Monday, September 16, 2013

பத்மநாபபுரம் அரண்மனை - மௌனசாட்சிகள்

சுற்றுலா போறதுன்னாலே சின்ன பிள்ளைங்க முதல் பெரியவங்க வரை கொண்டாட்டமே! எனக்கும் அப்படிதான்! கதை புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. புராண கதைகளை விரும்பி படிப்பேன். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், கடல் புறா, யவன ராணி...,ன்னு என் ஃபேவரிட் புக்லாம் நீளும். என்னடா, சுற்றுலா பத்தி ஆரம்பிச்சுட்டு புத்தகம் பத்தி சொல்றாளேன்னு குழப்பமா இருக்கா!! பொன்னியின் செல்வன்படிச்சுட்டு தஞ்சாவூர் பெரிய கோவில் போகும்போது கரிகாலன், வந்தியதேவன், ராஜ ராஜ சோழன், வானதி, குந்தவைலாம் அங்க நடமாடுற மாதிரி ஒரு விவரிக்க முடியா உணர்வு.  

அதேப்போலதான், மகாபலிபுரம் செல்லும்போதும்.., சிவகாமியும், மாமல்லனும் அரூபமாய் என்னோடவே எல்லா இடத்துக்கும் வந்ததுப்போல உணர்ந்தேன். ஒவ்வொரு வரலாற்று சின்னங்களும், பல காலங்களுக்கு முன்ன நடந்த  காதல், சண்டை, சமாதானம், பழி உணர்ச்சி, போர், இழப்பு, மானம், வீரத்தை தாங்கி மௌன சாட்சியாய் நின்னு நமக்கு எதோ ஒண்ணை சொல்ல வருது. அதுப்போல நான் போய் வந்த சில இடங்களை பத்தி நேரம் கிடைக்கும்போது பதிவிடலாம்ன்னு இருக்கேன்.

சரி, கேரள மக்களால் ஓணம் கொண்டாடுற இந்த நாளில், ஓணம் கொண்டாடும் சகோதரர்களுக்கு வாழ்த்து சொல்லிட்டு கேரள பாரம்பரியம் கொண்ட பத்மநாபபுரம் அரண்மனை பத்தி பார்க்கலாம்..
                  (திருவிதாங்கூர் ராஜ்யத்தின் வரைபடம் )
இந்த அரண்மனை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கு அதுக்கு முன்னாடி கன்னியாகுமரியின் வரலாரை பார்போம் இது  வேணாடு ன்னு பழையகாலத்தில் சொல்லப்பட்டிருக்கு. அது, ”திருவிதாங்கூர்சமஸ்தானத்தில்,  ”வீர கேரளாவர்மாஅரசாட்சியின் கீழும்,   அதன் பிறகு மன்னர் மார்த்தாண்டவர்மா  அரசாட்சியின்,  கீழும் மார்த்தாண்டவர்மா காலத்திற்குப் பின் பிரிட்டீஷாரின் ஆதிக்கத்தில்.  1947 வரை இருந்திருக்கு.  1947-ல்  திருவிதாங்கூர் இந்திய யூனியனுடனும்,  1949 இல், மலையாளம் பேசும் இன்னொரு அரசாக இருந்த கொச்சியுடன் இணைந்து திருவிதாங்கூர்-கொச்சி யாகவும்,  பின்னர் 1956 நவம்பர் மாதம் முதல் தேதியன்று திருவிதாங்கூரின்ஒரு பகுதியான கன்னியாகுமரிமாவட்டமாக தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டதாம்இந்த இடம் மன்னர் கால பாரம்பரியம்  கொண்டதுனால குமரி மாவட்டத்தின் வரலாற்று பயணத்தை உங்களுக்கு சொல்லவேண்டியதா போச்சு.   சரி இனி அரண்மனைக்கு போகலாம் வாங்க....,
(கொட்டாரம் முகப்பு வாயில்  )

இந்த அரண்மனை, நாகர்கோயிலிலுள்ள ”தக்கலை” என்னும் இடத்துக்கு பக்கத்துல இருக்கிற பத்பநாபபுரத்தில  இருக்கு.   இந்த அரண்மனை தமிழ்நாட்டுப் பகுதியில் இருந்தாலும்,   கேரள தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுகுள்ளே கேரளா போலீஸ் பாதுக்கப்பில் இருக்கு இந்த பகுதி. இந்த அரண்மனை 4 கி மீ அளவுக்கு கிரனைட் கற்களால் ஆன கோட்டை சுவரினை கொண்டது.

