Monday, September 23, 2013

அம்மா நலம் - ஐஞ்சுவை அவியல்


கடந்த ரெண்டு வருசமா அம்மாக்கு கால் வலி வர ஆரம்பிச்சுட்டுது. முதலில் லேசான வலியும், நாள்ப்பட நாள்ப்பட வீக்கம், கால் குடைச்சல்ன்னு அவதி பட்டாங்க. முழங்காலில் சில இடத்தில் ரத்த குழாய் சுருண்டு பச்சை நிறத்துல தெரியும். அதையெல்லாம் சீரியசா எடுத்துக்காம வலிக்கு மட்டும் மருந்து எடுத்துட்டு வந்தாங்க.

வயசாகிட்டாலே இப்படிலாம் வரும்ன்னு தனக்குத் தானே சமாதானம் செஞ்சுக்கிட்டு, வென்னீர் ஒத்தடம் கொடுத்துக்கிட்டு சமாளிச்சுக்கிட்டு வந்தாங்க, தாங்க முடியாத அளவு வலியும், வீக்கமும் வந்ததால, ஹாஸ்பிட்டலுக்கு போனாங்க. 

அங்க, பரிட்சைக்கு பயந்துக்கிட்டு ஸ்கூல் பக்கமே போகாத எங்கம்மாவை மந்த்லி டெஸ்ட்,  வீக்லி டெஸ்ட், டெய்லி டெஸ்ட் போல ப்ளட், ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், பிபின்னு எல்லா டெஸ்ட்டும் பண்ணி பார்த்ததுல ”varicose vein”ன்னு எதோ நோய் பேரு சொல்லி, ஆப்ரேஷன் பண்ணனும். இல்லாட்டி கால் கொஞ்சம் கொஞ்சமா கருப்பாகி ஹார்ட் அட்டாக் வரவும் வாய்ப்பு இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க.

அதிக நேரம் நின்னுட்டே இருக்குறவங்களுக்கு வருமாம். ஆனா, அம்மாக்கு எப்படின்னு தெரியலை. எது எப்படியோ வலி போனால் போகுதுன்னு ஆப்ரேஷன் செய்ய சரின்னு சொல்லி ஹாஸ்பிட்டலில் போய் சேர்ந்துட்டாங்க. 

பசங்களை, வீட்டை விட்டு போனதாலயோ இல்ல ஆப்ரேஷனை நினைச்சு உள்ளுக்குள்ள பயந்ததாலயோ என்னமோ குறைச்சலா இருந்த பீபி, சும்மா கிர்ருன்னு ஏறி 300ஐ தொட்டது. பெரும்போராட்டத்துக்கு பின் அம்மாவோட பிபி நார்மல் நிலைக்கு வந்துட்டுது.

போன திங்கள் கிழமை(16.09.2013) ஒரு வழியா அம்மாக்கு ஆப்ரேஷன் செஞ்சாச்சு. நரம்பு சுத்தி இருக்கும் இடத்தை கீறி, பயப்பட போறேன்னு அப்பா என்கிட்ட சொல்லி இருந்தார். ஆனா, அம்மாவை பார்த்த பின் தான்  அம்மாவோடு வலது கால்ல 6 இடத்தில் கீறி, கிட்டத்தட்ட 30 தையல்களோடு செஞ்சிருக்காங்கன்னு. 

இது வரை யார் தயவையும் எதிர்பார்க்காம வீட்டு வேலைகள் எல்லாத்தையும் அவங்களே செய்வாங்க. அதேப்போல, சொந்தக்காரங்க வீட்டுக்கு போனால் கூட கூட மாட ஒத்தாசையா இருப்பாங்க.

எனக்கு தெரிஞ்சு முதன் முறையா எல்லாத்துக்கும் அடுத்தவங்க கையை எதிர் பார்த்து இருந்தது இதான் முதல் முறை. இப்படியே ஒரு நாள் முழுக்க படுத்த படுக்கையா இருந்தாங்க. மகளே ஆனாலும், இப்படி எல்லாத்துக்கும் என்னை எதிர்பார்ப்பது சங்கடப்படுத்தியதால, டாக்டர்கிட்ட கேட்டு, தைரியத்தை வரவச்சுக்கிட்டு லேசா நடக்க ஆரம்பிச்சாங்க.

