Wednesday, August 22, 2018

வந்தாரை வாழ வைக்கும் சென்னை - மௌன சாட்சிகள்


நாகர்கோவில்ல நாகர்கோவில்காரங்க இருப்பாங்க. மதுரைல மதுரைக்காரய்ங்க இருப்பாங்க.. தூத்துக்குடில தூத்திக்குடிக்காரங்க மட்டும்தான் இருப்பாங்க. ஆனா, சென்னைல எல்லா ஊர்க்காரங்களும் இருப்பாங்க. சென்னைக்கு பல முகம், பல மொழி, பல கலாச்சாரம்ன்னு ’எங்கேயும் எப்போதும்’ படத்து டயலாக். இந்த டயலாக் உண்மைதான். பல ஊர்க்காரய்ங்க மட்டுமில்ல பல நாட்டுக்காரங்களும் சென்னைல இருக்காய்ங்க.


குடிசைக்கூட இல்லாம பிளாட்பாரத்துல தூங்கும் மக்கள் ஒருபக்கம்.... அரண்மனை போல வீடிருந்தும் பொழுது போகாம அதே பிளாட்ஃபார்ம் பக்கம் உலாவும் மக்கள் மறுபக்கம்.  ஹைடெக் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒரு பக்கம்..., கால்வாய், குப்பை மேட்டில் பிளாஸ்டிக் கவர்ல செஞ்ச வீடுகள் மறுபக்கம். சர்வதேச உணவுகள் விற்கும் உயர்தர ஹோட்டல்கள் ஒருபுறம், பாரம்பரிய உணவான களி, கூழை விற்கும் தள்ளுவண்டி கடை மறுபக்கம். சாமி, பூதம் இல்லன்னு சொல்லி விஞ்ஞான போக்கில் போகும் மக்கள் ஒருபக்கம், அலகு குத்துறது, குறி பார்க்குறது, சாமியார் ஆசிரமம்ன்னு மூடநம்பிக்கைகள் மறுபக்கம். லிவிங்க் டூ கெதர்ல வாழும் வாழ்க்கை ஒருபக்கம்... கூட்டுகுடும்பம் மறுபக்கம்... ஹோலி பண்டிகை ஒரு பக்கம்... ஓணம் பண்டிகை மறுபக்கம்... நெதர்லாந்துக்காரன் ஒரு பக்கம்ன்னா... ஆப்பிரிக்காக்காரி இன்னொரு பக்கம்... சர்வதேச விமான நிலையம், சர்ச், கோவில், தியேட்டர், மருத்துவமனைகள், கல்வி, கலை, தொழிற்சாலைகள்ன்னு எல்லா  துறையினருக்கும் சென்னைதான் மையப்புள்ளி...
தமிழகத்தின் தலைநகராக இருக்கும் சென்னை, தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்திய அரசியல், மருத்துவம், சுற்றுலா பொருளாதாரம்ன்னு பலவிதத்தில் முக்கிய பங்கு வகிக்குது.   ஆங்கிலேயர்கள் காலூன்ற  அடித்தளமிட்டது சென்னைதான். சோழ, பல்லவ, விஜய நகர பேரரசுகளுக்கும் முக்கிய இடமா சென்னை  இருந்திருக்கு.  இத்தனை சிறப்பு வாய்ந்த சென்னை இன்னிக்கு ஆரம்பம் எது முடிவெதுன்னு தெரியாம இருந்தாலும் ஒருகாலத்தில் ஒரு சிறு கிராமமாதான் இருந்திருக்கு. இன்னிக்கு கால்வைக்க இடமில்லாம ஜன நடமாட்டம் மிக்கதா இருக்கும் சென்னை சொற்ப மக்கள் வாழ்ந்த இடமாவும் இருந்திருக்கு.

தங்கள் வணிகப்பொருட்களை சேமிச்சு வைக்கும்  கிடங்கு அமைக்க ஒரு இடம் ஆங்கிலேயருக்கு தேவைப்பட  அப்படி வாங்கிப்போட்ட இடம்தான் இன்றைய சென்னை.  இந்த இடத்தை ஆங்கிலேயர் வாங்க கூவம் ஆறும், அடையாறும்தான் காரணம்.  இன்னிக்கு மூக்கை சுளிக்க வைக்கும் இடமா இருந்தாலும் ஒருகாலத்தில் தெளிவான நீரோட்டத்தோடு கூடிய அழகிய நதியா இருந்துச்சு. அந்த அழகில் மயங்கியும், சரக்குகளை கொண்டு செல்ல படகு போக்குவரத்துக்கு வசதியாகவும் இருக்கும்ன்னுதான் இந்த இடத்தை ஆங்கிலேயர் வாங்கினாங்க.