இது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான ”வெள்ளி மலை” அடிவாரத்தில் இருக்கு.  கி.பி 1601 வருஷம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்த ”இரவி வர்ம குலசேகர பெருமாள்”ன்ற அரசரால் கட்டப்பட்டது.  முதலில் ”தாய் கொட்டாரம்” மட்டுமே கி.பி 1550 களில் இருந்ததாகவும், பின்னர் ஆண்ட ”அனிழம் திருநாள் மார்த்தாண்ட  வர்மா” (1706 - 1758) ன்ற மன்னர் அரண்மனையை விரிவாக கட்டினார்.

1795 வரை பத்மநாபபுரமே திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கியது. பின்னர் 1795 ல் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றபட்டது. இந்த அரண்மனை உள்ளே கேரளா கட்டிட கலைகளின் அற்புத எடுத்து காட்டுகளை நாம பார்க்கலாம். இங்கு, பல நிலைகள் உள்ள கட்டிடங்கள் இருக்கு.
  
(அரண்மனையின் முகப்பு)
இங்கே தெரிகிறதுதான் அரண்மனையின் முகப்பு வாங்க அதன் சிறப்பை உங்கள்ளுக்கு சொல்கிறேன் எளிமையான கேரளகட்டிட கலையில் 6.5 ஏக்கர் நிலபரப்பில் கட்டப்பட்டிருக்கு இந்த அரண்மனை.  ஆரம்பத்தில் சிறிய மாளிகையா இருந்து ஒவ்வொரு காலத்திலும் ஆட்சி செய்த அந்தந்த மன்னர்களால் விஸ்தரிக்கப்பட்டு .., இப்ப இருக்கும் இந்த நிலையை 18 ம் நூற்றாண்டில் அடைந்தது.  மரவேலைபாடுகள் எல்லாம் மிக நுட்பமாகவும், அழகாவும் இருக்கு.  தரைகளிலெல்லாம் மூலிகை சாறு கொண்டு அமைக்கப்பட்டதால்தான் அதன் பளபளப்பு இன்னிய வரைக்கும்  குறையாம இருக்குறதா சொல்றாங்க.

அரண்மனையின் முகப்பு பூமுகத்து வாசல்ன்னு சொல்லப்படுது. பூமுகத்துக்குச் செல்லும் முதனமை வாசல் பிரமாண்டமான  மரவேலைப்பாடுகளுடைய பெரிய இரட்டைக் கதவையும், கருங்கற் தூண்களையும் உடையது. திருவிதாங்கூர் அரசர்கள் மிகவும் முக்கியமான விருந்தினர்களை அழைத்து சந்திப்பது இந்த அறையில்தானாம் .மரவேலைபாடுகள் கேரளா பாரம்பரியத்துடன் பார்ப்பதற்கு பிரமிப்பூட்டும் வகையில் இருக்கு.  மரத்தினால் ஆன மேற்கூரை  90 வகையான தாமரை பூக்கள் செதுக்கப்பட்டிருக்கு. 90 தாமரை பூவும் ஒண்ணைப் போல இல்லாம வெவ்வேற வடிவத்துல இருக்குறதும் ஒரு சிறப்பு.

இங்கே தொங்கவிட பட்டிருகிறதுதான் குதிரைக்காரன் விளக்கு. அறையின் நடுபக்கம் தொங்க விடப்பட்டிருக்கு. அதன் சிறப்பம்சம் எந்த திசையில் திருப்பினாலும் அதே திசையில் நிற்கும் அமைப்பில் தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருக்கு. 


இங்கே இருக்கிற இருக்கை சீனர்களினால்  கொடுக்கப்பட்டது.  அதன் பக்கத்தில இருக்கும் கட்டில் முழுவதும் ஒரே கருங்கல்லினால்  ஆனது.  மேலும், உள்ளூர் பிரதானிகளால் ஒணம் பண்டிகைக்கால வாழ்த்தாக வழங்கப்பட்ட வாழ்த்துக்களும் இந்த பூமுகத்தில் வைக்கப்பட்டிருக்கு.

