Saturday, May 09, 2020

அடுத்த வீட்டுக்கு டிவி பார்க்க போயி அவமானப்பட்டதுண்டா?! - கிராமத்து வாழ்க்கை



அவசர யுகமிது. எல்லா வசதியும் இருந்தாலும் எதையும் நின்னு நிதானமா அனுபவிச்சு வாழலை.  எதையோ இழந்த உணர்வு எல்லோரிடமும் இருக்கு. ஆனால், எந்த வசதியும் இல்லாத முப்பது வருடங்களுக்குமுன் எத்தனை மகிழ்ச்சியாய் இருந்தோம்.. அந்த மகிழ்ச்சியின் சிறிய நினைவுமீட்டலே இந்த தொடர். சிலருக்கு ஆறின புண்ணை கிளறிவிட்டதாகவும் இருக்கலாம். அவ்வாறு இருந்தால் மன்னிச்சு.

கிண்டர் ஜாய்ன்னு ஒரு தின்பண்டம் டிவியில் விளம்பரப்படுத்தப்பட்டபோது பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கலாமேன்னு  வாங்கி வந்தால் கோலிகுண்டு சைசில் மொறுமொறுன்னு ரெண்டு பால்ஸ் இருக்கு. அதுக்கு தொட்டு சாப்பிட ஜாம் மாதிரி மெல்டட் சாக்லேட் ஒரு டீஸ்பூன் அளவு இருக்கு. இதுக்கு விலை 35ரூபா.  ஆனா, முழுசா ஒரு ரூபாக்கு கைநிறைய பண்டம் வாங்கி சாப்பிடுவோம். கல்கோனா, கமர்கட், கலர் அப்பளம், ஆரஞ்சு மிட்டாய், குருவி ரொட்டின்னு எத்தனை ரகம்?! மேல இருக்கும் படத்தில் இருப்பது பென்சில் சாக்லேட்/ வித்தியாசமான சுவையில் அட்டகாசமா இருக்கு.  ஒன்னு அஞ்சு காசுன்னு வாங்கினதா நினைவு...
சொப்பு சாமான் விளையாட்டு. மண் இட்லி, கருவேலம் இலை குழம்பு, கருவேல மரப்பூ பொரியல், காய்ந்த அரச மர இலை அப்பளம் என சமையல்  செய்து சாப்பிட்டதாய் விளையாடியபோது பசியே எடுத்ததில்லை. நாமதான் ரௌடி பிள்ளையாச்சே! சண்டை போட்டு சில்லு மூக்குலாம் பேர்த்திருக்கேன். அதிலும் எதிர்வீட்டு கார்த்திக்கு நான்ன்னா ரொம்ப செல்லம். ரொம்ப விட்டு கொடுத்து போவான்.  விடியோவில் இருப்பதுபோலதான் அடிச்சுப்போம். 


இந்த தெருவுக்கும் அந்த தெருவுக்குமா சேர்த்து ஒரே வீடு. நடுவால வாசல். ஓட்டுவீடு. அந்த வீட்டில் சித்தப்பா, பெரியப்பா மக்கள்ன்னு கூட்டு குடும்பமா 20பேர் ஒத்துமையா வாழ்ந்தாங்க. கூரை வீடே ஆனாலும் வாசலில் திண்ணை வச்சு வீடு கட்டுவாங்க. வழிபோக்கர்கள் இளைப்பாறவும், பெருசுகள் ஊர்கதை பேசவும், பிள்ளைகள் விளையாடவும் செய்யும். சிலசமயம் ஆடு, பூனை, நாய்ன்னு திண்ணைல படுக்கும். ஆனா, வீட்டு பெண்கள் திண்ணையில் அமர மாட்டாங்க. ஏன்னா, தெருவில் ஆண்கள் போவதும் வருவதுமா இருக்குறதால் மரியாதைக்குறைவா நினைச்சுப்பாங்கன்னுதான். .  ஆனா, இன்னிக்கு மாமனார் வீட்டில் இருக்கும்போதே சோபாவில் உக்காந்து டிவி பார்க்குதுங்க. அப்பாவோட ஊருக்கு போனால் இன்னிக்கும் அம்மா திண்ணையில் உக்கார மாட்டாங்க. நான் உக்காந்தாலும் திட்டுவாங்க. அம்மா! நீ இந்த ஊருக்கு மருமக. ஆனா, நான் பேத்தி. நான் உட்காரலாம்ன்னு சொல்வேன்.

