Friday, March 22, 2019

நீரின்றி அமையாது உலகு. - தண்ணீர் சேமிப்பு


இன்று உலக தண்ணீர் தினமாம்!! எல்லா காலத்துலயுமே தண்ணீர் பஞ்சம் உண்டு.  கிணற்றை தூர்த்து, ஆற்றை திசை திருப்பி,ஏரிகளில் உடைப்பை ஏற்படுத்தி கோட்டைக்குள் புகுந்திருந்து தாக்கும் எதிரியை  அடிபணிய வைக்கும் ராஜ தந்திரங்களில் இதும் ஒன்று. அதன்பின்னர் அந்த ஏரி,ஆறுகளை சீர் செய்யும்வரை பஞ்சம் நாட்டில் தலைவிரித்தாடும். சில சமயம் வானம் பொய்த்தும் பஞ்சம் வரும்.  அந்த பஞ்ச வேளைகளில்கூட நல்ல நீர் கிணறுகள், ஆற்றின் ஊற்றுகளில் தண்ணீர்  வற்றாதிருந்து மக்களை உயிரோடு வாழ உதவி இருக்கு. எனக்கு தெரிஞ்சுகூட ஆறு, இருபதாண்டுகளுக்கு முன்வரை குளம், ஆறு, கிணறுகளில் நீர் வற்றினாலும்கூட ஊற்றில் நீர் சுரந்துக்கொண்டே இருக்கும். கிணற்றில் நீர் சுரந்தால் அதை நடு இரவில்கூட நீர் இறைத்து பயன்படுத்தி இருக்கோம். ஆற்றில் பௌர்ணமி/அமாவாசை அன்னிக்கு   ஊற்று தோன்றுவாங்க. நீர் சுரக்கும். அதை அகலமான கிண்ணத்துல மொண்டு, வடிகட்டி கொண்டு வந்து பயன்படுத்தி இருக்கோம்.  தினசரிக்கு நீர் கிடைச்சுக்கிட்டே இருக்கும்.

ஆனா, இப்படி  கார்ப்பரேஷன் தண்ணீரையும், லாரி தண்ணீரையும் நாட்கணக்கில் சேமிச்சு வச்சதில்லை. இன்றைய தலைமுறைக்கு அறிவியல் சாதனங்கள், பணம், அறிவு, சுதந்திரம்ன்னு நிறைய கொடுத்திருக்கோம். ஆனா கொடுக்க வேண்டிய முக்கியமானதை கொடுக்காம விட்டுட்டோம். நாம கொடுக்க மறந்தது என்னன்னு தெரியுமா?! இயற்கையோடு சேர்ந்து வாழும் வாழ்வினைதான்.   நீச்சல்குளத்தில் ஆயிரக்கணக்கில் பணத்தை கட்டி குளோரின் மணம் வீசும் நீரில் நீச்சல் பழக சொல்லி தர்றோம். ஆனா, வாய்க்கா, வரப்பு, ஏரி குளத்துல நாம குளிச்சு ஆட்டம்போட்ட மனநிறைவை தருமா?!  சேற்றில் கால் வைக்க அசிங்கப்பட்டு, உழைக்க  வெசனப்பட்டுக்கிட்டு, பகட்டான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விளைநிலத்தையும்,  வானம் பார்த்த பூமியையும் ரியல் எஸ்டேட்டுக்கு விற்றுவிட்டோம். நெல்லுக்கு இறைத்த நீர் முதற்கொண்டு விழலுக்கு இறைத்த தண்ணீர்லாம் இப்ப விற்பனை பொருளாகிவிட்டது.  தண்ணீர் பாக்கெட், பாட்டில், கேன் என பணம் கொழிக்கும் பொருளாகிட்டுது தண்ணீர். 

