Friday, September 01, 2017

குரு பகவானும், தட்சிணாமூர்த்தியும் ஒன்றா?!


குரு பார்க்க கோடி நன்மை, குருவை போல கொடுப்பார் யாருமில்லை....ன்னு சொல்ல கேள்விப்பட்டிருப்போம். கோவிந்தன் கைவிட்டால்கூட பிழைத்து கொள்ளலாம். ஆனா, குரு கைவிட்டவன் பிழைக்க வழியே இல்லைன்னு கபீர்தாசர்கூட சொல்லி இருக்கார்.  ’குரு’ன்னா இருட்டைப் போக்குபவர், கனமானவர்ன்னு பொருள். குருபகவான் நவக்கிரகங்களில் ஒருவர். இவருக்கு தாரை என்ற மனைவியும், எமகண்டன், கசன் என்ற இரண்டு மகன்களும் இவருக்குண்டு. இவர் நான்கு வேதங்களையும், அறுபத்தி நாலு கலைகளையும் கற்று தேர்ந்தவர். கடுமையான தவத்தினால் திட்டை வசிஷ்டேஸ்வரரிடம் தேவர்களுக்கு தலைவராகும் வரம் பெற்றார்.  இத்தனை புகழ்வாய்ந்த குரு யார்?! இவருக்கும் தட்சிணாமூர்த்திக்கும் என்ன தொடர்பு?! குருபெயர்ச்சின்னா என்ன?! அன்னிக்கு தட்சிணாமூர்த்தி பகவானை கும்பிடுவது சரியான்னு இன்னிக்கு பதிவுல பார்க்கலாம்...

இந்த குருவுக்கு  வியாழ பகவான், பிரகஸ்பதின்னும் பேரு.  இவரே தேவர்களுக்கெல்லாம் குரு. இந்த தேவகுருக்கு குருவாக, ஆதி குருவாக தட்சிணாமூர்த்தி விளங்குகிறார். இதனை நன்கு தெரிந்துக்கொண்ட நம்ம பெரியவங்க , மாணவனை வணங்குவதற்கு பதிலா நேரா ஆசிரியரை வணங்கினா பலன் கிடைக்கும்ன்னு நம்புறாங்க.  நவக்கிரக குருவிற்கு உண்டான மஞ்சள்நிற ஆடையையும், கொண்டைக்கடலை நிவேதனம் உள்ளிட்ட சகல பரிகாரங்களையும் தட்சிணாமூர்த்திக்கே செய்கின்றனர். இது சரியான்னு தெரியாம நடந்துக்குறாங்க. குரு பகவான் வேற. தட்சிணாமூர்த்தி வேறன்னு புரியாம இந்த வேலையில் ஈடுபடுறாங்க.



குருப்பெயர்ச்சியின்போது அனைத்து சிவாலயங்களிலும் அபிஷேகம், ஆராதனைன்னு நடக்கும். ஆனாலும்,  ஆலங்குடி, தென்குடித்திட்டை, சென்னை-பாடி, திருப்புலிவனம், தக்கோலம் ஜலநாதீஸ்வரர், கோவிந்தவாடி மாதிரியான ஊர்களில் குருபகவான் தனிக்கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார்.  மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவரான ஶ்ரீ வாமனருக்கு ஆசிரியராய் குருபகவான் இருந்திருக்கிறார். குருவிடமிருந்து  வேதங்கள், அதன் அங்கங்கள், உப அங்கங்கள், ஆறு சாஸ்திரங்கள், ஸ்மிருதி மற்றும் ஆகமம் ஆகிய அனைத்தையும் ஸ்ரீவாமணன்  கற்றறிந்தார் என சொல்கிறது ப்ருஹத் தர்ம புராணம். குருபகவான் பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர்.  



பிரம்மனின்  புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்த பிள்ளைகளில் ஒருவர்தான் இந்த குருபகவான். இவர் அறிவில் சிறந்தவர் என்பதால் ‘பிரகஸ்பதி’ என்று அழைக்கப்பட்டார். பிரகஸ்பதின்னா  ‘ஞானத் தலைவன்’ன்னு  பொருள். குருபகவான் காசியில் பல காலம் தங்கி சிவபெருமானை வேண்டி கடுமையான தவத்தை மேற்கொண்டார். இதன்காரணமாகவே அவர், தேவர்களுக்கு குருவாக விளங்கும் பதவியும், கிரக பதத்தில் வீற்றிருக்கும் பேறும் பெற்றார்.. நவக்கிரகங்களில் பிரதானமான இவர் சுபக்கிரகர் ஆவார். மூன்று குணங்களில், சாத்வீக குணத்தைக் கொண்டவர். மஞ்சள் நிறம் உடையவர். அதனால் இவரை ‘பொன்னன்’ என்றும், ‘வியாழன்’ என்றும் கூறுவார்கள். தயாள சிந்தனை கொண்டவர். குரு பகவானின் 5, 7-ம் பார்வை சகல நன்மைகளையும் தரும். ஒருவரின் திருமண யோகத்திற்கு குரு பலம் மிகவும் அவசியம். தன்னை வழிபடுபவர்களுக்கு உயர்வான பதவியையும், மன மகிழ்ச்சி, புத்திரப்பேறு, செல்வம், சுகம் ஆகியவற்றையும் கொடுப்பவர். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவானின் அருள் பூரணமாக இருந்தால், அவருக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கும். கடல் கடந்து சென்று செல்வம் தேடி செல்வந்தர் ஆகும் சூழ்நிலையும் ஏற்படும். 





வியாழ பகவான் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவார். கமண்டலம், அட்சமாலை, யோக தண்டத்தை தாங்கி, அபய முத்திரையுடன் அருள்புரிவார். இவருக்கு பிடித்த உலோகம் தங்கம். யானையை வாகனமாக கொண்ட இவருக்கு, பிடித்த உணவு கொண்டைக் கடலை தானியம். இதனால்தான் வியாழ பகவானுக்கு கொண்டைக் கடலை மாலை சூட்டி வழிபாடு செய்கிறார்கள். நவரத்தினங்களில் புஷ்பராகத்தை அணிந்திருப்பவர். அரசமரம் இவருக்கு பிடித்தமான மரம். இனிப்பு சுவை பிடிக்கும். நான்கு சக்கரங்கள் கொண்ட ரதத்தில் நாற்கோண பீடத்தில் எழுந்தருளி இருப்பார். ரதத்தின் ஓரத்தில் வில்லும், மீனும் அடையாளமாக இருக்கும். தனுசு ராசிக்கும், மீன ராசிக்கும் இவர் அதிபதி என்பதை எடுத்துக் காட்டும் அடையாளம் அவை. நீதி சாஸ்திரங்களை அறிந்த குருபகவான் ஒருவருக்கு எந்த அளவு அதிர்ஷ்டத்தை வழங்கலாம்ன்னு இவரே நிர்ணயம் செய்வார்.


தெட்சிணம்ன்னா தெற்குன்னும், ஞானம்ன்னும் பொருள். ஞானத்தின் திருவுருவமாக நின்று தன்னை வணங்குபவர்களுக்கு ஞானத்தை அள்ளி வணங்குபவதால் அவருக்கு இந்த பேரு உண்டாச்சு. ஞானமானது இவரது சன்னிதியில் இவர் முன்னிலையில் அவரின் ஆணைக்காக காத்திருக்கு. யோகம், ஞானம், வீணா, வியாக்யண நிலையில் தட்சிணாமூர்த்தி வழிப்படப்படுகிறார். பெரும்பாலான கோவில்களில் வியாக்யண தட்சிணாமூர்த்தியே வழிப்படப்படுகிறார். வேதங்களின் நுணுக்கங்களை இவரே மற்றவர்களுக்கு  எடுத்துரைப்பவர். சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கிக் கூறினார். எனவேதான் இந்த நான்கு முனிவர்களும் அவர் பாதத்தின் அடியில் வீற்றிருக்கின்றனர்சிவனும் மக்களின் உலக இன்பம் தேடும் அறியாமையைப் போக்கி, அவனை அழித்து, தன்னோடு இணைத்து நிரந்தரமான இன்பம் தருபவர். அறியாமையை அழிக்கும் இத்தகைய வாழ்க்கை கல்வியை அளித்தவர் என்பதால், இவர் குருவாக மதிக்கப்படுகிறார்.



இவர் வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும் அடையாள சின்னத்தையே சின்முத்திரை என்பார்கள். இதில் கட்டைவிரல் கடவுளைக் குறிக்கும். சுட்டுவிரல் மனிதனைக் குறிக்கும். நடுவிரல் ஆசையையும், மோதிரவிரல் கர்மம் ஆகிய செயல்களையும், சுண்டுவிரல் மாயையையும் குறிக்கும். மனிதனை மாயை மறைத்துநின்று, ஆசையை ஏற்படுத்தி, கெட்ட கர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் மறந்துவிட்டு, இறைவனை வணங்கினால், இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதே இதன் பொருளாகும்.




குருவிற்கும், தட்சிணாமூர்த்திக்குமான வேறுபாடு...

தட்சிணாமூர்த்தி - சிவவடிவம், குரு பகவான்-கிரக வடிவம். இவர் சிவன், அவர் பிரகஸ்பதி. தட்சிணாமூர்த்தி-முதலாளி, குரு-அதிகாரி. தெட்சிணாமூர்த்தி-சிவகுரு, குரு-தேவகுரு. தட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர். குருபகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர். தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர், குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர். சிவன் அம்சமான தட்சிணாமூர்த்தி சிவனைப்போன்றே தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர், குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர். முன்னவருக்கு முல்லை மலரும், பின்னவருக்கு மஞ்சள் நிற மலரும் பிடித்தமானது.  முன்னவரின் திசை தெற்கு, பின்னவரின் திசையோ நவக்கிரக சன்னிதியின் வடக்கு.  இத்தனை வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லையும், இருவருக்கும் உகந்த மஞ்சள் நிற ஆடையையும், வெள்ளை கொண்டைக்கடலை மாலையையும் வைத்துக்கொண்டு  அவர்தான் இவர் இவர்தான் அவர்ன்னு வாதிடுவது சரியல்ல... தெட்சிணாமூர்த்தியை தெட்சிணாமூர்த்தியாக (சிவகுருவாக) வழிபடுங்கள்.

பொதுவா  தட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள். அவருக்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள். குருப்பெயர்ச்சியன்று தட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்கிறார்கள். இவையெல்லாம் தவறுன்ன்னு நாம என்னதான் சொன்னாலும் எதிர்கருத்திட ஒரு சிலர் இருப்பாங்கதானே1? அவங்க வாதத்தையும் பார்ப்போம். 
குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும்தானாம். ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம். அதனால் குருவுக்குச் செய்வதை இவருக்குச் செய்வதில் தவறில்லைன்னும் சொல்றாங்க. அதுவும் தவறு. குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பிரம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல ஆதாரங்கள் இருக்கு. அதனால, தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒன்றேன்னு நம்மை நாமே குழப்பிக்கக்கூடாது. நாளைக்கு(2/9/2017) குருப்பெயர்ச்சி. அதனால, பரிகார பூஜைகளை குருபகவானுக்கே செய்வோம். கூடவே தட்சிணாமூர்த்தியை வழிபடுவோம்.  ஞானம் பெறுவோம்..

நாளைக்கு குருபெயர்ச்சின்னா என்ன?! குருபெயர்ச்சி பலன், மற்றும் தட்சிணாமூர்த்தி, குருபகவான் கோவில் கொண்டுள்ள வித்தியாசமான கோவில்களை பார்க்கலாம்.. 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470752

நன்றியுடன்,
ராஜி.

15 comments:

  1. அப்படியே "நன்றி முகநூல் நண்பருக்கு xxxxxxxx" என்று போட்டு விடவும்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. எந்த நண்பர்ன்னு சொன்னா வசதியா இருக்கும்.

      Delete
  2. தெட்சிணா மூர்த்தியை எனக்கு வெகு காலமாக தெரியும் எனது மூத்த சகோதரர்தான்,

    ReplyDelete
    Replies
    1. அப்படியா! என்னை கொஞ்சம் பார்த்துக்க சொல்லுங்கண்ணே

      Delete
    2. என்ன கில்லர்ஜி! அவரு எனக்கும் தான் மூத்த அண்ணன்!! அவர் எல்லாரையும் தான் பார்த்துக்கிட்டுருக்கார் இல்லையோ ராஜி??!!!

      கீதா

      Delete
  3. இருவரும் வேறு என்று எங்கோ படித்திருக்கிறேன். //ரதத்தின் ஓரத்தில் வில்லும், மீனும் அடையாளமாக இருக்கும். தனுசு ராசிக்கும், மீன ராசிக்கும் இவர் அதிபதி என்பதை எடுத்துக் காட்டும் அடையாளம் அவை// - புதிய தகவல் - நன்றி !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  4. இவரை கும்பிட்டால் கஸ்டப்பட்டு படிக்கவேண்டாம் என்று சொல்லுங்கள்.
    அப்படியே எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன் என்றும் போட்டிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அதெப்படிங்க கஷ்டப்படாம படிக்க முடியும்?!

      Delete
  5. குருவருளால் குருவைப் பற்றிய பதிவு அருமை த.ம. வாக்குடன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  6. அழகழகான படங்களை ரசித்தேன்.

    ReplyDelete
  7. படங்களுடன் பதிவு சுவாரஸ்யம்.

    ReplyDelete
  8. தகவல்கள் செம! படங்களும் அழ்கு! குருபகவான் தட்சிணாமூர்த்தி வேற தான்...

    ReplyDelete
  9. தகவல் பகிர்வு சிறப்பு. நன்றி.

    த.ம. +1

    ReplyDelete