Tuesday, April 30, 2019

ராகி அடை - கிச்சன் கார்னர்

இப்ப இருக்குமளவுக்கு நொறுக்குத்தீனிகள் அப்ப இல்ல.  சம்பள நாள் அன்னிக்கு இனிப்பும், காரமும் அப்பாக்கள் வாங்கி வருவாங்க. எப்பவாவது வீட்டுக்கு வரும் விருந்தாளிங்க இனிப்புலயும் காரத்துலயும் தலா கால் கிலோ வாங்கி வருவாங்க. யாருக்காவது கல்யாணம் ஆனா, காராசேவு, மோட்டாசேவு, லட்டு, பாதுசா, ஜாங்கிரி,மிக்சர், அதிரசத்துல நம்ம அதிர்ஷ்டத்துக்கு ஏத்த மாதிரி கிடைக்கும். அப்பா கொடுக்கும் கைச்செலவு காசுல பொம்மை பிஸ்கட், தேன் மிட்டாய், கலர் அப்பளம், கொய்யாப்பழம், ஐஸ் இதெல்லாம் வாங்கலாம். எதாவது பண்டிகைன்னா முறுக்கு, தட்டைன்னு அம்மா செஞ்சு  கொடுப்பாங்க.  அது தவிர ஸ்கூல்ல இருந்து வந்ததும் தட்டுல சாதம் போட்டு தருவாங்க. மழை நேரத்துல எதாவது செஞ்சுத் தருவாங்க. அதுல உப்புமா, கோதுமை வடை, கேழ்வரகு அடை, கேழ்வரகு புட்டுன்னு எதாவது இருக்கும்.

நாம சின்ன வயசுல சாப்பிட்ட கேழ்வரகு அடை எப்படி செய்யுறதுன்னு இன்னிக்கு கிச்சன் கார்னர்ல பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்:
கேழ்வரகு மாவு : ஒரு டம்ப்ளர்
முருங்கைக் கீரை - ஒரு இணுக்கு
காய்ஞ்ச மிளகாய் -2
பூண்டு - பத்து பல்
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

ஒரு பாத்திரத்துல கேழ்வரகு மாவை நல்லா சளிச்சுக்கிட்டு, அதுல சுத்தம் செஞ்ச முருங்கைக்கீரையை போடுங்க.

கழுவி பொடியா நறுக்கின வெங்காயத்தைப் போடுங்க. 

பூண்டையும், மிளகாயையும் மிக்ஸில போட்டு அரைச்சு சேருங்க.

தேவையான அளவு உப்பு சேருங்க.

கொஞ்சம், கொஞ்சமா தண்ணி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு மாவு பிசைஞ்சுக்கோங்க.

ஒரு பிளாஸ்டிக் பேப்பர்ல லேசா எண்ணெய் தடவி, பிசைஞ்சு வச்சிருக்கும் மாவுல கொஞ்சம் எடுத்து வட்டமா தட்டிக்கோங்க. மாவு தண்ணியா இருக்குற மாதிரி இருந்தா காட்டன் துணில தட்டிக்கலாம். நான் துணிலதான் தட்டிக்கிட்டேன்.


அடுப்புல, தோசைக்கல் சூடானதும், வட்டமா தட்டின மாவைப் போட்டு லேசா எண்ணெய் ஊத்தி ரெண்டுப் பக்கமும் சிவக்க விட்டு எடுங்க.

கேழ்வரகு அடை ரெடி! சூடான அடைக்கு வெல்லம் சேர்த்துக்கிட்டா நல்லா இருக்கும். சிலர், கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு வெங்காயம், கீரையை லேசா வதக்கியும் சேர்ப்பாங்க. ப.மிளகாய் கூட சேர்த்துக்கலாம். மாலை நேரத்துல அதிகம் எண்ணெய் சேர்க்காத பாரம்பரிய உணவு சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு. வெல்லத்தில் இருக்கும் இரும்பு சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், முருங்கைக்கீரையில் இருக்கும் வைட்டமின் ஏ,பி,சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம், தாது உப்புக்கள் கிடைச்ச மாதிரி ஆச்சு. என் பிள்ளைகளுக்கு பிடிக்கும். வாரம் ஒருக்கா செய்வோம்.

நன்றியுடன்,
ராஜி

10 comments:

  1. பூண்டு போடாமல் அம்மா செய்து கொடுத்துச் சாப்பிட்டிருக்கேன். இங்கே அதிகம் கேழ்வரகு தோசை தான். உளுந்து அரைத்துப் போட்டோ அல்லது கோதுமை மாவு+கேழவரகு மாவு சேர்த்தோ பண்ணுவேன். கேழ்வரகுனதும் பழைய நினைவுகள்! அதான் ஓடோடி வந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அதென்னமோ ராகி தோசை எனக்கு பிடிக்கலை.

      Delete
  2. ராகி அடை செய்ததில்லை. நேற்றுகூட சாதா அடை. அடை இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செய்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. இங்கிட்டு வாரம் ஒருமுறை ராகி அடை செய்வோம்... உடலுக்கு நல்லதுன்னு...

      Delete
  3. கேழ்வரகு அடை நல்லா இருக்கு. ஆனா வட்டமா வரலையே.... ஏதேனும் தேச வரைபடத்தைப் பார்த்துக்கிட்டே வார்த்தீங்களா?

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும் வட்டமா செஞ்சால் வீட்டில் யாருக்கும் பிடிக்காதுன்னு சொல்லிதான் சமாளிக்கனும்.

      Delete