தண்ணீரின் அவசியத்தை கொஞ்சம் காலமாய் மக்கள் உணர தொடங்கிவிட்டனர். மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அமல்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு வந்தனர். ஆனா,  சட்டம்லாம் போடுவதற்கு பல்லாண்டுகளுக்கு முன்பே செட்டிநாடு பகுதியில் உள்ள காரைக்குடி, கோனாபட்டு, ஆத்தங்குடி, கானாடுகாத்தான, கோட்டையூர், தேவகோட்டை(கில்லர்ஜி அண்ணா உங்க வீட்டில் மழைநீர் சேமிப்பு இருக்கா?!) , ராங்கியம், சிறுகூடல்பட்டி, வலையபட்டி, புதுவயல் மற்றும் செட்டிநாட்டு சுற்றுவட்டார பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தங்களின் வீடுகளில் வீட்டின் நடுப்பகுதியில் மழைநீர் தேங்கும்படி முற்றம் அமைத்து வீடுகளை கட்டினர். எல்லா வீட்டிற்குமே (மாடமாளிகையாய் இருந்தாலும்) கூரைக்கு நாட்டு ஓடுகள்தான் பயன்படுத்தப்பட்டது. மாடியின் மேல்தளத்தில் விழும் மழைநீர் நேராக கூம்பு குழாயின் வழியாக இரண்டாவது தளத்திற்கு வந்து அங்கிருந்து அடித்தளத்திற்கு கூடல் (கூடறு) வாய்த்தகரத்தின் வழியாக வந்து சேர்கிறது, இடையில் நாட்டு ஓடுகளுக்கு நீரை உறிஞ்சாத தன்மை உள்ளதால் ஓடுகளில் விழும் மழை நீரும் முற்றத்துக்குள் வந்து கொட்டும். அப்படி வந்து கொட்டும் நீரை கூடல்வாய்க்கு கீழே பெரிய பித்தளை (அகழி) அண்டாக்களை முற்றத்தின் நான்கு பக்க மூலைகளிலும் வைத்து அதன் வாயை வெள்ளை வேட்டித் துணி கொண்டு வேடு கட்டி பிடித்து சேமித்து வைக்கப்படும். பின்னர் சேமிக்கப்பட்ட நீரை தேவைப்படும்போது எடுத்து சுடவைத்து அருந்துவது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.

தங்களுக்கு தேவையான நீரை அகழியில் பிடித்தது போக மேற்கொண்டு மிஞ்சும் மழைநீரை வீணடிக்காமல் தங்களது வீட்டின் ஓரத்திலேயே கால்வாய்களை அமைத்து, வீட்டின் பின்புறம் கிணறு போன்ற உறையுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் கட்டி வைத்து, அதனுள் விழுமாறு அமைத்துள்ளனர். இப்படி இப்பகுதியில் உள்ள வீடுகளில் அந்தக் காலத்திலேயே வடிவமைக்கப்பட்ட மிகச்சிறந்த கட்டட கலையினால் சிறுதுளி தண்ணீர்கூட வீணாகாமல் நிலத்தடியில் சேமித்து வைக்கப்பட்டனர் நமது முன்னோர்கள். அதேபோல கழிவுநீரும் வெளியே தெருவில் செல்லாதபடி நிலத்துக்குள்ளேயே கால்வாய் அமைத்து வெளியேற்றப்படுகிறது.  
Image result for நீர் மேலாண்மை

தமிழ்நாட்டில் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த நீர் மேலாண்மையை இன்றைய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மெச்சுகின்றனர். வீடுகளில் கிணறு, தெருவுக்கு ஒரு பொதுக்கிணறு, ஊருக்கு சில நன்னீர் கிணறு, மழைநீர் தெருக்களில்  ஓடையாய் ஓடி, ஆங்காங்கு குட்டையாகி, அங்கிருந்து ஓடி கோவில் குளத்தை நிரப்பி, அங்கிருந்து சிறுகால்வாயாய் மாறி ஏரிக்கு சென்று, ஏரி நிரம்பி கால்வாயாய் மாறி ஆற்றில் கலந்து முடிவில் கடலில் கலந்தது.

ஆற்று நீரை அணைக்கட்டி சேமித்து, கோடைக்காலங்களில் கிளை ஆறுகளின்மூலமாகவும், வாய்க்கால், கால்வாய் மூலமாகவும் ஏரி, குளங்களை சென்றடைய செய்து, மக்களை தண்ணீருக்கு அல்லல்பட வைக்காமல் காப்பாற்றினர்.  உலகமயமாக்கலுக்கு முன்..  அதாவது 1980 - களுக்குமுன்வரைகூட நம்மில் மழைநீரை சேமிக்கும் பழக்கம் இருந்தது..

அவை என்னன்னு பார்க்கலாமா?!
(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.
(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.
(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணறு.
(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.
(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்களைக் கட்டிய கிணறு.
(12) கடல் (Sea) - சமுத்திரம்.
(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
(15) கால் (Channel) - நீரோடும் வழி.
(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.
(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.
(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.
(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.
(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) – குளம், ஏரி, முள்ளம்களின் நடுவே அமைந்த கிணறு.
(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
(41) பொய்கை- தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.
(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.
(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள் ஆகும்..

.(48) முள்ளம் ..செம்பரம்பாக்கம் ஏரி  மாதிரியான பாசன கால்வாய்களில் மீன் பிடிக்க அமைக்கப்படும் நீர்தேங்கும் அமைப்பு. தெற்கு மலையம்பாக்கத்தில் இந்த அமைப்பு இருந்தது... 2000ம் ஆண்டிற்கு பிறகு இது படிப்படியாக விவசாயத்துடன் அழிக்கப்பட்டு இப்ப கட்டிடங்களாகிவிட்டது.


இவைகளை தவிர இன்னும் தமிழ் இலக்கியங்களில், கல்வெட்டுகளில் பலவகையான நீர் நிலைகள் , நீரை சேமிக்கும் நுட்பங்கள் விவரிக்கப்பட்டிருக்கு. நீரின்றி அமையாது உலகு ..என்பதை வெற்று வாய் சொல்லாக அல்ல. பழம் தமிழர்கள் எப்படி நீரையும், அதை சேமிக்கும் தொழில் நுட்பங்களை அறிவியல்பூர்வமாக புரிந்துக்கொண்டு செயல்பட்டார்கள் என்பதற்கு இந்த நுண்ணிய கட்டமைப்புகள் வரலாற்றுச் சாட்சிகளாக கட்டியம் கூறுகின்றது, ஆனா, அதுபத்திலாம் கவலைப்படாம எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்ற காமெடி மாதிரி அக்கபக்க மாநிலத்தில் சில டி.எம்.சி தண்ணீருக்கு கையேந்தி நிற்கிறோம்.  

சொகுசாய் வாழ தெருக்களில் சிமெண்ட் சாலைகளை கொண்டு வந்தோம். சாணம் தெளிச்சு வாசல் பெருக்க சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு மிச்சமிருக்கும் இடத்திலும் சிமெண்ட் பூசி தெரு முழுக்க காரை தெருவா இருக்கு. அப்புறம் எப்படி மழைநீர் மண்ணுக்குள் ஊறும். மிச்சம் மீதி இருக்கும் காலி மனைகள் முழுக்க பிளாஸ்டிக் கவர்களை கொட்டி நீரை உள் இறங்காம பொறுப்பா!! பார்த்துக்குறோம். ஆறு, குளம், ஏரி மண்லாம் சுரண்டி எடுத்தாச்சு., கால்வாய், ஓடைலாம் கட்டிடமாய் மாத்தியாச்சு! இனி எப்படி நீரை சேமிக்க?!  எங்காவது குழாய்கள் திறந்திருந்தால் மூடி இருப்போமா?! குழாய்களில் உடைப்பெடுத்தா செல்பி எடுத்து பொறுப்பற்ற அரசுன்னு சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி,  சேவ் வாட்டர்ன்னு ஸ்டேட்டஸ் போட்டு லைக், கமெண்ட் வாங்குவதோடு நம்ம பொறுப்பு முடிஞ்சதுன்னு இருக்கோம்.

நம்ம வீட்டு குழாய்களை மூடுங்க. எங்காவது பொதுக்குழாய்கள் திறந்திருந்தால் சிரமம் பார்க்காமல் குழாயை மூடிட்டு போங்க. குழாய்கள் உடைஞ்சு தண்ணீர் வீணாப்போனால் அந்த பகுதி குடிநீர் பணியாளருக்கு சொல்லுங்க. ஜியோ சிம்தாங்க. கால் பண்ணால் பைசா போகாது. அக்கம் பக்கம் தண்ணீரை குழாயை  மூடாமால் கார்ப்பரேஷன் தண்ணிய வீணாக்குனா புத்தி சொல்லுங்க.  கேட்கலியா புகார் கொடுங்க. வீட்டில் ஆர்,ஓ சிஸ்டம் இருந்தால் அதிலிருந்து வரும் உப்பு தண்ணியை வீணாக்காம செடிகளுக்கு ஊத்துங்க. துணி துவைச்ச, பாத்திரம் கழுவின தண்ணியைலாம் கொண்டு வந்து செடியில் ஊத்துங்க. வீணாக இருக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களில் தானியமும் தண்ணீரும் காம்பவுண்ட் சுவர், மொட்டை மாடிகளில் வைங்க. பெயிண்ட் டப்பா மாதிரியான பெரிய அகலமான டப்பாக்களில் வீட்டுக்கு வெளிய தினமும் ஒரு குடம் தண்ணி ஊத்தி வைங்க. ஆடு மாடு, கோழி, நாய்லாம் குடிச்சுட்டு அதுகளும் பொழைச்சுட்டு போகட்டும். 
பூமி நமக்கானது மட்டுமில்ல! எல்லாருக்குமே பொதுவானது! அதை நினைவில் வச்சுக்கிட்டு செயல்படுவோம்.

நன்றியுடன்,
ராஜி

12 comments:

  1. எங்க வீட்டுல தண்ணீர் மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவோம். இங்கு பங்களூர் வந்தும் அதே பழக்கம்தான்.

    ராஜி நீங்க முதல்ல ஒரு படம் போட்டிருக்கீங்க பாருங்க அங்க கொண்டுபோய் விட்டுருங்க. செம இடம்!!! அழகா இருக்கு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எனக்கு அட்ரஸ் தெரிஞ்சா நான் ஏன் இங்க இருக்கேன் கீதாக்கா!

      Delete
  2. சிறுவயதிலிருந்தே குறைந்த தண்ணீர் வரத்துக்குப் பழகிவிட்டதால் எங்களைப் பொறுத்தவரை சிக்கனமாகவே இருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. என் சின்ன பொண்ணும், மாமாவும்தான் தண்ணிய அதிகம் வீணாக்குவாங்க. சொன்னாலும் புரியாது.

      Delete
  3. தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்.

    நல்ல பகிர்வு. சிக்கனமாக இருப்பது எல்லாவிதத்திலும் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. சொன்னால் எங்க வீட்டிலயே கேக்க மாட்டேங்குதுங்க.

      Delete
  4. தண்ணீர் சிக்கனம் அதி முக்கியமானது.
    அருமையான பகிர்வு. அதிலும் அந்த 48 வகை தண்ணீர் சேமிப்பு மிக அருமை.
    சென்ற வாரம் சன் தொலைக்காட்சியில் "நம்ம ஊரு ஹீரோ" நிகழ்ச்சியில், வெறும் ஒன்றரை லிட்டர் தன்னியில் குளித்து, தண்ணீர் சிக்கனம் பற்றி "குளியல் கோவிந்தன்" விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி காட்டினார். நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை .

    ReplyDelete
    Replies
    1. நான் டிவி பார்ப்பதில்லைன்னு சொன்னா டிடி அண்ணா சண்டைக்கு வருவார். அதனால் அந்த நிகழ்ச்சியை பார்க்கலைன்னு சொல்லி தப்பிச்சுக்குறேன். 48 வகை தண்ணீர் சேமிப்பு நம்ம தமிழர் வாழ்வியல் முறைல இருந்திருக்கு சகோ. இப்ப தண்ணி லாரி, போர்வெல், கார்ப்பரேஷன் குழாய், தண்ணி கேன்னு சிலதுதான் இருக்கு

      Delete
  5. Chokkan Subramanian அவர்கள் சொன்னதையே சொல்ல விரும்பினேன்...

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும்...

      Delete
  6. 1980களில் கோவையில் பணியாற்றியபோது நண்பர்களுடன் தனியாக அறை எடுத்து மூன்று பேர் தங்கியிருந்தோம். நள்ளிரவு 12.00 மணிக்கு எழுந்து தேவையான குடிநீரைப் பிடித்துவைத்துக்கொள்வோம். எங்கு பார்த்தாலும் பேரலில் தண்ணீர் பிடித்து, சேர்த்துக்கொண்டிருப்பர். அடுத்தடுத்து வருபவர்களுக்கு தண்ணீர் கிடைக்காது. அப்போது முதல் தண்ணீரில் மிகவும் கவனமாக இருந்துவருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எங்க பக்கத்து கிராமத்துல இரவு 1 மணிக்கு தண்ணி வரும், அப்பவே குளிச்சு துணி துவைச்சு, பாத்திரம் கழுவி, தண்ணி பிடிச்சு வச்சுட்டு மீண்டும் தூங்குவாங்கன்னு சொல்லி கேட்டிருக்கேன். இதுவரை தண்ணீருக்கு அவஸ்தை பட்டதில்லை. இனி எப்படியோ?!

      Delete