பீபியும் நார்மல் லெவலுக்கு வந்திட்டு, இப்போ வீட்டுக்கும் வந்துட்டாங்க. இனி தையல் பிரிக்க ஹாஸ்பிட்டல் போனால் போதும். நான் கலங்கி தவித்த நேரத்துல், மனோ அண்ணா, ஆஃபீசர் அண்ணா, விக்கி அண்ணா ஃபோன் செஞ்சு, ராஜி, கலங்காத! என்ன உதவி எப்ப வேணும்னாலும் சொல்லும்மா! நம்மாளுங்க இருக்காங்கன்னு ஆறுதல் சொன்னாங்க. தினமும், தம்பி  ரூபக்ராம் போன் பண்ணி அம்மா நல்லா இருக்காங்களான்னு விசாரிச்சுட்டே இருப்பார். அதேப்போலதான், அம்மாக்கு ஒண்ணும் ஆகாது, பயப்படாதீங்கன்னு ரிஷபன் சாரும் ஆறுதல் சொன்னார்.

அவங்களுக்கும்,அதுமட்டுமில்லாம, அம்மாவுக்காக கடவுள்கிட்ட வேண்டிக்கிட்ட எல்லோருக்கும் ஆயிரம் கோடி நன்றிகள். 


புரட்டாசி மாசம் முதல் சனிக்கிழமை திருப்பதி ஏழுமலையானுக்கு விரதம் கொண்டாடுறது எங்க ஊரு வழக்கம். ஒரு சொம்புல, நாமம் இட்டு, துளசி மாலை கட்டி, குழந்தைகளுக்கும் துளசி மாலை போட்டு அவங்களை வீடு வீடா போய் அரிசி வாங்கி வரசொல்லுவாங்க. அப்படி வாங்கி வந்த அரிசில பொங்கல் வைச்சு சாமிக்கு படைப்பாங்க. நான், சின்ன புள்ளையா இருந்த போது அந்த சொம்பு நிறையாம வீட்டுக்கு வர மாட்டேன். ஊரு ஃபுல்லா சுத்தி வருவேன். பசங்களுக்குள் போட்டி வேற நடக்கும் யார் சொம்பு சீக்கிரம் நிறையுதுன்னு!! நாராயணா! கோபாலா! நாமம் விட்டேன் கோபாலா!ன்னு வீட்டு வாசல்ல நின்னு கத்துனா அரிசி போடுவாங்க. 

இப்பலாம் அதுப்போல சொம்பெடுத்துக்கிட்டு பசங்க வருவது குறைஞ்சு போச்சு. ஆனா, என் பசங்க அசிங்கம் பார்க்காம போய் வருவாங்க. என்ன, முன்னலாம் கிருஷ்ணர் போல அலங்காரம் பண்ணி அனுப்புவேன். இப்போ, அவன் வளர்ந்துட்டானாம். அதனால, வேட்டி மட்டும் கட்டி போய் அரிசி வாங்கி வந்தான்.

 ஏழு வகையான் காய்கறிகள் (கருணைக்கிழங்கு, கொத்தவரங்காய், முருங்கைக்கீரை, வாழைக்காய், உருளை, சேப்பக்கிழங்கு கண்டிப்பா இருக்கனும்), வடை, பாயாசம் செய்யனும்.  நடு இலையில்  பொங்கல் வச்சு, தயிர் ஊத்தி, வெல்லம் வச்சு சுத்திலும் ஆப்பிள், வாழைப்பழம், கொய்யா, திராட்சைலாம் வச்சு படைச்சு.., 


காய்கள், கீரை, வடை,பழங்கள்ன்னு எல்லாத்தையும் ஒண்ணா போட்டு பிசைஞ்சு சாப்பிட்டால்.. ஸ்ஸ்ஸ் செம ருசி. என்னதான் ஆயிரத்தெட்டு டீசன்ஸி பார்த்தாலும் நம்ம கலாச்சாரத்துக்கு முன்னாடி எல்லாமே அடிப்பட்டு போகும். அதுதான் இந்த மண்ணோட மகிமை போல! உலகத்தோட எந்த மூலைக்கு போனாலும், நம்ம பண்டிகைகளை மட்டும் நம்மாட்கள் மறப்பதே இல்ல.



