Saturday, May 16, 2020

தொற்றுநோயாளிகளை அரவணைத்துக்கொள்ளும் தாம்பரம் சானிடோரியம்

நம் தனிப்பட்ட அனுபவங்களை தவிர்த்து ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு.  நாம் சாதாரணமாய் கடந்து செல்லும் பல ஊர்களுக்கு பின்னாடி மிகப்பெரிய சரித்தரம் இருக்கு. தாம்பரம் சானடோரியம் என்றால் அவரவர் அனுபவம் தவிர்த்து  MEPZ , புறநகர் பேருந்து நிலையமும், ஒரு ரயில்வே ஸ்டேஷனும்  நினைவுக்கு வரும்.  ஆனா, இன்று தாம்பரம் சானடோரியம் என அழைக்கப்படும் அந்த இடத்தின் அடையாளமாய்  முன் இருந்தது எது என தெரிஞ்சுக்கலாமா?!


தாம்பரம் குரோம்பேட்டைக்கு இடையிலான  தாம்பரம் சானடோரியத்தின் அடையாளமாய் அறியப்பட்டது எதுவென  பார்த்தால்  காசநோய்  எனப்படும் டியூபர்குளோசிஸ்(டிபி)க்கான  ஒரு ஹாஸ்பிட்டல்தான் இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் உருவானது இந்த ஹாஸ்பிட்டல்.  அந்த ஹாஸ்பிட்டல் உருவானது எப்படின்னு பார்க்கலாமா?!


இன்னிக்கு கொரோனா மாதிரி 1900 காலக்கட்டத்தில்  காசநோய் எனப்படும் டிபி உலகில் கெட்ட ஆட்டம் போட்டது.  மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ் (Mycobacterium tuberculosis) நுண்கிருமியால் வரக்கூடிய இந்த நோய், பரம்பரை நோய் கிடையாது. காசநோய் நம்மூரில் அழகுத்தமிழில் சொல்லப்படும் டி.பி (TB) ன்னு  சுருக்கமா செல்லமா சொல்றோம். . TBன்னா `Tubercle bacillus’ இல்லன்னா`Tuberculosis’ விரிவா சொல்றாங்க.  இது தலைமுடி, நகம், பல் தவிர எல்லாவற்றையும்  பாரபட்சமில்லாம தாக்குச்சு. காசநோய் வந்தபோது ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுப்பிடிக்கலை.  அதனால், டிபி வந்தவங்களுக்கு வைத்தியம் பார்க்குறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. முத்திப்போன டிபி பேஷண்டுகள் ஹாஸ்பிட்டலில் தங்கித்தான் வைத்தியம் பார்க்கனும்ன்னு நிலை. அப்படி வைத்தியம் பார்க்க உலகில் எங்கும் டிபிக்கான தனி ஹாஸ்பிட்டல் இல்ல. ஏன்னா, தொற்றுநோயான காசய் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மத்த நோயாளிகளோடு வச்சு வைத்தியம் பார்க்க பயந்தாங்க.  அதனால் சானடோரியம் ஒன்றை தொடங்கினார். சானடோரியம்ன்னா ஹாஸ்பிட்டல் அல்லாத ஆனா வைத்தியம் பார்க்கும் ஒரு இடம்.

பிரிட்டீஷ் அரசாங்கத்தின் நெஞ்சக மருத்துவரான ஜார்ஜ் பேடிண்டன் என்பவர் 
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம்ல 1836ல் சானடோரியம் ஒன்றை நிறுவி நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்தார்.  அப்படியே மெல்லமெல்ல பரவி ஐரோப்பாவில் மத்த நாடுகளிலும் டிபிக்கான சானட்டோரியம் உருவாகியது.    ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த சானடோரியம் தாம்பரத்திற்கும் வந்தது. ஆனா, இங்க சானடோரியம் உருவாக காரணம் ஜார்ஜ் பேடிண்டன் இல்ல. தமிழகத்தில் டிபிக்கான சானடோரியம் அமைய காரணமானவர் டாக்டர் டேவிட் ஜேக்கப் ஆரோன் சவ்ரி முத்து என்பவர்தான்.