மந்திரசாலை 
இப்போ நீங்க பார்கிறது மந்திரசாலை. அப்படின்னா மிக மிக்கியமான ஆலோசனைகள், முடிவுகள் எடுக்கும் இடம். இது இந்த மந்திரசாலை பூமுகத்தின் முதலாவது மாடியில் இருக்கு.. மந்திரசாலைக்குச் செல்லும் படிக்கட்டு மிகவும் குறுகலானது. தனியே மரத்தால் ஆனது.அந்தப்படிக்கட்டில் ஒவ்வொருவராகவே ஏறமுடியும். பளபளக்கும் கரிய தரையுடன் காணப்படும் மந்திரசாலையில் தான், மன்னர் மந்திரிகளுடன் கலந்துரையாடியதாக சொல்லப்படுது.
(மந்திரசாலை வெளிப்பக்கம்)
மந்திரசாலையின் சுவரும் கூரையும் மரங்களாலேயே கட்டப்பட்டிருக்கு. எந்த வித செயற்கை விளக்குகளுமின்றி, சூரிய ஒளியின் உச்சப்பயனைப் பெறக்கூடிய வகையிலே சலாகைகள் மூலமும், மைக்கா கண்ணாடி மூலமும் சுவர்கள் அமைக்கப் பட்டிருக்கு.  இங்க இருக்கும் மரதட்டுகளில் ஒரே வாசல் கொண்ட பகுதிக்கு,  11 கிளி வாசல்கள் கொண்ட விதவிதமான நுணுக்கங்களுடன் சீனமுறையில் அமைக்கப்பட்டிருக்கு. மந்திரசாலையின் தரைபகுதி உள்நாட்டு முறைப்படி அழகுபடுத்தபட்டிருக்கு. 
(அன்னதான மண்டபம் முதல்நிலை)
இப்ப நாம பார்க்க போறது மணிமாளிகையைத் தாண்டிச் இருக்கிற , இருநிலைகளையுடைய அன்னதான மண்டபம்.  திருவிதாங்கூர் அரசர்கள் அன்னதானத்தை முகியமானாதாக கருதியதால், இந்த அன்னதான மண்டபத்தில்,  தினமும்  ஏறத்தாழ 2000 பேர் ஒன்றாக ஒரே நேரத்தில் அமர்ந்து உணவருந்த ஏற்பாடு செய்துதிருக்காங்க . கீழ் மண்டபத்தில் 1000 திற்கு மேலேயும் முதல் நிலையில் 1000 திற்கும் மேலேயும் ஒரே நேரத்தில் அமர்ந்து உணவருந்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கு.
(சீன ஊறுகாய் பரணிகள்)
அப்போது பயன்பட்ட பல்வகை பட்ட ஊறுகாயை பாதுகாக்க பெரிய வடிவில் சீனச்சாடிகளை இம்மண்டபத்திலேயே காட்சிக்கு வைக்கப்பட்டிருகு மேலும், ரசம், மோர், தண்ணீர் போன்றவைகளை ஊற்றி வைப்பதற்கு பயன்பட்ட கல் தொட்டிகளும் இப்ப வரைக்கும் பாதுகாத்து வச்சிருக்காங்க. அந்த காலத்து மன்னர்கள் அன்னதானத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை அன்னதான மண்டபத்தின் பிரமாண்டம் நமக்கு உணர்த்துது.
(தாய்க்கொட்டாரம் முதல்நிலை)
அன்னதான மண்டபத்தைக் கடந்தால் தெரிவது தாய்க்கொட்டாரம். இந்த தாய்க்கொட்டாரமே மாளிகைத் தொகுதியில் மிகவும் பழைமையான மாளிகை. இது ”தேப்பகுளன்கரை” ன்னு சொல்லப்படுது. இது, வேணாட்டு அரசனாக இருந்த ”இரவி வர்மா குலசேகர பெருமானால்”
(1592 - 1610 ) கட்டப்பட்டது. 
இந்தத் தாய்க்கொட்டாரம், பாரம்பரிய நாற்கட்டமைப்பில் கட்டப்பட்டது. இந்த கொட்டாரத்தில் உள்ள ஏகாந்த மண்டபங்கள் பல சிறப்புகளை உடையது.  இதன் தூண்கள் ஒவ்வொன்றும் ஒரே பலா மரத்தினால் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் காணபடுது. முதலாவது மாடியில் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்ட மரப்பலகைகளால் பிரிக்கப்பட்ட படுக்கையறைகள் காணப்படுது.
தேவியை வணங்குவதற்கும்,  உபாசனை செய்வதற்கும்,  பாடல்களை பாடுவதற்கும் இந்த அறை உபயோகபட்டிருக்கு. இதன் மேற்கூரை மும்மூர்த்திகளின் அருளை உணர்த்தும் வகையில் மூன்று அடுக்குகளாக பூ போன்ற் வடிவில் அமைக்கப்பட்டிருக்கு. மேலும், தேவி உபாசனை நூல்கள் வைக்கும் ஒரு சிறிய மரத்தாலான வடிவமைப்பும் சுவரில் அழகாக காணப்படுது. 
நிறைய கோபுர தொகுப்பை கொண்ட இந்த  தாய்க்கொட்டாரத்தின் நடு முற்றத்தின் பக்கத்தில் பெரிய அகலமான சுரங்கபாதை ஒன்று இருக்கிறதாம். ஆபத்து நேரத்துல 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ”சாரோடு” என்னும் கொட்டாரத்துக்கு செல்ல வழி செய்திருக்காங்க. தாய்க் கொட்டாரத்தின் வட பகுதியிலே ”ஹோமபுரம்” காணப்படுது. இங்குதான் யாகம் வளர்க்கப்பட்டு வந்தது. அதன் கிழக்குப் பகுதியில் சரஸ்வதி கோவிலொன்று காணப்படுது. இன்றும் கூட நவராத்திரி காலங்களில், இக்கோவிலிலுள்ள சரஸ்வதி திருவுருவம் திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமா எடுத்துச் செல்லப்படுது.
(உப்பரிகை உட்பக்கம்)
அடுத்துக் காணப்படும் இடம் உப்பரிகை, மன்னன் மார்த்தாண்ட வர்மனால் கி.பி. 1750 இல் அமைக்கப்பட்டது. ஸ்ரீபத்மநாபனுக்காக இந்த மாளிகை அமைக்கப்பட்டதால் மிகவும் புனிதமானதாகும். மூன்று மாடிகளையுடைய இந்த மாளிகையில், கீழ்ப்பகுதி அரச திறை சேரியாகக் காணப்பட்டதாம். முதல் மாடியில் மருத்துவக் குணமுடைய மரத்தாலான மருத்துவக் கட்டிலொன்று காணப்படுது. அதன் படம்தான் உங்களுக்காக மேலே கொடுத்திருகிறது அந்த அறையின் உத்திரம் மர வேலைப்பாடுடன் எவ்வளவு கலைநுணுக்கமா செய்யப்பட்டு இருக்கு பாருங்க.

