Tuesday, September 25, 2018

கேரட் சாதம் - கிச்சன் கார்னர்


நம்மூர்ல கேரட் ஆரஞ்சு நிறத்துல கிடைச்சாலும்,  ஊதா, கருப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள்லயும் விளையுது. முதன்முதலில் கண்டுப்பிடித்த மலை கேரட் எனப்படும் காட்டு கேரட், கருப்பு நிறத்திலும், கசப்பு சுவையுடன் இருந்ததாம். நாமலாம் நினைச்சிட்டு இருக்க மாதிரி கேரட் இனிப்பு சுவையுடன் இருக்காது. அது தான்  விளைகின்ற மண்ணின் தன்மைக்கு ஏற்ப சுவையும் மாறுபடும். கி.மு. 3,000 ஆண்டிலேயே இந்த கேரட், மனிதனின் பயன்பாட்டுக்கு வந்துட்டுதுங்குறதை  எகிப்து நாட்டில் உள்ள பழமையான கோயில் ஓவியங்கள் நமக்கு சொல்லுது. கேரட்டின் வளர்ச்சி இப்ப இருக்கும் பீட்சா, பர்கர் மாதிரி அசுரவளர்ச்சி இல்லை. மெல்ல மெல்லதான் உலகம் முழுக்க பரவியது. 



கி.முக்கு முன்பே கேரட் புழக்கத்திலிருந்தாலும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் துருக்கியை வந்தடைந்தது. அங்கிருந்து கி.பி. 10-ம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான் பகுதியில் முளை விட்ட கேரட், அதே நூற்றாண்டில் அரேபிய வியாபாரிகள் மூலம் இந்தியாவிலும் வேரூன்றியது. கேரட்டை முழுக்க முழுக்க ஒரு விவசாய பயிராக நம்மவர்கள் பார்த்தது கி.பி.13-ம் நூற்றாண்டில்தான். அனைத்து பகுதி மக்களின் பயன்பாட்டில்  அதிகமாய் பயன்படுத்தும் காய்கறிகளில் கேரட்டுக்கு இரண்டாமிடம். கேரட்டை நாம காய்கறிகளில் சேர்த்துக்கிட்டாலும், கேரட்  பழ வகையை சேர்ந்தது.
ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியாவுக்கு சொந்தமான இந்த கேரட்டுக்குன்னு அமெரிக்காவில் ரசிகர் மன்றங்கள் இருக்குதாம்.  அமெரிக்காவில் 'கேரட் ராணி' என அழைக்கப்படும் ரோமனான்ற பெண்மணி, 600 வகை கேரட்டுகளை பதப்படுத்தி நிரந்தரமான அருங்காட்சியகம் அமைச்சிருக்காங்க. அலாஸ்காவைச் சேர்ந்த விவசாயி ஜான் ஆர். இவன்ஸ் இதுவரை அதிகபட்சமாக 9 கிலோ எடை கொண்ட கேரட்டை உற்பத்தி செய்து உலகளவில் சாதனை புரிஞ்சிருக்கிறார்.
உலக மக்களால் அதிகமாக கொண்டாடப்படும் கேரட்டில் மருத்துவ குணங்களும் அதிகம். இதில் வைட்டமின் ஏ அதிகமா இருக்குறதால பார்வை கோளாறு, நுரையீரல் புற்றுநோய்,  இதய நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. கேரட்டிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய். சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகளுக்கான மருந்துகளின் மூலப்பொருளாக பயன்படுது. தினமும் காலையில் கேரட் ஜூசை குடித்து வந்தால் வயிற்றிலிருக்கும் பூச்சிகள் வெளியேறும். தேவையற்ற கொழுப்பை நீக்கும். கேரட்டை பச்சையாய் மென்று சாப்பிட்டால் பல் உறுதிப்படும். ஈறுகள் பலப்படும். ரத்தக்கசிவு நிக்கும். வாய் துர்நாற்றம் நீங்கும். கேரட்டை மேல்பூச்சாக பூசும்போது சிராய்ப்பு, அலர்ஜி மாதிரியான சரும நோய்கள் நீங்கும். வெயிலினால் நிறம் மங்கும் சருமத்துக்கு நல்லதொரு தீர்வு. சீனாவில் பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து நாய்க்கடி மருந்தாகவும் கேரட் பயன்படுது. அதனால்தானோ என்னவோ இன்று உலகளவில் கேரட் உற்பத்தியில் சீனாவே முதலிடத்தில் இருக்கு!