சவ்ரி முத்து 1864ம் ஆண்டு பிறந்தார். இங்கிலாந்தில் மருத்துவ மேற்படிப்பான எம்.டி, எம்.ஆர்.சி.எஸ் படித்து பட்டம் பெற்றவர். இவரின் நெருங்கிய நண்பர்களில் கணிதமேதை ராமானுஜரும், மாகாத்மா காந்தியும் முக்கியமானவர்கள். பிரிட்டனில்  இவர் படிக்கும்போது காந்திஜி எதிர்கொண்ட நிறவெறியை இவரும் எதிர்கொண்டார். அப்படி இருந்தபோதும் 1891ல மார்க்ரெட் போக்ஸ்ன்ற அந்த ஊரு பொண்ணை கட்டிக்கிட்டாரு. 

நெஞ்சு எனப்படும் மார்பகத்தை தாக்கும் நோய்களுக்கெதிரான மருத்துவத்தில் வல்லுனரா இருந்தார் சவ்ரி முத்து. பேரு ஒரு மார்க்கமா இருந்தாலும் சவ்ரி முத்து பச்சை தமிழராவார். 1900ல் இங்கில்வுட் சானடோரியத்தின் பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டார். பிறகு 1920ல் சோமர்செட்ன்ற இடத்தில் உள்ள மெண்டிப் மலைப்பகுதியில் இருந்த சானடோரியத்தை விரிவாக்கி டிபிக்கான வைத்தியத்தை மேற்கொண்டார். பிறகு மகாத்மா காந்தியுடனான நட்பின் விளைவாக சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள இந்தியா வந்தார் சவ்ரி முத்து. 


இந்தியா வந்த சவ்ரி முத்து இந்தியாவில் காசநோயின் தாக்கத்தால் பலர் உயிர் இழப்பதை அறிந்து,  இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சானடோரியம் ஒன்றை நிறுவ ஆசைப்பட்டார். அப்போது பச்சை மலை என அழைக்கப்பட்ட தாம்பரம் பகுதியில் 125 ஏக்கர் நிலத்தை சொந்தப்பணத்தில் வாங்கி, 1928ல்சானடோரியம் ஒன்றை  ஆரம்பித்தார்.  12 படுக்கை வசதிகொண்ட ரிசார்ட் மாதிரியான சானடோரியத்தை உருவாக்கி டிபி நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்தார். 

1930ல் சவ்ரிமுத்துவின் மனைவி மார்கெரெட் போக்ஸ் மரணமடைந்தார். மனைவியின் இறுதி சடங்கில் கலந்துக்கொள்ளவும், மனைவி வாழ்ந்த இடத்திலேயே தன்னுடைய இறுதிக்காலமும் இருக்கவேண்டுமென விரும்பிய சவ்ரி முத்து பிரிட்டன் செல்ல விரும்பினார். அதேநேரத்தில்,  தான் ஆசை ஆசையாய் உருவாக்கிய தாம்பரம் சானடோரியத்தை அப்படியே விட்டுச்செல்லவும் மனசில்லை. அந்த நேரம் இந்தியா பிரிட்டீசார் வசம் இருந்தது.  பிரிட்டீசார் ஆளுகைக்குட்பட்ட மெட்ராஸ் மாகாண அரசிடம் தாம்பரம் சானடோரியத்தை ஏற்று நடத்த கோரிக்கை விடுத்தார். பிரிட்டீஷ் நிர்வாகமும் சானிடோரியத்தை ஏற்று நடத்தியது.  பிரிட்டீஷ் அரசாங்கம் சானட்டோரியத்தில் லேப், எக்ஸ்ரே, ஆப்ரேஷன் தியேட்டர்ன்னு உருவாக்கியது.  12 ஆக இருந்த படுக்கை வசதியை அதிகரித்தது. இரண்டாம் உலகப்போர் நடந்த காலக்கட்டமான 1935-40ல் மிகப்பெரிய வளர்ச்சியை இந்த சானட்டோரியம் பெற்றது. 