1639 ம் ஆண்டு ஆக 22ம் நாள் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே மற்றும் ஆண்ட்ரூகோதன் ஆகியோர் இணைந்து ஐய்யப்பன், வேங்கடப்பன்ன்றவங்கக்கிட்ட இப்பத்திய செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள பகுதியை வாங்கினாங்க. அந்த நாளைதான் சென்னைக்கு பிறந்த நாளாய் கொண்டாடுறாங்க.   செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டிய பிறகுதான் சென்னை பிரம்மாண்டமாய் வளர ஆரம்பிச்சது. அப்படி வளர்ந்த நகரம் திருவல்லிக்கேனி, மயிலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் மாதிரியான நூற்றாண்டு புகழ்வாய்ந்த ஊர்களையும் இணைச்சுக்கிட்டது.  வடக்கே இருந்த பகுதிகள் மதராசப்பட்டிணமாகவும், தெற்கே இருந்த பகுதிகள்  தங்களோட அப்பா பேரான சென்னப்பநாயக்கன் பேருல இருக்கனும்ன்னு கேட்டதால சென்னைபட்டணம்ன்னு பேர் உண்டாச்சு.  1688ல இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால்  நகராட்சியாய் அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் நகராட்சி அப்போதைய சென்னை பட்டனம். அதேப்போல, இந்தியாவின் முதல் மாநகராட்சி இப்போதைய சென்னை. லண்டன் மாநகராட்சிக்கு அடுத்து இப்போதைய சென்னை அந்த இடத்தை தட்டிக்கிட்டு போச்சு. 
பாங்க் ஆஃப் மெட்ராஸ் 1935

சென்னை பட்டினம்  பின்னாளில் ஆங்கிலேயர்களால் மதராசப்பட்டினமானது. சென்னை மட்டுமல்ல அப்போதைய மதராசப்பட்டினத்தில் தமிழ்நாட்டோடு இன்னும் பல மாநிலத்தின் இடங்கள் சேர்ந்திருந்தது. 1969ல மொழிவாரியாக எல்லை பிரிக்கப்பட்டு தமிழ்நாடு தனியாய் பிரிந்து வந்தது.   இந்திய சுதந்திரத்திற்குபின் சென்னை மாகாணமானது. அதன்பின் 1956ல    மதராஸ்ன்னு பேர் வைக்கப்பட்டு இப்ப சென்னையா விஸ்வரூபமெடுத்து நிக்குது.
1880 காலத்தைய பாரீஸ் 

சென்னைன்னா நமக்கு நினைவுக்கு வர்றதுல மெரினா பீச்சும் ஒன்னு. உலகத்துல நீளமான பீச்சுல இதும் ஒண்ணுன்னாலும் உலகின் நீளமான பீச்சுல மெரினாக்கு இரண்டாவது இடம்.  கிட்டத்தட்ட 13கிமீ தூரம் நீண்டுக்கிட்டிருக்கும். பேரும் புகழோடும் இருக்கும் இந்த மெரினா பீச் அன்னிக்கு களிமண் பகுதியா இருந்துச்சுன்னா ஆச்சர்யமா இருக்கும். ஆனா பாருங்க. அதான் உண்மை. 1880ல ஆங்கிலேய கவர்னர் மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின் ஸ்டோன் கிராண்ட் டப்தான் முதன்முதலில் அழகாக வடிவமைத்தார் `1881 ம் ஆண்டு சென்னை துறைமுகம் உருவாச்சு.  1884ல மெரினான்னு பேர் வச்சாங்க.   மெரினா பீச் லைட் அவுஸ் பத்தி ஒரு பதிவு ஏற்கனவே போட்டிருக்கு. கொஞ்சம் சிரமம் பார்க்காம போய்ட்டு வந்திருங்க.  
கொத்தவால்சாவடி சந்தை 1939
அடையாறுங்குற ஆறு கடலில் கலக்கும் பகுதியின் வடக்கு பகுதியும், சாந்தோம் சர்ச்சுக்கும் இடைப்பட்ட பகுதியே சாந்தோம் பீச்.  சாந்தோம் சர்ச் என்னும் புனித தோமையார் தேவாலயம் இங்கதான் இருக்கு. இந்த இடம் மீனவமக்கள் நிறைந்த பகுதியாகும். இங்க மீன் விற்பனை களைக்கட்டும்.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான LIC கட்டிடம்


வர்த்தகம் பெருக பெருக போக்குவரத்தை கட்டமைப்பதில் ஆங்கிலேயர்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.  1856இல் முதல் ரயில் நிலையம் ராயப்பூரில் உருவானது.  அதன்பின்னர் பார்க் டவுன்(பூங்கா நகர்), செண்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் கட்டமைக்கப்பட்டது
 மாட்டு வண்டியும், குதிரைவண்டியுமாய் ஓடிக்கொண்டிருந்த  சென்னை வீதிகளில்  1895 மே 7ல்தான் ட்ராம் வண்டி ஓட ஆரம்பிச்சது. மணிக்கு 7கிமீ வேகத்துல சென்ற இந்த வண்டி, தங்கச்சாலை(மின்ட்) , கடற்கரை சாலை, மவுண்ட் ரோடு (அண்ணா சாலை), பாரீஸ் கார்னர் ஆகிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ட்ராம் வண்டிகள் ஓடியது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் சென்னை வீதிகளில் ட்ராம்தான் முக்கிய போக்குவரத்து சாதனம். இன்னிக்கு தினத்தந்தி ஆஃபீஸ் இருக்கும் இடம்தான் ட்ராம் வண்டிகளின் பணிமனை இருந்ததாம்.
அன்றைய சென்னையில் துறைமுகம் இல்லாத காரணத்தில், வர்த்தக பொருட்களை   சுமந்து வரும் கப்பல்களை நடுக்கடலில் நிறுத்தி, சரக்குகளை இறக்கி, படகுகள்மூலம் கொஞ்சம் கொஞ்சமா கொண்டு வந்தனர். இதனால், பொருள், நேரம், உயிர்சேதம் அடிக்கடி நிகழ்ந்தது. அதனால் சென்னையில் துறைமுகம் அமைக்க வேண்டி சூழல் உண்டானது.  

இப்ப துறைமுகம் இருக்கும் அதே இடத்தில்தான் கிழக்கிந்திய கம்பெனியால் 1881ல துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டு கப்பல் போக்குவரத்து தொடங்கியது.  ஆனா, போக்குவரத்து தொடங்கிய ரெண்டு மாசத்துலயே அந்த துறைமுகம் உருக்குலைந்து போனது. ஆனாலும் மனசை தளரவிடாம  வேற மாதிரி துறைமுகம் கட்டி முடிச்சு 1896ல பயன்பாட்டுக்கு வந்தது. அன்றைக்கு தொடங்கிய கப்பல் போக்குவரத்து இன்றும் தொடர்ந்துக்கிட்டுதான் இருக்கு.


பெசண்ட் நகர்  பீச்ன்னு சொல்லப்படும் எட்வர்ட் எலியட் பீச்தான் மெரினாவின் கடைசி முனை.  காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த எட்வர்ட் எலியட்ன்ற  ஆங்கில அதிகாரியின் நினைவாக இந்த பீச் அழைக்கப்படுது. மெரினா பீச்சுலயே இந்த பீச் ரொம்ப சுத்தமா இருக்குமாம்!  நீரில் மூழ்க ஒருவரை காப்பாற்றி தன் உயிரை இழந்த  டச்சு மாலுமியான கார்ல் இசுபிட்   நினைவாக  இங்க ஒரு நினைவு சின்னம் இருக்கு. இங்கதான் அஷ்டலட்சுமி கோவில், ஆரோக்கியமாதா கோவில், அறுபடைவீடு கோவிலும் இருக்கு.  அஷ்டலட்சுமி கோவில் நம்ம பிளாக்குல வந்திருக்கு. ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்திருங்க. 