எந்தவித விளையாட்டு பொருளும் இல்லன்னாலும் நாங்க விளையாடுவோம். பிள்ளைகள்லாம் கூடி தரையில் கைகளை விரித்து வைக்கனும். கொக்கு பறபறன்னு சொன்னதும் கைகளை அசைக்கனும். காக்கா பறபறன்னு சொன்னா கைகளை அசைக்கனும். அப்படி அசைக்கலைன்னா அவுட். அதேப்போல நோட்டு பறபறன்னு சொன்னா  கைகளை அசைக்கக்கூடாது அப்படி அசைச்சா அவுட். அதாவது தானாய் பறக்குறதை சொல்லும்போது கைகளை அசைக்கனும். பறக்க முடியாததை சொல்லும்போது கைகளை அசைக்கக்கூடாது. இதுலயும் போங்காட்டம் ஆடுவோர் நிறைய உண்டு. 
இன்னிக்கு வீட்டுக்கு ரெண்டு டிவி, லாப்டாப், கம்ப்யூட்டர் அதில்லாம மொபைலில் படம் பார்க்கும் காலமிது. ஆனா,  ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் போடும்  நாலு பாட்டை பார்க்க, ஞாயிற்றுக்கிழமையில் படத்தை பார்க்கவும்  அசிங்கப்பட்டோர் நம்மில் எத்தனையோ பேர் உண்டு!! அந்த காலத்துல கவர்ன்மெண்ட் வேலை பார்க்குறவங்கன்னா ராஜ மரியாதை. மருத்துவதுறைன்றதால் கூடுதல் மரியாதை. அதனால், எந்த வீட்டிலும் உரிமையாய் டிவி பார்த்திருக்கேன்.  ஆனா, மத்தவங்கலாம்  பூட்டி வச்சிருக்கும் கேட்டுக்கு வெளிய இருந்துதான் பார்க்கனும். சிலர் வீட்டுக்குள் டிவி பார்க்க சேர்த்துப்பாங்க. அங்கயும் சத்தம் போடக்கூடாது, சுவத்துல சாய்ஞ்சு உக்காரக்கூடாது.  ஒளியும் ஒலியும்ன்னா 25 காசு, படத்துக்கு 50காசு, மகாபாரதம்/ராமாயணம் பார்க்க 10காசுன்னு கொடுத்து பார்ப்பாங்க. சிலர் அவங்க வீட்டு வேலைலாம் செய்வாங்க. அவரைக்காய், டிசம்பர்பூ, மருதாணி, முருங்கைக்காய்ன்னு கொடுத்து டிவி இருக்கும் வீட்டுக்காரங்களை தாஜா பண்ணுவாங்க.  ஒருமுறை, நான் போகும்போது ரொம்ப நேரம் டிவி ஓடிட்டிருந்துச்சு ஆஃப் பண்ண போறேன். நீ போம்மான்னு  சொல்லி டிவியை ஆஃப் பண்ணிட்டாங்க.  நான் வாசல் தாண்டலை உடனே டிவி ஓடும் சத்தம். வீட்டில் வந்து அழுதுக்கிட்டே சொன்னேன். அம்மா கம்மலை அடகு வச்சு மறுநாளே அப்பா கலர்டிவியே வாங்கி வந்துட்டார்.  இன்னிக்கு எல்.சி.டி டிவியை பார்க்கும்போதெல்லாம் அன்றைக்கு பட்ட அவமானம் நினைவுக்கு வரும்.

கொசுவர்த்தி மீண்டும் ஏற்றப்படும்...

நன்றியுடன்,
ராஜி

15 comments:

  1. அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்...
    அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்...
    அது ஒரு அழகிய நிலாக்காலம் கனவினில் தினம் தினம் உலா போகும்...
    நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்...