இரண்டாவதுமாடி, மன்னனின் ஓய்வெடுக்கும் பகுதியா இருந்திருக்கு. மூன்றாவது மாடியில் இராமாயணம், மகாபாரதம், பைபிள் ஆகியவற்றில் வரும் சம்பவங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள்லாம் இருக்கு. உப்பரிகையின் முதலாம் மாடியிலிருந்து அந்தப்புரத்துக்குச் செல்லமுடியும். தற்போது அந்தப்புரத்திலே இரண்டு பெரிய ஊஞ்சல்களும் ஆளுயரக் கண்ணாடியும் இருக்கு. 17 ம் நூறாண்டில் அமைக்கப்பட்ட கழிப்பறைகள் ஆச்சர்யமளிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. .
அந்தப்புத்தைத் தாண்டிச் சென்றால் வருவது நீண்ட மண்டபம். மண்டபத்தின் இருமருங்கிலும் சமஸ்தானத்தின் வரலாற்று நிகழ்வுகள் ஓவியங்களாகத் தொங்குது. அடிப்படையில் அவையாவுமே மன்னர் மார்த்தாண்டவர்மாவுடன் தொடர்புடையனவாகக் காணப்படுது.
(ஆயுத படைசாலையும் காவல் கோபுரமும்)

இங்கே இருக்கும் வீதி குறைந்த அறைகளில்தான் அரசர்கள் ஆயுதங்களை பாதுகாத்து வந்துள்ளதாக சொல்லபடுது.  இந்த அறைகளில் ஜன்னல்கள் எதுவுமில்லாம இரண்டு வாசல்கள் மட்டுமே காணப்படுது. இதன் வடக்கு மூலையில் ஒரு காவல் கோபுரம் காணபடுது. அதிலிருந்து பார்க்கும் போது எல்லா இடங்களும் கண்காணிக்கப்படுவதற்கு பயன்படுத்தி இருக்கலாம்ன்னு சொல்லபடுது. இங்கு பாதுகாக்கப்பட்ட 10,000 திற்கு ம் மேற்பட்ட ஆயுதங்களை ”கர்னல் மெக்காலே” உத்திரவுப்படி ஆங்கிலேய படைகள் எடுத்து சென்றுவிட்டதாம். மீதி பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. 
(அம்பாரி முகப்பு)
இதுதான் அம்பாரி முகப்பு.  திருவிழா காலங்களில் தேரோட்டம் காணவும் , சிறப்பு தினங்களில் மக்களை சந்திக்கவும்,  மன்னர் தரிசனம் கொடுக்கும் இடம்.  யானையின் மேல் இருக்கும் அம்பாரியின் அமைப்பு சிற்பகலையில் செதுக்க பட்டுள்ளதால் ”அம்பாரி முகப்பு” என்று அழைக்கப்படுது.