இந்தியா சுதந்திரம் பெற்றது.   1950ல் சானடோரியம் முழுக்க முழுக்க தமிழக அரசின்கீழ் வந்தது. 1975ல் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய மருத்துவமனையாய் சானடோரியம் உருமாறியது.   அரசு நெஞ்சக நோய் மருத்துவமனைன்னு சானடோரியத்திற்கு 1985ல் பெயர் மாற்றப்பட்டது.  கூடவே டிபியிலிருந்து மீண்டுவந்தவர்களுக்கென மறுவாழ்வு மையத்தை உருவாக்கி அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கி தந்தனர்.  காசநோயோடு மக்கள் வாழ பழகிக்கொண்டனர்(நாம கொரோனாவுடன் வாழ பழக்கிக்க போற மாதிரி...) 


1993ல்  காசநோய் போலவே எயிட்ஸ் உருவாகி மக்களை பயமுறுத்தியது. தொற்றுநோய்ன்னாலே காததூரம் ஓடுவோம். அதிலும் எயிட்ஸ் உடலுறவு மூலமா பரவும்ன்னு சொன்னதால எயிட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய மருத்துவர்களே தயங்கினவேளையில் இந்த சானடோரியம்தான் அவர்களுக்கு அபயக்கரம் நீட்டியது, 2 எயிட்ஸ் நோயாளிகளை தங்கவைத்து அவர்களுக்கான சிகிச்சையை தொடங்கியது.  அன்றிலிருந்து காசநோய்க்கு மட்டுமல்லாமல் மிகப்பெரிய எயிட்ஸ் நோய்க்கான சிகிச்சை மையமாகவும் மாறியது.  எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆண், பெண், குழந்தைகளுக்கென தனித்தனி சிகிச்சை பிரிவுகள் இங்க இருக்கு. தினமும் 1000க்கும் குறையாத புறநோயாளிகள் வர்றாங்க. அவர்களை பரிசோதித்து தேவையான மருந்துகளை கொடுத்தும், தேவை இருப்பின் உள்நோயாளிகளாக தங்கவைத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது...

காசநோய், எயிட்சை தொடர்ந்து வந்த பறவைக்காய்ச்சல், சார்ஸ் மாதிரியான தொற்று நோயாளிகளை அரவணைத்துக்கொண்ட  இந்த மருத்துவமனை வழக்கம்போல கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களையும் அரவணைத்து சிகிச்சை அளிக்கின்றது...


தாம்பரம் குரோம்பேட்டைக்கு இடையில்  ஒரு மனிதரின் தொலை நோக்கு பார்வை. , அவரது தியாகம், கனவு,உழைப்பின் பலனை இன்று எத்தனையோ நோயாளிகள்  அறுவடை செய்கின்றனர். 
நன்றியுடன்,
ராஜி

7 comments:

  1. சவரிமுத்து அவர்கள் தொடக்கி வைத்த பணி காலத்துக்கு ஏற்ப தொடர்வது கேட்கவே மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. நல்ல தகவல்கள். சவ்ரிமுத்து அவர்களின் தொண்டு சிறப்பானது.

    தாம்பரம் சானடோரியம் பகுதியில் ஒரு உறவினர் இருந்த போது அங்கே சென்றதுண்டு.

    ReplyDelete
  3. பிரமிப்பான தகவலகள் சகோ.
    சவுரிமுத்து தனது வேலையை முழுமையாக செய்யாமல் காதலுக்காக தியாகம் செய்து விட்டார்.

    என்ன செய்வது அது அவரோட சவுரியம்.

    ReplyDelete
  4. வியப்பாக இருக்கிறது சகோதரி

    ReplyDelete
  5. நல்ல தகவல்கள். என் நண்பர்கள் இருவர் அங்கு பணி புரிந்தது உண்டு.

    ReplyDelete
  6. சிறப்பான தகவல்கள்.

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete