Tuesday, September 05, 2017

நாம் அனைவரும் ஆசிரியர்களே!

ஆசிரியர்ன்னா  புனிதம்ன்னு அர்த்தம். வருங்கால சமுதாயத்தை சிறப்பானதாக உருவாக்குவது ஆசிரியர்கள்தான்.  அதனாலதான் ஆசிரியர்களை ஆண்டவனுக்கு சமமா வச்சிருக்கோம். .  ஒருசில இழி ஜென்மங்களால் அந்த ஆசிரிர் தொழிலுக்கே இழுக்குன்னாலும் குழந்தையின்மீது பெற்றோர்கள் காட்டும் அக்கறையைப்போலவே, தானும்,    அக்கறை காட்டும் ஆசிரியர்கள் இன்னிக்கும் நம்மோடு இருக்காங்க. பள்ளிக்கூடத்து ஆசிரியர்கள் மட்டுமில்லாம நம்மோடவே இருக்கவுங்க, போனவங்களாலதான் வாழ்க்கைன்னா என்னன்னு நாம பாடத்தை கத்துக்குறோம்.  என் வாழ்க்கைல வந்த சில ஆசிரியர்களை பத்தி இன்னிக்கு பார்ப்போம். 

”ராமசாமி ஐயா”
தத்தக்க பித்தக்கன்னு நடக்கும் வயசில்,  பக்கத்து வீட்டு அண்ணாவோடு மஞ்சப்பையில், கைக்கு கிடைத்த குமுதம், கல்யாண பத்திரிகைகளை போட்டுக்கிட்டு போன என்னை ச்ச்சீ போன்னு விரட்டி அடிக்காம, வா தாயி!!ன்னு வகுப்புக்குள்ள கூட்டிக்கிட்டு போனவர்.


 “அப்பா”
பள்ளியில் சேர்த்ததும் தன் கடமை முடிந்தது என எண்ணாமல், பக்கத்தில் அமர்ந்து எழுத்துக்களையும், எண்களையும் கற்று தந்ததோடு விளையாட்டுக்கு கூட பொய் சொல்ல கூடாது, வழ வழன்னு குழைய கூடாது,  (மன்னிச்சு அப்பா! உன் பேச்சை மீறிட்டேன், நான் பிளாக்கராகிட்டேன்!!)

அம்மா”
எல்லாருக்குமே அப்பா தைரியத்தையும், அம்மா அன்பையும் சொல்லி தருவாங்க. ஆனா, வித்தியாசமா பெண்ணாய் பொறந்ததால அழனும்ன்னு அவசியமில்லை. தைரியமா இரு. எதிரியே வீடு தேடி வந்தாலும் அவமானப்படுத்தக்கூடாது,யாரையும் பசியோடு இருக்க விடக்கூடாது ன்னு கற்று தந்தவள்.  வைராக்கியம், ரோஷத்துக்கு சொந்தக்காரி. ஒரு ஆணால் வரும் தைரியத்தை விட, ஒரு பெண்ணால் வரும் தைரியத்துக்கு மதிப்பதிகம்ன்னு அடிக்கடி உணர வைப்பவள்.. 

”கமலா டீச்சர்”
அன்னையும், பிதாவும் மட்டுமில்ல நானும் கத்து தருவேன்ன்னு ரெண்டும் ரெண்டும் நாலுன்னு கைப்பிடிச்சு கத்து தந்தவள்.

மூர்த்தி சார்”
உயிர் மெய் எழுத்துக்கள் மட்டுமில்லை, தேமாவும், புளிமாவும் சேர்ந்ததுதான் தமிழ்ன்னு சொல்லி தந்து, எதாவது தப்பா சொன்னால், காதை திருகி அப்புறம் பச்சை பச்சையாய் திட்டிப்புடுவேன்னு பயமுறித்தி வெண்டைக்காய், மாங்காய், சுண்டைக்கா, முருங்கைக்காய், பீர்க்கங்காய்ன்னு சொல்லி சிரிக்க வைத்து, தப்பு தப்பா எழுதிய என்னைக்கூட தமிழில் மாணவர் மன்றத்தேர்வில் முதல் வகுப்பில் தேற வைத்தவர்.

கணக்கு நாகரத்தினம் சார்”:
ஜியாமெண்ட்ரி பாக்சில் இருக்கும் காம்பஸ் வம்பு சண்டைக்கு வரும் கதிரேசனை குத்துறதுக்கு மட்டுமே யூஸ்ன்னு நினச்சுக்கிட்டு இருந்த என்னை, மகளாய் நினைத்து கிஸான் ஜாம் கொடுத்து, ஜியாமெண்ட்ரி வரைய கத்து கொடுத்து 81 மார்க் எடுக்க வைத்தவர்.


“வடிவேலு சார்”
9 வகுப்பில் அடி எடுத்து வைத்த முதல் நாள்..., கிளாசுக்குள் நுழைந்தவர், எங்கள் பேரை வரிசையா சொல்லிட்டு வர சொன்னார். என் பேரை சொல்லிட்டு அமைதியா உக்காந்திருந்தா பிரச்சனையே வந்திருக்காது.  கடைசி பெஞ்ச் அரட்டை கேர்ள்ன்னு பேரெடுத்ததை நிரூபிக்கனுமேன்னு எங்க பேரையே கேட்டிட்டு இருக்கீங்களே! உங்க பேர் என்னன்னு கேட்டதுக்கு..,இங்க வா! இதோ என் பாக்கட்டுல இருக்குற பேட்ச்ல என் பேர் இருக்கு படின்னார். vadiveluன்னு இருந்துச்சு, என் நாக்குல இருந்த சனி பகவான் கதகளி ஆட வாடிவாலுன்னு படிச்சு தொலைச்சேன், அன்னில இருந்து ரொம்ப ரொம்ப டிரை பண்ணி ஆங்கிலத்தை எழுத்து கூட்டி படிக்க வச்ச புண்ணியவான். அதுக்கு அவர் எடுத்துக்கிட்ட காலம் மூணு வருசம்.

“மீனாட்சி டீச்சர்”
தமிழ் -தகராறு, ஆங்கிலம்- ஆகாது, புவியியல் -புரியாது, வரலாறு- வராது, கணக்கு - கசக்கும்ன்னு ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு புது அகராதி போட்டு வச்சிருந்த என்னை நம்பி!!  அப்பா 11 வகுப்பில் ஃபர்ஸ்ட் க்ரூப்பில் கொண்டு போய் போட அங்க விலங்கியல், இயற்பியல், வேதியியல்ன்னு விதம், விதமா, கலர் கலரா பூதங்கள் வந்து மிரட்டுச்சு. அதுலயும் விலங்கியல் பாடம் இருக்கே! ஐயோ! நைட் கனவுல கரப்பான் மூச்சி மல்லாந்து படுத்து வயித்தை காட்டும், சாப்பிட போனால் தவளை வந்து சாப்பாட்டு தட்டுல டான்ஸ் ஆடும். அட, போனா போகுது இதெல்லாம் மறக்கலாம்ன்னு டிவி பொட்டி முன்னாடி உக்காந்தா மண்புழு நெளியும், பிராக்டிக்கல் எக்சாம் காலை வரை கூட ரெக்கார்ட் முடிக்காம தில்லா நின்ன என்னை, விட்டா மறுபடியும் இதே கிளாசுல உக்காந்து நம்ம உயிரை வாங்குவான்னு முழு மார்க் போட்டு 12வது கிளாசோடு மூட்டை முடிச்சு கட்டி அனுப்பியவர்.