    ReplyDelete
  2. கொசுவர்த்தி நன்று. டிவி பார்க்கவெல்லாம் இப்படிச் சென்றதே இல்லை. நண்பர் வீட்டில் ஒரு முறை Group Study படிக்கச் சென்றபோது, சில நிமிடங்கள் கிரிக்கெட் மேட்ச் பார்த்ததுண்டு. அவ்வளவு தான்.

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டில் டிவி வந்தபின் எல்லாரும் உரிமையா வந்து பார்ப்பாங்க. அதிலும் கிரிக்கெட்ன்னா ஊரின் மொத்த ஆண்களும் எங்க வீட்டில்தான். அன்னிக்கு முழுக்க முன்வாசல் வழியா நானும் என் அம்மாவும் வரமாட்டோம். சிகரெட் புகையா இருக்கும். கதவை திறந்தால் என்னமோ தியேட்டர்ல இருக்க மாதிரி கதவு அடைச்சுக்கிட்டு பார்ப்பாங்க

      Delete
  3. வெங்கட் சொல்வதுபோல கிரிக்கெட் மேட்ச் மட்டும் அவ்வப்போது தெரியாதவர் வீட்டில் கூடப் பார்த்தது உண்டு. எங்கும் அவமானத்தைச் சந்தித்ததில்லை. எங்கள் வீட்டில் டிவி வாங்கிய உடன் பலபேர் பார்த்திருக்கிறார்கள்.

    அப்பா மருத்துவத்துறையா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சகோ. தொழுநோய் ஆய்வாளரா சேர்ந்து பத்து வருசத்துக்கு மேல வேலை பார்த்தார்.
      தமிழகத்தில் தொழுநோயாளிகள் குறைஞ்சதால் பொது மருத்துவத்துக்கு மாறி ஹெல்த் இன்ஸ்பெக்டரா இருந்து பிறகு மருத்துவம் சாரா மேற்பார்வையாளரா மாறி ரிட்டையர்டு ஆவார்.

      அப்பா தொழுநோயாளிகளோடு பழகுனதால் வெளியில் சொல்ல கூச்சப்படுவேன். எங்கிட்டாவது, போகும்போது முத்தின நோயாளிகள் அப்பாவோடு பேசும்போது அருவருப்பு அடைவேன். பிறகு தெளிஞ்சு அப்பா உத்தியோகத்தின்மேல் ஒரு மரியாதை வந்தது.

      Delete
  4. //இன்னிக்கு மாமனார் வீட்டில் இருக்கும்போதே சோபாவில் உக்காந்து டிவி பார்க்குதுங்க//

    இதை இன்றைய பெண்கள் ஏற்றுக்கொள்வார்களா ?

    ReplyDelete
    Replies
    1. அதனால்தான் இன்றைய மருமக்கள், தங்கள் மாமனார்களை வீட்டில் சேர்ப்பதில்லையோ?

      Delete
    2. அப்படியும் இருக்கலாம்! பத்தாம்பசலித்தனம், மரியாதை மனசில் இருக்கனும்ன்னு ஆயிரம் காரணம் சொன்னாலும் பெரியவங்கமுன் சேரில் உட்காருவதை தவிர்க்கலாம். கீழ உக்காந்து எழுந்துக்குறதால் இடுப்பு, தொடை எலும்பு வலுப்படும்.

