Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Sunday, October 08, 2017

கிரேசி கேர்ள் - பாட்டு கேக்குறோமாம்


த்ரிஷா இல்லன்னா நயந்தாரான்னு போற உலகத்துல லவ்வுக்காக யாராவது உயிரை விடுவாங்களா?! நானா இருந்தா, எனக்கில்லாதது யாருக்கும் இருக்கக்கூடாதுன்னு அவனை வெட்டிப்போட்டு போவேன்.  இங்க ஒரு புள்ளை அரளி விதையை குடிக்க போகுதாம்!
ஆசை வெச்சேன் உன்மேல.. மச்சான்
அரளி வச்சேன் கொல்லையிலே..
ஆதரிச்சா நல்லதைய்யா!
இல்ல அரளி விதை உள்ளதைய்யா!

சண்டை போட்ட கெண்டை மீனு
ரெண்டும் சேர்ந்து ஒன்னாச்சு..
ரெண்டும் சேர்ந்து கொஞ்சும்போது
ஏரித்தண்ணி தேனாச்சு..
தூண்டிலிலே சிக்கவில்ல..
சுத்தி ஒரு கொக்குமில்ல...
மீனு ரெண்டும் தூங்கையிலே
அக்கம் பக்கம் யாருமில்ல..
ரெண்டு மீனும் கண்விழிச்சா
ஏரியிலே தண்ணியில்ல...
ஏரியிலே தண்ணியில்ல...

ஆசை வெச்சேன் உன்மேல.. மச்சான்
அரளி வச்சேன் கொல்லையிலே..
ஆதரிச்சா நல்லதைய்யா!
இல்ல அரளி விதை உள்ளதைய்யா!

தென்னந்தோப்பில் என்னைப் பார்த்து
சொன்ன வார்த்தை என்னாச்சு?!
அப்பன் பேசும் பேச்சை கேட்டு காது
ரெண்டும் புண்ணாச்சு..
ரெக்கையெல்லாம் வெட்டிப்புட்டு
நிக்குதைய்யா பச்சைக்கிளி...
ஊருக்குள்ள உன் மறுப்பு
வாடுதைய்யா வஞ்சிக்கொடி..
கட்டிலில் தேங்கி நிக்கும்
கண்ணீர் மட்டும் ரெண்டு படி...
கண்ணீர் மட்டும் ரெண்டு படி...

ஆசை வெச்சேன் உன்மேல.. மச்சான்
அரளி வச்சேன் கொல்லையிலே..
ஆதரிச்சா நல்லதைய்யா!
இல்ல அரளி விதை உள்ளதைய்யா!

படம் ; நட்பு,
இசை; இளையராஜா
நடிகர்கள்; கார்த்திக், ராதாரவி,  ஸ்ரீபாரதி
பாடியவர் : பி.சுசீலா
பாடலோட லிங்க்: https://www.youtube.com/watch?v=adQnyN_l1kM











அன்புடன்,
ராஜி. 

Wednesday, October 04, 2017

எனக்கொரு இடம் பிடித்து வை தோழி! - மௌனசாட்சிகள்


இதுவரைக்கும் மௌனச்சாட்சிகளில்  புகழ்பெற்ற  மன்னர்களின் கோட்டை கொத்தளங்கள், கல்லறைகள், புராண மாந்தர்களின் நினைவிடங்கள் முதற்கொண்டு வருங்காலத்தில் சென்னை நகரை மேலும் அழகாக்கும் மெட்ரோ ரயில் வரைப் பார்த்தோம். ஆனா, இன்னிக்கு பார்க்கப்போறது ஒரு அழகான நட்பின் முடிவை.....  சில தினங்களுக்கு முன்  மரணச்செய்தியை தாங்கி அலைப்பேசி அழைத்தது. ஒருகாலத்தில் உயிராய் இருந்த தோழியின் மரணச்செய்தி. காய்ச்சல் மற்றும் பண்டிகையின் காரணமா  தொலைதூர பயணம் வேண்டாம்ன்னு சொல்லி அப்பா அம்மா மட்டும் போய் வந்தாங்க.  உடம்பு நல்லானதும் விசாரிக்கலாம்ன்னு அவ வீட்டுக்கு போனோம்.  காஃபி கொண்டு கொடுத்தவளை பார்த்தபோது அச்சு அசலாய் என் தோழியை உரிச்சுக்கிட்டு வந்த அவள் மகளை காண நேர்ந்தது. பார்த்ததும் அதுவரை நாகரீகம் கருதி அடக்கி வச்சிருந்த அழுகை  பொங்கி வந்தது. ரெண்டு பெண் ஒரு பையன்னு அவளுக்கு இருந்தாலும் மூத்தது மட்டும் இவளைப்போல....
நான் பிறந்தபோது அப்பா அருப்புக்கோட்டை கமுதிக்கு பக்கத்திலிருக்கும் நீராவின்ற ஊர்லதான் வேலைப் பார்த்து வந்தார். அப்புறம் அங்கிருந்து மாற்றலாகி அரக்கோணம் பக்கத்தில் இருக்கும் “வளர்புரம்”ன்ற ஊருக்கு வந்தார். அந்த ஊருக்கு போகும்வரை எனக்கு தமிழ் பேச வராது. முதல்ல எதிர்வீட்டு கார்த்தி அறிமுகம். என்னைவிட அவன் 13 நாள் பெரியவன். பள்ளிக்கூடம் சேர்த்தபின் தெய்வநாயகி அறிமுகம். இவ என்னைவிட 6 மாசம் பெரியவ. எங்க போனாலும் சுத்தினாலும் ரெண்டு பேரும் ஒன்னாதான் இருப்போம். திங்குற பண்டங்கள் முதற்கொண்டு உடுத்திக்கும் துணி வரை இருவருக்கும் ஒரே ரசனை. அவளோடு பிறந்தவங்க 5 பேர் இருந்தாலும் எங்க வீட்டில்தான் இருப்பா. என் வீட்டில் அப்பா அம்மா இல்லன்னா அவங்க வீட்டில்தான் நானிருப்பேன்.   எட்டாவது வரை ஒன்னாதான் படிச்சோம். 
இது நாங்க படிச்ச ஆரம்ப பள்ளிக்கூடம். இங்கதான் 5 வரை படிச்சோம். அப்போலாம் பள்ளியில் சேர, ஒரே தகுதி..., தலைமீது வலது கைவைத்தால் இடதுகாது கைக்குப் படனும்ங்குறதுதான். எனக்கு முன்னாடியே அவ பள்ளிக்கூடத்துல சேர்ந்திருந்தா.  மொழி தெரியாததால யார்கூடவும் சேராம ஒத்தைக் குரங்காய் உக்காந்திருக்கும் என்னைக் கண்டு பள்ளியில் தெய்வநாயகிதான் முதன் முதலில் நட்புக்கரம் நீட்டியவள். அது முதல் அவன் இறப்பு வரை நாங்க திக் ஃப்ரெண்டஸ்.  அவ வீட்டுக்கு எதிர்க்கவேதான் எங்க ஸ்கூல். எங்க வீடு ரெண்டு தெரு தள்ளி. அப்பா கொண்டு வந்து விட்டு திரும்ப கூட்டி போவார். அதுவரை தெய்வநாயகிதான் எனக்கு எல்லாம்...  அவங்க வீட்டுல அவங்க வீட்டு பிள்ளைக எல்லாருக்கும் காலைல ஸ்கூல் போகும்போது பத்து பைசா கொடுப்பாங்க. ஒருமுறை எனக்கும் கொடுக்க அதை வாங்கி நானும் பண்டம் வாங்கி திங்க, அது அப்பாக்கு தெரிய வர.... இனி யார்கிட்டயாவது கைநீட்டி எதாவது வாங்குவியான்னு கேட்டு அப்பா சூடிழுக்க... அந்த வடு இன்னமும் கையில் இருக்கு... அன்னிக்கு வாங்குன சூடு இன்னிக்கு வரைக்கும் யார்க்கிட்டயும் எதும் கேட்கமாட்டேன். யார்க்கிட்டயும் கைநீட்டி எதும் வாங்க மாட்டேன். கடவுளிடம்கூட.... 
சில வருடங்கள் கழிச்சு அவங்களோட இன்னொரு வீட்டுக்கே குடிபோனோம். அதுக்கப்புறம் எங்க நட்பு இன்னமும் உறுதி பட்டுச்சு. எங்க பாட்டி வீட்டுக்க்கு வரும்போது அவளை கூட்டி வருவோம். எனக்கு வாங்குற மாதிரியே வளையல், பின்லாம் அவளுக்கும் எங்க வீட்டுல வாங்கி தருவாங்க. கணக்கு பார்க்குறதில்லை. அவ வாங்கிப்பா. ஆனா நான் வாங்கிக்க மாட்டேன்.   ஆறாம் வகுப்புக்கு ஒரு கிமீ தூரத்துல இருக்கும் இந்த உயர்நிலை  பள்ளில சேர்ந்தோம்.   ஒரு பக்கம் எலுமிச்சை தோப்பு, ஒரு பக்கம் தென்னையும், கொய்யாவும் சேர்ந்த தோப்பு.  25 காசு கொடுத்தா அணில் கடிச்ச கொய்யாக்களை கைநிறைய கொடுப்பாங்க. வாங்கி சாப்பிட்டுக்கிட்டே நடப்போம்.  
இப்பத்திய பள்ளி  போலலாம் கிடையாது அப்போ. தினமும் காலையில் தமிழ்தாய் வாழ்த்து, திருக்குறள் சொல்றது, கொடியேற்றுதலோடு வகுப்பு தொடங்கி, ஜனகன மண பாடி, கொடியிறக்கி பள்ளி முடியும். பிரேயர்போது பேசவோ, அசையவோ கூடாது. அப்படி எதாவது சேட்டை செஞ்சா வரலாறு ஆசிரியர் பிரம்புதான் பேசும். இன்னிக்கு வாரம் ஒரு முறைக்கூட இப்பத்திய பள்ளிகளில் கொடியேற்றமும், பிரேயரும் கிடையாது. நான் படிச்ச போதுதான் இந்த மேடையை கட்டுனாங்க. அப்போ என் உயரத்துக்கு இருந்துச்சு, இங்கதான் நாங்க சைக்கிள் பழகப் போயி இந்த மேடையில் இடிச்சு  முட்டிக்கால் பெயர்ந்துச்சு.  அன்னில இருந்து அவ சைக்கிள் பழகல. நான் கத்துக்கிட்டேன். அது வண்டியாச்சு. அவ கடைசிவரை சைக்கிள் ஓட்ட பழகவே இல்ல.
ஆறு, ஏழு, எட்டாவது என மூணு வருசம்  படிச்ச இடம். ஆஸ்பெட்டாஸ் கூரைக்கு கீழ் வகுப்பறைகள் இருக்கக் கூடாதுன்ற அரசாங்க ஆணைக்கேற்ப இந்த இடம் இப்போ வாகனங்கள் நிறுத்துமிடமாகிட்டிருக்கு. திடீர், திடீர்ன்னு அக்காக்களை வீட்டுக்கு அனுப்புவதன் மர்மம் புரியாம குழம்பி தவித்திருக்கேன். ஒருநாள் தெய்வாவையும் அப்படி அனுப்ப, அவளை வீட்டில் ஒதுக்கி உக்கார வைக்க அவளோடு நானும் உக்காருவேன்னு அடம்பிடிச்சு அழுது அம்மாக்கிட்ட அடிவாங்குனதுலாம் தனிக்கதை.  அவ சடங்குக்கு அவளோடு சேர்ந்து வளையல் போட்டுக்கிட்டேன். அதுக்கப்புறம்தான் அப்பா வச்ச சூடு நினைவுக்கு வர,  அப்பா அம்மாக்கு தெரியாம வளையலை கழட்ட போக வளையல் உடைஞ்சு குத்தி கிழிச்சு பெருசா காயம். அதை அம்மாக்கிட்ட எப்படியோ மறைச்சு.... அந்த தழும்புதான் என்னுடைய அடையாளமாய் அரசாங்கத்துக்கிட்ட இருக்கு. தழும்பை போலவே அவளோட நினைவும் நீங்காம இருக்கத்தான் அந்த காயம் அன்னிக்கு உண்டானது போல!
நாங்க படிச்சுக் குப்பைக் கொட்டிய இடமின்று நாங்க இல்லாமயே குப்பையாய் கிடக்கு. சொன்னா நம்புவீங்களான்னு தெரியாது . அவ என்னைவிட கொஞ்சம் படிப்புல மந்தம். நாடகம், நாட்டியம், விளையாட்டுன்னு எதுலயும் கலந்துக்க மாட்டா...  ரொம்ப அமைதி. இருக்கும் இடமே தெரியாது. அதிர்ந்து பேச மாட்டா.  அப்பவே சாமி பக்தி அதிகம். அவளும் நானும் கோவிலுக்கு போவோம். அவ விளக்கு போடுவா. நான் ஆலமரம், அரசமரத்தடியில் ஆடுவேன். 



அவ பெரியவ ஆனதும் மதிய நேரத்துல வீட்டுக்கு வர வேணாம்ன்னு சாப்பாடு கட்டி கொடுத்துடுவாங்க.  பள்ளில  இருந்து கொஞ்சம் தள்ளி இந்தப் பெருமாள் கோவில் இருக்கு. நான் பள்ளியில் சேரும்போது அப்போதான் கட்டிடங்கள்லாம் கட்டிக்கிட்டு இருந்தாங்க. அதனால, இங்கதான் வகுப்பு நடக்கும். இங்கதான் லஞ்ச் சாப்பிட வருவோம். கூடவே விளையாட்டும்..., இந்த இடம் இன்று இடிஞ்சு குட்டிச் சுவராய் இருக்கு.  இங்கதான் சாப்பிடுவோம். சாப்பிட்டு முடிச்சு அவ எதாவது எழுதுவா.. படிப்பா... நான் எப்பயும்போல ஆட்டம்தான்.
கோவில் பக்கத்துலயே குளம். அந்தா தெரியுது பாருங்க அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்துதான் லஞ்ச் சாப்பிடுவோம். கூடவே அரட்டையும் நடக்கும். சிலுசிலுன்னு காத்து செமயா இருக்கும். கரைகளில் இருக்கும் நாலு வீடும் கோவில் குருக்களோடது. தெய்வாக்கிட்ட சொல்லி அனுப்புவாங்க. இந்த குட்டிசாத்தான் குளத்துல விழுந்துடபோகுதுன்னு... என்னை என் அம்மாவைப்போல பார்த்துப்பா.  தண்ணில இறங்குனாலே திட்டுவா. ஆனா, வீட்டுல சொல்ல மாட்டா. குளத்துக்கு பக்கத்திலிருக்கும் ஐயர் வீட்டுங்கள்ல போய் நான் விளையாடுவேன். என் பை, லஞ்ச் பாக்ஸ்லாம் எடுத்து வச்சு வர்றது அவ வேலை. 
நாங்க நாலு பேர், எங்களுக்கு பயம்ன்னா என்னன்னு தெரியாதுன்னு காக்க, காக்க” படத்துல சூர்யா சொல்வார். அதுப்போலதான் நாங்க நாலு பேரும். அந்த ஊர் முழுக்க எங்க காலடி படாத இடமே இருக்காது. அதனால ஊருக்குள்ள எங்களுக்கு பேரு அரட்டை கோஷ்டி.  இதுல ரெண்டு பேரு டீச்சர், ஒருத்தி நர்ஸ். வீணாப்போனது நான் மட்டும்தான் . எனக்கு இடது பக்கத்துல இருக்குறதுதான் தெய்வநாயகி.  லீவ் நாளில் மதியத்துல வள்ளலார் கோவிலுக்கு போய் கஞ்சி வாங்கி குடிப்போம்.  முள் வெட்டி வர்றது, வீட்டுக்கு தண்ணி எடுத்து வர்றதுன்னு பால்யத்தை அனுபவிச்சோம். எட்டாவது முடிச்சு ஒன்பதாவது போகும்போது அப்பாக்கு டிரான்ஸ்பர் வர திருத்தணிக்கு வந்திட்டோம். முதல்ல வாரா வாரம் ஞாயித்துகிழமைல சந்திப்போம். அதுக்கப்புறம், மாசம், வருசம்ன்னு நீண்டு... இன்னிக்கு இல்லாமயே போயிட்டா.

எங்க ரெண்டு பேத்துக்கும் ஒரே நேரத்துலதான் டாலர் செயின் செஞ்சாங்க. ஒரே டிசைன். என் கல்யாணத்தப்போ அவளுக்கு கண்பார்வைல பிரச்சனை வர கல்யாணத்துக்கு வரல. ஆனா, அவ கல்யாணத்தப்ப என் பெரிய பொண்ணு எட்டுமாசம் கையில்... எங்க ஊர் பக்கம்லாம் 2,4,6,8,10,12ன்னு இரட்டைப்படை மாசத்துல குழந்தை கையில் இருந்தாலோ அல்லது வயித்துல இருந்தாலோ வெளியூருக்கு அனுப்பமாட்டாங்க. அப்படியே அனுப்பிச்சாலும் நைட் தங்ககூடாதுன்னு சொல்வாங்க. அப்படியே என்னையும்  அனுப்பமாட்டேன்னு எங்க வீட்டில் சொல்ல... அழுது அடம்பிடிச்சு அவ கல்யாணத்துக்கு போனேன்.  என் கல்யாணத்தப்போ அவளுக்கு பண்ண ஆப்ரேஷனே இன்னிக்கு அவ உயிருக்கு உலை வச்சிட்டுது. கண்ணுல ஆப்ரேஷன் பண்ணி செயற்கை கண் வச்சதை புகுந்த வீட்டில் சொல்லாம விட, கல்யாணம் கழிச்சு கொஞ்ச நாள் கழிச்சு தெரிய வர அன்றிலிருந்து ஆரம்பிச்சது கொடுமை..  அந்த கொடுமை இன்னிக்கு அவ உசிரை எடுத்தபின் தான் ஓய்ஞ்சிருக்கு. என்ன நினைத்தாளோ! கிட்டத்தட்ட மூன்று வருடத்திற்குபின் என்னிடம் பேசினாயே! அதுதான் கடைசி உரையாடல்ன்னு கண்டுப்பிடிக்காத பாவியம்மா நான்! உணர்ந்திருந்தால் உன்னை வீட்டுக்கு வரவச்சிருப்பேனே! கடைசி நிமிடத்தில் என் நினைவு உனக்கு வந்ததே! அதை உன் அண்ணனிடம் சொல்லி இருந்தாலாவது உன்னை காப்பாத்தி இருக்கலாமோ! பண்ணிய பாவங்களில் இதுதானம்மா பெரிய பாவம்.  கொலையா?! தற்கொலையான்னு கண்டுப்பிடிக்க முடியாத மரணம் உனக்கு...

ஊஞ்சல் கட்டி விளையாடிய குளத்தங்கரை வேப்ப மரம், கழுதை வாலைப் பிடிக்கப்போய் உதை வாங்கி கால் ஒடிஞ்ச நாகாத்தம்மன் கோவில், குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை நேரத்துக்கு ஒலிக்க விடும் பஞ்சாயத்து சங்கு. தண்ணி வற்றிய கிணத்தில் நீர் சொட்டி இறைச்சதுன்னு எத்தனையோ சொல்லிக்கிட்டு போகலாம் அந்த ஊரு நினைவுகளையும்..., எங்கள் நட்பினையும்.... 

தாயக்கட்டை விளையாடிய
எதிர்வீட்டு அக்கா...,
ஆண்பிள்ளைகளுக்கு சரிசமமாய்
விளையாட வெட்டிய
கோலிக்குண்டு  குழி...,

மீனென தவறாய் நினைத்து
பிடித்து வீட்டு கிணத்தில்
விட்ட தலைப்பிரட்டை..,
வாலில் பூச்சுற்றி,
நெற்றியில் பொட்டு வைத்து
பேர் வைத்த நாய்க்குட்டி..,

பனங்காய் வண்டி, சிங்கப்பூர்
போன ரயில் வண்டி...,
கெட்ட ஆட்டம் போட்ட திடீர் மழை..,
தேள்கடிக்கு உதவும் என பொறுக்கி
வைத்த ஆலங்கட்டி மழைக் கற்கள்..,

உலுக்கியெடுத்த நாவல் மரம்
கண்டும் காணாமல் விட்ட
கோடி வீட்டு அத்தை..,
குளத்தங்கரை தாமரை..., முதன் முதலாய்
ஊருக்குள் வந்த பேருந்து...,

வருடத்திற்கொருமுறை வரும் திருவிழா..,
பப்பரமிட்டாய், சாயம் பூசிய வேசதாரிகள்..,
களைக்கட்டும் தேர்தல்,
அரசியல் சண்டை.., தோத்தவனும்,
ஜெயித்தவனும் ஒரே திண்ணையில் சாராயக்குடி.

நல்லதோ, கெட்டதோ அன்றைய
இரவில் போடப்படும்
சரஸ்வதி சபதம், விதி,
சம்சாரம் அது மின்சாரம்.

விசம் குடிச்ச கதிர்வேல் அண்ணா,
கிணற்றில் விழுந்த ஜோதி மாமி,
பிரசவத்துக்கு துடிச்ச மாலதி அத்தை
பக்கவாதத்தில் துவண்ட கோபால் தாத்தா
என சுமந்த அப்பாவின் வண்டி...,

உனக்கும் எனக்குமாய் வாங்கிய டாலர் செயின்..
உன் அண்ணன் திருமணத்துக்கு
ஒரே மாதிரியாய் வாங்கிய சீர் புடவை என
அனைத்தும் மௌனமாய்  நம் நட்புக்கு சாட்சி சொல்லும் தோழி.
இறைவனின் பாதத்தில் இனியாவது அமைதியாய் துயில் கொள் தோழி..
இன்று நீ.. நாளை நான்....
உன்னருகில் இடம் பிடித்து வை...
வந்தபின் விட்ட பால்யத்தை தொடருவோம்!!!


# படங்கள் 2014 ஜூலைல என் தோழியோட அண்ணன் மகள் நிச்சயதார்த்தத்துக்கு எடுத்தது. கடைசியா அன்னிக்குதான் பார்த்தது...
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1473635

என்றும் நட்புடன்
உன் தோழி
ராஜி. 

Saturday, December 07, 2013

கல்யாணப்பரிசு


ஏதோ ஒரு பிறவியில்
எப்படியோ ஒரு தருணத்தில்..,
கண்டிப்பாய் தவம்
செய்து இருக்க வேண்டும் ..,
இப்பிறவியில் உன்னை
இனிய தோழியாய்
நான் பெறுவதற்கு ...,

பாசம் என்பதைத் தேடி
பலமுறை நான் ஏமாந்திருக்கிறேன்.
வேஷமான பொய் அன்பினால்
மூழ்கி நான் களைத்திருக்கையில்...,

நிறைவான அன்பினால்
நீயும் அடிமை செய்திட்டாய் எனை..,
உன் மணநாள் பரிசாய்
என்ன தரலாம் என்று
மனதினுள் குழப்பம்!!

இறுதியில் இப்படி வேண்டி நின்றேன்
இறைவனிடம்..,
என் ஆயுளில் பாதியை
பரிசாகத் தர சொல்லி!

ஒருவேளை
இல்லையென்று சொல்லி, அவன்
மறுத்தாலும் மறுப்பான்
அந்த கள்வன்.

என்னிடமிருந்து உனக்குத் தர‌
எவனிடம் நான் கெஞ்ச வேண்டும் ???
இதையே உன்
மண நாள் பரிசாக
பெற்றுக் கொள்ளேன் .

Thursday, October 24, 2013

மீண்டும் வேண்டும் அந்த நாட்கள்!!



கஷ்டப்பட்டு சமைச்ச மணல் இட்லிகளை
பகிர்ந்து.., கட்டி காப்பாத்திய விருந்தோம்பல்!!
சட்டை நுனியில் வைத்து காக்காய் கடி
கடித்த கமர்கட்டில் பகை தீர்த்த சாமர்த்தியம்!!

காவல்காரனுக்கு தெரியாம பறித்த கொய்யா,
சளியாய் உருமாறி அப்பாக்கு காட்டிக்கொடுக்கும்!!
ஓடும் ரயில் பின்னே, நண்பர்கள் பின் பிடித்து 
ஓடிய ரயில் கூவல்கள்..

சிக்கு முடிக்கும், பழைய இரும்புக்கும்
வாங்கிய சேமியா ஐசும், சோன் பப்டியும் ருசிக்கும்...,
அம்மாக்கு தெரியாம அவள் புடவையை திருடி
போட்ட திண்ணை நாடகம் தெரிந்து விழுந்த அடி!!

பாடம் படிக்கும் போது விழுந்த கொட்டுக்களுக்கும், 
உடைத்த பல்ப குச்சிக்கும் ஆசிரியர் இல்லாத போது
கட்டி புரண்டு போட்ட சண்டையும், 
மூக்குடைப்பட்ட நண்பனும்...,

ஒரு போதும் நெஞ்சில் வஞ்சம் வைத்ததில்லை!!
சமாதானப்படுத்த வருவதாக வரும் சகுனிகளைப்
பார்த்து, நானும், அவனும்
ஒன்று சேர்ந்து சிரிக்க தவறியதில்லை!!

கோடி பொன்னும், ஆயிரம் நேர்த்திகடனும் 
செய்து கேட்கிறேன். இறைவா!
மீண்டும் வேண்டும் என் பால் மனம்!! 
மீண்டும் வேண்டும் அந்த பால்யம்!! 

Thursday, July 04, 2013

”காதல் கடிதம்”போட்டிக்காக பதிவர்களை வைத்து, “மீண்டும் ஒரு திருவிளையாடல் ”

 ஐயோ! ஐயோ! நான் என்ன பண்ணுவேன்?! என்ன பண்ணுவேன்?! யாரை கேப்பேன்?! ஒண்ணா!? ரெண்டா?! ஐநூறு ரூபாயாச்சே?! இந்த நேரம் பார்த்து எனக்கு எழுத வர்ல்லே! எழுத வர்ல்லே! என் பிளாக்குல குப்பையை கொட்டுறதுக்கே முடியலை இதுல போட்டிக்குலாம் ஏன் பேர் குடுக்கனும்?! எனக்கில்ல, எனக்கில்ல, வேற யாரோ! வேற யாரோ! பரிசை அடிச்சுட்டு போகப்போறங்க... சொக்கா! சீனு கேட்ட லெட்டர் எழுதி அந்த ஐநூறு ரூபாயையும் எனக்கே கிடைக்குற மாதிரி அருள் புரிய கூடாதா?! எல்லாரும் எழுதி அனுப்பிட்டாங்க. கடைசி தேதி இந்த மாசம் 20ம் தேதி ஆச்சே! இன்னும் ஒரு வார்த்தையும் சிக்கலியே!! வேணும் வேணும் எனக்கு இதும் வேணும் இன்னமும் வேணும், காலம் போன காலத்துல இந்த காதல், கடிதம், போட்டிலாம் தேவையா?!

அன்பே! ஆருயிரே!ன்னு ஆரம்பிக்கலாம்னா ஓல்டா இருக்குன்னு சொல்லி ஓட்டுவாங்க, அழகான ராட்சசின்னு ஆரம்பிக்கலாம்ன்னா! முதல்வன படத்திலிருந்து சுட்டுட்டேன்னு கிண்டல் அடிப்பாங்க, முரட்டு பிசாசு, ஆசை புயல்ன்னு ஆரம்பிக்கலாம்ன்னா எல்லா வார்த்தையையும் நம்மாளுங்க யூஸ் பண்ணி கடிதத்தை அனுப்பிட்டாங்க..., என்ன செய்வேன்! எங்க தேடுவேன்!?

ராஜி!

யாருங்க?!

”நாந்தான் கூப்பிட்டேன்” 

ஏன் கூப்பிட்டீங்க? நீங்க யாரு?!

லவ் லெட்டரு, மொக்கை ஜோக்கு, காதல் கவிதை, கடை, தகவல்கள், ஆன்மிகம், நட்பு கவிதை, புனைவுன்னு கலந்து கட்டி தரும் கூகுள் நான்..

இந்த பிளாக்குல காதல் கடிதம் எழுதுற போட்டின்னு போட்டதை நீயும் படிச்சுட்டியா?! என் வயித்துல அடிக்குறதுக்குன்னே வந்திருக்கியா நீ?! 

”திடங்கொண்டு போராடு” சீனு கேட்ட கடிதம் உனக்கு கிடைத்தால் பரிசு உனக்கே கிடைக்கும்தானே!

ஐய்ஹோ! ஐய்ஹோ! அந்த லெட்டர் மட்டும் கிடைச்சுட்டா! அடுத்த செக்கண்ட் என் கையில ஐநூறு ரூபா இருக்கும்!

கவலைப்படாத, அந்த லெட்டரை நான் தரேன்.

இன்னாது, லெட்டரா?! நீயா?! சொந்தமா எழுதுனாலே அங்க பார்த்தேன், இங்க படிச்சேன்னு கிண்டல் அடிக்கவே ஒருத்தர் அமெரிக்காவுல லேப்டாப் வாங்கி உக்காந்திருக்கார். இருந்தாலும், பதிவர்ன்னு போனா போகுதுன்னு ஒத்துக்கிட்டு இருக்காங்க. அதையும் கெடுக்கலாம்ன்னு பார்க்குறியா?! நீ எழுதுறது எப்படின்னு தெரிஞ்சுக்கனும்ன்னா நீயே மெயில் தட்டேன்.. அதான் நீ எப்படி குடுப்பே! கமெண்ட்ல கிழி கிழின்னு கிழிப்பாங்கன்னு பயம் உனக்கு. அதான் என் தலையில் கட்டப் பார்க்குறே?!

என் திறமை மீது உனக்கு டவுட் இருந்தா, என்னை டெஸ்ட் பண்ணி பாரேன், உனக்கு டேலண்ட் இருந்தா?!

இன்னாது, என்கிட்ட, என்கிட்டயே மோதப் பார்க்குறியா?! படிக்க சுமாரா இருந்தாலும் அதையும்!? நல்லா இருக்குன்னு சொல்ல ஒரு கூட்டத்தை சேர்த்து வச்சிருக்கேன். என்னை பத்தி தெரியாது உனக்கு.., ரெடியா  இரு.

ம்ம் கேள்விகளை நீ கேக்குறியா?! இல்ல நான் கேக்கட்டுமா?!

ஆங்.., நீ கேட்காத, நானே கேக்குறேன். எனக்கு கேக்கதான் தெரியும். அப்போதான் பதில் தெரியலைன்னாலும் சமாளிச்சுக்கலாம்.

பிரிக்க கூடாதது என்னவோ!? பதிவும்,  கலகலப்பும்,
பிரியக்கூடாதது என்னவோ?! சொந்த சரக்கும், ஓவர் பில்டப்பும்,
சேர்ந்தே இருப்பது?! கமெண்டும், சண்டையும்
சேராதிருப்பது?! உன் பிளாக்கும், உபயோகமான பதிவும், 
ம்ஹ்ம், ம்ஹ்ம், சொல்லக்கூடாதது?! பிளாக்குல உண்மையான விவரம்,
சொல்லக்கூடியது?! பிளாக்குல கற்பனைக் கதை,
பார்க்கக்கூடாதது?! பதிவு போட நேரம், காலம்,
பார்த்து ரசிப்பது?! கமெண்டுல செல்ல சண்டை,
பிளாக் என்பது?! கொஞ்சம் உன்மை, நிறைய பொய்,
பாட்டுக்கு?! “தென்றல்” சசிகலா?!
நாட்டு நடப்புக்கு?! ”வேடந்தாங்கல்” கருண்
வடநாட்டு பதிவுக்கு?! சகோ.”வெங்கட் நாகராஜ்”,
சாப்பாட்டு பதிவுக்கு?!   ”கோவை நேரம்” ஜீவா,
மொக்கைக்கு?! உன் பிளாக்,
என்னையே கலாய்க்க!? அவர்கள் உண்மைகள்” மதுரை தமிழன்,

 ஐயா! ஆளை விடு!? நீர்தான் கூகுள், எங்கே அந்த லெட்டர்?! குடு அப்படியே மெயில் தட்டி விடுறேன். கிடைக்கும் பரிசை நெட் கார்டு போட்டுடுறேன்.  

ம்ம்ம்ம், இந்தா கடிதம், 
கலர் ஜெராக்ஸ் எடுத்த கருங்குரங்கே...,
ரொம்ப நாளாய் ஏங்கி, தவித்து, உருகி, அந்தா இந்தான்னு ஒரு வழியா உன் மீதான என் காதலை சொல்ல ஒரு காதல் கடிதம் எழுதிட்டேன் உனக்கு.., 

 செந்தமிழில் - உனக்கு
கடிதம் எழுதி முடித்த பின்,
ஏற்பட்ட உணர்வுதான்..,
வில்லை உடைத்து சீதையை
கைபிடித்த போது இராமனுக்கும்
ஏற்பட்டிருக்குமோ ? ...........
.
.
.
.
.
.
.
.
 இப்படிக்கு,
உன்  ஆசை ஜில்லு
 




Tuesday, June 11, 2013

இதுதான் காதலென்பதா?!

   
என் தனிமையின்
போதெல்லாம்-நம்
இதழ் வருடிய வார்த்தைகளையே
அசைப்போடுகிறதே இதுதான் காதலா?

மற்றவர்கள் கேலியில் நீ
அகப்பட்டுக் கொண்டால்-என்
அகம் வதைப்படுகிறதே அதுதான் காதலா?

இமைகளின் இயக்கம்
நிறுத்தி-நீ
உலவும் இடங்களில்
உனையே தேடல்
கொள்கிறதே விழிகள்
இதுதான் காதலா?

அருகினில் நீ இல்லாதபோதும்
உன்னுடன் உறவாடி மகிழ்கின்றேனே
இதுதான் காதலா?

எனக்காக நீ தந்தவைத் தவிர்த்து
சுவாசக் காற்று உட்பட-நீ
வருடிய அனைத்தையும் சேகரிக்கின்றேனே
இதுதான் காதலா?

யார் கேட்டும் இல்லை என்ற  ஒன்றை
நீ கேட்க நினைக்கும்போதே
 கொடுக்கத் தோன்றுகிறதே
அதுதான் காதலா?

பிரிவுகள் நேரும்போது
ஏதோவோர் உணர்வு- நம்
விழிகளில் நீர் நிரப்பிச்  செல்கிறதே
அதுதான் காதலா?

ஊரே நம்முறவை
காதலென்றபோது
நீ மட்டும் மறுக்கிறாயே
நாங்கள் நண்பர்களென்று.....,

எது காதல் தெரியவில்லை
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியமென்பதால்...,

Thursday, September 06, 2012

பிரியமான தோழி...,


பிரியமான தோழிக்கு...,

எப்படி இருக்கிறாய்?
எங்கே இருக்கிறாய்?
எப்போது வருவாய்?
என் இதயம் துடிக்கும் போதெல்லாம்
உன்னைப்பற்றி எழும் கேள்விகள் இவை...

உன் விரலோடு விரல் கோர்த்து
விளையாடிய வீதிகள்....,
இன்று, வெற்றிடமாய் தெரிகின்றன!!

உன் எச்சில் மருந்தால்
ஆறிப்போன காயங்களின் தழும்புகள்...,
இன்று,  வலியால் துடிக்கின்றன!!

உன்னோடு தோள் சேர்ந்த
என் சுக துக்கங்கள் அனைத்தும்
இன்று தனிமையில் தவிக்கின்றன...

புன்னகை பூ பூத்து
நட்போடு நடைபோட்டோம்
புத்திகெட்ட சமுதாயம் நம்மை
பிரிக்குமென்றா எதிர்பார்த்தோம்?

அண்ணன் தங்கை வந்தாலே
அருவருப்பாக பார்க்கும் சமுதாயம்
நண்பர்களாய் நடைபோடும் நம்மைமட்டும்
ஆசையோடவா பார்க்கப்போகிறது...

வீணர்களின் சொல்லுக்கு வெட்கப்பட்டு
விட்டில் பூச்சிபோல் துடிக்கவேண்டாமென
வெவ்வேறு திசை பிரிந்தோம்
வேரறுத்த நம் நட்போடு...

விவேகத்தோடு எடுத்த நம் முடிவு
நட்பிற்கு நல்லது என்றாலும்
வெவ்வேறு வேளைகளில்
என்னை ரணமாய் கொள்கிறது...

நீ எத்திசையில் இருந்தாலும்
நம் நட்பெனும் சுவாசக்காற்று
எப்போதும் எங்கோ ஓரிடத்தில்
சந்தித்துகொண்டு தான் இருக்கிறது...

கண்ணீர் வருமோ என்ற தயக்கத்தில்தான்
இதை எழுத துடங்கினேன்
துடைக்க உன் விரல் இல்லாதபோது நான் மட்டும் எப்படி?
என்று கண்ணீரும் வரமறுக்கிறது....

உன் நினைவில் நான் எழுதும்
இந்த இனிய வேளையில்
என் நினைவில் நீயும் இருப்பாய்
என்ற நம்பிக்கையோடு....

Thursday, March 08, 2012

பெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்

                                    
உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மூலம் ஒரு தாய், முழு  பெண்ணாகிறாள். ”அன்பு, ஆதரவு, பகிர்தல்” இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண்” சொன்னவர் சுஷ்மிதா சென், பிரபஞ்ச அழகி போட்டியின் கடைசிச் சுற்றில். இந்த பதில் தான் அவரை பிரபஞ்ச அழகியாக்கியது.

சக உயிர்களிடம் ஆதரவு காட்டும் ஆற்றல், மாசில்லா அன்பு, உயிர் மதிப்பில்லா தியாகம் இவை மூன்றும் தான் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் புதைந்திருக்கும் உணர்வு. ஒரு தாயாய், மகளாய், மனைவியாய், சகோதரியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை? உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த வேறொரு உயிரினை உங்களால் உலகில் காட்டமுடியுமா?

பல கோடி ஆண்டுகள் உலக சரித்திரத்தில் பெண்கள் சந்தித்த அடக்குமுறைகள், வன்முறைகள் எத்தனை.. எத்தனை? பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் சமமற்ற ஆணாதிக்க நீதியினை தாண்டியும் இன்றைய நிலையில் கல்வி, சுதந்திரம், சமத்துவம் போன்றவற்றை வென்று சாதித்து வருகிறார்கள்.

பெண்களுக்கான கல்வியறிவு மற்றும் பொருளாதார சுதந்திரம் இந்த நூற்றாண்டில் பலதுறைகளிலும் அவர்களை தலைநிமிரச் செய்திருக்கிறது. இன்றைய மகளிர் தினம் பெண்களுக்கான பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் வெற்றிகளை வரும் ஆண்டுகளில் முழுமையாக பெற்றுத்தர வித்திடட்டும்.

பெண்களால் பிறந்தோம், பெண்மையை போற்றுவோம்!!
                                     

ஒரு துளி
உதிரத்தை கூட
உருவம் செய்து
குழந்தையாய் தருபவள்
பெண்!!!

செலவு செய்தாலும்
எதோ ஒரு வகையில்
சேர்த்து வைப்பவள்
பெண் ...!

தங்கமாய் வாங்கினாலும்
தன் மகள்
தாலிபாக்கியம் பெற
தந்து விடுகிறாள்
பெண்!!!

புடவை வாங்கினாலும்
புருஷன் தகைமைக்கு
பெருமை சேர்க்கிறாள்
பெண்...!!!

தன் வயிறு காய்ந்தாலும்
மார்பிலே பால்கொடுத்து
மகனை வளர்க்கிறாள்
பெண்...!!!

கணவன் கயவன்
என்றாலும்
காரணம் இவள் என்று
கெட்ட பெயர்
வாங்கிக்கொள்கிறாள்
பெண் ...!!!

கொண்டவன்
குடிகாரன் ஆனாலும்
குடித்துவிட்டு அடித்தாலும்
குடும்பத்தை காக்கிறாள்
பெண்...!!!

பசி என்று
வரும் பிள்ளைக்கு
பச்சை தண்ணீராவது
தந்து விடுவாள்
பெண்...!!!

எப்போதும்...
பெருமையை
பிறருக்கு கொடுத்து
தான் மட்டும்
சிறுமை பெறுகிறாள்
பெண்...!!!
சுட்ட டிஸ்கி: 
                       
 இன்று மகளிர்தினம். இத்தினத்தில் இத்தாலியர்கள், பெண்களுக்குப் பரிசாக வழங்கும் பூவின் பெயர் Mimose மைமோசே. அதுதான் பதிவின் முதலில் உள்ள படம். இதற்கான சிறப்புக்காரணம் ஏதும் உண்டா எனத்தெரிந்த இத்தாலியபெண்களிடம் விசாரித்தாராம், யாரும் சரியான காரணம் தெரியவில்லை என்றார்களாம். யாருக்காவது இதன் காரணம் தெரியுமா? ஐரோப்பா எங்கனும் இப்பழக்கம் உண்டா? அல்லது இத்தாலியர்கள் மட்டும்தானா? தெரிந்தவர்கள் வந்து சொல்லுங்களேன்... டிஸ்கி ஒரு வலைப்பூல சுட்டது. வலைப்பூவின் பெயர் நினைவில்லை. அவருக்கு என் நன்றி

தோழியரே! உங்கள் குரல்களை உயர்த்திச்சொல்ல இன்னும் ஒரு தினம். உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!