இன்னிக்கு சென்னைல புதுசு புதுசா கட்டிங்கள் பல வந்தாலும் 200, 300 வருட கட்டிடங்களும் சென்னைல இன்னும் இருக்கு. அதுல ஒரு சிலது பார்ப்போம்..  1892 ல ஹென்றி இர்வின் வழிகாட்டுதலின்படி   இண்போ- சர்ச்சியனிக் கட்டடக்கலையின்படி கட்டப்பட்டது இன்றைய உயர்நீதிமன்ற வளாகம். இது உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றம்ன்ற பெருமை கொண்டது இக்கட்டிடம்.  மிக உயரமான கூம்புகளால் நிற்கும் அழகிய கட்டிடம் இது.  முழுக்க முழுக்க  சிவப்பு நிற கற்களால் கட்டப்பட்டது.  ஆரம்ப காலங்களில் இந்த கட்டிடம் கலங்கரை விளக்கமாவும் இருந்திருக்கு.  சென்னைமீது எம்டன் கப்பல் வீசியதில் அந்த லைட் அவுஸ்  சேதமாகிட்டதால இன்றைய லைட் அவுஸ் கட்டப்பட்டது. இதற்கான நினைவுக்கல் ஒன்னு வச்சிருந்தாங்க. இப்ப இருக்கா?! இல்லியான்னு தெரில.
தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் இடமான தலைமைச்செயலகம்  இருக்கும் கட்டிடத்தோட பேரு புனித ஜார்ஜ் கோட்டை. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கட்டிய முதல் கட்டிடம் இதுதான். 1644  ஏப்ரல் 23ம் நாளில்தான் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.  சுத்திலும் அகழி சூழ்ந்த இக்கட்டிடத்தின் சுவர்களும், கதவுகளும் இதன் பழமையை பறைச்சாற்றுது. காலமாற்றத்தில் எத்தனை மாற்றம் இக்கட்டிடத்தில் செய்தாலும்  பழமை மாறாம இருப்பது ஆச்சர்யமே!
எனக்கு சென்னைன்னா ரொம்ப பிடிக்கும். அங்க படிக்கனும்ன்னு நினைச்சேன்.  அங்கதான் வாக்கப்படனும்ன்னு  நினைச்சேன்..  அங்கதான் செட்டில் ஆகனும்ன்னு நினைச்சேன். ஆனா எதும் நடக்கல. பார்க்கலாம் எதிர்காலத்துலயாவது செட்டில் ஆகுறேனான்னு. சென்னைமேல் இருந்த மோகமே சென்னை பத்தி எழுதிய பதிவு இன்னிக்கு உதவுது.  சென்னை தின கொண்டாட்டம் ஆக 20 முதல் 27 வரை கொண்டாடப்படுது. அதுக்காக தமிழக அரசு சார்பா பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், மாரத்தான் ஓட்டம், விளையாட்டு போட்டி, பேச்சு போட்டின்னு நிறைய போட்டிகள் களைக்கட்டுது.

சென்னையின் முகத்தை காட்டும் மெரினா படப்பாடல்... ஹாப்பி பொறந்தே டே சென்னை......................






அண்ணா சமாதி

தி மெயில் கட்டிடம்...

ஹாப்பி பொறந்த டே டூ சென்னை

நன்றியுடன்,
ராஜி

11 comments:

  1. சென்னைக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  2. சென்னை டே - வாழ்த்துகள்.

    தகவல் பகிர்வு சிறப்பு.

    ReplyDelete
  3. சென்னையைப் பற்றி மறுபடியும் ஒருமுறை படித்தேன்.

    சென்னைக்கு இப்போது சொல்லப்படும் வயதை விட அதிகம் என்று சமீபத்தில் - மிக சமீபத்தில் - எங்கேயோ படித்தேனே.... எங்கே?

    வாழ்க சென்னை.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வது சரிதான் சகோ. சென்னைக்கு, 379 ஆண்டில்லை. அதைவிட வயது அதிகம்தான். 379 என்னும் கணக்கு, சென்னப்பநாயக்கர்கிட்ட இருந்து, மணல் திட்டாய் இருந்த இடத்தை வாங்கிய நாளை கணக்கிட்டுதான் இந்த கொண்டாட்டம்லாம். அதுக்கு முன்னாடியும் ஆட்கள் அங்க குடியிருந்தனர்.

      Delete
  4. சென்னையைப் பற்றிய தகவல்கள் அருமை. மெரினா பீச் 13கிலோ மீட்டர் நீளம் அந்தக் காலம் போல. இப்பொழுது ஏழாக சுருங்கிவிட்டது. காரணம் நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

    ReplyDelete
    Replies
    1. புரிஞ்சிடுச்சு சகோ

      Delete
  5. தலைநகரை ஜம்மு ,ஶ்ரீநகர் போல (( சென்னை , திருச்சி ))) மாற்றாத வரை கூட்ட நெரிசலை கட்டு படுத்த முடியாது

    ReplyDelete
    Replies
    1. திருச்சி தாங்குமா?!

      நாங்க சேலம், கோவைக்கு மாத்தலாம்ன்னு இருக்கோம். அதனால்தான் 8 வழிச்சாலைக்கு ஏற்பாடு பண்றோம். நீங்கதான் விடமாட்டேங்குறீங்க.

      Delete
  6. எனக்கு சென்னை என்றால் நினைவுக்கு வருவது நான் ஆரம்பகாலத்தில் இருந்த மாதிரிதான் சென்னை ட்ராமில் பயணம்செய்திருக்கிறேன் சேரிகளும் சாலைகளும் அருகருகே இருப்பது பார்த்திருக்கிறேன் காலையில் தயிர் விற்கும் பெண்மணி கூவும் கூஊஊ என்னும் குரல்தான்பெரும்பாலும் சென்னையை நடந்தே அளந்திருக்கு மெனக்கு இப்போதைய சென்னை மலைப்பைத் தருகிறதுஇரண்டமுலகப்போர் சமயத்தில் சில பதுங்கு குழிகளில் பதுங்கியும் இருப்பேனோ நினைவு மங்கலாக இருக்கிறது

    ReplyDelete