ஆண்களின் தாது விருத்திக்கு கேரட் உதவுது.  தினமும் பச்சை கேரட், (பச்சை நிறத்திலான கேரட் இல்லீங்கோ. வேகவைக்காத கேரட்)டை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் தகதகன்னு மின்னும். அதனாலாயே இதுக்கு தாவர தங்கம்ன்னு பேரு. கேரட் அருமை பெருமைலாம் பார்த்தாச்சா?! பள்ளி கல்லூரிக்கு போகும் பிள்ளைகளுக்கு  டப்பாவுல கட்டிக்கொடுக்க கேரட்ல ஒரு சாதம் செய்யலாமா?! ரொம்ப ஈசிதான். சீக்கிரம் செஞ்சுடலாம்... 

தேவையான பொருட்கள்..
கேரட்
உதிர் உதிரா வடிச்ச சாதம்
வெங்காயம்
எண்ணெய்
கடுகு,
கடலை பருப்பு
உளுத்தம்பருப்பு
முந்திரிபருப்பு
உப்பு

வறுத்து அரைக்க...
தனியா
சீரகம்
காய்ந்த மிளகாய்
தேங்காய்
வெங்காயத்தை தோல் நீக்கி கழுவி நீளம் நீளமா வெட்டிக்கனும். கேரட்டை கழுவி தோல் சீவி துருவிக்கனும்.

எண்ணெய் விடாம வாணலியை சூடுபடுத்தி தனியா, சீரகம், மிளகாய் சேர்த்து வறுத்து அத்தோடு தேங்காய் துருவலை சேர்த்து வறுத்துக்கனும்.

வறுத்த மசாலா பொருட்களை பொடி செய்துக்கனும். ட்ரை தேங்காய் இருந்தால் நல்லா இருக்கும். இல்லன்னாலும் தேங்காய் துருவலை  ஈரம் போக வறுத்துக்கனும். அப்பதான் பொடிக்கும்போது பொடியாகும். இல்லன்னா பேஸ்ட் மாதிரி கட்டி கட்டியாகிடும். 
வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு, க.பருப்பு, உ.பருப்பு சேர்த்து சிவக்க விடனும்.
காய்ஞ்ச மிளகாய் கிள்ளி போட்டு சிவக்க விடனும்.
வெங்காயம் சேர்த்து வதக்கிக்கனும்.
வெங்காயம் வெந்ததும் துருவிய கேரட்டை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கனும்.. 
உதிர் உதிரா வடிச்ச சாதத்தை  சேர்த்து கிளறிக்கனும்.

புருசன் பொண்டாட்டி மாதிரி சாதமும், கேரட் வதக்கலும் இரண்டற கலந்தபின் பொடிச்சு வச்சிருக்கும் பொடியினை சேர்த்து கிளறிக்கனும்.
கறிவேப்பிலை, கொமல்லி சேர்த்து கிளறி அடுப்பை ஆஃப் பண்ணி இறக்கிடுங்க.
சுவையான சத்தான லஞ்ச் பாக்சுக்கான கேரட் சாதம் ரெடி.

நன்றியுடன்,
ராஜி

9 comments:

  1. கேரட் சாப்பிட்டால் உடம்பு தக தகன்னு மின்னுமா ? இதோ மார்க்கெட்டுக்கு புறப்பட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வேணாம்ன்னே நான் எதாவது சொல்லிடப்போறேன்

      Delete
  2. கேரட்டின் பெருமை சொல்லத்தான் தங்கத்தை கேரட்டில் அளவிடுகிறார்களோ!!!! கேரட் சாதம் ஆவலைத் தூண்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் இருக்கலாம் சகோ

      Delete
  3. அருமை சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  4. சூப்பரா இருக்கு கா...ஆன நான் அந்த பொடி சேர்த்து செஞ்சது இல்ல அடுத்த முறை செஞ்சு பார்க்குறேன்..

    ReplyDelete
  5. கேரட் சாதம், கேபேஜ் சாதம், பீட் ரூட் சாதம் லெட்யூஸ் சாதம் இதெல்லாம் மிக்ஸ் செய்து என்று பல வகை மகன் பள்ளி சென்ற காலத்தில் கொடுத்துவிட்டதுண்டு. இப்படி சாதம் கலக்கும் முன் காய் மட்டும் வதக்கி அதில் பொடி ஏதேனும் இது போல் தூவி கலந்து சப்பாத்தியில் வைத்து ரோல் செய்தும்....ப்ரெட் சான்ட்விச் செய்தும் என்று பல...

    ரொம்ப நல்லாருக்கு ராஜி நீங்க செய்திருப்பது. சாப்பிடணும்னு தோனுது...சரி நாளைக்கு என்ன செய்யனு யோசனை பண்ணிட்டிருந்தேன் காரட் சாதம் செய்திடலாம் ...

    கீதா

    ReplyDelete
  6. கேரட் சாதம் - நல்லா இருக்கு! கலந்த சாதங்கள் தான் எத்தனை எத்தனை!

    ReplyDelete