அம்மாவோடு ஹாஸ்பிட்டலில் இருந்த நேரம்..,காலைல குளிச்சுட்டு ஹாஸ்பிட்டலுகுள்ளயே இருக்கும் கோவிலுக்கு போய் வருவது வழக்கம். அப்படி போகும்போது, அங்க இருக்கும் கார் பார்க்கிங் ஏரியாவை கடந்துதான் போகனும். எங்க பார்த்தாலும் சரக்கு பாட்டில்கள் இருக்கும்.  சில நேரத்துல உடைஞ்சும் இருக்கும். யாராவது மிதிச்சுட்டா என்னாகும்!? என்னதான் நிர்வாகம் எச்சரிச்சாலும் நம்மாளுங்க திருந்தனுமே! ஒரு வேளை உள்ளிருக்கும் நோயாளிகளோட வலியையும், கூட இருப்பவங்க பணத்துக்கும், உடல் கஷ்டமும் படுற வேதனையை பார்த்து குடிப்பாங்களோ!?


நேத்து மகள்கள் தினமாம். ஆனா, எனக்கு தெரியாம போய்ட்டுது. அதனால, என் சின்ன பொண்ணை பத்தி ஒரு குட்டி பிளாஷ் பேக்...,

 இனியாக்கு 3 வயசிருக்கும். அவ ஸ்கூல் போக ஆரம்பிக்கலை. காலைல பெரியவ தூயாவுக்கும், வூட்டுக்காரருக்கும் டிஃபன் செஞ்சு, மதியமும் சாப்பாடு செஞ்சு டப்பா கட்டி கொடுத்துடனும்(சாம்பார் சாதம், கீரை சாதம், கேரட் சாதம்ன்னு தான் கொண்டு வரனும் டிஃபன் வகையான பூரி, உப்புமா, இட்லிலாம் கொடுத்தனுப்பினா அவ ஸ்கூல்ல திட்டுவாங்க.) இது அத்தனையும் 8 மணிக்குலாம் ரெடி ஆகிடனும்.

எதோ சோம்பேறித்தனத்தால சமையல் ஆக லேட்டாகிட்டுது. சின்னவ எப்பவும் சமத்து. ஆனா, அன்னிக்குன்னு பார்த்து எதுக்கோ அடம் பண்ணி அழுதுக்கிட்டு இருந்தா. எனக்கோ சமையல் வேலை முடியாத டென்ஷன்.

ச்ச்ச்சீ, அழுவாத! உங்கப்பா ஆஃபீஸ் போக டைமாச்சு. ஆனா இன்னும் சமையல் முடியலியேன்னு இருக்கேன். குளிக்க போன மனுசன் வந்தா றெக்கை கட்டி பறப்பாரேன்னு இருக்கேன். நீ வேற அழுதிக்கிட்டுன்னு கத்தினேன். பாப்பா பட்டுன்னு அழுகையை நிறுத்தவும், அவ அப்பா வரவும் சரியா இருந்துச்சு.

அப்பாவை பறந்து காட்ட சொல்லுன்னு மீண்டும் அழ ஆரம்பிச்சா. விசயம் தெரிஞ்சு. நெற்றிக்கண்ணை என் வூட்டுக்காரர் தொறக்குறதுக்குள்ள அங்கிருந்து மீ எஸ்கேப்!!



 காலாண்டு பரிட்சை முடிஞ்சு இன்னில இருந்து லீவு தொடங்குது. சும்மாவே பத்து பதிவு தேத்துற மாதிரி என் பசங்க நடந்துப்பாங்க. லீவுன்னா கேக்கவே வேணாம். அதுலயும் அம்மாக்கு முடியாத இந்த நேரத்துல நம்மகிட்டதான் எல்லாம் விடியும். 

பொண்ணை பத்தி கவலை இல்ல. பத்தாவது படிக்குறதால ஸ்பெஷல் கிளாஸ், டியூசன்னு போய்டுவா. பையனை நினைச்சாதான் பயமா இருக்கு. ஸ்பேனர், டெஸ்டர், சுத்திலாம் எங்காவது கொண்டு போய் மறைச்சு வைக்கனும். இல்லாட்டி, நல்ல பொருளை நொள்ளையாக்கி மீண்டும் நல்லதாவே மாத்திடுவான்.

இப்படி அவன் கைல மாட்டி படாத பாடு பட்ட பொருட்கள் எத்தனையோ!! இந்த லீவுல எது உடைய போகுதோ!? 

15 comments:

  1. அம்மா மீண்டும் பழைய கம்பீரத்துடன் வலம் வருவாங்க பாருங்க.


