Sunday, December 09, 2018

வாழ்வே மாயமா?! - பாட்டு புத்தகம்

கொடுத்தும் பெற மறுத்து நிராகரிக்கப்பட்டது அன்பென்றால் எல்லாத்தையும் தூக்கி போட்டு உடைக்கனும்ன்னு   ஒரு கோவம் வரும். ஆற்றாமை, கழிவிரக்கம், பழி உணர்ச்சின்னு எல்லாம் கலந்த கலவையான ஒரு உணர்ச்சி வரும். அழுது, அரற்றி, முட்டி மோதி போங்கடா டேய்(டி), யாரையும் நம்பி நான் இல்லன்னு கெத்தா திமிரா வெளியில் சொல்லிக்கிட்டு பகல் முழுக்க திரிஞ்சாலும், படுக்கையில் படுக்கும்போதுதான் அந்த வெறுமை தாக்கும். எத்தனைதான் சமாதானங்களை வரிசையா மூளை எடுத்து சொன்னாலும் மனசு அதையெல்லாம் ஏத்துக்காம நம்மையும் மீறி அழுகை துளிர்க்கும். அந்த    வலி, வேதனைலாம் சொல்ல வார்த்தைகள் இல்ல. அந்த மாதிரி எல்லா  உணர்ச்சிகளும்  கலவையே இந்த பாட்டு.

ஒரு கோபக்கனலோடு, நிராசையான ஒருத்தியின் சோகத்தை பிரதிபலிக்கும் பாட்டு.  பாடலை கேளுங்க. புல்லாங்குழலிலேயே அந்த கோபம், மென்சோகம் எல்லாத்தையும் காட்டிட்டு, ஒரு சிறு  தபேலாவின் தாளத்தில் கோவத்தையும். மனதிடத்தையும் காட்டி இருப்பார் ராஜா. அவளின் மனம் பேதலிப்பதை அவ்வளவு அழகாக வெளிக்கொணர்ந்து இருப்பார் இளையராஜா. பலருக்கு இந்த பாட்டு ஃபேவரிட்தான். இதுவரை கேட்டிராவிட்டாலும் கேட்ட மாத்திரத்திலேயே பிடிக்கும் இந்த பாட்டு. சசிரேகாவுக்கு இதுதான் முதல் பாட்டுன்னு சொன்னா நம்ப முடியாது. போங்கடா டேய்ன்னும், தன் நிலை இப்படி ஆகிடுச்சேன்னு அழுகையுமா நடிக்க முட்டைக்கண்ணு  ஸ்ரீதேவியை தவிர வேறு யார் இருக்க முடியும்?! 



வாழ்வே மாயமா?
வெறும் கதையா? கடும்புயலா?
வெறும் கனவா நிஜமா?
நடந்தவை எல்லாம் வேஷங்களா?
நடப்பவை எல்லாம் மோசங்களா?
(வாழ்வே மாயமா?)

நிலவுக்கு பின்னால் நிழலிருக்கும்
நிழலுக்கும் ஒருநாள் ஒளிகிடைக்கும்
மலருக்குள் நாகம் மறைந்திருக்கும்
மனதுக்குள் மிருகம் ஒளிந்திருக்கும் 
திரைபோட்டு நீ மறைத்தாலென்ன 
தெரியாமல் போகுமா?
(வாழ்வே மாயமா?)

சிரிப்பது போல முகமிருக்கும்....
சிரிப்புக்குப் பின்னால் நெருப்பிருக்கும்!!
அணைப்பது போல கரமிருக்கும்...
கொடுவாள் அங்கே மறைந்திருக்கும்!!
திரைபோட்டு நீ மறைத்தாலென்ன 
தெரியாமல் போகுமா?
(வாழ்வே மாயமா?)


திரைப்படம் : காயத்ரி
பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
பாடலைப்பாடியவர்: B.S. சசிரேகா

நன்றியுடன்,
ராஜி

3 comments: