, பெரும் வெள்ளமாகப் பெருக்கெடுத்து, ஷீர நதி எனும் நதியாக பாய்ந்தோடி, யாகத்தை அழிக்க முற்பட்டாள். இதனால் பிரம்மா, பெருமாளின் உதவியை நாடினார். 
பெருமாள், சாவித்ரி உமது அம்சமே! உனக்கு பிரம்மா துரோகம் செய்யவில்லையென சரஸ்வதியை சமாதானம் செய்து அழைத்து வந்தார். முன்னதாக, அவர் நதியின் ஓட்டத்தை தடுக்க, ஆதிசேஷனை நதியின் குறுக்கே படுக்க வைத்து, அதில் சயனித்தார். பின்னர், பிரம்மா யாகத்தை சிறப்பாக முடித்தார். சரஸ்வதியும் சாவித்திரியும் ஒன்றே என்பதை விளக்கிய பெருமாள், அவளை பிரம்மனுடன் மீண்டும் இணைத்து வைத்தார். பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம் என்பதால், இவ்வூர் ‘பள்ளி கொண்டான்’ எனப்பட்டது. பெருமாள் ‘உத்தர ரங்கநாதர்’ எனப்படுகிறார்.
பெருமாளை அதுவரை பாற்கடலில் மட்டுமே  சுமந்துவந்த  ஆதிஷேசன் இத்தலத்தில்தான் முதல்முறையாக அவரை நீரின்மேல் நேரடியாக சயனிக்க வைத்தார்  பின்னர் பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டதால். இத்தலத்து ஆறுக்கு பாலாறு என்று பெயர் ஏற்பட்டது.  தாயார் ரங்கநாயகி தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அழகுற அருளாசி வழங்குகிறாள்.
சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாளை ஸ்ரீவில்லிபுத்தூரில் மணம் புரிந்ததுபோல, பள்ளிகொண்டாவில் சம்பாதிமுனிவர் விருப்பப்படி, செண்பகவல்லி என்ற பக்தையை பங்குனி உத்திர நாளன்று திருமால் மணம் புரிந்தார். 
1925-ம் ஆண்டு இந்தியத் தொல்லியல்துறை ஆய்வறிக்கையின்படி, இத்தலத்தை பற்றி 22 கல்வெட்டுகள் கண்டடெடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 18 கல்வெட்டுகள் உத்திர ரங்கநாதர் ஆலயத்திலும், மூன்று கல்வெட்டுகள் நாகநாதீஸ்வரர் கோவிலிலும், ஒரு கல்வெட்டு செல்லியம்மன் கோவிலிலும் கிடைத்தது. இக்கல்வெட்டுகள் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.848), முதலாம் பராந்தகன் (கி.பி.926), முதலாம் ராஜராஜன் (கி.பி. 985), முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012), இரண்டாம் ஜடாவர்மவீரப் பாண்டியன் (கி.பி.1306), குலசேகரசம்புவராயன் (கி.பி.1307) போன்ற மன்னர்களின் கொடைகளையும், நிலதானங்களையும் இந்த கல்வெட்டுகள் எடுத்து சொல்லுது.
பாலாற்றின் தென்கரையில், கிழக்குமுகமாய் அமைந்திருக்கு இந்த கோவில். கோவிலுக்கு இடப்புறம் வியாசர் புஷ்கரணி. அடுத்து நான்கு கால் ஊஞ்சல் மண்டபம். அடுத்து  ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம்.  இரண்டு திருச்சுற்றுக்களைக் கொண்டது இக்கோவில்.  கோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம் இருக்கு. அடுத்து மகாமண்டபம், அர்த்த மண்டபம் இருக்கு. 

வெளிச்சுற்றில் ராமானுஜர், ராமர், கண்ணன், ஆண்டாள், தலமரங்களான பாதிரி, பாரிஜாதம், கருடாழ்வார், எம்பெருமான் திருவடி, சொல்லின் செல்வனான வீரஅனுமன் அருகே பக்த அனுமன்,  நாகர்சிலைகள் தனித்தனி சன்னிதிகள் இருக்கு.
மகாமண்டபத்தின் இடதுபக்கம் உற்சவமூர்த்திகளும், 12 ஆழ்வார்களும் இருக்காங்க. இதுதவிர, பிள்ளைலோகாச்சார்யார், முதலியாண்டான், மணவாளமாமுனி, ஆளவந்தார், நவநீதகண்ணன் ஆகிய திருமேனிகள் கலைநயத்துடன் காட்சி தருகின்றது. இதில் கண்ணன் திருமேனியைக் காண கண்கோடி வேணும்.

மூலவர் பள்ளிகொண்ட பெருமாள், தெற்கே தலை வைத்து, வடக்கே தன் திருப்பாதங்களைக் காட்டி, பாம்பணையின்மீது பள்ளிக்கொண்டுள்ளார். அவரின் திருமார்பில் திருமகளும், தொப்புள்தாமரையில் நான்முகனும், அரங்கனின் காலருகே ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்துள்ளனர். எம்பெருமானின் திருக்கரம் பக்தர்களை ‘வா’ என அன்போடு அழைக்கும் கோலத்தில் அமைந்திருக்கு. . இவர் சாளகிராமத்தால் ஆனவர். இவரை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் சிறப்பாக நடக்கவும் பிரிந்த தம்பதிகள் சேரவும் இங்கு திருமணம் செய்தால் மணம் ஒத்து வாழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிராத்தனை நிறைவேறியதும் சுவாமிக்கும் அம்மபாளும் திருமஞ்சனம் செய்து துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.
உத்திரரங்கநாதர் :
தெற்கே ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள எம்பெருமான் ஸ்ரீரங்கநாதரைப்போல, வடக்கே பள்ளிகொண்டுள்ள இத்தலபெருமாள், உத்திர (வடக்கு) ரங்கநாதர் என அழைக்கப்படுகிறார். இவர் சின்னஞ்சிறு வடிவில் சயனித்துள்ளதால் பாலரங்கநாதர் என்றும் பக்தர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். மகாமண்டபத்தில் கஸ்தூரிரங்கன் எனும் சோட்டாரங்கநாதர் வடிவமும் தனியே அமைந்திருக்கு. 

சோட்டா ரங்கநாதர்..
இவரே அன்னியப் படையெடுப்பின்போது மூலவரைக் காத்தவர் என வரலாறு கூறுகிறது. ஒரு அன்னிய தேசத்தவர் படையெடுப்பின்போது, இங்கிருக்கும் மூலவரை வேறொரு இடத்துக்கு கொண்டு சென்று மறைத்து வைத்து, அவருக்கு பதிலாக, சிறியதொரு ரங்கநாதர் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர்.  உருவத்தில் சின்னதா இருந்ததால அவருக்கு சோட்டா ரங்கநாதர்ன்னு பேர் வந்ததும் அன்னியர் ஆதிக்கம் அகன்றதும் , பழையபடி உத்தர அரங்கநாதனை பிரதிஷ்டை செய்து, சோட்டா ரங்கநாதரை தனிச்சன்னிதியில் வைத்து வழிபட ஆரம்பித்தனர். இன்னிக்கும் சோட்டா ரங்கநாதருக்கே முதல் மரியாதை. இக்கோவிலில் இரவு தங்கியிருந்து பெருமாளை வழிப்பட்டால் மோட்சம் கிடைக்கும்.


பிரம்மஹத்தி தோஷம் :
திரேதாயுகத்தில் தேவேந்திரன் தன் மனைவி இந்திராணியோடு வனத்தில் உலாவிக் கொண்டிருந்தான். அப்போது கிளி வடிவில் இருந்த ரிஷிகளை கொன்றான். இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதற்கு பரிகாரம் வேண்டி நின்ற இந்திரன், காஷ்யப்ப முனிவர் அறிவுரைப்படி, பள்ளிகொண்டா தலத்து வியாச புஷ்கரணியில் நீராடி, ஓராண்டு காலம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதரைத் தரிசித்து, தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றார். 
பரிகாரத் தலம் :
இத்தலம் பதினாறு வகை செல்வங்களையும் அள்ளித்தரும் தலமாகப் போற்றப்படுது. அதிலும் குறிப்பா திருமணப்பேறு வழங்கும் தலம் இதுங்குறதால  இக்கோவிலில் திருமணங்களை  நடத்தி வைப்பது அதிகம் நடைப்பெறுகிறது. கோவிலை சுற்றியும் நிறைய திருமண மண்டபங்கள் இருக்கு. மண்டபத்தில் திருமணம் நடந்தாலும், முதலில் கோவிலுக்கு வந்து அரங்கனை வழிபட்ட பின்னரே தங்கள் வீடுகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர் இப்பகுதி மக்கள். நீண்டகாலம் திருமணம் தடைபட்டவர்கள், இங்கு வந்து வேண்டிசென்றால் விரைவில் திருமணம் கை கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. .



இக்கோவிலின் தலமரம் பாதிரி மற்றும் பாரிஜாதம் ஆகும். தல தீர்த்தமாக வியாசர் புஷ்கரணி எனும் திருக்குளம் உள்ளது. ஆலயத்தின் அருகே ஓடும் நதி ‘ஷீரநதி’ அல்லது ‘பத்மினி’ எனும் பாலாறாகும். இத்திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


விழாக்கள் :

இந்த ஆலயத்தில் சித்திரையில் பத்து நாட்கள் பிரமோற்சவப் பெருவிழா நடைபெறுகிறது. இது தவிர, வைகாசியில் விசாககருட சேவை, ஆனியில் ஜேஷ்டா திருமஞ்சனம், ஆடியில் பூரம், நான்காம் வெள்ளி, ஆவணியில் கிருஷ்ணஜெயந்தி, பவித்ர உற்சவம், புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசியில் தீபாவளி, கார்த்திகையில் தீபத்திருவிழா, மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, தனுர் மாத பூஜை, தை மாதத்தில் கிரிவலம், மாசியில் தெப்பல் உற்சவம், பங்குனியில் உத்திரம், பெரியபிராட்டியார் உற்சவம் என விழாக்களுக்கு இங்கு பஞ்சமில்லை.


காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோவில் நடை திறந்திருக்கும்.

ஆம்பூர், வேலூரிலிருந்து நேரடி பேருந்து இருக்கு. வேலூர் பெங்களூர் சாலையில் பள்ளிக்கொண்டா/குடியாத்தம் நிறுத்தத்தில் இறங்கி ஷேர் ஆட்டோக்களில் வரலாம். வேலூர், ஆம்பூர், குடியாத்தம்வரை ரயில்ல வந்துட்டு அங்கிருந்தும் வரலாம். . தெற்கே பீஜாசலம் எனும் வித்துமலை இருக்கிறது. சென்னைல இருந்து 150 கி.மீ, வேலூர் - குடியாத்தம் வழித்தடத்தில், வேலூரிலிருந்து 23 கி.மீ, ஆம்பூரிலிருந்து 25 கிமீ, குடியாத்தத்திலிருந்து 9 கிமீ தொலைவில், பள்ளிக்கொண்டா இருக்கு. 

ரங்கா! ரங்கா! ரங்கா!


நன்றியுடன்,

9 comments:

  1. அனைத்து தகவல்களையும் தந்தமைக்கு நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. இன்னமும் தகவல்கள் இருக்குண்ணே. ஆனா, கோவில்ல கேட்டது பாதி மறந்துடுது. இனிமே அதையும் ரெக்கார்ட் பண்ணிட்டு வந்திடனும்.

      Delete
  2. எவ்வளவு தகவல்கள்.... அம்மாடி... படங்கள் ஸூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. இன்னமும் இருக்கு.. கேட்டவை, படித்தவைலாம் மறந்து போச்சுது.

      Delete
  3. படங்கள் அழகு.

    தகவல்கள் பகிர்வும் நன்று.

    சரஸ்வதி - சாவித்ரி - ராஜஸ்தானின் புஷ்கரில் சரஸ்வதிக்கு தனிக் கோவில் - பிரம்மாவிடம் கோபித்துக் கொண்டு மலை மேல் கோவில்! எனது பக்கத்தில் இது பற்றி எழுதியிருக்கிறேன்.

    https://venkatnagaraj.blogspot.com/2018/07/blog-post_11.html

    https://venkatnagaraj.blogspot.com/2018/07/blog-post_13.html

    சும்மா ஒரு விளம்பரம் தான்!

    ReplyDelete
    Replies
    1. இது விளம்பரமில்லைண்ணே. தெரியாத தகவலை தெரிஞ்சுக்க உதவும்... அதுமில்லாம நான் சொன்னா தகவல்கள் உண்மைன்னும் உறுதியாகும். எப்படி பார்த்தாலும் எனக்குதான் லாபம். உங்க பதிவுகளுக்கு இந்தா வந்துட்ட்ட்ட்ட்டே இருக்கேன்.

      Delete
  4. பள்ளிக்கொண்டா ஊரும் தெரியும் போயிருக்கேன் ஆனால் கோயில் போனதில்லை. குளம் ரொம்ப அழகா இருக்கு. பள்ளிக்கொண்டா ஹைவே மேம்பாலம் கூட உண்டே...

    தகவல்கள் அறிந்தோம். ஸரஸ்வதி தேவி பல இடங்கள்ல கோச்சுக்கிட்டாங்க போல.!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பள்ளிக்கொண்டா ஹைவே மேம்பாலம் கூட உண்டே
      //////////////
      அதே.. அதே...பள்ளிக்கொண்டாதான் கீதாக்க்கா..

      ஸரஸ்வதி தேவி பல இடங்கள்ல கோச்சுக்கிட்டாங்க போல.!!!!
      /////////////////// இப்படிலாம் ஆராய்ச்சி பண்ணக்கூடாது கீதாக்கா

      Delete
  5. படங்களும் , திருக்கோவிலும் மிக அருமை ராஜி க்கா...


    அந்த வழியாக செல்லும் போது சென்றுப் பார்க்கிறோம் ...

    ReplyDelete