      Delete
  5. அன்புள்ள சகோதரி , காலம் எத்தகைய மாற்றங்களை அனுபவ பாடங்களை நமக்கு கற்று தருகின்றது .
    1982 Asian Games - ஸ்போர்ட்ஸ் நடக்கும் போதுதான் நமது நாட்டில் வெளிநாட்டு டிவி கலர் டிவி நமது நாட்டிற்கு குறைந்த IMPORT வரி கட்டலாம் என்ற சலுகை கொடுத்தார்கள் . அப்போது எங்கள் சொந்தக்காரர் (எங்கள் தகப்பனாருக்கு சொந்த அக்கா மகள் கணவர் )ஒருவர் வெளிநாட்டு BANK ஒன்றில் சிங்கப்பூரில் CHAIRMAN பதவியில் இருந்தார் . அவரிடம் நாங்கள் கேட்க சொல்லி 1982ல் ஒரு நேஷனல் கலர் டிவி அனுப்ப சொல்லி அவரும் அனுப்பி வைத்தார் . அங்கு டிவி விலை ரூபாய் 5000/-தான் . இங்கு டூட்டி 9000/-ரூபாய் வந்து விட்டது . எங்கள் அப்பாவுக்கு அப்போது பேக்டரி தொழில் எல்லாம் ரொம்ப நஷ்டம் ,பொருளாதாரம் ரொம்ப கஷ்டம் இருந்தாலும் நாங்கள் ஆசைப்பட்டதால் வாங்கி தந்தார் . டூட்டி கட்டவே கஷ்டம் . அவர்கள் அந்த 5000/- ரூபாயை கேட்டு பல தடவை எங்கள் அத்தையே நேரிலும் லெட்டர் மூலமும் தம்பி என் மக அந்த பணம் கேட்டுகிட்டே இருக்கா , அவள் கூட கேட்கலை எங்க மாப்பிள்ளை கேட்கின்றார் , என்று கேட்கும்போதெல்லாம் எங்க அப்பா கொடுக்க முடியாமல் பதில் கூட சொல்ல கூசி அவமானப்பட்டிருக்கார் . அப்புறம் அந்த பணம் 5000/- எப்படியோ கொடுத்துட்டோம் . எங்க அப்பா 1991 ல் இறந்து பிறகு பேக்டரி கடனுக்கு LIC பாலிசி பணம் ஸ்டேட் பாங்கில் தனிப்பட்ட GUARANTEE ஆக அடமானமாக பொதுவான பேக்டரி லிமிடெட் CONCERN க்கு கொடுத்திருந்தார் .இறந்தவுடன் பேக்டரி கட்டிடம் விற்றும் அந்த LIC பாலிசி பணம் மூலம் ஸ்டேட் பேங்க் கடன் தீர்ந்துவிட்டது ,நான் நிறைய சம்பாதித்து 2000க்கு மேல் ரூமுக்கு ரூம் கலர் டிவி வைத்திருந்தேன் .நாங்க நல்ல வந்ததை பாக்க அவர் இல்லே ,1991ல் இறந்துட்டார் . எங்கள் அப்பா பட்ட அவமானம் சொல்லி முடியாது . அன்றைக்கு அவருக்கு மொத்த கடனே ஐந்து லக்ஷம் இருந்திருக்கும் , ஏன் அப்பச்சி ,நம்ம இரண்டு வீட்டுல ஒரு வீட்டை அடமானம் வச்சு ஓர் ஐந்து லக்ஷம் கடன் வாங்கினால் என்ன ? என்று சொன்னபோது அவர் சொன்ன வார்த்தைகள் "என் காலத்துல நான் ஒண்ணும் செய்ய மாட்டேன் , நீங்க ஒங்க காலத்துல என்ன வேணும்னாலும் செய்ஞ்சுக்கங்க " என்று கோபமாக சொன்னார் . நாங்க நல்ல வந்ததை பாக்க அவர் இல்லே ,1991ல் இறந்துட்டார் .இன்றைக்கு எத்தனையோகோடிகள் கடன் வாங்கி கட்டாமல் உலகம் சுற்றும் வாலிபர்கள் பலர் உள்ளனர் ! "நாலு காசு கையிலே இருந்தா உலகம் உன்னை மதிக்கும் !நல்லா வாழ்ந்து கெட்டுப்போனா நாயும் பார்த்து சிரிக்கும்" என்ற ஆசை அலைகள் படம் பாடல் வரிகள் தான் வாழ்க்கை! அவமானங்கள் தீராத வலிகள் - என்றைக்குமே ஆறாத ரணங்கள்! பகிர்ந்து கொள்ள தோன்றியது சகோதரி ! பதிவு செய்துள்ளேன்

    ReplyDelete
    Replies
    1. கடன் வாங்குவது என் அப்பாக்கும் பிடிக்காது. கடன் இல்லாம இருத்தல், சேமிப்புக்கு சமம்ன்னு சொல்வாங்க. படிப்பு, வீடு கட்டுதல், கல்யாணம் மாதிரி அவசியத்துக்கு தன் பொருளாதாரத்துக்கு ஏற்றவாறு வாங்கனும்ன்னு சொல்வாங்க.

      கஷ்டப்பட்ட காலத்தில் உடன் இருந்த அப்பா அம்மாவை வசதியான காலத்தில் வைத்து பார்த்துக்கும் பாக்கியம் நிறைய பேருக்கு கிட்டுவதில்லைண்ணா!.

      Delete
  6. நினைவலைகள் தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரத்துல இந்த தொடர் முடிவுக்கு வந்திடும்ங்க சகோ.

      Delete
  7. உண்மை சகோதரி !எங்களை நன்றாக 1980 வரை வளர்த்தார் ,படிக்க வைத்தார் !கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்த்தார் ! 1978ல் பேக்டரி ஆரம்பித்தார் கஷ்டமும் வந்தது சனி திசை வந்தது ,சனி திசை முடிந்தால் சரியாகி விடும் என்று சொல்லிக்கொண்டே சாமியை கும்பிடுவார் !ஆனால் சனி திசை முடிவை அவர் பார்க்கவில்லை !1991ல் காலமாகி தெய்வமானார் !நல்லவர்களை ஆண்டவன் நீண்ட நாட்கள் வாழ விடுவதில்லை -செத்தவுடன் LIC பாலிசி பணம் 15 நாட்களுக்குள் STATEBANK கணக்கில் கிரெடிட் ஆகி இறந்து கடனை தீர்த்தார் !அப்பா அம்மா இருவருமே தெய்வங்கள் -எல்லோருக்குமே !எனவே தான் நான் எனது அம்மாவின் 70வது பிறந்தநாளை மிக விமரிசையாக 2010 ல் மதுரை ஆதீனம் வளாகத்தில் சென்னை கமலா திரை அரங்கின் உரிமையாளர் VN . சிதம்பரம் தலைமையில் மதுரை ஆதீனம் முன்னிலையில் 23/4/2010ல் கொண்டாடினேன் !VN . சிதம்பரம் செட்டியார் சொன்னார் "மீனாட்சி ஆச்சி சம்மதித்தால் இப்போதே நான் டால்பின் ராமநாதனை எனது பிள்ளையாக சுவீகாரம் செய்து கொள்கின்றேன்,உண்மையாகவே " என்று ! அவரும் என்னிடம் மிக பிரியமாக பழகுவார் . அன்று மதுரை லோக்கல் டிவி சேனலில் எல்லாம் இந்த விளம்பர வீடியோ ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒளிபரப்ப செய்தேன் ! முடிந்தால் நேரம் கிடைத்தால் பாருங்கள்
    https://www.youtube.com/watch?v=c-sHRDPEM3s&t=60s
    Devakottai Dolphin Ramanathan Mother Songs என்று ஒளிபரப்பானது எனது அப்பாவுக்கு செய்ய முடியாததை எனது ஆத்தாவுக்கு செய்து அழகு பார்த்தேன் அன்பு சகோதரி !எனது தாயாரும் 2016ல் மறைந்து விட்டார் !இப்போது அல்மோஸ்ட் அனாதை ALLMOST அனாதை மாதிரி தான் - எல்லோரும் இருக்கின்றார்கள் ,ஆனால் யாரும் இல்லை !தெய்வமே துணையென ஆன்மிக பணிகள் !நன்றி ,சகோதரி !

    ReplyDelete
  8. எங்கள் அப்பா சிறுவயதில் தாய் தந்தையை இழந்து சகோதரருடன் சேர்ந்து வியாபாரத் தொழிலில் முழு மூச்சாக ஈடுபட்டு சிறப்பாக வாழ்ந்ததில் எமக்கு கஷ்டம் என்பது என்ன என்பதே தெரியாமல் வளர்த்தார் ஆனால் கட்டுப்பாட்டுடன் நல்ல பழக்க வழக்கங்களுடன் வளர்த்தார் அவரிடம் எங்களுக்கு அன்பும் ஒரளவு பயமும் இருந்தது. எண்பதுகளில் கலர் ரிவி எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டது எங்களை நல்ல நிலையில் உருவாக்கிய அவரை இந் நேரம் வணங்குகிறேன்.

    ReplyDelete