    சின்ன வயசுல என்னையும் ஏமாற்றி 'நாராயணா கோபாலா' எடுக்க வச்சிருக்காங்க.

    நம்ம வீட்டுல ஐந்து வகை சாதங்களுடன் இந்த சனி பெருமாளுக்கு விருந்து வைச்சாங்க. உண்டது என்னவோ நான்தான் :)

    ReplyDelete
    Replies
    1. நாராயணா கோபாலா” எடுத்ததுக்கு ஏன் வருத்தப்படுறீங்க!? நல்லதுக்குதான். ஐந்து வகை சாதமா!? எங்க ஊருல சீமந்தத்துக்குதான் செய்வாங்க.

      Delete
  2. அம்மாவுக்கு சௌகரியம் என்ற சேதி படிக்க
    மிகவும் சந்தோசப்பட்டோம்
    பூரண குணமடைய அன்னை மீனாட்சியை
    வேண்டிக் கொள்கிறோம்.
    வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
  3. அம்மாவின் மன தைரியம் எனக்கு கொஞ்சம் ஆசுவாசம் தருகிறது. சரியாகிவிடும் பூரண குணம் பெற்றுவிடுவார்கள் அம்மா... கவலைப்படாதீங்க..

    புரட்டாசி மாத படையல் மிக அற்புதம் ...

    இனியா மட்டுமா நானும் தான் கேட்கிறேன். அதெப்படிப்பா பறப்பார் :)

    அன்பு வாழ்த்துகள்பா ராஜி.

    ReplyDelete
  4. அம்மா பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்... நாம் கொடுக்கும் தைரியமும் அவர்களுக்கு அவர்களே அளித்துக் கொள்ளும் தைரியமும் மிக முக்கியமானது...

    புரட்டாசி மாத சம்பிரதாயங்களை இன்று தான் முதன் முறையாக கேள்விபடுகிறேன்...

    ஹாஸ்பிட்டலில் பாட்டில்கள் உடைத்து போடுவது பற்றி படித்ததும் வேறு ஒரு விசயமும் நியாபகம் வந்தது.. நாமாவது மனிதர்கள் கொஞ்சம் ஒதுங்கி நடந்து கொள்வோம் ஆனால் காட்டிலும் இதே போன்று நடந்து கொள்வதால் யானி போன்ற உயிரினங்களின் உயிரே பரி போகிறது என்று... என்று திருந்துவான் மானுடன் ?




    ReplyDelete
  5. அம்மா நலத்துடன் வந்த செய்தி மிகவும் மகிழ்ச்சி சகோதரி... பூரண நலம் அடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
  6. நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும்...


    நல்லது...

    ReplyDelete
  7. கவலை வேண்டாம் அக்கா ... நிச்சயம் பாருங்கள் மீண்டும் அதே பழைய கம்பீரத்துடன் வருவ்வாங்க ... புரட்டாசி பற்றி அறிந்து கொள்வது இதுதான் முதல் முறை ... நாங்கெல்லாம் இன்னும் பக்குவ படவில்லை , இனி கொஞ்சம் கொஞ்சமாய் அறிந்து கொள்கிறேன் .. பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  8. அம்மா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியது தெரிந்து மகிழ்ச்சி. விரைவில் பூரண நலம் அடைய எனது பிரார்த்தனைகளும்.....

    ReplyDelete
  9. அம்மா நலமடைந்துவரும் செய்தி மனதிற்கு நிறைவினைத்தருகிறது தோழி!

    உங்கள் பதிவில் பகிர்ந்த விடயங்கள் யாவும் சிறப்பு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. அம்மா நலம் அறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  11. அம்மா நலம் பெற்று வீடு வந்தது அறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  12. தாயார் குணம் அடைந்தது குறித்து மகிழ்ச்சி,

    ReplyDelete
  13. உங்கள் அம்மா விரைவில் பூரண உடல்நலமும் பலமும் பெற இறைவனை வேண்டுகிறேன்.
    மகளின் பிளாஷ்பாக் கலக்கல்!

    ReplyDelete
  14. அம்மா நலம் பெற்றது மிக மகிழ்ச்சி ராஜி.நன்றாக இருக்கட்டும். வெறும் அம்மாதானா. பேரெல்லாம் வேண்டாமா:)

    ReplyDelete