ரவி சார்:
படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு எம்ப்ராய்டரி, பொம்மைகள், வொயர் கூட பின்ன கத்து கொடுத்தவர்,ஒரே வாரிசானதால் பொத்தி பொத்தி வளர்த்ததால், வேகமா நடக்கவே பயப்படும் என்னை விளையாட்டுக்களில் கலந்துக்க வைத்தவர்.

நட்புகள்:
பள்ளிக்கூடத்துல பாடம் மட்டுமல்ல, குறும்புத்தனம், சண்டை, அழுகை, சமாதானம், பகிர்தலும் கூட கத்துக்கலாம்ன்னு கத்துக்கொடுத்த மாலதி, சுஜாதா, செல்வி, தெய்வநாயகி, நசீமா, ஜெயலட்சுமி, உமா, கமலகண்ணன், வில்வநாதன், அருணகிரி, கார்த்தி....,

லவ்ஸ்:
பதின்ம வயதில் பாடமும், நட்பும், குறும்புத்தனமும் மட்டுமல்ல, காதலும் கூட வரும்ன்னு சொல்லி தந்த செல்ல இம்சை. 

வூட்டுக்காரர்:
ஏழுக்கழுதை வயசாச்சு! இன்னும் பொறுப்பில்லாம இருக்காளேன்னு பொறுப்பா வாழ்க்கை பாடத்தை கத்து தரும் தியாகி!!

மூத்த பெண்: 
தாய்மையை கற்று தந்தவள், கூடவே, இலவச இணைப்பாக கம்ப்யூட்டரையும்...,

இளைய மகள்: 
அச்சச்சோ! ரெண்டாவதும் பெண்ணாகிடுச்சே!ன்னு ஒதுக்கிய சொந்தங்களையும், அதைலாம் எதிர்த்து போராட வேண்டி இருக்கும்ன்னு உலகத்தை பற்றி கற்று கொடுக்க ஆரம்பித்தவள்.

கடைக்குட்டி:
தொலைத்த என் குழந்தை தனத்தையும், குறும்புத் தனத்தையும் மீண்டும் நினைவு படுத்திய என் ஆசான்.

பதிவர்கள்:
எல்லாவற்றையும் கற்று தர ஆளிருந்த எனக்கு சகோதர பாசத்தை காட்ட ஆளில்லாமல் தவித்த காலங்களில் சகோதர பாசத்தை அறிய வைத்தவர்கள்.

முகம் அறியாத ஆசான்கள்:
பிள்ளை பேறு முடிந்த பதினைந்தாவது நாளே ரெண்டாவது மாடிக்கு கற்களை சுமந்து உழைப்பை கற்று தந்த கட்டிட தொழிலாளி.., 

அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் நேரத்திலும் கவனக்குறைவாய் தந்த அதிகமான நூறு ரூபாயை திருப்பி தந்த பால்கார ஐயா! 

கையில் காசில்லாம போய் ஒரு முழம் பூ கேட்டு பர்சை வீட்டுலயே வச்சுட்டு வந்ததை உணர்ந்து, கையில் வாங்கிய பூவை, வேணாம் பாட்டின்னு திருப்பி தர, வெள்ளிக்கிழமை அதுமா பூவை திருப்பி தராதம்மா, அப்பாலிக்கா வரும்போது காசு கொடுன்னு நம்பி கடன் கொடுத்ததள்ளாத வயதிலும் பூ விற்கும் பாட்டி.

கடையை காலி பண்ணிட்டு, கடைசியாய் இருந்த நாலு இட்டிலியை தட்டில் வைத்து சாப்பிட, அமரும்போது அக்கா வீட்டுக்கு விருந்தாளி ஒருத்தர் வந்துட்டாங்க. அவங்க பையன் பசிக்கு அழுகுறான். வீட்டில் மாவு எதுமில்ல. டிஃபன் இருக்கான்னு கேக்க, 11 மணி ஆகியும், சாப்பிடாத போதும், எச்சில் விழுங்கியப் படியே தன் சாப்பாட்டை தரும் ஹோட்டல் கார அக்கா!!

இப்படி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், வாழ்க்கை பாடத்தை கற்று தரும் அனைத்து விதமான ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துகள்.



அ, ஆ, இ, ஈ..... 1,2,3,.... A,B,C,D..... கத்துக்கொடுக்குறவங்க மட்டும் ஆசிரியர்கள் இல்ல. நாம சந்திக்கும் அத்தனை பேரும் நமக்கு ஆசிரியர்கள்தான். அன்பு, கோவம், பழி, துரோகம், பாசம், இரக்கம், பக்தின்னு அவரவருக்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு விசயத்தை கத்துக்கொடுத்துட்டுதான் போறாங்க.  அதனால, நமக்கே தெரியாம நமக்கு வாழ்க்கை பாடத்தை கத்து தரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்தின வாழ்த்துகள்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1471043

நன்றியுடன்,
ராஜி.

12 comments:

  1. ஆசிரியர் தினத்தன்று அருமையான பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete
  2. என்னுடைய வலைத்தளத்திற்கு வருகை புரியவில்லையே காரணம் ஏதுமுள்ளதோ ? அழகான வண்ணப்படங்கள், இதையே ஒரு கதையாக்கி இருக்கலாம், அவ்வளவு யதார்த்தம் பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. அண்ணன் மகன் திருமணத்துக்காக அருப்புக்கோட்டைக்கு போயிட்டு அப்படியே ஸ்மால் டூர்... அடுத்து இன்னொரு அண்ணன் மகளின் திருமணத்துக்காக திருத்தணிக்கு போயிட்டு வந்தது.. அசதி, பண்டிகைன்னு கொஞ்சம் பிசி, அதான் இணையத்துக்கு வருவது குறைச்சல். இனி தொடர்ந்து வருவேன்.

      Delete
  3. சிறப்பான பகிர்வு. ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஏதாவது பாடம் கற்பிக்கிறார்கள். ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் ஒவ்வொரு ஆசிரியருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. எல்லா பாடத்தையும் ஜீரணிக்கும் நம்மால் சில நேரம் அன்பானவங்க கத்துக்கொடுக்கும் பாடத்தைதான் ஜீரணிக்க முடியாம திணருறோம்

      Delete
  4. ஒவ்வொருவரும் ஆசிரியர்கள்தான்
    ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிண்ணே. ஆனா, நீங்க கண்ணுக்கு தெரிந்த ஆசிரியர்... அதனால உங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்

      Delete
  5. கற்றுக்கொடுத்த, கற்றுக்கொடுக்கும் அத்தனை ஆசான்களையும் குறிப்பிட்டிருப்பது நன்று.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  6. அன்னைக்கே வாசிச்சுட்டோம்...கருத்து போட முடியலை...நமக்கு வாழ்க்கையில் எத்தனையோ பேர் கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்காங்க...எனவே வாழ்க்கை முழுவதும் நாம் மாணக்கர்கள், ஆசிரியர்களும் கூட...அத்தனை பேருக்கும் வாழ்த்துகளைச் சொல்லுவோம்..

    ReplyDelete
  7. நாம் யாரிடம் கற்றுகொள்கிறோமோ அவரே நாம் ஆசிரியர் என்பதின் அர்த்தத்தை விளக்கும் பதிவு அருமை.

    கேட்டது கேக்காதது என அனைத்தையும் கொடுத்து தெளியவைத்து தெளியவைத்து நம்மை புரட்டி எடுத்து மறந்துவிட முடியாதபடி கற்றுத்தரும் ஒரு ஆசான் யார் அவர்?


    //பதிவர்கள்:
    எல்லாவற்றையும் கற்று தர ஆளிருந்த எனக்கு சகோதர பாசத்தை காட்ட ஆளில்லாமல் தவித்த காலங்களில் சகோதர பாசத்தை அறிய வைத்தவர்கள்.//

    நெகிழவைத்து விட்டீர்கள்.

    ReplyDelete