(இந்திர விலாசம்)
மண்டபத்தின் வழியே சென்றால் இந்திர விலாசத்திற்கு செல்லமுடியும் . மன்னர் மார்த்தாண்டவர்மாவின் காலத்திலே விருந்தினர்களுக்கென அமைக்கப்பட்ட மாளிகையே இந்திரவிலாசமாகும். அரண்மனையின் மற்ற  பகுதிகளைப் போல இல்லாம,  முற்றிலும் மேலை நாட்டு பாணியில் அமைக்கப்பட்டிருக்கு. இதன் கதவுகளும் ஜன்னல்களும் பிரம்மாண்டமானவை,  மேற்கூரை வேலை பாடுகளுடன் உயரமாக அமைக்கப்பட்டிருக்கு.

(நவராத்திரி மண்டபம்)
இந்திரவிலாசத்தை அடுத்து வருவது நவராத்திரி மண்டபம். தற்போது காணப்படும் கருங்கல் மண்டபமும், அதனையொட்டிய சரஸ்வதி ஆலயமும், கி.பி. 1744 இல் மன்னன் மார்த்தாண்டவர்மாவின் காலத்தில் கட்டப்பட்டது. மண்டபத்தின் கூரை முழுவதும் கருங்கல்லினாலானது. அழகொளிரச் செதுக்கப்பட்ட கருங்கற்றூண்கள் கூரையைத் தாங்குது. நவராத்திரிக் காலங்களில் கலாசார நிகழ்வுகளை அரங்கேற்றுவதற்கென இந்த நவராத்திரி மண்டபம் பயன்பட்டது. 

மன்னர் முதலானோர் மண்டபத்தில் இருந்தும், அரண்மனைப் பெண்கள் மண்டபத்தில் தென்கிழக்குப் பகுதியில் மரச்சலாகைகளால் அடைக்கப்பட்ட பகுதியிலிருந்தும் கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிடலாம். எளிமையான மரவேலைப்பாடுடைய அரண்மனையின் கட்டமைப்புக்கு மாறாக விஜய நகரக்கட்டட பாணியை உடையதாக இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளதெனக் கூறப்படுது
அரண்மனை பெண்கள் குளிக்கும் குளமும்,  அதைத்தாண்டி தெற்கு கொட்டாரமும் காணபடுது. இது அரண்மனைத் தொகுதியை விட்டு விலக்கிக் காணப்படினும், அத்தொகுதியின் ஒரு பகுதியாகும். தெற்குக் கொட்டாரம் மூன்று சிறிய கட்டடங்களைக் கொண்டது. அவை மூன்றுமே, மிகவும் கவர்ச்சிகரமான மரச்செதுக்கல் வேலைப்பாடுகளுடன் அழகான தோற்றத்தையுடைய பகுதிகளாகும்.

(மணிமாளிகை)
மணிமாளிகை கிராமத்தவர் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட மணிக்கூண்டு கோபுரத்தை இந்த மாளிகையில் காணலாம். இந்த மணிக்கூண்டு ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டதாகக் சொல்லப்படுது. இம்மணிக் கூண்டின் பின்னனியிலிருக்கும் தொழில்நுட்பம் வியக்கத்தக்கது. மணிக்கொரு தடவை ஒசையெழுப்பும் இந்த மணிக்கூண்டின் மணியோசையை 3 கிமீ சுற்றுவட்டாரத்திற்குள்ளிருக்கும் அனைவராலும் கேட்கமுடியுமாம் .
பழமையான இந்த பத்மநாபபுரம் அரண்மனையில் இன்றும் கூட மின்விளக்குகள் கிடையாது இயற்கை ஒளி முழுவதும், அரண்மனை  வெளிச்சம் பரப்புமாறு வடிவமைக்கப்பட்ட்டிருக்கு. இந்த அரண்மனையின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் யாவுமே உள்நாட்டில் கிடைக்கக்கூடிய மரப் பலகைகள், செங்கற்கள், கருங்கற்கள், சுன்னக்கற்கள் தான். 

எரிக்கப்பட்ட தேங்காய்ச்சிரட்டை, எலுமிச்சை, முட்டைவெண்கரு மற்றும் மரக்கறிகள் சிலவற்றிலிருந்து பெறப்பட்ட சாறு ஆகியவற்றைக் கொண்டுதான் பளிச்சிடும் கரிய நிறத்தரை உருவாக்கப்பட்டிருக்கு. மலசல கூடங்கள் முதலாம் மாடியிலேயே காணப்படுது.  கழிவுகள், மூடப்பட்ட கற்கால்வாய்களின் வழியே கடத்தப்படும் வகையில், அந்தக் காலத்துலயே வடிவமைச்சிருக்காங்க நம் முன்னோர்கள்.
இது கேரளா அரசால் பராமரிக்கப்படும் அருங்காட்சியகம். இதில் நிறைய கல்வெட்டுகள், அரசாட்சிகளை பற்றிய குறிப்புகள், படை கருவிகள் , தண்டனை  கருவிகள், கொலைகருவிகள் முதலியன காட்சிக்கு வைக்கப்பட்டிக்கு.  இந்த அருங்காட்சியகத்தில் 16 ம் நூற்றாண்டு முதல் 19 ம் நூற்றாண்டு வரை உள்ள ஆயுதங்கள்,  ”செம்பகசேரி மகராஜா ” “தளபதி டிலனாய்” ”ராஜா கேசவதாசர்”  மற்றும் ”வேலு தம்பி தளவாய்” ஆகியோர் பயன்படுத்திய சில ஆயுதங்களும் பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கு.

மன்னர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள்,  வாள், குறுவாள்,  கேடயம், ஈட்டி எல்லாம் பார்த்துட்டீங்க.  இங்கே இருக்கிற இந்த இரும்பினால் ஆன கூண்டு தண்டனை நிறைவேற்ற பட உபயோகிச்சு இருக்காங்க. இதில், குற்றவாளிகள் உயிரோடு   அடைக்கப்பட்டு,  காட்டில் தொங்க விட்ருவாங்களாம். அங்கே , அவங்க, சித்திரவதை பட்டு இறப்பார்களாம். இதுபத்தின குறிப்புக்கள் பக்கத்திலேயே இருக்கு. அங்க போகும்போது படிச்சு தெரிஞ்சுக்கோங்க.
பத்மநாபபுரம் அரண்மனையின் வாசல்களும் பாதைகளும் மிகவும் குறுகலானவை. அவ்வழியே போகும்போது ஒருவர் பின் ஒருவராகவே செல்லமுடியும். பல உள்நாட்டு, வெளிநாட்டுக் கிளர்ச்சிகளின் அச்சுறுத்தல்கள் இந்த அரண்மனைக்கு காணப்பட்டதுன்னு வரலாறு சொல்லுது. அதனால, கிளச்சியாளர்களைச் சுலபமாக எதிர்கொள்ளும் வழிமுறைதான் இந்தகுறுகலான வடிவமைப்போ எனவும் எண்ணத் தோணுது. 

பிரதான கட்டடத் தொகுதியில் காணப்படும் சுரங்கப்பாதைக்கான வழியும் கூட அதனையே பறைசாற்றுகிறது. வெளியிலிருந்து அரண்மனை சன்னல்கள் வழியே பார்த்தா, உள்ளே நடப்பது எதுவும் தெரியாது. ஆனா, உள்ளிருந்து பார்த்தால் வெளி வீதியில் நடப்பவற்றை நல்லா பார்க்கும்  விதமா ஜன்னல்கள் யாவும், மரச் சலாகைகளால் அடைக்கப் பட்டிருக்கு.அந்தப்புரப் பெண்கள், வெளியாரின் பார்வையிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கும் இந்த கட்டமைப்பு சான்றாக அமைகிறது

காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணிவரையே அரண்மனை பொதுமக்களின் பார்வைக்காகக் திறந்து வைக்கப்பட்டுது. நாங்கள் சென்ற போது ஓணம் பண்டிகை நாள் என்பதால் அத்தபூகள் மற்றும் பலவகையான பூக்களால் அலங்கரிக்கபட்டு இருந்தது.  இதோ தெரியும் இந்த மண்டபத்தில் தான் அத்தபூகோலம் போட தொடங்கினர்.  அதையும் போட்டோ எடுதுக்கிட்டோம், ஆனா, அதெல்லாம் பதிவா போட்டா நீங்க சளிச்சுக்குவீங்கன்னுதான் போடலை. உங்களுக்கு இந்த அரண்மனையை அழகா சுத்தி காண்பிச்சாச்சு.

 இதை இந்த பதிவை படிச்சுட்டு போறவங்க ஞாபகம் வச்க்கவேண்டிய விஷயம் பார்வை கட்டணம் 35 ரூபாய். கேமராவிற்கு தனி கட்டணம் உண்டு. சரி இனி அடுத்த வரலாற்றின் கதைகளை தாங்கி மௌன சாட்சியாய் நிற்கும் அடுத்த கோடடைக்கு போகலாம் ..  

26 comments:

  1. பொண்ணியின் செல்வம் எல்லாம் நான் படித்தது கிடையாது!

    ஆணா உங்க பதிவ படித்த பிரகு பெசாம அதையே படிச்சிடலாம் போல இருக்கு மேடம்!:-) அவ்வ்வ்வ்




    இண்ணும் அங்க போக ட்ரை பண்ணல எப்படியோ அந்த ஆசை உங்க பதிவின் மூலம் நிரை வேரிடுச்சு:-)

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்ல வந்தத மகேஷ் சொல்லிட்டாரு.. பொன்னியின் செல்வன் அஞ்சு புக்கா இருக்கேன்னு ஒவ்வொரு அத்தியாயமா படிச்சுகிட்டு இருக்கேன்.. ஆனா இந்த ஒரு பதிவே ஆறு புக்கு போடலாம் போலிருக்கே.. :-)

      Delete
  2. அரண்மனையை அழகா சுற்றி வந்து விட்டோம்... நன்றி...

    ReplyDelete
  3. ஏற்கனவே என் குடும்பமும் நண்பன் விஜயன் குடும்பமும் அங்கே சுரருல சென்று வந்தோம், அருமையான அரண்மனை....!

    வாழ்க்கையிலேயே விஜயன் அதிகமாக போட்டோ எடுத்ததும் இங்கேதான், காரணம் விஜயன் ஒரு போட்டோ கிராபர்...! அவர் எடுத்த போட்டோக்களைதான் எனது பதிவாக்கி பிளாக்கில் போட்டு இருந்தேன்.

    என்ன ஒரு கஷ்டம்னா அரண்மனைக்குள்ளே பார்வையாளர்களுக்கு பாத்ரூம் வசதியும் குடிநீர் வசதியும் இல்லை என்பதுதான்...!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் 2 வருடங்கள் முன்பு நான் செனற போது அந்த இடங்கள் கட்டிட கலை ஆகியவற்றை பார்த்து பிரமித்து போனேன் 100 க்கு மேல் போட்டோ எடுத்து எடுத்து என் கேமரா பாட்டரி தீர்ந்து போய் அங்கே அலுவலகத்தில் சார்ஜ் செய்து மீண்டும் எடுத்தேன் அவ்வுளவு அருமையான அரண்மனை

      Delete
  4. அன்பின் ராஜி

    அருமையான பதிவு - பத்மநாபபுரம் அரண்மனை - 25 அழகான படங்கள் - விள்க்கங்கள் அருமை - சில ஆண்டுகட்கு முன்னர் சென்று கண்டு களித்தது நினைவிற்கு வருகிறது. மற்றுமொரு தடவை கண்டு களிக்க வேண்டும். இப்பதிஉவு நிச்சயம் உதவும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. 2 வருடங்களுக்கு முன்பு நான் அந்த கொட்டாரதிற்கு சென்று இருக்கிறேன் அங்கே நாம் தான் வெளியே இருந்து தண்ணீர் கொண்டு செல்லவேண்டும் அந்த இந்திர விலாசம் ன்னு சொல்கிற பகுதி பக்கம் கேரளா சுய வுதவி குழு அமைத்த பாத் ரூம் இருந்தது இப்ப எப்படின்னு தெரியல ..

    ReplyDelete
  6. திருவிதாங்கூர் மகராஜக்க்ளையும் கொட்டரதையும் அழகாக சொல்லி இருகிறீங்க அரண்மனை தூய்மையை கடைபிடிக்க குடிநீர் எல்லாம் அலுவலகம் முன்பும் பாத் ரூம் வசதி அதன் பக்கவாட்டு பகுதியிலும் இருக்கு அடுத்த முறை போகும் பொது கவனமா பாருங்க ..இந்த ஒண திருநாளில் எங்க மகராஜா இருந்த இடத்தை பார்கிறது மிகவும் சந்தோசம் ..வாழ்த்துக்கள் ..ஏவர்க்கும் எண்டே ஹிருதயம் நிறஞ்சே ஒண ஆசாம்சகள்

    ReplyDelete
  7. அருமையான வர்ணனை !!!!

    ReplyDelete
  8. ராஜ் ...போன நாளை திரும்பவும் நினைக்க வைச்சுட்டீங்க.

    ReplyDelete
  9. அருமையான புகைப் படங்கள்.. பகிர்வுக்கு நன்றி சகோ/...

    ReplyDelete
  10. நேரில் சென்று பார்த்து வந்தது போன்ற உணர்வை அளித்தது படங்களும் கட்டுரையும்! சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  11. உங்கள் பகிர்வின் மூலம் அரண்மனையை முழுவதுமாக சுற்றிபார்த்துவிட்டோம்.

    ReplyDelete
  12. திருவிதாங்கூர் நாட்டு மக்கள் தான் கன்னியாகுமரி பகுதியில் உள்ளவர்கள் என்பதும் பழைய திருவிதாங்கூர் நாட்டு மேப் கூடுதல் தகவலாக இணைத்து அறிய தவல்களுடன் உங்கள் பதிவு இதுவரை வந்த இந்த அரண்மனையை பத்தின தகவல்களை விட அருமையான விளக்கங்களுடன் இருக்கிறது

    ReplyDelete
  13. அரண்மனையின் மௌன சாட்சிகளை ,படங்களுடன் விவரித்து பேசும் சித்திரங்கள் ஆக்கி விட்டீர்கள் ,அருமை !

    ReplyDelete
  14. அற்புதம் உங்கள் கட்டுரை!

    ReplyDelete
  15. சுவையான அரிய தகவல்கள். பார்க்கவேண்டிய அந்த இடத்தைக் காண ஆவல் ஏற்படுகிறது.

    ReplyDelete
  16. சுவையான தகவல்கள்..... ரசித்தேன். நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பகிர்வு.... கொஞ்சம் பிரிச்சு இரண்டு மூணு பதிவா போடலாமே....

    ReplyDelete
  17. நல்ல படங்களும் தகவல்களுமா அருமையான பதிவு.

    நாங்கள் போனபோது சில பகுதிகளில் பராமரிப்பு நடப்பதால் காணக்கிடைக்கலை.

    நேரமிருந்தால் பார்க்க ஒரு சுட்டி:-)

    http://thulasidhalam.blogspot.co.nz/2009/05/2009-31.html

    ReplyDelete
  18. வெளித் தோற்றம் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் உள்ளே ஏராளமான நுணுக்கமான வேலைப் பாடுகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன. விரிவான பதிவு நன்றி.

    ReplyDelete
  19. நல்ல பதிவு..நானும் இந்த அரண்மனைக்கு சென்று இருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு ரசித்தது இல்லை..தொடருங்கள்

    http://www.revmuthal.com

    ReplyDelete
  20. //சிவகாமியும், மாமல்லனும் அரூபமாய் என்னோடவே எல்லா இடத்துக்கும் வந்ததுப்போல உணர்ந்தேன். //

    ஆவியோட அக்காவாச்சே..

    ReplyDelete
  21. //பெண்கள் வெளியாரின் பார்வையிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கும் இந்த கட்டமைப்பு சான்றாக அமைகிறது//

    நாடு சுபிட்ஷமா இருந்த காலம் அதுன்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  22. பத்மநாபபுர அரண்மனை பற்றிய தகவல்கள் அருமை. ஓடுவேய்ந்த அரண்மனையும் உள்ளிருக்கும் அழகிய வேலைப்பாடுகளும் ரசிக்கவைக்கின்றன. நேர்த்தியான படப்பிடிப்பு. பாராட்டுகள் ராஜி.

    ReplyDelete
  23. 360-டிகிரியில் அரண்மனையை சுற்றிப் பார்த்த நிறைவு...போகவே வேண்டாம் ...பதிவை படித்தாலே போதும்... காசு மிச்சம்

    ReplyDelete